Monday, March 22, 2010

நாம் இழைத்த துரோகங்களுக்கு நாமே பரிகாரம் தேடும் நிலைமை!


"நாம் மீண்டும் ஆதி மனி தர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். மனிதன் மீண்டும் தீர்க்கதரிசன அறிவைப்பெற வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும். இதற்கு அறிவோ விவாதமோ தேவையில்லை. அறிக்கையும் தேவை யில்லை. முழுமையாகச் செயற்படும் மனம் மட்டுமே தேவை. அப்போது மலர்ச்சி ஏற்படும். அந்த மர்ச்சியையே நான் மறுமலர்ச்சியென்பேன்" என்ற ஒஷோவின் வரிகளை இணையத்தில் வாசிக்கக் கிடைத்தது. அந்தக் கூற்றின் அர்த்தம் இன்றைய நாளிற்கு மிகவும் அவசியமானது.

இயற்கை வளங்களுக்கொல்லாம் முதன்மையானதும் அடிப்படையானதுமாகக் காணப்படுவது நீர்வளமாகும். அதுமட்டுமன்றி உயிர்களின் தோற்றத்துக்கும் நிலைப்புக்கும் கூட நீர் இன்றிய மையாததென விஞ்ஞானம் கூறுகிறது. இன்று விஞ்ஞானம் கண்டுபிடித்ததை அன்றே உணர்ந்தமையினாலோ என்னவோ,

"நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான் இன்று அமையாது ஒழுக்கு"

என வள்ளுவப் பெருந்தகை குறிப் பிட்டிருந்தார்.

ஐதரசனும் ஒட்சிசனும் இணைந்து நீர் உருவானமைதான் உயிரினங்களின் தோற்றத்துக்கும் அவற்றின் பரிணாம வளர்ச்சிக்கும் வித்திட்டதாக, பெரு வெடிப்புக்கொள்கையுடன் பார்வினின் கூர்ப்புக்கொள்கையும் தெரிவிக்கிறது. அவற்றினடிப்படையிலேயே வேற்றுக் கிரகங்களில் தண்ணீர் இருக்கிறதா?

அல்லது தண்ணீர் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றனவா என ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆற்றங்கரைகளை அண்டியே பண்டைய நாகரிகங்கள் தோற்றம் பெற்றன என்று வரலாறு கூறுகிறது. யூபிரடீஸ்- தைகிறிஸ் நதிகளை அண்டிய மொசப்பத்திதேமிய நாகரிகமும், நைல் நதியை அண்டிய எகிப்து நாகரிகமும், இந்து நதியை அண்டிய மொகெஞ்சதாரோ-ஹரப்பா நாகரிகமும் வரலாறு கூறும் ஆதி நாகரிகங்களுட் சிலவாகும்.

மனித சமுதாயம் கண்ட மாபெரும் முன்னேற்றத்தின் ஆணிவேராக இருப்பதும் நீரேயாகும். மனிதனின் பிறப்பில் தொடங்கி, அவன் இறக்கும் வரை அவனுடன் இணைபிரியாமல் காணப்படுவதும் இந்த நீர்தான் என்றால் மிகையாகாது.

"வரப்புயர நீர் உயரும்,

நீர் உயர நெல் உயரும்

நெல் உயர குடி உயரும்

குடி உயர கோன் உயர்வான்" என அவ்வையார் பாடியிருந்தார். இக்கவி நாட்டின் செழிப்புக்கு நீரின் இன்றிய மையாமை பற்றி மிக அழகாகச் சொல்கிறது. நீர் மனிதனுக்குப் பயன்படும் வழிகளைத் தொகுத்தால், எஞ்சும் விரித்தால் பெருகும்.

பூமியிலே 70 சதவீதத்துக்கும் அதிகமான பரப்பு நீர்ப்பரப்பாகும். அந்த நீர்ப்பரப்பிலே 97% சதவீதமான பகுதி உவர் நீர்ப்பகுதியாகிய ஆறுகளாகவும் சமுத்திரங்களாகவும் காணப்படுகின்றன. 2.4 சதவீதமான பகுதி பனிப்பாறைகளாலாகிய துருவப்பகுதியாகும். ஆக 0.6 சதவீதமான பகுதி மட்டுமே நன்னீரைப் பெறக்கூடிய ஆறுகளும், வாவிகளுமாகும்.

