Monday, December 5, 2011

SLAAS Awards for the popularization of Science - 2011


கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் - 09


பராமரிப்பும் கவனிப்பும் இல்லாமல்
 அழிந்து போன வீடுகள் அதிகம்



யாழ்ப்பாணத்தின் வேலி மாதிரிகள், கடந்த கால நினைவுகளை மீட்க உதவின என்றால் மிகையில்லை. அடுத்த தொகுதி புகைப்படங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்திலே தொட்டக் காலத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளின் மின் பிரதிகள் அச்சிடப்பட்டு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. இந்து சாதனம் தொட்டு எண்ணற்ற பத்திரிகைப் பிரதிகளைக் காண ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இது ஊடகத்துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாய் அமைந்திருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இன்று கணினி இருப்பதால் உள்ளத்தில் நினைப்பதைத் தத் ரூபமாக வடிவமைக்க முடியும். பத்திரிகையின் பக்கம் தயாராகி விடும். தேவையானால் சேர்க்கலாம். வேண்டாவிட்டால் நீக்கலாம். ஆனால் அச்சுக்கலை தொடக்கப்பட்ட காலம் தொட்டு அத்துறையில் கணினிகள் அறிமுகமாகும் வரை நினைத்தபடி மாற்றும் வடிவமைப்புகள் சாத்தியம் குறைந்தனவாகவே இருந்தன.
அத்தகைய காலங்களிலும் கூட உடனடிச் செய்திகளைத் தாங்கி வெளிவந்த அந்தப் பத்திரிகைகளைப் பார்க்க கிடைத்ததே ஒரு கொடுப்பினை என்று தான் கூற வேண்டும். அந்தந்தக் காலத்து மொழி நடை, பக்க வடிவமைப்பு நுட்பங்கள், செய்திகளின் தன்மைகள் என அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை தாங்கிய செய்திகள் எம் கடந்த கால வரலாற்றைக் கூறுகின்றனவோ இல்லையோ, அச் செய்திகளின் தன்மை நாம் கடந்து அந்த வரலாற்றின் அடிப்படையைக் கூறும்.
அதேபோல மற்றொரு பகுதியிலே யாழ்ப்பாணத்து பெரியார்களின் உருவப்படங்கள் பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்கு தேடியும் கிடைக்காத அந்த அரிய படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தமையானது உண்மையில் ஒரு சிறந்த முயற்சி என்றே கூற வேண்டும்.
அதேபோல பழைமையான யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் முகப்புகளின் தோற்றங்களும் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. யாழ். மண்ணிலே ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தமையால் பல துறைகளிலும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டது.
அவர்களது என்பதை விட அவர்களது நாட்டின் செல்வாக்கு என்று கூறுதல் சாலப் பொருந்தும். யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகள் மிகப் பிரபலமானவை. அவற்றைப் பற்றி விபரிக்க முயன்றால் இந்த பக்கம் போதுமா எனத் தெரியவில்லை. ஆரம்பகாலங்களில் திண்ணைக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகள் பின்னர் காலனித்துவ ஆட்சிக்காரரின் பாரம்பரியங்களையும் உள்வாங்கி மெல்ல மெல்ல பரிணமித்தன என்று கூறலாம்.

மிகவும் தொன்மையான வரலாறுடைய யாழ்ப்பாணக் கோட்டையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காணமுடியும். கோட்டையைச் சூழவுள்ள பிரதேசம் முழுவதும் வரலாற்று மணம் வீசுவதற்கு இந்த ஒல்லாந்து காலக் கட்டடங்கள், வீடுகளும், ஒரு காரணம் எனலாம். அப்பகுதியில் மட்டுமன்றி பல பகுதிகளிலும் அத்தகைய காலனித்துவ காலக் கட்டடங்கள் காணப்படுகின்றன. நல்லூர், ஆனைக் கோட்டை போன்ற பிரதேசங்கள் அவற்றுள் சிலவாகும். சில ஊர்களுக்குச் சென்றால் பெரும்பாலான கட்டடங்கள் காலனித்துவ காலத்தவையாகவே இருக்கின்றன. இந்த கட்டடங்களையெல்லாம் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி பாராட்டுதற்குரியது.
இக் கட்டடங்கள் பிரமாண்டமானவை. இவற்றின் ஒரு தளமானது நவீன கட்டடமொன்றின் இரு தளங்களின் உயரமுடையதாக இருக்கும். வீடுகளின் அறைகள், விறாந்தைகள் எல்லாம் மிகவும் விசாலமானவை, மக்கள் முன்னைய காலங்களிலே கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். பெரிய வீடும் அவசியமாக இருந்தது. வீட்டிலே நிறைய அங்கத்தவர்கள் இருந்தமையால் பராமரிப்பும் கடினமாகத் தெரியவில்லை.

ஆனால், இன்றைய நிலைமையோ தலை கீழானது. கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தனிக் குடும்பங்களிலும் ஒரு சில அங்கத்தவர்களே யாழில் வாழ்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோரின் பார்வையிலே இந்த பழைமையான வீடுகள் பெருஞ்சுமைகளாகவே தெரிகின்றன.
போரினால் சிதைந்த வீடுகளை விட, கவனிப்பாரின்றி, போதிய பராமரிப்பின்றி சிதைந்து போன வீடுகளே அதிகம் எனலாம். அவற்றைப் பராமரிப்பதொன்றும் இலகுவான காரியமுமல்ல. இரு நவீன வீடுகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை விட இந்த காலனித்துவ கால வீடுகளைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாகும். அத்துடன் நவீன மோகத்தின் இந்த பழைமையான வீடுகள் செயலிழந்து செல்லாக்காசாகி விடுகின்றன என்பது தான் பொதுவான உண்மை. ஆயினும் கூட, காலனித்து காலத்துவ வீடுகளின் மதிப்பை உணர்ந்து அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருபவர்களும் இல்லாமல் இல்லை. இளஞ் சந்ததியினருக்கு அந்த வீடுகளின் அருமையைத் தெரிய வைத்தாலன்றி வேறு எந்த வகையிலும் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதென்பது நிதர்சனம்.
அந்த உன்னதமான பணியை இந்த யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி செய்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். நாற்சார வீட்டில் வசிப்பதன் சுகம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். சுகமான அனுபவம் என்று கூறுதல் தகும்.
இவை தவிர தொல்லியல் திணைக்களத்தின் துணையுடன் வட மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள்,அவற்றிலே கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் போன்றனவும் கூட ஆவணப் பதாகைகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுவரை நாம் பார்த்தவை யாழ். கண்காட்சி பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையே! கண்காட்சியில் இருந்த பல விடயங்கள் இங்கு தவற விடப்பட்டும் இருக்கலாம். ஆயினும் இக்கட்டுரைத் தொடர் ஒரு பொதுவான எண்ணப்பாட்டை வழங்கியிருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
இம்முறை கண்காட்சியைத் தவற விட்டவர்கள் எதிர்வரும் காலங்களிலும் தவறவிட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணமும் எம்மவரின் தொன்மை மிகு வாழ்வியலை இளஞ்சந்ததி உணர வேண்டும் என்பதுவுமே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கமாகும்.
கண்காட்சி நடைபெற்ற அதேவேளை ஆய்வரங்கும் நடைபெற்றிருந்தது. தமிழ், ஆங்கில மொழிகளிலான ஆய்வுக்கட்டுரைகள் பலவும் சமர்ப்பிக்கப்பட்டன. அவை விரைவில் புத்தகமாக வெளியிடப்படும் என பேராசிரியர் புஷ்பரட்ணம் குறிப்பிட்டிருந்தார். வரலாற்று ஆய்வு என்ற எல்லைக்குள் இன, மத, மொழி பேதம் இல்லை என்ற உண்மை ஆய்வரங்கில் தெளிவானது.
ஆனைக்கோட்டை முத்திரை உட்பட, யாழ்ப்பாணத்து தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட சகோதர இனத்தவர்களையும் இங்கு குறிப்பிடவேண்டும். கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தமானது எம்மவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விட்டது என்று தான் கூற வேண்டும். கண்காட்சியில் கண்ட சில விடயங்கள் அதைப் பிரதி பலித்தன. யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மைச் சமூகத்தின் மொழியாற்றல் தமிழுக்குள் மட்டும் முடக்கப்பட்டு விடக் கூடாது என்பது பலரின் அவாவாக இருக்கிறது. ஆங்கிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டால் தொடர்பாடல் திறன் விருத்தியும் சிறப்பாக இருக்கும். அதேவேளை வெளிப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர் பரிமாற்ற செயற்றிட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உலக வரைபடத்தைப் பொறுத்த வரையிலே இலங்கை ஒரு சிறு புள்ளி, அதிலே ஒரு சிறிய பகுதி தான் வட மாகாணம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எமது எல்லையைக் குறுக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். அந்த உண்மையை இக் கண்காட்சியின்போது காணக்கூடியதாக இருந்தது.
எம்மவரின் அடிப்படை மனப்பாங்கு மாற வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை தான். ஆனால் அதற்குள் வெளியுலகு எம்மைப் புறந்தள்ளி ஒதுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தும் திறன், அம்முடிவுகள் கணினி மென்பொருள் மூலம் வெளிப்படுத்தப்படும்போது அவை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்கள் தொடர்பிலே நவீன விடயங்கள் அறியப்படவேண்டும். பல செயற்றிட்டங்கள், விரிவுரைகள் நடாத்தப்பட்டு அவை தொடர்பிலான பயிற்சி பல்கலைக்கழக சமூகத்துக்கு வழங்கப்படுதலும் அவசியமாகிறது.
எம்மவரிடம் இருக்கும் திறமைகள் மழுங்கடிக்கப்படாமல் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட இவை நிச்சயம் தேவை. குறிப்பாக தலைநகரில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளித்தொடர்புகள் அதிகம் இருக்கும். ஆதலால் அப்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் வெளியுலகை முகம் கொடுக்கும் விதம் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படும்.
எம்மவர் தான் உலகெங்கும் வாழ்கிறார்களே! ஆதலால் எல்லோரையும் விட எமக்குத் தான் சர்வதேசத் தொடர்புகள் மிக அதிகம் இருக்கும். ஏனெனில் உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுகிறார்கள். பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். யாழ். பல்கலைக்கழகத்துடனான அறிவுப் பகிர்வை, அனுபவப் பகிர்வை மேற்கொள்ள அவர்கள் முன்வரவேண்டும். அதற்கு பல்கலைக்கழகமும் ஒத்துழைக்க வேண்டும். பல்கலைக்கழக சமூகம் முன்னிலையடைய அது நிச்சயம் வழி வகுக்கும்.
யாழ்ப்பாணத்திலே இருக்கும் பாரம்பரிய வீடுகள், சொத்துகள் பல புலம் பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானவை. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி தொடர்பில் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற பல்கலைக்கழக குழுவினர் சில சிக்கல்களை எதிர்நோக்கினர். புலம் பெயர்ந்தவர்களுக்குச் சொந்தமானவற்றை பாதுகாவலர்கள் அவர்களிடம் வழங்க மறுத்து விட்டனர். ஆக புலம் பெயர் தமிழர்கள், தாம் அவற்றால் பயனடைய மாட்டோம் என நம்பும் பட்சத்தில் அவற்றைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் ஒப்படைக்க முடியும். எம்மவர் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முயற்சிகளுக்கு அது பேருதவியாக இருக்கும்.
சில குடும்பங்கள் தம்மிடம் இருக்கும் பழைமையான ஏடுகள், செப்பேடுகளை வழங்க மறுத்திருக்கின்றன. அசையாச் சொத்துகள் மீது தமக்கிருக்கும் உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட அவர்கள் அவ்வாறு நடக்கக் காரணமாகிறது என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
யுத்தம் என்ற அரக்கன் துரத்தத் துரத்த நாம் ஊர் ஊராய் ஓடியதால் எம்மை அறியாமலே இழந்து விட்டிருந்த தனித்துவத்தை இக்கண்காட்சி புடம் போட்டு காட்டியதுடன், நாம் மீள நினைத்துக் கூடப் பார்த்திராத நினைவுகளை எல்லாம் மீட்டு அந்த பசுமையான வாழ்விலே இன்னொரு முறை எம்மைச் சஞ்சரிக்க வைத்து கண்களைப் பனிக்கச் செய்தது எனலாம்.

