Thursday, March 5, 2015

மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதை




~~யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு 
யாசகன் மன்ன னிடம் இருந்தோர் பாழைப் பரிசு பெற்றான்!" 
னக் கூறிடும் பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு 
பாழைப் பரிசு பெற்றாலும், அப்பாலையைப் 
பச்சைப்படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத நால், 
இன்றுவையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்! "
என யாழ் மண்ணின் மகிமையை எளிமையாய் விளக்குகிறது மகாகவி உருத்திரமூர்த்தியின் கண்மணியாள் காதை.தனக்கென தனித்துவமான கலாசார பாரம்பரியங்களைக் கொண் டிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளமும் 
நிலவளமும் தனித்துவமானவை என்பதில் ஐயமேதுமில்லை.தற்காலத்தில் இன மத பேதமின்றி நாடுகளையும் கடந்து தமிழர் வாழும் தேசம் எங்கிலும் பேசப்படும் விடயங்களுள் யாழ் மண்ணின் நீர்வளம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது.

விவசாயத்தை நம்பியிருக்கும் யாழ் மண்ணின் நீர்வளம் இரசாயனங்களின் அதீத பாவனையாலும் சீரற்ற கழிவு முகாமைத்துவத்தாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. காலத்துக் குக்குக் காலம் ஊடகங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அதனை வெளிப்படுத்தி வருகின்றமையை அவதானிக்க முடிகிறது. ஆனால் நீர்வளம் பாதிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எவற்றையேனும் யாராவது எடுத்திருக் கின்றார்களா என்பது தொடர்பில் அறிய முடியவில்லை.

இந்நிலையிலேயே யாழ் மண்ணின் நிலக்கீழ் நீருடன் எண்ணெய்க் கழிவுகள் கலப்பது தொடர்பிலே பல்வேறுபட்ட கருத்துகளும் செய்திக ளும் வெளியாகி வருகின்றன. சுன்னா கம் பகுதியை அண்டிய கிணறுகளின் நீர் பாவனைக்கு உகந்ததல்லாமல் போயுள்ளதாகவும் மிகவும் குறுகிய காலத்துக்குள் இந் நிலைமை ஏறத்தாழ 9 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பரவியுள்ளதாகவும் அண்மை யில் பிரபல தனியார் ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.

2008 ஆம் ஆண்டளவிலே சுன்னாகம் தெற்கு விவசாயிகள் சம்மேளனம், அப்போதைய யாழ். மாவட்ட செயலாளருக்கு பிரதேச நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக முறைப்பாடு தெரிவித்திருக்கிறது. மாவட்ட செயலாளரும் உடன் அறிக்கை சமர்ப் பிக்குமாறு மின்சாரசபைக்கு பணிப் புரை அனுப்பியிருக்கிறார்.

சுன்னாகம் பகுதியின் நிலத்தடி நீர் மாசடைந்து வருவது ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு முன்னரே வெளித் தெரியத் தொடங்கியிருக்கிறது என்பத ற்கு அக்கடிதங்கள் சான்று பகர் கின்றன. ஆனால் கடந்த ஒரு வருட காலத்துக்குள் நிலத்தடி நீர் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதை பலராலும் உணர முடிந்திருக்கிறது.

இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி/விநியோக கட்டடம் சுன்னா கம் பகுதியிலே அமைந்திருக்கிறது. இலங்கை மின்சார சபையோடு இணைந்து செயற்படும் நிறுவனமாக 'ழேசவாநசn Pழறநசள' என்ற நிறுவனம் இருக்கிறது. தற்போது அனைவரது பார்வையும் இந்த நிறுவனத்தின் மீதே திரும்பியுள்ளது என்று சொன்னா லும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

யாழ். நிலக்கீழ் நீரிலே எண்ணெய் மாசு என்று எங்கெல்லாம் பேசப்படு கிறதோ அங்கெல்லாம் அனைவரது சுட்டு விரல்களும் இந்த நொதேர்ன் பவர் நிறுவனத்தை நோக்கியே நீளுகின்றன.
இவை பற்றியெல்லாம் ஆராய முன்னர், யாழ். மண்ணின் நிலக்கீழ் நீர் வளம் பரம்பியிருக்கும் விதம் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது.

