Sunday, October 17, 2010

Kilinochchi..It's is green again..



Ever green trees bound around.


Streams flowing all around,
the paddy in the field nodding up head.
Flowers blooming in the lawn bed.
Seasons keeps on chasing each other.
The sun and moon playing hide and seek together.
Humming birds fly over like silver stream.
While the sun lingering in golden gleam.
In the wonder land dreaming I lie.
Echoes and memories never die.
But my inner heart said;
“In this vast earth you are such a dot
But we can love and think but earth cannot."...
Says a poem in the World Wide Web.

Being the paddy store of Vanni, Kilinochchi is not exceptional for it. There is a saying I heard in a street drama that ‘Kilinochchi will always help its guest or immigrant for a better progress’. Whoever the immigrants are, Kilinochchi provides them with a pleasant livelihood without any discrimination. Even the time has proven the truth of this saying.





Due to unavoidable circumstances, people moved to Kilinochchi from all over Sri Lanka. Many of them didn’t want to go back to their native places. Kilinochchi provided them a peaceful livelihood in harmony with nature.


Kilinochchi is an agricultural area nourished with water resources and fertile soil in nature. Iranaimadu, one of the largest irrigation tanks in Sri Lanka is located in Kilinochchi. Iranaimadu tank and some other major tanks like Akkarayan are responsible for the irrigation of agriculture in Kilinochchi. Though it is in the dry zone you will never feel the effects of drought there.


There were only few people who have been living for generations in Kilinochchi. Many people have settled down there after 1958. The population density of Kilinochchi increased in 1995 and later due to various external factors. The livelihood of people there is agriculture mainly paddy cultivation. Irrigation development plans have utilized the natural resources to their maximum and made a revolution in the agriculture sector of Kilinochchi.The resources and peaceful life that Mother Nature provides didn’t allow the immigrants to leave Kilinochchi and go back to their native places. As said in the poem, who could leave the green paddy fields, irrigation channels, small and large scale irrigation tanks, a lush land with trees that provide shade.


A bitter war that lasted for three decades has come to an end today. The re-settlement activities in Kilinochchi district are almost at the final stage now. People came up from a vast destruction is starting a new life now. The lands were waiting for their owners to be cultivated. Now the first harvest is taken and the fields are ready for the sowing of maha season too.
During harvesting season, the scenic view of yellowish paddy fields and the busy farmers reminded phoenix the mythological bird. It has a 500 to 1000 year life-cycle, near the end of which it builds itself a nest of twigs that then ignites; both nest and bird burn fiercely and are reduced to ashes, from which a new, young phoenix or phoenix egg rises, reborn anew to live again.

Mr.Mohanabavan, The director-planning of Kilinochchi shared some details of paddy cultivation in Kilinochchi. For the last season, paddy was cultivated in about 6000 acres of land in Kilinochchi district. Due to various reasons, only few areas were chosen. And therefore each resettled farmer family is provided with 2 acres of paddy field. Iranaimadu tank itself irrigated about 4000 acres of land. Remaining parts were irrigated by Akkarayan tank and Kariyaalai-Naagapaduvaan tank.
The farmers have lost all their assets except the hope towards better future. Department of agrarian services Kilinochchi helped the farmers to plough the 2 acres of land given with the help of departmental tractors. Due to lack of tractors available, farmers were allowed to hire privately and the cost is paid by the department. That is, the cost of SL Rs2000/= was paid for an acre. In addition seed paddy and fertilizers at concession rate were provided.
Farmers are provided with land masters through the aid from japan and India. Except for a few areas, the first harvest met the expectation.
 

Farmers have undergone few practical difficulties during the cultivation in the last season. Insufficient human resources were the major difficulty they faced. It was very difficult to find labourers during the harvesting season. But the agro technological advancement has helped them to manage the problem. Machine attached to a heavy vehicle was widely used for harvesting. It was hired privately and the hire was cheaper than hiring labour for the same amount of work. The machine was very effective and efficient too. One fourth of the acre is harvested within 10-15 minutes. But when the moisture content of the land rises above certain level, the tires of most machines get buried in the mud. In those instances, human labour is used at any cost.


The average hire of the machine for an acre is about SL Rs. 5000/=. But, if department of agrarian services is provided with few such machines, then farmers could hire them at a lower rate.


The harvested paddy is purchased by ‘Vadakkin Vasantham (Uthuru Vasanthaya)’ project and MPCS Kilinochchi. Even the MPCS is finding difficult to store the purchased paddy. Their stores and mills were damaged during the war. Private houses and buildings are rented to store purchased paddy. Therefore MPCS don’t have the capacity to purchase the entire paddy that was harvested. But for the benefit of farmers, and to retain the government allocations they try their maximum to purchase the harvested paddy.

For this maha season, 40,000 acres of paddy field is expected to be cultivated. Like last season, farmers are expected to receive incentives too. We hope that those incentives will help the farmers to save some money after harvesting. That will be their investment for the betterment of the new life they have started already.


Without considering the town with busy A9, there is an unknown silence observed in Kilinochchi. Mind will automatically be surrendered to Mother Nature when the mild breeze travelling through the land of green is felt with that unknown silence. That is the everlasting beauty of Kilinochchi. This feeling has given a new dimension to Kilinochchi.


When it comes to sustainable development, Kilinochchi has a long way to travel. But when the development plans are implemented in a proper manner, the beauty of Kilinochchi will further increase. There is no doubt that Kilinochchi will be nourished more by Mother Nature.




-Saratha Manoharan-






விழிப்புலனற்றோருக்கான சுதந்திரத்தை உறுதி செய்வோம்!


வெள்ளைப் பிரம்பு...


சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு கருவி மட்டுமல்ல...
மனித சமுதாயத்தில் விழிப்புலனற்றவர்களைக் குறிக்கும் குறியீடாகவும் பயன்படுகிறது. விழிப்புலனற்றவர்களையும் அவர்களது சாதனைகளையும் கெளரவிக்கும் வகையிலே உலகளாவிய ரீதியில் வெள்ளைப் பிரம்பு தினம் கொண்டாப்படுகிறது. இன்றைய தினமாகிய ஒக்டோபர் 15 ஆம் நாள் வெள்ளைப் பிரம்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வெள்ளைப் பிரம்பானது விழிப்புலனற்றவர்களுக்கான கருவியாக மட்டுமன்றி அவர்களை வெளியுலகுக்கு அடையாளம் காட்டும் குறியாகவும் மாறிவிட்டிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக, விழிப்புலனற்றவர்களுக்கு ‘பிரம்பு’ துணையாக இருந்திருக்கிறது. ஆனால் முதலாம் உலக மகாயுத்தத்தின் பின்னர்தான் வெள்ளைப் பிரம்பு உலகுக்கு அறிமுகமாயிற்று.
1921 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிக்ஸ் என்ற புகைப்படக் கலைஞர் விபத்தொன்றிலே தமது விழிப்புலனை இழந்தார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலே அவர் வசித்தமையால் பயணிப்பதில் பெருஞ் சிரமங்களை எதிர்நோக்கினார். தான் வைத்திருந்த கைத்தடிக்கு வெள்ளை வர்ணத்தைப் பூசினார். அது மற்றோரின் பார்வைக்கு நன்றாகத் தெரியும் என ஊகித்தமையாலேயே அவர் அவ்வாறு செய்தார்.
1931 ஆம் ஆண்டு பிரான்சிலே விழிப்புலனற்றோருக்காக தேசிய வெள்ளைப் பிரம்பு இயக்கம் தொடக்கப்பட்டது. அவ்வியக்கத்தின் சார்பிலே விழிப்புலனற்றோருக்கு அடையாளமாக இரு வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன.

அந்நிகழ்வின் பின்னர், முதலாம் உலக மகா யுத்தத்தினால் விழிப்புலன் பாதிக்கப்பட்ட பிரான்சிய மக்களுக்கும் போர் வீரர்களுக்கும் ஏறத்தாழ 5000 வெள்ளைப் பிரம்புகள் வழங்கப்பட்டன.
‘விழிப்புலன் பாதிக்கப்பட்டோருக்கு வெள்ளைப்பிரம்பொன்றை வழங்கவேண்டும்’ என 1931 ஆம் ஆண்டு பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது வானொலி ஒலிபரப்பிலே தெரிவித்திருந்தது. அப்போதுதான், (விழிப்புலனற்றோரை அடையாளங்காட்டும்)உலகளாவிய ரீதியிலே அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக வெள்ளைப் பிரம்பு மாறும் எனவும் அவ்வொலிபரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
1931லேயே சர்வதேச லயன்ஸ் கழகம் விழிப்புலனற்றோருக்கு வெள்ளைப் பிரம்பை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தது, விழிப்புலனற்றோர் வெள்ளைப் பிரம்பைக் குறிப்பிட்டளவு சாய்வாகப் பிடித்தபடி நடத்தலானது அவர்களது அடையாளமாகவே மாறியது.
1964 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியினால் ஒக்டோபர் 15 வெள்ளைப் பிரம்பு தினம் என சட்டபூர்வமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
அடிப்படையில் வெள்ளைப்பிரம்பு தினம் பற்றி அறிந்தவர்கள் மிகச் சிலரே. இத்தினத்திலே, விழிப்புலனற்றவர்களின் சாதனைகளைப் பாராட்டும் அதேவேளை அவர்களுக்கான சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்காக இரக்கப்படுவதனால் பயனேதும் கிடைத்துவிடப்போவதில்லை. ஆதலால் இரக்கப்படுவதைவிடுத்து அவர்களும் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை ஒத்த வாழ்வை முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்யவேண்டும்.

