Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Saturday, February 13, 2021

இயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்?





 கொவிட்19 என்ற பெருந்தொற்றுக் காலம் கடந்த ஒரு வருடமாக வாழ்வின் யதார்த்தத்தை எமக்கு உணர்த்தி வருகிறது. அன்றாட வாழ்விலே மிக அவசியமானவை என நாம் கருதிய பெரும்பாலான விடயங்கள் அவசியமற்றதாகி விட்டன. அவசியமற்றவை என நாம் கருதிய பல விடயங்கள் அத்தியாவசியமாக மாறி விட்டன. நவீனத்தின் பின்னே தடம் மாறிச் சென்று கொண்டிருந்த எமக்கு யதார்த்தத்தை உணர்த்திய பெருமை இந்தப் பெருந்தொற்றையே சாரும் என்பதை எவரும் மறுக்க முடியாது.

அது அப்படி என்னதான் செய்தது? என நாம் சிந்திக்கக் கூடும். பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளான போக்குவரத்து மற்றும் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் காரணமாக சுவட்டு எரிபொருளின் பாவனையும், அதனால் ஏற்படும் பச்சை இல்ல வாயுக்களின் உமிழ்வும் குறைக்கப்பட்டிருக்கின்றன.

வளங்களின் நுகர்வு குறைக்கப்பட்டதால் அந்நுகர்வினால் ஏற்படும் கழிவுகளின் உற்பத்தியும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக சுற்றுச் சூழல் மாசடையும் தன்மை குறைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை போன்ற பல நாடுகளில் வளி மற்றும் ஒலிமாசுக்குக் காரணமான மிகப் பிரதானமான துறை போக்குவரத்தாகும். பெருந்தொற்றுக் காலத்தில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டமை அம்மாசுக்கள் பெருமளவில் குறைவதற்கு வழிவகுத்தன. சுற்றுலாப் பயணிகளின் வரவு குறைவடைந்தமையால் இயற்கைச் சூழல் தொகுதிகள் மீதான அழுத்தங்கள் குறைவடைந்தமை பல நாடுகளில் அறிக்கையிடப்பட்டிருக்கின்றது.

கங்கைநதியின் நீர் தெளிவடைந்தமையும் பல நூறு மைல்களுக்கப்பாலிருந்து பார்க்கும் போதே இமயமலை தெரிகின்றமையும் என்றுமில்லாதவாறு நகரச் சதுப்பு நிலங்களில் வலசைப் பறவைகள் வந்து சேர்ந்தமையும், தாய்லாந்தின் கடற்கரைகளில் அபூர்வ ஆமையினம் முட்டையிட வந்தமையும் என இயற்கை சார் நற்செய்திகள் பலவற்றை இந்தப் பெருந்தொற்றுக் காலம் தர மறுக்கவில்லை.

நாடுகள் பொருளாதார ரீதியாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்த போதும், தற்சார்புப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை அவை மீள உணர ஆரம்பித்தமையும் கூட இப்பெருந்தொற்றுக் காலத்தில்தான்.

இவை இப்படியிருக்க, பெருந்தொற்றுக் காலத்தில் சில பொருட்களின் நுகர்வு மிகையாகியதும் கழிவுகள் சேர்தல் அதிகரித்தமையும் கூட நிகழ்ந்தன. அதை நாம் மறுக்க இயலாது. முகக்கவசம் உள்ளிட்ட சுயபாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொதியிடல் பதார்த்தங்களின் நுகர்வையும் பாவனையையும் அவை சார்ந்த கழிவுகள் அதிகரித்து வருகின்றமையையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். ஆனால் அவை பற்றி நாம் அதிகம் சிந்தித்ததில்லை. சிலவற்றைத் தவிர்க்க முடியாமலிருப்பினும் பலவற்றை எப்படி நாம் இழிவளவாக்கலாம் என்றேனும் நாம் சிந்தித்திருப்போமா? நாம் அப்படிச் சிந்தித்திருந்தால் வீதிகளிலும் இயற்கை வாழிடங்களிலும் பாவித்த முகக்கவசங்களை வீசியெறிந்திருக்க மாட்டோம்.

ஏனெனில் வாழும் மண் மீது, இயற்கைச் சூழல் மீது, அங்கு வாழும் அங்கிகள் மீது நாம் காதல் கொள்வதில்லை. அப்படிக் காதல் கொள்பவர்களையும் கூட சமூகத்துக்கு ஒவ்வாதவர்களாகவே பார்த்துப் பழகி விட்டோம். காதல் என்பது மனிதன்-மனிதன், ஆண்-பெண், மனிதன்- செல்லப் பிராணி, மனிதன்-அவன் உடைமைகள் என்ற மட்டுப்படுத்தல்களுக்குள் முடங்கி விடுவதைக் காண முடிகிறது.

பெப்ரவரி 14 ஆம் திகதியான நாளை கொண்டாடப்படும் காதலர் தினத்துக்காக முழு நுகர்வு உலகுமே பல உத்திகளைப் பாவித்து ஊக்கங்களை வழங்கியுள்ள இத்தருணத்தில் , பொறுப்புணர்வு மிக்க சந்ததியாக நாம் சில விடயங்களை எண்ணிப் பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.

கடைசியாக நீங்கள் எப்போது வெற்றுக் கால்களுடன் மண்ணிலே நடந்திருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது மரமொன்றைத் தொட்டுக் கதை பேசியிருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது பறவையொன்றைப் பார்த்து அதன் வண்ணங்களை இரசித்திருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது உங்கள் கையிலிருந்த குப்பையை அக்கம் பக்கம் பார்த்து விட்டுத் தெருவிலே வீசியெறிந்திருக்கிறீர்கள்?

நீங்களே விடை தேடிப் பாருங்கள்! உங்களுக்கும் இயற்கைக்குமான தூரத்தையும் நீங்கள் இயற்கை மீது கொண்டிருக்கும் காதலையும் உங்கள் விடைகள் இரகசியமாக எடுத்தியம்பும்.

மிருதுவான புற்றரையிலே நீங்கள் சாய்ந்திருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அண்ணாந்து பார்த்தால் அழகிய நீலவானத்திலே மென்பஞ்சு போன்ற முகில் கூட்டங்கள் அசைந்து செல்கின்றன அல்லது அடர்ந்த வனப் பகுதியில் ஒற்றையடிப் பாதையொன்றில் நீங்கள் நடந்து செல்வதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சலசலக்கும் நீரோடையும், கீச்சிடும் பறவைகளும், அசைந்தாடும் மரங்களும், உதிரும் சருகுகுகளும், உடலை மோதிச் செல்லும் தென்றலும் என உங்கள் கற்பனைகளை விரித்துச் செல்லுங்கள். மனதுக்கு இதமாக இருக்கிறதல்லவா? அதுதான் இயற்கை தரும் இன்பம். உள ஆரோக்கியம்.

இப்படியெல்லாம் நீங்கள் வாழ்ந்து எத்தனை வருடங்களாகின்றன? அதுதான் இயற்கைக்கும் உங்களுக்குமிடையிலான தூரம். எங்களுடைய நல்வாழ்வுக்கு இயற்கை ஆற்றும் அளப்பரிய பங்கை நாம் பல வேளைகளில் மறந்து விடுகிறோம். நாம் உண்ணும் உணவிலிருந்து சுவாசிக்கும் சுத்தமான காற்று, அருந்தும் நீர், உடுக்கும் ஆடை, உறையும் இல்லம் தொட்டு எமது கலாசாரம், பண்பாடு யாவற்றுடனும் இயற்கை பாரியளவில் தொடர்புபட்டுள்ளது. ஆனால் “இயற்கையின் முக்கியத்துவம் என்ன?” என்று வினவினால், பதில் சொல்வதற்குப் பலர் திக்குமுக்காடுவர். அந்த இயற்கையிலே ஒரு பகுதியாக மனிதன் இருப்பதை அவனே அங்கீகரிக்க மறுப்பதும், இயற்கை என்றால் அனைத்தும் இலவசமாக, தனக்காகவே படைக்கப்பட்டது, அது அள்ள அள்ளக் குறையாது என மனிதன் நினைப்பதும்தான் இயற்கையின் பெறுமதியை அவனால் உணர முடியாமல் செய்து விட்டது.

இங்ஙனம் இயற்கை மீது மனிதன் செலுத்தும் தொடர் ஆதிக்கம் காரணமாக காலநிலை மாற்றம் எனும் பெரும் அனர்த்தம் எம்மை நோக்கி மெதுமெதுவாக நெருங்கி வருகிறது. செறிவு கூடிய நீடித்த மழைவீழ்ச்சியும் குறையும் வருடாந்த மழை நாட்களும் தொடர் வரட்சி, சூறாவளி, பெருவெள்ளம் போன்ற பல இயற்கை அனர்த்தங்களும் பயிரழிவுகளும் நட்டஈடுகளும் எமக்கு பழகிப் போய்க் கொண்டிருக்கின்றன.கொவிட் பெருந்தொற்றை ஒரு அவசரகால நிலைமையாகக் கருதி உலக நாடுகள் அதனை அவசரமாக எதிர்கொண்டதைப் போல காலநிலை மாற்றத்தையும் அவசரமாக எதிர்கொள்ள வேண்டுமென உலக பொருளாதார மன்றம் கோரிக்கை விடுக்கிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் உலகளாவிய ரீதியிலே அரசாங்கங்கள், வர்த்தகங்கள், தனிநபர்கள் என அனைத்துத் தரப்புகளும் இணைந்து அதன் தாக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகையதோர் உத்தி ரீதியான வழியில் காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ள முடியும் என இக்கூட்டிணைவு நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

காலநிலை மாற்றமென்பது பொதுவாக ‘பூலோகம் வெப்பமயமாதல்’ எனும் பதத்தினால் விளக்கப்படுகிறது. பூகோள வெப்பநிலையில் ஏற்படும் நிலையான அதிகரிப்பினால் ஏற்படும் வெப்ப அலைகள் தொட்டு உறைபனி உருகுதல் வரை ஏற்படும் தொடர் மாற்றங்களை அது குறிக்கிறது. ஆயினும் புவியியல் தொட்டு தொல்லியல் வரை பல்துறை சார் விஞ்ஞானபூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் காலநிலை மாற்றமென்பது தொடர்ந்து அதிகரித்து வருமொரு தோற்றப்பாடு அல்ல எனக் குறிப்பிடப்படுகிறது. மனித நாகரிகத்துக்கு முற்பட்ட காலங்களில் அது ஆர்முடுகப்பட்டிருக்கவில்லை. தற்போது மனித செயற்பாடுகளால் அதீதமாக உமிழப்படும் பச்சை இல்லை வாயுகள் காரணமாகவே அது ஆர்முடுகப்பட்டிருக்கிறது.

புவியின் உயிர்க்கோளத்தின் நிலைப்புக்குப் பல இயற்கை வட்டங்கள் காரணமாக அமைந்து விடுகின்றன. அவற்றுள் காபன் வட்டம் மிக முக்கியமானது. இந்த உயிர்க்கோளம் காபனைச் சேமித்து வைப்பதும் வெளியிடுவதுமாகத் தனது தொழிற்பாட்டை ஒரு சமநிலையில் மேற்கொள்ளும். பூகோள வெப்பமயமாதலுக்கு உயிர்க்கோளம் முகம் கொடுக்கும் போது ஒரு கட்டத்தில் காபன் வட்டத்தில் சமனற்ற நிலை தூண்டப்படும். இந்நிலைமை எல்லைப் புள்ளியைத் தாண்டும் போது காலநிலையிலே நேர்கோட்டுத் தொடர்பல்லாத மிகவும் பாரதூரமான மாற்றம் நிகழும்.

உயர்ந்த கற்கோபுரமொன்றை எண்ணிக் கொள்ளுங்கள். காலங்காலமாக நாமும் எமது முன்னோரும் அக்கோபுரத்தின் கற்களை ஒவ்வொன்றாக அகற்றி வருகிறோம் எனக் கொள்வோம் . ஒரு கட்டத்தில் மிக முக்கியமான மையக்கல்லை நாம் அகற்றும் போது அக்கோபுரம் இடிந்து வீழ்ந்து விடும். இதுதான் புவியின் உயிர்க்கோளத்திலும் நடைபெறுகிறது. நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்பாடும் புவிக்கோபுரத்தின் கல்லொன்றை அகற்றுவதற்கு ஒப்பானது. அது பச்சை இல்ல வாயுகளின் உமிழ்வாக இருக்கட்டும், எம்மால் மேற்கொள்ளப்படும் பொறுப்பற்ற நுகர்வுகள் மற்றும் உற்பத்திகளாகவிருக்கட்டும். ஏன் காடுகளின் அழிவாகக் கூட இருக்கட்டும்.

அந்த மையக்கல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை அகற்றுபவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் பெரும் அனர்த்தத்துக்கு வழிகோலுபவர்கள் நாமாக இருக்கக் கூடாது என நாம் ஒவ்வொருவரும் உறுதி பேண வேண்டும். காடழித்தலும் மரம் நாட்டுதலும் பல வேளைகளில் மிகை நிரப்பும் செயற்பாடுகளாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் அச்செயற்பாடுகளானவை வீட்டிலே வருமானமீட்டும் ஒருவரின் இழப்புக்குப் பதிலீடாக கைக்குழந்தையைக் கொடுப்பதற்கு ஒப்பானதாகும். மிக நீண்ட கால நோக்கத்திலே அது சில வேளைகளில் பொருத்தமான பதிலீடாக இருக்கலாம். ஆயினும் உடனடியான பதிலீடல்ல. காடு என்பது தனக்கேயுரித்தான இயக்கவியலையுடைய ஒரு சூழல் தொகுதியாகும். அதன் இயக்கவியலின் காரணமாகத்தான் எமக்கு பல சூழல் தொகுதிச் சேவைகள் கிடைக்கப் பெறுகின்றன.