யாழ் மண்ணின் நிலக்கீழ் நீர்வள மானது சுன்னாகம், வடமராட்சி கிழக்கு, சாவகச்சேரி, ஊர்காவற்றுறை என நாங்கு வலயங்களாகப் பிரிந்து காணப்படுகிறது. சுன்னாகம் வலயத் துக்குரிய நிலக்கீழ் நீரின் கொள் ளளவே ஏனைய வலயங்களுக் குரியனவற்றிலும் அதிகமானதாக இருக்கிறது.
யாழ்ப்பாண மக்கள் தமக்கான தனித்துவத்தை நிலை நிறுத்த ஆரம் பித்த காலத்திலிருந்தே நிலக்கீழ் நீரினை செவ்வனே திட்டமிட்டு பயன் படுத்தி வந்தனர். இயற்கையான ஆறு கள் எவையும் இல்லாத நிலையில் மழையையும் அதனால் செறிவூட் டப்படும் நிலக்கீழ் நீரையும் மட்டுமே நம்பி எம் மக்கள் ஒரு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நிறுவியிருந்தனர் என்பது ஆச்சரியப்படவேண்டிய விடயம்.

'சாத்திரம் புதியவை
கண்டவர் எடுத்த
சூத்திரம் பொருத்தினர் கிணற்றில்,
பார்த்தவர் மகிழ்ந்து பல
புகழ்ந் திடவே!
மாடிரண் டே சுற்றிச் சுற்றி வர,
மக்களின் முன் அவர்
கண்ணெதிரே,
பாடு படாமல் இருக்கையிலே
பாதாளம் சென்று நன் நீர் எடுத்தே,
ஓடிச் சுழன்று திரும்பினவாம்;
வாய்க்காலில் ஒவ்வொன்றாய்
ஊற்றினவாம் -
~~வேடிக்கை தான் அந்த வாளி!"
என்றே
மெச்சினர் கண்டவர் யாவருமே.''

என்று அதை மீண்டும் உறுதி செய்கிறது மகாகவி உருத்திர மூர்த்தியின் கண்மணியாள் காதை.
மிகப்பெரிய கொள்ளளவையுடைய சுன்னாகம் நிலக்கீழ் நீர் அப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை மட்டுமன்றி விவசாயத் தேவை களையும் பூர்த்தி செய்து வந்தது. பெருந்தோட்டங்களுக்கும் வளமான செம்மண்ணுக்கும் பெயர்பெற்ற இப் பூமியிலே தான் மக்களின் மின்சாரத் தேவையைப் பு+ர்த்தி செய்வதற்கான வலு நிலையங்களும் அமைக்கப் பட்டன.
நாட்டிலே சில தசாப்தங்களாகத் தொடர்ந்த யுத்த சூழ்நிலை காரண மாக நீர் மின்னைப் பயன்படுத்தும் வாய்ப்பு யாழ்ப்பாணத்துக்கு கிடைக் கவில்லை. ஆதலால் எண்ணெயின் துணையுடன் மின் பிறப்பாக்கிகள் இயக்கப்பட்டே யாழ். மண்ணின் அடிப்படை மின்சாரத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. காலத்துடன் தேவைகள் அதிகரிக்க ஒன்றுக்கு மேற்பட்ட மின் பிறப்பாக்கிகள் இணை க்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது.
இலங்கை மின்சார சபையினாலேயே இம்முயற்சி முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே 2000 ஆம் ஆண் டின் பின்னர் இலங்கை மின்சார சபையுடன் இணைந்து 'nothern power' நிறுவனமும் யாழ். மண்ணுக் கான மின்சார விநியோகத்தில் பங்கெடுத்தது.

சுன்னாகத்தில் அமைந்திருக்கும் வலு நிலையத்திலே வௌ;வேறு சந்ததிகளைச் சேர்ந்த மின் பிறப்பாக் கிகள் பாவனையில் இருந்திருக்கி ன்றன. முதலாவது சந்ததியைச் சேர்ந்த மின்பிறப்பாக்கிகளின் பாவனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தசாப்தங்களாக நிகழ்ந்த அவற்றின் பாவனையின் போது கழிவு எண்ணெய் வெறுமனே நிலத்தில் கலக்க விடப்பட்டதாக இலங்கை பொறியியலாளர் நிறுவக ஆய்விலே அறிக்கையிடப்பட்டு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கலந்துரையாடல் ஒன்றிலே முன்னளிக்கப்பட்டிருந்தது.

