Showing posts with label பாரம்பரியம். Show all posts
Showing posts with label பாரம்பரியம். Show all posts

Monday, December 5, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் - 09


பராமரிப்பும் கவனிப்பும் இல்லாமல்
 அழிந்து போன வீடுகள் அதிகம்



யாழ்ப்பாணத்தின் வேலி மாதிரிகள், கடந்த கால நினைவுகளை மீட்க உதவின என்றால் மிகையில்லை. அடுத்த தொகுதி புகைப்படங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்திலே தொட்டக் காலத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளின் மின் பிரதிகள் அச்சிடப்பட்டு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. இந்து சாதனம் தொட்டு எண்ணற்ற பத்திரிகைப் பிரதிகளைக் காண ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இது ஊடகத்துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாய் அமைந்திருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இன்று கணினி இருப்பதால் உள்ளத்தில் நினைப்பதைத் தத் ரூபமாக வடிவமைக்க முடியும். பத்திரிகையின் பக்கம் தயாராகி விடும். தேவையானால் சேர்க்கலாம். வேண்டாவிட்டால் நீக்கலாம். ஆனால் அச்சுக்கலை தொடக்கப்பட்ட காலம் தொட்டு அத்துறையில் கணினிகள் அறிமுகமாகும் வரை நினைத்தபடி மாற்றும் வடிவமைப்புகள் சாத்தியம் குறைந்தனவாகவே இருந்தன.
அத்தகைய காலங்களிலும் கூட உடனடிச் செய்திகளைத் தாங்கி வெளிவந்த அந்தப் பத்திரிகைகளைப் பார்க்க கிடைத்ததே ஒரு கொடுப்பினை என்று தான் கூற வேண்டும். அந்தந்தக் காலத்து மொழி நடை, பக்க வடிவமைப்பு நுட்பங்கள், செய்திகளின் தன்மைகள் என அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை தாங்கிய செய்திகள் எம் கடந்த கால வரலாற்றைக் கூறுகின்றனவோ இல்லையோ, அச் செய்திகளின் தன்மை நாம் கடந்து அந்த வரலாற்றின் அடிப்படையைக் கூறும்.
அதேபோல மற்றொரு பகுதியிலே யாழ்ப்பாணத்து பெரியார்களின் உருவப்படங்கள் பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்கு தேடியும் கிடைக்காத அந்த அரிய படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தமையானது உண்மையில் ஒரு சிறந்த முயற்சி என்றே கூற வேண்டும்.
அதேபோல பழைமையான யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் முகப்புகளின் தோற்றங்களும் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. யாழ். மண்ணிலே ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தமையால் பல துறைகளிலும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டது.
அவர்களது என்பதை விட அவர்களது நாட்டின் செல்வாக்கு என்று கூறுதல் சாலப் பொருந்தும். யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகள் மிகப் பிரபலமானவை. அவற்றைப் பற்றி விபரிக்க முயன்றால் இந்த பக்கம் போதுமா எனத் தெரியவில்லை. ஆரம்பகாலங்களில் திண்ணைக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகள் பின்னர் காலனித்துவ ஆட்சிக்காரரின் பாரம்பரியங்களையும் உள்வாங்கி மெல்ல மெல்ல பரிணமித்தன என்று கூறலாம்.

மிகவும் தொன்மையான வரலாறுடைய யாழ்ப்பாணக் கோட்டையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காணமுடியும். கோட்டையைச் சூழவுள்ள பிரதேசம் முழுவதும் வரலாற்று மணம் வீசுவதற்கு இந்த ஒல்லாந்து காலக் கட்டடங்கள், வீடுகளும், ஒரு காரணம் எனலாம். அப்பகுதியில் மட்டுமன்றி பல பகுதிகளிலும் அத்தகைய காலனித்துவ காலக் கட்டடங்கள் காணப்படுகின்றன. நல்லூர், ஆனைக் கோட்டை போன்ற பிரதேசங்கள் அவற்றுள் சிலவாகும். சில ஊர்களுக்குச் சென்றால் பெரும்பாலான கட்டடங்கள் காலனித்துவ காலத்தவையாகவே இருக்கின்றன. இந்த கட்டடங்களையெல்லாம் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி பாராட்டுதற்குரியது.