அருவிகளிலும் நிலக்கீழ் சுனைகளிலும் காணப்படும் சுத்தமான நீர் அச்சேவைகளின் பிரதிபலனாக எமக்குக் கிடைப்பதாகும். காடுகளின் இயக்கவியல் மிகச் சிக்கலானது. அதன் இயக்கவியலைப் பிரதி பண்ணுதலென்பது மனிதனின் முயற்சிகளுக்கு அப்பாற்பட்டது. மனிதனால் இயலாதது. ஆனால் காடழிக்கப்பட்ட பிரதேசத்தை மிகவும் இழிவளவான மனிதத் தலையீட்டுடன் சுயமாகவே மீள விட்டால் சில தசாப்தங்களின் பின்னர் மெல்ல மெல்ல அச்சூழல் தொகுதி தான் இழந்த இயக்கவியலை மீளப் பெற ஆரம்பிக்கும். அதற்கு தசாப்தங்களும் ஆகலாம். நூற்றாண்டுகளும் ஆகலாம். அதன் உயிர்ப் பல்வகைமைச் செறிவு மெல்ல மெல்ல அதிகரிக்க, அச்சூழல் தொகுதியின் உறுதித் தன்மையும் அதிகரிக்கும். இம்முறைமை காடுகளுக்கு மட்டுமல்ல, எல்லா சூழல் தொகுதிகளுக்குமே பொருந்தும். இன்று நாம் அழித்த காடுகள் எமக்கு வழங்கிய சூழல் தொகுதிச் சேவைகளை நாம் மீண்டும் பெற பல சந்ததிகள் காத்திருக்க வேண்டியேற்படும். அதுவரை அவை மனிதத் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டுமென்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

காடுகள் (கண்டல் காடுகள் உட்பட) சேமித்து வைத்திருக்கும் காபனின் அளவு மிக அதிகமாகும். அவை அழிக்கப்படும் போது அக்காபன் சூழலுக்கு வெளிவிடப்படுவதானது பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கிறது. அவை அழிக்கப்பட்ட பின் நிலப்பாவனை மாற்றம் பெற, அங்கு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கின்றன. இது ஒரு சிறு உதாரணமாகும் . இவ்வாறு நாம் நுண்ணியளவு தொட்டு பாரியளவு வரை மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளும் பூகோள வெப்பமயமாதலுக்குப் பங்களிக்கின்றன.

காலநிலை மாற்றம், உலகளாவிய வெப்பநிலை 2 பாகை செல்சியஸ் இனால் அதிகரிப்பு, வளங்களின் அதீத நுகர்வு, சூழல் மாசு என தகித்துக் குறைவடைந்து சென்று கொண்டிருந்த கொண்டிருந்த பூமியின் ஆயுட்காலத்தைத் சற்று நீடித்திருக்கும் இப்பெருந்தொற்றுக் காலத்தில் , நாளை கொண்டாடப்படவிருக்கும் காதலர் தினத்தன்று இயற்கை மீது நாம் கொள்ளும் காதலை ஏன் வெளிப்படுத்த ஆரம்பிக்கக் கூடாது?

எப்படியென்று யோசிக்கிறீர்களா?

அத்தியாவசியத் தேவையின்றி இயற்கையான சூழல் தொகுதியொன்றைக் குலைக்க முயற்சி செய்யாதீர்கள். அவ்வாறு குலைக்க வேண்டியேற்படின் மாற்று வழியேதும் இருக்குமா என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக, காணியில் இருக்கும் மரங்களையெல்லாம் அழித்து துப்புரவாக்கிய பின்னர் வீட்டுக்கு அத்திவாரம் போட ஆரம்பிக்கும் பல மனிதர்களையும் மூட நம்பிக்கைகள், சாஸ்திர சம்பிரதாயங்களைப் பரிபூரணமாக நம்பிப் பல அரிய மரங்களைத் தறிக்கும் பெரியவர்களையும் அரிமரப்பெறுமதியில்லாதது என, பல தசாப்தங்கள் பழைமையான, பறவைகள் கூடி வாழும் மரங்களையும் நிழல் தரும் மரங்களையும் தறித்த கற்றவர்களையும் பொன் முட்டையிடும் வாத்தின் கதையாய் அரிமரம் பெறுமதியானது, நாம் இருக்கும் போதே அனுபவித்து விட வேண்டும் எனப் பல அரிய மரங்களை அரிந்து முடித்த புத்திசாலிகளையும் கூட நான் சந்தித்திருக்கிறேன். நாங்கள் அனுபவித்த இயற்கையை எமது எதிர்கால சந்ததியும் அனுபவிக்க வேண்டாமா? அந்த இயற்கை எமக்கு வழங்கிய சேவைகளை எமது எதிர்கால சந்ததிக்கும் வழங்க வேண்டாமா? மரங்களைத் தறிக்க விழையும் போது ஒருகணம் நிதானித்து சிந்தித்து உங்கள் முடிவை மீள் பரிசீலனை செய்யுங்கள்.

மரங்களை நட விரும்பினால், சுதேச தாவரங்களை நடுங்கள். அவற்றை நம்பியே எம் தேசத்தின் உயிர்ப்பல்வகைமை அமைந்திருக்கிறது. நாடியவுடன் பலன் தர வேண்டும், துரிதமாக வளர வேண்டும், விரைவில் பயன் தர,வேண்டும் என்ற குறுகிய நோக்குகளுடன் அந்நியத் தாவரங்களை நாட்டுவதை அனுமதிக்காதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்து உங்களைச் சூழவிருக்கும் இயற்கைச் சூழலை அவதானித்துப் பாருங்கள். சிறுதாவரங்கள் தொட்டு மரங்கள், பறவைகள் முதல் பிராணிகள், விலங்குகள் வரை அனைத்துமே அழகாய்த் தெரியத் தொடங்கும். அவற்றின் அழகையும் வண்ணங்களையும் வண்ணங்கள் அமைத்திருக்கும் கோலங்களையும் அவதானித்து இரசியுங்கள். அவ்வுயிர்களை அடையாளப்படுத்த முயற்சி செய்யுங்கள். அவற்றின் இருப்பின் நோக்கம், மனித இனத்துக்கும் தாம் வாழும் சூழலுக்கும் அவை வழங்கும் சேவைகளை அறிய முயலுங்கள். சுய நலமாயினும் அவை மீது நீங்கள் காதல் கொள்வீர்கள். அக்காதல் இப்பூவுலகில் அவற்றின் நிலைப்பை மட்டுமல்ல எங்கள் அனைவரது இருப்பையும் உறுதி செய்யும். முயன்றுதான் பாருங்களேன்!

Sunday, June 26, 2011

அமெரிக்காவிலும் ஒரு புகுஷிமா?


  
அமெரிக்காவில் இருக்கும் மிசூரி நதி உலகின் 15 ஆவது பெரிய நதி. ஏறத்தாழ 2340 மைல்கள் நீளமானது. அதன் மூலத்திலிருந்து ஆரம்பித்து மிசிசிப்பி ஆற்றிலே கலக்கிறது. ஏறத்தாழ 10 மில்லியன் மக்கள் இந்த ஆற்றினால் பயன் பெறுகிறார்கள்.1673 இலே தான் ஐரோப்பியர்கள் இந்த நதியைக் கண்டு பிடித்தார்கள்.

நதி என்றால் பெருக்கெடுக்கத்தான் செய்யும். அப்படி இருக்கையில் மிசு+ரி ஒன்றும் விதிவிலக்கல்லவே. நதி ஒன்று பெருக்கெடுத்து அழிவுகள் பாரதூரமானவையாக அமையும்போது அது வரலாற்றிலே பதியப்படும். மிசூரி நதி பெருக்கெடுப்பது ஒன்றும் அமெ ரிக்காவுக்கு புதிதல்ல. 1881, 1953, 1993 ஆகிய ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் (2011 ஜூன்) மிசூரி நதியின் பெருக்கு கட்டுக்கடங்காமல் போயிருக்கிறது. இவ்வருடத்தின் இலை துளிர், கோடைக்கால ஆரம்பத்தில் ஏற்பட்ட தொடர் மழையால் மிசு+ரி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்திருக் கிறது. நீரின் அளவு நதியின் கொள் ளவை மீறியதால் குடியிருப்புப் பகுதி களுக்குள் நீர் புகத் தொடங்கியிருக் கிறது. நீரின் போக்கைத் தாக்குப் பிடிக்க முடியாத நீர்த்தேக்கங்கள் உடைப்பெடுக்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன. அத்தகைய 6 அணைக் கட்டுகளின் வான் கதவுகள் தற்போது திறந்து விடப்பட்டுள்ளன. நதி நீர் மட்டம் இன்னும் சில அடிகள் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நதியின் ஆழம் 44.3 அடிகளாக இருந்தது. அதுவே நதியின் மிகக் கூடிய ஆழமாகக் கருதப்பட்டி ருந்தது. ஆனால் தற்போது ஏற்பட்டி ருக்கும் வெள்ளம் அந்தப் பதிவையும் வென்று நதியின் ஆழத்தை 44.4 அடிகளாக்கியிருக்கிறது.

மனிதன் இயற்கைக்குப் புறம்பாகத் தொழிற்படும் போது தான் இயற்கை யின் சீற்றத்துக்கும் ஆளாகிறான். இந்த உண்மை மிசூரி நதியின் வெள் ளப்பெருக்கிலும் தெளிவாகத் தெரிகிறது. பல மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பலர் தற்காலிகமாக வேறு இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வீதிகள், புகைவண்டிப்பாதைகள் பல சேதமடைந்திருக்கின்றன. வெள்ளம் பெருகாமல் தடுக்க மண் மூடைகளை அடுக்குகின்றனர். மரக்கட்டைகளை எரிக்கின்றனர். இந்த வெள்ளப் பாதிப்பு களின் தாக்கம் நீண்டகால நோக்கிலே வெளிப்படும் என நம்பப்படுகிறது. அதே வேளை உலகளாவிய ரீதியி லும் பல பின்னடைவுகளைத் தோற்று விக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நதியில் நீரின் போக்கு அதிகரித்த மையானது, அருகிவரும் மீனினங்கள் சில பெருகும் வாய்ப்பையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இவையெல்லாம் இப்படி யிருக்க மிசூரி நதியின் பெருக்கெடுப் பானது நெப்ராஸ்கா என்ற பகுதியை இன்னொரு புகுஷிமாவாக மாற்றிவி டுமோ என்ற ஊகங்கள் பலவும் எழுந்துள்ளன. ஏனெனில் உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடு அமெரி க்காதான். காரணம், ஜப்பானில் உள்ளதைப் போல பல மடங்கு அதிக அணு உலைகளை தனது கடற்கரை நகரங்களில் உருவாக்கி வைத்துள்ளது அமெரிக்கா. மியாமியில் தொடங்கி அத்திலாந்திக் சமுத்திரத்தை ஒட்டியுள்ள அமெரிக்கக் கடற்கரை முழுவதும் 30க்கும் மேற்பட்ட அணு சக்தி நிலையங்களும் அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட அணு உலைகளும் நிறுவப்பட்டுள்ளன. இவை தவிர, மேற்குப் பகுதியில் பசுபிக் கடற்கரை நகரங்களிலும் 10 அணுசக்தி நிலை யங்கள் உள்ளன. அமெரிக்காவின் உட்புற மாகாணங்களில் மட்டும் 64 அணுசக்தி நிலையங்கள் உள்ளன.

தற்போது மிசூரி நதி பெருக்கெடுத் துள்ளதால் நெப்ராஸ்கா பகுதியில் உள்ள அணைக்கட்டுகள் யாவுமே திறந்து விடப்பட்டுள்ளன. அதனால் நெப்ராஸ்காவில் இருக்கும் அணு உலைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன. /போர்ட் கார்ள்ஹோன் என்ற ஒரு அணு உலை கடந்த 21 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டது. அணு உலையின் சில பகுதிகளை ஏலவே 2 அடி வெள்ளம் ஆக்கிரமித்து விட்டிருக்கிறது. மின்சார உபகரணங்கள் இருக்கும் பகுதியை அவசர காலச்சுவர் பாதுகாத்து வருகிறது.

நீர் மட்டம் பாதுகாப்பு மட்டத்தை விட உயர்ந்தால் அணு உலைகள் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவிக் கின்றனர். அத்துடன் இது வரை அணு உலைகளிலிருந்து சூழலுக்கு எந்த ஒரு கதிர்த்தொழிற்பாட்டுப் பதார்த்தங் களும் விடுவிக்கப்படவில்லை. ஆனால் இயற்கையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் மனிதனுக்கில்லையே. ஆதலால் அணு உலைகளுடன் சம்பந்தப்பட்ட சகல துறையினரும் வானிலை ஆராய்ச்சி மையத்துடனான தொடர்பைப் பேணி வருகிறார்கள். வானிலை மாற்றம் தொடர்பில் உடனுக்குடன் அறிவுறுத் தப்படுகிறார்கள். அமெரிக்க இராணு வத்தின் பொறியியல் படையணி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் ஜப்பான், புகுஷிமா அணு உலை அனர்த்தமும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்டு இன்றும் தொடர்ந்து வரும் சர்ச்சைகளும் உலக ளாவிய ரீதியிலே பெரும் விழிப்புணர் வைத் தோற்றுவித்துள்ளன எனலாம். சாதாரண மக்கள் மத்தியில் ஏற்பட்டி ருக்கும் இந்த விழிப்புணர்வு வெகுசனத் தொடர்பு ஊடகங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றால் கூட மிகையில்லை.

