Showing posts with label காட்டுத்தீ. Show all posts
Showing posts with label காட்டுத்தீ. Show all posts

Sunday, April 24, 2011

ஆவதும் அழிவதும் பஞ்சபூ தங்களாலே!


காட்டுத் தீ என்பது வனப் பகுதிகளில் அல்லது தாவரங்கள் நிறைந்த பகுதிகளில் ஏற்படும் கட்டுப்படுத்தமுடியாத தீயாகும். பொதுவாக எரியக் கூடியத் (எரிபொருளாகத் தொழிற்படக் கூடிய) தாவரங்கள் இருக்கும் பகுதிகளிலேயே காட்டுத் தீ ஏற்படும்.
அந்தாட்டிக்கா கண்டம் தவிர ஏனைய கண்டங்கள் யாவற்றிலும் இது ஏற்படுகிறது. உலக வரலாற்றிலே ஒரு குறித்த கால இடைவெளியில் காட்டுத் தீ அனர்த்தங்கள் ஏற்பட்டிருப்பதை சுவட்டு ஆதாரங்கள் நிரூபித்திருக்கின்றன.
காட்டுத்தீ தாவரங்கள் உள்ள இடங்களில் பரவினாலும் அயற் சூழலில் வாழும் சமூகங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. அதனால் அங்கு மனித உயிருக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதம் தவிர்க்க முடியாததாகிறது.
சில வேளைகளில் காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாததாகவும் இருக்கும். காட்டுத் தீ உருவாவதற்கு மின்னல், எரிமலை வெடிப்பு, பாறைகள் விழும் போது ஏற்படும் தீப்பொறி மற்றும் சாதகமான குறை தகனம் போன்றனவே பிரதான இயற்கைக் காரணிகளாகும். அது காற்றாலும் தாவரங்களின் தன்மையாலும் பரவுகிறது. ஆனால் தற்போது மனிதச் செயற்பாடுகளாலேயே அதிகளவில் காட்டுத் தீ ஏற்படுகிறது.
வட அமெரிக்கக் கண்டத்தின் பல பகுதிகளையும் வட மேல் சீனாவையும் பொறுத்தவரையிலே காட்டுத்தீயை ஏற்படுத்தும் பிரதான காரணி மின்னலாகும். மெக்சிக்கோ, தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, தென் கிழக்காசியா, பிஜி மற்றும் நியூஸிலாந்தைப் பொறுத்த வரையிலே காட்டுத்தீயை மனித நடவடிக்கைகளே ஏற்படுத்துகின்றன.
வனப் பகுதிகளைப் பொறுத்தவரையிலே காட்டுத்தீயால் பல நன்மைகளும் ஏற்படுகின்றன. சில தாவர இனங்கள் தமது வளர்ச்சிக்காகவும் இனப் பெருக்கத்துக்காகவும் காட்டுத்தீயையே நம்பியிருக்கின்றன. அதேவேளை, காட்டுத்தீயினால் எதிர்மறையான சூழல் விளைவுகளும் ஏற்படுகின்றன என்பதை மறுக்க முடியாது.





இந்த உலகம் காலத்தின் ஆதிக்கத்தில் இருக்கிறது. பஞ்ச பூதங்களின் வேற்றுமையும் கூட காலத்தின் விளைவுதான். காலத்தைக் காட்டிலும் ஆற்றல் மிக்கபொருள் உலகில் வேறொன்றுமில்லை என்கிறது மகாபாரதம்.
இவ்வுலகம் ஆச்சரியங்கள் நிறைந்தது என்பர். ஆற அமர்ந்து இயற்கையின் விந்தையைச் சில நிமிடங்கள் சிந்தித்தாலே அக்கூற்றின் அர்த்தம் புரியும்.
இவ்வுலகில், யாவுமே பஞ்சபூதங்களால் ஆனவை என்பர். ஆக்குவதும் அவையே. அழிப்பதும் அவையே என்பதை யதார்த்தமாக உணர்த்தி நிற்கிறது காலம்.