இக் கட்டடங்கள் பிரமாண்டமானவை. இவற்றின் ஒரு தளமானது நவீன கட்டடமொன்றின் இரு தளங்களின் உயரமுடையதாக இருக்கும். வீடுகளின் அறைகள், விறாந்தைகள் எல்லாம் மிகவும் விசாலமானவை, மக்கள் முன்னைய காலங்களிலே கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். பெரிய வீடும் அவசியமாக இருந்தது. வீட்டிலே நிறைய அங்கத்தவர்கள் இருந்தமையால் பராமரிப்பும் கடினமாகத் தெரியவில்லை.

ஆனால், இன்றைய நிலைமையோ தலை கீழானது. கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தனிக் குடும்பங்களிலும் ஒரு சில அங்கத்தவர்களே யாழில் வாழ்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோரின் பார்வையிலே இந்த பழைமையான வீடுகள் பெருஞ்சுமைகளாகவே தெரிகின்றன.
போரினால் சிதைந்த வீடுகளை விட, கவனிப்பாரின்றி, போதிய பராமரிப்பின்றி சிதைந்து போன வீடுகளே அதிகம் எனலாம். அவற்றைப் பராமரிப்பதொன்றும் இலகுவான காரியமுமல்ல. இரு நவீன வீடுகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை விட இந்த காலனித்துவ கால வீடுகளைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாகும். அத்துடன் நவீன மோகத்தின் இந்த பழைமையான வீடுகள் செயலிழந்து செல்லாக்காசாகி விடுகின்றன என்பது தான் பொதுவான உண்மை. ஆயினும் கூட, காலனித்து காலத்துவ வீடுகளின் மதிப்பை உணர்ந்து அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருபவர்களும் இல்லாமல் இல்லை. இளஞ் சந்ததியினருக்கு அந்த வீடுகளின் அருமையைத் தெரிய வைத்தாலன்றி வேறு எந்த வகையிலும் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதென்பது நிதர்சனம்.
அந்த உன்னதமான பணியை இந்த யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி செய்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். நாற்சார வீட்டில் வசிப்பதன் சுகம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். சுகமான அனுபவம் என்று கூறுதல் தகும்.
இவை தவிர தொல்லியல் திணைக்களத்தின் துணையுடன் வட மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள்,அவற்றிலே கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் போன்றனவும் கூட ஆவணப் பதாகைகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுவரை நாம் பார்த்தவை யாழ். கண்காட்சி பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையே! கண்காட்சியில் இருந்த பல விடயங்கள் இங்கு தவற விடப்பட்டும் இருக்கலாம். ஆயினும் இக்கட்டுரைத் தொடர் ஒரு பொதுவான எண்ணப்பாட்டை வழங்கியிருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
இம்முறை கண்காட்சியைத் தவற விட்டவர்கள் எதிர்வரும் காலங்களிலும் தவறவிட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணமும் எம்மவரின் தொன்மை மிகு வாழ்வியலை இளஞ்சந்ததி உணர வேண்டும் என்பதுவுமே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கமாகும்.
கண்காட்சி நடைபெற்ற அதேவேளை ஆய்வரங்கும் நடைபெற்றிருந்தது. தமிழ், ஆங்கில மொழிகளிலான ஆய்வுக்கட்டுரைகள் பலவும் சமர்ப்பிக்கப்பட்டன. அவை விரைவில் புத்தகமாக வெளியிடப்படும் என பேராசிரியர் புஷ்பரட்ணம் குறிப்பிட்டிருந்தார். வரலாற்று ஆய்வு என்ற எல்லைக்குள் இன, மத, மொழி பேதம் இல்லை என்ற உண்மை ஆய்வரங்கில் தெளிவானது.