விழிப்புலனை இழந்தவர்கள் தமது வாழ்வையே தொலைத்துவிட்டவர்களாக ஒருபோதும் அர்த்தப்பட மாட்டார்கள்.
சங்ககாலத்திலே போற்றப்பட்ட இரட்டைப் புலவர்களுள் ஒருவரிலிருந்து ஹெலன் கெல்லர் தொட்டு பல விழிப்புலனற்றோர் சாதனை படைத்திருக்கிறார்கள்.
கிரேக்க கலாசாரத்தின் அபிவிருத்தியில் ஆதிக்கம் செலுத்தியவராகக் கருதப்படும் கவிஞர் ஹோமரும் விழிப்புலனற்றவர் என்றே கூறப்படுகிறது. இலியட், ஒடிசி என்ற கிரேக்க மகா காவியங்களை அவரே இயற்றினார். இந்தியக் கவிஞரும் இசை வல்லுநருமான சூர்தாஸ் வானியலாளர் கலிலியோ கலிலி பிறெயில் முறைமையைக் கண்டுபிடித்த லூயிஸ் பிறெயில், போன்ற பலர் பல்துறைகளிலும் சாதனை படைத்திருக்கிறார்கள்.
இன்னும் பெயர் தெரியாத பலர் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களெல்லாம் தாம் விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள் என ஒதுங்கியிருந்திருந்தால் பல அரிய படைப்புக்கள் எமக்குக்கிடைக்காமலே போயிருக்கும்.
விழிப்புலனற்றவர்களைப் பிரித்துப் பார்க்கும் மனப்பாங்கு எம்மவர் மத்தியிலே இன்னும் காணப்படுகிறது. ஆதலால்தான் எமது சமூகத்தில் விழிப்புலனற்றவர்களால் மேலெழுந்து பிரகாசிக்க முடியவில்லை என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில், சமூகத்தின் மனப்பாங்கு மாறும் வரை விழிப்புலனற்றவர்களுடன் கூடிய சமூகம் ஏகவினமான அலகுகளைக் கொண்டிருக்காது. ஆதலால் தான் விழிப்புலனற்றோரின் முன்னேற்றமும் விருத்தியும் தடைப்படுகிறது.
ஆனால் இந்தத் தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக்கி வாழ்க்கையில் முன்னேறிய பல விழிப்புலனற்றோர் எமது நாட்டிலே காணப்படுகிறார்கள் என்பதை எவராலும் மறுதலிக்க முடியாது.
விழிப்புலனற்றவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கான இல்லங்கள் பலவும் காணப்படுகின்றன. அந்த வகையிலேயே ‘தரிசனம்’ என்ற விழிப்புலனற்றோருக்கான இல்லமும் அமைந்திருக்கிறது.
தமிழ் மாணவர்களுக்கு வழிகாட்டவென அமைந்திருக்கும் இத்தகைய இல்லங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. அத்தகையதோர் நிலையில் ‘தரிசனம்’ ஆற்றும் சேவைகள் அளப்பரியவை.
‘தரிசனம்’ நிறுவனத்தின் செயலாளரான ரவீந்திரனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அவர் சில தகவல்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார். கிழக்கிலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் நா. இதயராஜன் மற்றும் இலக்கியக் கலாநிதி ம. சிவசுப்பிரமணியம் போன்றோரின் பெருமுயற்சியால் 1992ஆம் ஆண்டு ‘தரிசனம்’ உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
‘தரிசனம்’ நிறுவனத்திற்கு மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரிக்குப் பின்னால் இருந்த காணி அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. 2002ஆம் ஆண்டிலிருந்து அக்காணியிலே தனது சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
அதற்கு முன்னர், ஓய்வுபெற்ற மேலதிக அரச அதிபர் பூ. சங்காரவேல் தனக்குச் சொந்தமான கட்டடத்தில் ‘தரிசனம்’ இயங்க வழிசெய்திருந்தார்.

5 - 12 வயதுக்குட்பட்ட விழிப்புலன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால் கல்வி கற்கும் காலத்தில் இடை வயதிலே தமது பார்வைப் பலனை இழந்தவர்களும் கூட வயதெல்லையைக் கருதாது சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
தற்போது அங்கே 13 ஆண் பிள்ளைகளும் 13 பெண் பிள்ளைகளும் தங்கியிருந்து கல்வி பயில்கின்றார்கள்.
ஆண் பிள்ளைகள் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் பெண் பிள்ளைகள் கல்லடி விவேகானந்த மகளிர் மகா வித்தியாலயத்திலும் கல்வி பயில்கின்றார்கள்.
ஏனைய மாணவர்களுடன் சேர்ந்தே கல்வி கற்கும் இம் மாணவர்கள் பிறெயில் முறையிலே குறிப்பெடுத்துக் கொள்கின்றனர். மதியம் 2 மணிக்குப் பின்னர் தரிசனத்திலே அவர்களுக்கான வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

பிறெயில் முறையிலே பயிற்றுவதற்காக 6 ஆசிரியர்கள் தரிசனத்திலே கடமை புரிகின்றனர். க. பொ.த. உயர்தரப் பாடத் திட்டத்தைக் கற்பிப்பதற்காக 5 வருகை தரு ஆசிரியர்களும் இருக்கின்றனர்.

சங்கீதத் துறையிலும் ‘தரிசனம்’ மாணவர்கள் பயிற்றப்படுகின்றனர். அத்துடன் வயலின், மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளையும் பயின்று வருகின்றனர்.
மதியம் 2 மணிக்குப் பிறகு வகுப்புக்கள் நடைபெறும் பாடசாலைக் கட்டடம் வட-கிழக்கு மாகாண சபையின் உதவியுடனும் மாணவர்களுக்கான விடுதிக் கட்டடம் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனமொன்றின் உதவியுடனும் கட்டி முடிக்கப்பட்டன.
எதிர்காலத்தில் ‘தரிசனம்’ மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை அமைக்கும் திட்டமும் காணப்படுவதாக ரவீந்திரன் தெரிவித்தார்.
தரிசனத்திலிருந்து இதுவரை காலத்திலும் 13 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியிருக்கின்றனர். அவர்களுள் 8 பேர் தமது பட்டப்படிப்பை முடித்து வெளியேறிவிட்ட அதேசமயம் ஏனையோர் தமது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இங்கு மாணவர்கள் யாவரும் பிறெயில் முறையிலேயே கல்வி கற்கின்றனர். பரீட்சைகளைப் பொறுத்த வரையிலே, வினாத்தாள் பிறெயில் முறைமைக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு இம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அவர்களின் விடைத்தாள் பிறெயிலிலேயே அமைந்திருக்கும். அது மீள மொழி மாற்றம் செய்யப்பட்டுத் திருத்தப்படும்.
முன்னைய காலங்களிலே, பிறவிக் குறைபாடு காரணமாகவும், நோய்த் தாக்கத்தாலும் விழிப்புலனை இழந்த அல்லது விழிப்புலன் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலர் காணப்பட்டனர். ஆனால் தற்போது இணையும் மாணவர்களில் பெரும்பாலானோர் நடந்து முடிந்த யுத்தத்தினால் விழிப்புலனை இழந்தவர்களாகவோ அல்லது விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்களாகவோ காணப்படுகின்றனர்.
இங்கு சேர்க்கப்பட்ட பின்னர், விடுதியிலேயே தங்கிக் கல்வி கற்கும் மாணவர்கள் தவணை விடுமுறைகளுக்கு மட்டும் வீட்டுக்கு அனுப்பப்படுகின்றனர். அவசரத் தேவையொன்றின் நிமித்தம் தமது வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தால் பெற்றோர்/ பாதுகாவலரின் கோரிக்கைக் கடிதம் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்கள் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் குறித்த தேவை முடிந்ததும் உடனே ‘தரிசனம்’ நிர்வாகத்தால் மீள அழைத்துக்கொள்ளப்படுகின்றனர்.
‘தரிசனம்’ நிறுவனத்தைப் பொறுத்த வரையிலே அது வழங்கும் சேவைகள் முற்றிலும் இலவசமானவையாகும். ‘தரிசனத்தை’ நிர்வகிப்பதற்கான நிதி உள்ளூர் நன்கொடைகள், வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களின் உதவிகள், கொடி தினத்தில் சேர்க்கப்படும் பணம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி முதலாய வழிகளிலே பெறப்படுகிறது.

நல்லுள்ளம் படைத்த அன்பர்களின் உதவியால் பிரச்சினைகள் இன்றி ‘தரிசனத்தை’ நிர்வகிக்கக் கூடியதாக இருப்பதாக செயலாளர் ரவீந்திரன் தெரிவித்தார். ஆயினும் சில சமயங்களில் நிதி நிலைமையைச் சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் வங்கியிலுள்ள சிறு நிலையான வைப்பின் மூலம் பெறப்படும் வட்டி பயன்படுத்தப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
தரிசனத்தை நிர்வகிக்கும் பொதுச் சபையிலே உயர்நிலைகளில் இருக்கும் கற்றோர் பலர் காணப்படுவதால் எந்தவித அதிகார, பதவிப் பிரச்சினைகளும் இன்றி ‘தரிசனம்’ நிர்வகிக்கப்படுவதாக ரவீந்திரன் பெருமையுடன் குறிப்பிட்டார்.
தரிசனத்தைப் பொறுத்த வரையிலே, அங்கு தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்கள் யாவருமே விழிப்புலன் பாதிப்பை உடையவர்கள். அவர்களை ஏகவினமான குடியலகுகளாகக் கருதமுடியும். அங்கு விழிப்புலன் பாதிப்பு/ இன்மை என்பது ஒரு குறையாக நோக்கப்படாது. ஆதலால் தான் தரிசன மாணவர்களால் ஏனையோரைப் போலவே தமது வாழ்வியலையும் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது
மாறாக பல பெற்றோர், விழிப்புலன் பாதிக்கப்பட்ட தமது பிள்ளையை விழிப்புலனற்றோர் இல்லங்களிலே சேர்ப்பதை கெளரவக் குறைவாகக் கருதுகின்றனர். அவர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்கவே முயல்கின்றனர். ஒரு எல்லைக்கு அப்பால் அம்முயற்சி சாத்தியப்படாது என்ற உண்மை அவர்களுக்கு விளங்குவதில்லை போலும்! அவ்வாறு வளர்க்கப்பட்ட பிள்ளைகள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப் பட்டவர்களாகவே வாழ்கின்றனர். சமூகத்துடன் இணைந்து வாழ்வதானது மனிதனுக்கே உரித்தான பண்பு. அப்படியிருக்க, அவர்கள் மட்டும் எதற்காக சமூகத்திலிருந்து ஒதுங்கி வாழ வேண்டும்? என்பதே எம்முள் எழும் வினாவாக இருக்கிறது.
விழிப்புலனற்ற மாணவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை தரிசனத்தில் சேர்த்துவிடுங்கள்; அவர்களது வாழ்வை ஒளிபெறவையுங்கள் என்பதே ரவீந்திரன் எமது சமூகத்திடம் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.
இத்தகைய இல்லங்களில் தமது பிள்ளை நெறிமுறைகள் பிறழாது வளர்க்கப்படுமா? என்றதொரு சந்தேகம் பல பெற்றோர் மத்தியில் எழத்தான் செய்கிறது. ஆனால், அத்தகையதொரு சந்தேகமே தேவையில்லையென நிரூபித்து நிற்கிறது தரிசனம்!

