Showing posts with label ஜப்பான். Show all posts
Showing posts with label ஜப்பான். Show all posts

Sunday, September 11, 2011

தினையென நினைத்து விதைத்த வினை

அது மத்திய காலம். அப்போது திருச்சபை சொல்வது தான் வேத வாக்கு என்று கண்மூடித்தனமாக நம்பியிருந்த மேற்குலகம் மெல்ல மெல்ல விழித்தெழத் தொடங்கியிருந்தது.சகல துறைகளிலும் ஐரோப்பா முழுவதும் மறுமலர்ச்சி ஒன்று உருவாகத் தொடங்கியிருந்த காலம் அது. இன்றைய கண்டுபிடிப்புக்களுக்கு மூலாதாரமாய் இருக்கும் கொள்கைகளும் கண்டுபிடிப்புகளும் உருவாகிய காலம்..... இன்று நாம் அறிந்திருக்கும் பிரபல விஞ்ஞானிகள் பலர் தம் சிந்தனைகளுக்கு வித்திட்ட காலம்.... புதிய கருத்துக்களை தர்க்க ரீதியாக வெளியிட்டமைக்காக, தர்க்க ரீதியாகச் சிந்தித்தமைக்காக பல அறிஞர்கள் திருச்சபையால் கொடூரமாகக் கொல்லப்பட்ட காலம்.....

அப்போது தான் பிரெஞ்சு தேசத்திலே நொஸ்ட்ராடமஸ் என்ற அறிஞரும் வாழ்ந்தார் (1503-1506). அடிப்படையில் ஒரு மருத்துவரான நொஸ்ட் ராடமஸ் உலகின் பிரபலமான கணிப்புக் களுக்குச் சொந்தக் காரர். Les Propheties என்ற பெயரில் அவர் எழுதிய புத்தகம் பல நூற்றாண்டுகளுக்குரிய முக்கிய நிகழ்வுகளை எல்லாம் எதிர்வு கூறியிருந்தது. ஒவ்வொரு எதிர்வு கூறலும் 4 வரிக் கவிதையாக இருக்கும்.

அத்தகைய ஒரு கவிதையிலே,

'கடவுளின் நகரில் பெரும் இடி ஒன்று தாக்கும்


இரட்டைச் சகோதர்கள் பிரிக்கப் படுவர். கோட்டை நிலை குலையும்


பெருந்தலைவர் நிலை குலைவார்


ஒரு பெரிய நகரம் எரியும் போது மூன்றாவது மகா யுத்தம் ஆரம்பமாகும்'
என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எதிர்வுகூறல் ஒன்றைப் பொறுத்த வரையிலே அது நடக்க முன்னர், இப்படித் தான் நடக்கப்போகிறது என்பதைத் நிச்சயமாகக் கூற முடியாது. இதுவோ? அதுவோ ? என்ற நிச்சயமற்ற தன்மை ஒன்று காணப்படும். ஆனால் சம்பவம் ஒன்று நடந்து முடிந்த பின் அதை எதிர்வு கூறலுடன் ஒப்பிட்டால் தத்ரூபமாகப் பொருந்தும்.

ஜோதிடத்தில் நம்பிக்கையுடைய பலர் இந்த உண்மையை அடிக்கடி உணர்ந்திருப்பர். நொஸ்ட் ராடமஸின் எதிர்வு கூறலில் உண்மை இருக்கலாம் என்பதை உறுதிப் படுத்தும் வகையிலே ஒரு சம்பவம் இடம்பெற்றது. அது நடந்ததோ 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது விமானம் மோதியது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலே தலை நிமிர்ந்து நின்ற வானளாவிய கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அதை அமெரிக்கா மட்டுமன்றி முழு உலகுமே தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. எவருமே எதிர்பார்த்திராத நிகழ்வு அது.