தற்போதும் பாவனையில் இருக்கும் இரண்டாவது சந்ததியைச் சேர்ந்த, பிறப்பாக்கிகள் தொடர்பில் எந்தவொரு நம்பிக்கைத் தன்மையும் இல்லாதிருப்ப தாகவே அந்த முன்னளிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு தான் 'Northern power' நிறுவனத்தினுடைய வகிபாகம் முன்னிலை பெறுகிறது. ஏனெனில் இந் நிறுவனத்தி னால் பாவிக்கப்படுபவை இத்தகைய இரண்டாவது சந்ததிக்குரிய இயந்திர ங்களேயாகும்.
பல ஊடக அறிக்கைகளிலே தமது நிறுவனத்தின் கழிவு எண்ணெயைத் தாம் விற்றுப் பணமாக்குவதாகவும் சுற்றுச் சூழல் விதிமுறைகளுக்கமையவே தாம் தொழிற்படுவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தி ருக்கிறார்கள். அக்கருத்துகளின் உண்மைத் தன்மையை வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளால் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

'உத்துறு ஜனினி' என்ற பெயரிலே மிக அண்மையில் இலங்கை அரசுக்குச் சொந்தமான மின் பிறப்பாக்கி/ வலு நிலையம் ஒன்று சுன்னாகத்திலே 2013 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த நவீன அமைப்பு சுற்றுச் சூழல் விதிமுறைக ளுக்கமைய கழிவுகளை வெளியேற்று வதாக அதே முன்னளிக்கை உறுதி செய்கிறது.
அப்பகுதியில் குடி நீர் விநியோக த்தை மேற்கொள்ளும் தேசிய நீர் வடிகாலமைப்புச் சபை கூட, தனது நீர் மூலம் மாசடைந்திருப்பதைக் கண்டறி ந்து நீர் விநியோகத்தை நிறுத்தியி ருக்கிறது.
காலத்துக்குக் காலம் எடுக்கப்பட்ட செய்மதிப் படங்கள் அண்மையில் இணையத்திலே வெளியாகியிருக்கி ன்றன. ஆரம்பத்தில் எண்ணெய்க்கழிவுகள் நிலத்திலே வெளியேற்றப்பட்டிருந்தமையும் பிற்காலத்தில் அவை மூடப்பட்டு அப்பகுதியில் கட்டட வேலைகள் நடைபெற்று முடிந்தமை யையும் அப்படங்களில் தௌ;ளத் தெளிவாகப் காண முடிகிறது.

எம் மக்கள் கடந்து வந்திருக்கும் காலங்களில் தம் குறைகளை வெளிப்படுத்த முடியாமலிருந்த காரணங்களினாலோ என்னவோ இப்பிரச்சினை பாரிய அளவில் வெளித்தெரியாமல் காணப் பட்டது. கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரமோ என்று வருந் தத்தகு வகையிலே தற்போது தான் வெளித்தெரியத் தொடங்கியிருக்கிறது. அவ்வாறு வெளித்தெரியும் வேகத்தை விஞ்சும் வகையிலே எண்ணெய் மாசு நிலக்கீழ் நீருடன் கலந்து வருகிறது.

நிலக்கீழ் நீரானது நிலத்துக்குக் கீழே ஒரு ஊற்றுப்போல் காணப்படும். அந் நீரிலே மாசு கலக்கத்தொடங்கி னால் அந்த ஊற்று செல்லும் இட மெல்லாம் இம்மாசு மிக வேகமாகப் பரவத் தொடங்கும். வலி வடக்கை அண்டிய பகுதிகளில் பாவனைக்கு உதவாத காரணத்தால் கிணறுகள் கைவிடப்பட்டு வருகின்றமைக்கு இதுவே காரணமாகும்.