அந்த விழிப்புணர்வு தான் நெப்ரா ஸ்கா மக்கள் தொடுக்கும் கேள்விக் கணைகளின் பின்னணியிலும் இருக் கிறது. அணு உலைகள் இருக்கும் பகுதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதா என்று கேட்டே தமக்குப் பல தொலை பேசி அழைப்புகள் வந்து கொண்டிருப் பதாக சம்பத்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். வெள்ளத்தைத் தடுப்ப தற்காய் மண் மூடைகள் அடுக்கப்படு கின்றன. ஆனால் அவை போதாது என ஆய்வாளர்களால் அறிவுறுத்தப்பட்டிருக் கின்றது. "போதுமான ளவு பாதுகாப்பு, முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலதிக வெள்ளத்தடுப்பு கதவுகள் போடப்பட்டி ருக்கின்றன. ஆதலால் பயப்பட வேண்டிய தேவை இல்லை" என ஆய்வாளர்களு க்குப் பதிலளித்திருக்கிறது அதிகாரத் தரப்பு. பிரச்சினை யாதெனில், மிசு+ரி ஆற்றில் தற்போது உயர்ந்திருக்கும் நீர் மட்டம் ஓகஸ்ட் வரை குறையப் போவதில்லை என எதிர்வுகூறப்படுகிறது. பாதுகாப்புத் தடைகளும் இறப்பர் சுவர்களும் அணு உலைப்பகுதிக்குள் நீர் உட்புகுவதைத் தடுத்து வருகின்றன. ஆனால் இந்த நிலைமையின் எதிர் காலம் எதிர்வுகூறப்படமுடியாதது என்பதே யாவரும் அச்சம் கொள்வதற் கான காரணமாகும். அதேபோல நெப்ராஸ்காவில் அமைக்கப்பட்டிருக்கும் மற்றொரு அணு உலையான கூப்பர் உலையும் வெள்ள அபாயத்தால் பெரும் அச்சுறுத்தலை எதிர் நோக்கி யுள்ளது. அந்த அணு உலையின் தீயணைப்புப் பிரிவிலிருந்து மிசூரிநதி யிலே எண்ணெய்க்கழிவுகள் கலக்கவிடப் பட்டதாக அப்பகுதியின் சுற்றாடல் தர திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டி ருக்கிறது. அதாவது தீயணைப்புப் பிரிவையும் மிசு+ரி நதியையும் பிரிக்கும் தடைகள் வெள்ளத்தின் முன்னே செய லிழந்து போயின. எரிதலுக்குப் பாவிக் கப்படாத எண்ணெயும் ஏனைய கழிவு கள் கலந்த நீரும் மிசூரிநதியிலே கலக்கப்படுகின்றன. ஆனாலும் அவற்றில் கதிர்த்தொழிற்பாட்டுப்பதார்த்தங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது.

மிசூரி நதியிலே நீர் மட்டம் மேலும் உயர்ந்தால் கூப்பர் உலையையும் தற்காலிகமாக மூட வேண்டிய நிலை ஏற்படலாமென அச்சம் தெரிவிக்கின்ற னர் அதிகாரிகள்.

அமெரிக்க அணுக்கொள்கையைப் பொறுத்தவரையிலே அணு உலைகளின் பாதுகாப்புக்கான முக்கியத்தும் மிகவும் குறைவாகவே இருக்கிறது. என்று அணு உலை கட்டப்படுகிறதோ அன்றே அதனால் ஏற்படப்போகும் அழிவுக்கான வித்தும் இடப்படுகிறது எனலாம். நெப்ராஸ்காவிலிருக்கும் ஏதோ ஒரு அணு உலையிலே கசிவு ஏற்பட்டாலும் விளைவுகள் புகுஷிமா அணு உலைகளினதை ஒத்தவையாக இருக்கும் என எதிர்வு கூறப்படுகின்றன.

பூமியதிர்ச்சியால் புகுஷிமாவின் டாய் இச்சி அணு உலையில் கசிவு ஏற்படுவதற்கு 6 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கசட்டவாளர்கள் உண்மையொன்றை உணர்ந்தனர். பூமியதிர்ச்சியால் அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள அணு உலைகள் எதிர் நோக்கும் அச்சுறுத்த லானது எதிர்பார்த்ததை விட மிக அதிகமாகும் என்பதே அந்த உண்மை யாகும். இதையடுத்து அணுலைகளின் வடிவமைப்பை மாற்றியமைத்தல் தொடர்பாக ஆராய வேண்டுமென பொறியிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

சட்டவாளர்கள் கண்டறிந்த உண்மை பொய்க்கவில்லை. அமெரிக்காவில் இல்லையாயினும் ஜப்பான், புகு'pமா விலே நி'ரூபிக்கப்பட்டது. புகுஷிமா அனர்த்தமானது எவரும் எதிர்பார்க்காதளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தமை நாம் யாவரும் அறிந்ததே. இவை இப்படியிருக்க, புகு'pமா அணூலை அனர்த்ததின் போது வெளியேறியே கதிர்த்தொழிற் பாட்டுத் தூசுகள் சில நாட்களிலேயே வட அமெரிக்காவைச்சென்றடந்தன என்ற புதியடோர் செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் சம்பந்தப் பட்ட இரு அரசாங்கங்களும் இந்த உண்மையை மறைத்து விட்டன என WASHINGTON'S POST என்ற வலைப்பூ தெரிவிக்கிறது.

புகுஷிமா அணு உலை அனர்த்தம் நிகழ்ந்துகொண்டிருந்த காலப்பகுதியிலே பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பலர், கதிர்த்தொழிற்பாடுள்ள தூசுத்து ணிக்கைகளின் பரவல் தொடர்பாக எச்சரித்திருந்தனர். அத்துணிக்கைகள் வட அமெரிக்காவுக்கும் பின்னர் ஐரோப் பாவுக்கும் கூடப் பரவலாம் என்பது அவர்களது ஊகமாக இருந்தது.

ஜெட் விமானத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையை ஒத்ததாக இந்த தூசு துணிக்கைகளும் பசுபிக் சமுத்திரத்தைக் கடந்து பயணிக்கும் என்றனர். அது உண்மையே. நியூயோர் க்கில் தாக்கம் உணரப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அக்கூற்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஜப்பானில் புகுஷிமா அணுஉலை அனர்த்தம் நிகழ்ந்த பின் உலகளாவிய ரீதியிலே பல நாடுகளிலும் எண்ணற்ற தரவுகள் சேகரிக்கப்பட்டு, அரசாங்கங்களிடையே பரிமாறப்பட்டன. ஆனால் அவை கல்வி யாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியிலோ பொதுமக்களிடமோ பகிரப்படவில்லை.

அணு ஆராய்ச்சி, அணுவுடன் தொடர்புடைய சகல விடயங்களிலும் இந்த நிலைமை தான் காணப்படுகிறது. அணுவுடன் தொடர்புடைய அனர்த்தமொன்று நிகழும் போது அதன் உண்மைப் பாதிப்புகள் வெளி உலகுக்குத்தெரியாமல் மறைக்கப்படுகின்றன.அணு உலைகளின் வடிவமைப்பு கூட இரகசியமாகவே பேணப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளின் பின்னணியில் இராணுவ, அரசியல், பொருளாதார ரீதியான, பாதுகாப்புக் காரணங்கள் காணப்படுகின்றன. அத்தகைய காரணங்களின் முன்னே பொது மக்களின் நலன் என்பது செல்லாக் காசாகி விடுகிறது என்பதே நிதர்சனம்.


Sunday, February 6, 2011

இயற்கையிலும் ஒரு குருஷேத்திரம்





‘கடைசியாய் ஒருமுறை

கூவிக் கொள்க குயில்களே’

என்று தொடங்கி,

‘திட்டுத் திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்

தட்டுக்கள் எழும்

ஓன்றன் மீதொன்று படையெடுக்க...



பூமியின் வயிற்றெரிச்சலாயக்

காலங்காலமாய் கனன்று கிடந்த

அக்கினிக்குழம்புகள்

விடுதலை கேட்க....



வெறிகொண்ட மேகங்கள்

விரைவதைப் போலப்

பாறைகள் பூமிக்குள்

பயணப்பட...



தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது

பூமிக்குள் ஒரு குருஷேத்திரம்’

என்று நீளுகின்றன.

கவிஞர் வைரமுத்துவின் வரிகள்.



முழுமையாகப் படித்துணர்ந்தவர்களுக்கு அவ்வரிகளின் யதார்த்தம் விளங்கியிருக்கும்.

அண்மைக் காலங்களாக நாம் கண்டும் கேட்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும் இயற்கை அனர்த்தங்கள் இக்கவிதையை மேன்மேலும் நியாயப்படுத்துவதாகவே அமைகின்றன.

அவற்றிற்கப்பால் இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக ‘2012’ மாறிவிட்டது. அண்மைக்காலங்களில் நிகழும் தொடர் இயற்கை அனர்த்தங்கள் ‘2012’ தொடர்பான ஊகங்களை வலுப்பெறச் செய்கின்றனவோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் அந்த ஊகங்களை மறுக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள் 2012 தொடர்பான ஊகங்களுக்கான நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட புனைகதைகளே என்கின்றனர் அவ்விஞ்ஞானிகள்.

2012 தொடர்பான ஊகங்களில் ஒன்றுதான் புவிக்கோளத்தின் வட, தென் முனைவுகளின் இடமாற்றமாகும். வட, தென்முனைகளின் இடமாற்றம் என்றதுமே வடமுனைவு தென்முனைவாகவும் தென்முனைவு வடமுனைவாகவும் மாறிவிடும் என்றே பலர் எண்ணுகின்றனர். ஆனால், ஒரு எல்லை வரை அது உண்மையாகாது.

புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமே இந்த வட, தென் முனைவுகளின் இடமாற்றம் என்கின்றனர் விஞ்ஞானிகள். புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமானது நிலநடுக்கங்கள், சுனாமி அனர்த்தம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தலாமென அவர்கள் தரப்பில் எதிர்வு கூறப்படுகிறது.
புவிக்கோளத்தைச் சூழ காந்தப்புலமொன்று தொழிற்படுவது நாம் யாவரும் அறிந்ததோர் விடயமே. புவிச்சுழற்றி அச்சில் ஏற்படும் மாற்றம் புவியைச் சூழவுள்ள காந்தப்புலத்திலே மாற்றத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது. புவிக்கோளத்தின் வரலாற்றிலே இது ஒன்றும் புதிய விடயமல்ல.

அத்தகையதோர் மாற்றம் 785,000 ஆண்டுகளுக்கோ அதற்கும் முன்னரோ, நிகழ்ந்திருக்கலாம். எனக் கூறப்படுகிறது.

விஞ்ஞான ரீதியான அனுமானங்களின் அடிப்படையில் புவிச்சுழற்சி அச்சின் இடமாற்றம் ஏறத்தாழ 300,000 ஆண்டுகளின் முன்னர் இடம்பெற்றதாகக் கணிப்பிடப்படுகிறது. புவிக்கோளத்தைப் பொறுத்தவரை அது இயற்கையானது.


புவியைச் சூழவுள்ள காந்தப்புலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, என்பது இன்றும் விஞ்ஞானிகள் மத்தியில் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், புவிக்கோளத்தில் உள்ள உயிர்களின் நிலைப்பு அந்தக் காந்தப்புலத்திலேயும் தங்கியுள்ளது என்பதை அவர்களால் உணரமுடிகின்றது.

புவிக்காந்தப்புலத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட உலகளாவிய அழிவை ஏற்படுத்தவல்லது என்பதை நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்திருந்தனர்.

புவிக்கோளத்தின் உட்படைகளுள் அதன் மையத்தில் திண்மக் கோளமும், அதைச்சூழ திரவ இரும்பையொத்த குழம்பும் காணப்படும். ஆக வெளியிலே உள்ளபடைதான் புவியோடு எனப்படுகிறது. புவியின் இந்தக் கட்டமைப்பை ஒரு பிரமாண்ட டைனமோவின் இயக்கத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறது விஞ்ஞானிகளின் ஞானம்.

அந்த அடிப்படையில் புவிக்கோளத்தின் கட்டமைப்பு தான் அதைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குக் காரணம் என்ற விளக்கத்தையும் சேர்த்தே முன்வைக்கின்றனர் விஞ்ஞானிகள்.

உண்மையில் முனைவுகளின் இடமாற்றம் என்பது ‘புவிச் சுழற்சி அச்சு இன்று இருக்கும் இடத்தில் நாளை இருப்பதில்லை’ என்ற கருதுகோளையே குறிக்கிறது.


முனைவுகளின் இடமாற்றத்தை புவித்தட்டுக்களுடன் இணைந்து குழப்ப வேண்டிய அவசியமில்லை. புவித் தட்டுக்களின் நகர்வு முற்றிலும் வேறு பட்டதானதோர் நிகழ்வாகும். அதேபோல முனைவுகள் இடம்மாறினால் காந்தம் வடக்கும் தெற்கும் கூட இடம்மாறும் என்று அனுமானிப்பதும் மிகத்தவறான விடயமாகும்.

அண்மைக்காலங்களிலே புவியியலாளர்களும் விஞ்ஞானிகளும் இணைந்து நடாத்தினர். அவற்றின் அடிப்படையில் புவிக்கோளமானது ஏறத்தாழ 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (முன்கம்பிரியன் காலம்) தனது சமநிலையை மீளமைத்துக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அடையற் பாறைகளிலுள்ள காந்தத்தன்மையுடைய கனியங்களை ஆய்வு செய்வதன் மூலம் இந்த முடிவுபெறப்பட்டது. கடந்த 20 மில்லியன் வருடங்களில் வடமுனைவானது ஏறத்தாழ 50 பாகை இடமாறியிருப்பதாக (அசைந்திருப்பதாக) அந்த ஆய்வு தெரிவிக்கிறது. GPS (Global Positioning System) தொழில்நுட்பத்தினடிப்படையிலான ஆய்வொன்று இப்படித் தெரிவிக்கிறது.

சாதாரண பருவகால மாற்றங்கள் கூட புவிக்கோளத்தின் நீர், பனிப்பாறைகளின் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துமெனவும், அந்தமாற்றமானது முனைவுகளில் மிகச் சிறிதளவிலான இடமாற்றத்தை ஏற்படுத்தும். இதுவே அந்த மிஜிஷி ஆய்வு சொல்லும் தகவலாகும்.

அத்தகையதோர் மாற்றம் ஏற்படுமாயின் பூமியில் என்ன எல்லாம் நடக்கலாமெனப் பலரும் பலவிதமான எதிர்வு கூறுகின்றனர்.