Friday, December 2, 2011

கை வழி நயனம் செல்ல...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சனிக்கிழமை நூபுர நாதத்திலே கொழும்பு கதிரேசன் மண்டபம் லயித்துப் போயிருந்தது. கொஞ்சும் மழலையர் தொட்டு அழகு நங்கையர் வரை சகல வயதினரதும் நாட்டியத்தில் முழு அரங்கமுமே சொக்கிப் போயிருந்ததெனலாம். இலங்கையில் மட்டுமன்றி உலகிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்திருக்கும் நாட்டிய கலா மந்திரின் மாணவியர் தான் அதற்குக் காரணமானவர்கள் என்பதில் மிகையேதுமில்லை.
“கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல, ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு”
என்ற கம்பராமாயண வரிகள் தான் நினைவுக்கு வந்தன. ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தனக்கே உரித்தான தனித்துவத்துடன் தலை நகரில் நிமிர்ந்து நிற்கும் கட்புல அரங்காற்றுகை மையம் தான் நாட்டிய கலா மந்திர். அதன் பின்னணியில் ஒரு பெரும் கலைப்பாரம்பரியம் மட்டும் காணப்படவில்லை. மூன்று சந்ததிகளின் உழைப்பு, ஆர்வம், ஊக்கம், ஒத்துழைப்பு, நம்பிக்கை என சகலதையும் இணைத்து கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் நாட்டிய கலாமந்திரை வழி நடத்துகிறார். அவரது நெறியாள்கையிலே மாணவிகள் வழங்கிய நடனப்பிரசாதம் தான் நூபுர நாதம்.
நூபுரம் என்றால் சிலம்பு சலங்கை என்று பொருள் படும். பெயருக்கேற்ப சலங்கைகளின் நாதம் காதில் ஒலித்த படியே தான் இருந்தது.
பல்வேறு படி நிலைகளில் நடனக்கலையைப் பயிலும் நாட்டிய கலாமந்திர் கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்கள் இணைந்து தம் திறன்களை மிக அருகாமையாக வெளிப்படுத்தியிருந்தார். கண்ணைக்கவரும் வகையிலே வடிவமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான ஆடை ஆபரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சியும் நாட்டிய கலா மந்திரின் தனித்துவத்தை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியிருந்தன எனலாம்.
சிவ கணேச வந்தனத்தில் ஆரம்பித்து ஐதீஸ்வரம் திருவாசகம் தொட்டு பாரதியார் பாடல், திருக்குறள் பரதம், வர்ணம், ஷக்தி கூத்து, எனக் கடந்து தில்லானா, தோல் என்ற பல்சுவை நடனத்துடன் நிறைவுற்ற நூபுர நாதம் இன்னும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டிய கலாமந்திரின் மூன்றரை தசாப்த கால கலைப் பாரம்பரியத்திலே இந்த நூபுர நாதம் ஒரு மைல் கல் ஆகும். கலைக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த பெற்றோரான சண்முகம் பிள்ளை - விஜயலக்ஷ்மி தம்பதியிடமிருந்து தான் பெற்ற இந்த அரிய கலைச் செல்வத்தை அடுத்த சந்ததிக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறார் வாசுகி. அவரது சிரேஷ்ட மாணவியருள் இருவரான மங்களா கெளதம், வைத்தியக் கலாநிதி அஞ்சனா பால ரட்ணராஜா இருவர் தமது கணவர்கள் சகிதம் கெளரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். நூபுர நாதத்தின் ஒரு அங்கமாக, தம் குரு வாசுகியுடனும், நாட்டிய கலா மந்திருடனுமான தமது அனுபவங்கைளப் பகிர்ந்தமை நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்.
நாட்டிய கலாமந்திர் மாணவியராக இருந்த காலத்தில் தமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களான, சிதம்பரம் நாட்டியோற்சவம், பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபாவின் முன்னிலையில் அரங்கேற்றிய நாட்டியம். தஞ்சை பெருங்கோவிலின் ஆயிரமானவது ஆண் விழாவில் ஆடிய ஆயிரம் கலைஞர்களுடன் இணைந்து பங்கேற்ற நடனம் போன்ற சந்தர்ப்பங்களில் தமக்குக் கிடைத்த அனுபங்கள், தம் மன உணர்வுகள், பரதம் கொண்டிருந்த தெய்வீகம் எனப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களது அனுபவங்கள் அரங்கத்தை மெய் சிலிர்க்க வைத்தது. பரதக் கலையின் உன்னதத்தை உணர வைத்தது. அத்துடன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. பரதம் கற்பதாயின் பணச் செலவு மிக அதிகம் என்பது ஒரு சாராரின் கருத்து. அதில் உண்மை இல்லாமல இல்லை. ஆனால் பணத்துக்கு அப்பால் பரதக்கலையின் பின்னணியில் பல விடங்கள் இருக்கின்றன. மனிதப் பிறப்பின் உன்னத குறிக்கோளான தெய்வீகத்தை அடைய இக்கலை வழி வகுக்கும் என மங்களா கெளதம் அழகாக கூறியிருந்தார். பரதம் என்பது கலை மட்டுமல்ல. அதுவே கணிதம், அதுவே விஞ்ஞானமும் கூட என்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளியின் நிறுவுநர் தனஞ்சயன் ஐயா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அது லயம், தாளம் பிறழாமல், ஆழ்ந்த அவதானிப்புடன் ஆடவேண்டிய கலையாகும். அங்கு நுண்கணித அறிவு வளர்கிறது. எதை அபி நயிக்கவேண்டுமாயினும், முதலில் அதன் பின்னணியிலிருக்கும் விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. என்று தனஞ்சயன் ஐயா அழகாக விளக்கியிருந்தார். அவரது கூற்றிலே எத்துனை பெரிய உண்மை இருக்கிறது என்பதை நூபுர நாதம் உணர்த்தியது.
அவை மட்டுமன்றி இந்த அரங்காற்றுகைகள் மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மேடைக்கூச்சம், மனப்பயம் போன்றவற்றை தூர விலக்கி விடும் வல்லமை வாய்ந்தவை. அதேவேளை, அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வேரூன்றவும் வழி வகுக்கின்றன. வாழ்க்கையில் தன்னம்பிக்கையின்றி எதையுமே சாதிக்க முடியாதென்பது கண்கூடு. எந்த வித பயமுமின்றி, பிழை விட்ட போது கூட நயமாகத் திருத்தி ஆடிய பிஞ்சுப் பாதங்கள் அந்த உண்மையை அழகாக உணர்த்தின. கண்டிப்பான ஆசிரியை எனப் பெயர் பெற்ற போதும் தன் மாணவச் செல்வங்களின் நூபுர நாதத்தை அரங்கிலிருந்து பார்த்த குரு வாசுகியின் முகம் கொண்டிருந்த பெருமிதமும் அரங்கத்தை நிறைத்திருந்த மக்கள் கூட்டமும் வெற்றிச் சங்கை முழங்காமல் முழங்கின எனலாம்.
அவசர உலகில், மனதுக்கு இனிமை தர இப்படியான நூபுர நாதங்கள் நிச்சயம் தேவை தான்!

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-08

வேலிப் பொட்டு

சொல்லும் கதைகள்


அன்றாடப் பாவனையிலிருந்த பித்தளை, செம்பு, பல்வேறு தரப்பட்ட உலோகப் பொருட்கள் அடுத்த அரங்கிலே ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. தென்னகத்தைப் பொறுத்தவரையிலே அரிய, விலைமதிப்பற்ற கலைப் பொருட்களாகப் பார்க்கப்படும் இப் பொருட்கள் எல்லாம் எம்மவர் வாழ்வியலில் சாதாரண பயன்பாட்டில் இருந்தவை என எண்ணும் போது உள்ளம் பெருமிதம் கொண்டது. ஆனால் இன்று அவையெல்லாம் தொலைந்து போய்விட்டன என்று எண்ணிய போது மனம் வருத்தமும் கண்டது.