உலகளாவிய பயங்கரவாதத்தின் உச்சகட்டம் என வர்ணிக்கப்பட்டது. அமெரிக்கா வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்தது என்றனர் அரசியல் ஆய்வாளர்கள். பயங்கரவாதத்தின் மீதான போருக்கு வழி வகுத்தது. ஆப்கானிஸ்தான், ஈராக் என்று தொடங்கி பாகிஸ்தானில் 9-11 தாக்குதலின் சூத்திரதாரியாகக் கருதப்பட்ட ஒசாமா கொல்லப்பட்டது தொட்டு இன்றும் பல யுத்தங்களைத் தொடர வைக்கிறது.

தன்னை எவரும் அசைக்க முடியாது என்றிருந்த அமெரிக்காவை ஆடவைத்த இந்த தாக்குதலால் பௌதிக ரீதியாகவும் உள ரீதியாகவும் ஏற்பட்ட பாதிப்புகள் விபரிக்க முடியாதவை. வரலாற்றாய்வாளர்கள் இத்தாக்குதலை நியூயோர்க் நகரின் வரலாற்றின் கறை படிந்த அத்தியாயம் என்பர்.

இந்தப் பேரனர்த்தத்தால் ஏற்பட்ட பௌதிக ரீதியான, அளவிடக்கூடிய சேதங்கள் தான் பலராலும் பேசப்பட்டன. ஆனால், அளவிடமுடியாத மறைமுகமான பாதிப்புக்கள் அளவிடக் கூடியவற்றிலும் அதிகமாகும். அத்துடன் இவை மிக நீண்டகாலத்துக்கு தாக்கம் செலுத்தக் கூடியவை.

உலக வர்த்தகமையக் கட்டடங்கள் இடிந்து விழுந்தமையால் ஏற்பட்ட புகை, தூசுகள், சாம்பல் துகள்கள் ஆகியன நியூயோர்க் நகரச் சூழல் மாசடைவதில் பெரும்பங்காற்றின எனலாம்.

இத் தாக்குதலால் சுற்றுச்சூழல் இரு வழிகளிலே பாதிக்கப்பட்டது. ஒன்று கட்டட இடிபாடுகளால் ஏற்பட்ட தூசு முகில். மற்றையது கட்டடம், அதனுடன் இணைந்த பொருட்களின் குறை தகனத்தால் வளிமண்டலத்தில் சேர்ந்த புகை. ஏனெனில் தாக்குதல் நடந்து 3-5 மாதங்களின் பின்னரே தீயை முற்றாக அணைக்க முடிந்தது. இடிபாடுகள் அகற்றப்பட்ட பாதைகளெங்கும் மாசாக்கிகள் படிந்து கிடந்தன. சம்பவ இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள பகுதிக்கு மேலே இருக்கும் வளிமண்டலத்தில் கூட மாசாக்கிகள் கண்டறியப்பட்டன.

1000 பாகை செல்சியஸ் வரை தீப்பற்றி எரிந்த கோபுரங்களால் சூடாகிய புகையுடன் கூடிய வளி முகிலாகப் பரந்து நின்றது. வளி மண்டலத்துக்கு இருக்க வேண்டிய தரம் குறைவடைந்தது.விளைவாக ஓசோன் தரம் 60 ppm (மில்லியனில் ஒரு பங்கு) ஆகக் குறைக்கப்பட்டது. 9/11 தாக்குதலுக்கு முன்னர் ஓசோன் தரம் 60 ppm ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர் வெப்ப நிலையிலே உருகிய கட்டடப் பொருட்கள் விஞ் ஞானிகள் கூட ஏதிர்பார்த்திராத புதிய சேர்வைகளையும் கலவைகளையும் உருவாக்கின. அங்கு நிலவிய உயரமுக்கம் தளங்களை நிலை குலையச் செய்தது.

மருத்துவ ரீதியாக, உளவியல் ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லிலடங்கா.. 40,000 -90,000 தன்னார்வத்தொண்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டார்கள் என்றால் ஏற்பட்ட சேதம் எத்தகையது என்று கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறதல்லவா? அப்பகுதியில் காணப்பட்ட தூசால் அந்தத் தன்னார்வத்தொண்டர்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மருத்துவ வல்லு நர்கள் கூறுகின்றனர்.