காந்தப்புலத்துடன் தொடர்புடைய சகல விடயங்களுமே பாதிக்கப்படுமென்பது பொதுவான ஊகமாகும். அவற்றுள் கப்பல்களும் ஆகாய விமானங்களும் கூட அடங்கிவிடுகின்றன. ஏனெனில் அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் திசையறி கருவி காந்தப்புலத்துடன் தொடர்புடையது. சகல திசைகாட்டிகளும் செய்மதிகளும் கூட செயலிழந்து விடும் நிலையே ஏற்படும். காலத்துக்குக் காலம் இடம்பெயரும் மிருகங்களும் பறவைகளும் கூட எங்கே செல்வது என்று குழப்பமடையும் நவீன தொழில் நுட்ப வசதிகள் யாவுமே ஸ்தம்பித்துப் போகும். மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக பேரழிவுகள் நிகழும் என்று தெரிவிக்கின்றனர் ஒருசாரார்.

வட- தென் முனைவுகளில் அத்தகைய இடமாற்றம் நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதே எவராலும் துல்லியமாகக் கூறமுடியாது. புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலம் ஏதேச்சையானது என்று ஒருபோதும் கூறமுடியாது. அதன் பிரதான தொழிலே அண்டக் கதிர்களிலிருந்தும் சூரியக் கதிர்களில் இருந்தும் புவிக்கோளத்தை (எம்மை)ப் பாதுகாப்பதாகும்.

இந்த காந்தப்புலம் இல்லையென்றால் பூமியில் உயிர்வாழ்க்கையென்பது கூட சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும். அதே போல புவியில் உயிர்வாழ்க்கை இத்தனை மில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்கின்றதென்றால், அதற்கும் இந்த காந்தப்புலம் ஒரு காரணமாகும். அது இல்லாவிடில் உயிரைப் பறிக்க வல்ல சூரியக்கதிர்ப்புகள் பூமியை நேரடியாக வந்தடையும்.


இயற்கையை மனிதன் முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். அவன் அறியாத எண்ணற்ற விடயங்களையும் அற்புதங்களையும் புதிர்களையும் இயற்கை தன்னகத்தே கொண்டுள்ளது.



இயற்கையை ஆராயும் இந்த விஞ்ஞானிகளுக்கு 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற ஒளவையார் வாக்கு மிகவும் பொருந்தும். டேவிட் மொரிஸன் என்ற நாசாவின் சிரேஷ்டவிஞ்ஞானியோ புவி முனைவுகளின் தலைகீழான மாறல் ஒருபோதும் சாத்தியமில்லை என்றே கூறுகிறார். இவ்வளவு காலமும் அத்தகையதோர் நிகழ்வு நடக்கவில்லை. நடக்கவும் மாட்டாது என்பதே அவரது வாதமாக இருக்கிறது. கண்டங்களின் நகர்வு என்பது பலமில்லியன் ஆண்டுகளைக் கருதும் போது சாத்தியம்தான்.

ஆனால் அதற்கும் புவிமுனைவுகளின் தலைகீழான இடமாற்றத்துக்கும் தொடர்பில்லையென்றே கூற வேண்டும். ஆனால் புவிச்சுழசிக்கும் புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குமிடையே தொடர்புள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் புவி சூழலும் திசைக்கும் காந்தமுனைவுத்தன்மைகுமிடையே எந்தவொரு தொடர்பும் இல்லை. அத்துடன் புவியின் வட தென் முனைவுகள் இடம்மாறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. பேரழிவுகள் கூட சாத்தியமற்றவையே. மக்கள் இந்த ஊகங்களையெல்லாம் வீணே எண்ணிக் குழப்பமடையத் தேவையில்லை என்பதே விஞ்ஞானி டேவிட் மொரிஸனின் கருத்தாக இருக்கிறது.

எது எவ்வாறாயினும், தனிநபர்களாக நாம் ஒவ்வொருவரும் இயற்கையை மதித்து அதனுடன் இயைந்து வாழப்பழக வேண்டும். எம் நடவடிக்கைகள் இயற்கையின் சமநிலையைக் குழப்புவனவாக அமையக் கூடாது. “நான் மட்டும் செய்வதால் என்ன? மற்றவர் எவரும் செய்யவில்லையே?” என்ற மனப்பாங்கைத் தவிர்க்க வேண்டும். அவைதான் இயற்கை சீற்றமடையாமல் தன் வழியிலேயே பயணிக்க வழிவகுக்கும்.



அடிப்படையில் இயற்கை சாதுவானது. எமக்கு நன்மையே பயப்பது. அந்த சாது மிரளும் போது நாடு தாங்காது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த கால அனுபவங்கள் கூட இதைத்தான் தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கின்றன. இயற்கை சீற்றமடைவதும் சாதுவாக இருப்பதும் கூட எமது கைகளிலேயே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Saturday, January 1, 2011

இயற்கை தொடுத்திருந்த எதிர்க்கணைகள் 10

 

 
 

1.ஹெயிட்டி பூகம்பம்


ஹெயிட்டி அரசியல் ஊழல்கள், வறுமை, பட்டினி என துன்பங்கள் மலிந்து காணப்பட்ட நாடு. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஹெயிட்டியை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு நிலநடுக்கம். அதன் பருமன் 7 ரிச்டர் அளவு ஆகும். இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரும் அழிவுகளுடனான அனர்த்தமாக அது கருதப்படுகிறது.
அட்டைகளால் உருவாக்கப்பட்ட வீடுகள் கணப்பொழுதில் சிதைந்து போவது போல ஹெயிட்டியின் கட்டடங்கள் இடிந்து போயின. ஹெயிட்டிக்குத் தேவையான பணத்துக்கும் ஏனைய வளங்களுக்கும் உலக நாடுகள் இறைஞ்சி நின்றன. பலி எண்ணிக்கை 2 1/2 இலட்சமாக உயர்ந்தது.
பூகம்பத்தால் உருவான இடிபாடுகளுக்குள் சிக்கி மட்டும் மக்கள் இறக்கவில்லை தற்காலிக வைத்தியசாலைகளில் இரண்டாம் நிலைத்தொற்றுக்களாலும் உடலில் நீரிழப்பினாலும் கூட உயிரிழந்தனர். ஹெயிட்டியின் பணக்கார இரவு விடுதிகள் சில வாரங்களுக்குள்ளேயே பழைய நிலைமைக்குத் திரும்பின.
அவ்விடுதிகளுக்கு அருகிலே அகதிமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமையானது ஏற்றத்தாழ்வுகளின் கொடூரத்தை எடுத்தியம்பியது. அமெரிக்க மக்கள் ஹெயிட்டிக்காகச் சேகரித்த நிதி 61 மில்லியன் டொலர்களையும் தாண்டியது. அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் 476 மில்லியன் டொலர்களைச் சேகரித்திருந்தது.
ஆனால் உலக நாடுகளால் உறுதியளிக்கப்பட்டிருந்த நிதியுதவியில் மிகச்சிறிதளவான சதவீதமே (5.3 பில்லியன் டொலர்கள்) ஹெயிட்டியைச் சென்றடைந்திருக்கிறது. இந்த அவலங்களுள் இருந்து மீளுவதற்கு இன்னும் முயன்று வருகிறது ஹெயிட்டி.


2.ஐஸ்லாந்து எரிமலை

அதிஷ்டவசமாக ஐஸ்லாந்தின் இந்த எரிமலை வெடிப்பானது எந்த ஒரு மனித உயிரையும் காவுகொள்ளவில்லை. Eyja Fjallajokull  என்ற அந்த எரிமலையின் பெயரை உச்சரிக்கவே பலர் சிரமப்பட்டனர்.
அது வெடித்தபோது நீராவி, உடைந்த பாறைத்துண்டுகள், கண்ணாடித்துகள் என்பன பெரும் ஆறாக ஓடின. காற்றினால் பாரிய புகைமூட்டம் ஏற்படுத்தப்பட்டது.
ஐரோப்பாவின் பிரதான விமான நிலையங்களின் வான் பாதைகளைப் புகை மூடியது. எரிமலை வெடிப்பினால் தோன்றிய கண்ணாடித் துணிக்கைகள் விமான இயந்திரங்களில் சேதங்களை ஏற்படுத்தக் கூடுமெனவும் உணரப்பட்டது.
ஏறத்தாழ 23 நாடுகளில் அவற்றிற்கான விமான சேவையை 6 நாட்களுக்கு நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது. ஏறத்தாழ அத்தகைய 100,000 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. 8 மில்லியன் பயணிகளுக்கு வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. இதனால் விமான சேவை வழங்குநர்களுக்கு நாளொன்றுக்கு 250 மில்லியன் டொலர்கள் செலவாயிற்று.
உலக நாடுகளுக்கிடையே விமானங்கள் மூலம் பரிமாற்றப்பட்டு வந்த தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிப்பாகங்கள், ஏனைய முக்கியமான பொருட்களின் பரிமாற்றம் தடைப்பட்டது.
உலக நாடுகளின் பொருளாதாரம் ஒன்றிலொன்று தங்கியிருந்தமையைத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலே காயப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால் அப்பணியும் ஸ்தம்பித்தது.
ஆதலால் அவர்கள் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த எரிமலையின் அயற் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த 800 பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். எரிமலை தோற்றுவித்த புகை மூட்டம் சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தியது.


3.பாகிஸ்தானின் மினி சூறாவளி


பாகிஸ்தானைப் பொறுத்தவரையிலே, ஜூலை மாதம் பருவக்காற்றுகளுக்குரியது. ஆனால் கடந்த 100 வருடங்களுள் என்றுமில்லாத வகையிலே பாகிஸ்தானின் 1/5 பகுதி நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியது.
ஏறத்தாழ 2000 பாகிஸ்தானியர் பலியாயினர். 6 மில்லியன் மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தனர். டெங்கு கொலரா நோய் அச்சுறுத்தல் அதிகரித்தன.
சேதமானது 9.6 பில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டது. 7.8 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டன. சர்வதேச உதவிகள் ஓரளவு கிடைத்தன. அவை பெருமளவில் கிடைக்காமல் போனதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருந்ததையும் ஊகிக்க முடிந்தது.

4.ரஷ்யாவில் பரவிய காட்டுத்தீ

பாகிஸ்தான் வெள்ள அழிவால் பாதிக்கப்பட்டிருந்த அதேநேரம் 7 ரஷ்ய பிராந்தியங்கள் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டன. 300,000 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டது.
ஜுலை மாதம் பதியப்பட்ட உயர்வெப்ப அலையானது ரஷ்யாவில் காட்டுத்தீயைப் பரவலாக ஏற்படுத்தியிருந்தது. வளிடண்டலம் நச்சுத்தன்மை மிக்க புகையால் நிரம்பியிருந்தது.
அடர்த்தியான புகை மூட்டம் மொஸ்கோவை மூடியது. விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டன. பல வாரங்களாகப் காட்டுத்தீ நீடித்தது. ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டனர். 3000க்கும் அதிகமானோர் இருப்பிடங்களை இழந்தனர்.
கதிர்த் தொழிற்பாட்டுக் கழிவுகள் உள்ள பகுதிக்கு தீபரவுவதை முழு உலகுமே அவதானித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக ஓகஸ்ட் மாதமளவில் உருவான வெப்பநிலை வீழ்ச்சியும் மழை வீழ்ச்சியும் தீயை அணைத்தன.
வளி மண்டலத்தில் 6.6 மடங்கால் அதிகரித்திருந்த காபன் மொனொக்சைட்டின் அளவு சாதாரண நிலைக்குத் திரும்பியது. அதுவரை முகமூடிகளை அணிந்து வீதிகளில் பயணித்த ரஷ்ய மக்கள் முகமூடியின்றி பயணிக்கத் தொடங்கினர்.
காட்டுத்தீயால் உருவாகிய வரட்சி ரஷ்யாவின் கோதுமைப் பயிரைப் பெருமளவில் பாதித்தது. விளைவாக ஜுலை மாதம் முழுவதும் கோதுமை ஏற்றுமதியை ரஷ்யா தடைசெய்தது. தானிய உணவை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
1.4 மில்லியன் ரஷ்யர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டனர்.
அந்த நிலையிலிருந்து ரஷ்யா மீள 15 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

5.நாஷ்வில்லே வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியினூடு பாய்ந்து செல்வது கும்பர்லாந்து நதியாகும். ஒருநாளும் இல்லாதவாறு அந்த நதியிலே உருவாகிய வெள்ளப்பெருக்கு நாஷ்மிலே நகரை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது.
அமெரிக்காவின் மத்தியில் அமைந்திருக்கும் நாஷ்வில்லே இசைக்குரிய நகராகக் கருதப்படுகிறது. இவ்வெள்ளப்பெருக்கால் நாஷ்வில்லே நகருக்கு மட்டும் 2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்தது.
பல இசைக்கருவித் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றிலே அதிகளவு சேதத்தை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாக இந்த வெள்ள அனர்த்தம் கருதப்படுகிறது.
வெள்ளத்தால் சேதமடைந்த இசைக்கருவிகள் ஏலத்தில் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளுக்கு நிதி திரட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



6.மச்சு பிச்சு நிலச்சரிவு

பெருநாட்டிலே அந்தீஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியே மச்சு பிச்சு ஆகும். மறைந்துபோன இன்கா நாகரிகத்தின் எச்சங்கள் அப்பகுதியில் காணப்படுகின்றன.
2010 ஜனவரி 24 ஆம் திகதி வீசிய புயலானது நிலச்சரிவு உருவாகக் காரணமாகியது.
குடிசைகள், வயல் நிலங்கள் தொட்டு வீதிகள், பாலங்கள் வரை சகல கட்டமைப்புகளுமே பாதிக்கப்பட்டன. பெருவின் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
பெருவுக்கு நாளாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித்தந்த சுற்றுலாத்தலம் 2 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தமை பெரிய அந்நியச் செலாவணி இழப்பைத் தோற்றுவித்திருந்தது.