வலி வடக்கையும் தாண்டி சுன்னா கத்திலிருந்து 10-11 கிலோமீற்றர் தூரத்திலுள்ள கிணறுகளிலிலும் இதே பிரச்சினை காணப்படுவதாக முக நூல் நண்பர்களின் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அதனை எவ்வாறு கையாளப்போகிறோம் என் பது தொடர்பில் ஒரு திட்டத்தை விரை வாகத் தயாரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புக்கு இருக்கிறது. அந்த அதி காரத்தரப்பிலே மாகாண , மத்திய நிர்வாக அலகுகள் உள்ளடங்குகின் றன. மாவட்ட செயலகம், உரிய பிரதேச செயலகங்கள், உரிய உள்ளூராட்சி சபைகள், பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களம், தேசிய நீர் வடிகாலமைப்பு சபை, மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை , உரிய மாகாண அமைச்சுகள், உரிய மத்திய வரிசை அமைச்சுகள், எல்லா வற்றுக்கும் மேலாக இலங்கை மின்சார சபை என யாவுமே பொறுப்பு க்கூற வேண்டிய நிறுவனங்களாகும்.

எண்ணெய்க் கழிவு நீருடன் கலப்பதால் நேரடியாகவும், மறைமுக மாகவும் பல எதிர் விளைவுகள் உருவாகப் போகின்றன என்பது கண்கூடு. பொதுவாக என்ன நடக்கும் என்பது பற்றியும் நாம் அறிந்திருத்தல் தகும்.
பாதிக்கப்பட்ட கிணறுகளின் நீரை ஆய்வு செய்ததில் ஏறத்தாழ 10 சதவீதமான கிணறுகளில் அனுமதிக ;கப்பட்ட அளவுக்கும் அதிகமாக ஈயம் இருப்பதையும் 12 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவு க்கும் அதிகமாக குரோமியம் நீரில் கலந்திருப்பதாக தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
அதே வேளை ஏறத்தாழ 73 சதவீதமான கிணறுகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிக மாக கிறீஸ், எண்ணெய் ஆகியன கலந்திருப்பதாகவும் அவ்வாய்வு முடிவிலே அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுன்னாகம் பகுதி விவசாயத்துக்கு மட்டுமன்றி இரசாயனங்களின் மிகை யான பாவனைக்கும் பெயர் போன பகுதியாகும். அதன் காரணமாக இங்குள்ள கிணறுகளில் அனுமதிக்கப் பட்ட அளவுக்கும் அதிகமான நைத்தி ரேற்றின் செறிவும் அவதானிக்கப்பட்டுள்ளது.

குடிநீரிலே நைத்திரேற்றின் செறிவு அதிகரிப்பதால் நீலக்குழந்தைகள் பிறப்பது அதிகரிக்கும். 6 மாதத்துக் குட்பட்ட குழந்தைகள், முதியோர், கர்ப்பிணித்தாய்மார் போன்ற தரப்பி னரை இந் நிலைமை வெகுவாகப் பாதிக்கும்.
எண்ணெய் கலந்திருக்கும் நீரை குடிப்பதற்குப் பயன்படுத்த முடியாது. அதேவேளை விவசாயத்துக்குப் பயன் படுத்தினால் விவசாய முயற்சி வெற்றியளிக்கும் சாத்தியக் கூறுகள் குறைவடையும். அதே வேளை நிலமும் மாசடயத் தொடங்கும். நீரிலே உள்ள நன்மை பயக்கும் உயிரிகள் இறக்க நேரிடும் . மிக நீண்டகால அடிப்படையில் நோய்கள் பல ஏற்படும் சாத்தியக் கூறுகள் அதி கம் காணப்படும். நிலக்கீழ் நீரிலே எண்ணெய்க்கழிவுகள் கலக்க நேரிட்டால் அவை ஏறத்தாழ 250 வருடங்களுக்கு நிலைத்திருக்கும் என செஸ்டர் டி ரெயில் என்பவர் தனது நூலிலே குறிப்பிடுகிறார்.

