Monday, February 21, 2011

உணவின்றியும் வாழ முடியுமா ?

எகிப்து, டுனிசியா என்று ஆரம்பித்து இன்று அரபு நாடுகள் மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் பரவியிருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியில் மக்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதர ரீதியிலான நெருக்கடிகளே காரணமாக இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2010, 2011 ஆம் ஆண்டுகளிலே உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தொடர் இயற்கை அனர்த்தங்கள் மக்கள் மீது பொருளாதார நெருக்கடி திணிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.
பல உணவுப் பொருட்கள் என்றுமில்லாதவாறு உச்ச விலையை அடைந்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருக்கிறது. இதனால் உலக மக்களின் உணவுப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது.
இற்றைக்கு ஒருவருடத்துக்கு முன் உலகளாவிய ரீதியில் 196.7 மில்லியன் தொன்களாக இருந்த கோதுமையின் இருப்பு தற்போது 175.2 மில்லியன் தொன்களாகக் குறைந்திருக்கிறது. சோளத்தின் இருப்பு கடந்த மாதம் 130 மில்லியன் தொன்களாக இருந்தபோதும் தற்போது 127.3 மில்லியன் தொன்களாகவே இருக்கிறது. அதேபோல சோயா அவரையின் இருப்பு, இவ்வருட ஆரம்பத்தில் 60.4 மில்லியன் தொன்களாக இருந்தது. இந்தப் பருவ காலத்தின் முடிவில் அது 58.78 மில்லியன் தொன்களாகக் குறைவடைந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்குள் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கியின் தலைவர் றெபேட் சொலிக் தெரிவித்துள்ளார்.
முதன் முறையாக உலகளாவிய விவசாய விளைச்சல் இம்முறை பெரு வீழ்ச்சி கண்டுள்ளது. கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுள் பெரும்பாலானவற்றிலே விளைச்சல் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, உக்ரெயின், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகியனவே அந்த முன்னணி நாடுகள் ஆகும்.
2010 இன் இலைதுளிர் காலத்தில் சீனாவின் பல மாகாணங்களிலும் வியட்நாம் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கடும் வரட்சி நிலவியதுடன் பனிப்புயலும் தாக்கியது. தென் மேற்கு சீனாவைப் பொறுத்தவரையிலே இது கடந்த ஒரு நூற்றாண்டில் நிலவிய மிக மோசமான வரட்சியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலே பதிவு செய்யப்பட்ட வெப்ப அலைகளின் தாக்கமும் அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையும் அரசியல், பொருளாதார ரீதியாகப் பல அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.
ரஷ்யாவிலே கடந்த 130 வருடங்களுள், என்றுமில்லாதவாறான உயர் வெப்பநிலை பதியப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பரவியிருந்த வரட்சியும் மொஸ்கோ உட்பட 7 பிராந்தியங்களில் பரவிய காட்டுத்தீயும் கோதுமை விளைச்சலில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கின.
கடந்த வருடம் நிலவிய கடும் வரட்சியாலும் குளிர்கால நிலையாலும் பிரான்ஸ் அரசு தனது கோதுமை உற்பத்தி 2.7 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறியிருக்கிறது.
கனடாவின் மேற்குப் பகுதியில் தானியங்கள் விளையும் பல மாநிலங்களில் நிலவிய வரட்சி விளைச்சலை வெகுவாகப் பாதித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பார்லி அரிசி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் உக்ரெயின் கோதுமை உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. ரஷ்யாவைப் போலவே உக்ரெயினின் விளைச்சலை வரட்சியும் காட்டுத்தீயும் பாதித்தன. விளைவாக 2011 க்கான தானிய ஏற்றுமதியை உக்ரெயின் நிறுத்தியுள்ளது