இந்த 0.6 சதவீதமான நன்னீர்ப்பரப்பு மட்டுமே, இன்றுவரை பூமியில் வாழும் உயிரினங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அடிப்படைக்காரணியாகக் காணப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டு, தொழில்நுட்பத் துறைகளும் கைத்தொழிற்றுறைகளும் அபிவிருத்திகாணத் தொடங்கிய காலகட் டமாகக் கருதப்படுகிறது. அந்த அபிவி ருத்திதான் இன்று எம் கண்ணெதிரே தெரி யும் வளமான வாழ்வுக்கும் சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றத்துக்கும் காரணமாகியது. காலத்துடன் அதிகரித்த மனிதத்தேவைகள் நன்னீர்ப்பற்றாக்குறையைத் தோற்றுவித்தன.

தூய்மையான நீரின்றித் தினமும் 6000 குழந்தைகள் இறக்கின்றன. அதேபோல ஆண்டுதோறும் 250 மில்லியன் மக்கள் நீரினால் ஏற்படும் தொற்றுக்காரணமாக இறக்கின்றனர். நாம் பயன்படுத்தும் நீரினைவு எவ்வளவு அதிகரிக்கிறதோ, அதற்கமைய நீர் மாசடையும் அளவும் அதிகரிக்கும். நீர்மாசடைதல் தவிர்க்க முடியாதது எனக் கருதினால், கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேற்றுவது அவசியமாக வேண்டும். கழிவு நீரைச் சுத்திகரித்து, குடிப்பதற்குக் கூடப் பயன்படுத்தும் நாடுகளும் காணப்படுகின்றன.



இன்றைய காலகட்டத்தில் நீரின் மதிப் பையும் மகத்துவத்தையும் நாம் உண ராவிட்டால், நாளை கஷ்டப்படப்போவது எமது எதிர்கால சந்ததியேயாகும். நன்னீர்ப்பற்றாக்குறையால் ஏற்படப் போகும் விபரீதங்களை இன்றைய உலகு நன்கு உணர்ந்துவைத்துள்ளது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் சபை, மார்ச் மாதம் 22 ஆம் திகதியை உலக நீர் தினமாகப் பிரகடனப்படுத்தியது.

1992 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில் 1993 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. பொதுமக்களிடையே அருகிவரும், நீர் வளம் தொடர்பான விழிப்புணர்வையூட்டும் நோக்குடனேயே இத்தினம் பிரகடனப் படுத்தப்பட்டது.

ஒவ்வொருவருடமும் ஒவ்வொரு செய்தியைக் காவிவரும் இந்த உலக நீர் தினம், இவ்வருடம் "ஆரோக்கிய ரி!zதீl8!யி தூய நீர்" எனும் செய்தியைக் காவிவந்திருக்கின்றது.

உலக நீர் தினத்தை அனுஷ்டிப்பதோடு மட்டும் நின்றுவிடாது அது காவிவரும் செய்தியை உணர்ந்து செயற்பட விளையவேண்டும். இவ்வளவு காலமும் நீடித்த நீர்வளம் இன்னும் பல யுகங்களுக்கு நீடிக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்துவதாக எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். அன்றேல், எமது எதிர்காலச் சந்ததியாலேயே தூற்றப்படும் முன்னோர்களாக நாம் மாறிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

இவ்வளவு காலமும் நிலத்துக்காகவும் அதிகாரத்துக்காகவும் போராடிய மனித இனம், இனிமேல் போரிடுமாயின் அது நீருக்காகவே இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. நீருக்காக மூன்றாம் உலக மகாயுத்தமொன்று உருவாகலாமென விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகின்றனர்.