ஆனைக்கோட்டை முத்திரை உட்பட, யாழ்ப்பாணத்து தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட சகோதர இனத்தவர்களையும் இங்கு குறிப்பிடவேண்டும். கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தமானது எம்மவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விட்டது என்று தான் கூற வேண்டும். கண்காட்சியில் கண்ட சில விடயங்கள் அதைப் பிரதி பலித்தன. யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மைச் சமூகத்தின் மொழியாற்றல் தமிழுக்குள் மட்டும் முடக்கப்பட்டு விடக் கூடாது என்பது பலரின் அவாவாக இருக்கிறது. ஆங்கிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டால் தொடர்பாடல் திறன் விருத்தியும் சிறப்பாக இருக்கும். அதேவேளை வெளிப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர் பரிமாற்ற செயற்றிட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உலக வரைபடத்தைப் பொறுத்த வரையிலே இலங்கை ஒரு சிறு புள்ளி, அதிலே ஒரு சிறிய பகுதி தான் வட மாகாணம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எமது எல்லையைக் குறுக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். அந்த உண்மையை இக் கண்காட்சியின்போது காணக்கூடியதாக இருந்தது.
எம்மவரின் அடிப்படை மனப்பாங்கு மாற வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை தான். ஆனால் அதற்குள் வெளியுலகு எம்மைப் புறந்தள்ளி ஒதுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தும் திறன், அம்முடிவுகள் கணினி மென்பொருள் மூலம் வெளிப்படுத்தப்படும்போது அவை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்கள் தொடர்பிலே நவீன விடயங்கள் அறியப்படவேண்டும். பல செயற்றிட்டங்கள், விரிவுரைகள் நடாத்தப்பட்டு அவை தொடர்பிலான பயிற்சி பல்கலைக்கழக சமூகத்துக்கு வழங்கப்படுதலும் அவசியமாகிறது.
எம்மவரிடம் இருக்கும் திறமைகள் மழுங்கடிக்கப்படாமல் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட இவை நிச்சயம் தேவை. குறிப்பாக தலைநகரில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளித்தொடர்புகள் அதிகம் இருக்கும். ஆதலால் அப்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் வெளியுலகை முகம் கொடுக்கும் விதம் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படும்.
எம்மவர் தான் உலகெங்கும் வாழ்கிறார்களே! ஆதலால் எல்லோரையும் விட எமக்குத் தான் சர்வதேசத் தொடர்புகள் மிக அதிகம் இருக்கும். ஏனெனில் உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுகிறார்கள். பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். யாழ். பல்கலைக்கழகத்துடனான அறிவுப் பகிர்வை, அனுபவப் பகிர்வை மேற்கொள்ள அவர்கள் முன்வரவேண்டும். அதற்கு பல்கலைக்கழகமும் ஒத்துழைக்க வேண்டும். பல்கலைக்கழக சமூகம் முன்னிலையடைய அது நிச்சயம் வழி வகுக்கும்.
யாழ்ப்பாணத்திலே இருக்கும் பாரம்பரிய வீடுகள், சொத்துகள் பல புலம் பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானவை. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி தொடர்பில் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற பல்கலைக்கழக குழுவினர் சில சிக்கல்களை எதிர்நோக்கினர். புலம் பெயர்ந்தவர்களுக்குச் சொந்தமானவற்றை பாதுகாவலர்கள் அவர்களிடம் வழங்க மறுத்து விட்டனர். ஆக புலம் பெயர் தமிழர்கள், தாம் அவற்றால் பயனடைய மாட்டோம் என நம்பும் பட்சத்தில் அவற்றைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் ஒப்படைக்க முடியும். எம்மவர் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முயற்சிகளுக்கு அது பேருதவியாக இருக்கும்.