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தம் தான் கோதுமைக்குப் பஞ்சம் ஏற்படப்போவதை உலகுக்கு உணர்த்தியது. ஏறத்தாழ பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பரப்பளவையுடைய பிரதேசங்களை வெள்ளம் மூடியது. கோதுமைப் பயிர்கள் அழிந்தே போயின.
பாகிஸ்தான் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தமானது 17 மில்லியன் ஏக்கர் விளைநிலங்களைப் பாதித்தது. வெள்ளத்துடன் 200,000 க்கும் மேற்பட்ட கால் நடைகளும் தானியங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்த போகத்துக்கான விதைத் தானியங்கள் கூட இல்லாத நிலையில் தவித்துப் போய் நிற்கிறார்கள் பாகிஸ்தான் விவசாயிகள். இயற்கை அனர்த்தங்களால், கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிராந்தியமான தென் அமெரிக்காவும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை எதிர்கொண்டது. ஆர்ஜன்ரீனா பொலிவியா ஆகிய நாடுகள் கடும் வரட்சியை எதிர்நோக்கிய அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடான பிரேசில் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டது.
ஐக்கிய அமெரிக்காவின் 50 மாநிலங்களுள் 49 மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு காணப்பட்டது. புளோரிடாவில் நிலவிய மோசமான உறை பனிக்கால நிலையானது பயிர்களை வெகுவாகப் பாதித்தது. கலிபோனியாவில் பொழிந்த மழை காரணமாக பயிர்கள் பாரியளவில் அழிந்து போயின.
ஆசியாவிலே இறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் தென் கொரியாவில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கால்வாய் நோயால் மில்லியன் கணக்கான கால்நடைகளை அழிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. மகரந்தச் சேர்க்கை இன்றி மரக்கறி மற்றும் பழவகைகளின் உற்பத்தி இல்லை என்பது வெளிப்படை உண்மை. மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு காரணமாய் அமையும் சில தேனி குடித்தொகைகள் ஐக்கிய அமெரிக்காவில முற்றாக அழிந்துபோயுள்ளன. அதேவேளை அமெரிக்காவின் வெளவால்களின் குடித்தொகையும் காரணமின்றி திடீரென அழிந்து போயுள்ளது. இவற்றிற்கான காரணங்கள் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் அவற்றின் பின்னணியில் மனித செயற்பாடுகள் தான் எஞ்சியிருக்கப் போகின்றன என்பது தெளிவான உண்மை.
இவ்வாறு மகரந்தச் சேர்க்கை நடைபெறக் காரணமாகும் உயிரினங்களின் அழிவாலும் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கடந்த 3 தசாப்தங்களுள் என்றுமில்லாதவாறு சீனியின் விலை உயர்ந்திருக்கிறது. அதற்கான பிரதான காரணம், அவுஸ்திரேலியாவைத் தாக்கிய யாசி என்ற சூறாவளியால் கரும்புப் பயிர்ச் செய்கை அழிந்து போனமையாகும்.
மலேசியா எதிர்கொண்ட வெள்ள அனர்த்தத்தால் மூன்றாம் உலக நாடுகளின் பிரதான சமையல் எண்ணெய்யாகிய பாம் எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
நாம் யாவரும் ஒருமித்து எதிர்கொள்ளவுள்ள இந்த உணவு நெருக்கடியால் வளர்முக நாடுகளில் மட்டும் 870 மில்லியன் மக்கள் பட்டினியாலும் போஷாக்கின்மையாலும் பாதிக்கப்படுவர் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதே சமயம் அந்த எண்ணிக்கை 925 மில்லியனாக அதிகரிக்கும் என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பல நாடுகள் தற்போது தானிய இறக்குமதிக்கான வரியை இரத்துச் செய்துள்ளன. அதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் 820,000 தொன் அரிசியை இறக்குமதி செய்தது இந்தோனேசியா. அத்துடன் அரிசி, சோயா அவரை மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியையும் இரத்துச் செய்தது.