‘நிலமைந்து நீர்நான்கு நீடங்கிமூன்றே
உலவை இரண்டு ஒன்று விண்’
என்கிறது ஒளவையின் குறள். அதாவது, ஆகாயம் - முதல் பூதம், காற்று - இரண்டாம் பூதம், நெருப்பு - மூன்றாம் பூதம், நீர் - நான்காம் பூதம், நிலம் - ஐந்தாம் பூதம் என்கிறார் ஒளவையார். உலகம் கண்ட பரிணாம வளர்ச்சியை அவர் இக்குறளால் குறிப்புணர்த்தியிருக்கிறாரோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.
இந்தப் பஞ்ச பூதங்களின் சமநிலையை மனிதன் குலைக்க முயலும் போது தான் அவை உக்கிரமடைந்து அவனுக்கு எதிராகவே திரும்பி விட்டன போலும். உண்மையில் உடல் நிலையில் ஐம் பூதங்களையும், அப்பூதங்களுக்குரிய அறிவையும் ஒருங்கே அமையப் பெற்றவன் மனிதன். ஆனால் அவன் அவற்றை உணர்வதில்லை.
கடந்த வருடம் தான் இயற்கை அனர்த்தங்களால் நிறைந்து போய்க் காணப்பட்டது என்றால், இந்த வருடம் கடந்த வருடத்தைவிட மோசமானதாக இருக்குமோ என்றும் அஞ்ச வேண்டி இருக்கிறது.
நிலமும் நீரும் உக்கிரம் கொண்டு பின் கதிர்வீச்சின் பெயரால் காற்றும் தீயும் கைகொடுக்க வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்திருக்கிறது ஜப்பான்.
நிலம் அதிர நீர் பொங்கி சுனாமியாய் மேலெழுந்தது. நிலம் அதிர்ந்ததன் விளைவாய் அணு உலைகளின் பிளப்பான்கள் வெடித்தன. பற்றி எரிந்தன. கதிர்வீச்சின் தாக்கம் காற்றில் மட்டுமன்றி, நிலத்திலும் நீரிலும் கூடக் காணப்பட்டது.
மொத்தத்தில் பஞ்ச பூதங்களும் ஜப்பானுக்கு எதிராகத் திரும்பின என்றால் கூட மிகையில்லை.
பல அணு உலைகள் மூலம் மின்சாரத்தைப் பிறப்பிக்கும் புகுஷிமா என்ற பெருநகரத்தினுள் மக்கள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு நகரின் நிலைமையைக் கணப்பொழுதுகளில் புரட்டிப் போட்டு விட்டன இந்தப் பஞ்ச பூதங்கள்.
ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் பேரனர்த்தத்தால் பல உலக நாடுகள் அதிர்ந்து போயிருக்கின்றன. அணு உலைகள் பலவற்றைக் கொண்டுள்ள நாடுகள் அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டன. புதிய அணுசக்தி உடன் படிக்கைகளைக் கைச்சாத்திடவிருந்த நாடுகளும் அணுசக்திப் பயன்பாடு பற்றிய பிரேரணைகளை நிறைவேற்ற விருந்த நாடுகளும் அவற்றையெல்லாம் மீள் பரிசீலனை செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
அணு உலைகளை அமைத்திராத நாடுகளும் ஜப்பான் அனர்த்தத்தையடுத்து அச்சங் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அது ஜப்பான் அனர்த்ததால் ஏற்பட்ட கதிர்வீச்சு தமக்கும் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சமாகும்.
இவை எல்லாம் இப்படி இருக்க தற்போது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை பெரும் காட்டுத் தீ பாத்திருக்கிறது.
டெக்ஸாஸ், ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலம். ஒஸ்டினைத் தலை நகராக கொண்ட டெக்ஸாஸ் 678,054 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடையது.
இது அமெரிக்காவில் இயற்கை வளங்கள் நிறைந்த பிரதான விவசாய மாநிலமாகும். அத்துடன் கைத்தொழில்களிலும் சிறந்து விளங்குகிறது. பரப்பளவைப் பொறுத்த வரையில் அலஸ்கா மாநிலத்துக்கு அடுத்தபடியாக இருந்தாலும் எண்ணெய், பண்ணை, மந்தைத் தொழில்களிலும் பஞ்சு உற்பத்தியிலும் முன்னணியில் திகழ்கிறது.