அந்த அரங்கை விட்டு வெளியே வந்தால், திறந்த அரங்கிலே வெவ்வேறு வகை வேலிகள் அடைக்கப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது. யாழ்ப்பாண வாழ்வியலில் வேலிக்கு எத்துணை பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதை அந்த வேலிகள் பறை சாற்றின எனலாம்.
யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவி வந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது தேச வழமையாகும். அது சட்ட ரீதியாக இன்றும் நடை முறையில் உள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் தேச வழமை அடிப்படையிலே வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கின. இந்த வழமையானது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. இத்தேச வழமையானது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான சட்ட நெறியாக இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதனையே பேராசிரியர் பத்மநாதனும் குறிப்பிடுகிறார்.

அடிப்படையில், யாழ்ப்பாணச் சமூகம் விவசாயத்தை ஒட்டியதாக இருந்தது எனலாம். ஆதலால் இச் சமூகத்தில் நிலவி வந்த வழமைகளும், நிலம், அதன் உரிமை, பாதுகாப்பு என இயற்கைவளங்களை ஒட்டியதாகவே அமைந்திருந்தன. அதனால்தால் தான் இங்கு வேலிகளுக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. காணிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதில் இந்த வேலிகளுக்குப் பெரும் பங்குண்டு. வளவுகளைச் சுற்றி வேலி அடைப்பது யாழ்ப்பாணத்தின் அத்தியாவசிய தேவையாகவும் கருதப்பட்டது.

அந்த வேலிகள் பலவகைப் பட்டவையாகக் காணப்பட்டன. காய்ந்த இலை குழைகள், பனையோலை, தென்னோலை கிடுகு, காய்ந்த குச்சிகள், ஒருவகை முருகைக் கற்கள், வாழைச்சங்குகள், உயிர் மரங்கள் என பலவகைப் பட்டவற்றைக் கொண்டு வேலிகள் அடைக்கப்பட்டன.

வேலி அடைக்கப்பயன்படும் பொருட்களும், முறைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபட்டன எனலாம். அதாவது அந்தந்தப் பிரதேசங்களில் தாராளமாகக் கிடைக்கக் கூடியவற்றை வைத்து வேலிகள் அடைக்கப்பட்டன. அதைவிட தனிப்பட்ட தேவைகள், வசதி வாய்ப்புகளும் கூட வேலிகள் அடைப்பதில் செல்வாக்குச் செலுத்தின.

வேலிகள் கொண்டு நிலத்தை அடைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வெளி ஊடுருவல்களிலிருந்து பாதுகாப்புக் கொடுத்தல் என்பது வேலிக்கான முக்கியமான தேவையாகும். வேலியே பயிரை மேய்வது போல என்ற பழமொழி பயிர்ச் செய்கை நிலங்களில் வேலியின் செயற்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்ற வேலிகள் ஆடு, மாடு மற்றும் அந்நிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவல்களைத் தடுப்பதுடன், பல சமயங்களில் வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதைத் தடுக்கும் மறைப்புகளாகவும் செயற்படுகின்றன.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்கள் போன்ற இடங்களில் இன்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இவை பொதுவாக மனிதர் ஏறி உள்ளே புகமுடியாதபடி உயரமானவையாக அமைவதுடன், இவ்வாறு செய்வதற்குச் சிரமமான முள்ளுக் கம்பிகள் போன்ற பொருட்களையும் பயன்படுத்துவார்கள்.
காட்டுப் பகுதிகளில் யானைகள் போன்ற பெரிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் அழுத்தம் குறைந்த மின்சாரம் பாய்ச்சப்படும் மின்சார வேலிகளையும் அமைப்பதுண்டு.

சில ஊர்களின் பெயரில் கூட வேலி என்ற சொல் காணப்படுகிறது.
நீர்வேலி, அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலிபோன்ற ஊர்களின் பெயரை உதாரணமாகக் கூறலாம். நீர்வேலியிலே ஊரின் கிழக்கு எல்லையில் நீர்நிலை காணப்பட்டமைதான் அப்பெயர் வரக் காரணம் என்பர்.

வேலி என்பது தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவையாகும். தஞ்சை மாவட்டத்திலே இக்காலத்திலும் ‘வேலி’ என்ற அளவையால் நிலத்தை குறிப்பிடுகின்றனர். ஒரு வேலி என்பது 6.17 ஏக்கர் பரப்பளவுக்குச் சமமானதாக இருக்கிறது.
இக்கட்டுரையில் நாம் குறிப்பிடும் வேலி எல்லையை நிர்ணயிக்கப் பயன்படுவதாகும். எல்லை வேலி நிலத்துக்குப் பாதுகாப்புத் தருகிறது எனக் கொண்டால், எல்லை வேலிக்கு சட்டம் பாதுகாப்பைத் தருகிறது. தேச வழமையிலும் எல்லை வேலிகளுடன் தொடர்புடைய பல விடயங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் காணிகளின் எல்லை வேலிகள் சரிந்து விழவிடாமல் பேணிப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் இருப்பதாக வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் கட்டுரையொன்றிலே குறிப்பிட்டிருந்தார்.
கடந்த யுத்த காலங்களில் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிரதான பாதையால் செல்லப் பயந்து வேலி வெட்டி இடம்பெயர்ந்த நினைவுகளும் இல்லாமல் இல்லை. முன்னர் ஊர்களிலே அயலவர்கள் எல்லாம் உறவுக்காரராக இருப்பார்கள். அடுத்த பகுதிக்குச் செல்வதற்காக ஒவ்வொரு காணி, வீட்டின் வேலியிலும் சிறு புகு வழி விடப்பட்டிருக்கும். அதை வேலிப்பொட்டு என்று குறிப்பிடுவர். அதேபோல வேலிகளில் விடப்பட்டிருக்கும் சிறு இடைவெளிகளையும் கூட வேலிப்பொட்டு என்றே கூறுவர்.

வேலிப் பொட்டுகளுக்குள்ளால் கதை பேசும், புதினம் பார்க்கும் எம்மவர் பற்றி எத்தனையோ கதைகள், நினைவுகள் இருக்கின்றன. வேலிப் பொட்டுகளால் வளர்ந்த காதல்கள் சொல்லும் கதைகளும் ஏராளம். எம் கலாசாரத்தில் வேலிப்பொட்டை உறவுகளின் நெருக்கத்தையும் இணைப்பையும் காட்டும் அடையாளமாக கலாநிதி குணராசா பார்க்கிறார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை எம் மூத்தோர் மீட்கும் நினைவுகள் எடுத்தியம்பும்.
வேலியைத் தள்ளிப் போட்டு அயலவர் காணிகளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் விபரீத குணங்களும் எம்மவருக்கு இல்லாமல் இல்லை. அதனால் எழும் வேலிச் சண்டைகள் குடும்பப் பிரச்சினைகளாக மாறிப் பின் பொதுப் பிரச்சினையாகிய நினைவுகளும் பலருக்கு இருக்கும்

வேலி அடைத்தல் கூட ஒரு கலை எனலாம். ஒரு தசாப்தத்துக்கு முன்னைய காலம் வரை சில குறிப்பிட்ட இடங்களை அங்கு நேர்த்தியாக அடைக்கப்பட்டிருக்கும் பனையோலை வேலிகளை வைத்தே அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. உயிர் வேலி மழைக்காலங்களில் போடப்படும். அதற்காக பூவரசு, கிளுவை, முட் கிழுவை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மாரி காலத்தில் அம் மரங்களின் குழைகளை வெட்டி தோட்டங்களில் பசளையாக நிலத்துள் புதைப்பர். அதே நேரம் கதிகால்களைக் கொண்டு வேலிகளின் இடைவெளிகளை அடைப்பர். கிலுவை மரத்தில் நைதரசன் அதிகளவில் காணப்படுகிறது. இதனைத் தோட்டத்தில் புதைத்தலானது நைதரசன் பசளை போடுவதற்குச் சமமானது என நவீன விவசாய வனவியல் தத்துவங்கள் கூறுகின்றன. ஆனால், அது அன்றே எம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
பனையோலை, பனை மட்டை, தென்னோலை, கிடுகு, காய்ந்த குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு அடைக்கும் வேலிகள் கரையானால் அரிக்கப்பட்டு அல்லது இயற்கைக் காரணிகளால் உக்கிய பின்னர் மீண்டும் புதிதாக அடைக்கப்படும். உயிர் வேலிகளை விட, இவை நெருக்கமானவை. குறிப்பாக நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் ஒருவகை முருகைக் கல் வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதானது தனிச்சிறப்பாகும். இவை மிக நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடியவை.

காலப்போக்கிலே, இந்த வேலிக்கதிகால்களை சீமெந்துக்கட்டைகளும் இடைக் கயிறுகளை முட்கம்பிகளும் பிரதியீடு செய்யத் தொடங்கி, இன்று சீமெந்து மதில்கள் ஆக்கிரமித்துவிட்டன! உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது. பல்வேறு தேவைகளுக்காக வேலிகள் வெட்டப்பட்டன. எல்லைகளும் மெள்ள மெள்ள இடம் மாறின. எம்மவர் மனப்பாங்கும் மாறியது. சூழலுக்கு பங்கம் விளைவிக்காத இயற்கை வேலிகள் பயனற்றவையாயத் தெரிந்தன போலும். அத்துடன் பணமும் தாராளமாகப்புழங்கத் தொடங்கியது. பல இயற்கை வேலிகள் தகர வேலிகளாகி இன்று கொங்கிறீட் மதில்களாகிவிட்டன என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம் ஆகும்.

கொங்கிறீட் சுற்று மதில்கள் உயர் அந்தஸ்தின் சின்னம் என்ற பரவலான நிலைமை யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டது. பசுமை வாழ்வியலின் மதிப்பு எம்மவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.
 
இனி வரும் காலங்களில் இந்த வேலிகளை எல்லாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமாகத் தான் இருக்கிறது. கண்காட்சி வளாகத்தினுள் அடைத்துக்காட்டப்பட்டிருந்த வேலி மாதிரிகள், இனி எம்மை எங்கு காண்பீர்? என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது.