அடித்தளத்திலே வேலை செய்த தன்னார்வத் தொண்டர்கள் பெருங்காயங்களுக்கும் சுகயீனங்களுக்கும் உள்ளானார்கள். ஏறத்தாழ 16 ஏக்கர் நிலப்பரப்பில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்த 90 அரச முகவர் நிறுவனங்களின் மீதும் தனியார் கம்பனிகள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. காரணம் யாதெனில் அவை ஒழுங்கான முற்பாதுகாப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமையே யாகும். அந்த வழக்குகளின் விளைவாக மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் ஏற்பட்ட சுகயீனங்களைக் குணப்படுத்த, மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யவென 7.4 பில்லியன் டொலர் பெறுமதியான நிதியமொன்று உருவாக்கப்பட்டது.

9/11தாக்குதலின் மீட்புப் பணியாளர்கள் இன்றும் ஒரு சிறப்பு சுகாதாரக் காப்புறுதிக்கு உரித்துடையவர்களாக இருக்கிறார்கள். அப்படியொரு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறதாயின் அந்த 9/11 தாக்குதல் அத்தகைய பாரிய சுகாதார விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என விளங்கிக் கொள்ள முடியும்.

கட்டடங்கள் இடிந்து விழுந்தபோது எழுந்த தூசுப்படலமும் புகை மூட்டமும் அங்கு உருவாகிய நச்சுத் தன்மையான சூழலும் புற்று நோயைத் தோற்றுவிக்கும் காரணிகளாக மாறியமை குறித்தும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவை 100 சதவீதம் உறுதி செய்யப்படவில்லை. அதிலும் அடித்தளத்தில் பணி புரிந்த மீட்புப் பணியாளர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

அடித்தளத்திலே பணியாற்றிய மீட்புப் பணியாளர்களுள் புற்று நோயால் இறப்பவர்கள் தொடர்பில் பல ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.பல ஆய்வு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் தனி யார் குழுக்களும் அக்கருதுகோள் தொடர்பிலான ஆய்வுகளை முன்னின்று மேற்கொள்கின்றன.

அடித்தளத்தில் பணியாற்றிய தன்னார்வத்தொண்டர்கள் மத்தியில் புற்று நோயின் தாக்கம் மட்டும் அதிகரித்துக் காணப்படவில்லை. ஆஸ்துமா மட்டுமன்றி பல சுவாச நோய்களின் தாக்கமும் காணப்படுகிறது. தீயணைப்புப் படைவீரர்களின் சுவாசப்பைகளின் வினைத்திறன் குறைவடைந்து செல்வதும் அவதானிக்கப்பட்டது.

உலக வர்த்தக மையக் கட்டடப்பகுதியில் காணப்பட்ட கண்ணாடி இழைகள், ஈயம். பல் சக்கர அரோமட்டிக் ஐதரோ காபன் கள், சீமெந்து, டையொக்சின்கள் போன்றவையெல்லாம் உயர் வெப்ப நிலையில் ஆவியாக மாறின. அவற்றை வளியுடன் சேர்த்து சுவாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மீட்புப் பணியாளர்களுக்கு ஏற்பட்டது. இடிபாடுகளை அகற்றுவதற்குப் பாவிக்கப்பட்ட இயந்திரங்களும் பெருமளவில் புகையை வெளியிட்டன. இத்தகைய சூழல் சுவாச நோய்கள் உருவாகக் காரணமாயிற்று. ஆனால் அந்த மீட்புப்பணியாளர்கள் எவருக்குமே 9-11 தாக்குதலுக்கு முன்னர் சுவாச நோய்க்கான அறிகுறிகள் காணப்படவில்லை.

மீட்புப் பணியாளர்களுள் 37 சதவீதமானோருக்கு உளரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த முதலிரு நாட்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆவியாகிய அஸ்பெஸ்டஸ், ஈயம், பாதரசம் டையொக்சின் கள் போன்றவற்றால் மீட்புப் பணியாளர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தொழிலாளர்களும் கூடப் பாதிக்கப்பட்டனர். ஏனெனில் அவை பரவியது சனத்தொகை அடர்த்தி மிகவும் கூடிய நியூயோர்க் நகரப்பகுதியாகும்.