பண்ணை உற்பத்திப் பொருட்கள், முட்டைகள், பாற்பொருட்கள் மட்டுமன்றி கோதுமை, நெல், கரும்பு, நிலக்கடலை, பல்வேறுபட்ட மரக்கறிகள் மற்றும் பழங்களும் உற்பத்தி செய்விக்கப்படுகின்றன. விளைவிக்கப்படுகின்றன.
கந்தகம், உப்பு, ஹீலியம், கிராபைட், புரோமின், இயற்கை வாயு, களிமண் போன்றவை இம்மாநிலத்தின் பெறுமதிமிக்க வளங்களாகக் கருதப்படுகின்றன. இரசாயனப் பொருட்களின் உற்பத்தி, உணவுத் தயாரிப்பு, இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்களின் உற்பத்தி போன்றன அவ்வளங்களைச் சார்ந்து நடைபெறுகின்றன.
மார்ச் - ஏப்ரல் மாதங்களில் டெக்ஸாஸ் மாநிலத்தில் கோடைக்காலம் நிலவுகிறது. அத்தகைய காலங்களில் மழை வீழ்ச்சியினளவு குறைவாக இருக்கும் அதே வேளை காட்டுத்தீ அனர்த்தம் உருவாகும் சாத்தியக் கூறுகளும் அதிகமாகக் காணப்படுவது வழமையே.
தற்போது அவ்வாறு ஏற்பட்ட காட்டுத்தீயால் கடந்த இருவார காலப் பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஏக்கர் நிலம் எரிந்து சாம்பலாயிற்று. 244 வீடுகளும் எரிந்து போயின.
டெக்ஸாஸின் ஒரு பகுதியில் மட்டும் இந்த அனர்த்தம் நிகழவில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என 4 திசைகளிலும் தீபரவுகிறது. 4 இடங்களில் பரவிய காட்டுத்தீ, பின்னர் ஒன்றாக இணைந்தும் பரவியிருக்கிறது.
இந்நிலையில், எதிர்வரும் வாரத்தில் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயல் ஏற்படலாமென தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
மழையின்றி மின்னலும் புயலும் ஏற்பட்டால் காட்டுத்தீ இன்னும் அபாயகரமாக மாறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. டெக்ஸாஸின் மலைப் பாங்கான பகுதிகளும் பெருமளவில் காட்டுத் தீ அபாயத்தை எதிர்நோக்குகின்றன.
அந்த மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 7000க்கும் அதிகமான இடங்களில் இந்தக் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
பசுமையாய் இருந்த புல்வெளிகள் காணாமலே போய் விட்டன. நிலம் தனது ஈரப்பற்றை முற்றாக இழந்து பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் சகல மாநிலங்களிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கும் தீயணைப்புப் படை வீரர்கள் காட்டுத் தீயுடன் போராடுகிறார்கள். அவர்களுள் இருவர் பலியாகியும் இருக்கிறார்கள்.
காட்டுத்தீக்கு எதிராக நிலத்தில் புல்டோசர்களையும் தீயணைப்புக் கருவிகளையும் கொண்டு போராடும் வீரர்கள் வானில் உலங்கு வானூர்திகளையும் சில நவீன உபகரணங்களையும் கொண்டு போராடுகிறார்கள்.
இனிவரும் காலங்களில் காற்று வீசுவது குறைந்தாலோ அல்லது மழை பெய்தாலோ மட்டுமே இந்த அனர்த்தத்தின் தன்மையை அறியலாம். அது காலாகாலமாக நிகழும் அனர்த்தம்தான். ஆனால் இம்முறை இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பரப்பளவு முன்னைய அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவற்றை விட மிக அதிகமாகும்.
கடந்த ஆறு மாத காலமாக இங்கு உலர் கால நிலை நிலவி வருகிறது. கடந்த ஒரு நூற்றாண்டு காலப் பகுதியில் பதிவான மிக மோசமான காலநிலையும் இதுவாகும்.