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-07

ஆரோக்கிய வாழ்வியலை
அவசர யுகம் முடக்கிவிட்டதா?
 

அடுத்த அரங்கமானது சித்த மருத்துவத்துறைக்குரியது. தமிழர்களுக்காக தமிழர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம் என சித்த மருத்துவத்தை விபரிப்பர். மருத்துவம் என்ற எல்லைக்கும் அப்பால் இதை ஒரு உன்னத வாழ்வியல் எனலாம். அத்தகைய உன்னத வாழ்வியலை சித்தர்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள். வாதம், வைத்தியம், ஞானம், யோகம் என்ற உன்னத படி நிலைகளை உள்ளடக்கிய சித்த மருத்துவம்.
எம்மவருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எதுவாயினும் உடனடி நிவாரணி தேவை. அவசர யுகத்திலே அல்லாடும் நாம், அதை எதிர்பார்ப்பதில் தவறில்லையோ என்றும் தான் எண்ணத்தோன்றுகிறது. அதனால் தான் ஆங்கில மருத்துவம் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. அது சித்த மருத்துவம் மீதான நாட்டத்தைக் குறைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
இந்த அல்லாடல்கள், அந்தரிப்புகள் எல்லாம் எதற்காக? சுகமாக வாழத்தானே? அந்த உன்னதமான வாழ்வு மட்டும் இன்று தொலைந்து போய்விட்டது. அப்படி அவசர உலகில் நாம் தொலைத்து விட்ட வாழ்வைத் தான் சித்த மருத்துவம் வலியுறுத்தி நிற்கிறது. அன்றைய குமரிக்கண்டத்தில் தென்பகுதிகளான தமிழ் நாடு, கேரளம், இலங்கை ஆகிய பகுதிகளில் சித்தமருத்துவம் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் இருக்கிறது.
வரலாறும் அதைத்தான் கூறுகிறது. இலங்கையை ஆண்ட இராவணன் சிறந்த சிவபக்தனாக மட்டுமன்றி சிறந்த வைத்தியனாகவும் இருந்துள்ளான். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பெற்று சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் சித்தர் மருத்துவம் எனவும், தமிழ்க் கடவுளாகிய முருகனால் அகத்தியர், திருமூலர் போன்றவர்க்குச் சொல்லப்பட்டு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் தமிழ் மருத்துவம் எனவும் கூட அழைக்கப்படுகிறது.

ஆதிகாலத்தில் சித்தமருத்துவம் இலங்கை முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. பொலன்னறுவையில் அமைந்துள்ள பொற்கல் விகாரையிலே சித்த மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் அகத்திய முனிவரின் சிலை காணப்படுவதாகக் கூறுகின்றனர். புத்த தாச மன்னன் சிறந்த மருத்துவன் என்று வரலாறு கூறுகிறது. புராதன இராசதானிகள் பரந்திருந்த பகுதிகளில் மருத்துவத் தொட்டிகளும் குடுவைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
15 ஆம் நூற்றாண்டில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட ‘வைத்திய சிந்தாமணி பைசாஜ் சங்கிரகம்’ என்னும் நூல் ‘வைத்திய சிந்தாமணி’ எனும் தமிழ் மருத்துவ நூலை தழுவி எழுதப்பட்ட நூல் என்ற கருத்தும் உள்ளது.

சித்த மருத்துவம் கூறும் நவநாத சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் திருகோணமலையில் சித்தியடைந்தார் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது.

அதேபோல போகர் கதிர்காமத்தில் சித்தியடைந்தார் என்றும் கூட கூறப்படுகிறது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான புலத்தியர் சிங்கள நாட்டை சேர்ந்தவரென குறிப்பிடப்படுகின்றது. இங்கு சிங்கள நாடு என்பது இலங்கை என்பர்.
பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்கள் குடிமக்களின் பிணிகளை நீக்குவதையும் பெரும் பணியாகக் கொண்டிருந்தனர். இதற்கு அவர்கள் சித்தமருத்துவத்தையே நம்பியிருந்தார்கள். யாழ்ப்பாண மன்னன் பரராஜஜேகரனின் சகோதரன் பரநிருபசிங்கன் சிறந்த மருத்துவனாக திகழ்ந்துள்ளான். அவன் இலங்கை தமிழர்களுக்கு உரித்தான செகராஜசேகரம், பரராஜசேகரம் என்னும் சுதேச மருத்துவ நூல்களை வெளியிட்டார்.
பிற்பட்ட காலத்தில் சித்தமருத்துவமானது இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே பெருமளவு கையாளப்பட்டு வருகிறது. அதிலும் இலங்கையில் சித்தமருத்துவத்தின் தாயகமாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது என்று கவிப்புயல் நவரத்தினமும் சித்த மருத்துவமானது அதன் தூய்மையுடனும் தனித்துவத்துடனும் இன்றுவரை (யாழ்ப்பாணத்தில்) கையாளப்பட்டு வரப்படுகின்றது என்று பேராசிரியர் உரகோடவும் எடுத்து கூறியுள்ளமை பற்றி இணையம் வாயிலாக அறிய முடிந்தது.
கதிர்காம யாத்திரையை முருகன் அருளால் தொடங்கி கதிர்காம இயந்திரத்தை ஸ்தாபித்தவர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அங்கு இன்றும் மூலிகைச் சந்தை காணப்படுகின்றது.

முக்கியமாக கடலிராஞ்சிப்பட்டை, மரமஞ்சள், புலிநகம், சீந்தில், செஞ்சந்தனம், உருத்திராட்சை என்பன பெருமளவில் காணப்படுகின்றன என்றெல்லாம் கூறப்படுகிறது. அத்துடன் சித்தமருத்துவ யாழ்ப்பாண நூலான பரராஜசேகரத்தில் “மருந்து மாத்திரைகள் பிழைத்தால் கதிரைமலை மேவு முருகனை வணங்கிட அந்நோய்கள் மாறிவிடும்” என்று நூலின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல வழிகளிலும் இலங்கையில் காணப்பட்ட சித்தமருத்துவம் காலப்போக்கில் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டு இங்கு வாழ்ந்த மன்னர்களாலும், மக்களாலும், சித்தமருத்தவர்களாலும் பேணி வளர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வலுவான சித்தமருத்துவ பாரம்பரியம் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய பாரம்பரியம் இன்றைய இளஞ்சந்ததியை விட்டுத் தூரச் சென்று கொண்டிருக்கிறது. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியிலே, சித்த மருத்துவத்திற்கென அமைக்கப்பட்ட கூடம் இளைஞர்கள் மத்தியில் அந்த அரிய பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கக்கூடிய வகையிலே அமைக்கப்பட்டிருந்தது.

பாரம்பரிய வைத்திய முறைமைகளுடன் தொடர்பு பட்ட உபகரணங்கள், ஓலைச் சுவடிகள், மருந்து வைக்கும் பெட்டிகள், குடுவைகள் என அந்த இயற்கைப் பொருட்களைப் பார்த்த போது எம் முன்னவரின் கை நுட்பங்களும் தூர நோக்கான கொள்கைகளும் எம்மைப் பெருமிதங்கொள்ளச் செய்தன. அவை தவிர, சித்த மருத்துவப் பயன்பாட்டில் இருக்கும், தாவரங்கள், பூக்களின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. எமது அன்றாட உணவுப் பழக்கத்துடன் சித்த மருத்துவம் எவ்வாறு இயைந்திருந்தது என்பதையும் மாணவர்கள் மிக அழகாக விளக்கினர். காட்சிக் கூடத்தை யாழ். பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையினர் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
இன்று காண்பதற்கே அரிதாகி விட்ட கண்டறிந்திராத விடயங்கள் பல அந்த கூடத்தில் வைக்கப்பட்டு போதியளவு விளக்கங்கள் வழங்கப்பட்டன. தொடக்கத்திலே ஒரு மாதிரி சமையலறையும் அன்றாடம் எமது சமையல்களில் பாவிக்கப்படும் வாசனை திரவியங்கள் உட்பட்ட பல திரவியங்கள் மண் குடுவை தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் யாவுமே இயற்கையுடன் ஒன்றிணைந்ததாகக் காணப்பட்டன.

பனை மட்டைகள், ஓலைகள், மட்பாண்டங்கள் என அங்கு வைக்கப்பட்டிருந்த அடிப்படைப் பொருட்கள் ஒரு பசுமைக் காட்சிக் கூடத்தையே உருவாக்கி விட்டிருந்தன எனலாம். இன்றைய சந்ததியைப் பொறுத்தவரையிலே பல விடயங்கள் அதிசயமாய்த் தெரிந்தன. முன்னைய காலங்களில் பாவனையில் இருந்த சமையலறை பண்டங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. அக்கலங்கள் யாவுமே மட்பாண்டங்களாகவே இருந்தன. மட்பாண்டங்கள் சூழலுக்குத் தீங்கில்லாதாவை.

அத்துடனும் அவற்றுள் வைக்கப்படும் பதார்த்தங்கள் பாண்டத்துடன் இரசாயனத் தாக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பும் இல்லை. அத்துடன் மட்பாண்டங்களிலிருக்கும் நுண் துளைகள் காரணமாக அவற்றுள் இருக்கும் பதார்த்தங்கள் குளிர்மையான சூழலில் பேணப்படுகின்றன. மிளகு, கடுகு போன்ற வாசனை திரவியங்கள் கூட மட்பாண்டங்களில் வைத்தே பேணப்பட்டன. அப்படிப் பேணும் போது அவை பழுதடைவதும் இல்லை. அவற்றின் வாசனையும் கெடுவதில்லை. எம்மவரைப் பொறுத்தவரையிலே இந்த வாசனை திரவியங்கள் மருத்துவப் பொருட்களாகவும் பயன்படுகின்றன. ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் சிறப்பான செயற்பாடு இருக்கும்.

கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிளகு தண்ணீர் குடிப்பது எதனால் என்று இப்போது விளங்குகிறதா? உணவிலே வெங்காயம் சேர்ப்பது எதனால் தெரியுமா? வெங்காயம் இரத்தத்தைச் சுத்திரகரிப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது. அதைவிட அதற்கென வேறு பல மருத்துவ குணங்களும் கூட இருக்கின்றன. இரத்தம் முறையாக சுத்திகரிக்கப்பட்டால் எம்மை எந்தவித நோய்களும் அண்டாது. வெந்தயம் உடலுக்கு குளிர்மையைத் தரும். கொத்தமல்லியை பனங்கட்டியுடன் அவித்துக் குடித்தால் காய்ச்சல் பறந்துவிடும். இப்படி சின்னச் சின்ன விடயங்கள் பலவற்றை சித்த மருத்துவ மாணவர்கள் எடுத்தக் கூறினர்.

முன்னைய காலங்களில் ஒரு சிறிய நோய் நொடி ஏற்பட்டால் வீட்டிலே பரிகரிக்கக் கூடியவாறான நிலைமை காணப்பட்டது. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு நோய்க்கான நிவாரணி தெரிந்திருந்தது. வீட்டுச் சூழலிலேயே பிரதானமான மூலிகைகளைப் பெறக்கூடியதாக இருந்தது. முக்கிய பதார்த்தங்கள் வீடுகளில் காணப்பட்டன. இன்றும் இவை எதுவுமே இல்லாத நிலைதான் காணப்படுகிறது.

அவசர யுகமும் ஆங்கில மருத்துவமும் எம்மவர் வாழ்வியலில் உட்புகுந்து வேரூன்றத் தொடங்கிவிட்டன. சிறிய தலைவலியாயினும் மருந்து வில்லைகளை உண்டாவது உடனடியாகப் போக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு தான் எம்மவரிடத்தே அதிகளவில் காணப்படுகிறது. அந்த மனப்பாங்கு வீட்டு வைத்திய முறைமைகளை முட்டாள் தனமானவை என மூலையில் முடக்கி விட்டன. ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணியாக அமைந்தாலும், பக்கவிளைவுகளை ஏற்படுத்த வல்லது.

உண்மையிலேயே அவர்களது உடலை ஒரு பாரதூரமான நோய் தாக்கும் போது ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்கையில் அவர்கள் உயர் செறிவுடைய மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது அதிகமான பக்க விளைவுகளைத் தோற்றுவிக்கும். இது எதனால் தெரியுமா? பாரதூரமற்ற வியாதிகளுக்கெல்லாம் பெரியளவிலே ஆங்கில மருந்துகளை உட்கொண்டமையாலேயேயாகும்.

அறிந்தோ அறியாமலோ இந்த வாசனை திரவியங்கள் எம்மவர் வாழ்வியலில் பிணைந்து விட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த வில்வம் குடுவையும் மருந்து வில்லைகளைப் பாதுகாப்பாக வைக்கும் பெட்டியும் இன்னும் சிதையாமல் இருக்கும் நூற்றாண்டுகள் பழைமையான ஏடுகளும் வியக்க வைத்தன.

யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களிலே சித்த மருத்துவத்துறைக்குரிய அரங்கத்தில் தான் சலிப்பேதுமின்றி போதியளவு விளக்கங்கள் வழங்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Sunday, November 13, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் -06

நவீன நாடகங்களின் மூலவேர் கூத்து

இன்று திரைப்படங்களிலும் மிக அரிதாக திருவிழாக்களிலுமே நாம் கிராமியக் கலை வடிவங்களைக் காண்கிறோம். ஆனால் ஒரு காலத்திலே அவை அன்றாட வாழ்வியலுடன் பிணைந்திருந்தன. இந்த கிராமியக் கலைகள் கிராமங்களிலே ஓய்வு நேரங்களில் பயிலப்பட்டு வந்தவை. அவை சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டும் வந்தன. இந்தக் கலைகள் கிராமிய வாழ்வின் கலை இலக்கிய வெளிப்பாடாக மட்டும் இருக்கவில்லை. மக்களுக்கு உடற்பயிற்சியை அளித்தன. பொழுது போக்காகவும் அறிவூட்டுவனவாகவும் கூட இருந்தன. மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவிகளாகவும் கூட விளங்கின.
ஆனால், உலக மயமாக்கல் அந்த கிராமியக் கலைகள் மீதான மக்களின் நாட்டத்தை குறைத்துக் கொண்டே செல்கின்றது. இதே நிலைமை தொடர்ந்தால், காலப்போக்கிலே அவை அழிந்து போய்விடும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கும் என்பர் எம்மவர்.
கிராமிய கலை வடிவங்களை ஆராய்ந்தால் அந்த உண்மை புலப்படும், யாழ். மண்ணிலே ஐரோப்பியர் கால் பதிக்க முன்னர், அம் மண்ணின் சமூகக் கட்டமைப்பு தன்னிறைவான கிராமியப் பொருளாதாரப் பண்புகளையும் சாதியத்தின் அடிப்படையில் உருவான தொழிற்பிரிப்புகளையும் கொண்டிருந்தது. அதே அடிப்படையில் தான் கலைப் பாரம்பரியங்களும் நிலை பெற்றிருந்தனவென பேராசிரியர் சபா ஜெயராஜா கூறுகிறார். தவில் போன்ற சில கலை வடிவங்கள் செல்வந்தர்களின் அரவணைப்பிலே வளர்ந்தன.
அதேவேளை கரகாட்டம், காவடியாட்டம் போன்ற கலைகள் சுயாதீன கலைஞர்களின் பராமரிப்பிலே வளர்ந்தன. இவை குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டன. யாழ். மண்ணின் பரந்து பட்ட வாழ்க்கை முறைமைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட பண்பாட்டுக் கோலங்களுக்கும் வலிமையான சான்றாக இருப்பவை இந்த கலை வடிவங்கள் என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது.
வட பகுதியெங்கிலும் பரவலாக வழக்கிலிருந்து இந்தக் கலை வடிவங்களை இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெகு அரிதாகத்தான் காண முடிகிறது. அதை எவராலும் மறுக்க முடியாது. இந்த கண்காட்சியிலே கிராமியக் கலை வடிவங்களுக்கு தனிக் கூடமே ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த அரிய கலைகளுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை யாழ். வாழ்வியலின் கலை பண்பாட்டு அம்சங்களைப் பிரதி பலித்தன. கோயில்களிலே இறைவனைக் காவும் வாகனங்களும், பொய்க்கால் குதிரைகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலே பந்தல் போடும் போது பயன்படுத்தப்படும் கலையம்சங்கள், மான் கொம்புகள், கிராமியக் கலையுடன் தொடர்புடைய இசைக் கருவிகள், அலங்காரப் பொருட்கள், உபகரணங்கள், சிறப்பு அணிகலன்கள், கடைகளில் வைக்கப்படும் காசுப்பெட்டிகள், பெட்டகங்கள், சிதிலமடைந்த இறை வாகனங்கள், போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பொய்க்கால் குதிரையாட்டமானது இணுவில், அளவெட்டி, சித்தன்கேணி போன்ற பகுதிகளில் வெகு பிரபலமாக இருந்தது. யாழ்ப்பாணத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலே மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் பயன்பாட்டில் இருந்தன. குதிரையானது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டது.
அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்கள் குதிரை வண்டிகளிலே பயணித்தனர். இதன் விரிவாக்கமே திருவிழாக்களில் நடத்தப்படும் குதிரையாட்டம் ஆகும். அவ்வாறு நடாத்துதல் உயர் அந்தஸ்தை அளிப்பதாகக் கருதப்பட்டது. ஆடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குதிரைகள் மென்மையான மரங்களைக் குடைந்து தயாரிக்கப்பட்டன.
முன்னர் வீடுகளிலே அலங்காரப் பொருட்களாக மான் கொம்புகள் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றை வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும் ஆரம்ப கால மக்களிடத்தே காணப்பட்டது. மாடுகளின் முகங்களைப் போன்ற உருவமைப்புகளை வீட்டு வாசலில் வைப்பதும் கூட வழக்கமாக இருந்தது.
காத்தவராயன் கூத்து, சங்கிலியன் நாடகம் போன்ற பல கலைகளிலே பயன்படுத்தப்படும் வாள்களும் கூட அங்கு வைக்கப்பட்டிருந்தன. காவடி, கரகாட்டம் போன்ற கலைகள் எம் இந்து சமயப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. அத்தகைய கரகங்கள், காவடிகளையும் கூட அங்கு காண முடிந்தது. கரகத்தை காவடியுடன் இணைத்துக் கரகக் காவடி என்றொரு நடன வடிவம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக த. சண்முக சுந்தரம் குறிப்பிடுகிறார்.
கிராமியக் கலைகளிலே பயன்படுத்தப்பட்ட முடிகளும் கோயில்களில் சிறப்பு நிகழ்வுகள், பொம்மலாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் முக மூடிகளும் கூட காணப்பட்டன. யாழ்ப்பாணம் என்ற பெயர் உருவாகக் காரணம், பாணன் யாழ் வாசித்தமை என்று கூறுவர். அந்த யாழ் என்ற இசைக்கருவியை கண்களால் கண்டவர்கள் வெகுசிலர் என்று தான் கூற வேண்டும். யாழின் பரிணாமமே வீணை என்றும் கூறுவர். அந்த யாழின் மாதிரியும் மரத்தால் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பாவனைக்குகந்ததல்லாத ஹார்மோனியப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு யன்னல்களை அலங்கரித்த மர வேலைப்பாடுகளின் சிதிலங்களும் கூட காணப்பட்டன.
எம்மவர் சடங்கு சம்பிரதாயங்களிலே பூ மாலைக்கு மிக முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து அது முதிர்வடைந்து இறப்பது வரை ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு வகைப் பூமாலை பயன்பட்டது. கொண்டை மாலை, மொட்டு மாலை, சரம், கதம்பச் சரம், கழுத்து மாலை, கரவாரம் என எத்தனை வகைகள் தெரியுமா? அவை எல்லாம் இன்று காணாமலே போய் விட்டன என்று தான் கூறவேண்டும.
அதைவிட அவை, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் மாலைகளால் பிரதி செய்யப்பட்டு விட்டன என்று கூறுதல் தகும். இங்கு வருந்த வேண்டிய விடயம் யாதெனில் கொழும்பு போன்ற கட்டடங்கள் நிறைந்த நகரப் பகுதிகளை விட யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பிரதேசங்களில் இந்த பிளாஸ்டிக் துணி பூமாலைகளின் பாவனை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதை உணர்ந்திருப்பவர்கள் வெகு சிலரே. ஆக இந்த வாழ்வியல் அம்சங்கள் தொலைந்து போவதற்கான பிரதான காரணம் எம் அலட்சியமே எனலாம். கிராமியக் கலை வடிவங்கள் எனப்படுபவை ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக உருவான வை.
அந்த வெளிப்பாடு பல்வேறு விதமாகப் பரிணமித்தமை யைத் தான் இக் கலை வடிவங்களாகக் காண்கிறோம். இன்று நாம் நவீனம் என்று பற்றி நிற்கும் கலை வடிவங்களு க்கு மூலமாக இருந்தவை இந்த கிராமியக் கலைகளே! இன்றைய நாடகங்கள் அன்றைய கூத்தின்படி முறை வளர்ச்சியால் உருவானவை. இந்த அரிய கலை வடிவங் களைக் கவனிக்காது விடுதல் என்பது பிள்ளைகள் தம் பெற்றோரை அலட்சியப்படுத்துவதற்குச் சமனானது.
இந்தக் கலை வடிவங்கள் அற்றுப் போய்விடக்கூடாது என்பதனாலோ என்னவோ, யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்விலே அதிதிகளை வரவேற்கும் போது கூட அவை வெளிப்படுத்த ப்பட்டன. இந்தக் கலை வடிவங்கள் ஊக்குவிக்கப்படாமல், அலட்சியப்படுத்தப்படுவதால், கலைஞர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த கலைகளையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி விட்டது.
அதேவேளை இந்தக் கலைகளைப் பயின்று அதை அடுத்த சந்ததிக்குக் கொண்டு போகத் தயாராக இருக்கும் இளஞ்சந்ததியர் வெகு சிலரே பணத்தை மட்டுமே மதிக்கும் உலகில் அதிக வருமானம் ஈட்டும் தொழில்கள் மீதான நாட்டம் தவிர்க்க முடியாததல்லவா? அவர்களையும் பிழை சொல்ல முடியாது. எத்தனையோ பிரபலமான கூத்துக் கலைஞர்களை எல்லாம் எம் மண் உருவாக்கியிருக்கிறது. அதை அறிய வேண்டும் என்றால் கூட நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தான் வாசிக்க வேண்டும்.
இதுவே இன்றைய யதார்த்தம். அந்த கலைஞர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடன் சேர்ந்து இந்தக் கலை வடிவங்களும் வாழ வேண்டும் என்றால், நாம் அக்கலைகளை மதித்து ஊக்குவிக்க வேண்டும். வீண் நியாயங்க ளைச் சொல்லி காலத்தை வீணடிப்ப தென்பது தேவையற்ற ஒரு விடயம், என்று தான் கூற வேண்டும். (தொடரும்)