7.சிலி பூகம்பம்

உலகையே உலுக்கிவிட்டிருந்த ஹெயிட்டி பூகம்பம் நிகழ்ந்து ஆறு வாரங்களுக்குள் 7 ரிச்டர் அளவிலான பூகம்பம் சிலியைத் தாக்கியது. சிலியின் கடலோரக் கிராமங்களை சுனாமி அலையும் தாக்கியது.
900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாயினர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களை இழந்தனர். 30 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. சிலி நாட்டின் 20 சதவீத வைன் உற்பத்தி முற்றாகப் பாதிக்கப்பட்டது.
ஹெயிட்டி எதிர்கொண்டதைப்போல பாரிய அழிவுகளை சிலி எதிர்கொள்ளவில்லை. ஏற்பட்ட சேதங்களைத் தம்மால் எதிர்கொள்ள முடியும் எனப் பெருமையுடன் கூறிய சிலி அரசு முதலில் சர்வதேச உதவிகளைக் கூட மறுத்து விட்டிருந்தது.
இக்கருத்தானது சிலி நாட்டுமக்கள் பலரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருந்தது. கரையோர மக்கள் மத்தியில் சுனாமி குறித்து எச்சரிக்காததற்கும் அவசரப் பணிகளைத் தாமதமாக மேற்கொண்டமைக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றனர் சிலிமக்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் களவுகளும் கொள்ளைகளும் மலிந்து போயிருந்தன. பின்னர் மெதுவாக வெளிநாடு உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்னும் பல அகதிகள் கூடாரங்களிலேயே வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலியின் இப்பூகம்பத்தை இதுவரை காலமும் பதியப்பட்டவற்றுள் 5 வது பெரிய பூகம்பமாக நாசா குறிப்பிடுகிறது. இப்பூகம்பம் புவிக்கோளத்தின் வாழ்நாளை 1.26 மைக்ரோ செக்கன்களால் குறைத்தும் விட்டிருப்பதாக நாசா தெரிவிக்கின்றது.


8.கெளதமாலாவில் ஏற்பட்ட ஆழ்துளை

நிலத்திலே ஆழமான பாரிய துளை ஒன்று ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா? கெளதமாலாவின் நகரொன்றில், அது ஏற்பட்டது.
நிலக்கீழ் நீர், நிலத்திற்குக் கீழுள்ள பாறைகளை இளகச் செய்யும். புயல் காலங்களில் அப்பாறைகள் குழிவடைய நிலத்தில் அத்தகைய பாரிய துளைகள் குழிகள் தோன்றும். ஆனால் அவை பரவலாக உருவாவதில்லை.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைப் பொறுத்தவரையிலே அவை சகஜமானவை. கடந்த மே மாதம் 30 ஆம் திகதி உருவான அகத்தா புயலை அடுத்து கெளதமாலாவின் நகரொன்றிலே ஒரு ஆழ்துளை உருவாகியது. அது ஏறத்தாழ 66 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்டதாகக் காணப்பட்டது.
அதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தனர். 180 பேர் வரையில் உயிரிழந்தனர்.
சில மாதங்களின் பின்னர் அந்த ஆழ்துளையின் பரிமாணங்கள் 130 அடி அகலமாகவும் 65 அடி ஆழமாகவும் மாற்றம் பெற்றது.
விஞ்ஞானிகள் மத்தியிலும் கூட இந்த ஆழ்துளை ஒரு மர்மமாகவே இருக்கிறது.



9.சீனாவின் பூகம்பம்

2 வருடங்களுக்கு முன்னர் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கியிருந்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதியும் அதையொத்த பூகம்பம் குயிங்காய் மாகாணத்தைத் தாக்கியது. 2000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த பூகம்பம் 90,000 பேரைக் காவுகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவைப் பொறுத்தவையிலே ஏப்ரல் என்பது பனிக்காலமாகும். அத்துடன் இந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திபெத்திய விவசாயிகளும் ஆயர்களுமாவர். அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டவர்கள்.
90 சதவீதமானோரின் வீடுகள் மரத்தாலும் களிமண்ணாலும் ஆனவை. சீன இராணுவத்தினரும் பெளத்த மத குருமாரும் இணைந்து உதவிப்பணிகளை முடுக்கிவிட்டனர்.
ஆரம்பத்தில் வெளிநாட்டு உதவியைப்பெற சீனா தயக்கம் காட்டிய போதும் கடைசியில் 4 மில்லியன் டொலர்களை உலக நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டது. பூகம்பம் நிகழ்ந்த பகுதி பனிபடர்ந்த மலைப் பகுதியாகையால் மீள்கட்டமைப்புப் பணிகள் தாமதமாகவே நடைபெற்று வருகின்றன. ஏனெனில் விநியோகப் பொருட்களைக் குறித்த பகுதிக்கு கொண்டு செல்வதற்காகப் பெருஞ்சிரமப்பட வேண்டியுள்ளது.
ஆனால் இந்த மீள்கட்டமைப்புப் பணிகள் மூலம் பின் தங்கிய அப்பகுதிக்கு புதிய தொழில்நுட்பங்கள் சென்றடையவுள்ளன. நதி நீரைச் சுத்திகரிக்கும் திட்டமும் பூகம்பம் பாதிக்காத கட்டடங்களை அமைக்கும் திட்டமும் கூட அத்தொழில்நுட்பங்களுள் அடங்கும்.


10.கிழக்குக் கடற்கரை பனிப்புயல்

மத்திய அத்திலாந்திக் கடற்கரையினூடு வீசிய பனிப்புயலானது அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் 2 அடி உயரத்துக்கு பனியை நிரப்பியது. ஏறத்தாழ 4 நாட்கள் வொஷிங்டன் மாநிலமே ஸ்தம்பித்துப் போயிருந்தது.
இதனால் 450 மில்லியன் டொலர் மதிப்பிலான உற்பத்தித்திறன் இழப்பு ஏற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டது.

குறைந்தளவிலான (2) உயிரிழப்புகளே ஏற்பட்டன. விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. பாடசாலைகள் மூடப்பட்டன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். விளைவாக உற்பத்தித் திறனில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டது.

Friday, December 10, 2010

மேற்குலகின் பிடிவாதத்தால் மாநாடுகள் தோல்வியடைகின்றன



‘கடந்த 25 வருடங்களுள் என்றுமில்லாத பனிப்பொழிவு’
‘பல ஆண்டுகளின் பின் வான்கதவுகள் திறப்பு’
‘என்று மில்லாத பெருமழை’

இவையெல்லாம் சமீபகாலமாக நாம் காணும் செய்தித் தலைப்புகள் ஆகும். அவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வது கூட இல்லை. ஆனால் அவை எல்லாம் ஏதோ அறிகுறியை வெளிக்காட்டி நிற்பனவாகவே தெரிகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 2007 ஆம் ஆண்டிலேயே விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்வதும் சிறந்த விடயமாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களிலே அதிகரிக்கலாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் தெரியும் புதுவித மாற்றங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தோற்றப்பாடுகள் தானோ என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டன.
மனிதன் இயற்கையைக் கருத்தில் கொள்ளாது, அதனுடன் இயைந்து வாழ முயலாது தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் இயற்கையின் சீற்றங்களாக இருக்கின்றன.
பணமும் அரசியலும் மலிந்துபோய்விட்ட இப்பூமியில் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்கள் வெகுசிலரே.
காலநிலை மாற்றம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அரசியல் தலைவர்களோ அத்தகையதோர் அவசர நிலையைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹாகன் மாநாடு (2009) கிட்டத்தட்ட தோல்வியில் முடிவடைந்த கதையை நாம் அறிந்திருப்போம்.
அம்மாநாட்டிலே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் காலநிலை மாற்றம் பற்றிப் பேசி தீர்மானமொன்றையெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாக உலக நாடுகளின் தலைவர்கள் மாநாடுகளிலே கூடி, புவி வெப்பமடைவது பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் மிக மும்முரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்பேச்சுக்களின் அடிப்படையில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதே யாவரும் அறிய வேண்டிய உண்மை ஆகும்.
புவி வெப்பமடைதலைப் பொறுத்த வரையிலே கியோட்டோ உடன்படிக்கை மிக முக்கியமானதாகும். அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது.
19ம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலே கைத்தொழில் புரட்சி உருவாகியது. பிற்காலங்களில் தோன்றிய சகல தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கும் அக்கைத்தொழில் புரட்சியே வித்திட்டது எனலாம். கைத்தொழில் புரட்சி உருவாக்கிவிட்டிருந்த எதிர்மறையான விளைவாக புவி வெப்பமடைவதைக் குறிப்பிட முடியும்.
அதாவது சுவட்டு எரிபொருட்களின் பாவனை அதிகரித்துச் சென்ற நகரமயமாக்கலும் அபிவிருத்திப் பணிகளும் காடழித்தல் துரித கதியில் நடைபெற வழிவகுத்தன.
விளைவாக வளிமண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்தது. புவிச் சூழலின் வெப்பநிலையும் அதிகரித்தது. புவிச் சூழலைப் பொறுத்தவரையிலே அதன் வெப்பநிலை காலத்துடன் அதிகரித்து வருவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல சமயங்களில் நாம் உணர்ந்தும் இருப்போம்.
மனித நடவடிக்கையால் அதிகளவில் வெளிவிடப்படும் பச்சை இல்ல வாயுக்களான காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரசன் சேர் வாயுக்கள் போன்றனவே புவிச் சூழலை வெப்பமடையச் செய்கின்றன.
இவை சூரிய கதிர்கள் புவி மேற்பரப்பில் பட்டு மீளத்தெறிப்படைந்து செல்வதைத் தடுக்கின்றன. ஆதலால் புவிச் சூழல் வெப்பமடைகிறது.
வாகனங்கள், ஆகாய விமானங்கள், எரிசக்தி நிலையங்கள், தொழிற்சாலைகளிலே சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் வளிமண்டலத்துக்கு காபனீரொட்சைட் வெளிவிடப்படுகிறது.
சூழலில் இருக்கும் காடுகளும் மரங்களும் தான் வளி மண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் விவசாயம், கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கல் போன்ற பல தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டன.
புவிச் சூழலிலே வளிமண்டலத்தில் இயற்கையாக அமைந்த படலமாக ஓசோன் படை காணப்படுகிறது.
சூரியனிலிருந்து வரும் உயர் சக்திமிக்க நச்சுத்தன்மையான புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் தடுப்பதும் இந்த ஓசோன் படையேயாகும்.
குளோரோபுளோரோ காபன் என்ற வாயுவின் வெளியேற்றத்தாலும் ஏனைய சில நைதரசன் சேர் வாயுக்களின் வெளியேற்றத்தாலும் இந்த ஓசோன் படை அரிப்படையத் தொடங்கியது. அதனால் புவி மேற்பரப்பை வந்தடையும் புற ஊதாக் கதிர்களின் சதவீதம் அதிகரித்தது.
புவி மேற்பரப்பு வெப்பமடையத் தொடங்கியது.
ஆய்வாளர்கள் காலங்கடந்த பின்னரே விளைவுகளைக் கண்டுணரத் தொடங்கினர். ஒசோன் படையிலே உருவாகிய ஓட்டைகள் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகக் காரணமாயின என கண்டுபிடித்தனர்.
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வளிமண்டலத்தில் இருந்த காபனீரொட்சைட்டின் அளவு 275 ppm (parts per million)  ஆகும். அது தற்போது 392  ppm  ஆக அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைதலானது பல விளைவுகளை உருவாக்கி உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைச் சீற்றங்களின் அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வரலாறு காணாத, அதிக வெப்பநிலையுடைய ஆண்டாக 2010 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது. நிலைமை விபரீதமாகிக் கொண்டு போவதை உணர்ந்த விஞ்ஞான உலகு, அரசாங்கங்களை எச்சரிக்கவும் தவறவில்லை. காலநிலை மாற்றத்துக்கு தாமும் ஒரு காரணம் என அரசாங்கங்கள் உணர்ந்தன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை நடுநாயகமாக வைத்து செயற்பாடுகளில் ஈடுபட முனைந்தன.
1992 இலே, ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு பிறேசிலின் ரியோ - டி - ஜெனிரோ நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஸினிபிவிவிவி  UNFCCC (United Nations Frame work Convention on Climate Change) என்ற ‘காலநிலை மாற்றத்துக்கான செயற்றிட்டப் பேரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்துக்கான மாநாடு (Conference of Parties – COP)  நடத்தப்பட்டு வருகிறது.
1997ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நடத்தப்பட்ட அத்தகைய மாநாட்டிலே தான் கியோட்டோ உடன்படிக்கையும் எட்டப்பட்டது.
கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் புவிச் சூழலில் வளிமண்டல காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பதற்குக் காரணமான நாடுகள் கியோட்டோ மாநாட்டில் பட்டியலிடப்பட்டன. அவை 1991 இலே காபனீரொட்சைட் வாயு உட்பட்ட நான்கு பச்சை இல்ல வாயுக்களை எந்தளவு வெளியேற்றினவோ அந்த அளவை 2012 ஆம் ஆண்டளவில் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென்பதே அந்த கியோட்டோ உடன்படிக்கை யாகும். இந்த 5.2 சதவீதமென்பது ஒரு கூட்டான அளவாகும். ஒவ்வொரு தனித்தனி நாட்டையும் கருதும்போது குறைக்க வேண்டிய சதவீதம் மாறுபடும்.
வளிமண்டலத்தை அதிகளவில் மாசுபடுத்தும் நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. 5.2% என்ற கூட்டு அளவின் அடிப்படையில் தனது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை அமெரிக்கா 7 சதவீதத்தால் குறைக்க வேண்டி இருந்தது.
கியோட்டோ உடன்படிக்கையைப் பொறுத்த வரையிலே, இந்தியாவும் சீனாவும் தமது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முன்வரவில்லை. அதற்கு அவை முன்வைத்த காரணம் தாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பதாகும்.
மேற்குலக நாடுகளில் உருவான கைத்தொழில் புரட்சியே வளிமண்டலத்தின் பச்சை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணமாகியது. மேற்குலக நாடுகளின் செயற்பாட்டுக்கு மூன்றாம் உலக நாடுகளும் பலிக்கடாவாயின என்பது தான் வெளிப்படை உண்மையாகும்.
ஆனால் கியோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்ட போது இணைந்த அமெரிக்கா பின்னர் அதிலிருந்து விலகிவிட்டது.
நிலைமை கையை மீறுவதை உணர்ந்த ஐ. நாவின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 1990 ஆம் ஆண்டின் பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012 அளவிலே 80 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென 2007இல் அறிவித்தது.
இம்முடிவு தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக 2007 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் கூட்டப்பட்டது.
நடைமுறையில் இருந்து வரும் கியோட்டோ உடன்படிக்கையின் கால இலக்கை நீடிக்கவும் உறுப்புரிமையிலிருந்து விலகிய அமெரிக்காவை இணைத்து நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அங்கு உடன்பாடுகள் பல எட்டப்பட்டன.
அதற்காகத் தயார் செய்யப்பட்ட வழிகாட்டி பாலி வழிகாட்டி எனப்பட்டது. அவ்வழிகாட்டியின் அடிப்படையிலே 2009ஆம் ஆண்டுக்கான கோப்பன்ஹேகன் மாநாடும் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பிடிவாதம் கோபன்ஹேகன் மாநாட்டைத் தோல்வியடையச் செய்தது.
ஆயினும் 2010 இலே, பேச்சுவார்த்தைகள் தொடரப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும் என அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல், ஜூன், ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களிலே கூட்டம் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது. ஆனால் முடிவுகள் எவையுமே எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
இத்தகையதோர் நிலையிலே இவ்வாண்டுக்கான ஐ.நாவின் 16வது காலநிலை மாற்ற மாநாடு கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி மெக்சிக்கோவின் கான்குன் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இன்று அதன் இறுதி நாளாகும்.
கோபன்ஹேகன் மாநாட்டிலே தவறவிடப்பட்ட உடன்பாடுகள் கான்குன் மாநாட்டிலே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொனிப் பொருட்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவு தான் என்ன? என்பதை முழு உலகுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் புதிய தலைவரான ஹேர்மன் வன்ரொம்புய் ‘இம்மாநாடும் கோபன்ஹேகன் மாநாட்டைப் போல ஒரு அனர்த்தமாகவே இருக்கும்’ எனத் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் கோபன்ஹேகன் மாநாட்டை மிக மோசமாக விமர்சித்திருந்தமையையும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மேற்குலக நாடுகளின் மனப்பாங்கு எத்தகையது என்பதை இந்த விக்கிலீக்ஸ் தகவல் தெளிவாக எடுத்தியம்புகிறது.
தன்னை விஞ்சியவர் எவருமில்லையென்ற அகம்பாவம் மனிதனை மற்ற உயிர்கள் பற்றிச் சிந்திக்க விடுவதில்லை. இயற்கைச் சமநிலையைச் சீர்குலைத்து அவன் அடையும் முன்னேற்றங்கள் அவனுக்கே உலை வைக்கும் போது கூட அவன் தன் அகந்தையை ஒழிப்பானா என்பது சந்தேகமே! எப்படி இன்னும் புதிய முன்னேற்றங்களைக் கண்டு அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது பற்றி மட்டும் தான் சிந்திப்பான்.
இந்த இயல்பு தான் இயற்கையுடன் இயைந்திருந்த மனிதனை விலக்கி இன்று எதிர்த்திசையிலே பயணிக்கச் செய்துவிட்டது.
‘நாம் மீண்டும் ஆதி மனிதர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும்’ என்ற ஒஷோவின் வரிகள் தான் நிதர்சனமாகத் தெரிகின்றன. அவை நடந்தால் தான் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சாபத்துக்கான விமோசனமும் கிடைக்கும்.