இயற்கை வளங்கள் அருகிவரும் நிலைமை, அவை இலவசமாகக் கிடைத்தவை என்ற எண்ணத்தை விலக்கி அவற்றை நுகர்வுப் பண்டங்களாகக் கருதும் புதியதோர் பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறது. நீரின் பெறுமதி மதிப்பிடப்படுகிறது. பல்வேறு பாவனைகளுக்குமான நீரின் தரம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சில தசாப்தங்களுக்குள்ளேயே திசை மாறிய நீர்வளத்தின் போக்கு, அதன் எதிர்காலத்தை எதிர்வு கூறவோ அல்லது கற்பனை செய்யவோ முடியாத அளவிற்கு மாற்றியிருக்கிறது. இந்நிலைக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடுடையவர்கள் நாங்களே!

நாம், பிள்ளையைக் கிள்ளிய குற்றத்திற்காக தொட்டிலையும் ஆட்டவேண்டிய கடப்பாட்டை உடையவர்களாகிறோம்.

நடந்தவை நடந்தவையாகவே இருக்க, நாம் சுத்தமான நீரைப் பெறுவதற்கான வழிமுறைகளைக் கையாள வேண்டும். அத்துடன் நீரை வீணடிக்கும், மாசுபடுத்தும் செயற்பாடுகளை இயன்றவரை குறைக்கவோ அல்லது முற்றாக நிறுத்தவோ வேண்டும்.

சுத்தமான நீரைப் பெறுதலானது நீரை மாசடையாமல் தடுத்தல், மாசடைந்த நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துதல் எனவும் வகைப் படுத்தப்படும்.

விவசாய, தொழிற்சாலை அல்லது கைத்தொழில் மற்றும் வீட்டுக் கழிவுகளை இயன்றவரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். மீள உபயோகிக்கக் கூடிய வற்றையும் மீள் சுழற்சி செய்யக்கூடிய வற்றையும் வேறாக்கி உபயோகிக்கலாம். சுத்திகரிக்காமல், கழிவுகளை நேரடியாக நீர் நிலைகள், நிலம், வளிமண்டலம் ஆகியவற்றுள் வெளியேற்றுதல் தடுக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகளுள் வெளியேற்றப்படும் கழிவுகள், நீர்நிலைகளை மாசுபடுத்துகின்றன. மனிதன் உட்பட நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உயிரினங்களின் சுகவாழ்வு பாதிக்கப்படுகிறது.

நிலங்களில் கொட்டப்படும் கழிவுகள் மீது மழைபெய்யும் போது கரையக்கூடிய மாசுக்கள் கரைந்து நிலத்தினுள் வடிந் தோடுவதால் நிலக்கீழ் நீரும் நிலச்சாய்வின் வழியே வழிந்தோடி நீர்நிலைகளை அடைவதால் நீர்நிலைகளும் மாசடைகின்றன. நிலத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் போன்றே வளிமண்டலத்தில் வெளியேற் றப்படும் வாயுக்கழிவுகளும் செயற்படு கின்றன.

இவ்வாறு மாசடையும் நீரைச் சுத்திகரித்து அதன் தரத்திற்கமைய, பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். வீட்டுக்கழிவு நீரைச் சுத்திகரித்து விவசா யத்துக்குப் பயன்படுத்தலாம். நீரை மாசு படுத்தாத வகையிலான விவசாயி, வர்த் தக நடைமுறைகளைக் கையாள வேண்டும்.

எந்த ஒரு கழிவும் சுத்திகரிக்கப்பட்டு இனி சூழலுக்குத் தீங்கை விளைவிக்காது எனக் கருதும் பட்சத்தில் மட்டுமே வெளியேற்றப்பட வேண்டும்.

இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர், இலங்கையில் அடைக்கப்பட்ட போத்தல்களில் குடிநீர் காசுக்கு விற்கப்படுமென எவருமே நினைத்திருக்க வில்லை. ஆனால் இன்று அது ஒரு சர்வசாதாரணமான விடயமாகச் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

தற்போது சில நாடுகள் கழிவு நீரைச் சத்திகரித்து குடிநீராகப் பயன்படுத்துக்கின்றன. சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அத்தகைய நாடுகளுள் அடங்குகின்றன.