இந்த காட்டு தீயால் மக்களின் சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஏற்பட்ட சேதத்தை விட டெக்ஸாஸின் இயற்கை வளங்களுக்கு ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.
நிலம் தனது ஈரப்பற்றை இழந்து வரண்டு கொண்டிருக்கிறது. மழை ஒன்று பெய்தாலன்றி நிலம் இழந்த ஈரப்பற்றை வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது. நிலத்தின் ஈரபற்று அதன் வளத்தைப் பேணுவதில் முக்கிய இடம் வகிக்கிறது. ஈரப்பற்று துரிதமாக மீளாவிட்டால் விவசாயம் பாதிக்கப்படும். ஒரு மிகப் பெரிய விவசாய மாநிலத்தில் வேளாண்மை பாதிக்கப்படுவதானது தேசிய ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
விவசாயத்தையடுத்து பெரும் பாதிப்புக்குள்ளாபவை மந்தைகளாகும். காட்டுத்தீ மந்தைகளை நேரடியாகவும் பாதித்துள்ளது. அதன் வெப்பத்தால் அவற்றின் பாதங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொக்களங்கள் உருவாகியிருக்கின்றன. காட்டுத்தீயால் ஏற்படும் புகை காரணமாக சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
காலங்கடந்தால் மந்தை வர்த்தகமும் பாதிக்கப்படுமென நம்பப்படுகிறது. மந்தைகளின் பிரதான உணவு மூலமாக இருக்கும் புற்றரைகள் காட்டுத்தீயினால் அழிந்து போயுள்ளன. உடனடியாக மழை பெய்யாவிடில், அவற்றிற்கான உணவு மூலம் கேள்விக் குறியாகிவிடும்.
அத்துடன், அவற்றிற்காக உற்பத்தி செய்யப்படும் வைக்கோல் போன்ற மீதங்களாலான உணவின் தரமும் குன்றிவிடும் என நம்பப்படுகிறது. இவற்றிற்காக மாற்று வழிகளை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவையொன்றும் காணப்படுகிறது.
கடந்த வருடம் கூட இத்தகையதொரு நிலை காணப்பட்டது உண்மையே. டெக்ஸாஸில் ஏற்பட்ட பருவம் முந்திய மழையினால் புற்றரைகளும் விவசாயமும் பாதிக்கப்பட்டது. மழையைத் தொடர்ந்து ஆரம்பித்தது பனிக்கலாம். பயிர்களெல்லாம் பனியிலே உறைந்து அழிந்து போயின. அந்த அழிவைத் தொடர்ந்து தற்போது ஏற்பட்டிருக்கும் வரண்ட கால நிலையும் வீசும் உலர்காற்றும் உணவுப் பயிர்களை எல்லாம் எரிபொருளாக மாற்றியிருக்கிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.
பஞ்சபூதங்களால் ஏற்பட்டிருக்கும் அழிவைச் சீர்செய்ய மீண்டும் பஞ்சபூதங்களையே நம்பியிருக்கிறான் மனிதன்.
தொழில்நுட்பத்தில் என்னதான் வளர்ச்சி கண்டாலும் எத்தகைய பலம் பொருந்திய தேசமாகத் தம்மை வளர்த்துக் கொண்டிருந்தாலும் இயற்கையின் முன்னே அவை எல்லாம் வெறும் தூசுதான். இயற்கை பாரபட்சம் அறியாதது. தனது சமநிலை குலைகிறது என உணரும் போது அதை மீண்டும் சீராகப் பேண நினைக்கிறது. அதற்காக செயலில் இறங்கி விடுகிறது. எமக்கோ அது பேரனர்த்தமாகத் தெரிகிறது.
எமது பாதுகாப்பையும் சமநிலையையும் மனிதர்களாய் நாம் உறுதி செய்வதற்காக என்னெல்லாமோ செய்கிறோம். இயற்கையையே அழிக்கிறோம்.