மக்கள் உண்பதற்கு உணவு இல்லாமல் போனால் மூன்று விடயங்கள் நடக்கலாம். ஒன்று மக்கள் புரட்சி வெடிக்கும் இல்லையேல் குடிபெயர்வர். அதுவும் இல்லையேல் அவர்கள் இறந்து போகக்கூடும் என்கிறார் உலக வங்கியின் தலைவர்.
இது விளையாட்டாகக் கருதக்கூடிய ஒரு நிலைமை அல்ல என்பதை நாம், நினைவில் கொள்ள வேண்டும். இன்று உண்ண உணவு இருக்கிறது. எதற்காக எதிர்காலத்தைக் எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற பொதுவான நிலைப்பாடும் மனநிலையும் எம்மில் பலர் மத்தியில் காணப்படுவது உண்மை.
எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற அவசியம் இல்லைத் தான். ஆயினும் எதிர்காலத்தை எண்ணி அதற்காக எம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு உண்டு.
நாகரிக வளர்ச்சியுடன் அதிகரித்த மனிதனின் தேவைகள் அடிப்படை, அத்தியாவசியம் எனப் பல நிலைகளைக் கடந்து எங்கோ சென்றிருக்கின்றன. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை உணவு அடிப்படைத் தேவையாகத்தான் இருந்து வருகிறது.
ஆதலால் எதிர்காலத்தில் முழு உலகுமே எதிர் நோக்கவிருக்கும் உணவு நெருக்கடியை நிதி நிலைமையின் அடிப்படையில் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய தேவையொன்று எமக்கு இருக்கிறது.
உலக உணவு நெருக்கடி அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலை தானாகவே உயரும். அத்தகையதோர் நிலையில் பெரும்பான்மையான மக்களால் அதற்கு ஈடு கொடுத்து வாழ முடியாமல் போகலாம். ஆகவே அத்தகைய நெருக்கடி உருவாவதற்கு முன்னரே எம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இதுவரை காலமும் நாம் கைக் கொண்டுவந்த பழக்கங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
எமது உணவுச் செலவுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து ஆராயவேண்டும். வீட்டிலே சமைக்கும் உணவு வகைகளுக்கும் உள்ளூர் விளைச்சலால் பெறப்படும் தானிய, மரக்கறி மற்றும் பழவகைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். அவசர உணவுக்கலாசாரத்தினுள் சிக்குண்டிருக்கும் பலருக்கு அது சிரமமாகத்தான் இருக்குப்போகிறது.
உணவுப் பழக்கங்களை மாற்றவேண்டும். சத்தான உணவை அளவாக உண்ணும் நடைமுறைகளைக் கைக் கொள்ளவேண்டும். 2ம் உலக மகாயுத்த காலங்களில் பல நாடுகளிலே உணவுப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. அதனால் மக்களின் உணவுப் பழக்கங்களில் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டது.
எதற்குமே இயலாத கட்டமொன்று ஏற்படும்போது இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகி விடுமென்பது கண்கூடு.
நாம் மழைக்காலங்களிலோ அல்லது வேறு சில நெருக்கடியான காலங்களிலோ எதிர்காலத்துக்காக உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். அந்த வழக்கம் இன்று மலையேறிவிட்டது. மாறாக அன்றாடப் பிரச்சினையை மட்டுமே நோக்கும் புதுவித வழக்கத்தைக் கைக்கொண்டு வருகிறோம்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் களஞ்சியப்படுத்தி வைக்கவேண்டிய கடப்பாடு எமக்கு உருவாகிவிட்டது. அதற்கு மேலதிகமான பணம் செலவாகும் தான். ஆயினும் நெருக்கடிக் காலத்துக்காக களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இருக்கின்றன என்பதே மனநிம்மதியைத் தரும். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு சிறு தொகைப் பணத்தைத் தனியாக சேமித்து வரவேண்டும். இந்த நடைமுறைகள் தான் உணவு நெருக்கடி எம்மை முற்றாகப் பாதிக்காமல் இருக்க உதவப் போகின்றன என்பது மட்டுமே நிதர்சனம்.