சிங்கப்பூருக்கான தண்ணீர் விநியோகம் பெரும் செலவில் நடைபெறுகிறது. கருத்துக்கணிப்பொன்றில் கழிவு நீரைச் சுத்திகரித்து உபயோகப்படுத்துவதற்கு பெரும்பாலான சிங்கப்பூர் மக்கள் ஒப்புதல் அளித்திருந்தனர். அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரிலே சுத்தி கரிக்கப்பட்ட கழிவுநீர் தான் பொதுத் தேவைகளுக்குப் பயன்படுகிறது. இஸ்ரேல் தனது விவசாயத்தேவைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரைப் பயன்படுத்தி வருகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையிலே இன்னும் அத்தகையதோர் தேவை ஏற்படவில்லை. ஆனால் இன்று இருக்கும் நிலை தொடந்தால், நாமும் கழிவு நீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டிய காலம் இன்னும் 3 தசாப்தங்களுக்குள் ஏற்பட்டுவிடுமென நம்பப்படுகிறது.

இலங்கையின் 14 மாவட்டங்களில் வசிப்போரில் 33 சதவீதமான மக்கள் அடிப்படை நீர்வசதியற்றவர்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாநகர சபை மட்டும் தான் கழிவுநீருக்கான பொது வடிகால் வலையமைப்பையுடைய மாநகர சபையாகும். நகர மயமாக்கலும் மக்களின் நகரங்கள் நோக்கிய இடப்பெயர்வும் வேகமாக அதிகரித்து வரும் எங்கள் நாட்டில், கழிவு நீர் வடிகால் வலையமைப்புகளின் தேவையும் நீர்ச்சுத்திகரிப்பு, பரிகரிப்பு நிலையங்களின் தேவையும் காணப்படுவது மறுக்கமுடியாதது.

வவுனியாவிலே, வைத்தியசாலை, நகரக் குடியிருப்புக்கள் ஆகியவற்றின் கழிவுகள் நீர்ப்பரிகரிப்பு நிலையமின்மையால் நேரடியாக வவுனியாக் குளத்தினுள் வெளியேற்றப்படுகின்றன. விவசாய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட வவுனியாக்குளம் இன்று மாசடைந்து காணப்படுகிறது. வவுனி யாக்குளம் போல இன்னும் பல குளங் கள் மாசடைந்து காணப்படலாம். அவை பற்றி நாம் அறியாமல் இருக்கலாம். இனியும் உறங்கிக்கிடக்காது, இது எங்கள் வளம் என்ற உணர்வுடன் நாம் தான் விழிப்படைய வேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் சடுதியாக அதிகரித்த சனத்தொகையைக் கருத்தில் கொண்டு அங்கே நீர்ப்பரிகரிப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நிலக் கீழ் நீர்வளத்தை பெருமளவில் நம்பியிருக்கும் யாழ்ப்பாணத் தில் நிலக்கீழ் நீரினளவு குறைவடைந்து வருவதும் அவதானிக்கப்படுகிறது. இத்தகையதோர் நிலைமை இலங்கையின் கிழக்குப் பகுதிகளிலும் காணப்படும். நிலக்கீழ் நீரை அதிகமானளவில் பெற்றுக்கொள்வதால் நீரிலுள்ள பார உலோகங்களின் செறிவு அதிகரிக்க, 'மக்கள் பல்வேறு சுகாதாரப் பிரச்சினை களுடன் குடிநீர்ப் பிரச்சினையையும் எதிர்நோக்குகிறார்கள்.

நிலக்கீழ் நீர்வளத்தை அதிகரிப்பது தான் இத்தகைய பிரச்சினைகளை முறியடிக்கக்கூடிய எளிய வழியாகும். அவ்வாறு அதிகரிப்பதாயின், மழையினால் பெறப்படும் நீர் வீணே வழிந்தோடிக் கடலிலே கலப்பது தடுக்கப்பட்டு, நிலத்தினுள் வடிந்தோடக் கூடிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பொருத்தமான மரங்களை வளர்ப்பதுடன் சிறியளவிலான பல நீர்த்தேக்கங்களை உருவாக்கி நீரைச் சிறைப்படுத்த வேண்டும். இதற்கு நவீன முறையிலான பல செயற் பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்கள் செலவுமிக்கனவாகை யால் எம்மைப் போன்ற அபிவி ருத்தியடைந்துவரும் நாடுகளால் அவற்றை மேற்கொள்வதென்பது சற்றுக் கடினமான விடயமேயாகும்.