இலங்கைப் பல்கலைக் கழகங்களுக்கான அனுமதியில் விழிப்புலனற்ற மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு காணப்படுகிறது. ஆயினும் இம் மாணவர்கள் ஒரு போட்டிப் பரீட்சையில் ஏனைய மாணவர்களுடன் போட்டியிட்டு பல்கலைக்கழக அனுமதிக்குத் தெரிவாகி வரும் ஒரு விடயமே தரிசனத்தின் செயற்றிறனை விபரிக்கப் போதுமானது.
சற்று வருத்தத்திற்குரிய விடயம் யாதெனில் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய இந்த 8 மாணவர்களுக்கும் இதுவரை வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை என்பதாகும்.
அத்துடன், நல்லுள்ளம் கொண்ட அன்பர்களின் உதவியையும் தரிசனம் வேண்டி நிற்கிறது.
இன்று தரிசன மாணவர்களின் முக்கிய தேவைகளுள் ஒன்றாக இருப்பது பிறெயில் முறையில் அச்சிடும் கருவி (ஜிrintலீr) ஆகும். கணனியில் சேமிக்கப்பட்டிருக்கும் மென்பிரதி வடிவிலான ஆவணங்களையும் நூல்களையும் இக்கருவி பிறெயில் முறையில் அமைந்தவையாக மாற்றி அச்சிட்டுத்தர உதவும். இக்கருவிக்கான செலவு ஏறத்தாழ 9 இலட்சம் ரூபாவாகும்.
தரிசனத்திலே பிறெயில் முறைமையிலான புத்தகங்களைக் கொண்ட நூலகமொன்றை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த அச்சிடும் கருவி இல்லாததால் அப்பணியைத் துரிதமாக முன்னெடுக்க முடியவில்லையென ரவீந்திரன் மேலும் தெரிவித்தார்.
தரிசனத்தைப் பொறுத்தவரையிலே, கணக்கு வழக்குகள் யாவுமே வெளிப்படையானவையாகும். ஆதலால் அவை தொடர்பான ஆவணங்கள் எண்ணிக்கையில் அதிகமாகப் பிரதியிடப்படுகின்றன. ‘தரிசனம்’ நிறுவனத்திடம் ஆவணங்களைப் பிரதி செய்யும் இயந்திரம் சொந்தமாக இல்லாமையால் குறிப்பிட்டளவு தொகை பணம் அதற்காகச் செலவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
‘தரிசனம்’ நிறுவனத்தினர் இம்முறை வெள்ளைப்பிரம்பு தினத்தை, பதுளை மத்தி லயன்ஸ் கழகத்துடன் இணைந்து பதுளையில் கொண்டாடவிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘தரிசனம்’ அமைப்பைத் தொடர்பு கொள்ள விரும்புவோர் +94652223489 begin_of_the_skype_highlighting +94652223489 end_of_the_skype_highlighting என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது dharisanambatticaloa@ rocketmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ தொடர்பு கொள்ள முடியும்.
இரண்டு கண்களும் நன்றாக அமைந்து நாம் விரும்பியபடி இப்பூவுலக வாழ்வின் இன்பங்களை எல்லாம் கண்டு களிக்கும் வாய்ப்பை இறைவன் எமக்கு அளித்திருக்கிறார். ஆனால் நாமோ அந்த வாய்ப்பைப் பொருட்படுத்துவது கூட இல்லை. தீயவைகளில் மனதைச் செலுத்துவதிலேயே பெரும்பாலான காலத்தைப் போக்கிவிடுகிறோம். நல்லபல விடயங்களைப் பொறுத்தவரையிலே கண்ணிருந்தும் குருடராகி விடுகிறோம்.
ஆனால் மாறாக விழிப்புலன் பாதிக்கப்பட்டவர்கள் தொழில் நுட்பத்தையும் முயற்சியுடன் கூடிய தன்னம்பிக்கையையும் கொண்டு தமது வாழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார்கள். தாம் மற்றவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை தினம் தினம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே? இது நாம் சிந்திக்க வேண்டிய தருணம்!

யோகக்கலை மதங்களுக்கு அப்பாற்பட்டது

யோகம்... யோகா... என்பது இன்று யாவரும் அறிந்த ஒரு சொற்பதமாகும். இச்சொல் பல்வேறு விதமாகப் பொருள்படும் வகையிலே பயன்படுத்தப்படுகிறது. கர்ம யோகம், ஞானயோகம், பக்தியோகம் போன்றவை பகவத் கீதை முதலாய சாஸ்திரங்களிலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆயினும் யோகம் என்ற சொல்லின் பாவனை பற்றிய தெளிவின்மை பரவலாகக் காணப்படுவதை எவராலும் மறுக்கமுடியாது.



யோகம் என்ற சொல்லின் நேரடிப் பொருள் ‘ஒன்றிணைதல்’ என்பதாகும். அதாவது மனிதனானவன் இறைவனை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிணைதலை யோகம் எனக் கொள்ளலாம்.
தற்காலத்திலே யோகா எனப்படுவது பரவலாக ஒரு உடல்வளக் கலையாகவும் மனவளக் கலையாகவும் பயன்படுத்தப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பாரததேசத்திலே யோகிகளாலும் தவ சிரேஷ்டர்களாலும் பின்பற்றப்பட்டு வந்த யோக சூத்திரங்கள் பதஞ்சலி முனிவரால் தொகுக்கப்பட்டன. அதனால் அவை இன்று எமக்குக் கிடைத்தன. யோகம் மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்களின் கொள்கைகள் வேறுபடுகின்ற போதும், அவற்றின் இறுதி இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.
அந்த வகையிலேதான் யோகமும் எந்தமதத்தையும் சாராது காணப்படுகிறது. அடிப்படையில் யோகம் நான்கு பிரிவுகளைக் கொண்டது. அவை ஞானயோகம், பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம் என்பனவாகும். அவை ஒவ்வொன்றும் எட்டு உப பிரிவுகளைக் கொண்டவை. அப்பிரிவுகளின் தொகுப்பே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.

நவீன உலகின் விஞ்ஞானிகளை யோகத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானம் வியக்கவைக்கிறது. இத்தனை சிறப்புக்கள் நிறைந்த யோகம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கி. அது தரும் எல்லையில்லா ஆனந்தத்தை அவர்களையும் உணரச் செய்யும் அமைப்புகள் பல காணப்படுகின்றன.
அத்தகையதோர் அமைப்பு தமிழகத்தின் சென்னை மாநகரிலே Infinite Dimensions Charitable Trust எனும் பெயரிலே 2002ம் ஆண்டு தாபிக்கப்பட்டது.
அவ்வமைப்பின் ஸ்தாபகர் குருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி ஆவார். அவர் ஸ்தாபித்த அமைப்பானது யோகா, தியானம், பிரபஞ்ச சக்தி மூலம், நோயைக் குணப்படுத்தல் போன்ற பல சேவைகளை வழங்கி வருகிறது. அவை மட்டுமின்றி பசுமை மற்றும் சேதன வாழ்வியல் முறைமைகளை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது.
யோகம் பல பரிமாணங்களைக் கொண்டது. யோகப் பயிற்சிகள் உடலையும் உள்ளத்தையும் தயார்படுத்தி யோகம் சொல்லும் இறுதி இலக்கை அடையத் துணைபுரிகின்றன. அண்மையில் எமது பத்திரிகை நிறுவனத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த குருஜி யோகாச்சார்யா அருண் குமார்ஜி தமது இலங்கை விஜயத்தைப் பற்றியும் யோகம் பற்றிய கருத்துக்களையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

இவர் இந்தியாவின் பிரபல தொழில்நுட்பக் கல்வி நிறுவகமான ஐ.ஐ.டி (Indian Institute Of Technology) இன் இலத்திரனியில் பொறியியல் பட்டதாரி ஆவார். அவருக்கு அமெரிக்காவிலே நல்ல வேலை வாய்ப்பும் கிடைத்திருந்தது.
அதற்காக அமெரிக்காவுக்கு பயணிக்க முதல் கேரளாவில் உள்ள குரு ஆச்சிரமத்துக்கு 2 வாரம் யோகா விடுமுறைக்காகச் சென்றிருந்தார். அவருடைய குரு, சுவாமி விஷ்ணு தேவானந்தா ஆவார். இவர் சுவாமி சிவானந்தரின் நேரடிச்சீடர். ஆகையால், சுவாமி விஷ்ணு தேவானந்தா சிவானந்த யோகத்தைப் பின்பற்றுபவராக இருந்தார்.
இரண்டு வார யோகா விடுமுறையில் ஈர்க்கப்பட்ட யோகாச்சார்யா குமார்ஜி தனது அமெரிக்கப் பயணத்தை இரத்துச் செய்து 3 வருடங்கள் அவ்வாச்சிரமத்திலேயே தங்கியிருந்து யோகக் கலையைப் பயின்றார். குரு விஷ்ணு தேவானந்தா தனது பூவுடலை நீத்த போது, யோகாச்சார்யா குமார்ஜி தனக்கான பணியை உணர்ந்தார்.
அதன் வழியிலே 1993 இலிருந்து 1996 வரை அப்பலோ மருத்துவ மனையில் யோகா ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் 2002 இலே Infinite Dimensions Charitable Trust என்ற அமைப்பை சென்னையிலே தாபித்தார்.
இந்திய விமானப்படை மற்றும் பல முன்னணி வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கு யோகக் கலையின் பயிற்சிகளை அளித்துள்ளார்.
கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர்கள் பலரும் இவரிடம் யோகப் பயிற்சி பெற்றவர்களாவர். அவர்களுள் இலங்கை கிரிக்கெட் அணியின் சமிந்த வாஸ், ரவீந்திர புஷ்பகுமார போன்றோரும் அடங்குவர்.

கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த யோகாச்சார்யா அருண்குமார்ஜி சின்மயா மிஷனின் இலங்கைக் கிளையுடன் இணைந்து பல வேலைத்திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறார்.
வேறு எங்கும் கிளை அமைப்புகளைக் கொண்டிராத அவருடைய அமைப்பு யோகக் கலையின் பயிற்றுநர்களை உருவாக்குவதில் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு இந்த யோகக் கலையைப் பயிற்றுவித்து அவர்களின் வாழ்வு மென்மேலும் சிறக்க வழிகிடைக்கும் என்ற கொள்கையில் இவ்வமைப்பு உறுதியுடன் இருக்கிறது.
இவ்வமைப்புக்கான நிதியுதவி வணிக, வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கும் யோகக் கலைப் பயிற்சியாலும் நல்லுள்ளம் படைத்த அன்பர்களின் நன்கொடைகளாலும் கிடைக்கப்பெறுகிறது.
‘இருப்பவர்களிடம் பெற்று இல்லாதவர்களுக்கு வழங்குவோம்’ என்று சுருக்கமாகக் கூறினார் யோகாச்சார்யா குமார்ஜி.
துரித உணவுக்கலாசாரத்துக்கும் பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்களின் மிகை பாவனையால் விளைந்த விளைச்சலின் நுகர்வுக்கும் பழக்கப்பட்டதாக இன்றைய சமுதாயம் மாறிவிட்டது.
ஒரு காலத்திலே இயற்கை உரங்களைப் பாவித்து விளைந்த விளைச்சலை நுகர்ந்து ஆரோக்கியமாக வாழ்ந்த உயரிய சமுதாயம் எங்கள் சமுதாயம்.
இன்று நாம் தொலைத்துவிட்ட அந்த வாழ்வியலை மீண்டும் பெற இந்த அமைப்பு வழி செய்கிறது.
விவசாயிகளை சேதன விவசாயத்தில் ஈடுபடுமாறு இவ்வமைப்பு ஊக்குவிக்கிறது. நட்டம் ஏற்படும் பட்சத்தில் அந்நட்டத்தையும் தானே தாங்கிக்கொள்கிறது. ஏறக்குறைய காப்புறுதிச் சேவையை ஒத்த சேவையை இவ்வமைப்பு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. அத்துடன் அவர்களது விளைச்சலைக் கொள்வனவு செய்து நுகர்வோரின் தேவைக்கமைய வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கிறது. இத்தகைய சேவை வெகு விரைவில் தமிழகம் முழுவதும் விஸ்தரிக்கப்படவுமிருக்கிறது.
பணமே தெய்வம் என்ற இன்றைய உலகிலே சேதன விவசாயிகளின் நட்டத்துக்கும் விளைச்சலுக்கும் உத்தரவாதம் அளித்து அவர்களை ஊக்குவிக்கும் இத்தகைய அமைப்புகளின் தேவை மிகவும் அவசியமானதாகும்.
அத்துடன் Infinite Dimensions Charitable Trust என்ற இந்த அமைப்பு தனது பெயருக்கேற்ற வகையிலே பல்பரிமாணங்களையுடைய திட்டங்களை வகுத்து வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலே பலர் உணவகங்களை நம்பி வாழ்பவர்களாகக் காணப்படுகின்றனர். சுகதேகிகளைப் பொறுத்தவரையிலே இந்தப் பழக்கம் பெரிய பாதிப்பை உருவாக்காது.
ஆனால் ஏதாவது ஒரு நோயின் தாக்கமுள்ளவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். தாம் தவிர்க்க வேண்டிய உணவையும், உணவகங்களிலே தவிர்க்க முடியாதவர்களாகிறார்கள்.
அத்தகையோருக்காக சிறப்பு உணவகங்களை இவ்வமைப்பின் கீழ் நிறுவும் திட்டமும் உள்ளதாக யோகாச்சார்யா குமார்ஜி தெரிவித்தார்.
இத்தகைய இயற்கை உணவுப் பொதிகளை அலுவலகங்களுக்கு விநியோகிக்கும் திட்டம் இயற்கைச் சூழலுடன் இயைந்த விடுமுறை விடுதிகளை அமைக்கும் திட்டம் போன்ற பல திட்டங்கள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அவரது குழுவினரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் இந்த யோகக் கலையின் உன்னதத்தை இலங்கையிலும் பரப்புவதாகும்.
பூரணத்துவம் யோகா என்ற தொனிப்பொருளிலே இவர்கள் பயிற்றும் யோகக்கலை இலங்கையில் ஆனந்த யோகா எனும் பெயரிலே பயிற்றுவிக்கப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அகில இலங்கை ரீதியிலான யோகக்கலை பயிற்றுநர்களுக்கான பயிற்சி சின்மயா மிஷனின் துணையுடன் வழங்கப்படவிருக்கிறது. இலங்கையின் வடபகுதி மக்கள் பயன்பெற கூடியளவிலான பல செயற்றிட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றன.
யோகாச்சார்யா குமார்ஜி சில ஆலோசனைகளையும் எம்முடன் பகிர்ந்து கொண்டார். யோகாசனங்களைப் பயில்வதற்கு மிகவும் சிறந்த நேரம் பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை வேளை ஆகும்.
அவ்வேளையிலே ரிஷிகளும் யோகிகளும் சித்தர்களும் தவம் செய்வார்கள். அதேநேரத்தில் நாம் யோகாசனத்தைப் பயிற்சி செய்யும் போது, அந்த தவசிரேஷ்டர்களின் தவத்தால் உருவாகும் நேரலைகளை உள்வாங்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கின்றனர். அத்துடன் துஷ்டர்களுக்கு அவ்வேளை நித்திரை வேளையாகும். ஆதலால் எதிர்மறையான அலைகள் சூழலிலே காணப்படாது.
தீய எண்ணங்களை உடையவர்களும் தீய செயல்களைச் செய்பவர்களும் அதிகாலை வேளையில் ஆழ்ந்த உறக்கத்திலே இருப்பர். இத்தகைய காரணங்களால் தான் யோகப் பயிற்சிக்கு மிகவும் சிறந்த காலமாக பிரம்ம கூர்த்தம் கருதப்படுகிறது.
எதுவுமே செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்தால் பயன்கிடைக்கும் என்பர்.
அதேபோல, பிரம்மமுகூர்த்தத்தின் போது யோகப் பயிற்சியில் ஈடுபட முடியாவிடில் மாலைவேளைகளில் கூட ஈடுபடலாம் என்கிறார் யோகாச்சார்யா அருண் குமார் ஜி அதுவும் முடியாவிடில் கிடைக்கும் ஏதாவது ஒரு ஓய்வு நேரத்திலாவது ஈடுபடலாம். ஆனால் அவையெல்லாம் பிரம்மமுகூர்த்தத்தில் பயிற்சி செய்யும் போது கிடைக்கும் உச்சப்பயனைத் தரமாட்டா.
யோகப்பயிற்சிகள் மூச்சுடன் சேர்ந்து செய்யப்படவேண்டியவை. ஆதலால் முறையான யோகப் பயிற்சியில் கவனச்சிதறல்கள் இருக்காது. ஆனால் இன்று பலரும் யோகாசனங்களை மூச்சுடன் இணைந்ததாகச் செய்வதில்லை. ஆதலால் அவற்றின் பயன் வீணடிக்கப்படுகிறது.
எமது உடலானது பஞ்ச கோசங்களால் ஆனது. யோகக் பயிற்சிகள் பஞ்ச கோசங்களை வளப்படுத்தி யோகத்தின் இறுதி இலக்கை அடைய வழி வகுக்கின்றன.
யோகாச்சார்யா அருண் குமார்ஜியிடம் யோகப் பயிற்சிகளைப் பெற விரும்புபவர்கள் சின்மயா மிஷனின் இலங்கைக்கிளையுடன் தொடர்பை ஏற்படுத்தி இணைந்து கொள்ள முடியும்.
இன்றைய அவசர உலகிலே, ஆர்ப்பரிக்கும் மனதை யோகப் பயிற்சிகள் அமைதிப்படுத்த உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
நாம் ஓடி ஓடி உழைப்பது எதற்காக? பணத்திற்காகத்தானே... பணம் நிம்மதியான வாழ்வை அளித்துவிடும் என்ற நம்பிக்கையில் உழன்று, கடைசியில் நிம்மதியின்றி வாழ்வையே தொலைத்தவர்கள் பலர்...
யோகக்கலை போன்ற அரிய பொக்கிஷங்கள் எமது கைக்கெட்டும் தூரத்தில்இருப்பதற்கே நாம் கொடுத்து வைத்தவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய யோகக்கலை எனும் கடலின் ஒரு துளி நீரையேனும் பருகித்தான் பார்ப்போமே...