ஆனால், தனது சமநிலையைப் பேணும் உரிமை இயற்கைக்கும் இருக்கிறது என்பதை மட்டும் நாம் உணர்வதில்லை. அத்துடன் இயற்கையின் சமநிலை குலைக்கப்பட்டால், அழிந்து போவது நாங்களும் தான் என்ற நிதர்சனத்தை யும் நாம் உணரத்தலைப்படுவதில்லை.
இயற்கை அனர்த்தம் என்றால் எமக்குத் தெரிந்தவை சேதங்களும் அழிவுகளும் மட்டுமே. இங்கும் மனிதனின் சுயநலம் தான் முன்னிலை வகிக்கிறது.

Monday, February 21, 2011

உணவின்றியும் வாழ முடியுமா ?

எகிப்து, டுனிசியா என்று ஆரம்பித்து இன்று அரபு நாடுகள் மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் பரவியிருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியில் மக்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதர ரீதியிலான நெருக்கடிகளே காரணமாக இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2010, 2011 ஆம் ஆண்டுகளிலே உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தொடர் இயற்கை அனர்த்தங்கள் மக்கள் மீது பொருளாதார நெருக்கடி திணிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.
பல உணவுப் பொருட்கள் என்றுமில்லாதவாறு உச்ச விலையை அடைந்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருக்கிறது. இதனால் உலக மக்களின் உணவுப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது.
இற்றைக்கு ஒருவருடத்துக்கு முன் உலகளாவிய ரீதியில் 196.7 மில்லியன் தொன்களாக இருந்த கோதுமையின் இருப்பு தற்போது 175.2 மில்லியன் தொன்களாகக் குறைந்திருக்கிறது. சோளத்தின் இருப்பு கடந்த மாதம் 130 மில்லியன் தொன்களாக இருந்தபோதும் தற்போது 127.3 மில்லியன் தொன்களாகவே இருக்கிறது. அதேபோல சோயா அவரையின் இருப்பு, இவ்வருட ஆரம்பத்தில் 60.4 மில்லியன் தொன்களாக இருந்தது. இந்தப் பருவ காலத்தின் முடிவில் அது 58.78 மில்லியன் தொன்களாகக் குறைவடைந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்குள் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கியின் தலைவர் றெபேட் சொலிக் தெரிவித்துள்ளார்.
முதன் முறையாக உலகளாவிய விவசாய விளைச்சல் இம்முறை பெரு வீழ்ச்சி கண்டுள்ளது. கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுள் பெரும்பாலானவற்றிலே விளைச்சல் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, உக்ரெயின், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகியனவே அந்த முன்னணி நாடுகள் ஆகும்.
2010 இன் இலைதுளிர் காலத்தில் சீனாவின் பல மாகாணங்களிலும் வியட்நாம் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கடும் வரட்சி நிலவியதுடன் பனிப்புயலும் தாக்கியது. தென் மேற்கு சீனாவைப் பொறுத்தவரையிலே இது கடந்த ஒரு நூற்றாண்டில் நிலவிய மிக மோசமான வரட்சியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலே பதிவு செய்யப்பட்ட வெப்ப அலைகளின் தாக்கமும் அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையும் அரசியல், பொருளாதார ரீதியாகப் பல அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.
ரஷ்யாவிலே கடந்த 130 வருடங்களுள், என்றுமில்லாதவாறான உயர் வெப்பநிலை பதியப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பரவியிருந்த வரட்சியும் மொஸ்கோ உட்பட 7 பிராந்தியங்களில் பரவிய காட்டுத்தீயும் கோதுமை விளைச்சலில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கின.
கடந்த வருடம் நிலவிய கடும் வரட்சியாலும் குளிர்கால நிலையாலும் பிரான்ஸ் அரசு தனது கோதுமை உற்பத்தி 2.7 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறியிருக்கிறது.
