Sunday, February 3, 2019

அவளில்லா அபிவிருத்தி!



நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுள் ஐந்தாவது இலக்காக வரையறுக்கப்பட்டிருக்கும் பால் நிலை சமத்துவத்தை அடைதலும் பெண்களை வலுவூட்டலும் என்ற இலக்குடன் இயற்கை வளங்கள் வெகுவாகத் தொடர்பு பட்டவை. இவ்விலக்கானது ஏனைய பல இலக்குகளை அடைவதில் பால் நிலை சமத்துவம் மட்டுமன்றி பெண்களின் பங்களிப்பையும் வரையறுத்து  நிற்கிறது. உதாரணமாக வறுமை ஒழிப்பு, உணவுப்பாதுகாப்பு, போஷாக்கு, என  சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது இவ்வைந்தாம் இலக்கு.
அந்த வகையிலே உலக உணவு விவசாய ஸ்தாபனத்திடம் மிக முக்கியமான பொறுப்பொன்று வழங்கப்பட்டிருக்கிறது.  பொருளாதார வளங்கள் மட்டுமன்றி காணி , ஏனைய சொத்துகள் , நிதிச்சேவைகள், பரம்பரைச் சொத்துகள், இயற்கை வளங்கள் யாவற்றின் மீதுமான உரித்து, அதிகாரம் ஆகியவற்றில்  தேசிய சட்டங்களுக்கமைய பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கக் கூடியவாறு சட்ட 
சீர்திருத்தங்களை உருவாக்குவதே அப்பொறுப்பாகும்.
உலகளாவிய ரீதியிலே பல நாடுகளில் பெண் விவசாயிகள், முயற்சியாளர்கள், தொழிலாளர்கள் ஆண்களுடன்  ஒப்பிடுகையில் உற்பத்தித்திறன் குறைந்தவர்களாக காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தைக் கண்டறிய விழைந்தபோது பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன.  ஏனெனில்  பொருளாதார வளங்கள் மீதான அதிகாரம்  ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கு  மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுகின்றமையை  அவதானிக்க முடிந்திருக்கிறது.  உற்பத்தியைப் பொறுத்தவரையிலே ஆண்களுக்கு  கிடைக்கும் அதே பொருளாதார வளங்கள் மீதான அதிகாரம் பெண்களுக்கும் வழங்கப்பட்டால் ஆண்களுக்கு நிகரான வினைத்திறனுடன் பெண்களும் செயற்படுகின்றமையை ஆய்வு முடிவுகள் உறுதி செய்திருக்கின்றன.
பொருளாதார, நிதி வளங்களின் பால் நிலைப் பரம்பல் மீது மிக நீண்ட காலமாக நீடித்துவரும் சமத்துவமின்மை காரணமாக, அபிவிருத்தியில் பங்களிக்கின்றமை தொடர்பில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்கள் பாதகமான நிலைமையையே எதிர் நோக்குகின்றனர்.
பால் நிலை சமத்துவம் தொடர்பில் வரையறுக்கப்பட்டிருக்கும் ஐந்தாவது இலக்கை அடைவதற்கு பொருளாதார வளங்கள், காணி உட்பட இயற்கை வளங்கள் மீது பெண்களுக்கு சமமான  உரித்தும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டியிருக்கின்றமை மிக அவசியமானதாகும். நாடொன்று நிலைத்து நிற்கக் கூடிய பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமாயின்  அதன் பொருளாதார வளங்கள் பகிரப்படும் தன்மையில் பால் நிலை சமத்துவம் காணப்பட வேண்டும். அவ்வாறு காணப்பட்டால் வறுமை ஒழிப்பு, வீட்டு அலகுகளின் நலனோம்பல், ஆரோக்கியம், போஷாக்கு போன்ற பல துறைகளில் பன் மடங்கு அபிவிருத்தி ஏற்படும் என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.
 ஐந்தாவது நிலையான அபிவிருத்தி இலக்குகளின் அடைவுகளில் ஒன்று  ஒவ்வொரு நாடுகளும் எங் ஙனம் சீர்திருத்தங்களை உருவாக்கி  பொருளாதார வளங்கள், காணி உட்பட்ட இயற்கை வளங்கள், நிதிச் சேவைகள் ஆகியவற்றின் மீதான உரித்து, அதிகாரம் தொடர்பில் பெண்களுக்குசம உரிமையை வழங்கி அபிவிருத்தி நோக்கிப் பயணிக்கிண்றன என்பதை அளவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
காணி தொடர்பில் பெண்களின் உரித்து, அதிகாரம் ஆகியன பெண்களின் நலனோம்பல், உற்பத்தித்திறன், சமத்துவம், வலுவூட்டல் ஆகியவற்றில் அதிக பங்களிப்பைச் செலுத்துவனவாகப் பார்க்கப்படுகின்றன.  முரண்பாடுகளுக்கு ப்பின்னரான சமூகங்கள்,  விவசாய சமூகங்கள் மத்தியிலே காணி மீதான உரிமை, அதிகாரம் என்பவை பெண்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு மட்டுமன்றி அவர்களை வறுமை வலையில் சிக்க வைக்காத தடுப்பாகவும் பார்க்கப்படுகின்றன.  அதிலும் சமூகப்பாதுகாப்பு நடைமுறைகள், சமத்துவமான தொழில் சந்தைகள் குறைவாக க் காணப்படும் பகுதிகளிலே காணி மீதான  அதிகாரம், உரித்தற்ற பெண்கள் பாதிக்கப்படும் தன்மை அதிகம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.
காணி மீது பெண்ணுக்கு அதிகாரமும் உரித்தும் கிடைக்கப்பெறுதலானது அவள் உறுதி மிக்க வலுவூட்டலுடன் கூடியவளாக மாறுகிறாள்.  ஆண் துணை மீதோ அல்லது ஏனைய உறவினர் மீதோ அவள் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படாது விடுகிறது.  வீட்டு அலகினுள்ளே அவளது பேரம் பேசும் திறன் அதிகரிக்கிறது. ஆதலினால் ஏனைய உற்பத்தித்திறன் மிகு வளங்களையும் நிதிச் சேவைகளையும் கூட அவளால் இலகுவாகப் பெற முடிகிறது.  காணி உரித்து கிடைக்கப்பெறுவதால் அவளிடம் உருவாகும் நம்பிக்கையுணர்வு அவளது முயற்சியாண்மைத் திறனை அதிகரிப்பதோடு மட்டுமன்றி விரிவடையவும் செய்கிறது. ஆதலினால் அவளால் உற்பத்தி சார், கூட்டுறவு சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அபிவிருத்திக்கு பங்களிக்க முடிகிறது.
காணி மீதான உரிமை, அதிகாரம் என்பன மனித உரிமைகளானவை. இங்கு   மனித உரிமைக்கும் அடிப்படை உரிமைக்குமான வேறுபாட்டை நாம் பார்க்க வேண்டும் . ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட உரிமைகள் யாவும் மனித உரிமைகள் எனப்படுவன. அவ்வுரிமைகளுள் இலங்கையின் அரசியல் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படுவன. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு ஒருவர் முறைப்பாடொன்றை அனுப்புகிறார் எனக் கொள்வோம்.  அவரது முறைப்பாடு இலங்கையின் அரசியலமைப்பினால் வரையறுக்கப்பட்டிருக்கும் மனித உரிமைகளுள் எவற்றையேனும் ஆட்சித்துறை மீறியிருக்கிறதா என்பதையே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பரீட்சிக்கும். இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கமைய உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமையாக க் கருதப்படவில்லை. அந் நிலையில் அவ்வுரிமை மீறப்பட்டமைக்கு எதிராக எந்தவொரு முறைப்பாட்டையும் இலங்கையின் பிரஜையொருவர் முன் வைக்க இயலா த நிலை காணப்படும்.
அதே போல  2016 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் தகவலறியும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்படிருக்கவில்லை. இந்நிலையில் பொதுத் தகவல் ஒன்றுக்கான விண்ணப்பதாரின் அணுகல் கோரிக்கை மறுக்கப்படும் போது அவரால் எங்கும் சென்று முறைப்பாட்டை மேற்கொள்ளவோ வழக்குத் தொடரவோ இயலாதே நிலையே காணப்பட்டது. ஆயினும் இலங்கையின்  அரசியல் அமைப்பின் 19 ஆவது சீர்திருத்த த்தின் 14 (அ) உறுப்புரைக்கமைய தகவல் அறியும் உரிமை அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2016 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வந்தது.
சிவில், அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச கூட்டு உடன்படிக்கையின் மூன்றாவது சரத்து ஆண், பெண் இரு பாலருக்குமிடையிலான சமத்துவத்தை உறுதி செய்கிறது. இரண்டாவது சரத்தோ  அதனடிப்படையிலான பாரபட்சங்களைத் தடை செய்கிறது. இருபத்து ஆறாவது சரத்தோ, சட்டத்தின் முன்னே யாவரும்  சமம் என்பதை வலியுறுத்துகிறது.
இவ்வுடன்படிக்கையில் பெரும்பாலான நாடுகள் கைச்சாத்திட்டிருக்கின்ற போதும்  சொத்தொன்றின் அல்லது இயற்கை வளமொன்றின் மீதான உரித்து, அதிகாரம் தொடர்பில் உலகின் பல பிராந்தியங்களிலும் பாரியளவிலான பாரபட்சங்கள் காணப்படுவதாகவே  ஆய்வுகள் கண்டறிந்திருக்கின்றன.
உலக விவசாய ஸ்தாபனத்தின் பால் நிலை, காணி உரிமைத் தரவுத்தளத்தில் உள்ள உலக நாடுகள் அனைத்திலும் காணி உரித்துடைய ஆண்களை விட பெண்கள் கணிசமானளவு குறைவாகவே காணப்படுகின்றனர். அதேவேளை விவசாயக்காணியின் உரித்து எனக் கருதும் போது  பெண்கள் சிறிய விஸ்தீரணமுடைய தரம் குறைந்த நிலங்களையே உடைமையாக க் கொண்டிருக்கின்றமையையும் ஆய்வுகளால் அவதானிக்க முடிந்திருக்கிறது.   ஆண்வழிச் சமூகமான பாரம்பரியத்தைக் கொண்ட பிரித்தானிய காலனித்துவ ஆட்சியுடன் இலங்கையின் காணிச் சட்டங்களும் வளர்ச்சியடைந்தன என்றே கூறவேண்டும்.
இலங்கையிலே 80 சதவீதத்துக்கும் அதிமான காணிகள் அரச காணிகளாகவே காணப்படுகின்றன என்பதை நாம் கடந்த வாரம் பார்த்தோம். நகர எல்லைகள் தவிர்த்து பிரதேச சபை எல்லைகளுக்குள் அமைந்திருக்கும் அத்தகைய காணிகள் பெரும்பாலும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தினூடாகவே ஏறத்தாழ 7 தசாப்தங்களுக்கும் மேலாக காணியற்றோருக்கு பல்வேறு நோக்கங்களுக்காகப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. காணி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் உரித்தாவணம் வழங்கப்பட்ட காணியொன்றின் உரித்தாளருக்கு மூன்றாம் அட்டவணை எனப்படும் அட்டவணைக்கமைய தான் விரும்பும் ஒருவரையோ அல்லது தனது வாழ்க்கைத்துணையையோ பின்னுரித்தாளராக நியமிக்க இயலும். அவர் அவ்வாறு நியமிக்காமல் இவ்வுலகை நீத்தால், அவரது வாழ்க்கைத்துணைக்கு அக்காணியின் நன்மைகளை அனுபவிக்க க் கூடிய வகையிலான சீவிய உரித்து கிடைக்கும் வகையில் சட்டம் இடமளிக்கிறது. ஆயினும் அக்காணியின்  பூரண உரித்து தொடர்பில் மூன்றாம் அட்டவணைக்கமைய உரிமை மாற்றம் மேற்கொள்ளப்பட சட்டம் அனுமதியளிக்கிறது. இங்கு பால் நிலை பாரபட்சம் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.ஏனெனில்  மூன்றாம் அட்டவணையில் முதல் நிலையில் இருப்பவர்கள் ஆண்பிள்ளைகளே. இத்தகைய அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட நபரொருவர் பின்னுரித்தாளரை நியமிக்காமல் இறந்து போனால், அவரது முதலாவது ஆண்பிள்ளையே காணிக்கு உரிமையாளராக இயலும். மூத்த பிள்ளைகள் பெண்பிள்ளைகளாக இருந்து கடைசிப் பிள்ளை ஆண்பிள்ளையாகிலும் ஆண்பிள்ளைக்கே காணி மீதான உரிமை கிடைக்கப்பெறும்.  
கணவனை, பிள்ளைகளை யுத்த்திலே இழந்த பெண்ணொருவர் தனக்கான காணியின் பூரண உரித்தை இச்சட்டத்தின் கீழ் உறுதி செய்ய இயலாதவராகவே காணப்படுவார். காணியின் பூரண உரித்தானது உரிமையாளரான கணவரின் சகோதரர்களுக்கோ அல்லது பெறாமக்களுக்கோ தான் பகிரப்படுமே தவிர வாழ்க்கைத்துணைக்கல்ல. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டமானது காணி மீதான உரித்து, பால் நிலை சமத்துவம் தொடர்பில் நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான சிறு உதாரணம் மட்டுமே.



பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த பல நாடுகளில் இயற்றப்பட்ட பல சட்டங்களில் இத்தகைய பாரபட்சங்கள் காணப்படத்தான் செய்கின்றன. காலத்துடன் கொள்கைகள் மாற மாற இச்சட்டங்களையும் இற்றைவரைப்படுத்த பல அபிவிருத்தியடைந்த நாடுகள் தவறி விடுகின்றன. இத்தகைய சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதில் ஏற்படும் தாமதங்கள் கூட நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதிலும் தாமதங்களை ஏற்படுத்தும்.
சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிர்வாக அலகுகளிலே பால் நிலை சமத்துவத்தைப் பேணும் வகையிலே, பெண்ணுக்கான சொத்தின் மீதான உரித்தை உறுதி செய்யும் வகையிலே தீர்மானங்களை மேற்கொள்ள அலுவலர்கள் பயிற்றப்பட வேண்டும். தமக்கான உரித்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வல்லமை மிக்கவர்களாக பெண்களும் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும்.
 அபிவிருத்திக்கான உரிமை என்பது கூட மனித உரிமையாகவே பார்க்கப்படுகிறது. இது பொருளாதார அபிவிருத்தியை மட்டும் குறிக்கும் சொற்றொடர் அல்ல. இயற்கை வளங்கள் மீதான அதிகாரம், சுய ஆட்சி, அபிவிருத்திக்கான அர்த்தமுள்ள பங்களிப்பு, சம வாய்ப்புகளும் பாரபட்சமின்மையும், சகல மனித உரிமைகளையும் அனுபவித்தல் போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாகவே அபிவிருத்திக்கான உரிமை பார்க்கப்படுகிறது.   நாடொன்றின் அபிவிருத்தியின் அடிப்படை அலகு வீடாகும். ஆதலினால் அபிவிருத்தியின் மையமாக பெண்களே கருதப்படுகின்றனர். அவ்வபிவிருத்தியில் பெண்கள் பங்களிக்கும் போது கிடைக்கும் நன்மைகள் பல மடங்கானவை என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. காணி உட்பட்ட இயற்கை வளங்கள் மீதான உரித்து உறுதிப்படுத்தப்படாமல் அபிவிருத்தியிலே பெண்களின் பங்களிப்பை எதிர்பார்க்க இயலாது! அத்தகைய நிலை நாட்டின் மீதான சுமைகளை அதிகரிக்குமே தவிர, அபிவிருத்தி சார்ந்து நாட்டை முன்னகர்த்தாது என்பது கண்கூடு!

காணி நிலம் வேண்டும்!

