Tuesday, March 30, 2010

விமானங்களின் புகையால் பூமியின் வெப்பநிலை குறையுமா?


வானம் எங்கும் பரிதியின் சோதி!
மலைகள் மீதும் பரிதியின் சோதி!
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரைகள் மீது தருக்களின்மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி!

என்றான் புரட்சிக் கவிஞன் பாரதி. சூரியனானது சங்ககாலம் தொட்டு, இலக்கியங்களிலும் நடைமுறை வாழ்விலும் சக்தியின் முதலாக, வடிவமாகப் போற்றப்பட்டு வருகிறது. சூரிய ஒளி கிடைக்கப்பெறும் நேரமே இரவையும் பகலையும் தீர்மானிக்கிறது.

மத்திய கோட்டுப் பிரதேசங்களில் இரவும் பகலும் சம நேரங்களாகக் காணப்படும். முனைவுப் பகுதிகளிலோ சமகாலங்களாகக் காணப்படும்.

அதாவது மத்திய கோட்டு வலயத்திலே ஒரு நாளில் ஏறத்தாழ 12 மணித்தியாலங்கள் இரவாகவும், 12 மணித்தியாலங்கள் பகலாகவும் காணப்படும். மாறாக முனைவுப் பிரதேசங்களிலோ தொடர்ந்து ஆறு மாதங்கள் இரவாகவும் அடுத்த ஆறு மாதங்கள் பகலாகவும் காணப்படும். அதேபோல, முனைவுப் பிரதேசங்கள் பனிப் பிரதேசங்களாகவும் மத்திய கோட்டுப் பிரதேசங்கள் வெப்ப வலயங்களாகவும் இருப்பதிலும் சூரியனின் வெப்பக் கதிர்ப்பே பெரும்பங்காற்றுகிறது.

கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதியில், ‘பூமிக்குக் கிடைக்கும் சூரிய ஒளி, மற்றும் வெப்பத்தின் அளவை அவதானித்தால் என்ன?’ என்றொரு கேள்வி விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்தது. அதனடிப்படையில் தரவுகள் பதியப்பட்டன. 1950 களிலிருந்து பதியப்பட்டிருந்த அந்த நீண்டகாலத் தரவுகளின் அடிப்படையில் கடந்த நூற்றாண்டின் தசாப்தங்களுடன் பூமிக்குக் கிடைக்கும் சூரிய ஒளியினளவு மாறிவந்த போக்கு அறியப்பட்டது.

இன்று எமக்குக் கிடைக்கும்சூரிய ஒளியினளவானது, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகவிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் சூரிய ஒளியுடன் தொடர்புடைய ஏனைய தரவுகள் இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டன.

புவி மேற்பரப்பை வந்தடையும் சூரிய சக்தியினளவு ஏதோ ஒரு காரணத்தால் குறைந்து வந்த தென்பது கண்டறியப்பட்டது. பூகோளம் வெப்பமயமாதலானது எதிர்பார்த்ததைவிடப் பாரதூரமான விளைவுகளை உருவாக்கப் போவதை மறைமுகமாகச் சுட்டும் சமிக்ஞையாகவும் விஞ்ஞானிகள் இதனைக் கருதுகின்றனர்.

1980 களின் நடுப் பகுதியிலே, சுவிஸ் சம்மேளன தொழில்நுட்ப நிறுவகத்தின் புவியியல் ஆய்வாளரான அட்சுமு ஒகுமுரா என்பவராவார். கடந்த 3 தசாப்த காலங்களுக்குள் புவியை வந்தடையும் சூரியக் கதிர்ப்பினளவு 10 சதவீதத்தால் குறைந்துள்ளமையை அவதானித்தார். அவரது அவதானம் பூகோளம் வெப்பமடைதல் எனும் கருத்துடன் முரண்பட்டது.