கனடாவின் மேற்குப் பகுதியில் தானியங்கள் விளையும் பல மாநிலங்களில் நிலவிய வரட்சி விளைச்சலை வெகுவாகப் பாதித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பார்லி அரிசி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் உக்ரெயின் கோதுமை உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. ரஷ்யாவைப் போலவே உக்ரெயினின் விளைச்சலை வரட்சியும் காட்டுத்தீயும் பாதித்தன. விளைவாக 2011 க்கான தானிய ஏற்றுமதியை உக்ரெயின் நிறுத்தியுள்ளது
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தம் தான் கோதுமைக்குப் பஞ்சம் ஏற்படப்போவதை உலகுக்கு உணர்த்தியது. ஏறத்தாழ பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பரப்பளவையுடைய பிரதேசங்களை வெள்ளம் மூடியது. கோதுமைப் பயிர்கள் அழிந்தே போயின.
பாகிஸ்தான் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தமானது 17 மில்லியன் ஏக்கர் விளைநிலங்களைப் பாதித்தது. வெள்ளத்துடன் 200,000 க்கும் மேற்பட்ட கால் நடைகளும் தானியங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்த போகத்துக்கான விதைத் தானியங்கள் கூட இல்லாத நிலையில் தவித்துப் போய் நிற்கிறார்கள் பாகிஸ்தான் விவசாயிகள். இயற்கை அனர்த்தங்களால், கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிராந்தியமான தென் அமெரிக்காவும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை எதிர்கொண்டது. ஆர்ஜன்ரீனா பொலிவியா ஆகிய நாடுகள் கடும் வரட்சியை எதிர்நோக்கிய அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடான பிரேசில் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டது.
ஐக்கிய அமெரிக்காவின் 50 மாநிலங்களுள் 49 மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு காணப்பட்டது. புளோரிடாவில் நிலவிய மோசமான உறை பனிக்கால நிலையானது பயிர்களை வெகுவாகப் பாதித்தது. கலிபோனியாவில் பொழிந்த மழை காரணமாக பயிர்கள் பாரியளவில் அழிந்து போயின.
ஆசியாவிலே இறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் தென் கொரியாவில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கால்வாய் நோயால் மில்லியன் கணக்கான கால்நடைகளை அழிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. மகரந்தச் சேர்க்கை இன்றி மரக்கறி மற்றும் பழவகைகளின் உற்பத்தி இல்லை என்பது வெளிப்படை உண்மை. மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு காரணமாய் அமையும் சில தேனி குடித்தொகைகள் ஐக்கிய அமெரிக்காவில முற்றாக அழிந்துபோயுள்ளன. அதேவேளை அமெரிக்காவின் வெளவால்களின் குடித்தொகையும் காரணமின்றி திடீரென அழிந்து போயுள்ளது. இவற்றிற்கான காரணங்கள் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் அவற்றின் பின்னணியில் மனித செயற்பாடுகள் தான் எஞ்சியிருக்கப் போகின்றன என்பது தெளிவான உண்மை.
இவ்வாறு மகரந்தச் சேர்க்கை நடைபெறக் காரணமாகும் உயிரினங்களின் அழிவாலும் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கடந்த 3 தசாப்தங்களுள் என்றுமில்லாதவாறு சீனியின் விலை உயர்ந்திருக்கிறது. அதற்கான பிரதான காரணம், அவுஸ்திரேலியாவைத் தாக்கிய யாசி என்ற சூறாவளியால் கரும்புப் பயிர்ச் செய்கை அழிந்து போனமையாகும்.
மலேசியா எதிர்கொண்ட வெள்ள அனர்த்தத்தால் மூன்றாம் உலக நாடுகளின் பிரதான சமையல் எண்ணெய்யாகிய பாம் எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
நாம் யாவரும் ஒருமித்து எதிர்கொள்ளவுள்ள இந்த உணவு நெருக்கடியால் வளர்முக நாடுகளில் மட்டும் 870 மில்லியன் மக்கள் பட்டினியாலும் போஷாக்கின்மையாலும் பாதிக்கப்படுவர் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதே சமயம் அந்த எண்ணிக்கை 925 மில்லியனாக அதிகரிக்கும் என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பல நாடுகள் தற்போது தானிய இறக்குமதிக்கான வரியை இரத்துச் செய்துள்ளன. அதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் 820,000 தொன் அரிசியை இறக்குமதி செய்தது இந்தோனேசியா. அத்துடன் அரிசி, சோயா அவரை மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியையும் இரத்துச் செய்தது.