ஈயம் என்பது உயிரியல் ரீதியாக மனித குலத்துக்கு எந்தவொரு நன் மையும் பயக்காத உலோகமாகும். அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஈயத்தை நாம் உள்ளெ டுத்தல் மிக ஆபத்தானது. மனித உடலிலே நரம்புத்தொகுதி, இனப் பெருக்கத்தொகுதி உட்பட பல்வேறு தொகுதிகளில் செயற்பாடுகளை ஈயம் பாதிக்கும். எலும்புகளிலே ஈயம் படிந்து சேமிக்கப்படும். கர்ப்பத்திலிருக்கும் குழந்தைகளினதும் சிறார்களின தும் மூளை வளர்ச்சியில் பின்னடை வைத் தோற்றுவிக்கும்.சிறார்கள் மத்தியில் மெல்லக் கற்றல், மன நிலை பாதிப்பு, பழக்க வழக்கப் பிரச்சினைகள் போன்ற குணப்படுத்த அரிதான குறைபாடு களை ஏற்படுத்தும்.

அதிகமான குரோமியத்தை (அயன்/ உலோகம்) உள்ளெடுத்தால் சுவாசப் பாதையில் புற்று நோய் உருவாகும் வாய்ப்பு மிக அதிகம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்திருக்கிறது.நிலக்கீழ் நீரின் மாசின் எதிர்விளைவுகள் இப்படி இருக்க, அம்மாசை அகற் றுவதற்கும் பலதரப்பட்ட நடைமுறைகள் உலகளா விய ரீதியிலே பயன்பாட் டில் இருக்கின்றன. அவற் றில் பல மிக எளிதான நடைமுறைகளாகும்.

கதிர்த்தொழிற்பாட்டு காபனைப் பயன்படுத்தி சேதனப் பகுதியை உறிஞ் சச் செய்து வடிகட்டல், மென்சவ்வு முறைமை, புவியீர்ப்பின் கீழ் வேறாக் கல், புற ஊதா கதிர்களின் மூலமான வடிகட்டல், நுண் வடிகட்டல், பக் டீரியா, பங்கசு, தாவரங்கள் மூலம் எண்ணெய் மாசை நீக்கல் போன்ற பல்வேறுபட்ட முறைமைகள் உலகளா விய ரீதியிலே பின்பற்றப்படுகின்றன.

நிலக்கீழ் நீர் மாசடைந்து வருகிறது என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
அம்மாசைக் கட்டுப்படுத்த வேண் டிய, இல்லாமல் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் எம்மால் உணர முடிகிறது. ஆகவே நாம் தாமதிக்காமல் முதலில் செய்ய வேண்டியது மாசின் மூலத்தை கண்டு பிடித்தல் ஆகும்.
அதற்கு போதிய தொழில் நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லாத காரணத்தால் ஆய்வுகளை மேற் கொள்ள கடந்த வாரம் இலங்கை வந்திருந்த நோர்வே நாட்டுக் குழுவி னரிடம் உரிய உபகரணங்களை வழங்கியுதவுமாறு கைத்தொழில் தொழில் நுட்ப நிறுவகம் கோரியிருந் தது.

இம்மாசாதல் தொடர்பிலும் அத னைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பிலும் வெளிப்படையான தொடர் ஆய்வுகள் அவசியமாகின்றன. அவற்றை வழி நடத்துவதில் யாழ். பல்கலைக் கழகத்துக்கும் வட மாகாண சபைக்கும் பாரிய பொறுப்பி ருக்கிறது.இம்மாசாதல் தொடர்பில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க வேண்டும். எங்கும் எதிலும் வெளிப் படைத் தன்மை பேணப்பட வேண்டும். தற்போது கிடைத்திருக்கும் சுதந்திர சூழலை ஊடகங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமது விற்பனைக் காகவும் அரசியல் சுய நல நோக்கங்களுக்காகவும் பொதுமக்களைப் பாவிப்பதை நிறுத்தி தமது பிரசுரங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் இப்பாதிப்புகள் குறித்து நோக்குகையில் நாம் இரு ண்ட எதிர்காலத்தை நோக்கிப் பயணி த்துக் கொண்டிருக்கிறோம் என்பது மட்டுமே தெளிவாகிறது. இனி வரும் நூற்றாண்டுகளில் பிறக்கப்போகும் எம் குழந்தைகளுக்கான புதை குழியை இப்போதே தோண்டி வைத்து விட்டோமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. நாம் இனியும் விழித்தெழா விட்டால் எம்மைத் தூற்றுவதற்குக் கூட வளமான எதிர்காலச் சந்ததியொன்று இருக்குமா என்பது கேள்விக்குறியே!