உலகளாவியரீதியிலே பண்டைக்காலந்தொட்டு நடந்த போர் வரலாறுகளிலெல்லாம் நிலத்துக்கு பெரு முக்கியத்துவம் உள்ளது. தமிழர் வாழ்வியலும் காணியும் பின்னிப்பிணைந்ததெனலாம்.  காணியின் அறிமுகம் சோழர் காலத்தில் ஆரம்பிக்கிறது. காணியென்பது உரிமையின் மறு பொருளாக க் கருதப்பட்டாலும் 1/80 என்ற அலகை அடிப்படையாக க் கொண்ட முறையாக க் குறிப்பிடப்படுகிறது.
தமிழர் வரலாற்றிலே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னன்  இராஜ ராஜ சோழனுடைய காலத்தில் தான் முதன் முதல் நிலங்கள் அளவை செய்யப்பட்டன. எல்லைகள் வகைக் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் உரித்தான நிலங்கள் கணக்கிடப்பட்டன. நிலங்கள் மீதான  விளைச்சலின் அடிப்படையில் அவை தரம்பிரிக்கப்பட்டன.  நில அளவையில் வேலி, மா, காணி, முந்திரி போன்ற சொற்பதங்கள் மிக முக்கியமானவை.
ஈழ தேசமும் ஜன நாதமங்கலம் எனவும் மும்முடிச் சோழ புரம் எனவும்  நெடுங்காலம் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தமையாலோ என்னவோ  எம்மவர்  வாழ்வியலிலும் காணிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
 நுகர்வை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகிலே  காணி எனப்படுவது நிலமாகக் கருதப்படுவதுடன் மிகவும் பிரதானமானதோர் பொருளாதார வளமாகப் பார்க்கப்படுகிறது.  ஏனெனில் காணி மீதான உரிமையை அடிப்படையாக க் கொண்டே ஏனைய பொருளாதார, உற்பத்தித்திறன் சார் வளங்கள் மீதான அதிகாரம் பிரயோகிக்க ப்படுகிறது. நகர்ப்புறமோ கிராமப்புறமோ அவ்வதிகாரம் தொடர்பில் ஒத்த போக்கே காணப்படுகிறது.   நிலமின்றி மேற்கொள்ளப்படும் விவசாயம் நடைபெற்றாலும் கூட அதிகரித்துவரும் உலக சனத்தொகையின் உணவுத் தேவையை ஓரளவேனும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கின்றதென்றால் நிலமன்றி வேறேதும் துணை புரியாது. நிதி வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பிடியாக மட்டுமன்றி  திருமணங்களின் போதும் காணியின் செல்வாக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது.
அடிப்படையில் வறுமையை ஒழிக்க வேண்டுமாயின், உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமாயின்,  நிலையான அபிவிருத்தியை  அடைய வேண்டுமாயின் நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியன  அத்தியாவசியமானவையாக மாறி விடுகின்றன. அதனால் தான் கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூட நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியவற்றுக்கும்  அவற்றின் மீது பெண்களின் பங்குக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.  இலங்கையைப் பொறுத்த வரையிலே ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும்  அதிகமான காணிகள் மீதான உரிமையை அரசே வைத்திருக்கிறது. ஆயினும் அவற்றுள் பெரும்பாலானவை  பல்வேறு தேவைகளுக்காக பொது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும்  நிபந்தனைகளின் பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் போன்று பிரித்தானியரின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட மாவட்டங்களில் தனியார் காணிகள் அதிக சதவீதத்திலும் அரச  காணிகள்  குறைவான சதவீதத்திலும் காணப்படுகின்றன. 
காணி உரிமை, அதிகாரம் போன்றவை இலங்கையைப் பொறுத்தவரையிலே ஆண்வழி சமூக க் கட்டமைப்பை அடிப்படையாக க் கொண்டவையாகவும் பெண்களைப் பின்னிறுத்தியவையாகவுமே காணப்படுகின்றன. 1970 களில் உருவாக்கப்பட்ட காணிச் சீர்திருத்தங்களின் பின்னரும் கூட அதிகளவு நில புலங்களை வைத்திருந்த பலர் வடக்கு கிழக்கு பகுதிகளை விட்டு புலம் பெயர்ந்து விட்டனர். இந் நிலையில்  அரச காணியாகிலும் சரி தனியார் காணியாகிலும் சரி காணி மீதான உரிமை, அதிகாரம் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் உருவாகியமை தவிர்க்கமுடியாததாகி விட்டது.  நாட்டில் நிலவிய அசாத்தியமான சூழ் நிலை காரணமாக பிரித்தளிக்கப்பட்ட அரச காணிகளை அபிவிருத்தி செய்ய முடியாது கைவிட்டுச் சென்றோர் மிகப்பலர்.  இந் நிலைமைக்கு தனியார் காணிகளும் விதி விலக்காக அமையவில்லை.
கைவிட்ட நிலையில் காணப்பட்ட காணிகள் பல காலத்துக்குக் காலம் பல்வேறு தரப்பினராலும் அத்து மீறிப் பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருகின்ற  நிலைமையும்  தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றே கூற வேண்டும். யுத்தமும் சுனாமி அனர்த்தமும் பல உரித்தாவணங்களும் கோவைகளும் அழிந்து போகவும் கைவிடப்படவும் காரணமாகி விட்டன. 1970 களின் பின்னர் காணி அத்து மீறல்கள் அளவை செய்யப்பட்டு வரைபடங்கள் இற்றைவரைப்படுத்தப்படவில்லை. கடந்த 3 தசாப்தகாலங்களுள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளும் பகிர்ந்தளிப்புகளும் கூட வரை படங்களில் இற்றை வரைப்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகிறது.
அசாத்திய சூழ் நிலைகளால் கைவிடப்பட்ட காணிகளை 3 தசாப்த காலம் கடந்து , ஆவணங்களை இழந்து உரிமை கோரும் போது அவை வேறு தேவைகளுக்காக பாவிக்கப்பட்டிருக்கின்றமையையும்  அவற்றின் நிலப்பயன்பாடு மாறி இருக்கின்றமையையும் அதன் காரணமாக அவை பல்வேறு பட்ட திணைக்களங்களின் அதிகார எல்லைக்குள் ஆட்பட்டிருக்கின்றமையையும் அவதானித்தபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளின் உரித்து, அவற்றின் மீதான அதிகாரம்  தொடர்பில் தொடர்ந்தும் தெளிவற்ற நிலைமைகள் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.  அத்துடன் ஆறு, குள ஒதுக்கீடுகளும் பாதை ஒதுக்கீடுகளும்  அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு நிலையான குடியிருப்புகளாக மாற்றப்பட்ட நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்துதல்  தொடர்பான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்தும் நீடித்த வண்ணமேயுள்ளன.
யுத்த சூழலில் உள் நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியமராதவர்களும் புலம் பெயர்ந்தவர்களுள் பெரும்பாலானோரும் தமக்கான காணி உரிமையை வட கிழக்கு மாகாணத்தில் கொண்டிருக்கின்ற அதேவேளை மீளக்குடியமர்வின் பின்னர் தற்போது குடியமர்ந்திருக்கும் பல புதிய, உப குடும்பங்களுடைய காணி உரிமை தொடர்பில் இன்னும் சிக்கலான நிலைமையே காணப்படுகிறது.
அரச காணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட இயலாதவையாக இருந்த போதும் விற்பனை உடன்படிக்கை மூலம் கைமாற்றுபவர்கள் இன்னும் வாழ்ந்த வண்ணமே இருக்கின்றனர். மூன்று தசாப்த கால அசாதாரண சூழ் நிலைகளின் போது உருவாகிய இப்பழக்கத்தை எந்தவொரு தரப்பினரும் கைவிடுவதாக இல்லை. காணிகளை பிரிக்கப்படஇயலாத விஸ்தீரணங்களுக்கும் குறைவாகப் பிரிவிடை செய்து விற்பனை உடன்படிக்கைகள்  மூலம் கைமாற்றுபவர்களும் திருந்தாத நிலையே தோன்றியுள்ளது.  இவை யாவுமே அரச நிர்வாக இயந்திரங்களின்  எல்லைகளுக்கப்பால் தினந்தோறும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளன.  
ஏறத்தாழ ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னரே  அப்போது காணப்பட்ட அரச காணிகளுக்கு வெளிப்படுத்துகை உறுதிகளை எழுதி கைமாற்றும் முறைமைக்கு பழக்கப்பட்ட எம்மவர்கள் அதைத் தற்காலத்திலும் தொடர்கின்றமை  பல முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. மத்திய வகுப்பினருக்கென வழங்கப்பட்ட காணிகளும் கூட நிபந்தனைகளை மீறி பிரிவிடை செய்யப்பட்டும் உரிமை கோரப்படாமலும் பல்வேறு தரப்பினரால் அத்துமீறிப்பிடிக்கப்பட்டும் சிக்கலானதோர் நிலையில் காணப்படுகின்றன.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் சிபாரிசுக்கமைய காணி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களின் அடிப்படையிலே அத்து மீறிப்பிடிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் ஆவணங்கள் தொலைந்த, ஏலவே பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் உரித்தாவணங்கள் வழங்கப்பட்டு பல்லாயிரக்கணக்காணோரின் காணி உரிமை உறுதி செய்யப்பட்டமையை ஒரு போதும் மறுக்க முடியாது.
மூன்று தசாப்த கால அசாத்திய சூழல் காரணமாக எந்தவித திட்டமிடலுமின்றி திடீரென பெரு நகரங்களாக வளர்ச்சியடைந்த பிரதேசங்கள் பலவும் வடகிழக்கிலே காணப்படுகின்றன. நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகள் நீண்ட கால க்குத்தகையில் வழங்கப்பட வேண்டியவை. ஆயினும் இப்புதிய நகரங்களுள் அவை இன்னும் முற்றாக ஒழுங்கமைக்கப்பட்டு குத்தகை அறவிடப்பட்டு வருகின்ற நிலைமை அரிதாகவே காணப்படுகிறது. ஆயினும் அக்காணிகளை மேட்டு நிலமாகப் பயன்படுத்த அனுமதி பெற்ற தனி நபர்கள்  பெருந்தொகை பணத்தை பெற்று அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குகின்றமையையும்   அரசினால் வழங்கப்படும் குத்தகை உடன்படிக்கைகளை கை மாற்றூகின்றமையையும் கூட பரவலாக அவதானிக்க முடிகின்றது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் காணப்படும் வளப்பற்றாக்குறை காரணமாக இத்தகைய செயற்பாடுகள் அவற்றின் கைகளை மீறியவைகளாகவே இருக்கின்றன.
அரச காணிகள் தொடர்பிலான  நிலைமை இவ்வண்ணமிருக்க கடந்த கால அசாதாரண சூழ் நிலையால் அத்து மீறிப்பிடிக்கப்பட்ட தனியார் காணிகள் மீதான வழக்குகள் அரை தசாப்தத்துக்கும் மேலாக  நீதி மன்றுகளில் நடைபெற்று வருகின்றன.  காணிக்கான உண்மை உரித்தாவணங்களுடன் உரிமையாளரும் எந்தவித ஆவணங்களின்றி அத்துமீறிப்பிடித்தவர்களும் அரை தசாப்தங்களுக்கு வழக்காடுகின்றமை சிலவேளைகளில் யதார்த்தத்துக்கும் தர்க்கத்துக்கும் அப்பால் பட்டவைகளாகவே காணப்படுகின்றன. மாவட்டப் பதிவகங்களிலிலிருந்த காணி உரித்தாவணப்பதிவேடுகள் அழிவடைந்தமையால்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்த தனியார் உறுதிகள் சத்தியக்கடதாசியுடன் மீளவும் பதிவு செய்யப்படுகின்றன. இவை பற்றிய விழிப்புணர்வு  கற்றவரிடமும் மற்றோரிடமும் குறைவாகவே காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலே 80 சதவீதமான காணிகள் தனியார் காணிகளாதலால் தனியார் உறுதிகளைக் கைமாற்றிப் பழக்கப்பட்டோர் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச காணிகளையும் தனியார் காணிகள் என கல்வியறிவு வேறுபாடின்றி அனைவரும் நம்பி ஏமாறும் பல  நிகழ்வுகள் அன்றாடம் இடம்பெற்றவண்ணமே உள்ளன. 
குறித்த காணியொன்று தனியார் காணியா? அரச காணியா என்பதை அக்காணி அமைந்துள்ள பிரிவுக்குரிய பிரதேச செயலகத்தில் காணப்படும் நில அளவை வரைபடங்களை அடிப்படையாக க் கொண்டு அறிய முடியும். இலையேல் நில அளவைத் திணைக்களத்திலுள்ள இற்றைவரைப்படுத்தப்பட்ட நில அளவை வரைபடங்களைக் கொண்டும் அறிய இயலும். காணி தொடர்பிலான நிர்வாக இயந்திரங்களில் மூன்று தசாப்தகாலமாக ஏற்பட்ட இடைவெளியை பூர்த்தி செய்து  சம காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க இன்னும் சில தசாப்தங்களாகும் எனலாம்.
இவை இப்படி இருக்க பெண்களின் காணி உரிமை பற்றி எவரும் பெரிதளவில் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அடிப்படையில் நிலம் மீது பெண்ணுக்கு உரிமையோ அல்லது அதிகாரமோ காணப்படும் பட்சத்தில் பல அபிவிருத்தி இலக்குகளை இலகுவாக எட்டமுடியும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.பெண்களுக்கு காணிமீதான அதிகாரமும் உரிமையும் காணப்படும் போது  பொருளாதார ரீதியிலான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் நிலப் பாவனை தொடர்பாக பெண்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் வினைத்திறனானவையாக இருக்கும். அக்காணியிலிருக்கும் இயற்கை வளங்கள் நிலைத்திருக்க க் கூடிய வகையிலே பாவனையிலிருக்கும். ஆண்களுக்குக் கிடைப்பனவான பௌதிக வளங்கள் பெண்களுக்கும் கிடைக்கப்பெற்று அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் விளைச்சல் 20-30 சதவீத த் தால் அதிகரிக்கும்.  உணவுப் பாதுகாப்பு தானாகவே அதிகரிக்கும்  என்றெல்லாம் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆயினும் காணி மீதான உரிமை, அதிகாரத்தை பெண்களுக்கும் சமமாக வழங்க நாம் தயாராக இருக்கிறோமா என்பது பணப்பரிசுக்குரிய
கேள்வியாகவே இன்றும் இருக்கிறது.

ஊழலில்லா உலகு?

யாவரையும் உள்ளடக்கிய சுபிட்சமான உலக அபிவிருத்தியும் நிலையான, தாங்கும் சக்தி மிக்க புவித்தொகுதியும் என்ற  நெடுந்தூரக் கனவுடன் நாம் நிலத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் காலம்  இது. புதிய மாற்றம் என்பது சாத்தியமானதே. ஆயினும் எமது கனவை அடைவதற்கு நாம் பல்வேறு வழி வகைகளைக் கையாள முடியும். இனிமேலும் இப்பூமிப் பந்தை அழுத்தங்களுக்கு ஆளாக விடாமல் நாம் தற்போது வாழும் வாழ்க்கைப் பாங்கை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். அல்லது துரித பொருளாதார வளர்ச்சியினூடு நிலைத்து நிற்கும் தன்மையை எய்த வேண்டும். அல்லது சகல வழிகளிலும் இறுக்கமான நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.  அதுவுமில்லையேல் சாதுரியமான முறையிலான நிலைமாற்றத்தை உருவாக்க வேண்டும்.
இத்தகைய நாங்கு வழிமுறைகள் தொடர்பிலும் இயக்க மாதிரிகள் உருவாக்கப்பட்டு நோர்வே நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றினால் பரீட்சிக்கப்பட்ட து. அப்பரீட்சிப்பு அறிக்கையின் முடிவு  சற்று அதிர்ச்சியூட்டுவதாகத் தான் இருந்தது.  உலகளாவிய ரீதியிலே தற்போதைய வளர்ச்சிக்கொள்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை  2030 ஆம் ஆண்டளவில் அடைதலானது சாத்தியமற்ற ஒன்றாகவே  காணப்படுவதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. 
துரித வளர்ச்சியை நாடும் போது பொருளாதார, சமூக விடயங்களுடன் தொடர்புடைய இலக்குகளையும் அடைவுகளையும் அடைய முடியும். ஆயினும் சுற்றுச்சூழலை விலையாக க் கொடுத்தே  அவற்றை அடைய முடியும்.
ஆயினும் நாம் சாதுரியமான நிலை மாற்றத்தை நாடும் போது பெரும்பாலான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை 2030 ஆம் ஆண்டளவிலே அடைய முடியும். சாதுரியமான நிலை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் நாம் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக புதுப்பிக்கத்த க்க சக்தி வழிவகைகளின் வளர்ச்சி துரிதமாக்கப்பட வேண்டும்.  அடுத்ததாக உணவுச் சங்கிலிகளின் உற்பத்தித்திறனும் துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.  மூன்றாவதாக வறுமை மிகு நாடுகளில் புதிய அபிவிருத்தி மாதிரிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.  அடுத்து சமத்துவமின்மை குறைக்கப்பட வேண்டும். இறுதியாக யாவருக்குமான கல்வி, பால் நிலை சமத்துவம், குடும்பத் திட்டமிடல் ஆகியவற்றின் மீதான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

  நாடளாவிய ரீதியிலும் சரி, பிராந்திய ரீதியிலும் சரி உலகளாவிய ரீதியிலும் சரி  மேற்குறிப்பிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஆட்சித்துறை செயற்படுமாயின்  ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிராந்தியமும் கூட நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலகுவாக இருக்கும்.