Thursday, October 7, 2010

நல்ல விளைச்சல் கிடைப்பதற்கு செயற்கை உரம் தேவையில்லை

2010 ஆம் ஆண்டு சர்வதேச உயிர்ப்பல்வகைமைக்குரிய ஆண்டாகப் பிரகடனப்படுத்தப் பட்டிருப்பது நாம் யாவரும் அறிந்ததோர் விடயமே. அதேபோல, உயிர்ப்பல்வகை யமையைப் பாதுகாப்பதற்கென 2010ஆம் ஆண்டுக்காகக் குறிக்கப்பட்டிருந்த இலக்குகள் எவையும் அடையப்படவில்லை என்பதையும் நாம் அறிவோம்.

எமது நாடு உயிர்பல்வகைமை யால் வளம் பெற்றது. ஆனால் அந்த வளத்தின் அருமையை நாம் விளங்கிக் கொள்ளாததால் இன்று அந்த வளம் அருகிப்போவதற்கு நாமே காரணமாகிவிட்டோம்.

உயிர்ப்பல்வகைமையின் பாதுகாப்பில் இயற்கைச் சூழல் தொகுதிகளும் பூங்காக்களும் வனப் பகுதிகளுமே கருத்தில் கொள்ளப்படுகின்றன.

எமது நாடு கீழைத்தேயக் கலாசாரத்தையும் பாரம்பரியங் களையும் அடிப்படையாகக் கொண்டது. எமது நாட்டின் சமூகங்களால் கைக்கொள்ளப் பட்டு வரும் பாரம்பரிய முறைகளால் உயிர்பல்வகைமை பாதுகாக்கப்படும் விதம் பற்றி நாம் கருத்தில் கொள்வதில்லை.

இலங்கை வனவளம் நிறைந்த நாடாக ஒரு காலத்திலே காணப் பட்டது. காலப் போக்கிலே பல்வேறு தேவைகளுக்காக வனவளம் அழிக்கப்படத் தொடங்கியது. சடுதியாகக் குறைவடையத் தொடங்கிய உயிர் வளங்கள் மீதான அழுத்தமும் அதிகரித்தது.

வனங்களின் உதவியால் தமது அடிப்படைத் தேவைகள் பலவற்றை நிறை வேற்றி வந்த மக்கள் பெருஞ் சிரமங்களை எதிர்நோக்கினர். அவர்களுக்கு வனப் பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அதன் விளைவாக, சுதேச மக்கள் இதுவரை காலமும் வனங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வந்த தமது அடிப்படைத் தேவைகளை மாற்றுவழிகளால் பூர்த்தி செய்ய முயன்றனர்.

அந்த வழியில் உருவான ஒரு முறைமையே வீட்டுத் தோட்ட முறைமையாகும். இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் பல்வேறுபட்ட வீட்டுத் தோட்ட முறைமைகள் காணப்பட்டாலும் பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டங்கள் மிகவும் பிரபலமானவையாகும்.

அவற்றின் உற்பத்தித் திறன் மிகவும் அதிகமாக இருக்கும். அதேவ§ளை உயிர்ப்பல்வகைமை யைப் பாதுகாப்பதிலும் அவை பெரும்பங்கை வகிக்கின்றன. அவை மட்டுமன்றி இந்த கண்டிய வீட்டுத் தோட்டங்கள் பெறுமதிமிக்க பொழுதுபோக்கு அம்சங்களாகவும் திகழ்கின்றன.

இவை வனங்களுக்குச் சமமானவை அல்ல. ஆயினும் கட்டமைப்பைப் பொறுத்தவரையிலே, வனங்களுக்கு மிகவும் நெருக்கமானவை. சூழலியல் செயற்பாடுகள், அங்கிகளின் பல்வகைமை, வளம் போன்றவற்றில் வனங்களுடன் வேறுபட்டவை. ஆனால் தனித்தன்மை வாய்ந்தவை. சுதேச சமூகங்கள் சுற்றுச்சூழலுடனும் வனப் பகுதிகளுடனும் கொண்ட தொடர்புகளின் அடிப்படையில் பரிணமித்தவை.

வீட்டுத் தோட்டங்கள் என்றதும் சிறியளவிலான தோட்டங்கள் என்று மனக்கண்முன் விரிந்த கற்பனையைத் தவிடுபொடியாக்கியவை இந்த கண்டிய வீட்டுத் தோட்டங்கள்! மத்திய மலைநாட்டைப் பொறுத்தவரையிலே, கண்டிய வீட்டுத் தோட்டங்கள் மிகவும் பிரபலமானவை. இவற்றை கண்டியையும் கண்டியை அண்டிய பகுதிகளிலும் பரவலாகக் காண முடியும்.



ஆயினும் பிராந்தியங்களையும், விவசாய சுற்றுச் சூழல் வலையங்களையும் பொறுத்து இவற்றின் கட்டமைப்பு மாறுபடும். கண்டியின் வருடாந்த மழைவீச்சியானது 3000 சீசீ ஆகும். இந்த உயர்ந்த மழைவீழ்ச்சி காரணமாகவும், சாதகமான சூழல் நிலைமைகள் காரணமாகவும் சிறு ஏற்றுமதிப் பயிர்களான கோப்பி, கொங்கோ, கராம்பு, மிளகு, சாதிக்காய் போன்றவை இங்கு நன்கு வளர்கின்றன. கண்டிய வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவனவும் இந்தச் சிறு ஏற்றுமதிப் பயிர்களே ஆகும்.

இத்தகைய வீட்டுத் தோட்டங்கள் இலங்கையின் ஈர வலயப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகின்றன.

சுதேச மக்களின் வீடுகளுடன் இணைந்ததான காணிப் பரப்பிலே இந்த சிறு ஏற்றுமதிப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. பரம்பரை பரம்பரையாக இந்த வீட்டுத் தோட்டங்கள் பேணப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கல்வி மாணவர்கள் வெளிக்கள ஆய்வொன்றிற்காக பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டமொன்றின் மாதிரியையும் பார்வையிட்டிருந்தனர். அந்த மாதிரி வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளர் சுது மாத்தையா என அழைக்கப்படும்

கே. வலியங்கன மல்வத்த என்பவர் ஆவார். 68 வயதான இந்த முதியவர் தனது தந்தைக்குப் பின்னர் இந்த வீட்டுத் தோட்டத்தைப் பராமரித்து வருகிறார். மிகவும் எளிமையான இவர் ஒரு வர்த்தகப் பட்டதாரி என்பது இன்றைய இளைஞர்கள் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இவரது காணியின் பரப்பளவு ஏறத்தாழ 4 ஏக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுது மாத்தையா தான் பராமரித்துவரும் இந்தப் பாரம்பரிய வீட்டுத் தோட்டம் பரிணமித்த விதத்தை அவர் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், 1945 களில் இந்த நிலம் எமக்குச் சொந்தமாகியது. அது முதலில் தேயிலைத் தோட்டமாகவே இருந்தது. ஆனால் தேயிலைக் கொழுந்துகளைக் கொய்வதற்குப் போதிய தொழிலாளர்கள் இல்லாமையால் இலாபம் கிடைக்கவில்லை. அத்துடன் தோட்டத்தின் உரிமையாளரே களத்தில் இறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேயிலைச் செடிகளை அழித்துவிட்டு வாழை பயிரிட்டோம். இலாபம் கிடைத்தது. பின்னர் சில சாதிக்காய் மரங்களைப் பயிரிட்டோம். அவற்றாலும் ஓரளவு விளைச்சல் கிடைத்தது. பின்னர் கராம்பு மற்றும் ஏனைய பயிர்களையும் பயிரிட்டோம். எனது அயலில் இருந்த தமிழ் மக்கள் மகோகனி மரத்தைப் நாட்டி வளர்க்கச் சொன்னார்கள்.

அது விரைவாக வளர்ந்தது. இலாபமும் தருகிறது. கோப்பியும் பயிரிட்டேன். ஆனால் அப்பயிர்ச் செய்கை மட்டும் வெற்றியளிக்கவில்லை. ஏனெனில் கோப்பி பூக்கும் காலத்தில் மழை பெய்வதால் பூக்களெல்லாம் உதிர்ந்து விடுகின்றன. அதேபோல், ஆனைக் கொய்யாவும் விளையவில்லை. பலமுறை முயற்சி செய்து பார்த்தேன்.

பீடையின் தாக்கமோ நோயின் தாக்கமோ தெரியவில்லை என்றார்.

அவர் மேலும் கூறுகையில் கராம்பு நல்ல விளைச்சலைத் தரும். ஆனால் பொறுப்பாக கராம்புப் பூக்களைக் கொய்வதற்குப் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. அத்துடன் கராம்பு ஒவ்வொரு வருடமும் விளைச்சலைத் தருவதில்லை. இரண்டு வருடங்களுக்கொருமுறையே விளைச்சலைத் தருகிறது என்றார். தனது வருமானம் பற்றிக் குறிப்பிடுகையில், வருடமொன்றுக்கு சாதிக்காயால் 3 இலட்சம் ரூபா கிடைக்கும்.
சிலவேளைகளில் 7 – 8 இலட்சம் ரூபாவும் கிடைக்கும். கராம்பினால் 2 இலட்சம் ரூபா கிடைக்கும். பாக்கு விற்பனையால் வருடாந்தம் ஆகக் கூடிய தொகையாக 150,000 ரூபா கிடைக்கும். கோப்பியால் 20 – 30 ஆயிரம் ரூபாவே கிடைக்கிறது என்றார். செயற்கை உரங்களைப் பாவிப்பது இலாபகரமானதாக இல்லை. ஆதலால் இயற்கை உரங்களையே பாவிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

சுது மாத்தையாவுடனான உரையாடலின் போது, அவர் தனது தோட்டத்தின் மேல் கொண்டிருந்த பிரயாசை தெளிவாக விளங்கியது. ஒரு பட்டதாரியான போதும் அவரிடம் குடிகொண்டிருந்த எளிமையும் பணிவும் நெகிழவைத்தன.