Saturday, January 17, 2015

ஆவுரஞ்சிக் கற்கள் காலத்தின் தேவையோ?


எங்கள் வீட்டு விருந்தாளி இவள்......
வவுனியா நகரின் மத்தியிலே மரங்கள் சூழ்ந்ததோர் வட்ட வீதி.. ஆங்கோர் முறிந்த மின்சார இணைப்புத் தூண். . . வீதியில்  ஒய்யார நடைபோடும் மாடுகள்.. தூணைக் கடக்கும் போதெல்லாம் உரசும் அவற்றின் ஈர்ப்பு...

இது நான் அன்றாடம் காணும் காட்சிகளில் ஒன்று... எதேச்சையாய் ஒரு நாள்  அவதானித்தேன். பொறி தட்டவில்லை. சில நாட்களின் பின்னர்  ஆவுரஞ்சிக் கல் எதேச்சையாய்  நினைவுக்கு வந்தது. புத்தி ஒப்பீடு செய்தது. யதார்த்தம் புரிந்தது.

யாழ்ப்பாணக் கலாசாரமானது தர்ம சிந்தையைப் பிரதிபலிப்பது என்று எங்கோ கேட்ட ஞாபகம். கால ஓட்டத்திலே, இடப்பெயர்வுகளுடன் கூடிய உலகமயமாதலின் தாக்கத்திலே யாழ்ப்பாணம் இழந்து விட்டவைகளுள் இது மிக முக்கியமானது என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றும்.

இற்றைக்கு சில தசாப்தங்களுக்கு முன்னர்  யாழ் மண்ணின் அன்றாட வாழ்வியலிலே பல சிறப்பம்சங்கள் அங்கம் வகித்திருந்தன. இன்றைய நவீனத்தை உட்புகுத்தி கூறினால் அச்சிறப்பம்சங்களை அன்றைய உட்கட்டமைப்பு வசதிகள் என்று கூடக் கூற முடியும்.
 நவாலி வெளி கடந்து வட்டுக்கோட்டை செல்லும் பாதை அருகே இன்னமும் இருக்கும் துரவு, ஆவுரஞ்சிக்கல், கோவிலின் மறுபுரத்தே சுமை தாங்கிக்கல்

இன்றைய சனத்தொகைப்பெருக்கம் அன்று இருக்கவில்லை. சனத்தொகைச் செறிவு குறைவாக இருந்தது. வயல்வெளிகளும் பொட்டல்வெளிகளும் நிறைந்திருந்தன. ஆங்காங்கு துரவுகள் , சுமைதாங்கிக் கற்கள், ஆவுரஞ்சிக் கற்கள், தெரு மூடி மடங்கள், தண்ணீர்த்தொட்டிகள் என உட்கட்டுமானங்கள் காணப்பட்டன. இவை யாழ்ப்பாணக் கலாசாரத்துக்கென தனித்துவமானவை என்று கூறினாலும் மறுப்பதற்கில்லை. இவற்றைத்தான் யாழ்ப்பாணத்து வீதி தர்மம் என விளிக்கிறார் செங்கை ஆழியான்.

போக்குவரத்து என்றாலே மாட்டுவண்டிகளையும் சொந்தக் கால்களையும்  மட்டுமே நம்பியதாக எம்மவர்களுள் பெரும்பாலானோர் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது.  அந் நிலையில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள் இடையிலே இளைப்பாறுவதற்கு தெரு மூடி மடங்கள் பயன்பட்டன. தமது சுமையை இறக்கி வைத்து களைப்பாறி மீண்டும் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சுமை தாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. 
சுமை தாங்கிக் கல்