பூமியின் வருடாந்த சராசரி வெப்பநிலையில் 1970 களின் பின்னர், சடுதியான அதிகரிப்பொன்று உணரப்பட்டமையே பூகோளம் வெப்பமடைதல் எனும் தோற்றப்பாடு தொடர்பான எண்ணக்கருக்களுக்கு வித்திட்டது. இத்தகையதோர் நிலையில், புவியின் மேற்பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்ப்பினளவு குறைவடைகிறது என்றால், புவியின் வருடாந்த சராசரி வெப்பநிலை குறைவடைய வேண்டுமல்லவா? இதுவே விஞ்ஞானிகளினதும் வினாவாக இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் தான் அட்சமு ஒகுமுரா என்ற விஞ்ஞானி தனது ஆய்வு முடிவுகளை விஞ்ஞானச் சஞ்சிகையில் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து பலரும் சூரியக் கதிர்ப்பினளவ தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, தமது முடிவுகளை வெளியிட்டனர்.

1980களில் இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் சூரிய ஒளியின் அளவு தசாப்தங்களுடன் குறைவடைந்துள்ள அதேநேரம், காலநிலையோ உஷ்ணம் அதிகரித்துள்ள காலநிலையாக மாற்றமடைந்தமையும் அறியப்பட்டது. இவ்வாறு நிலமேற் பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடைந்து செல்வதை ‘பூகோளம் மங்கலடைதல்’ (மிlobal னீiசீசீing) என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.


மங்கலடையும் சதவீதம், ஒரு தசாப்தத்திற்கு 2 – 3 சதவீதமாகக் காணப்படும். இவ்வாறு மங்கலடையும் வீதம், பூமியின் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிக் காணப்படுவதில்லை. வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களே இத்தகைய தோற்றப்பாட்டிற்கான காரணமெனக் குறிப்பிடப்படுகிறது.

வளிமண்டலம், பல படைகளைக் கொண்டது. அதன் மேற்படையை வந்தடையும் சூரியக் கதிர்ப்பு, காலத்துடன் பெரிய அளவில் மாற்றமடையவில்லை எனக் குறிப்பிடப் படுகிறது. அதேபோல் கடந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட வருடங்களுக்கான தரவுகளின் அடிப்படையில் நீரின் ஆவியாதல் வீதமும் ஆராயப்பட்டது.




பூகோளம் வெப்பமடைதல் காரணமாக நீரின் ஆவியாதல் வீதம் காலத்துடன் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக, ஆவியாதல் வீதம், சில தசாப்தங்களுக்குக் குறைவடைந்து சென்றமையை அவதானிக்க முடிந்தது.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் இதே போக்கை அவதானிக்க முடிந்தது. நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடைந்தமையே இப்போக்குக்குப் பின்னணியிலிருக்கும் காரணம் என ஊகிக்கப்பட்டது. சூரிய ஒளி மங்கல டைந்து வருவதற்குரிய வலுவான ஆதாரமாக, இந்த ஆவியாதல் வீதத்தின் போக்கு கருதப்படுகிறது.

இவ்வாறு புவி மங்கலடைவதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. 2001 செப்டம்பர் 11 ஆம் திகதி நடந்த அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலையடுத்து 3 நாட்களுக்கு, அமெரிக்க வான்பரப்பினூடான விமானப் போக்குவரத்துக்கள் யாவும் தடைசெய்யப்பட்டிருந்தன. அந்நிலைமை விஞ்ஞானிகளுக்குச் சாதகமாய் அமைந்தது. அவர்கள் அந்த மூன்று நாட்களுக்குமான சூழலின் சராசரி வெப்பநிலையைப் பதிவு செய்தனர். அவ் வெப்பநிலையானது சாதாரண நாளொன்றின் சராசரி வெப்பநிலையை விடச் சற்று அதிகமாகக் காணப்பட்டது.