Sunday, February 6, 2011

இயற்கையிலும் ஒரு குருஷேத்திரம்





‘கடைசியாய் ஒருமுறை

கூவிக் கொள்க குயில்களே’

என்று தொடங்கி,

‘திட்டுத் திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்

தட்டுக்கள் எழும்

ஓன்றன் மீதொன்று படையெடுக்க...



பூமியின் வயிற்றெரிச்சலாயக்

காலங்காலமாய் கனன்று கிடந்த

அக்கினிக்குழம்புகள்

விடுதலை கேட்க....



வெறிகொண்ட மேகங்கள்

விரைவதைப் போலப்

பாறைகள் பூமிக்குள்

பயணப்பட...



தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது

பூமிக்குள் ஒரு குருஷேத்திரம்’

என்று நீளுகின்றன.

கவிஞர் வைரமுத்துவின் வரிகள்.



முழுமையாகப் படித்துணர்ந்தவர்களுக்கு அவ்வரிகளின் யதார்த்தம் விளங்கியிருக்கும்.

அண்மைக் காலங்களாக நாம் கண்டும் கேட்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும் இயற்கை அனர்த்தங்கள் இக்கவிதையை மேன்மேலும் நியாயப்படுத்துவதாகவே அமைகின்றன.

அவற்றிற்கப்பால் இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக ‘2012’ மாறிவிட்டது. அண்மைக்காலங்களில் நிகழும் தொடர் இயற்கை அனர்த்தங்கள் ‘2012’ தொடர்பான ஊகங்களை வலுப்பெறச் செய்கின்றனவோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் அந்த ஊகங்களை மறுக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள் 2012 தொடர்பான ஊகங்களுக்கான நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட புனைகதைகளே என்கின்றனர் அவ்விஞ்ஞானிகள்.

2012 தொடர்பான ஊகங்களில் ஒன்றுதான் புவிக்கோளத்தின் வட, தென் முனைவுகளின் இடமாற்றமாகும். வட, தென்முனைகளின் இடமாற்றம் என்றதுமே வடமுனைவு தென்முனைவாகவும் தென்முனைவு வடமுனைவாகவும் மாறிவிடும் என்றே பலர் எண்ணுகின்றனர். ஆனால், ஒரு எல்லை வரை அது உண்மையாகாது.

புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமே இந்த வட, தென் முனைவுகளின் இடமாற்றம் என்கின்றனர் விஞ்ஞானிகள். புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமானது நிலநடுக்கங்கள், சுனாமி அனர்த்தம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தலாமென அவர்கள் தரப்பில் எதிர்வு கூறப்படுகிறது.
புவிக்கோளத்தைச் சூழ காந்தப்புலமொன்று தொழிற்படுவது நாம் யாவரும் அறிந்ததோர் விடயமே. புவிச்சுழற்றி அச்சில் ஏற்படும் மாற்றம் புவியைச் சூழவுள்ள காந்தப்புலத்திலே மாற்றத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது. புவிக்கோளத்தின் வரலாற்றிலே இது ஒன்றும் புதிய விடயமல்ல.

அத்தகையதோர் மாற்றம் 785,000 ஆண்டுகளுக்கோ அதற்கும் முன்னரோ, நிகழ்ந்திருக்கலாம். எனக் கூறப்படுகிறது.

விஞ்ஞான ரீதியான அனுமானங்களின் அடிப்படையில் புவிச்சுழற்சி அச்சின் இடமாற்றம் ஏறத்தாழ 300,000 ஆண்டுகளின் முன்னர் இடம்பெற்றதாகக் கணிப்பிடப்படுகிறது. புவிக்கோளத்தைப் பொறுத்தவரை அது இயற்கையானது.


புவியைச் சூழவுள்ள காந்தப்புலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, என்பது இன்றும் விஞ்ஞானிகள் மத்தியில் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், புவிக்கோளத்தில் உள்ள உயிர்களின் நிலைப்பு அந்தக் காந்தப்புலத்திலேயும் தங்கியுள்ளது என்பதை அவர்களால் உணரமுடிகின்றது.

புவிக்காந்தப்புலத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட உலகளாவிய அழிவை ஏற்படுத்தவல்லது என்பதை நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்திருந்தனர்.