Sunday, March 28, 2010

மனிதனும் மாறி வரும் காலநிலையும்

"மனிதன் தன்னை இயற்கையில் இருந்து வேறு படுத்திப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்"



நாகரிக உலகில் மனிதன் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவு விரிசலடைய ஆரம்பித்தது. இந்த விரிசல் கைத்தொழில் புரட்சியுடன் துரிதமாக அதிகரித்தது. அதன் விளைவைத்தான் இன்று ‘காலநிலை மாற்றம்’ எனும் பெயரில் முழு உலகுமே அனுபவிக்கின்றது.

இயற்கையும் மனிதனும் தன் தன் வழியில் சுயாதீனமாக இயங்கத் தொடங்கிவிட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால் ஏற்படும், ஏற்படப் போகும் இழப்பு இரு தரப்பினருக்கும் பொதுவானது. ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்வியல் முறைமையே எப்போதும் வரவேற்கப்படுகிறது. அதே சமயம் அதுவே நியதியெனவும் கருதப்படுகிறது.

தன்னலமிக்க மனிதனின் ஊனக் கண்ணுக்கு நியதிகள் தெரிவதில்லை. பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமுமே அடிப்படைத் தேவைகளாக மாறிவிட்ட இயற்கையை மதிக்காத நவீன உலகினுள் அடியெடுத்து வைத்தவனுக்கு இயற்கை கொடுத்த தண்டனை தான் ‘காலநிலை மாற்றம்’ என்பர்.

சூழல் பிரச்சினையாகிய காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகக் கருதப்படக் கூடிய வகையிலே நாம் அன்றாடம் பல விடயங்களை அவதானிக்கின்றோம். ஆனால் அவை பற்றி ஆழச் சிந்தித்து, அவற்றின் பின்னணி தொடர்பாக ஆராய முற்படுவதில்லை. அவசர உலகுடன் உழல்கையில் நேரமும் அதற்கு இடங்கொடுப்பதில்லை.

அண்மையில் கொழும்பில் பூமியின் வெப்பநிலை உயர்தல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்றை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் முக்கிய வளவாளராக, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ் கலந்துகொண்டிருந்தார். அவருடன் இலங்கையின் ஆய்வாளர்களும் வளவாளர்களாக இணைந்திருந்தனர். பிரதம விருந்தினராக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அழைக்கப்பட்டிருந்தார். ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்படப் பலதரப்பட்ட விஞ்ஞான மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். ஆர்வலர்களின் சந்தேகங்களை வளவாளர்கள் தீர்த்து வைத்தனர். அத்துடன் ஆர்வலர்களும் வளவாளர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கலந்துரையாடல் ஒரு களமாக அமைந்திருந்தது.

அசாத்தியமான பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு விடயங்களை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆர்வலர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு குறித்த பருவ காலத்தில் மட்டுமே பரவும் நோயாகக் காணப்பட்ட டெங்கு, இன்று வருடத்தின் பல மாதங்களுக்கு நீடிப்பதற்கும் கூடப் பருவகால மழையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணமெனக் கருதப்படுகின்றன. மழை, பருவம் மாறிப் பெய்ய ஆரம்பித்துள்ளதை விவசாயிகள் மட்டுமன்றி சாதாரண பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.

அத்துடன் அண்மையில் வெளிநாட்டவரொருவர் பேருவளை கடற்பரப்பில் மூழ்கிய செய்தியும் காலநிலை மாற்றத்தின் அறிவிப்பாகவே தென்பட்டதாக பல வருடங்களாகச் சுழியோடிவரும் ஆழ்கடல் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். பொதுவாக தை, மாசி மாதங்களில் இலங்கையின் தென் பகுதிக் கடற் பரப்பில் சுழியோடுவதற்குகந்த சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அத்தகைய சூழ்நிலை மாறிவருவதையே அந்த வெளிநாட்டவரின் மரணச் செய்தி புலப்படுத்துவதாக அப்பொறியியலாளர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் யுனெஸ்கோ அமைப்பினால் விஞ்ஞானத்துறை அமைச்சர்களுக்கான கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்திலே காலநிலை மாற்றத்துக்கு உலக மனிதர்களின் மனப்பாங்கு பங்களிக்கிறதா என ஆராயப்பட்டது. ஆனால் கடந்த வருடம் ஒழுங்கு செய்யப்பட்ட அத்தகைய கூட்டத்தில் உலக மனிதர்களின் மனப்பாங்கு, காலநிலை மாற்றத்தை தோற்றுவிப்பதில் தனது பங்களிப்பை செய்கிறது என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தன்னைப் பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளும் மனித மனப்பாங்குகள் மாற்றம் பெற்றாலன்றி வேறெந்த வகையிலும் காலநிலை மாற்றத்தை வினைத்திறன் மிக்க வகையில் கட்டுப்படுத்த முடியாதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் வரை யாவரும் உணர வேண்டும். அதற்கு வெகுசனத் தொடர்பூடகங்கள் முன்னிலையில் நின்று செயற்பட வேண்டும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளிலே வசிக்கும் பலருக்கு காலநிலை மாற்றம் பற்றியோ அதனை ஏற்படுத்தும் காரணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியோ அறியும் ஆர்வம் மிக மிகக் குறைவு.

ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளே, தமது காபன் வெளியேற்றத்தின் மூலம் காலநிலை மாற்றத்துக்கு அதிக பங்களிப்பைச் செலுத்துகின்றன. மாறாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், காலநிலை மாற்றத்துக்கு மிகக் குறைந்தளவிலான பங்களிப்பை வழங்கியுள்ள போதும் அதிகளவிலான பாதிப்பை எதிர்நோக்கும் நாடுகளாகவும் காணப்படுகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் அழிந்து போகும் அபாயத்திலுள்ளன. இலங்கை போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளும் அழிந்து போய்விடும் நிலையிலேயே காணப்படுகின்றன. அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால் இலங்கையின் தலைநகர் கூட மத்திய பகுதிக்கு -கியோட்டோ உடன்பாடானது (றிiyoto ஜிrotoணீol) உலக நாடுகள் பச்சையில்ல வாயுக்களின் வெளியேற்றத்தை வருடாந்தம் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியது. அத்துடன் ஒவ்வொரு நாடுகளும் அவ்வுடன்பாட்டில் கைச்சாத்திட வேண்டியதும் கட்டாயமாகியது. அதிகளவில் பச்சையில்ல வாயுக்களை வெளிவிடும் முக்கிய நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டது.

அதேபோல, கடந்த ஆண்டு பலரும் எதிர்பார்த்திருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டிலே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான எந்தவொரு உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை யென்பது வருந்தத்தக்க விடயமாகும். உலகமே அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் காலநிலை மாற்றமும் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ், அண்டார்டிகா பிரதேசத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுடன் இணைந்து பல வருடங்களாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டில் கலந்துகொள்வோர், அண்டார்டிக்காவில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுடன் காலநிலை மாற்றம் தொடர்பாகக் கலந்துரையாடக் கூடிய வகையில் செய்மதித் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இது போன்ற பனிப் பிரதேசங்களில் செய்மதித் தொழில் நுட்பத்தால் நேரடித் தொடர்பாடல் வசதிகளை மேற்கொள்வதொன்றும் இலகுவான காரியமல்ல. பல சிரமங்களுக்கு மத்தியில் ஒளிப்பட உதவியுடன் நேரடியாகக் கதைத்தல் போன்ற பல வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானிகளும் மாநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மாநாட்டில் பங்குபற்றியோர் மட்டுமன்றி முழு உலகுமே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என எதிர்பார்த்திருந்தது. எனினும் காலநிலை மாற்றத்தை ஆய்வுசெய்த விஞ்ஞானிகளுடன் கதைத்து நிலைமையை ஆராய வேண்டுமென்ற எண்ணம் எவருக்கும் தோன்றவில்லை. அழைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. தொடர்பாடல் வசதிகளைப் பெறுவதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளும் பட்ட சிரமங்களும் விழலுக்கிறைத்த நீராயின.

இது நாம் ஒவ்வொருவரும் வருந்த வேண்டியதோர் விடயமாகும். நடந்தவை நடந்தவைகளாகவே இருக்க, இனியாவது நாம் எமது மனப்பாங்குகளை மாற்ற முயல வேண்டும். இல்லையேல், காலநிலை மாற்றத்தால் உருவாகப் போகும் புதுப்புது விளைவுகள் தவிர்க்க முடியாதனவாகிவிடும்.

காலநிலை மாற்றம் எனப்படுவது எங்கோ நடக்கும் விடயமல்ல. மனித நடமாட்டமுள்ள கண்டங்களின் செயற்பாடுகளால் மனித நடமாட்டமற்ற துருவப் பகுதிகளிலுள்ள பனி உருகுகிறது. துருவப் பகுதிப் பனிப் பாறைகளே உலகின் காலநிலையைப் பேணும் பிரதான காரணிகளாகையால், அவை உருக, பூமியின் காலநிலையும் மாறத் தொடங்குகிறது.

காலநிலை என்பது, நீண்டகால அடிப்படையில் அவதானிக்கப்படும் விடயம் என்பது மட்டுமன்றி இயற்கையுடன் தொடர்புடைய விடயமுமாகும். காலநிலையின் அடிப்படையிலேதான் மனித நாகரிங்கள் வளர்ச்சியுற்று மனிதன் தனது இருப்பை உறுதி செய்துகொண்டுள்ளான். ஆயினும், காலநிலையின் அடிப்படை பற்றி ஆழச் சிந்திக்கத் தவறியதால் கைத்தொழிலாக்கம், நவீன மயமாக்கம், தொழில் நுட்ப அபிவிருத்தி, இலத்திரனியல் அபிவிருத்தியென ஒன்றுக்கு மேற்பட்ட பல பரிமாணங்களில் அபரிமித வளர்ச்சி கண்டான்.

இந்நிலையில் தான் ‘ஓசோன் படை அரிப்படைதலும் பச்சையில்ல வாயுக்களின் அதிகரிப்பும் கண்டு பிடிக்கப்பட்டது. அபரிமித வளர்ச்சியின் வேகம் குறைந்தது. சூழலுக்குத் தீங்கை விளைவிக்காத வகையிலான பசுமை உற்பத்திகளின் தேவை அதிகரித்தது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பெரிய பனிப்பாறையொன்று, பனிப்படையிலிருந்து பிரிந்து விலகியது.