Sunday, November 6, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-5


உணராவிட்டால் உய்வில்லை

பணமிருந்தால் சாதிக்கலாம் என்ற கொள்கை எம்மவரிடத்தே பரவ லாகக் காணப்படும் போது, இயற்கையோடு இயைந்த, சுற்றுச்சூழலு டன் நட்புறவான வாழ்வியலைப் பற்றி யார் சிந்திப்பார்கள்? ஏதோ ஒரு போதைக்குள் அருண்டு போயிருக்கும் எம் சமூகத்தை யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி சிந்திக்க வைத்திருக்கிறது. ஆர்வலர்களுக்குக் கிடைத்திருக்கும் உன்னத வாய்ப்பு இது.
இதையே தக்க தருணமாகக் கொண்டு மக்கள் மத்தியில் பனம் பொருட்களின் பாவனை பற்றி விளக்க அவர்கள் முன்வர வேண்டும். அவற்றின் பாவனையை அதிகப் படுத்தவேண்டும்.
இது பனம் பொருள் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும். அவர்களது வாழ்க்கைத்தரம் மேம்பட வழிவகுக்கும். அதே வேளை எமக்கே உரித்தான கலையாகக் கருதப்படும் பனம் பொருள் உற்பத்தி தொடர்பான நுணுக்கங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படும். எமது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாது. சம்பந்தப்பட்ட அதிகாரத்தரப்பு இவற்றை எல்லாம் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
எந்த மேற்குலகு பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனைகளை கீழைத்தேய நாடுகளில் அறிமுகப்படுத்தியதோ, அதே மேற்குலகு தான் இன்று பசுமை வாழ்வியலைக் கடைப்பிடிக்கிறது. ஆனால் மாறாக பரம்பரை பரம்பரையாகக் கைக் கொண்டு வந்த பசுமை வாழ்வியலை நாம் கை கழுவி விட்டிருக்கிறோம். அதேவேளை, மேற்குலகு கழித்து விட்ட வாழ்வியலைப் பெருமையாகப் பின் பற்றுகிறோம். அதே மேற்குலகு இன்று எல்லாத் துறைகளிலும் பசுமையை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஏதோ புதிய துறைகள் போலும் என எண்ணி நாமும் அவற்றை நாடுகிறோம். சுற்றுச் சூழல் கெடாமல் இருப்பதற்காக புதிய தர நிர்ணயங்கள் உருவாகிவிட்டன. அவற்றைப் பின்பற்ற அல்லாடுகிறோம். அப்போதும் கூட அந்த அடிப்படை உண்மை எமக்கு விளங்குவதாகத் தெரியவில்லை. நாம் கை விட்ட வாழ்வியல் வர்த்தக நோக்குடன் எம் மீது திணிக்கப்படுகிறது.
அது எமக்கே உரித்தான வாழ்வியல் பாங்கு என்று தெரியாமல் அதைப் பின்பற்ற நாம் படும்பாடு சொல்லிலடங்கா ஏனெனில், அந்த வாழ்வியல் எப்போதோ எம்மை விட்டு வெகு தொலைவுக்குச் சென்று விட்டது. இலகு வழிகளையும் பணத்தையும் மட்டுமே நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இதை நாமாக உணர்ந்து மீளாவிட்டால் உய்வே இல்லை எனலாம்.
பட்டை, பிழா, தொப்பி, தட்டுவம், வெங்காயக் கூடை, உறி, பெட்டி, மூடு பெட்டி, கொட்டைப் பெட்டி, கூடை, கடகம், பாய் என வகை வகையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த பனை உற்பத்திப் பொருட்கள் எம்மை வெட்கித் தலை குனிய வைத்தன என்று தான் கூற வேண்டும். எத்தனை உன்னதமான வாழ்வைத் தொலைத்து விட்டிருக்கிறோம் என உள்ளூணர்வு உறுத்தியமையும் கூட தவிர்க்க முடியாததாகியது.
அந்தக் காட்சி அரங்கைக் கடந்து சென்ற போது அமைக்கப்பட்டிருந்த அரங்கிலே யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் பலதரப்பட்ட பொருட்களும் புகைப்படங்களும் வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணத்திலே புழக்கத்திலிருந்த நிறுத்தலளவைகள் எல்லாம் மெள்ள மெள்ள வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கின்றன. நாழி, கால்படி, அரைப்படி என அரிசி அளப்பதில் தொடங்கி அன்றாட சமையல் பொருட்களை அளப்பதுவரை பயன்படுத்தப்பட்ட அளவைகள் பல அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
வெற்றிலையும் பாக்கும் எம்மவர் மத்தியில் வெகு சகஜமான புழக்கத்திலிருந்தன என்று கூறலாம். அதை இக்கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாக்குவெட்டிகள், பாக்கு இடிக்கும் உரல், சுண்ணாம்பு கிண்ணம் போன்ற உபகரணங்கள் தெளிவாகக் கூறின. அவ்வுபகரணங்கள் சிறியனவாயினும் எத்தனை நுட்பங்களுக்கமைவாக, எத்துணை சிறப்பான உத்திகளுடன் கலை நயமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று எண்ணிப் பார்த்தால் வியப்பு மட்டுமே மிஞ்சும்.
அந்த உபரகணங்கள் எம்மவர்களுக்கு எவ்வளவு முக்கியமானவையாக இருந்தன என்பதை அவை வடிவமைக்கப்பட்டிருக்கும் பாங்கு எடுத்தியம்பும். ஒவ்வொன்றிலும் பல வடிவமைப்புகள் என்று கூறுதல் தகும். புகைத்தல் தட்டங்களும் கூட வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பித்தளை, இரும்பு போன்ற உலோகங்களால் ஆனவை. உலோகக் கத்திகள், கொக்கை சத்தகம், காம்புச் சத்தகம், உலோகக் கரண்டிகள், பால் வடிகள் என எண்ணற்ற பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
காலனித்துவ ஆட்சிக் காலத்திலே அறிமுகமாகிய வெண்களி, கண்ணாடிச் சாடிகள் பலவும் அவற்றுள் அடங்கும். அதே காலத்தில் தான் சோடியம் செலோலைட் நீர் வடிகட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது. வெண்களியினாலான அந்த குடி நீர் வடி கட்டியைப் பார்த்த போது பால்ய கால நினைவலைகள் உள்ளக்கரையைத் தொட்டுச் சென்றன.
மூங்கில் பிட்டுக் குழல், அதில் அவிக்கும் பிட்டின் சுவையை எண்ணி வாயூற வைத்தது. வடக்கிலே மின்சாரத்தை நினைத்துப் பார்க்க முடியாத காலம் ஒன்று இருந்தது. அப்போதெல்லாம் ஆடைகளை அழுத்துவதற்குக் கைகொடுத்தவை சிரட்டைக் கரி அழுத்திகள் தான். வார இறுதி நாட்களில் சிரட்டை எரித்து பாடசாலைச் சீருடைகளை அழுத்துவது ஒரு தனி வேலை. அரங்கிலே வைக்கப்பட்டிருந்த கரி அழுத்திகளைக் கண்டபோது மனம் பள்ளி நினைவுகளை மீட்டது.
வட இலங்கைக் கடற் சூழல் தொகுதி இன்றும் கூட உயிர்ப்பல்வகைமை செறிந்ததாகக் காணப்படுகிறது. கடல் வாழ் உயிரினங்களின் வெளியோடுகளை, அழகுக்காக மட்டுமன்றி வேறுபல தேவைகளுக்காகவும் எம்மவர்கள் பயன்படுத்தினர். அத்தகைய அபூர்வ சங்குகள் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மரம், உலோகத்தாலான பாதரட்சைகள் சிலவற்றையும் காணமுடிந்தது. பாதரட்சை என்றால் முனிவர்கள் மட்டும் தான் அணிவார்கள் என்ற எண்ணப்பாடுகளைக் கொண்டிருந்த இன்றைய இளஞ்சந்ததியர் அவற்றைப் புதினமாகப் பார்த்தமையையும் காண முடிந்தது.
நூற்றாண்டு பழைமையான ஏடுகளைக் கட்டுக் கட்டாகக் காண முடிந்தது. அவை எல்லாம் எம் வரலாற்றின் தொன்மையை எடுத்தியம்பின எனலாம். ஏடுகளைப் பாதுகாப்பாக வைப்பதற்குரிய பெட்டி வியக்க வைத்தது.
ரங்குப் பெட்டிகள் என அன்றாடப் பேச்சு வழக்கில் அழைக்கப்படும் ட்ரங்க் பெட்டிளும் பெட்டகமும் கூட வைக்கப்பட்டிருந்தன. 100 வருடங்கள் பழைமையான மண்ணெண்ணெயும் கண்ணாடிச் சாடியும் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சென்ற நூற்றாண்டிலே பாவனையிலிருந்த புடவைகள் பொம்மைகளுக்கு உடுத்தப்பட்டிருந்தன.
இந்த கண்காட்சி அரங்கிலே வைக்கப்பட்டிருந்த பொருட்களில் பெரும்பாலானவை தற்போது யாழ்ப்பாணத்திலே வசித்து வரும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டவை.
இத்தனை இடப்பெயர்வுகள், அழிவுகளைக் கடந்து வந்திருக்கும் அம்மக்களிடமிருந்து இவ்வளவு பொருட்கள் பெறப்பட்டிருக்கின்றன. எனில் நாம் சில விடயங்கள் பற்றி சிந்தித்தேயாக வேண்டும்.
காலங்காலமாக, ஊர் விட்டு ஊர் ஓடி, அழிவுகளுக்கும் திருட்டுகளுக்கும் முகங் கொடுத்த தற்போது தான் ஒரு அமைதி நிலையை அடைந்திருக்கின்றனர் எம் மக்கள். அப்படியாயின் இவற்றை ஒத்த எத்தனை பொருட்கள் அன்று அவர்களிடம் இருந்திருக்கும் என எண்ணியாவது பார்க்க முடிகிறதா? இவ்வளவு துன்பங்களின் பின்னரும் பணத்தாசைக்கு விலை போகாமல் மூதாதையர்கள் தமக்காக விட்டுச் சென்ற சொத்துக்களை பேணி வைத்திருக்கும் இம் மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அந்த ஒரு சிலரிடம் காணப்பட்ட விழிப்புணர்வும் பொறுப்பும் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை.