புவிக்கோளத்தின் உட்படைகளுள் அதன் மையத்தில் திண்மக் கோளமும், அதைச்சூழ திரவ இரும்பையொத்த குழம்பும் காணப்படும். ஆக வெளியிலே உள்ளபடைதான் புவியோடு எனப்படுகிறது. புவியின் இந்தக் கட்டமைப்பை ஒரு பிரமாண்ட டைனமோவின் இயக்கத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறது விஞ்ஞானிகளின் ஞானம்.

அந்த அடிப்படையில் புவிக்கோளத்தின் கட்டமைப்பு தான் அதைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குக் காரணம் என்ற விளக்கத்தையும் சேர்த்தே முன்வைக்கின்றனர் விஞ்ஞானிகள்.

உண்மையில் முனைவுகளின் இடமாற்றம் என்பது ‘புவிச் சுழற்சி அச்சு இன்று இருக்கும் இடத்தில் நாளை இருப்பதில்லை’ என்ற கருதுகோளையே குறிக்கிறது.


முனைவுகளின் இடமாற்றத்தை புவித்தட்டுக்களுடன் இணைந்து குழப்ப வேண்டிய அவசியமில்லை. புவித் தட்டுக்களின் நகர்வு முற்றிலும் வேறு பட்டதானதோர் நிகழ்வாகும். அதேபோல முனைவுகள் இடம்மாறினால் காந்தம் வடக்கும் தெற்கும் கூட இடம்மாறும் என்று அனுமானிப்பதும் மிகத்தவறான விடயமாகும்.

அண்மைக்காலங்களிலே புவியியலாளர்களும் விஞ்ஞானிகளும் இணைந்து நடாத்தினர். அவற்றின் அடிப்படையில் புவிக்கோளமானது ஏறத்தாழ 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (முன்கம்பிரியன் காலம்) தனது சமநிலையை மீளமைத்துக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அடையற் பாறைகளிலுள்ள காந்தத்தன்மையுடைய கனியங்களை ஆய்வு செய்வதன் மூலம் இந்த முடிவுபெறப்பட்டது. கடந்த 20 மில்லியன் வருடங்களில் வடமுனைவானது ஏறத்தாழ 50 பாகை இடமாறியிருப்பதாக (அசைந்திருப்பதாக) அந்த ஆய்வு தெரிவிக்கிறது. GPS (Global Positioning System) தொழில்நுட்பத்தினடிப்படையிலான ஆய்வொன்று இப்படித் தெரிவிக்கிறது.

சாதாரண பருவகால மாற்றங்கள் கூட புவிக்கோளத்தின் நீர், பனிப்பாறைகளின் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துமெனவும், அந்தமாற்றமானது முனைவுகளில் மிகச் சிறிதளவிலான இடமாற்றத்தை ஏற்படுத்தும். இதுவே அந்த மிஜிஷி ஆய்வு சொல்லும் தகவலாகும்.

அத்தகையதோர் மாற்றம் ஏற்படுமாயின் பூமியில் என்ன எல்லாம் நடக்கலாமெனப் பலரும் பலவிதமான எதிர்வு கூறுகின்றனர்.



காந்தப்புலத்துடன் தொடர்புடைய சகல விடயங்களுமே பாதிக்கப்படுமென்பது பொதுவான ஊகமாகும். அவற்றுள் கப்பல்களும் ஆகாய விமானங்களும் கூட அடங்கிவிடுகின்றன. ஏனெனில் அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் திசையறி கருவி காந்தப்புலத்துடன் தொடர்புடையது. சகல திசைகாட்டிகளும் செய்மதிகளும் கூட செயலிழந்து விடும் நிலையே ஏற்படும். காலத்துக்குக் காலம் இடம்பெயரும் மிருகங்களும் பறவைகளும் கூட எங்கே செல்வது என்று குழப்பமடையும் நவீன தொழில் நுட்ப வசதிகள் யாவுமே ஸ்தம்பித்துப் போகும். மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக பேரழிவுகள் நிகழும் என்று தெரிவிக்கின்றனர் ஒருசாரார்.