சுது மாத்தையா போன்ற பல முதலாளிகளை கண்டியை ஒட்டிய பிரதேசங்களிலே பரவலாகக் காணமுடியும். இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் அவர்களும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறார்கள் என்பதை ஒருபோதும் மறக்கமுடியாது.

ஏறத்தாழ 40 சதவீதமான இத்தகைய வீட்டுத் தோட்டங்கள், சுதேச, இயற்கைத் தாவரங்களைக் கொண்டவை. இவற்றை இனங்களால் வளம் பெற்ற, சிக்கலான விவசாயத் தொகுதிகள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

இந்த வீட்டுத் தோட்டங்கள் நாம் அறியாத பல விடயங்களை எமக்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. மரங்களுக்கிடையிலான கேத்திர கணிதத் தொடர்பு, படைகளாகக் காணப்படும் மரக்கிளைகளினூடு ஒளி செல்லும் விதம், இயற்கை வனப் பகுதிகளுக்கு வெளியே வரையறுக்கப்பட்ட நிலப் பகுதிக்குள் நடக்கும் தாவரத் தொழிற்பாடுகள் மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்புகள் போன்றவற்றை யெல்லாம் இலகுவாக வெளிக்காட்டும் தொகுதிகளாக இந்த வீட்டுத் தோட்டங்கள் காணப்படுகின்றன.

ஏகவினமான தாவர இனங்களையுடைய ஒரு சிறிய பகுதியையேனும் இப்பாரம்பரிய வீட்டுத் தோட்டங்களிலே காணமுடியாது. இவை காலத்துடன் பரிணமித்து வந்த விதம் தான் அவற்றின் நிலைப்பையும் உறுதி செய்துள்ளது. அவற்றின் நிலைப்பும் வளமும் தான் அவை சார்ந்த குடியிருப்பு களின் நல்வாழ்வை உறுதி செய்கின்றன.

இந்த வீட்டுத் தோட்ட முகா மைத்துவமானது, சந்ததி சந்ததியாகக் கடத்தப்பட்டு வருவதாகும். உரிமையும் பராமரிப்பு தொடர்பான அறிவும் கூட அவ்வாறானவையே. பாரம்பரிய வீட்டுத் தோட்டங்களின் முகாமைத்துவமானது வீட்டு வேலையின் ஒரு பகுதியாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ தான் நடைபெறுகிறது.

அதேபோல அறுவடைச் செயற்பாடுகளுக்குள் மட்டும் முகாமைத்துவம் அடங்கிவிடவில்லை. நிலம் போன்ற வளங்களின் உச்சப் பாவனை, குறிப்பிட்ட காலங்களில் கிளைகளை வெட்டுதல், இயற்கையாகவே முளைத்த நல்ல நாற்றுகள் வளர்வதற்காக தேவையற்ற நாற்றுக¨ளை அகற்றுதல், பீடைகளையும் பூச்சிகளையும் தமது பாரம்பரிய முறைகள் மூலம் கட்டுப்படுத்துதல், போன்ற பல செயற்பாடுகளில் முகாமைத்துவம் பயன்படுகிறது.
அவைமட்டுமன்றி மரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான சூரிய ஒளியையும் வளரும் அரும்புகளுக்கான இடத்தையும் பெற்றுக் கொடுக்கவும் அயல் தாவரங்களின் எதிர்ப்பைச் சமாளித்து புதிய தாவரங்கள் வளர வழிசெய்யவும் இந்தப் பாரம்பரிய முகாமைத்துவச் செயற்பாடுகளே உதவி செய்கின்றன.
இந்தப் பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டங்கள் சிறிய நிலப்பரப்புக்களில் தனித்தனியாகப் பேணப்பட்டு வருவதால் வினைத்திறன் மிக்கனவாகக் காணப்படுகின்றன. அத்துடன் அவற்றின் உயிர்ப்பல்வகைமைச் செறிவும் மிக அதிகமாகும்.
சுது மாத்தையாவைப் பொறுத்தவரையிலே, அவரது மகன் வைத்தியக் கலாநிதியாக வேறு பிரதேசத்தில் தொழில்புரிகிறார். சுதுமாத்தையா தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார். அவரது ஜீவாதாரமே இந்தப் பாரம்பரிய வீட்டுத் தோட்டம்தான்.
ஆனால் சுது மாத்தையாவின் காலத்துக்குப் பின் இந்த வீட்டுத் தோட்டத்தை யாரும் பராமரிப்பார்களா அல்லது அது பராமரிப்பற்று கைவிடப்படுமா என்பது தொடர்பில் எவருக்கும் தெளிவில்லை. ஓரிரு தசாப்தங்களின் பின்னரான இந்த வீட்டுத் தோட்டத்தின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கண்டியும் அதனை ஒட்டிய அயற் பிரதேசங்களும் துரிதகதியிலான நகரமயமாக்கலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அப்பகுதிகளில் காணிகளின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் இந்த பாரம்பரிய வீட்டுத் தோட்டங்கள் அமைந்திருக்கும் காணிகள் பல வர்த்தகக் கட்டடங்கள் அமைக்கும் தேவைக்காக மாற்றப்பட்டு வருகின்றன.
அமைதியான சூழலிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட இந்தத் தோட்ட உரிமையாளர்களால் ஆரவாரமான சூழலொன்றுக்குத் தம்மை மாற்றியமைக்க முடியாமல் இருக்கிறது. சுது மாத்தையாவும் அந்த மனநிலையை ஒத்த கருத்தையே தெரிவித்திருந்தார். அயற் பகுதிகளிலே காணிகள் விற்கப்பட்டு வர்த்தகக் கட்டடங்கள் அமைக்கப்பட்டால் சத்தம் மிகுந்த சூழல் உருவாகி தமது தோட்டத்தின் அமைதி கெடுவதை அவரும் விரும்பவில்லை.

எதிர்காலச் சந்ததியினரோ வீட்டுத் தோட்டச் செய்கையில் நாட்டம் குறைந்தவர்களாக மாறிவருகின்றனர். கெளரவமான தொழில்கள்தான் அவர்களை அதிகம் ஈர்க்கின்றன. ஆனால் இந்த பாரம்பரிய வீட்டுத் தோட்டங்களையும் உள்ளடக்கிய விவசாயம்தான் நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணி என்பதைப் பலர் புரிந்துகொள்வதில்லை.

இந்த நிலையை சுது மாத்தையாவின் வீட்டுத் தோட்டம் மட்டும் எதிர்நோக்கவில்லை. பாரம்பரிய கண்டிய வீட்டுத் தோட்டங்கள் பலவற்றைப் பிரதிநிதிப்படுத்தும் ஒரு தோட்டமாகவே சுதுமாத்தையாவின் தோட்டமும் தெரிந்தது. இலங்கையின் உயிர்பல்வகைமையைப் பேணுவதில் பெரும் பங்கை வகிக்கும் இத்தகைய வீட்டுத் தோட்டங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கித்தள்ளப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

ஏதோ ஒரு வகையில் அவற்றைப் பேணுவதற்கு ஆவண செய்ய வேண்டும். சந்தைத் தேவைக்கு அமைய உற்பத்தியை மேற்கொள்ளும் வகையிலே தோட்ட முதலாளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
பாரம்பரிய நடைமுறைகளைப் பாதிக்காத வகையிலான நவீன தொழில்நுட்ப அறிவு, சந்தை பற்றிய அறிவு போன்றனவற்றிலே தோட்ட முதலாளிகள் தெளிவுபெற வேண்டும்.

சூரிய ஒளி, நில வளங்கள் ஆகியவற்றின் உச்சப் பயனைப் பெறுவதன் மூலம் அலகு பரப்பிற்கான உற்பத்தித் திறன் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். சூழலியல் சமநிலையைப் பேணி நிலையான அபிவிருத்தியை உறுதிசெய்ய வேண்டும்.

இலங்கையின் உயர்கல்வித் திட்டத்திலே விவசாயத் தொழில்நுட்பம், தோட்ட முகாமைத்துவம் போன்ற பல துறைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. காலங்காலமாகத் தொடரப்பட்டுக்கொண்டிருக்கும் பல துறைகளிலே காலத்திற்கேற்றவாறு விசேட உப பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய துறைகளிலே எல்லாம் பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகளில் எத்தனை பேர் இலங்கையிலே அந்த அறிவைப் பயன்படுத்துகிறார்கள்?
உயர் கல்வி வாய்ப்பைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பல பட்டதாரிகளில் ஒருசிலர் மட்டுமே தாய்நாட்டுக்குத் திரும்பி வருகின்றார்கள். தாய்நாடு வழங்கிய அறிவு தாய்நாட்டுக்குப் பயன்படாவிடில், அந்த அறிவினாலாகும் பயன்தான் என்ன?

இந்த படித்த இளைஞர்கள் எல்லாம் இணைந்து எமது நாட்டையே தமது தேடலுக்கான களமாக மாற்ற வேண்டும். அண்மையில் பேராசிரியர் பொ. நவரட்ணத்தை மேற்கோள்காட்டி, செய்தியொன்று வெளியாகியிருந்தது. அச்செய்தியானது யாழ்ப்பாணத்திலே மேற்கொள்ளப்பட்டுவரும் உயிர் இரசாயனவியல் ஆய்வுகள் பற்றியதாகும்.