இதற்கான காரணம் என்னவென்று ஆராய்கையில், விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டமையால் வழமையாக வளிமண்டலத்துக்கு வெளிவிடப்படும் விமானப் புகைகள் எவையும் வெளிவிடப்படாமையே காரணமெனக் கண்டறியப்பட்டது. விமானங்களின் புகை வளி மண்டலத்தில் படலமாகக் காணப்படுவதால், பூமியை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் செறிவு குறைவடைகிறது.

அதேபோல, டீசல் போன்ற சுவட்டு எரிபொருட்களின் குறைதகனமும், மரங்கள் மற்றும் விறகுகளின் தகனமும் வளிமண்டலத்திலே, காபனீரொட்சைட்டுடன் கரிய காபன் துணிக்கைகளையும் கந்தகக் கூறுகளையும் வெளிவிடுகின்றன. இவ்வாறு வெளிவிடப்படும் மாசுக்களால் வளிமண்டலம் மாசடைவதே, பூகோளம் மங்குவதற்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுகிறது. இவை வளியை மாசுபடுத்துவதோடு மட்டுமின்றி மழை வீழ்ச்சியின் போக்கையும் பாதிப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கரிய காபன் துணிக்கைகளானவை நிலமேற்பரப்பிலே உள்ள வளியை மாசடையச் செய்வதில் சிறிதளவிலான பங்களிப்பையே செய்கின்றன. ஆனால், நிலத்திலிருந்து ஏறத்தாழ 2 கி.மீ. உயரத்திலே வளிமண்டலத்தை வெப்பமாக்குவதில் பெரும்பங்காற்றுகின்றன. அதேபோல, சூரியக்கதிர்ப்பை உறிஞ்சி, சமுத்திர மேற்பரப்பை மங்கலடையச் செய்கின்றன.

கரும் பொருட்கள் வெப்பக் கதிர்ப்பை உறிஞ்சும் தன்மையன. கரிய காபன் துணிக்கைகளும் அவ்வாறானவையே. அவை, சூரிய வெப்பத்தைத் தம்மகத்தே உறிஞ்சி வைத்திருப்பதால் வளிமண்டல வெப்பநிலையை உயர்த்துகின்றன. இவற்றால் பனிப் பாறைகள் உருகும். அதேபோல இக்கரிய காபன் துணிக்கைகள், பனிப் போர்வைகளில் படிகின்றன. இதனால் சாதாரணமாக வெப்பத்தை உறிஞ்சாத வெண்பனிப் போர்வைகள், மாசுற்று வெப்பத்தை உறிஞ்ச ஆரம்பிக்கும். புவிவெப்பமடைதலும், பனி உருகுதலும் மாறி மாறி நிகழும்.

அதேபோல வளிமண்டலத்திலே வெளிவிடப்படும் விமானப்புகைத் துகள்கள் காரணமாக, பகல் நேர வெப்பநிலை குறைந்து காணப்பட்டதுடன் இரவு நேர வெப்பநிலை சாதாரண நிலைமையைவிட அதிகரித்தும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிமலைகள் வெடிப்பதால் உருவாகும் தூசு துணிக்கைகள் நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவைக் குறைப்பதால் எரிமலைகள் வெடிக்கும் காலங்களில், அவை சார்ந்த பகுதிகளின் வெப்பநில¨யும் முன்னரை விடச் சற்றுக் குறைவாகக் காணப்படுகிறது. ஆனால் எவ்வளவு பெரிய எரிமலை வெடிப்பு நிகழ்ந்தாலும் உருவாகும் தூசுப் படலங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே வளிமண்டலத்தில் காணப்படும்.

உயிரின் நிலைப்புக்கான அடிப்படைக் காரணிகளுள் நீரும் ஒன்றாகும். நீரியல் வட்டத்தை இயக்கும் சக்தி முதலாகச் சூரியன் கருதப்படுகிறது. பூகோளம் மங்குதல் காரணமாக நிலத்தை வந்தடையும் சூரியக் கதிர்ப்பின் அளவு குறைவடையும். அதன் காரணமாக, சூரிய வெப்பத்தால் நிலத்திலிருந்து ஆவியாகும் நீரினளவு குறைவடைய மழை வீழ்ச்சி பாதிக்கப்படும்.