சில குடும்பங்கள் தம்மிடம் இருக்கும் பழைமையான ஏடுகள், செப்பேடுகளை வழங்க மறுத்திருக்கின்றன. அசையாச் சொத்துகள் மீது தமக்கிருக்கும் உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட அவர்கள் அவ்வாறு நடக்கக் காரணமாகிறது என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
யுத்தம் என்ற அரக்கன் துரத்தத் துரத்த நாம் ஊர் ஊராய் ஓடியதால் எம்மை அறியாமலே இழந்து விட்டிருந்த தனித்துவத்தை இக்கண்காட்சி புடம் போட்டு காட்டியதுடன், நாம் மீள நினைத்துக் கூடப் பார்த்திராத நினைவுகளை எல்லாம் மீட்டு அந்த பசுமையான வாழ்விலே இன்னொரு முறை எம்மைச் சஞ்சரிக்க வைத்து கண்களைப் பனிக்கச் செய்தது எனலாம்.

Sunday, November 13, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் -06

நவீன நாடகங்களின் மூலவேர் கூத்து

இன்று திரைப்படங்களிலும் மிக அரிதாக திருவிழாக்களிலுமே நாம் கிராமியக் கலை வடிவங்களைக் காண்கிறோம். ஆனால் ஒரு காலத்திலே அவை அன்றாட வாழ்வியலுடன் பிணைந்திருந்தன. இந்த கிராமியக் கலைகள் கிராமங்களிலே ஓய்வு நேரங்களில் பயிலப்பட்டு வந்தவை. அவை சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டும் வந்தன. இந்தக் கலைகள் கிராமிய வாழ்வின் கலை இலக்கிய வெளிப்பாடாக மட்டும் இருக்கவில்லை. மக்களுக்கு உடற்பயிற்சியை அளித்தன. பொழுது போக்காகவும் அறிவூட்டுவனவாகவும் கூட இருந்தன. மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் கருவிகளாகவும் கூட விளங்கின.
ஆனால், உலக மயமாக்கல் அந்த கிராமியக் கலைகள் மீதான மக்களின் நாட்டத்தை குறைத்துக் கொண்டே செல்கின்றது. இதே நிலைமை தொடர்ந்தால், காலப்போக்கிலே அவை அழிந்து போய்விடும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஒரு தேசத்தின் தனித்துவம் கிராமத்தில் இருக்கும் என்பர் எம்மவர்.
கிராமிய கலை வடிவங்களை ஆராய்ந்தால் அந்த உண்மை புலப்படும், யாழ். மண்ணிலே ஐரோப்பியர் கால் பதிக்க முன்னர், அம் மண்ணின் சமூகக் கட்டமைப்பு தன்னிறைவான கிராமியப் பொருளாதாரப் பண்புகளையும் சாதியத்தின் அடிப்படையில் உருவான தொழிற்பிரிப்புகளையும் கொண்டிருந்தது. அதே அடிப்படையில் தான் கலைப் பாரம்பரியங்களும் நிலை பெற்றிருந்தனவென பேராசிரியர் சபா ஜெயராஜா கூறுகிறார். தவில் போன்ற சில கலை வடிவங்கள் செல்வந்தர்களின் அரவணைப்பிலே வளர்ந்தன.
அதேவேளை கரகாட்டம், காவடியாட்டம் போன்ற கலைகள் சுயாதீன கலைஞர்களின் பராமரிப்பிலே வளர்ந்தன. இவை குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு ஆற்றுகை செய்யப்பட்டன. யாழ். மண்ணின் பரந்து பட்ட வாழ்க்கை முறைமைக்கும் பன்முகப்படுத்தப்பட்ட பண்பாட்டுக் கோலங்களுக்கும் வலிமையான சான்றாக இருப்பவை இந்த கலை வடிவங்கள் என்பதை நாம் ஒரு போதும் மறுக்க முடியாது.