எம்மவர் பண்பு கால் நடைகளைக் கூட விலக்கி வைக்கவில்லை. அவற்றிற்கும் தம் பண்பாட்டில் சம வகி பாகத்தை வழங்கியிருந்தனர்.  அதற்கு துரவுகளையும் தண்ணீர்த்தொட்டிகளையும் ஆவுரஞ்சிக் கற்களையும் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆவுரஞ்சிக்கற்களானவை கால்நடைகளுக்கு ஏற்படும் திணைவு எனும் ஒரு வகைக் கடியினை நீக்கும் முகமாக உருவாக்கப்பட்டவை எனப் பெரியவர்கள் சொல்லி அறிந்திருக்கிறே. அக்கற்கள் ஒரு மாடு உரசக் கூடியளவு உயரத்திலே சொரசொரப்பான மேற்பரப்பையுடையனவாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆவுரஞ்சிக் கற்களால் எவருக்கும் இடைஞ்சல் இருந்திருக்கும் என நான் என்  சொந்த அனுபவத்தில் உணரவில்லை.

ஆனாலும் இன்றைய காலத்தில் ஆவுரஞ்சிக் கற்களைக் காண்பது வெகு அரிதாகி விட்டது.  நாம் இன்று பயணிக்கும் பாதையானது நவீனம், அபிவிருத்தி, உலகமயமாதல் என புதுப் புது கோணங்களில் நீண்டு செல்கிறது.  அந்த கால ஓட்டத்தில்  இந்த உட்கட்டுமானங்களை எல்லாம் நாம் மறக்கடித்து விட்டோம். அதன் விளைவாக அவை  பாழடைந்து உருக்குலைந்து போயின. பல இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.

இச்சந்தர்ப்பத்திலே யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினர் மேற்கொண்டிருக்கும் முயற்சி பாராட்டப்பட வேண்டியது. பல்கலைக் கழக முன்றலின் ஒரு பகுதியிலே எங்கோ பெயர்த்தெடுத்து வந்த தண்ணீர்த்தொட்டியும் ஆவுரஞ்சிக் கல்லும் சுமை தாங்கிக் கல்லும் உரிய விளக்கங்களுடன் வைக்கப்பட்டிருக்கின்றன. சந்ததிகள் கடந்தாலும் எம் பண்பாட்டை நினைவூட்ட அவை மட்டுமே எஞ்சி நிற்கப் போகின்றன.
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்.....

என்ன என்று அறியாமலே அழிக்கப்பட்ட உட்கட்டுமானங்கள் ஏராளம் எனலாம். தமக்குத் தெரிந்தவற்றை தம் அடுத்த சந்ததியினருக்கு முழுவதுமாகக் கடத்தாமல் விட்டமை எம்மவர் செய்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறென்பதில் ஐயமேதுமில்லை. அவர்கள் கடந்து வந்த அவலங்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது யதார்த்தமான உண்மையாகும். 

  நான் சிறு பராயத்தைக் கழித்த வீட்டிலே இருந்த மாட்டுக் கொட்டில் சீமெந்தால் ஆனது.  மாடு உண்ண வைக்கோல் போடுவதற்கு ஏதுவாகவும்  மாடு தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவாகவும் சீமெந்தினாலேயே கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. மாட்டைக் கட்டுவதற்கு ஏதுவாக தூண்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

இற்றைக்கு இரு தசாப்தங்களுக்கு முன்னர் கிளிநொச்சியின் திருவையாற்றிலே வில்சன் வீதியோரம் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் படலையோடு மாட்டுப்பட்டி இருக்கும். மாடுகளை மேய்ப்பவர்கள் காலையிலே வீடு வீடாகச் சென்று மாடுகள் எல்லாவற்றையும் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வர். மாலையிலே மீண்டும் உரிய வீடுகளுக்குக் கொண்டு போய்ச் சேர்ப்பர்.  நீர்ப்பாசன ஊழியரான இராமலிங்கம் என்பவர்வீதியிலே செல்வோரின் தாகம் தீர்க்கவென குடி நீர்ப்பானை வைத்து பேணுவார் . மாட்டுப்பட்டிகளையோ மேய்ப்பவர்களையோ இப்போது காண்பது வெகு அரிதாகி விட்டது. அன்றிருந்த செழிப்பு அற்றுப் போய் சோபையிழந்து காட்சியளிக்கிறது வில்சன் வீதி. அந்த நினைவுகள் இன்னும் பசுமையாய் நிழலாடுகின்றன.
சேமமடு, வவுனியா