இந்த தாக்குதலில் இறந்தவர்கள் என 2753 பேருக்கு நியூயோர்க் மா நிலம் மரணச் சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அவர்களுள் 342 தீயணைப்புப் படைவீரர்களும் 60 பொலிஸ் வீரர்களும் அடங்குவர். நியோர்க் மா நிலத்தின் சனத்தொகையில் குறிப்பிடத்தகு வீழ்ச்சியொன்று ஏற்படவும் இந்த 9/11 தாக்குதல் காரணமாகியது. ஏறத்தாழ ஒரு வருடத்துக்கும் அதிகமான காலம் 19,000 குடும்பங்கள் இடம்பெயர்ந்து இருக்க வேண்டிய சூழ் நிலை உருவாகியது.

யுத்தமோ தாக்குதலோ எதுவாயினும், அது ஏற்படுத்தும் நேரடிப் பாதிப்புகள் பாரதூரமானவைதான். ஆனால் சில காலங்களின் பின்னர் அல்லது ஒரு சந்ததி கடந்த பின்னர் அவற்றின் வடுக்களைக் காணமுடியாமல் போய்விடும். ஆனால் அந்தத் தாக்குதல்களும் யுத்தமும் ஏற்படுத்தும் மறைமுகமான பாதிப்புகள் ஆரம்பத்தில் சிறியனவாகத் தெரிந்தாலும் மிகவும் ஆபத்தானவை. அந்தப்பாதிப்புகள் மிக நீண்ட காலத்துக்குத் தொடரும். ஆனால் எந்த வடிவில் தொடரும் என்பதை மட்டும் எதிர்வு கூற முடியாது.

ஏறத்தாழ மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த வியட் நாம் யுத்தத்தையும் அரை நூற்றாண்டுக்கு முன் ஜப்பான் மீது நடத்தப்பட்ட அணுகுண்டுத்தாக்குதல்களையும் கூட இங்கு உதாரணமாகக் கொள்ளலாம். இரண்டுக்குமே பொறுப்பேற்க வேண்டியது அமெரிக்காவாகும்.

வியட் நாம் யுத்தத்திலே அமெரிக்கா பாவித்த நச்சு ஆயுதங்களும் நச்சுக்குண்டுகளும் இன்னும் அம்மண்ணிலே புதைந்து கிடக்கின்றன. அவற்றின் அன்றைய பிரயோகத்தின் விளைவால் வியட் நாமில் இன்றும் குணப்படுத்தமுடியாத ஊனங்களுடன் பிள்ளைகள் பிறக்கின்றன. ஜப்பானிலும் அதே நிலைமை தான் தொடர்கிறது.

இன்று இரு சந்ததிகள் கடந்த பின்னர் கூட ஜப்பானும் வியட் நாமும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலையை இன்னும் ஒரு தசாப்தத்தில் அமெரிக்கா கொடுக்க வேண்டி வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள். தானே வினையை விதைத்ததால் அதை அறுவடை செய்யவும் அமெரிக்கா தயாராக இருக்குமோ என்னவோ? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tuesday, April 5, 2011

ஜப்பானியர்கள் வித்தியாசமானவர்களா?