வட பகுதியெங்கிலும் பரவலாக வழக்கிலிருந்து இந்தக் கலை வடிவங்களை இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாய் வெகு அரிதாகத்தான் காண முடிகிறது. அதை எவராலும் மறுக்க முடியாது. இந்த கண்காட்சியிலே கிராமியக் கலை வடிவங்களுக்கு தனிக் கூடமே ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த அரிய கலைகளுடன் தொடர்புபட்ட பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவை யாழ். வாழ்வியலின் கலை பண்பாட்டு அம்சங்களைப் பிரதி பலித்தன. கோயில்களிலே இறைவனைக் காவும் வாகனங்களும், பொய்க்கால் குதிரைகளும் கூட காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. திருமணச் சடங்கு போன்ற நிகழ்ச்சிகளிலே பந்தல் போடும் போது பயன்படுத்தப்படும் கலையம்சங்கள், மான் கொம்புகள், கிராமியக் கலையுடன் தொடர்புடைய இசைக் கருவிகள், அலங்காரப் பொருட்கள், உபகரணங்கள், சிறப்பு அணிகலன்கள், கடைகளில் வைக்கப்படும் காசுப்பெட்டிகள், பெட்டகங்கள், சிதிலமடைந்த இறை வாகனங்கள், போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பொய்க்கால் குதிரையாட்டமானது இணுவில், அளவெட்டி, சித்தன்கேணி போன்ற பகுதிகளில் வெகு பிரபலமாக இருந்தது. யாழ்ப்பாணத்தை ஐரோப்பியர் ஆட்சி செய்த காலத்திலே மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் பயன்பாட்டில் இருந்தன. குதிரையானது அந்தஸ்தின் சின்னமாகக் கருதப்பட்டது.
அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்கள் குதிரை வண்டிகளிலே பயணித்தனர். இதன் விரிவாக்கமே திருவிழாக்களில் நடத்தப்படும் குதிரையாட்டம் ஆகும். அவ்வாறு நடாத்துதல் உயர் அந்தஸ்தை அளிப்பதாகக் கருதப்பட்டது. ஆடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட குதிரைகள் மென்மையான மரங்களைக் குடைந்து தயாரிக்கப்பட்டன.
முன்னர் வீடுகளிலே அலங்காரப் பொருட்களாக மான் கொம்புகள் வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் அவற்றை வைத்திருந்தால் செல்வம் கொழிக்கும் என்ற நம்பிக்கையும் ஆரம்ப கால மக்களிடத்தே காணப்பட்டது. மாடுகளின் முகங்களைப் போன்ற உருவமைப்புகளை வீட்டு வாசலில் வைப்பதும் கூட வழக்கமாக இருந்தது.
காத்தவராயன் கூத்து, சங்கிலியன் நாடகம் போன்ற பல கலைகளிலே பயன்படுத்தப்படும் வாள்களும் கூட அங்கு வைக்கப்பட்டிருந்தன. காவடி, கரகாட்டம் போன்ற கலைகள் எம் இந்து சமயப் பண்பாட்டின் முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. அத்தகைய கரகங்கள், காவடிகளையும் கூட அங்கு காண முடிந்தது. கரகத்தை காவடியுடன் இணைத்துக் கரகக் காவடி என்றொரு நடன வடிவம் யாழ்ப்பாணத்தில் இருந்ததாக த. சண்முக சுந்தரம் குறிப்பிடுகிறார்.
கிராமியக் கலைகளிலே பயன்படுத்தப்பட்ட முடிகளும் கோயில்களில் சிறப்பு நிகழ்வுகள், பொம்மலாட்டங்களின் போது பயன்படுத்தப்படும் முக மூடிகளும் கூட காணப்பட்டன. யாழ்ப்பாணம் என்ற பெயர் உருவாகக் காரணம், பாணன் யாழ் வாசித்தமை என்று கூறுவர். அந்த யாழ் என்ற இசைக்கருவியை கண்களால் கண்டவர்கள் வெகுசிலர் என்று தான் கூற வேண்டும். யாழின் பரிணாமமே வீணை என்றும் கூறுவர். அந்த யாழின் மாதிரியும் மரத்தால் செய்து வைக்கப்பட்டிருந்தது.
அத்துடன், பாவனைக்குகந்ததல்லாத ஹார்மோனியப் பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன. வீட்டு யன்னல்களை அலங்கரித்த மர வேலைப்பாடுகளின் சிதிலங்களும் கூட காணப்பட்டன.