இத்தகைய செயற்பாடுகள்தான் தேவையானவை. கற்றோரது கல்வியறிவும், மற்றோரது அனுபவ அறிவும் இணைந்து கைகோர்க்குமாயின், காலங்காலமாகப் பேணப்பட்டு வந்த எமது இயற்கை வளங்கள் என்றுமே அருகிப் போகாது என்பது மட்டும்தான் நிதர்சனமான உண்மை.

Friday, October 1, 2010

தேவையும் விருப்பமும் இருந்தால்...




“நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி

இந்த நாடே இருக்குது தம்பி

சின்னஞ்சிறு கைகளை நம்பி

ஒரு சரித்திரம் இருக்குது தம்பி”
என்கிறது 70 களில் வெளிவந்த தமிழ்த் திரைப்படப் பாடலொன்று. சிறுவர்கள் தாம் வாழும் சூழலையும் தமக்குக் கிடைக்கும் அனுபவங்களையும் உள்வாங்கி அவற்றிற்கமைய இயற்கையாகவே தம்மை மாற்றியமைத்துக் கொள்கிறார்கள்.
‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து’ என்பதும் ‘தொட்டிலிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும்’ என்பதும் கூட அதே கருத்தையே பிரதிபலிக்கின்றன. அதனால்தான் மனித வாழிவின் மிக முக்கியமான பராயமாக சிறுவர் பராயம் நோக்கப்படுகிறது.
அப்பராயத்திலே சிறுவர்களுக்குச் சரியான வழிகாட்டலும் போதிய பாதுகாப்பும் மிக அவசியமாகும். அப்போது தான் நாட்டின் சிறந்த பிரஜைகளாக அவர்களை உருவாக்க முடியும்.
விஞ்ஞானமாகட்டும், வியாபாரம் ஆகட்டும்... எந்தத் துறையாயினும் அந்த வல்லுநர்கள் சிறுவயதிலே தமது மனதில் விதைத்த கனவுகளும் சிந்தித்த சிந்தனைகளும் உழைத்த உழைப்பும் தான் பெரிய மாற்றங்களை உருவாக்கி இன்றும் அவர்களது பெயரை உச்சரிக்கச் செய்திருக்கின்றன. அதைத்தான் ‘வளரும் பயிரை முளையிலே தெரியும்’ எனச் சுருங்கக் கூறினர் எம் ஆன்றோர்.
சிறுபராயத்தை கவிஞர் கண்ணதாசன் ‘கற்பூர பருவம்’ என்கிறார். கற்பூரம் சட்டெனப் பற்றுவது போல் அப்பருவத்தில் எவையுமே விரைவாக உள்வாங்கப்பட்டுவிடும் என்ற கருத்திலேயே அவர் அவ்வாறு குறிப்பிடுகிறார். இப்பருவத்தில் சிறார்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது எதிர்காலமும் அமையும்.
அவ்வாறு அவர்களின் எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் காரணிகளுள் முக்கிய இடத்தைப் பிடிப்பது குடும்பச் சூழல் ஆகும். குடும்பச் சூழலின் அடிப்படை அலகுகளாக இருப்பவர்கள் பெற்றோராவர். குடும்பச்சூழல் இனியதாக அமைவதற்கும் அதுவே சிறார்களின் எதிர்காலத்திற்கு உலை வைப்பதாய் மாறுவதற்கும் பெற்றோரே அடிப்படைக் காரணமாகிவிடுகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரையிலே பல சின்னஞ்சிறார்கள் தம் எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
தாயையோ தந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து தவிக்கும் சிறார்கள் கணிசமான அளவிலே காணப்படுகின்றனர். தாயும் தந்தையும் இருக்கின்றபோதும் அவர்களுக்குமிடையிலான உறவிலே ஏற்பட்ட விரிசல், முரண்பாடுகள் காரணமாக எதிர்காலம் இருண்ட சிறார்களும் காணப்படத்தான் செய்கிறார்கள்.
உலகளாவிய ரீதியிலே தினமும் 5760 சிறார்கள் அனாதைகளாக்கப்படுகிறார்கள். முன்னைய காலங்களிலே, பல சமுதாய அமைப்புகளில் திருமண வயது குறைவாக இருந்தது. அதன் காரணமாக ஒரு குடும்பத்தில் சராசரியாக இருக்கும் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதேசமயம் வயது வந்தவர்களின் இறப்பு வீதமும் அதிகமாக இருந்தது.
ஆதலால் பல சிறார்கள் தாம் பராய வயதை அடைய முன்னரே தம் பெற்றோரில் ஒருவரையாவது இழந்து விட்டிருந்தனர். அதேபோல ஆதரவற்ற சிறார்களின் இறப்பு வீதம் ஏனைய சிறார்களுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகமாகவே இருந்தது.

Entrance
 அத்துடன் ஆதரவற்ற சிறார்களின் வாழ்வு சுமுகமானதாகவும் இருக்கவில்லை. ஆதலால் ஆரம்பத்தில் தொண்டு நிறுவனங்களும் காலப் போக்கில் அரச, தனியார் அமைப்புகளும் ஆதரவற்ற சிறார்களைப் பாதுகாக்கத் தொடங்கின.
அத்தகையதோர் செயற்பாட்டின் நோக்கம் ஆதரவற்ற சிறார்களின் வாழ்வியல் நிலைமைகளை வளமுறச் செய்வதுடன் அவர்கள் சமூகத்துடன் இயைந்து வாழ வழி சமைத்துக் கொடுப்பதுமாகும்.
இலங்கையைப் பொறுத்தவரையிலே சிறார்கள், ஆதரவற்றோராக மாற்றப்படுவதற்கு கடந்த காலங்களில் நடந்தேறிய யுத்தம் காரணமாய் அமைந்தது. பல சிறார்கள் பெற்றோரை இழந்தும் பிரிந்தும் ஆதரவற்றோராயினர்.
அதுபோல இலங்கையின் கிராமப்புறங்களிலே அதிகளவில் பரந்து காணப்படும் பழக்கம் குடிப்பழக்கம் ஆகும். தந்தையின் குடிப் பழக்கம் குடும்ப உறவிலே விரிசலை உருவாக்கி சிறார்களை ஆதரவற்றோராக மாற்றி விடுகிறது.
தகாத உறவினால் உருவாகிப் பிறந்த குழந்தைகளும் ஆதரவற்றோராக நிர்க்கதிக்குள்ளாகின்றனர்.
இப்படிச் சிறார்கள் ஆதரவற்றோராக்கப்படுவதால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறிக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
இத்தகைய நிலைமைகள் காலப்போக்கிலே நாட்டின் பொருளாதாரத்தை அடியோடு பாதிப்புறச் செய்யும் தன்மையன. அத்துடன் சிறார்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதும் இந்த ஆதரவற்ற நிலைமையினாலேயாகும்.
பல அரச, தனியார் தொண்டு நிறுவனங்கள் இந்த ஆதரவற்ற சிறார்களை ஆதரித்து அவர்களை வழிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதில் பெருந்துணை புரிகின்றன.
அந்த வகையிலே தான், இராமகிருஷ்ண மிஷனின் இணை அமைப்பான சாரதா மிஷனும் ஆதரவற்ற சிறார்களை ஆதரித்து அவர்களுக்கு வழிகாட்டி அவர்களை நல்லதோர் வாழ்விலே நிலைபெறச் செய்வதில் பெருந்துணை புரிகிறது.
இந்தியாவின் தVணேஸ்வரத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் சாரதா மிஷனானது மாதாஜிகள் என அழைக்கப்படும் பெண் துறவியரின் தலைமையிலே இயங்குகிறது. சாரதா பாலிகா மந்திர் என்ற பெண் சிறார்களுக்கான இல்லம் சாரதா சமிதி என்ற அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு மாதாஜிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நன்கு இயங்கி வருகிறது.
சாரதா பாலிகா மந்திரின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கணபதிப்பிள்ளை அம்மா சாரதா பாலிகா மந்திர் தொடர்பான விடயங்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
கொழும்பு நகரின் சனத்தொகை அடர்த்தி கூடிய பகுதிகளுள் ஒன்றாகக் கணிக்கப்படும் வெள்ளவத்தையிலேயே சாரதா மிஷனும் சாரதா பாலிகா மந்திரும் அமைந்திருக்கின்றன. தற்போது 36 சிறுமிகள் சாரதா பாலிகா மந்திரால் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அச்சிறுமியருள் பெரும்பாலானோர் பெற்றோரில் ஒருவரையே அல்லது இருவரையுமோ ஏதோ ஒரு காரணத்தால் இழந்தவர்களாகவோ அல்லது பிரிந்தவர்களாகவோ காணப்படுகின்றனர்.
சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் அமையாமையினால் உறவுகளது உதவியுடன் அன்னை சாரதையின் அருள் வெள்ளத்தில் நிறைந்திருக்கும் சாரதா பாலிகா மந்திரிலே சேர்க்கப்பட்டனர். இங்கு ஒரு இந்துப் பாரம்பரியத்தின் பின்னணியிலே தமது வாழ்வை மகிழ்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றனர்.
சாரதா பாலிகா மந்திர் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலே தெரிந்தவர்கள் மூலமும் திருகோணமலையின் சண்முகா இல்லம், தபோவனம் போன்ற வேறு ஆதரவற்றோர் இல்லங்களிலிருந்தும் சிறுமியர் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் வடக்கு, கிழக்கு, மற்றும் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ‘சமயசமரசம்’ என்ற உன்னதமான கொள்கைக்கமைய வாழ்ந்து காட்டியவர் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
ஆயினும் இந்து மதப் பின்னணியையுடைய சிறுமிகளே சாரதா பாலிகா மந்திரில் இணைக்கப்படும் நிலையொன்று காணப்படுகிறது. ஏனைய மதங்களைப் போதித்து அவற்றின்படி சிறுமியரை வழிநடத்திச் செல்வதற்கான போதிய வளங்கள் அங்கு காணப்படாமையே அதற்கான ஒரே காரணமாகும்.

பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனை தெய்வமாகவும் மாற்றும் உன்னத சமயம் இந்து சமயம். இச்சிறுமியர் அந்தச் சமயப் பின்னணியிலே மாதாஜிகளின் வழிகாட்டலுடன் இனிதே வளர்க்கப்படுகின்றனர்.
சிறுமி ஒருவரை இவ்வில்லத்திலே இணைக்க முன்னர் அவரது சமய, குடும்பப் பின்னணி, வயது, சுகாதார நிலை போன்ற பல விடயங்கள் ஆராயப்படுன்றன. அவை சாரதா பாலிகா மந்திரின் வரையறைகளுக்குட்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் அச்சிறுமியும் அவ்வில்லத்தில் ஒருவராக இணைக்கப்படுகிறார்.
ஆரம்பத்திலே 6 – 12 வயது வரையிலான சிறுமியர் சேர்க்கப்பட்டனர். ஆயினும் பராமரிப்பு தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக கீழ் வயதெல்லை 7 ஆக உயர்த்தப்பட்டது. தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் வயதெல்லை உறுதியாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
இங்கு இணையும் சிறுமியர் மாணவப் பருவத்திலேயே இணைகின்றனர். அடிப்படை வசதிகளுடன் தேவையான ஏனைய வசதிகளும் சாரதா மிஷனினால் இச் சிறுமியருக்கு வழங்கப்படுகின்றன. இங்கிருந்தே யாவரும் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.
வெள்ளவத்தை விவேகானந்தா வீதியில் இல. 52 இலே அமைந்திருக்கும் சாரதா பாலிகா மந்திரானது ஒரு பெரிய மாடி வீட்டிலே இயங்கி வருகிறது.
சிறியதும் பெரியதுமான அழகிய மரங்களுடன் கூடிய குளிர்மையான சூழலிலே இவ்வில்லம் அமைந்திருக்கிறது. உள்ளேயே, சாரதா அன்னைக்கென ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது. அன்னையைப் போன்றே அமைதி குடிகொண்டிருக்கும் அவ்வாலயத்தினுள் நுழைந்தவுடனேயே மனம் ஒடுங்கி அக அமைதியொன்று உருவாவதை எவராலும் உணரமுடியும்.
பாடசாலைக் கல்வியோடு மட்டும் நின்று விடாமல் அவர்களது ஒழுக்கம், பண்பாடு, கலை, கலாசாரம், ஆன்மீகம் ஆகியவற்றின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தப்படுகிறது.
சிறுமியருக்குத் தியானப் பயிற்சி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் தீட்சையும் பெற்றுள்ளனர். பெளர்ணமி தினங்களிலே திருவிளக்குப் பூசை செய்கின்றனர். பூமாலை கட்டுதல் போன்ற ஆலயத் தொண்டுகளிலே தம்மை இணைத்துக் கொள்கின்றனர்.
பஜனை பாடுகின்றனர். மந்திர உச்சாடனம் செய்கின்றனர். நவராத்திரிக் காலங்களிலே சிறப்பாக அலங்காரங்கள் செய்து சக்தியை வழிபடுகின்றனர்.
எந்த ஒரு குழப்பமான சூழலிலிருந்து வந்த பிள்ளையாயினும் இத்தகைய இனிய அமைதியான சரன்மீகச் சூழலிலே வளரும் போது தன் பழைய மனநிலையிலிருந்து விடுபட்டு புத்தூக்கம் பெறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
அமைதியான படிக்கும் மண்டபத்துடன் சகல அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கியதாக அமைந்திருக்கிறது சாரதா பாலிகா மந்திர்.
இங்கிருந்து 3 மாணவியர், கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையிலே சிறந்த பெறுபேறுகளை பெற்று சங்கீதத்துறைக்குத் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. ஒருவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் மற்றைய இருவரும் எதிர்வரும் யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்திலும் தமது உயர்கல்வியைத் தொடரவிருக்கின்றனர்.
கல்வித்துறையிலே பிரகாசிக்க முடியாத மாணவியருக்கு, வாழ்க்கைத்திறன் கற்கை நெறிகளில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து, பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாக முடியாதவர்கள் உயர்கல்விக் கற்கை நெறிகளை தனியார் நிறுவனங்களிலும் கற்கின்றனர்.
நல்லுள்ளம் படைத்த அன்பர்களின் உதவியுடன் மாலை நேரங்களிலும் விடுமுறைக் காலங்களிலும் கல்வி வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் நடாத்தும் அறநெறிப் பாடசாலைகளிலும் இவர்கள் கற்கிறார்கள், கற்பிக்கவும் செய்கிறார்கள். கலைநிகழ்வுகளிலும் பங்கேற்கிறார்கள்.
சாரதா பாலிகா மந்திர் சிறார்கள், பராமரிப்பாளர்கள், உதவியாளர்கள் யாவரும் ஸ்ரீராமக்கிரஷ்ணர், சாரதா தேவியார், விவேகானந்தா ஆகியயமூவரின் அருளொளியின் கீழ் ஒரு குடும்பமாக வாழ்கின்றனர். இங்கு இருக்கும் சிறுமியொருவர் பருவ வயதை எட்டும் போது அதற்கான சடங்குகள், சம்பிரதாயங்களைக் கூட சாரதாமிஷன் அடியார்கள் தாமே முன்னின்று நடத்துவதைக் கேட்டபோது உள்ளம் நெகிழ்ந்தது.
இச் சிறுமியர் மட்டுப்படுத்தப்பட்டுள்ள வளங்களின் உச்சப் பயனைப் பெற்று அன்பையும் ஆதரவையும் அள்ளிவழங்கும் அன்பர்களால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி இவ்வில்லத்திலே பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான நிதியுதவி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் இராமகிருஷ்ண பக்தர்கள், அன்பர்கள் மற்றும் நண்பர்களின் மூலம் கிடைக்கப்பெறுகிறது.
பாடசாலைக் காலம் முடிவடைந்த உடனேயே நட்டாற்றில் இப்பெண்பிள்ளைகள் கைவிடப்படுவதில்லை. ஒருசிலர் உயர்கல்வி, தொழில் வாய்ப்புகளைப் பெற்றுச் சென்று விடுகின்றனர். அல்லது இல்லற வாழ்வினுள்ளே காலடி பதித்து விடுகின்றனர். சில வேளைகளில் தமது பெற்றோரிடமோ உறவினரிடமோ மீளச் சென்று விடுகின்றனர்.
இன்றைய காலகட்டத்திலே சாரதா பாலிகா மந்திர் போன்ற இல்லங்களின் தேவை மிகவும் அவசியமாகிவிட்டது. இந்த இல்லம் ஒரு சிறு துளிதான். உதவி செய்யும் மனமுள்ள உள்ளங்கள் இணைந்து செயற்படும் போது அச்சிறு துணி பெருவெள்ளமாகும் என்பது நிதர்சனம்.
சாரதா பாலிகா மந்திரின் சிறுமியரைப் பொறுத்தவரையிலே, மனமுள்ள அன்பர்கள் தாம் பெற்ற கல்விச் செல்வத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அது அச்சிறுமியரின் கல்வி ரீதியான எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும்.
சிறிய சுற்றுலாக்களை ஒழுங்குபடுத்தி அவர்களை அழைத்துச் செல்லலாம். இத்தகைய சிறு உதவிகள் கூட அச்சிறுமியரின் எதிர்காலத்தை வளப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும்.
இத்தகைய உதவிகளை இங்கு மட்டுமல்ல, எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். எத்தனையோ சிறார்கள் குடும்பச் சூழல் காரணமாக கல்வி என்ற அடிப்படைத் தேவையப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.
அண்¨மையிலே வன்னிப் பகுதியில் சிறுமியொருவர் நஞ்சருந்தித் தற்கொலைக்கு முயற்சித்துப் பின் வைத்தியர்களால் காப்பாற்றப்பட்டார். அச்சிறுமியுடன் ஆறுதலாக அளவளாவிய போது அறியப்பட்ட அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் வைத்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்வதற்காக ஆடை வேண்டித் தரும்படி அச்சிறுமி பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். ஆனால் புத்தாடை வேண்டிக் கொடுக்குமளவிற்கு அவர்களது குடும்பச் சூழல் இடம்கொடுக்க வில்லை. விளைவு தற்கொலை முயற்சியில் முடிந்தது.

இன்றைய சூழல்நிலைக்கு இச்சம்பவம் ஒரு சிறு உதாரணம். அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு பின் மேலதிக தேவைகளுக்காக நாம் செலவழிக்கும் பணத்தின் ஒரு பகுதியையாவது இத்தகைய சிறார்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தலாம்.

பணத்தைச் செலவழிக்க இயலாதவர்கள் தமக்குக் கிடைக்கும் மேலதிக பொருட்களைக் கொடுத்துதவலாம். அது கூட இயலாவிடில், தாம் பெற்ற கல்விச் செல்வத்தையாவது அவர்களுடன் பகிரலாம். எம்மால் முடியாதது எதுவுமே இல்லை. தேவையும் விருப்பமும் இருந்தால் எந்தக் காரியமும் எளிதே நடந்தேறும்.

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் அப்பால், நாம் அன்றாடம் காணும் ஆதரவற்ற சிறார்களில் ஒருவருடைய வாழ்விலாவது ஒளியூட்ட முயன்றால் ஆதரவற்ற சிறார்களே இல்லாத ஒரு சமுதாயம் வெகு தொலைவில் இருப்பதாகவே தெரியாது. இதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.