மக்கள் உண்பதற்கு உணவு இல்லாமல் போனால் மூன்று விடயங்கள் நடக்கலாம். ஒன்று மக்கள் புரட்சி வெடிக்கும் இல்லையேல் குடிபெயர்வர். அதுவும் இல்லையேல் அவர்கள் இறந்து போகக்கூடும் என்கிறார் உலக வங்கியின் தலைவர்.
இது விளையாட்டாகக் கருதக்கூடிய ஒரு நிலைமை அல்ல என்பதை நாம், நினைவில் கொள்ள வேண்டும். இன்று உண்ண உணவு இருக்கிறது. எதற்காக எதிர்காலத்தைக் எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற பொதுவான நிலைப்பாடும் மனநிலையும் எம்மில் பலர் மத்தியில் காணப்படுவது உண்மை.
எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற அவசியம் இல்லைத் தான். ஆயினும் எதிர்காலத்தை எண்ணி அதற்காக எம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு உண்டு.
நாகரிக வளர்ச்சியுடன் அதிகரித்த மனிதனின் தேவைகள் அடிப்படை, அத்தியாவசியம் எனப் பல நிலைகளைக் கடந்து எங்கோ சென்றிருக்கின்றன. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை உணவு அடிப்படைத் தேவையாகத்தான் இருந்து வருகிறது.
ஆதலால் எதிர்காலத்தில் முழு உலகுமே எதிர் நோக்கவிருக்கும் உணவு நெருக்கடியை நிதி நிலைமையின் அடிப்படையில் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய தேவையொன்று எமக்கு இருக்கிறது.
உலக உணவு நெருக்கடி அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலை தானாகவே உயரும். அத்தகையதோர் நிலையில் பெரும்பான்மையான மக்களால் அதற்கு ஈடு கொடுத்து வாழ முடியாமல் போகலாம். ஆகவே அத்தகைய நெருக்கடி உருவாவதற்கு முன்னரே எம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இதுவரை காலமும் நாம் கைக் கொண்டுவந்த பழக்கங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
எமது உணவுச் செலவுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து ஆராயவேண்டும். வீட்டிலே சமைக்கும் உணவு வகைகளுக்கும் உள்ளூர் விளைச்சலால் பெறப்படும் தானிய, மரக்கறி மற்றும் பழவகைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். அவசர உணவுக்கலாசாரத்தினுள் சிக்குண்டிருக்கும் பலருக்கு அது சிரமமாகத்தான் இருக்குப்போகிறது.
உணவுப் பழக்கங்களை மாற்றவேண்டும். சத்தான உணவை அளவாக உண்ணும் நடைமுறைகளைக் கைக் கொள்ளவேண்டும். 2ம் உலக மகாயுத்த காலங்களில் பல நாடுகளிலே உணவுப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. அதனால் மக்களின் உணவுப் பழக்கங்களில் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டது.
எதற்குமே இயலாத கட்டமொன்று ஏற்படும்போது இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகி விடுமென்பது கண்கூடு.
நாம் மழைக்காலங்களிலோ அல்லது வேறு சில நெருக்கடியான காலங்களிலோ எதிர்காலத்துக்காக உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். அந்த வழக்கம் இன்று மலையேறிவிட்டது. மாறாக அன்றாடப் பிரச்சினையை மட்டுமே நோக்கும் புதுவித வழக்கத்தைக் கைக்கொண்டு வருகிறோம்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் களஞ்சியப்படுத்தி வைக்கவேண்டிய கடப்பாடு எமக்கு உருவாகிவிட்டது. அதற்கு மேலதிகமான பணம் செலவாகும் தான். ஆயினும் நெருக்கடிக் காலத்துக்காக களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இருக்கின்றன என்பதே மனநிம்மதியைத் தரும். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு சிறு தொகைப் பணத்தைத் தனியாக சேமித்து வரவேண்டும். இந்த நடைமுறைகள் தான் உணவு நெருக்கடி எம்மை முற்றாகப் பாதிக்காமல் இருக்க உதவப் போகின்றன என்பது மட்டுமே நிதர்சனம்.