இத்தகையதோர்  சாதுரியமான நிலை மாற்றம் உருவாவதற்கு நல்லாட்சி மிக மிக அவசியமாகிறது.  உதாரணமாக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் வளர்ச்சியைத் துரிதமாக்கவேண்டியதான தொரு சூழலில் நிலக்கரி மூலம் மின்னை உற்பத்தி செய்யும் புதிய செயற்றிட்டமொன்றை ஒரு நாடு அறிமுகம் செய்யுமாயின் எவ்வாறு அது தனக்கான இலக்கை எய்த முடியும்? அந்த செயற்றிட்டம் உருவாக உயர் மட்ட கொள்கைத் தீர்மானம் முக்கியதான தோர் இடத்தைப் பிடித்திருக்குமல்லவா? மாறாக  ‘எமது நாடு இனிமேல் புதுப்பிக்கத் தக்க சக்தி வளத்தை மாத்திரமே  பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்’ என்பது போன்ற கொள்கைத் தீர்மானம் காணப்படும்  நாட்டிலே நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்த்திட்டத்தை  நடைமுறைக்குக் கொண்டு வரத்தான் இயலுமா?
இவ்வினாக்களுக்கான விடைகளாய் நாம் ஒவ்வொருவரும் தேடவேண்டிய தருணம் இது.
அண்மையிலே டென்மார்க் னாட்டின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றிலே  எண்முறை சார் முறைமைகளினூடாக எங் ஙனம் தமது அரசு ஊழலைக் கையாள விழைகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன்  ஊழலுக்கு எதிராகப் போரிடுவதற்காக போது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது  ஆண்களும் பெண்களும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பிலும் அப்பிரசுரம் விளக்கியிருந்தது. ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் தொடர்பிலும் அதில் விளக்கப்பட்டிருந்தது.  இவ்விடயப்பரப்பிலே ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் விளக்குவதானது, ஊழலினால் விகிதசமனின்றி பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக எண்முறை ஆயுதங்களை (சாதுரிய கைத்தொலைபேசி, இணையம் )அணுகும் கிடைக்காமல் இருக்கும் என்பதாகும்.  ஆதலினால் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பால் நிலை சார் கூருணர்வு மிக்கவையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி பற்றியும் நல்லாட்சி பற்றியும்  ஆராயும் போது ஊழலும் ஊழலொழிப்பும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவையாக் காணப்படுகின்றன.
ஊழல் பலவகைப்படும். அவற்றிலொன்றே இலஞ்சமாகும். ஆயினும் எம்மில் பெரும்பாலானோர் ‘ஊழல்’ என்றால் இலஞ்சம் என்றே பொருள் கொள்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரசுரமானது சிறியளவிலான ஊழலையும் பாரியளவிலான ஊழலையும் பிரித்தறிகிறது.  ஏனெனில் அவை ஒவ்வொன்றையும் ஒழிப்பதற்கு வேறுபட்ட ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
 நவீன உலகிலே ஊழலை ஒழிப்பதற்கு நான்குவிதமான  வழிகளைக் கையாளலாம் என அப்பிரசுரம் குறிப்பிடுகிறது. அவையாவன, திறந்த தரவுகளும்வெளிப்படைத்தன்மையும், இலத்திரனியல் ஆட்சி மூலம் ஊழல் நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களைக் குறைத்தல், கட்டச் சங்கிலித் தொழில் நுட்பம் மூலம் உரிமைகளை உறுதி செய்தலும் இடைத் தரகர்களை இல்லாமல் செய்தலும், கூட்ட முதலீட்டினூடு ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களை ஊக்குவித்தல் என்பனவாகும். 
கடந்த வருட இறுதிப் பகுதியில் டென்மார்க்கின் கோப்பன் ஹார்கனில் நடைபெற்ற சர்வதேச ஊழல் ஒழிப்பு மா நாட்டிலே இப்பிரசுரம்  முன்னளிக்கப்பட்டது.   .
அபிவிருத்தியடைந்த நாடுகளிலே இவை யாவும் சாத்தியமாக இருந்தாலும் வளார்முக நாடுகளிலும் வறிய நாடுகளிலும் நிலைமை தலை கீழாகவே உள்ளது.
யாவற்றுக்கும் முதன்மையான இயற்கை வளப்பரம்பலை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் எண்முறைத் தொழில் நுட்பத்துக்கான அணுகலில் பின்னிற்கிண்றமை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந் நிலைமையிலிருந்து வெளியே வருதலொன்றும் இலகுவான காரியமல்ல.அடிப்படையில் அதற்கான முதலீடுகள் மிக அவசியமாகின்றன.

ஆட்சியும் ஊழலும் வர்த்தக, நிதித் துறைகளுடன் பின்னிப்பிணைந்தவை என்பது வெளிப்படை உண்மையாகும். பெறுகை நடைமுறைகளில் ஊழலுக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. நிலைத்து நிற்க க் கூடிய பெறுகை நடைமுறைகளின் தோற்றமென்பது ஊழலை ஒழிப்பதற்கான முதலடியாகப் பார்க்கப்படுகிறது.  அம்முதலடியை எடுத்து வைக்கும் ஒவ்வொரு நிறுவனமும்  நிலைத்து நிற்கும் இவ்வபிவிருத்தி இலக்குகளில் பதினாறாவது இலக்கை அடைவதில் தனது பங்களிப்பைச் செலுத்தும். இலங்கையிலும் ஆட்சித்துறையின் பெறுகை நடவடிக்கை முறைகளை இலத்திரனியல் படுத்தும் செயற்பாடுகள் நடந்த வண்ணமேயுள்ளன. 

ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமாயின் கண்ணுக்குப் புலப்படாதவற்றை புலப்படுத்துதல் வேண்டும் என்பர். தகவலுக்கான அணுகலையும் வெளிப்படைத்தன்மையையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவற்றைப் புலப்படுத்த இயலும்.
இங்கு  நான்காவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கான ‘தரமான கல்வி’ தொடர்பிலும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி சார் பெறுபேறுகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது சில அடிப்படைத் திறன்களையும் நல்ல பெறுமானங்களையும் மாணவர்கள் மத்தியில் வளர்த்து விடுவதாக கல்வி முறைமைகள் மாற்றப்பட வேண்டும்.
ஊழல் என்பது சங்கிலித்தொடர் போன்றது. அது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. அந்த சங்கிலித்தொடரை இடையிலே அறுப்பதற்கு மாணவர்களால் இயலும்.
கடந்தவாரம் ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’  நிறுவனத்தினால் 2018 ஆம் ஆண்டுக்கான ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டிகள் வெளியாகியிருந்தன. 2017 இலிருந்து 22018 ஆம் ஆண்டுக்கிடையே இலங்கையைப் பொறுத்தவரை எந்தவொரு முன்னேற்றமும் நடைபெறவில்லை. அது தொடர்ந்தும் 38 புள்ளிகளையே  தக்கவைத்துக்கொண்டிருக்கின்றமையை அறிய முடிந்தது. நாடொன்று 0 புள்ளிகளாய்ப் பெற்றால் அது ஊழல்  நிறைந்ததாகவும் 100 புள்ளிகளைப் பெற்றால் ஊழலற்றதாகவும் தீர்மானிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலே இலங்கை 89 ஆவது இடத்தையும் தென்னாசியாவைப் பொறுத்தவரையிலே 3 ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறது.  உலகளாவிய தரப்படுத்தலிலே 25 ஆவது இட த்தைப் பெற்று பூட்டான் தென்னாசியாவிலே முதலாம் இடத்தையும்  78 ஆவது இடத்தைப்  பெற்ற இந்தியா தென்னாசியாவிலே இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறது. 
2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையானது 36 ஆம் இடத்துக்கும் 38 ஆம் இட த்துக்கும் இடையேயே இருந்து வந்த மையை  ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’  நிறுவனத்தின் இலங்கைக் கிளை இங்கு சுட்டிக்காட்டுகிறது.  ஜன நாயகத்துக்கும் ஊழலுக்கு மான தொடர்பையும் அவ்வறிக்கை தெளிவு படுத்த விழைகிறது.
ஒரு சேவையொன்றைப் பெறுவதற்காக வரிசையில் பலர் நிற்கும் போது எமக்கும் சேவை வழங்கு நருக்குமான நல்லுறவைப் பயன்படுத்தி  முதலில் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. அதே போல சேவை வழங்கு நருக்குப் பரிச்சயமான ஒருவரின் சிபாரிசுடன் சென்று சேவையைப்பெறும் பழக்கமும் எம்மில் பலரிடம் உண்டு.  பெறுகைகளின் போது உறவினர்களையும் நண்பர்களையும் விண்ணப்பிக்ச் செய்து தேர்வு செய்யும் திறனும் பொது பெறுகை நடைமுறைகளின்றி தெரிந்தவருக்கே ஒப்பந்தத்தை வழங்கும் செயற்பாடுகளையும் பலர் மேற்கொள்கின்றனர்.  சேவை வழங்கு நரிடம் தாம் நாடிச் சென்ற சேவை பூரணமாக க் கிடைக்கப் பெற்றதும் ‘ சந்தோஷத்துக்காக’ என அன்பளிப்புகளை வழங்கும் சேவை நாடிகளும் இருக்கிறார்கள். இவை யாவுமே ஊழலின் வகைகளே. ஊழல் என்பது குற்றம் என்பதை அறிந்திருந்தும்  கேட்ட தைக் கொடுக்காவிட்டால், அல்லது அது பற்றி முறையிட்டால் தாம் நாடி வந்த சேவை தமக்கு க் கிடைக்காமல் போய்விடுமோ? அல்லது தமக்கு அச்சுறுத்தல் ஏதேனும் உருவாகுமோ என்பதற்காகவே ஊழலை ஊக்குவிப்பவர்களும் இல்லாமல் இல்லை.  இங்கு தான் சமூக அக்கறையும்  நா ன்காவது  இலக்கு தொடர்பில் நான் குறிப்பிட்ட பெறுமாங்கள் சேர் கல்வியும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு நாடு ஊழல் மிக்கதாக இருப்பதற்கும் ஊழலற்றதாக இருப்பதற்கும் ஆட்சி த்துறையின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானது. ஆயினும் நான் ஏலவே குறிப்பிட்து போல ஊழல் எனப்படுவது சங்கிலித்தொடர் போன்றது. அதன் ஒரு இணைப்பையேனும் முறித்து விட்டால் ஊழல் தொடராது போகும். பொதுமக்களாக நாம் இருந்து கொண்டு ஆட்சித்துறையை மாத்திரம்  நாம் குறை கூறிப் பயனில்லை. ஏனெனில் இவ்வூழல் சங்கிலியின் இணைப்புகளில் நாம் ஒவ்வொருவரும் இணைந்திருக்கிறோம். ஏதேனும் ஒரு வகையில் எம்மால் அந்த இணைப்பை அறுத்தெறிய இயலுமானால்


ஊழல் ஒழிப்பு தொடர்பில் எமக்குக் கிடைக்கும் முதல் வெற்றி அதுவே. ஊழலுக்கு அடிமையாகாமல் இருக்கும் அதே வேளை ஊழலை ஊக்குவிக்காமல் இருக்கவும் நாம் உறுதி பூண வேண்டும்.  முயன்று தான் பார்க்கலாமே?

ஆட்சியில்லா அபிவிருத்தி!




இலங்கையிலே ஆட்சி பற்றியும் நல்லாட்சி பற்றியும் அறியாதவர் எவருமிலர் எனலாம். இப்பதங்கள் அவற்றின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தினவா இல்லையா என்ற  வினாக்களுக்கப்பால் அரசுடன் தொடர்புடையவை என்பதில் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையிடமும் விழிப்புணர்வு காணப்படுகிறது.