Saturday, October 29, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-4

யாழ்ப்பாணத்து மண்ணுடன் பனை பின்னிப் பிணைந்தது!

அந்தக் கண்காட்சி அரங்கைக் கடந்த போது, பொறிமுறை உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த ஆறாவது அரங்குக்குச் செல்ல முடிந்தது. இன்றைய இளஞ்சந்ததி கண்டறியாத பொறிமுறை உபகரணங்கள் பல வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்திலே யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் இருந்த பொறிமுறை உபகரணங்களான வானொலிப் பெட்டி, கிராமபோன், கையால் இயக்கும் சிறிய தையல் இயந்திரம் போன்ற பல அவற்றுள் அடங்கும். அவற்றைக் கண்டவுடன் மூத்த சந்ததியர் தம் பழைய நினைவுகளை மீட்கத் தொடங்கி
யிருந்தமையையும், தம்மோடு வந்திருந்த இளஞ்சந்ததியினருக்கு, அந்தக் காலத்து நினைவுகளை விளக்கியதையும் காணாக்கூடியதாக இருந்தது. அவற்றைப் பற்றிய விளக்கங்களை வழிகாட்டியாய் நின்றிருந்த
மாணவர்கள் அளித்திருந்தால் அந்த அரங்கில் கிடைத்த அனுபவம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

யாழ்ப்பாண வாழ்வியலுடன் பனை வளம் பின்னிப் பிணைந்தது. தெற்கிலிருந்து பயணிக்கும் போது யாழ்ப்பாணத்தை அண்மிக்கிறோம் என்பதன் அடையாளமாக
அந்தப் பனை மரங்கள் இருந்தன. இன்றும் வழி நெடுகிலும் தலையிழந்து காட்சி தருகின்றன. கடந்த காலத்தின் கொடூர யுத்தம் அவற்றை அப்படி மாற்றியிருக்கிறது. பனையைக் கற்பக தரு என்பர். கட்டும் வீட்டிலிருந்து படுக்கும் பாய் வரை பனை எம் நடை முறை வாழ்வுடன் இயைந்ததாய் இருந்தது. ஆனால் நவீனம் அந்த வாழ்வியலைக் கைவிட வைத்து விட்டது எனலாம். அதனால் இன்றைய இளஞ்சந்ததியினருக்கு பனையின் அருமை தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் ஆர்வப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தக் கண்காட்சி நிச்சயம் அவர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கும் என நம்பலாம்.
யாழ் குடாநாட்டு பழங்குடி மக்கள் பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தார்கள். அது தவிர புதிதாக வீடு கட்டுவதற்கும் பனை மரங்களில் இருந்து பெறப்பட்ட மரக்குற்றிகள், சிலாகைகள், வளைவுகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். பனை மரம் மூலம் பெறப்பட்ட பொருட்களின் இருந்து கட்டப்பட்ட வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழைகாலத்தில் இதமான வெப்பத்தையும் கொடுத்தது. இதனால் வருடம் முழுவதும் சிறந்த சுவாத்தியத்துடன் அவர்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
பாய், சுளகு, கொட்டைப் பெட்டி , பெட்டி, மூடு பெட்டி, கடகம், உறி, திருகணை , கூடை, பட்டை, பிளா, குடுவை , தட்டுவம், தொப்பி, நீத்துப்பெட்டி என வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பனை உற்பத்திப்பொருட்கள் பிரமிக்க வைத்தன. எம் வாழ்வியல் எவ்வளவு தூரம் இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு அவை ஒவ்வொன்றும் சான்று பகர்ந்தன.
மின்சாரத்தைக் காணாத காலம் அது. குளிர்சாதனப்பெட்டிகள் இல்லை. ஆனால் இரவு ஓலைப்பெட்டியில் போட்டு மூடி வைத்த பிட்டு, காலையிலும் அப்போது தான் புதிதாக அவித்தது போல் இருப்பதன் இரகசியம் தான் என்ன? அது தான் பனை சொல்லும் வாழ்வு.
பனை ஒலைகளால் பொருட்களைப் பின்னுவதென்பது ஒரு அழகான கலை. ஒவ்வொரு பொருளைப் பின்னுவதற்கும் ஒவ்வொரு நுட்பம் இருக்கும். அவை எல்லாம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை. மூத்த சந்ததிக்குத்தான் அந்த நுட்பங்கள் தெரிந்திருக்கிறது. இடையிலே ஒரு பெரிய சந்ததி இடைவெளியை யுத்தம் ஏற்படுத்தி விட்டது. இளஞ்சந்ததி சற்று ஆர்வமாகத்தான் இருக்கிறது. இங்கு சந்ததி இடைவெளிகள் நிரப்பப்படுவதும் அவசியமாகிறது. அதே வேளை மூத்த சந்ததி மறைய முதல் , மூன்றாவது சந்ததிக்காவது அந்தக் கலை நுட்பங்கள் கடத்தப்பட வேண்டும். அவை எல்லாம் எமது கைகளில் தான் இருக்கின்றன. பாடசாலைக் காலங்களில் வடலிக் குருத்தோலைகளில் செய்யக் கற்றுக்கொண்ட கைப்பணிகள் எல்லாம் மனக்கண்ணில் ஒருகணம் வந்து போயின. இடப்பெயர்வுகளுக்குமப்பால் நவீனம் நோக்கிய எமது பயணமானது, எம் பாரம்பரிய வாழ்வியலிலிருந்து எம்மை எவ்வளவு தூரம் தனிமைப் படுத்தி விட்டது உணர முடிந்தது.
ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு, வடக்கிலே மின்சாரமில்லை. தொலைக்காட்சி , கணினி முதலாய நவீன பொழுது போக்குகள் இல்லை. வீட்டிலிருக்கும் முதியவர்கள் பாடசாலை விடுமுறை நாட்களிலே, இந்த அருங்கலைகளை சிறார்களுக்கும் கற்றுத்தருவார்கள். அதை விட ஓய்வு நேரங்களில் பனையோலைப் பொருட்களைப் பின்னுவதே அவர்களது வேலையாக இருக்கும். தாம் தயாரித்த பொருட்களை வீட்டுத்தேவைகளுக்கு மட்டுமன்றி, அயலவர்களுக்கும் கூட அன்பளிப்பாகத் தருவார்கள். எங்காவது பயணம் போகும் போதும் கொண்டு சென்று கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள் " இது ஊரிலிருந்து ஆச்சி/அப்பு கொண்டுவந்தது"என்று பெருமையாகக் கூறுவதை நாம் கண்டிருப்போம். அந்த அழகிய வாழ்வு இன்று எங்கே போய் விட்டது?
இங்கு வருத்தத்துக்குரிய விடயம் யாதெனில், இக்காலத்தில் இந்தப் பொருட்களையெல்லாம் பிளாஸ்டிக், கறையில் உருக்குப் பொருட்கள் பிரதியீடு செய்து விட்டன. நீண்டகாலப் பாவனையையும் இலகு தன்மையையும் கருத்தில் கொண்டு நாம் பனம்பொருட்களைக் கைவிட்டு விட்டோம்.
ஆனால் அந்த நீண்ட காலத்துக்கு நிலைக்கும் என எண்ணும் பிளாஸ்டிக் பாவனைப் பொருட்களால் எவ்வளவு தூரம் எம் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. அவற்றால் எத்தனை கொடிய விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன? ஏற்படப்போகின்றன என்பது பற்றியும் கவலைப்படுவதில்லை. நாம் கொண்டிருக்கும் இத்தகைய அலட்சியப்போக்கானது, எம் எதிர்காலச் சந்ததிக்கு ஒரு சுகாதாரமற்ற சூழலைத் தான் விட்டுவைக்கும். இது எமது உலகின் நிலை. ஏனெனில் யுத்தம் எம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விட்டது.
யுத்தம் நிலவிய கடின சூழலில் அந்த நிலைமை தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. வெளி உலகில் என்ன நடக்கிறது என அறியும் ஆர்வம் எம்மக்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் தத்தமது பாடுகளைப் பார்ப்பதே அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் யுத்தம் ஓய்ந்த இன்றைய சூழலில், நிலைமே வேறுபக்கமாகத் திரும்பியது. ஒரு காலம், தேடலுக்காகவே தன்னை அர்ப்பணித்த சமூகம், இன்று பணத்தின் காலடியில் விழுந்து கிடக்கிறதோ எனவும் எண்ணத்தோன்றும். பணத்துக்கு அத்துணை மரியாதை. இப்போதும் தேடல் காணாமல் போய் விட்டது. வெளியுலகத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கவில்லை. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற கொள்கை வேகமாகப் பரவி வருகிறது எனலாம்.