ஏறத்தாழ இரு தசாப்த காலங்களுள் எத்தனை மாற்றங்களை நாம் சந்தித்து விட்டோம்? மாடுகளும் அதற்கு விதி விலக்கல்லவே!  இன்று மாட்டுப்பட்டிகளைக் காண்பது வெகு அரிதாகி விட்டது. மழையிலும் வெயிலிலும் மரங்களுக்குக் கீழேயும் வீதியின் இரு மருங்கிலும் ஒதுங்கும் மாடுகள் தான் அதிகம் எனலாம்.

இரவுகளில் கூட தம் பட்டிக்குச் செல்லாமல் வீதி ஓரங்களிலேயே தஞ்சம் புகும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு மாட்டைக் காணவில்லை என்றால் கூட  துடித்துப் போகும்  உரிமையாளர்கள் மிக அரிதாகி விட்டனர் என்பதன்றி அதற்கு வேறெந்த அடிப்படைக் காரணமும் இருக்க முடியாது.

ஆவுரஞ்சிக் கல்லுக்காகவே அந்த வீதிக்கு வரும் மாடுகளை நான் கண்டிருக்கிறேன். வாசல் கதவு எப்போ திறக்கும்? எமக்கு யார் தண்ணீர் தருவார்கள் என ஏக்கமாய்ப் பார்க்கும் மாடுகளையும் கண்டிருக்கிறேன். தண்ணீர் குடித்து முடிந்ததும் நன்றிப் பெருக்கோடு விலகும் மாடுகளைக் காண்பதில் கிடைக்கும் திருப்தி எதிலும் கிடைப்பதில்லை என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். இந்த மாடுகளுக்கெல்லாம் கதைக்கத்தெரிந்தால் என்னெல்லாம் சொல்லும் என்று நான் கற்பனை பண்ணிப்பார்ப்பதுமுண்டு.  அக்கற்பனையில் மனிதன் கூனிக்குறுகித் தான் நின்றிருக்கிறான்.

சனத்தொகை அதிகரிக்க, நிலங்கள் துண்டாடப்பட ஒவ்வொரு பிரதேசத்துக்குமாக மேய்ச்சல் நிலங்களை ஒதுக்க வேண்டிய தேவை இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது. வன ஓதுக்கெடுகளை விடுவித்து மேய்ச்சல் நிலமாக்குங்கள் எனக் கோரும் பண்ணையாளர்களை அடிக்கடிக் காண முடிகிறது.

மாடுகளைப் பராமரிப்பதிலும் அவற்றின் தேவைப்பாடுகளைக் கருத்தில் கொள்வதில் இன்றைய சந்ததி  அலட்சியம் காட்டுகிறது. மாறாக மாடுகளால் கிடைக்கும் பயனின் உச்ச அளவைப் பெற்றுக்கொள்ள அதீத ஆர்வம் காட்டுகிறது.   பணத்தை மையமாகக் கொண்ட ஆறறிவு ஜீவன் களால் பாதிக்கப்பட்டவை இந்த வாயில்லா ஜீவன் கள் என்பது கண் கூடு.

காலம் ஒன்றும் கடந்து போய்விடவில்லை. நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து செயற்பட்டால் எஞ்சியிருக்கும் பாரம்பரிய உட்கட்டுமா னங்களை  அழிவிலிருந்து மீட்க முடியும். அதே வேளை சுய நலத்தை மட்டுமே கொள்ளாமல் வாயில்லா ஜீவன் களையும் கருத்தில் கொண்டு வீதிக்கொரு ஆவுரஞ்சிக்  கல்லையும் தண்ணீர்த்தொட்டியையுமாவது அமைக்க முயற்சி எடுக்கலாம்.

நாம் வாழும் சூழல் தொகுதி வாழ்வுக்கு ஏற்றதாக இருக்க வேண்டுமாயினும் அங்கு சம நிலை இருக்க வேண்டும். எல்லா உயிர்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அன்றேல் 'தன் வினை தன்னைச்சுடும்' என்ற முது மொழி  நிதர்சனமாவது கண்கூடு.