சட்ட விதிகளை அடிப்படையாக க் கொண்ட சமாதானமும் நிலையான தன்மையும் மனித உரிமைகளும் விளைதிறன் மிக்க  ஆட்சியும்  இல்லாத நாடொன்றில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளில் அடைய முடியும் என எதிர்பார்க்க முடியாது. பொதுவாக பெரும்பாலானஅபிவிருத்தியடைந்துவரும்  நாடுகள் இவ்விடயங்கள் தொடர்பில் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஆதலினால் தான் இத்தகைய நாடுகளில் ஐ. நா வுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள்  சமாதானமும் நல்லிணக்கமும் என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு  அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந் நிலையில் ஆட்சிக்கும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுக்குமான தொடர்புகள் பற்றி நாம் ஆராய முன்னர் சில சொற்பதங்கள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்துகள் பற்றி  அறிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் எனப்படுவது யாதெனில், அது நாடொன்றை கொண்டு நடத்தும், நிர்வாகம் செய்யும் தரப்பினரை அல்லது பிரதி நிதிகளைக் கொண்ட குழுவைக் குறிக்கும் பதமாகும். ஒரு நாட்டின் வலுவானது பிரயோகிக்கப்படுவது இத்தரப்பினூடாகவேயாகும். அவ்வரசாங்கம் ஜன நாயகம் மிக்கதாகவோ அல்லது ஜன நாயகமற்றதாகவோ  இருக்க முடியும். ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் போது அது மீண்டும் மீண்டும் ஆட்சியில்  நிலைத்து நிற்கும்  சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உரிய சட்ட திட்டங்களுக்கமைய, அரசாங்கத்தில் உள்ள பிரதிநிதிகளால் நாடு வழி நடத்தப்பட்டுச் செல்கின்றமையை  ஆட்சி எனப் பொருள் கொள்வர். ஆட்சி என்ற இக்கோட்பாடு அரசாங்கத்துக்கு மட்டும் பொதுவானதல்ல. எந்தவொரு நிறுவனத்திலும் இந்த ஆட்சி என்ற கோட்பாட்டை பிரயோகிக்க இயலும். இக்கருத்தை மிகவும் எளிமைப்படுத்தினால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆட்சி எனப்பொருள் கொள்ளலாம்.  தான் அடைய வேண்டிய இலக்கை சில விதிகளைப் பின்பற்றி சிறந்த பெறுபேறு கிடைக்கும் வகையில் அடைதலே  ஆட்சியின் மிக முக்கிய நோக்கமாகும். இத்தகைய ஆட்சியை மேலும் சில கோட்பாடுகளின் அடிப்படையில் நடத்திச் சென்று இன்னும் சிறப்பான அடைவுகளை அடைதலை நல்லாட்சி என்பர்.

நாம் வாழும் உலகம் பரந்து பட்டது. ஏற்றத்தாழ்வுகள்  நிறைந்தது. சில பிராந்தியங்கள் நிலைத்து நிற்கும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும்  பாதுகாப்பையும் அனுபவிக்கின்றன. மாறாக ஏனைய பிராந்தியங்களோ வன்முறைகளையும் முரண்பாடுகளையும் எதிர் நோக்குகின்றன. வேறு சில பிராந்தியங்களோ வன்முறைகளிலிருந்து மீண்டெழுந்து  நிலைத்து நிற்கும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும் நோக்கி நடை பயில ஆரம்பித்திருக்கின்றன.  ஆதலினால் உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு நாடும் நிலைத்து நிற்கும் சமாதானத்துக்காகவும் சுபிட்சத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளது.

ஆயுத முரண்பாடுகளும் பாதுகாப்பற்ற நிலைமையும் காணப்படும் நாடுகள் அபிவிருத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றமையை  பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இந்த மந்த நிலை பல சந்ததிகளுக்குத் தொடர்ந்த வரலாறுகளும் இவ்வுலகில் இல்லாமலில்லை.

பால்முறை வன்முறைகள், குற்றங்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகள் நிறைந்து காணப்படுகின்றமையானது அந் நாட்டில் இருக்கின்ற சட்ட விதிகள் உறங்கு நிலையிலோ அல்லது சட்ட விதிகள் இல்லாத நிலைமையையோ வெளிப்படுத்துவதாக  ஐ. நா குறிப்பிடுகிறது. ஆதலினால் ஒவ்வொரு நாடும் தனது பிரஜைகளுள் அதிக அபாயத்தை எதிர் நோக்குபவர்களை மிக முக்கியமாக க் கருத்தில் கொண்டு பாதுகாக்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளின் வகி பாகம் வெளிப்படுகிறது.

எல்லா வகையான வன்முறைகளையும் வெகுவாக க் குறைப்ப தையும் அரசாங்கங்களுடனும் சமூகங்களுடனும் இணைந்து வேலை செய்வதன் மூலம் பாதுகாப்பின்மைக்கும்  முரண்பாடுகளுக்கான நிலைத்து நிற்கக் கூடிய தீர்வைக் கண்டு பிடிப்பதனையும்  நோக்காக க் கொண்டு பதினாறாவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கு வகுக்கப்பட்டிருக்கின்றது.  சட்ட விதிகளை வலுப்படுத்தி மனித உரிமைகளை உறுதி செய்யப்பட ஏதுவான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே இப் பதினாறாவது இலக்கை அடைய முடியும்.  அது மட்டுமன்றி இவ்விலக்கை அடைய வேண்டுமாயின் சட்ட விரோத ஆயுதங்களின் நகர்வைக் கட்டுப்படுத்துவதோடு  சர்வதேச  நிறுவனங்களில் ஆட்சியில் அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகளின் பங்களிப்பையும் அதிகரிப்பதாலும் இவ்விலக்கை அடைய இயலும். 

நிலையான அபிவிருத்தி இலக்குகளைப் பொறுத்தவரையிலே ஆட்சியென்பது இரு பொருள் கொள்ளப்படுகிறது.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான செயற்பாடுகளுக்காக, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றை மீளாய்வு செய்வதற்காகத்துணை புரியும் ஆட்சியும் கட்டமைப்புகளின் ஒழுங்கமைப்பையும் குறிப்பது முதலாவதாகும்.  ஒவ்வொரு நாடும்  நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கான தனது உடன்பாட்டை தெரிவித்து மீண்டபோதும் அது எவரோ உருவாக்கிய கோட்பாடு என்று கருதாமல் ஒவ்வொரு இலக்கும் தன்னுடைய நாடும் அடைய வேண்டிய, தனது நாட்டுக்கான இலக்கு என்று கருத வேண்டுமாயின் அவ்விலக்குகளை அடைவதற்கு சாத்தியமான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.  அதற்கு இவ்வகை ஆட்சிக் கோட்பாடு துணை புரிகிறது.

அந்த வகையிலே இலங்கையிலும் சாத்தியமான சூழல் உருவாக்கப்பட்டு மேலும் முன்னேற்றப்பட்டு வருகிறது.  நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கெனத் தனியாக அமைச்சொன்று உருவாக்கப்பட்டது நிலைத்து நிற்கும் அபிவிருத்திச் சட்டம் .  2017 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தினூடு சகல வரிசை   அமைச்சுகளும் திணைக்களங்களும் தமக்கான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடையும் திட் டத்தை வகுக்க வேண்டியமை கட்டாயமாக்கப்பட்டது. நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுடன் இயைந்து செல்லும் வண்ணம் தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்டு வருகின்றன.  தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கினால் வகைக் குறிக்கப்படும்  ஆட்சி எனப்படுவது இரண்டாவதாகும்.  இவ்விரு பொருள் கொள்ளல் களும் கூட  ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளின் அழகும் அதுவே!

ஆட்சி என்ற எண்ணக்கரு  தனியானதொரு இலக்காக க் கொள்ளப்படுகின்ற போதும் அது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகள் ஒவ்வொன்றுடனும் பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகிறது. ஆட்சியின்றி எந்தவொரு இலக்கையும் அடைதல் சாத்தியமன்று. ஏனெனில் நிலைத்து  நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த ஆட்சியால் மாத்திரமே இயலும்.

இவ்வாட்சியானது நல்லாட்சியாக மாத்திரம் இருந்து பயனில்லை. அது விளைதிறன் மிக்கதாகவும் சமத்துவம் மிக்கதாகனும் காணப்பட வேண்டும். நல்லாட்சிக் கோட்பாடினுள் விளைதிறனும் சமத்துவமும் அடக்கப்பட்டிருந்தாலும் அவற்றைத் தனித்தனியாகப் பார்த்தல் தகும் எனக் கருதுகிறேன்.

நல்லாட்சி எனக்கருதுகையில் தீர் மானங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் அவற்றிற்கான சட்ட , நிர்வாக க் கட்டமைப்பையும் அது குறிப்பதாக அமைகிறது. மிலேனியம் வெளிபடுத்துகை தொட்டு சர்வதேச கட்டமைப்புகள், செயற்பாடுகளின் கொள்கைகள், செயற்றிட்டங்கள் யாவற்றிலும்  நல்லாட்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பங்களிப்பு, யாவரையும் உள்ளடக்கும் தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறும் தன்மை, தகவலுக்கான அணுகல் போன்ற பல பெறுமானங்களை இத்  நல்லாட்சிக் கோட்பாடு தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.  ஊழலை ஒழித்தல், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல் , சட்ட விதிகளை மீறாது செயற்படல் என்பனவும் நல்லாட்சிக் கோட்பாடு முக்கியத்துவம் செலுத்தும் விடயங்களாவன.

பதினாறாவது இலக்கானது நல்லாட்சிக்கேகோட்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  அபிவிருத்திக்கான நிதி வழங்கலில் நல்லாட்சிக்கோட்பாட்டைப் பின்பற்றலென்பது  என்பது ஒரு நிபந்தனையாகவே முன்வைக்கப்படுகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்  இக்கோட்பாட்டை தாமாகவே நடைமுறைப்படுத்துவதில் பல இடர்பாடுகளையும் நிதி நெருக்கடிகளையும் எதிர் நோக்குவதால் இத்தகைய நிபந்தனைகள் நன்மை பயப்பனவாகவும் அமைந்து வித் தவறுவதில்லை.

விளை திறன் மிக்க ஆட்சியென்பது  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை மிக்க  அரசாங்கங்களை உருவாக்குவதுடன் தொடர்புபட்டதாகும்.   அரசாங்கத்தில் உள்ள கட்டமைப்புகளின் இயலளவு, தொழில் நுட்பம், சிறப்புத்தேர்ச்சி, நிதி வளங்கள் ஆகியவற்றுடனும்  நீண்ட காலத்திட்டமிடலுடன் இணைந்து ஒன்றுடனொன்று தொடர்பு பட்ட பிரச்சினைகளைக் கையாளும் வல்லமையுடனும் தொடர்பு பட்டதே  விளைதிறன் மிக்க ஆட்சியாகும். மாறாக பலரும் கருதுவது போல் வெறுமனே சட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றும் ஆட்சி விளைதிறன் மிக்க ஆட்சியாகாது. அதேவேளை எந்தவொரு கட்டத்திலும் ஆட்சியானது  சட்ட விதிகளை மீறாமல் இருக்கின்றமை உறுதி செய்யப்பட வேண்டும்.