செய்மதித் தொழில்நுட்பத்தால் இந்நிகழ்வை உணர்ந்த ஆய்வாளர்கள், விமானங்களில் சென்று, பனிப்பாறை விலகுவதைப் பல கோணங்களில் ஒளிப்படம் மற்றும் புகைப்படம் எடுத்து ஆராய்ந்தனர்.

இந்நிலையில் தான் உலகம் காலநிலை மாற்றத்தை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதத் தொடங்கியது. பல்வேறு மட்டங்களிலும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து ஆறு மாதங்கள் பகலாகவும் அடுத்த ஆறு மாதங்கள் இரவாகவும் காணப்படும் துருவப் பகுதிகளிலே வருடக் கணக்காகக் கூடாரமிட்டு, காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளைப் பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. மனித சஞ்சாரமற்ற இந்தத் துருவப் பகுதிகளில் பல நாடுகள் தமக்கான உரிமையை நிலைநாட்டி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது அண்மை நாடான இந்தியா கூட அண்டார்டிகாவில் தக்ஷின கங்கோத்ரி எனும் பெயரிலே ஆய்வு நிலையமொன்றை அமைத்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

துருவப் பகுதிகள், பனிப் பிரதேசங்களாக இருக்கின்ற போதிலும், ஈரப்பற்றற்றவை உலர்ந்த வளிமண்டலத்தையுடையவை. அப்பிரதேசங்களிலே தங்கி ஆய்வினை மேற்கொள்வதற்கு அது தொடர்பான ஆர்வமும் விருப்புமுடையவர்களால் மட்டுமே முடியும்.

விஞ்ஞான ஆய்வு என்பது குறுகிய காலத்திற்குள்ளே நிகழ்த்தப்பட்டு முடிவுகளை வெளிவிடத்தக்க ஆய்வல்ல. ஆய்வுக்காலம், ஆய்வைப் பொறுத்து மாறுபடும். சில ஆய்வுகள் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். விஞ்ஞானம் எனும் பெருங்கடலிலே, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை ஒரு கைப்பிடியளவானவை மட்டுமே. ஆகையால் விஞ்ஞான ஆய்வுகள் விடப்பட்ட இடத்திலிருந்து தொடரப்பட வேண்டியவை. விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் நிரந்தரமானவையல்ல. காலத்துடன் அம்முடிவுகளும் புதுப்புதுக் கோணங்களில் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமிக்க முடியாத முடிவுகள் வழக்கொழிந்து போகும். இதுவே விஞ்ஞானத்தின் அற்புதம்.

இத்தகையதோர் நிலையை விஞ்ஞானம் கொண்டுள்ளதாதல் தான் பல விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் கடதாசிகளுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் முடங்கிப்போய்விடுகின்றன. விஞ்ஞானச் சங்கேத மொழியை விளங்கக் கூடிய சமூகத்தவரைச் சில ஆய்வுகள் சென்றடைகின்றன. மிகச் சில மட்டுமே சாதாரண பாமரன் வரை சகலரையும் சென்றடைகின்றன. இன்றைய காலகட்டதில் காலநிலை மாற்றமானது உலகளாவிய ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்துள் ளது. அது மட்டுமன்றி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதனதும் வாழ்க்கைப் பிரச்சினை யாகக் காலநிலை மாற்றம் மாறிவிடும் என்று எதிர்வு கூறக்கூடிய அளவுக்கு அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உலகின் பொருளாதார சமூக நிலைமைகளில் பெருஞ் செல்வாக்கு செலுத்தும் காரணியாகவும் இக்காலநிலை மாற்றம் தி!றிவருகிறது.

அண்மைக் காலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த உலகளாவிய நிதி நெருக்கடியை விட அதிகளவிலான நிதி நெருக்கடியைக் காடழிப்பு தோற்றுவித்துள்ளது. ஆனால் அதை எவரும் உணர்வதில்லை.

இயற்கை வளங்கள் மனிதத் தலையீடு இன்றி இயற்கையாகவே கிடைக்கப் பெறுவதால் அவை இலவசமானவை என்று நாம் கருதுகின்றோம். ஆகையால் அவற்றின் பண ரீதியான பெறுமதி பூச்சியமாகவே கருதப்படுகிறது. இயற்கை வளங்களுக்கான பண ரீதியான பெறுமதியைக் கணிக்க எத்தனிக்கும் போதே எவ்வளவு பெரியளவிலான நிதி அநியாயமாக விரயம் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை விளங்கும். இன்று முழு உலகுமே வர்த்தகமயப்பட்டமை தான், இயற்கை வளங்களின் பெறுமதியையும் பண ரீதியாக அளவிட வழிகோலியது. இயற்கை வளங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் பயன்களை அடிப்படையாகக் கொண்டே இப்பெறுமதி கணிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட வளங்களை மீள உருவாக்க முயல்கையிலேயே, அவ்வளங்களின் உண்மைப் பெறுமதி விளங்குமென அனுபவசாலிகள் கூறுவர். இந்நிலை தான், சூழல் பொருளியல் எனும் புதியதோர் துறை தோன்றுவதற்கும் வழி வகுத்தது.

இலங்கையின் கடற்பரப்பு ஆழங் குறைந்ததாகையால், கடல் வாழ் உயிரினங்களின் வளம் இங்கு ஏராளம் இலங்கை பவளப் பாறைகளுக்கும் பெயர்போனது. கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்குள் இந்த அழகிய பவளப் பாறைகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

அதற்கு பவளப் பாறைகளின் தொடர் அகழ்வும், 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தமுமே காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

இதையடுத்து, இயற்கை வளங்களை மீள உருவாக்குவதில் ஆர்வமுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்று பவளப் பாறைகளை ஒத்த சீமெந்துப் பாறைகளை கடலுக்கடியில் அமைத்து கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்குகந்த சூழலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் இயற்கையான பவளப் பாறைகளில் பெருகுமளவிற்கு செயற்கை பாறையில் கடல் வாழ உயிரினங்கள் உடனடியாகப் பெருகவில்லை. அத்துடன் இத்திட்டத்திற்கான முதலீட்டுச் செலவும் பராமரிப்புச் செலவும் மிகமிக அதிகமாகும். அச்செலவுகளை உணர்கையிலேயே அழிந்த பாறைகளின் பெறுமதி விளங்குவதாக அந்தத் திட்டத்தில் பணிபுரிவோர் தெரிவித்திருந்தனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை யிலே, அவை பண வசதி படைத்தவை. எந்த ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டாலும், அதிலிருந்து இலகுவாக மீளக்கூடியவை. ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அவ்வாறானவை யல்ல. 5 வருடங்களுக்கு முன் இலங்கையைத் தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நாம் முற்றாக மீளவில்லை. இத்தகைய நிலை அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுவதில்லை. விரைவிலேயே அவை தம்மை சுதாரித்துக்கொள்ளும்.

எம் ஒவ்வொருவரினதும் மனப்பூர்வமான, ஒன்றிணைந்த பங்களிப்பின் மூலமே இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ளலாம். சிறந்த வினைத்திறன் மிக்க அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்களை பொதுமக்களின் பங்களிப்புடன் தான் உருவாக்க முடியும்.

சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தும் வகையிலே தேசிய ரீதியிலான கொள்கைகளும் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது அன்றாடச் செயற்பாடுகளிலே மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே, பல்வேறு வகைகளில் எமது பங்களிப்பைச் செலுத்திச் சூழலைப் பாதுகாக்க முடியும்.

ஆடம்பரமான வாழ்க்கை முறைமைகளைத் தவிர்த்து எளிமையாக வாழப் பழகவேண்டும். எந்த ஒரு பொருளையும் பாவனையைக் குறைத்தல், மீள்பாவனை செய்தல், மீள் சுழற்சி செய்தல் ஆகிய தத்துவங்களுக்கமைய பாவிக்க வேண்டும். சிறிய பொலித்தீன் துண்டாயினும், குப்பைகளைக் கண்டபடி வீசியெறியாது. அவற்றிற்குரிய இடத்திலே போடவேண்டும். வீடுகளில் தேவையற்ற மின்சக்திப் பாவனையைக் குறைக்க வேண்டும். தேவையற்ற வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சிறிய செயற்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் கைக்கொள்ள முயற்சித்தாலே, காலநிலை மாற்றம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

இவை யாவற்றிற்குமப்பால், சகல வெகுசனத் தொடர்பூடகங்களும் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அறிவூட்ட ஒன்றிணைய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும்.

Tuesday, March 16, 2010

பூகம்ப ஆபத்து வலயங்களையும் தாண்டி தாக்குகிறது நிலநடுக்கம்

“நெஞ்சுயர்த்தி வாழ்ந்தவொரு
குடிவாழ்க்கை இடி விழுந்து
எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய்
நாளையிது மீண்டும்
அழகொளிர நிமிர்ந்திடுமா?”

என்று இயற்கை அனர்த்தத்தால் சிதையுண்ட நகரைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டிருந்தான் கவிஞனொருவன்.

மனிதனுக்கு அமைதி என்றொரு முகமிருந்தால், சீற்றம் என்றொரு முகமும் இருக்குமென்றே கூறுவர். அகம்-புறம், நன்மை-தீமை, உண்டு-இல்லை என எந்தவொரு விடயத்தையும் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு கோணங்களில் நோக்கமுடியும். அக்கோணங்களுக்குள் அடக்கவும் முடியும்.

1,0 என்ற ஒன்றுக் கொன்று முரணான இரு இலக் கங்களினடிப்படையிலேயே கணனித் தொழில்நுட்பம் இன்று வரை புதிய பல பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. இயற்கையும் அத்தகையதே.

இளந்தென்றலாய் வீசும் இயற்கைதான் கொடிய புயலையும் வீசச்செய்கிறது. அமைதியாய்ச் சென்று கடலோடு கலக்கும் ஆறுகள் தான் சிலசமயங்களில் காட்டாறுகளாய் மாறி உயிர்களைக் காவுகொள்கின்றன. நுரையாய் நிலத்தைத் தழுவும் கடலலைதான் ஆழிப்பேரலை அனர்த்தமாய்த் தன் கோரமுகத்தைக் காட்டி நின்றது.

நாம் கொத்தி, பாரத்தை ஏற்றி எத்தனை துன்பம் செய்தாலும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளும் பூமாதேவிதான், சில சமயங்களில் புவி நடுக்கமாய், எரிமலை வெடிப்பாய்ச் சீற்றம் கொள்கிறாள்.

புவிக்கோளத்தின் வெளிப்பகுதியே நாம் காணும் நிலப்பரப்புக்களும் நீர்ப்பரப்புக்களுமாகும். புவிக்கோளம், தன்னுள்ளே பல படைகளைக் கொண்டது. வெளிப்பகுதி புவியோடு எனப்படும். அதற்கு அடுத்த படைகள் முறையே மேல் மென் மூடி, கீழ் மென்மூடி, அகணி ஆகியனவாகும்.

புவியோட்டையும் மேல்மென் மூடியையும் சேர்த்து கற்கோளம் என்பர். இந்த கற்கோளமே தனித்தனியாக அசையக்கூடிய புவித்தட்டுக்களைக் கொண்டது. இப்புவித்தட்டுக்களே கண்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அரீனா முனையிலிருந்து இம்பீரியல் பள்ளத்தாக்குவரை ஏறத்தாழ 1000 கி.மீ நீளமுடைய வெடிப்பொன்று புவி மீது காணப்படுகிறது.

இது புவியின் நிலத்தட்டு எல்லைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வெடிப்பின் ஒருபக்கத்தில் வட அமெரிக்க நிலத்தட்டும் மற்றைய பக்கத்தில் பசுபிக் நிலத்தட்டும் காணப்படுகின்றன. இவ்வெல்லையை சான் அன்றியாஸ் குறையென அழைப்பர். இந்த இரு நிலத்தட்டுக்களும் ஒரு வருடத்துக்கு 2.5 செ.மீ. அளவில் வழுக்கியும் உராய்ந்தும் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய நிலத்தட்டுக்கள் புவியின் கற்கோளப்பகுதியில் காணப்படுகின்றன. அத்துடன் அவை தாமாகவே அசையும் வல்லமை மிக்கவை. அவற்றின் அசைவே நிலநடுக்கங்களுக்கான அடிப்படையாகும்.

தட்டுக்களின் அசைவு குறைமேற்பரப்புக்களையும் தோற்றுவிக்கும். இந்தக் குறைதட்டுக்கள் தமது எல்லைப் பகுதிகளில் ஒழுங்கற்றதாகக் காணப் படுவதுடன் ஒன்றுடனொன்று வழுக்கியும் உராய்ந்தும் செல்லும் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன.


இத்தட்டுக்களுக் கிடையிலான சார்பியக்கம், அவற்றிற் கிடையிலான தகைப்பை அதிகரிக்கும். இது பெரியளவிலான விகார சக்தியை குறைமேற்பரப்புக்களில் உருவாக்கும்.

தட்டுக்களுக்கிடையே ஏற்படும் உராய்வினாலான வெப்பம் பாறைகளில் வெடிப்பை ஏற்படுத்தும். இவ்வெடிப்பு பூமியதிர்ச்சிக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பூமி அதிர்வுகள் இந்த குறை மேற் பரப்புக்களாலேயே தோற்றுவிக்கப்படும். பல பூமியதிர்வுகள், தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலேயே நிகழும். அவற்றினால் உருவாக்கப்படும் விகாரம் கு¨றேமேற் பரப்புக்களில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கும்.

இவ்வொழுங்கற்ற தன்மையே அழிவுகளுக்குக் காரணமாகும். எரிமலைப் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி அடிக்கடி நிகழும். இவ்வாறு நிகழ்வதற்கு புவித்தட்டுக்களின் குறைமேற்பரப்பும் எரிமலையின் மக்மாக் குழம்பின் அசைவும் காரணமாகின்றன. எரிமலை வெடிக்கப்போவத ற்கான ஆரம்ப சமிக்ஞையாக அப்பகுதிகளில் ஏற்படும் பூமியதிர்ச்சியைக் கருதலாம்.