நீரியல் வட்டத்தின் சமநிலை குழப்பப்படும். காலநிலையின் போக்கில் பாரிய மாற்றங்கள் கூட ஏற்படலாமெனக் கருதப்படுகிறது. பூகோளம் வெப்பமடைதலுக்கும் பூகோளம் மங்குதலுக்குமிடையிலான சமநிலை குலைக்கப்பட, ஈரப்பதனுடைய ஆனால் மழை குறைவான சூழலொன்று உருவாகும்.

பூகோளம் மங்கலடைதலும் பூகோளம் வெப்பமடைதலும் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையனவாகக் கருதப்படுகின்றன. பூகோளம் மங்கலடைதல் என்ற விளைவு சில காலங்களாக, பூகோளம் வெப்பமடைதல் என்ற விளைவை மறைத்தபடி இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். காலநிலை மாற்றம் தொடர்பான எதிர்வுகூறுல்கள் மேற்கொள்ளப்பட்ட காலங்களிலே, பூகோளம் மங்கலடைதல் தொடர்பான கருத்துக்கள் தோற்றம் பெறவில்லை.

ஆனால் பூகோளம் மங்கலடைதல் என்ற நிகழ்வு நடைபெற்றமை தான் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைத்துக் காட்டிவிட்டதோ என ஆய்வாளர்கள் சிந்திக்கின்றனர். அப்படியாயின், எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கம், எதிர்வுகூறப்பட்டதைவிட அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல சூரிய ஒளி நேரடியாகப் புவியை வந்தடையும் போது, நில மேற்பரப்பிலுள்ள நீர் அதிகளவில் ஆவியாகி வளியிலுள்ள மாசுக்களுடன் இணையும். நீராவியே பிரதானமான பச்சை இல்ல வாயுவாகும். அதேசமயம், ஆவியாதலினாலும் மழையாலும் பூகோளம் மங்குதல் பாதிக்கப்படும். மழையானது வளியின் மாசுத் துணிக்கைகளை துடைத்தகற்றிவிடும். மண்ணிற முகில்கள், இந்தப் பூகோளம் மங்குதல் எனும் தோற்றப்பாட்டிற்கமைய பூகோளம் வெப்பமயமாதலின் 50 சதவீத விளைவுகளை மறைத்துவிட்டதாக வளிமண்டல இரசாயனவியலாளர் வீரபத்திரன் இராமநாதன் தெரிவித்திருந்தார்.

அவரது ஆய்வானது, தெற்கு மற்றும் கிழக்காசிய வலயங்களை அடிப்படையாகக் கொண்டது. 1980 களில், பூகோளம் வெப்பமடைதலை, வளிமண்டலத்திற்கு சல்பேற்றுகளை வெளியேற்றுவதன் முலம் குறைக்கலாமெனக் கருதினர். ஆனால் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் சல்பேற்றுக்கள் அமில மழைக்குக் காரணமாகின்றன. கரிய காபன் துணிக்கைகள் சுகாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்க வல்லவை.

ஒவ்வொரு தசாப்தத்திலும் உருகும் துருவப் பனியின் அளவு கணிக்கப்பட்டு வரைபுபடுத்தப்பட்டது. அவ்வரைபின் போக்கு, 60 களில் குறைவடைந்து பின்னரான காலப் பகுதிகளில் சடுதியான அதிகரிப்பைக் காட்டியது. இந்நிலைமை, பூகோளம் மங்கலடைதல் தொடர்பான கருத்துக்களை மேலும் வலுவூட்டியது.