சமத்துவமான ஆட்சியென்பது  பரந்துபட்ட விளைவுகளையும் வறுமைக் கோட்டுக்கு க் கீழ்ப்பட்டவர்கள் தொட்டு ஒதுக்கப்பட்டவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான பராமரிப்புகளையும் கருத்தில் கொண்டதாகும். அல்லாவிடில் ஆட்சி எத்துணை நல்லதாக இருந்தாலும் விளைதிறன் மிக்கதாக இருந்தாலும் பயனற்றுப் போனதொன்றாகவே அதனைக் கருத முடியும்.  நாடளாவிய ரீதியிலே முடிவுகளை மேற்கொள்வதற்கும்  சமத்துவத்தின் தேவை மிகுந்த இவ்வுலகிலே உலகளாவிய ரீதியில் முடிவுகளை மேற்கொள்வதற்கும்  சமூகங்கள் மத்தியிலே செல்வமும் வளங்களும் சந்தர்ப்பங்களும் பரம்பிக் காணப்படுவதற்கும் இச் சமத்துவமான ஆட்சி உறுதுணை புரியும்.  இம்மூவகை ஆட்சிக் கோட்பாடுகளும் ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை மட்டுமன்றி நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுடனும் பின்னிப் பிணைந்தவை.  ஒவ்வொரு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதிலும் ஆட்சியின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளாவிடில் அவ்விலக்குகளை அடைவதற்கான பங்களிப்பை எம்மால் மேற்கொள்ள இயலாது போய்விடும்.

இங்கு ஆட்சியை நடத்துபவையாக சட்டவாக்கத்தை மேற்கொள்ளும் நிறுவங்களையும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களையும் கருதமுடியும். உங்கள் அருகிலிள்ள ஒவ்வொரு அரச திணைக்களமும் அமைச்சும் உள்ளூராட்சி  உட்பட்ட அதிகார சபைகளும் கூட மேற்குறிப்பிடப்பட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களேயன்றி  வெறுமனே அதிகாரத்தைப் பிரயோகிக்கும் நிறுவனங்களல்ல. குறிப்பாக அரச நிர்வாக இயந்திரத்தின் பங்காளிகளான இந்த நிறுவனங்கள் என்ன அடிப்படையில் இயங்குகின்றன என்பது பற்றிய தெளிவு எம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது!

Monday, January 7, 2019

பசுமைப்பந்து இயக்கம்: சொல்லிய வண்ணம் செயல்!



அண்மையில் இலங்கை விமானப்படையினரால் இலங்கையிலேயே முதன் முறையாக மீள்காடாக்கத்தைக் கருத்தில் கொண்டு விதைப்பந்துகள்  வீசப்பட்டமை பற்றி ஊடகங்களிலே அறிந்திருப்பீர்கள். மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் , பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை விமானப்படை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ஏறத்தாழ 5000 விதைப்பந்துகளை வடமத்தியமாகாணத்தின் நொச்சியாகம பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலே வீசின. இலங்கை விமானப்படையின் ஊடகப்பிரிவின் தகவலுக்கமைய இலங்கையின் வனப்பகுதிகளின் சதவீதத்தை  அதிகரிக்கும் நோக்கிலேயே இச் செயற்றிட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  அவ்விதைப்பந்துகளைத் தயாரித்து வீசும் நல்லெண்ணத்தை விதைத்த முன்னோடியாகத் திகழ்பவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.
சில வாரங்களுக்கு முன்னர் முக நூலிலே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சூழலிலியல் தொடர்பான கற்கை நெறியொன்றின் செயன்முறைக் கையேட்டை எதேச்சையாகக் காணக்கிடைத்தது. அதில் விதைப்பந்து தயாரிப்பும் ஒரு செயன்முறையாக க் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பின் பாடத்திட்டங்களிலே நடை முறை விடயங்களை உள்ளடக்கியதான செயன்முறைகளை அரிதாக க் காணும் சூழலே இலங்கையில் நிலவுகிறது. இந் நிலையில் காலத்தின் தேவையை ஒட்டியதாக மிகவும் பயன்மிக்கதான ஒரு செயன்முறை  பல்கலைக்கழக மாணவர் மத்தியில்   அக்கையேட்டினூடு அறிமுகம் செய்யப்பட்டிருந்தமையைக் கண்டு அது பற்றி மேலும் தேடியபோது விதைப்பந்துகள் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இவ்விதைப்பந்துகளை வீசும் பாரம்பரியம் கிரேக்க காலத்திலேய பின்பற்றப்பட்டிருந்தது . ஆயினும் நவீன உலகிலே ஜப்பானில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக இந்தியாவிலும் தாய்லாந்திலும் கூட இவ்விதைப்பந்துகளை வீசி மரம் நடும் முறைமைகள் மிகவும் பிரபலமானவை. இயற்கை முறைமைகள், சூழலைப்பாதுகாக் க க் கூடிய வாழ்க்கை முறைமைகள் என வேறொறு பரிணாமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சமூகங்கள் மத்தியிலே இவ்விதைப்பந்துகள் பிரபலமானவை.  மீள் காடாக்கல் எனவோ அல்லது மர நடுகை எனவோ மரங்களை நட்டு வளர்த்தல் போல பாதுகாப்பான வகையில் விதைகளை நடுகை செய்து எறிவதன் மூலம் மரங்களை வளர்க்கும் முறைமையே ‘விதைப்பந்து எறிதல்’ என அழைக்கப்படுகிறது. அத்தகையதோர் முறைமையை இலங்கையில் அதுவும் குறிப்பாக இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகம் செய்த பெருமை சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடை ச்  சாரும்.

இவ்விதைப்பந்துகள் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலுடன்  அவரைத் தொடர்புகொண்டபோது இந்த நற்செயற்றிட்டம் கருக்கொண்ட விதம் தொட்டு அதன் வெற்றிப்பாதை, எதிர்காலம், நிலைத்திருக்கும் தன்மை வரை தெளிவாக விளக்கியிருந்தார்.  1990-2005 வரையான 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் மொத்த வனப்பகுதி 17.74 சதவீதத்தால்  குறைவடைந்திருக்கிறது. அதே 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் முதன்மைக் காடுகள் 35.02 சதவீத த்தால் குறைவடைந்திருக்கின்றன. பெருந்தோட்டங்களோ  12.81 சதவீத்தால் குறைவடைந்திருக்கின்றன. இத்தரவுகள் யாவும் செயற்கைக்கோள்களின் உதவியுடன் உலகளாவிய ரீதியிலே  பேணப்பட்டு இணைய வெளியிலே வெளியிடப்பட்டவையாகும்.  இலங்கையின் காடுகளைப் பொறுத்த வரையிலே அவை பெரும் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கி வருகின்றன. இத்தகையதோர்  நிலையில் காடழிப்பினால் நாமும் எமது எதிர் கால சந்தியும் எதிர் நோக்கி வரும், எதிர் நோக்கவுள்ள ஆபத்துகளை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டுமாயின் மீள்காடாக்கலும் மரங்களை மீள் நடுகை செய்தலும் அத்தியாவசியமானவை.   

இத்தகையோர் வருத்தமிகு சூழலில் தான் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின் எண்ணத்திலும் விதைப்பந்துகள் பற்றிய எண்ணக்கரு உருவானது. ஆரம்பத்திலே அவர் விதைப்பந்துகள், அவற்றின் தயாரிப்பு, பயன் பாடு தொடர்பிலான சகல விபரங்களையும் திரட்டினார். பின்னர் விதைப்பந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தயாரித்த விதைப்பந்துகளைப் பரீட்சார்த்தமாக பல்கலைக் கழக வளாகத்திலேயே வீசி விதைப்பந்துகளின் தாங்கும் திறன், விதைகளின் முளைதிறனையும் பரீட்சித்தார். புளி, வேம்புபோன்ற மரங்களின் விதைகளைக் கொண்டு பத்து பத்து விதைப்பந்துகளைத்தயாரித்து வீசி,  மழை போன்ற தோற்றப்பாடை செயற்கையாக உருவாக்கி அவதானித்தார். விதைகள் முளைக்கத்தொடங்கின. வீசியெறிந்தவற்றுள் ஏறத்தாழ 90 சதவீதமானவை முளைத்தன. ஆதலினால் இச் செயற்பாட்டை பாரியளவிலே பிரதி பண்ண இயலும் என்றதோர் உறுதியான முடிவுக்கு வந்தார். விதை சேகரிப்பிலிருந்து  விதைப்பந்துகளை வீசியெறிதல் வரை இச் செயற்பாட்டின் ஒவ்வொரு அங்கமும் தவறி முயல்தலாலும் அனுபவத்தினாலுமே மேம்பட்டு வெற்றியளித்தன எனக் குறிப்பிடுகிறார் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட். 

இலங்கை சிறியதொரு தீவாக க் காணப்படுகின்ற போதும் பிராந்தியங்களின் கால நிலை, மண்வளம்,  நீர் வளம் என்பவற்றுக்கிணங்க அதன் தாவரப்பரம்பல்கள்  வெகுவாக வேறுபடுவதுடன் பல்வகைமையில் செறிந்தும் காணப்படுகின்றன. இலங்கையிலே அதிகளவு பரப்பளவிலான முதன்மைக் காடுகளைக் கொண்ட மாகாணமாக வடபகுதி  திகழ்கின்றது என்பதிலும் எதுவித ஐயமுமில்லை. ஆயினும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அனுசரணையுடன் மீள்காடாக்கல் நடை பெறும் போது மிகச் சில தாவர இனங்களே பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் அவை மீள்காடாக்கல் நடைபெறும் பிராந்தியத்திலே இயற்கையாக வளரக்கூடிய தாவர இனங்களாகக் காணப்படுவதில்லை. அப்பிராந்தியங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் தாவர இனங்களாகவே காணப்படுகின்றன. அத்தகைய தாவர இனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றமைக்குப் பல நியாயமான காரணங்களும் இல்லாமலில்லை. அவற்றின் அரிமரப் பயன்பாடு, தாக்குபிடிக்கும் இயல்பு, துரிதமாக வளரும் தன்மை , முதிர்ச்சிக்காலம் போன்ற பல காரணங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

ஆயினும் இளமைக்காலங்களில்  நாம் காணும் இடங்க ளிலெல்லாம் நின்ற பல காட்டுமரங்களை இப்போது நாம் காண்பது அரிதாகிவிட்டது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிராமங்களிலே காலத்துக்கு க் காலம் ஏதாவதொரு காட்டுப்பழமேனும் எம் கைகளுக்கு கிடைத்து விடும். அவை ஈச்சம்பழம், நாவற்பழம், ஏன்  பாலைப்பழமாக்ககூட இருக்கும். இன்று பல குழந்தைகள் இப்பழங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க க் கூட மாட்டார்கள்.

 இலங்கையின் பல பகுதிகளிலே  மரங்களின் பெயர்கள், நீர் நிலைகளின் வடிவங்கள் போன்ற இயற்கையின் தோற்றப்பாடுகளை இணைத்ததாகவே ஊர்களின் பெயர்கள் காணப்படும். உதாரணமாக தேத்தாத்தீவு, இலுப்பைக்குளம், கருவல கஸ் வெவ போன்ற ஊர்களின் பெயரைக் குறிப்பிடலாம். அவை மரங்களின் பெயர்கள் என்பதைக் கூட அறியாத சந்ததியாக நாம் வாழும் காலமிது.