வட- தென் முனைவுகளில் அத்தகைய இடமாற்றம் நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதே எவராலும் துல்லியமாகக் கூறமுடியாது. புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலம் ஏதேச்சையானது என்று ஒருபோதும் கூறமுடியாது. அதன் பிரதான தொழிலே அண்டக் கதிர்களிலிருந்தும் சூரியக் கதிர்களில் இருந்தும் புவிக்கோளத்தை (எம்மை)ப் பாதுகாப்பதாகும்.

இந்த காந்தப்புலம் இல்லையென்றால் பூமியில் உயிர்வாழ்க்கையென்பது கூட சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும். அதே போல புவியில் உயிர்வாழ்க்கை இத்தனை மில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்கின்றதென்றால், அதற்கும் இந்த காந்தப்புலம் ஒரு காரணமாகும். அது இல்லாவிடில் உயிரைப் பறிக்க வல்ல சூரியக்கதிர்ப்புகள் பூமியை நேரடியாக வந்தடையும்.


இயற்கையை மனிதன் முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். அவன் அறியாத எண்ணற்ற விடயங்களையும் அற்புதங்களையும் புதிர்களையும் இயற்கை தன்னகத்தே கொண்டுள்ளது.



இயற்கையை ஆராயும் இந்த விஞ்ஞானிகளுக்கு 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற ஒளவையார் வாக்கு மிகவும் பொருந்தும். டேவிட் மொரிஸன் என்ற நாசாவின் சிரேஷ்டவிஞ்ஞானியோ புவி முனைவுகளின் தலைகீழான மாறல் ஒருபோதும் சாத்தியமில்லை என்றே கூறுகிறார். இவ்வளவு காலமும் அத்தகையதோர் நிகழ்வு நடக்கவில்லை. நடக்கவும் மாட்டாது என்பதே அவரது வாதமாக இருக்கிறது. கண்டங்களின் நகர்வு என்பது பலமில்லியன் ஆண்டுகளைக் கருதும் போது சாத்தியம்தான்.

ஆனால் அதற்கும் புவிமுனைவுகளின் தலைகீழான இடமாற்றத்துக்கும் தொடர்பில்லையென்றே கூற வேண்டும். ஆனால் புவிச்சுழசிக்கும் புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குமிடையே தொடர்புள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் புவி சூழலும் திசைக்கும் காந்தமுனைவுத்தன்மைகுமிடையே எந்தவொரு தொடர்பும் இல்லை. அத்துடன் புவியின் வட தென் முனைவுகள் இடம்மாறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. பேரழிவுகள் கூட சாத்தியமற்றவையே. மக்கள் இந்த ஊகங்களையெல்லாம் வீணே எண்ணிக் குழப்பமடையத் தேவையில்லை என்பதே விஞ்ஞானி டேவிட் மொரிஸனின் கருத்தாக இருக்கிறது.

எது எவ்வாறாயினும், தனிநபர்களாக நாம் ஒவ்வொருவரும் இயற்கையை மதித்து அதனுடன் இயைந்து வாழப்பழக வேண்டும். எம் நடவடிக்கைகள் இயற்கையின் சமநிலையைக் குழப்புவனவாக அமையக் கூடாது. “நான் மட்டும் செய்வதால் என்ன? மற்றவர் எவரும் செய்யவில்லையே?” என்ற மனப்பாங்கைத் தவிர்க்க வேண்டும். அவைதான் இயற்கை சீற்றமடையாமல் தன் வழியிலேயே பயணிக்க வழிவகுக்கும்.



அடிப்படையில் இயற்கை சாதுவானது. எமக்கு நன்மையே பயப்பது. அந்த சாது மிரளும் போது நாடு தாங்காது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த கால அனுபவங்கள் கூட இதைத்தான் தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கின்றன. இயற்கை சீற்றமடைவதும் சாதுவாக இருப்பதும் கூட எமது கைகளிலேயே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.