60 களிலும், 70 களிலும் துணிக்கைப் பதார்த்தங்களால் ஏற்படுத்தப்பட்ட வளி மாசு, பூகோளம் வெப்பமடைதலுக்கு எதிராக காலநிலையைத் தொழிற்பட வைத்தது. பூகோளம் மங்கலடைதல் எனப்படும் தோற்றப்பாட்டை உருவாக்கி பூகோளம் வெப்பமடைதலை மறைத்தது. அதிகரிக்கும் பச்சையில்ல வாயுக்கள், புவியின் வெப்பத்தை அதிகரிக்க, அதிகரிக்கும் துணிக்கை மாசுக்கள் புவிமேற்பரப்பை வந்தடையும் சூரியக் கதிர்களைக் குறைத்து, புவியின் வெப்பத்தைக் குறைத்தன. ஒன்றுக்கொன்று எதிரான விளைவுகளைத் தரக்கூடிய மாசுக்கள் ஒருங்கே காணப்பட்டமையால் வெப்பமாதலின் விளைவுகள் குறைக்கப்பட்டன.


இதன் காரணமாக, கைத்தொழில் மயமாக்கப்பட்ட பல நாடுகள், தாம் வெளியேற்றும் துணிக்கைப் பதார்த்தங்களைக் குறைக்க அல்லது சுத்திகரித்து வெளியேற்றத் தொடங்கின. 1991 களின் பின்னர், வளி மாசடைதலைக் குறைக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. இவற்றினால், 1990கள் வரை மங்கலடைந்து வந்த புவியின் போக்கு 1990 களின் பின்னர் எதிராகத் திரும் பியது.

மங்கலடைந்து வந்த புவி, வளி மாசுக்கள் குறைக்கப்பட்டதால், மீண்டும் பிரகாசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகள், வளிமாசடைதலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளின் பயனாக பூகோளம் மங்கலடைதல் குறைக்கப்படுகிறது. கடந்த சாப்தத்திலே, பூகோளம் மங்கலடையும் போக்கு 4 சதவீதத்தால் குறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 1970 களிலும் 1980 களிலும் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட ஆபிரிக்காவின் சகாரா வரட்சி கூட, பூகோளம் மங்கலடைவதால் ஏற்பட்டிருக்கலாமெனவே கருதப்படுகிறது.

தற்போது, எமது நடவடிக்கைகள் சூழலை வெப்பமாக்கும் மாசுக்களை அதிகளவில் வெளிவிடும் அதேவேளை, சூழலைக் குளிர்மைப்படுத்தும் மாசுக்கள் வெளிவிடப்படுவதைக் குறைக்கின்றன.

இதனால், புவி வெப்பமடையும் வீதம், புவியின் வெப்பநிலை குறைவடையும் வீதத்தைவிட அதிகமாகக் காணப்படும்.

இத்தகையதோர் நிலையில் எம்மால் செய்யக்கூடியது, பூகோளம் வெப்பமடையும் வீதத்தைக் குறைப்பதேயாகும். அதனை நாம் இரு வழிகளில் மேற்கொள்ளலாம். ஒன்றில் பச்சையில்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கலாம். அல்லது, பச்சை இல்ல வாயுக்களை உறிஞ்சக்கூடிய மரங்களை நாட்டி வனப் பகுதிகளைப் புதிதாக உருவாக்கலாம். அவற்றைக் கிராமத்தில் தான் உருவாக்க வேண்டுமென்ற கட்டாயம் எதுவுமே இல்லை. அந்த வனப் பகுதிகள் நகர வனங்களாகக் கூட இருக்க முடியும்.

எம்மால் இயன்றவரை முயன்று, நாம் யாவருமிணைந்து பூகோளம் வெப்பமடையும் சந்தர்ப்பங்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலன்றி உருவாகப் போகும் விளைவுகளை வேறு எந்தவகையிலும் தடுக்க முடியாது.

No comments:

Post a Comment