Friday, October 28, 2011

சீன வெடி இல்லாத தீபாவளி!

தீபாவளி மூன்று தசாப்தங்களுக்கு முந்திய காலம் வரை அது ஒரு மகிழ்ச்சியான பண்டிகை. ஊரே இணைந்து கொண்டாடிய பண்டிகை. உள் நாட்டு யுத்தம் என்று வெடித்ததோ, அன்றோடு எம் பண்டிகைகளும்தம் தனித்துவத்தை இழக்கத்தொடங்கின என்று தான் கூற வேண்டும். அமைந்தியாய் இருந்த வாழ்வியல்பின்னர் இடப்பெயர்வு எப்போ என எதிர்பார்த்து, எப்போதும் தயாராக இருக்கும் வாழ்வியலாய்ப் பரிணமித்தது.  அக்காலப்பகுதிகளிலே ஜனித்த குழந்தைகள் தான் இன்றைய இளஞ்சந்ததியர். நாளை புதியதொரு சந்ததியை வழி நடத்தப் போகிறவர்கள். அவர்கள் உலகை அறியத்தொடங்கியிருந்த காலம் மிகவும் கொடியது என்றுதான் கூற வேண்டும். காலம் காலமாக சம்பிரதாய பூர்வமாகக் கொண்டாடப்பட்டு வந்த பண்டிகைகள் எல்லாம் அக்காலத்தில் செயலிழந்து போயின. ஆதலினால் எம்பண்டிகைகள் காவி வந்த தார்ப்பரியங்களும் மெல்ல மெல்ல மறைந்து போயின. ஆனால் பண்டிகைகள் மட்டும் நிலைத்திருந்து புதிய பல தார்ப்பரியங்கள் முளை விட வழிவகுத்து விட்டன என்றே கூற வேண்டும்.

இன்று இருந்த இடம் என்னவென்றே தெரியாமல் மறைந்துபோய்க்கொண்டிருக்கும் தார்ப்பரியங்களை எம் மூத்தவர்களிடமிருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் எம்மால் அவற்றை அடுத்த சந்ததிக்கு க் கடத்த முடியாமல் போய்விடும். 80 களுக்கு முற்பட்ட காலங்களிலே தீபாவளி எப்படி களை கட்டியிருந்தது என்று பேராசிரியர் சிவச்சந்திரன் யாழ். தினகரனுடன் பகிர்ந்து கொண்டார்.
   இலங்கையிலே இந்தியாவைப்போல வெகு கோலாகலமாக தீபாவளிப்பண்டிகை கொண்டாடப் படுவதில்லை. தீபாவளியை ஒட்டிய முரண்பாட்டுக் கொள்கைகளை திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டிருந்தது. அதனால் தீபாவளியை ஒரு ஆரியப் பண்டிகையாகவும் ஆரியனாகிய கிருஷ்ண பரமாத்மா, திராவிடனாகிய நரகாசுரனை வதம் செய்த திருநாளாகையால் திராவிடர்களாகிய தமிழர்கள் தீபாவளியைக் கொண்டாடுவதென்பது ஆரோக்கியமானதல்ல என்ற கொள்கையொன்று தமிழ் நாட்டில் எழுந்தது. எது எப்படி இருந்தாலும், எவ்வளவு கடன் தான் இருந்தாலும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாட தமிழக மக்கள் பின்னிற்பதில்லை. இது இந்தியாவின் நிலைமை.

 ஆனால் இலங்கையிலோ நிலைமை சற்று மாறுபட்டது. தீபாவளியென்றால் கோயில்களை நோக்கிப் படையெடுத்து, சன நெரிசலில் மிதந்து அர்ச்சனை செய்து வீடும் திரும்பும் இன்றைய சம்பிரதாயம் அன்று காணப்படவில்லை. அது புதிதாக முளைத்தது என்று தான் கூற வேண்டும். முன்னர் தீபாவளி என்றால் கிராமங்கள் களை கட்டிப் போய் இருக்கும். மக்கள் நிச்சயம் ஆட்டிறைச்சி பங்கு போடுவார்கள். கள்ளின் பாவனை சற்றுத்தாராளமாகவே இருக்கும்.

  விடுமுறை தினமாகையால் வெளியூரில் இருப்பவர்கள் எல்லாம் தம் கிராமங்களுக்குச் செல்வார்கள். அதிலும் மணமாகி, கணவன் வீட்டுக்குச் சென்ற பெண்கள் குடும்பத்துடன் தாய்வீடு வருவர். விருந்தும் புத்தாடையும் இல்லாத தீபாவளி கொண்டாடப்பட்டதே இல்லை எனலாம். விருந்துகளில் இறைச்சிக்கு அதிக முக்கியத்துவம் இருந்தமையால், கோயில்களுக்குச் சென்று வழிபடும் வழக்கம் குறைவாகவே இருந்தது.
  சீனவெடிக்கு பெரும் முக்கியத்துவம் இருந்தது. வெடியின் மூலம் சீனா. முன்னைய காலங்களிலே சீனாவிலிருந்து வெடி பெறப்பட்டமையால் சீன வெடி என்ற பெயர் நிலைத்து விட்டது. தீபாவளிப் பண்டிகையின் போது வெடி கொழுத்தும் வழக்கம் யுத்தம் தொடங்கிய பின்னர் தான் அற்றுப்போனதெனலாம்
  தலைத்தீபாவளி கொண்டாடும் வழக்கமும் எம்மவரிடத்தே இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப்போல இங்கு சீர் செய்து பிரமாண்டமாக எவரும் கொண்டாடுவதில்லை. ஆனாலும் புதுமணத்தம்பதியரின் மனம் மகிழ அவர்களுக்கு புத்தாடை, பரிசுப்பொருட்களை வழங்குவார்கள்.

   முக்கியமாக, அனைவரும் ஒன்று கூடும் திரு நாளாக இந்த தீபாவளி இருக்கும். கிராமங்களிலே விளையாட்டுப்போட்டிகள் நடக்கும். எப்பொழுதும் களைகட்டும் நிகழ்ச்சியாக இருந்த தினகரன் மாட்டுச் சவாரி கூட நடந்தேறியிருக்கிறது. கூத்துகள், நாடகங்கள் கூட அரங்கேறும்.
 மொத்தத்தில் அன்றைய சமூக நல்லிணக்கத்துக்கு , கிராமிய ஒற்றுமைக்கு வழிகோலும் பண்டிகையாக தீபாவளியும் அமைந்திருந்தது எனலாம்.
யுத்தம் துடைத்தெறிந்திருந்த இந்த இனிய நினைவுகளை மீட்பதிலும் கூட ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. யுத்த காலத்தில், வெடிகள் தடை செய்யப்பட்டிருந்தன. பல வேளைகளில் கொண்டிருக்கும் பதற்ற மன நிலையில் தீபாவளிப்பண்டிகை மறக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

  இன்று சமாதானம் தலை தூக்கி விட்டது. ஆனால், எம்மவர் போக்கு எதிர்த்திசையிலே பயணிக்கிறதோ என்ற அச்சமும் சேர்ந்தே நிலவுகிறது. நாம் கைக்கொண்டு வந்த தார்ப்பரியங்கள் மறக்கடிக்கப்பட்டமையால், அர்த்தமே இல்லாத புதிய தார்ப்பரியங்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. அத்துடன் கூடவே தொலைக்காட்சிக் கலாசாரம் தொடர்கிறது . விசேட தினங்களிலே குடும்பத்திலுள்ள சகலரையும் வீட்டுக்குள்ளே முடக்கி வைப்பதில் அலை வரிசைகள் போட்டி போடுகின்றன. அப்போது, தீபாவளி மட்டும் என்னவிதி விலக்கா? ஒரு குறுகிய கற்பனை எல்லைக்குள் மனிதனை முடக்கும் தொலைக்காட்சி என்ற அரக்கனையாவது இன்று தவிர்த்துப் பார்ப்போமே?

நடந்து முடிந்த இந்த யுத்தம் எத்தனையோ பேரை ஒரு கணப்பொழுதில் ஆதரவற்றோர் ஆக்கியிருக்கிறது. இன்றைய நன்னாளில் அவர்களில் எவருக்காவது உதவ முயலாலாமே?முடியாது! சாத்தியமே இல்லை என்கிறீர்களா? மனம் இருந்தால், நிச்சயம் இடமும் இருக்கும். நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இன்றே எழுவோம்! களத்தில் இறங்குவோம்!