நேரந்தவறாமைக்கும் ஒழுங்கான முகாமைத்துவத்துக்கும் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள். எதையும் சிறப்பாக, வினைத்திறனுடன் செய்து முடிக்கும் மனப்பாங்குடையவர்கள். அவர்களது 5 எஸ் முகாமைத்துவ முறைமை மிகவும் பிரபலமானது. உலகளாவிய ரீதியிலே பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் ஜப்பானளவுக்கு மற்றைய நாடுகளில் அது வினைத்திறன் மிக்கதாக அமைந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.
ஏனெனில் ஜப்பானியர்களின் கலாசாரத்துக்கு ஏற்றதாக அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையிலும் பல அமைப்புகளில் 5 எஸ் முகாமைத்துவத்தைப் பின்பற்ற முயற்சிகள் எடுக்கப்படுவது உண்மை தான். ஆனால், எமது கலாசாரமும் எம் மக்களின் மனப்பாங்கும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்த இடம்கொடுப்பதில்லை என்பதே உண்மையாகும்.
பூகம்ப நெருப்பு வலையத்தினுள் ஜப்பான் அமைந்திருப்பதால், எப்போதும் பூகம்ப அனர்த்தத்தை எதிர் நோக்கிய வண்ணமே தமது செயற்பாடுகளை மேற்கொள்வார்கள். அவர்கள் அவ்வாறு தம்மைத் தயார்படுத்தியமை தான் கடந்த மார்ச் 11 ஆம் திகதி, ஒரு பேரனர்த்தம் நிகழ்ந்திருந்த போதும் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை 10,035 ஆகவும் காணாமற் போனோரின் எண்ணிக்கையை 17,443 ஆகவும் மட்டுப்படுத்தியிருக்கிறது. ஆனால் பூகம்பம் மற்றும் சுனாமியைத் தவிர்த்து, அவற்றின் பின்னர் ஏற்பட்ட அணு உலைகளின் கசிவினால் ஏற்பட்டிருக்கும் நேரடியான, மறைமுகமான சேதங்கள் மதிப்பிடப்பட முடியாதனவாகவே இருக்கின்றன. அவற்றை எதிர்வு கூறுவது சாத்தியப்படாததாகவே இருக்கிறது.
ஜப்பானின் புவியியல் ரீதியான அமைவிடம் அந் நாட்டின் கலாசாரத்தை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகித்தது. அங்கு இருக்கும் விவசாய நிலத்துக்கான பற்றாக்குறையானது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சமுதாயக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அயலவர்கள் மிகவும் அருகருகிலேயே வசிக்கின்றனர். இதனால் தனி மனிதன் என்ற அடிப்படையை விட தாம் ஒரு சமுதாயம் என்ற அடிப்படையில் ஜப்பானியர்கள் தமது கலாசாரத்தை வளர்த்தனர்.
அவர்கள் விதிமுறைகளையும் திட்டங்களையும் விரும்புபவர்கள் எதையும் கிரமமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். எதையும் அமைதியாக, பொறுமையாக எதிர்கொள்பவர்கள், நியாயமானவர்கள். இவ்வளவு பெரிய அனர்த்தம் நிகழ்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டபோது மிக நீண்ட வரிசைகளில் அமைதியாகக் காத்திருந்தே பெற்றுக்கொண்டனர். எவரும் வரிசைகளைக் குழப்பிக்கொண்டு விதிமுறைகளை மீறி முண்டியடித்து பொருட்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை. எவரும் பொருட்களை அறா விலைக்கு விற்க முயலவில்லை. எவரும் தவித்த முயல் அடிக்கவில்லை. இத்தகைய குணாம்சங்கள் எல்லாம் அவர்களது கலாசாரத்துக்கே உரித்தானவை.
ஜப்பானின் ஊடக சங்கத்திலே விதிமுறை ஒன்று உள்ளது. அதாவது எவராயினும் ஜப்பான் பற்றி அறிக்கையிடுவதாக இருந்தால், ஜப்பானிய பழமொழியொன்றின் கருத்தை அந்த அறிக்கையிடுதலில் எங்காவது குறிப்பிட்டேயாக வேண்டும், ‘நகமொன்று வெளித் தள்ளுமாயின் அது சுத்தியலால் அடிக்கப்படும்’ என்பதே அந்தப் பழமொழியின் நேரடி மொழி பெயர்ப்பு ஆகும். அதாவது அவர்களது ஒன்றிணைந்த கலாசார அமைப்பில் இருந்து எவரும் விலக முடியாது என்பதே அப்பழமொழி சொல்ல விழையும் கருத்தாகும்.