இத்தகையதோர் சூழலிலே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்  அணுகுமுறையானது நிலைத்திருக்க க் கூடிய எதிர்காலமொன்றை இலங்கையில்  தோற்றுவிக்க வல்லதாகவே எனது பார்வையில் தென்படுகிறது. முதலாவது விடயம் விதைப்பந்துகள் தயாரிக்கும் செயன்முறைபோன்றவற்றை அவர்  விஞ்ஞான பீடத்தின்  பாடத்திட்டத்திலே உள்ளடக்கியமையாகும். இது உரிய பாடத்தைக் கற்கும் சகல மாணவர்களுக்கும் கட்டாயமானதாகையால் அவர்களின் பங்கு பற்றலை உறுதி செய்யும். சாதாரணமாக உயிரியல், பௌதிக விஞ்ஞானப் பட்டதாரிகளாகி மாணவர்கள் பல்கலைக்கழகத்தை  வெளியேறிய பின்னர் தாம் கற்ற விடயங்களையும் கோட்பாடுகளையும் எங்ஙனம் நடைமுறை வாழ்க்கையிலே பிரயோகிப்பதென்ற ஐயம் மாணவர்களுக்கு எழும். இத்தகைய நடைமுறை விடயங்கள் கற்பிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்படும் போது அவர்களால் பட்டக்கல்விக்குப்பின்னரான வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள இயலும். நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுள்  நான்காவதான ‘தரமான கல்வி’ எனும் இலக்கின் மூன்றாம் , ஏழாம் அடைவுகளை அடவதற்கு வழி வகுக்கும்.

இரண்டாவதாக விதைகள் சேகரிப்பு தொடர்பிலான அவரது அணுகு முறை பற்றியும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.  அவர் கற்பிக்கும் பிரயோக விஞ் ஞான பீடத்திலே பெரும்பாலான மாணவர்கள் சிங்கள் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அத்துடன் பெரும்பாண்மையானோர் பெண்பிள்ளைகளுமாவர். அம்மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலாந்த அழகியற் கற்கை நிறுவனத்தின் மாணவர்களுக்கும் விடுமுறைக்கு வீடு செல்லும் போது விதைகளைச் சேகரித்துவரும் பொறுப்பு  வழங்கப்பட்டது. தற்போது காண்பதற்கு அரிதான மரங்களைப் பற்றி தத்தமது பெற்றோரிடமும் ஊரிலுள்ள முதியவர்களிடமும் கேட்டறிந்து அவற்றின் விதைகளைச் சேகரித்து அவற்றின் விபரம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தையும் பூர்த்தி செய்துகொண்டு கொண்டு வருதலே அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். அவ்வாறு காண்பதற்கு அரிதாகிக்கொண்டு வரும் மரங்களின் விதைகளைக் கொண்டு விதைப்பந்துகளைத் தயாரித்து அம்மரங்களின் பரம்பலை அதிகரிப்பதோடு மட்டுமன்றி வனப்பகுதிகளைப் பெருக்கி காட்டு விலங்கிங்களின் வாழிடத்தையும் விஸ்தரித்து அவற்றின்  நிலைப்பை உறுதி செய்தலே  இச்செயற்பாட்டின் நோக்கமாகும்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளிலே பதினைந்தாவதான ‘நிலம் மீதான வாழ்வு’ எனும் இலக்கின் இரண்டாம், ஐந்தாம், எட்டாம் இலக்குகளை இலங்கை அடைவதில் இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும்.
 

சிறு துளி பெரு வெள்ளமென்பர்.மாணவர்கள் விடுமுறை கழிந்து பல்கலைக்கழகம் திரும்பிய போது கொண்டு வந்த இலட்சக்கணக்கிலான விதைகள் அப்பழமொழியின் தார்ப்பரியத்தை  விளக்கின. ஏறத்தாழ 130 பாரம்பரிய இனத் தாவரங்களின் விதைப் புதையலே கிடைக்கப்பெற்றது எனலாம். இளைஞர்களின் சக்தி அளப்பரியது  என்ற விவேகாந்தரின் கூற்றின் பின்னாலிருந்த தீர்க்க தரிசனம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.  ஒய்வு நேரங்களிலும் வார விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் இணைந்து விதைப்பந்துகளை உருவாக்கினர்.  விதைப்பந்துகளைப் பக்குவமாக உருவாக்குவதில் பெண்பிள்ளைகளின் பங்களிப்பு அதிகமாக இருந்து எனலாம்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளில் ஐந்தாவதான ‘பால் நிலை சமத்துவம்’ என்ற இலக்கின் ஐந்தாம், எட்டாம் அடைவுகளை அடைவதற்கு இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும். 


வனப் பாதுகாப்புத் திணைக்களமும் வன விலங்குகள் திணைக்களமும் கூட கை கோர்த்தன.  மாணவரின் சக்தியும் நல்லாசானின் வழிகாட்டலும் தற்போது  பிராந்திய ரீதியிலான பசுமைப்பந்து இயக்கமாக உருவெடுத்துள்ளது.

பெயரும் புகழும் தேவையில்லை. இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் கைங்கரியம் யார் குற்றியேனும் அரிசியாகட்டும் என்பதே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்   சிந்தனையாக இருக்கிறது,  அவரது  நல்லணுகுமுறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பலர் தாம் வாழும் பிராந்தியங்களிலெல்லாம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனித்து வருகின்றனர். இப்பசுமைப்பந்து இயக்கத்தை தேசிய ரீதியிலே முன்னெடுத்து இயற்கை அன்னையைக் காக்கும் நல்லெண்ணத்தை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் கடத்துவதே தன் கனவு எனக்கூறி

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்  என்ற வள்ளுவன் வாக்கை  நிரூபிக்கிறார்
சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.

கல்வியின் வீரியம் பல மடங்குகளாய்ப் பெருகும் என்பதற்கும் மாற்றமொன்றை உருவாக்க, நாம் வாழும் வாழ்வை மாற்ற முயற்சிக்க உயர்கல்வி நிறுவன ங்களால் எத்தகைய பங்களிப்பைச் செய்ய இயலும் என்பதற்கும் இலவசமாக, மக்களின் வரிப்பணத்திலே இலங்கையில் நாம் கற்ற கல்வியை எங் ஙனம் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கும் இம்முயற்சி சிறந்தோர் உதாரணமாகும். இப்பசுமைப்பந்து இயக்கத்தின் பாதையில் நடந்து எம் வனங்களின் தலையெழுத்தையும் மாற்றிப் பார்ப்போமே?

சாணேற முழம் சறுக்கியதோ?


அண்மையில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட சுட்டி ஒன்று தொடர்பில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. அச்சுட்டி வேறெதுவுமல்ல. ‘ஜேர்மன் வொச்’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான  நீண்டகால கால நிலை அபாயச்சுட்டியேயாகும்.  1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 20 வருட காலப்பகுதியில் வெள்ளம், வரட்சி, புயல் போன்ற வானிலை சார் பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளின் பாதிப்பின் அடிப்படையில் இச்சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற கால நிலை உச்சி மா நாட்டிலே வெளியிடப்பட்ட உலகளாவிய கால நிலை அபாயச்சுட்டி 2019 என்ற அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இச்சுட்டி தொடர்பில் நான்காம் இட த்தை வகித்த இலங்கை 2019 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இது ஒரு முன்னேற்றத்துக்கான அறிகுறியன்று. இலங்கையின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துச் செல்வதற்கான அபாய அறிகுறியேயாகும். கால நிலைக்கும்.

அதிகூடிய வெப்பமும் எதிர்பாரா மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் என இலங்கை தொடர்ந்து பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந் நிலைமை தவிர்க்கமுடியாததாகி விட்டமையையும் உணர முடிகிறது.

கால நிலை மாற்றத்தை மனிதன் கையாளத்தவறும் ஒவ்வொரு கணமும் குறிப்பாக சிறுதீவுகளாக க் காணப்படும் நாடுகளின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்த வண்ணமே செல்கிறது.  உலகளாவிய சராசரி வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க இந்த மோசமான நிலைமைகள் உருவாகும் நிகழ்தகவும் அதிகரித்துச் செல்வதாக எதிர்வு கூறப்படுகிறது. ஆயினும் சில வானிலை நிகழ்வுகளுக்கும் கால நிலை மாற்றத்துக்குமான தொடர்புகளை இன்னும் விஞ் ஞான ரீதியாக உறுதி செய்ய முடியவில்லை. புவிக்கோளத்தின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க சில வானிலை நிகழ்வுகளின் மீடிறனும் செறிவும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் செல்கின்றமையை மட்டும் விஞ்ஞானத்தால்அவதானிக்க முடிகிறது.

அது மட்டுமன்றி ஒரு தனிப்பட்ட வானிலை நிகழ்விலே கால நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்டறிதலானது மிகவும் சிக்கலானதாகும். வேறுபட்ட பிராந்தியங்களில் நிலைமைகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. அவை தொடர்பான நீண்டகாலத்தரவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக க் காணப்படுகின்றன. கடந்த சிலகாலமாக  திடீரெனெ நிகழும் அதி தீவிர வானிலை  நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருவதும் உண்மையே. 

கால நிலை மாதிரிகளை உருவாக்கிப் பரீட்சித்து இத்தகைய அதீதமான வானிலை நிகழ்வுகளை எதிர்வு கூறுவதும் அவை   இடம்பெற்ற பின்னர் அவற்றுடன் ஒப்பிட்டு கால நிலை மாதிரிகளை மேலும் செம்மைப்படுத்துவதும் உலகளாவிய ரீதியிலே நடைபெற்ற வண்ணம் உள்ளன.  நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வானிலை அறிக்கைகள், அவற்றின் விவரணம் கூட இத்தகைய கால நிலை மாதிரிகள் எதிர்வு கூறுபவற்றை அடிப்படையாக க் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.  இத்தகைய கால நிலை மாதிரிகள் மூலம் புவி வெப்பமயமாதலினால் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் வெப்ப நிலை நீர்ச் சக்கரத்தை மேலும் செறிவுற்றதாக மாற்ற வல்லது. ஆதலினால் அதிகளவிலான ஆவியாதல் நடை பெற்று அதீத வரட்சியும் அவ்வாவியாதலுக்கேற்ற அதீத வீழ்படிவினால் பெரு வெள்ளங்களும் ஏற்படுகின்றமை சகஜமாகி விட்டது.வளி மண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படுவதையும் பல சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது.  இலங்கையில் நாம் அதிகளவில் கேள்விப்படும் சொற்களாக மாறிவிட்ட வெள்ள நிவாரணத்தையும் வரட்சி நிவாரணத்தையும் இக்கணத்தில் எண்ணிப்பார்க்க முடிகிறது. 

இவை யாவுமே வானிலை நிகழ்வுகள் நடை பெறும் நிகழ்தகவுகளை தினம் தினம் மாற்றிய வண்ணமே செல்கின்றன . 2016 ஆம் ஆண்டு  நிகழ்ந்த அதீத வானிலை நிகழ்வுகளை கால நிலை மாற்றத்தின் பார்வையில் அவதானித்து புதிய அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றம் என்பது மனிதனது செயற்பாடுகளின் விளைவே என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆக இந்த அதீத வானிலை நிகழ்வுகளுக்கும் மனிதனே காரணியாகிறான்.  அதீத வானிலை நிகழ்வுகளின் உருவாக்கம் கால நிலை மாற்றமன்றி சாத்தியமற்றது என்கிறது அவ்வறிக்கை.