எம்மவர் சடங்கு சம்பிரதாயங்களிலே பூ மாலைக்கு மிக முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. ஒரு குழந்தை பிறப்பதிலிருந்து அது முதிர்வடைந்து இறப்பது வரை ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு வகைப் பூமாலை பயன்பட்டது. கொண்டை மாலை, மொட்டு மாலை, சரம், கதம்பச் சரம், கழுத்து மாலை, கரவாரம் என எத்தனை வகைகள் தெரியுமா? அவை எல்லாம் இன்று காணாமலே போய் விட்டன என்று தான் கூறவேண்டும.
அதைவிட அவை, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பிளாஸ்டிக் மாலைகளால் பிரதி செய்யப்பட்டு விட்டன என்று கூறுதல் தகும். இங்கு வருந்த வேண்டிய விடயம் யாதெனில் கொழும்பு போன்ற கட்டடங்கள் நிறைந்த நகரப் பகுதிகளை விட யாழ்ப்பாணம், வவுனியா போன்ற பிரதேசங்களில் இந்த பிளாஸ்டிக் துணி பூமாலைகளின் பாவனை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதை உணர்ந்திருப்பவர்கள் வெகு சிலரே. ஆக இந்த வாழ்வியல் அம்சங்கள் தொலைந்து போவதற்கான பிரதான காரணம் எம் அலட்சியமே எனலாம். கிராமியக் கலை வடிவங்கள் எனப்படுபவை ஆதி மனிதனுக்கு ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக உருவான வை.
அந்த வெளிப்பாடு பல்வேறு விதமாகப் பரிணமித்தமை யைத் தான் இக் கலை வடிவங்களாகக் காண்கிறோம். இன்று நாம் நவீனம் என்று பற்றி நிற்கும் கலை வடிவங்களு க்கு மூலமாக இருந்தவை இந்த கிராமியக் கலைகளே! இன்றைய நாடகங்கள் அன்றைய கூத்தின்படி முறை வளர்ச்சியால் உருவானவை. இந்த அரிய கலை வடிவங் களைக் கவனிக்காது விடுதல் என்பது பிள்ளைகள் தம் பெற்றோரை அலட்சியப்படுத்துவதற்குச் சமனானது.
இந்தக் கலை வடிவங்கள் அற்றுப் போய்விடக்கூடாது என்பதனாலோ என்னவோ, யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்விலே அதிதிகளை வரவேற்கும் போது கூட அவை வெளிப்படுத்த ப்பட்டன. இந்தக் கலை வடிவங்கள் ஊக்குவிக்கப்படாமல், அலட்சியப்படுத்தப்படுவதால், கலைஞர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இந்த கலைகளையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகி விட்டது.
அதேவேளை இந்தக் கலைகளைப் பயின்று அதை அடுத்த சந்ததிக்குக் கொண்டு போகத் தயாராக இருக்கும் இளஞ்சந்ததியர் வெகு சிலரே பணத்தை மட்டுமே மதிக்கும் உலகில் அதிக வருமானம் ஈட்டும் தொழில்கள் மீதான நாட்டம் தவிர்க்க முடியாததல்லவா? அவர்களையும் பிழை சொல்ல முடியாது. எத்தனையோ பிரபலமான கூத்துக் கலைஞர்களை எல்லாம் எம் மண் உருவாக்கியிருக்கிறது. அதை அறிய வேண்டும் என்றால் கூட நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைத் தான் வாசிக்க வேண்டும்.
இதுவே இன்றைய யதார்த்தம். அந்த கலைஞர்கள் உருவாக வேண்டும்; அவர்களுடன் சேர்ந்து இந்தக் கலை வடிவங்களும் வாழ வேண்டும் என்றால், நாம் அக்கலைகளை மதித்து ஊக்குவிக்க வேண்டும். வீண் நியாயங்க ளைச் சொல்லி காலத்தை வீணடிப்ப தென்பது தேவையற்ற ஒரு விடயம், என்று தான் கூற வேண்டும். (தொடரும்)