சூழலை மாசுபடுத்தும் நீர்க்கழி வுகளை வெளியேற்றும் தொழிற் சாலைகள், பிரத்தியேகமான நீர்ப்பரிகரிப்பு நிலையங்களையும் அமைத்து கழிவு நீரைச் சுத்திகரித்து வெளியேற்ற வேண்டுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை வலியு றுத்துகிறது. 'பிலிசறு' எனும் திடக் கழிவு முகாமைத்துவத்திட்டம் கூட இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

கிranனீix நிறுவனத்தின் தொழிற் சாலை ஒன்று தனது கழிவுநீரைச் சுத்திகரித்துத்தானே மீளப்பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தொழிற்சாலைகள் யாவுமே அத்தகைய கொள்கைகளுடன் அமைக்கப்பட்டால் எம் நன்னீர் வளத்தின் ஆயுள் இன்னும் பல தசாப்தங்களுக்கு நீடிக்கப்படும்.

சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி லாவகமாய்த்தப்பிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மை மறுக்கப்பட முடியாதது. ஆனால் அவ்வாறு தப்பிப்பதன் விளைவு மீண்டும் தம்மையே தாக்குமென்ற சிந்தனை அவர்களுக்கு வருவதில்லை.

அத்துடன் நாம் நீரை வீண்விரயம் செய் வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும். நாம் சமைக்கும் உணவில் ஏறத்தாழ 30 சதவீத உணவு விரயம் செய்யப்படுகிறது. அவ்வுணவின் பின்னால் இருக்கும் நீரினளவு உலகளாவிய ரீதியில் 40 டிரில் லியன் எனக்கணக்கிடப்பட்டுள்ளது.

ஒருகிலோ நெல் பெறப்படுவதற்கு 2400 லீற்றர் நீர் தேவைப்படுகிறது. இவ்வாறு நாம் நகரும் ஒவ்வொரு உணவுப் பொருட்களும் பல லீற்றர் நீரைப் பெற்றமையால் உருவாக்கப்பட்டவையே. உணவை விரயமாக்காமலிருப்பதானது உணவுப் பாதுகாப்பை அதிகரிப்பதுடன் நீர் விரயத்தைத் தவிர்த்து நீர்வளத்தைப் பேணும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.

இது தவிர, எமது அன்றாட செயற் பாடுகளின் போதும் நீரைச் சிக்கனமான முறையில் பயன்படுத்தப் பழக வேண்டும்.

இலங்கையின் கரையேரப் பிரதேசங்க ளின் நன்னீர் வளம், ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்த ஆழிப்பேரலை அன ர்த்தத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்டது. வீட்டுக் கிணறுகள், குளங்கள், தண்ணீர்த் தாங்கிகள், மழைநீர்த்தாங்கிகள், குழாய்க்கிணற்று வசதிகள் ஆகிய நன்னீர் மூலங்கள் பாதிக்கப்பட்டன. கரையோர நீர் நிலைகள் ஒட்சிசன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதுடன் அவற்றின் உவர்த்தன்மையும் அதிகரித்து அவை மாசடைந்து காணப்பட்டன.

இத்தகைய பிரச்சினைகளிலிருந்து இப்பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்ப, பல்வேறுபட்ட திட்டங்கள் நடை முறைப்படுத்தப்பட்டு மக்களுக்கு தூய நீரை வழங்கும் ஏற்பாடுகள் செய்ய ப்பட்டுள்ளன. இவை பற்றியெல்லாம் நாம் அறிய முனையவேண்டும்.

நீர் வளத்தைப் பாதுகாப்பதற்கு இன்றைய நாள் வழங்கியிருக்கின்ற சந்தர்ப்பத்தை முதலடியாகக் கொண்டு நாம் விழிப்படைவதோடு மட்டும் நின்றுவிடாது எம்மைச் சார்ந்தோரையும் விழிப்புணர்வு கொள்ளச் செய்து ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிசமைப்போமாக.

1 comment:

நீச்சல்காரன் said...

http://oneweekforwater.org/countdown/

Post a Comment