உலகளாவிய கால நிலை அபாயச் சுட்டி அறிக்கை 2019 இன் அடிப்படையில், அதீத மழை வீழ்ச்சியென்பது தவிர்க்க முடியாததோர் நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாகிறது. தென்னாசிய, தென் கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்ட வானிலைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்பாராத அதீத மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளம், சரிவும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் தெளிவாக அறிக்கையிடப்பட்டிருக்கின்றன. இங் ஙனம் தனித்தனி அதீத மழை வீழ்ச்சியின் நிகழ்வு தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் காணப்படும் எனத் தெளிவாக எதிர்வு கூறப்படுகிறது.

ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆறுகள் பெருக்கெடுக்கின்றமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் ஏற்படும் பல பில்லியன் டொலர் சொத்தழிவும் வருடாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.   

எத்தகைய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கால நிலை மாற்றம் இத்தகைய அதீத வானிலை நிகழ்வுகளை உருவாக்குகிறது என்பதை அறியமுடியாதளவு இந் நிலைமை கற்பதற்குச் சிக்கலானது.

கடந்த வாரத்திலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகி வரும் வன்னி நிலப்பரப்பும் இத்தகையதோர் தோற்றப்பாட்டுக்கான உதாரணமாகும். திடீர் பேரனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றமையில் பல காரணிகள் தாக்கம்  செலுத்துகின்றன. போதுமான தயார்படுத்தலின்மை தொட்டு வறுமை போன்ற பாதிக்கப்படும் தன்மை, கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாத அபிவிருத்திச் செயற்பாடுகள் என அக்காரணிகள் இரு வெவ்வேறு அந்தங்கள் வரை வேறுபடுகின்றன. இயற்கையும் இரங்காத நிலையில் சாணேற முழம் சறுக்கிய கதையாக வன்னி மண் தொடர்ந்து அழிவுகளைப் பார்த்த வண்ணமே உள்ளது. 

தொடர்ந்து பெய்த செறிவான மழையாலும் வான் பாய்ந்த குளங்களாலும் கதிர் வந்த பருவத்தில் காணப்பட்ட  நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமான வயற்கானிகளை மூடி வெள்ளம் பாய்ந்தது. தொடர்மழைக்கு முன்னரே வளிமண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்தமையால் உருவாகிய நோய்களுக்கும் பீடைகளுக்குமாக 3 சதவீத மாதாந்த வட்டிக்கு கிருமி நாசினிகளைக் கொள்வனவு செய்து பிரயோகித்த விவசாயிகளையும் காண முடிந்தது. வட பகுதியிலே அதிகளவில் காணப்படுகின்றன என விமர்சிக்கப்பட்ட குறு நிதி நிறுவனங்களையும் தாண்டி இக்கிருமி நாசினி வியாபாரங்களும் கடன் விற்பனை மூலம் விவசாயிகளைச் சுரண்டும்   உத்தியைப் பயன்படுத்துகின்றமையைக் கண்கூடாகக் காண முடிந்தது. தனியார் வங்கிகள் ஒன்றும் சளைத்தவை அல்லவே. 1.5 சத வீத மாத வட்டி எனும் கவர்ச்சிகர விளம்பரத்துடன் விவசாயிகளைத் தேர்வு செய்து விவசாயக் கடன் எனும் பெயரில் வர்த்தக க் கடனை அவர்கள் பெற்றுகொள்ள ஆவன செய்கின்றமையும் கூடக் காண முடிந்தது. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ என்டர்பிறைஸ் லங்கா’ இலகு கடன் கொடுப்பனவுகள் பற்றி விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தி அவற்றை ஊக்குவிக்கும் சூழல் வன்னியின் விவசாயி- வங்கி உறவிலே காணப்படாத நிலைமையையும் உணர முடிந்தது. நடந்து முடிந்த அரசியல் குழப்பங்களும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களும் இத் தனியார் வங்கிகளின் நியாயப்படுத்தல்களாகின.  10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகள் ஆக க் குறைந்த மாதாந்த வட்டியாகிய 3 சதவீத வட்டியில கடனைப் பெற்றும் கடன் கொள்வனவை மேற்கொண்டும்  நகைகளை அடகு வைத்தும் தமது உழைப்புடன் சேர்த்து வயலிலே மேற்கொண்ட இலட்ச ரூபா பெறுமதியான முதலீடு ஒற்றை வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 

ஒவ்வொரு போகத்தின் போதும் காப்புறுதி செய்தல்  எனப்படுவது தேவையற்றதோர் செலவு என்ற கருத்தையே வன்னிப்பெரு நிலப்பரப்பின்  பெரும்பாலான பெரு விவசாயிகள்  அனேகர் கொண்டிருக்கின்றனர்.  இம்முறை பாரிய இழப்புகளைச் ச்சந்தித்திருக்கும் பெரு விவசாயிகளுள் பெரும்பாலானோர் தாம் விதைத்த நிலங்களுள் 10 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வீஸ்தீரணத்துக்கு காப்புறுதி செய்யாமல் விட்ட நிலைமையே காணப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஏக்கர் வயலுக்கு குறைந்த வட்டியுடனான விவசாயக்கடன்  அரசினால் வழங்கப்படுவதால் அதற்கு காப்புறுதி செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றத்தாலும் அதீத வானிலை நிகழ்வுகளாலும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இலங்கையிலே காப்புறுதியின் அவசியம் பற்றிய தெளிவு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை  இலங்கையின் விவசாயக் காப்புறுதிக்கான சேத மதிப்பீடு தொடர்பில் காணப்படும் சிக்கலான, நீண்ட நேரமெடுக்கும்  முறைமைகள் இலகு படுத்தப்பட வேண்டும். அண்மையில் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் விளம்பரம் ஒன்றை வவுனியா  நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் திரையிலே காணக்கிடைத்தது. ‘ட்ரோன்’  எனப்படும் சிறு வலவன் ஏவா வான ஊர்திகளைக்கொண்டு பெறப்படும் வான் புகைப்படங்களைக் கொண்டும்  அகச்சிவப்பு படங்களைக்கொண்டும் சேத விபரம், அவற்றின் விஸ்தீரணம், அகலாங்கு, நெட்டாங்கு ஆள்கூறுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கணித்து விவசாயக் காப்புறுதி வழங்கும் முறைமை இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமையை அவ்விளம்பரத்தினூடாக அறிய முடிந்தது.

உலகளாவிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது பசளை மானியத்தை விட கட்டாயக் காப்புறுதி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதெனலாம். இதில் அரசின் தலையீடு நிச்சயமாக அவசியமாகிறது. பெரு வெள்ளத்தால்  ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் பாரிய பொறுப்பு அரசையே சார்ந்ததாகி விடும். அச்செலவுடன் ஒப்பிடுகையில் கட்டாயக் காப்புறுதிக்காக அரசினால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு குறைவானதாகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். அல்லாவிடில் திடீர் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளும் மொத்த உள் நாட்டு உற்பத்தி, சமூகச் சுட்டிகளில் ஏற்படும் மாற்றமும் ஈடு செய்ய முடியாதனவாகிவிடுவன.

முன்னைய தசாப்தங்களைப் போலல்லாது வானிலையை ஒரளவு துல்லியமாக எதிர்வு கூறும் கால நிலை மாதிரிகள் புழக்கத்தில் வந்து விட்டன. விவசாயத்தை அடிப்படையாக க் கொண்ட பல நாடுகள் அம்மாதிரிகளை அடிப்படையாக க் கொண்டு விவசாயிகளின் பயிர் நாட்காட்டித் தரவுகளையும் இணைத்து வழிகாட்டும் செயலிகளை உருவாக்கி விவசாயிகளின் பயன்பாட்டுக்கென இலவசமாக வெளியிட்டிருக்கின் றன. 

ஆனால் வன்னியிலே இவ்வானிலை எதிர்வுகூறலில் நம்பிக்கை வைத்து, அதனைக் கருத்தில் கொண்டு தொழிற்படும் விவசாய சமூகத்தைக் காண்பது அரிதாகவே இருக்கிறது.வயல் நிலத்தின் மீது  இலட்சக் கணக்கிலான முதலீட்டை மேற்கொள்ள முன்னர் சிந்தித்துச் செயற்பட இவ்வெதிர்வுகூறல்கள் நிச்சயமாக விவசாயிக்கு உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  கால நிலை மாதிரிகளை ஒட்டி, விவசாயிகளுக்குப் பயன்படும் வகையிலான செயலிகள் பல அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  தகவல் தொழில்  நுட்ப விழிப்புணர்வை யாழ் மண்ணின் இளையோர் மத்தியில் பரப்பி வரும் ‘சுடர்’, ‘ஊக்கி’ போன்ற செயற்பாட்டு அமைப்புகள் இத்தகைய சமூகப் பொறுப்புள்ள செயற்பாடுகளில் இளையோரை ஈடுபடுத்த முன் வர வேண்டும்.

அரச இயந்திரங்களும் தம் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கால நிலை மாற்றத்தையும் அதீத வானிலை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்குத் தாக்குப்பிடிக்க க் கூடிய வகையிலே அவற்றை மேற்கொள்ளவேண்டும். மேலிருந்து கீழான கட்டளை நடைமுறைகளாலும்  மட்டுப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீடுகளாலும் இற்றைவரைப்படுத்தப்படாத திறன் விருத்தியாலும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை செவ்வனே நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கலாம். அரச தொழில் என்பது சவால்கள் நிறைந்ததே. களத்தின் நிலைமையை உயர் மட்டத்துக்கு  எடுத்துச் சொல்லி தேவைக்கேற்ற அபிவிருத்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதென்பது ஒவ்வொரு அரச ஊழியனதும் பொறுப்பாகும். இன்றேல் யாவருக்குமான அபிவிருத்தி என்பதும் , நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பதும் வெறும் வாய்ச்சொற்களாக காற்றிலே பறந்துவிடுவன. 

வீடு தொட்டு வீதி வரை சகல கட்டுமானங்களும்  காலநிலை மாற்றத்தையும் அதீத  வானிலை நிகழ்வுகளையும் தாக்குப் பிடிக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.  கட்டுமான வேலைகளில் ஈடுபடும் சகலதரப்பினரும் இத்தகைய தாங்குதிறன் மிகு கட்டுமானம் தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாண நகரையும் அதை அண்டிய பகுதிகளிலும்  காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட மழை  நீர் வடிகால்களின் அகலம், ஆழத்துடன் தற்காலத்தில் அமைக்கப்படும் அத்தகைய வடிகால்களின் அகலத்தையும் ஆழத்தையும் ஒப்பிட்டு நோக்கினால் தீர்க்கதரிசனம் மிகு அபிவிருத்தியின் தேவையையும் நிலையையும் உங்களால் உணர முடியும்.  

வடக்கின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் இன்றைய   நிலை எம் மத்தியில்  சிக்கலான பல வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பாரிய பொறுப்பை முன் வைத்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்து இயங்கினால் மாத்திரமே அவ்விடைகளுக்கான தேடல்களை எம்மால் ஆரம்பிக்க முடியும்!

கால நிலை மாற்றம் விதித்த சாபத்திலிருந்து இவ்வழகிய தீவை மீட்கும் பாரிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் கையிலுமே தங்கியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்திலேயே நாம் உயர் கல்வி வரை இலவசமாகக் கற்கிறோம்.  ஓரிரு வருடங்களேனும் நாம் கற்ற கல்வியை எம் தாய் நாட்டிலேயே பிரயோகித்தால் எதற்கும் சளைக்காத உறுதியான தேசமாக இலங்கையும் மாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.