பூமிக்கு அடியிலிருக்கும் இந்த நிலத்தட்டுக்களின் மோதுகையாலோ அல்லது அசைவினாலோ உருவாக்கப்பட்ட அதிர்வலைகள் புவிமேற்பரப்பில் பரவும் போது நிலநடுக்கமாக உணரப்படுகின்றன. நிலமேற்பரப்பில் மட்டும் தான் அவை உணரப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை.

சமுத்திர மேற்பரப்புகளிலும் கூட அவை உணரப்படலாம். அவ்வாறு சமுத்திர மேற்பரப்பில் உணரப்பட்ட கடலடி நில நடுக்கத்தின் விளைவே 2004 இல் நாம் கண்ட ஆழிப்பேரலை அனர்த்தமாகும்.

உலக வரைபடத்திலே நெருப்பு வலயங்கள் எனும் நிலநடுக்கப் பிரதேசங்களாகச் சில பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.

தென்னமெரிக்க முனையின் மேற்குக் கரையோரத்தில் தொடங்கி, சிலி, பெரு ஆகிய நாடுகளை உள்ளடக்கிப் பின் மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியைக் கடந்து கொஸ்தாரிக்கா, நிகராகுவா, மெக்சிக்கோ, கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலஸ்காவைத் தொட்டு ஜப்பான், சீனா, வட இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தாண்டி மத்திய ஆசியாவிலே ஈரானையும் உள்ளடக்கி பின் மத்திய தரைக்கடல் நாடுகளுடன் முடிவடைகிறது. ஆனால் இவ்வலயத்தில் இல்லாத நாடுகளிலும் கூடப் புவிநடுக்கம் ஏற்படலாமென்பது நிதர்சனமான உண்மையாகும்.

நிலநடுக்கம், புவியின் குறிப்பிட்ட பகுதியில் தான் நடக்க வேண்டுமென்ற எந்தவொரு நிர்ப்பந்தமுமில்லை. அவை எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். சிறியளவிலான நில அதிர்வுகள் அடிக்கடி நடப்பவையல்ல. ஏறத்தாழ 100 வருடங்களுக்கொரு முறையே பெரியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக, ஆய்வுகள் தெரிவித்திருந்தன.

நில அதிர்வுகள் / நடுக்கங்களின் தன்மையை அளவிடுவதற்கு ‘ரிச்டர்’ எனும் அளவிடை பயன்படுகிறது. அளப்பதற்கு புவிநடுக்கமானி அல்லது நிலநடுக்கப் பதிகருவி எனப்படும் கருவி பயன்படுகிறது. இக்கருவியை சார்ள்ஸ் ரிச்டர் என்பவர் கண்டுபிடித்தமையினால் நில நடுக்க அளவிடை ‘ரிச்டர்’ எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் மேக்கலி எனும் அளவுத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இது மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதேயன்றி ரிச்டர் அளவிடையைப் போன்று விஞ்ஞானபூர்வமானதல்ல. தற்போது திருப்பப் பருமனை அடிப்படையாகக் கொண்ட அளவிடையாக (Moment Magnitude Scale) புதிய அளவிடையொன்று பயன்படுத்தப்படுகிறது.

நடுத்தரப் பருமனுடைய பூகம்பங்களைப் பொறுத்தவரையில் ரிச்டர் அளவிடையும் இந்தப் புதிய அளவிடையும் ஒரேவிதமானவை. ஆனால் பெரிய பருமனுடைய பூகம்பங்களில் அவ்விரு அளவிடைகளும் வேறுபடும்.

எனினும் ரிச்டர் அளவிடையே புழக்கத்தில் உள்ளது. நிலநடுக்கத்தின் ரிச்டர் அளவு 7 அல்லது அதற்கு மேற்பட்டதாயின் ஆபத்தான விளைவுகளை, பரந்தளவிலான பிரதேசங்களில் ஏற்படுத்துமெனவும் ரிச்டர் அளவு 3 அல்லது அதற்குக் குறைவாயின் நிலநடுக்கத்தை உணரமுடியாது எனவும் 3 க்கும் 7 க்கும் இடைப்பட்டளவிலான பருமனுடைய நிலநடுக்கங்கள் சிறியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

ரிச்டர் அளவுகள் மடக்கைப் பெறுமதியிலானவை. 7 ரிச்டர் அளவானது. 6 ரிச்டர் அளவை விட 31.6 மடங்கு (10 3/2 மடங்கு) பெரியது. அதேசமயம் 5 ரிச்டர் அளவைப்போல் கிட்டத்தட்ட 1000 மடங்கு (998.56 மடங்கு) பெரியது. 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குக் காரணமாகிய நிலநடுக்கம் அண்மையில் சிலியில் நடந்த நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 1000 மடங்கு பெரியது எனலாம்.

நிலநடுக்கத்தால் உருவாக்கப்படும் நில அதிர்வலைகள் (Seismic waves) நெட்டாங்கு அலைகளாகவோ, அவற்றிற்கு எதிர்மாறான குறுக்கலைகளாகவோ இருக்கலாம். இவ்வலைகளின் வேகம் 3km/s இலிருந்து 13km/s வரை மாறுபடும். அத்துடன் இவ்வேகமானது அவ்வலைகள் பயணிக்கும் ஊடகத்தின் அடர்த்தியிலும் மீள்தன்மையிலும் தங்கியிருக்கும்.


Seismometer எனப்படும் நிலநடுக்கமானியால் நிலநடுக்கத்தின் பருமனையும், அது அம்மானியிலிருந்து எவ்வளவு தூரத்தில் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடியும். நிலநடுக்கமானியிலிருந்து பெறப்படும் தரவுகளினடிப்படையிலேயே வரைபுகள் வரையப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படு கின்றன.

அத்தகையதொரு ஆய்வே, புவியின் மையப்பகுதியின் அமைவை மிகச்சரியாக அறிந்து கொள்ளவும் உதவியது. பெனோகுட்டன்பேர்க் என்பவரே புவியின் மையப்பகுதியின் அமைவிடத்தை 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.

கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவிலேயே நிலநடுக்கம் தொடர்பான எண்ணக்கரு, கிரேக்க தத்துவஞானிகளால் விதைக்கப்பட்டு விட்டது. நிலநடுக்கங்களானவை காலங்காலமாக நிகழும் செயற்பாடுகள் என வரலாறு கூறுகிறது. இத்தாலியின் பழம் பெரும் நகராகிய பொம்பேய் நிலநடுக்கத்திற்குப் பெயர் போனது. நிலநடுக்கங்களால் சிதைந்த அந்நகரின் இடிபாடுகளை இன்றும் காணமுடியும்.

நிலநடுக்கங்களால் உருவாகும் ஆழிப்பேரலைகளுடன், கடற்கோள் அனர்த்தங்களும் புவித்தட்டுக்களின் நகர்வுமே இன்றும் நாம் காணும் கண்டங்களாகும். மறைந்துபோன குமரிக்கண்டமும் கடல் கொள்ளை கொண்ட பூம்புகார் நகரும் கூட நிலநடுக்கங்களுக்குச் சான்று பகரும் வரலாற்று ஆதாரங்களாகும்.

பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து யுரேசியா எனும் பெயருடைய கண்டமாக இருந்தனவெனவும் ஒரு பெரும் பூகம்பத்தால் ஆசியா, ஐரோப்பா என தனித்தனிக் கண்டங்களாகப் பிரிந்தனவெனவும் கூறப்படுகிறது. ஆயினும் தெளிவான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை.

1755 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கடலடி நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. அதனால் உரு¡கிய ஆழிப்பேரலைகளால் போர்த்துக்கல்லின் தலைநகராகிய லிஸ்பன் பெரியளவில் பாதிக்கப்பட்டது. லிஸ்பன் துறைமுகம் பழம் பெருமை வாய்ந்தது. அத்துடன் செல்வந்தப் பகுதியாகவும் விளங்கியது. லிஸ்பனில் மாத்திரம் 30,000 பேர் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு காவுகொடுக்கப்பட்டனர். அன்று வீழ்ந்த லிஸ்பன் நகரால் இன்றும் கூட, பழைய நிலைமைக்கு மீளமுடியவில்லை.

1989 இல் சென்பிரான்சிஸ்கோ நகரை உலுக்கிய பூகம்பத்தை எவரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் வரையறுக்கப்பட்டவையல்ல. அவற்றின் முக்கிய விளைவான நில மேற்பரப்பின் அதிர்வு காரணமாக கட்டடங்கள் போன்ற உறுதியான கட்ட மைப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்படு கின்றன. சிறியளவிலான நிலநடுக்கங்கள் கூடப் பாரிய சேதங்களைத் தோற்றுவிக் கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.

நில அதிர்வுகளுடன் கூடிய எரிமலை வெடிப்பு மண்சரிவைத் தோற்றுவிக்கும். நில அதிர்வுகளால் நிலத்துக்குக் கீழாகச் செல்லும் எரிவாயு மற்றும் மின்னிணை ப்புக்கள் சேதமுற்று, தீ பரவலாம். அவ் வாறு தீ பரவும் போது அதைக் கட்டுப்படுத்துவது சற்றுக் கடினமானது.

1906 இல் சென்பிரான்சிஸ்கோவில் நடந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தைவிட மேற்குறிப்பிட்டவாறு பரவிய தீயினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.

மண் திரவமயப்படலானது பூகம்பத்தால் ஏற்படும் பாராதூரமான விளைவாகக் கருதப்படுகிறது. நில அதிர்வினால் மண் போன்ற நீர் நிரம்பிய துணிக்கைப் பதார்த்த்ஙகள் தமது வலிமையை இழந்து திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும். இவ்வாறு மண் துணிக்கைகள் மாறுவதால் கட்டடங்கள், பாலங்கள் போன்ற உறுதியான நிர்மாணங்கள், திரவமயமாக்கப்பட்ட படிவுகளிலே மிதந்து தாமே இடிந்து தரைமட்டமாகிவிடுகின்றன.



அத்துடன் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்படும் அணைக்கட்டுக்கள் சிதைவடைவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமானதாகக் காணப்படும்.

இவை யாவற்றிற்குமப்பால் பூமியதிர்ச்சியா னது மனித உயிருக்கும் வாழ்வுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அளவிடப்பட முடியாதன.

ஒரே தரத்திலேயே பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுக்கும் இயற்கை அனர்த்தமாகப் பூமியதிர்ச்சி கருதப்படுகிறது. இவை தவிரப் பல நோய்கள் பரவுவதற்கும், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, சொத்துக்களின் இழப்பு, உட்கட்டமைப்பு வசதிகளின் அழிவு போன்ற பல பிரச்சினைகளால் மனிதனின் வாழ்வியல் பாதிக்கப்படுவதற்கு ஏதுவாகிறது.

அண்மையில் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஹெயிட்டி பூகம்பத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனதை வெகுசனத்தொடர்பு ஊடகங்களால் காணக்கூடியதாக இருந்தது.

சில பகுதிகளில் ஏற்படும் நிலநடுக் கங்களுக்கு வல்லரசுகளின் நாசகார ஆயுதப் பரிசோதனைகள் காரணமாக அமைவதாக ஊகங்களும் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் அவ்வூகங்கள் எவையுமே உத்தியோகபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

வருடாந்தம் நிகழும் பூகம்பங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் நடக்கும் பூகம்பங்களையும், அவற்றினால் ஏற்படும் சேதங்களையும் உடனுக்குடன் அறியத்தரும் வகையில் கூகிள் மப்ஸ் எனும் இணையத்தளம் இன்னொரு இணையத்தளத்துடன் இணைந்து செயற்படுகிறது. அவ்விணை யத்தளமானது வரைபடங்கள், நடுக்கத்தின் பருமனுடன், தேவையான அடிப்படைத் தகவல்களை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறது.http://லீarthquakலீs.taஜீoni.nலீt எனும் முகவரியூடாக அவ்விணையத்தளத்தைப் பார்வையிட முடியும்.



ஹெய்ட்டியின் பூகம்பம் மக்கள் மனதிலே ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளேயே சிலி அருகே பசுபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.

சிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 8.8 ரிச்டர் அளவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர். கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

நடக்கும் பூமியதிர்ச்சிகளையும், அவற்றினால் ஏற்படும் அழிவுகளையும் ஆழ நோக்குகையில், தன்னை விஞ்சியவர் எவருமில்லை என்று வாழும் மனிதனுக்கு, மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் இயற்கையின் செயற்பாடுகள் தான் இவையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

விஞ்ஞானத்தாலும் அதன் பயனால் உருவாக்கப்பட்ட அறி கருவிகளாலும் நிலநடுக்கங்களின் வருகையை எதிர்பார்த்து அறிவிக்க முடியுமே தவிர அவற்றைத் தடுக்க முடியாது. நிலநடுக்கம் இன்னும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட, புதிராகவே காணப்படுகிறது.

எம்மால் செய்யக்கூடியது, ஏற்படும் சேதங்களைக் குறைத்தலும் இனியும் சேதங்கள் ஏற்படாமல் தவிர்த்தலுமேயாகும். பூகம்ப வலயத்தினுள் இருக்கும் ஜப்பான் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

ஜப்பானியர்களின் எளிமையான வாழ்க்கை முறையும், பூகம்பங்களையும் ஆழிப் பேரலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான கட்டட அமைப்புக்களும் ஏனைய நிர்மாணப்பணிகளும் தான் எத்தனை பேரழிவு நிகழ்ந்தாலும் ஜப்பான் மீள எழுவதற்குக் காரணமாகின்றன.

ஒவ்வொரு நாடும் தனது அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை இயற்கையைப் பாதிக்காத வகையிலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் காணப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்திற்கான வலுவான கட்டமைப்புக்களையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.

இயற்கையின் சீற்றம் எதிர்வு கூறப்பட முடியாதது. ஆறாவது அறிவாய்ப் பகுத்தறிவைப் பெற்று பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் பொறுப்புணர்வுடன் நடந்தால் இயற்கையும் சீற்றம் கொள்ளாது அமைதி காக்குமென்பது நிதர்சனம்!