இந்தக் கலாசாரம் தான் அண்மையில் நிகழ்ந்த அணு உலை அனர்த்தத்தை அறிக்கையிடுவதிலும் பல சிக்கல்களையும் தடைகளையும் ஏற்படுத்தியிருந்தது. எதையும் வெளிப்படையாக அறிக்கையிட முடியவில்லை. உண்மைகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஒன்று காணப்பட்டது. ஜப்பானிய கலாசாரத்தில் ஒரு அமங்கலமான செய்தியை வெளிப்படையாகச் சொல்வதென்பது பெரும் சிரமமான விடயம். ஆதலால் அணுக் கதிர்வீச்சின் தாக்கம் மற்றும் பாதிப்பை வெளிக்காட்டுவதில் அரசும் ஊடகங்களும் தயக்கம் காட்டின என்பதும் உண்மை. அத்துடன் அவர்களது மொழியானது. வெளியுலகுடனான இலகு தொடர்பாடலுக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
அத்துடன் ஜப்பானின் உள்நாட்டு கைத்தொழிற்றுறைகள் எல்லாம் அரச கட்டுப்பாட்டில் இருப்பவை. இதற்கு அணு உலைகளும் விதி விலக்கல்ல. அனர்த்தத்தின் பின்னரான ஏற்பாடுகளில் அதனைத் தெளிவாக அவதானித்திருக்க முடியும். ஏன் ஜப்பானுக்கு கிடைத்த பல அவசர உதவிகளையும் மருந்துகள் உட்படப் பல நிவாரணப் பொருட்களையும் முறையான அனுமதிப் பத்திரமில்லை என்ற காரணத்துக்காகவே அரசு திருப்பி அனுப்பியிருந்தது. இதுவும் தரத்துக்கு முன்னுரிமை வழங்கும் ஜப்பானிய கலாசாரத்தின் அடிப்படையே. ஜப்பான் மக்கள் எம்மைப் போல பொருட்களைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆதனால் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தபோது பலரால், தமது உயிரையாவது காப்பாற்ற முடிந்தது.
முற்றாகச் சேதமடைந்திருந்த பெருந்தெரு ஒன்று வெறும் ஆறே நாட்களில் மீள நிர்மாணிக்கப்பட்டமை ஜப்பானியர்களின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் நல்லதோர் உதாரணமாகும். தமது உயிரைத் துச்சமாக மதித்து கதிர் வீச்சைப் பொருட்படுத்தாமல் இன்னும் அணு உலைகளில் இரவுபகல் பாராது தொழிலாளர்கள் வேலை செய்வதானது ஜப்பானிய மக்களின் தேச பக்திக்கோர் உதாரணமாகும்.
நவீன ஜப்பானில் பல எதிர்பாராத நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது சகஜமானது தான். ஆனால் தற்போது அங்கு வயது கூடிய குடிமக்களின் தொகை அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் மீதான கடன் சுமை கூடி இருக்கிறது. அரசியல் செயலிழந்துகொண்டு போகிறது. இத்தகையதோர் நிலையில் இந்தப் பேரனர்த்தம் ஜப்பானில் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியொன்றைத் தோற்றுவிக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் முதன் முறையாக ஜப்பானில் மின்வெட்டு ஏற்பட்டது கடந்த மார்ச் 11 அனர்த்தத்தின் பின்னர் தான். போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீருக்காக டோக்கியோ மக்கள் அலைந்தமையும் மின்வெட்டால் இருளில் மூழ்கிய வண்டபே நகரும் பல செய்திகளை உலகுக்கு எடுத்துச் சொல்லின. வசதிகள் அதிகமாய் இருந்த உலகின் மிகப் பெரிய நகரங்கள் கணப்பொழுதில் நிலைகுலைந்து போயின. ஆனால் இப்போதும், நாங்கள் ஒன்றிணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர் ஜப்பானிய மக்கள்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின், சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த நாடு ஜப்பான். ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்ட செய்தியை அறிந்தபோது அணு விஞ்ஞானி ஜன்ஸ்டீனே தனது கண்டுபிடிப்பிற்காக வருந்தியிருந்தார் என்று கூறுவர். அந்த யுத்தத்தால் 60 பிரதான நகரங்கள் அழிந்துபோயின. பத்து மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர். அரை மில்லியன் வரையான மனித உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் 1968 ஆம் ஆண்டே உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக ஜப்பான் மாறியது.
ஜப்பான் பெளதிக ரீதியாக, அந்தப் பேரனர்த்தத்தலிருந்து மீண்டெழுந்து உலக பொருளாதாரத்தில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அந்த அனர்த்தத்தின் மறைமுகமான தாக்கத்தை இன்றும் விப்பானிய மக்கள் சிலர் அனுபவித்து வருகின்றனர். அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் தாக்கம் பல சந்ததிகள் கடந்தும் பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்னும் அங்கு பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதை எவராலும் மறுதலிக்க முடியாது. அத்தகைதோர் நிலைமையானது மனிதனுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்றே கூற வேண்டும்.
இவையெல்லாம் இப்படி இருக்க, தற்போது ஏற்பட்டிருக்கும் அணு உலைக் கசிவுகளும் அவற்றினால் ஏற்பட்டிருக்கும் கதிர்வீச்சின் தாக்கமும் ஜப்பானின் எதிர்காலத்தில் பெரும் வெற்றிடமொன்றையும் கேள்விக்குறியையும் சேர்த்தே உருவாக்கி விட்டிருக்கின்றன. வளிமண்டலத்தில் கதிர் வீச்சின் மட்டம் சாதாரண எல்லையை விட அதிகரித்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அணு உலைகள் அமைந்திருக்கும் சூழலில் உள்ள மண்ணிலும் கதிர்வீச்சின் தாக்கம் எல்லையைத் தாண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அணுப்பிளப்பான்களைக் குளிர்மைப்படுத்தி கதிர்த்தாக்கமுடைய எரிபொருளின் வெப்ப நிலையைக் குறைக்க பெருங்கனவளவில் நீர் பாய்ச்சப்பட்டது. அவ்வாறு குளிர்மைப் படுத்திய பின் அந்நீரிலே கதிர்த்தொழிற்பாட்டு மாசுக்கள் கலந்திருக்கும்.
அவ்வாறு மாசுக்கள் கலந்த நீரை எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி வெளியேற்ற முடியாது. அத்துடன் அந்த நீரைச் சேமிப்பதில் பெரும் இடப்பிரச்சினையும் தற்போது எதிர்நோக்கப்படுகிறது. இந்த நீரே பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய கதிர்த் தொழிற்பாட்டு மாசு கலந்த நீரைச் சுத்திகரிப்பதில் வழிநடத்தவென 5 வல்லுநர்களை பிரான்ஸ் ஜப்பானுக்கு அனுப்பியிருக்கிறது. அதையடுத்து நாட்டின் சகல அணு உலைகளிலும் விசேட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு ஜப்பானிய அரசு உத்தரவிட்டிருந்தது. இதுவும் ஜப்பானிய தரத்தை விரும்பும் ஜப்பானிய கலாசாரத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.
கதிர்வீச்சின் தாக்கமுள்ள பகுதிகளிலே விளையும் மரக்கறிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கடல் நீரிலும் கூட கதிர்வீச்சின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தினமும் இரண்டுவேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவு வெறும் பிஸ்கட்டுகளும் பழச்சாறுமேயாகும். அது கூட மிகவும் நுணுக்கமான கதிர்வீச்சுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் வழங்கப்படுகிறது. தமது உற்றார் உறவினர் பலர் சுனாமி அலையினால் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டனர் என அனாதரவாய் நிற்கின்றனர் பல மக்கள். பெறறோரை இழந்த சிறார்களின் தொகையை இந்த அனர்த்தம் அதிகரித்திருக்கிறது. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பல சமூக பொருளாதாரச் சிக்கல்கள் ஜப்பானை ஆக்கிரமித்திரு க்கின்றன. ஆனால் அழுது கொண்டிரு ப்பதால் எந்தப் பயனுமில்லை, நாம் இணைந்து செயற்பட்டு எதையும் வெல்லுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ஜப்பானிய மக்கள். மீண்டுமொரு பீனிக்ஸ் பறவை யாய் ஜப்பான் உயிர்த் தெழப் போவதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.