Showing posts with label வாசிப்புத்திறன். Show all posts
Showing posts with label வாசிப்புத்திறன். Show all posts

Sunday, August 8, 2010

கற்பனை வளத்தை பெருக்கும் வாசிப்புத்திறன்

வாசித்தல் என்பது குறி ப்பாக, சிறுவர்கள் மத்தியில் ஊக்குவிக் கப்பட வேண்டிய ஒரு பழக்கமாகும். இன்றைய அவசர உலகிலே, தொலைக் காட்சி என்ற சிறிய பெட்டியினுள்ளும் பிரத்தியேக வகுப்பு என்ற சிறிய உலகத்தினுள்ளும் பெற் றோர் தமது பிளைகளை முடக்கி விடுகின்றனர்.

கற்பனாசக்தியென்பது, சிறுவயதிலேயே உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டிய திறனாகும். நகரமயப்படுத்தல் என்ற நெருப்பிலே குளிர்காய முயலும் இந்தச் சிறுவர்களில் பெரும்பாலானோர் புத்தகங்களைத் தேடி வாசிக்கும் ஆர்வம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

வாசித்தலானது, கற்பனை வளத்தை ஊற்றெடுக்கச் செய்யும் இலகுவான வழியாகும். எந்த வித நூலாயினும், ஒவ்வொரு வரியையும் வாசிக்கும் போது, அதன் விளக்கம் மனக் கண்ணில் படமாக ஓடும். சிந்திக்கும் ஆற்றலும் கற்பனை செய்யும் ஆற்றலும் தானே பெருகும்.

வாசித்தலைப் போல, வானொலி கேட்டலும் இத்திறன்களை விருத்தி செய்யும். மாறாக, தொலைக்காட்சியோ, ஒலி அமைப்புடன் காட்சியையும் காட்டி, பாவனையாளரின் சிந்தனையைக் குறுக்கி, தனது காட்சிகளுக்குள்ளேயே முடக்கி விடும்.

சிறுவர்களைப் பொறுத்தவரையிலே, கணனி விளையாட்டுக்களும் கூட அதே வேலையைத்தான் செய்கின்றன. ஆனால் தொலைக்காட்சியுடன் ஒப்பிடுகையில் வினைத்திறன் மிக்க வகையிலே மேற்கொள்கின்றன. அது மட்டுமன்றிச் சிறுவர்களை மாய உலகொன்றினுள்ளேயே அழைத்துச் சென்று, அவர்களின் சிந்தனைத் திறனைத் திசை திருப்பிவிடுகின்றன.

சிறுவர்களைப் பொறுத்தவரையிலே, தொலைக்காட்சிக்கு முழுநேர அடிமையாதலென்பது ஆரோக்கியமான விடயமல்ல. இயற்கையை உள்ளபடியே விபரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக ளைத் தவிர்த்து, யாருடைய கற்பனை யிலேயோ உருவாகிப் பின்னர் காட்சிப் படுத்தப்படும் விவரணச் சித்திரங்கள் எமது கற்பனை வளத்தை முடக்கிவிடும்.

கேலிச்சித்திர நிகழ்ச்சிகளும் அத்தகையனவே. ‘கன்னத்தில் முத்தமிட் டால்’ திரைப்படத்தில் உருவகப்படுத் தப்பட்டிருக்கும் இலங்கையின் ‘மாங் குளம்’ கிராமம் அத்தகைய விவர ணங்களுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

மனிதன் கடந்து வந்த பாதை பற்றிய அறிவும் தமது முன்னோர் பற்றிய அறிவும் சிறுவர்களுக்கு ஊட்டப்பட வேண்டும். அந்த விடயங்கள்தான், தாமும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பையும் உணர்வையும் அவர்களிடத்தில் ஊட்டும்.

முன்னைய காலங்களிலே, சிறுவர்களுக்கான படக்கதைத் தொகுதிகள் புத்தகமாக வெளிவரும். அவற்றிலே எமது வரலாறு பற்றிய கதைகள், புராணக்கதைகள், நல்வழிக்கதைகள் என வாசிக்கத் தெரிந்த மழலையருக்குக் கூட விளங்கும் வகையிலே பல படக்கதைகள் அமைந்திருக்கும். அவை சிறுகுழந்தைகளின் மனதிலே ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் பெரியது.

இன்று நாம் கற்கும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் விஞ்ஞானிகள் பலர், பாடசாலைக் கல்விக்கான வாய்ப்பற்றவர்களாகவே இருந்தனர். ஆனால் அறிவிற்கான தேடல் அவர்களிடம் இருந்தது. புத்தகங்களைத் தேடிக்கற்றனர். புதிய புதிய கண்டுபிடிப்புகளும் தேற்றங்களும் கொள்கைகளும் உருவாயின.

பாடசாலை சென்று கற்காதவர் உருவாக்கியவற்றைத் தான் நாம் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங் களிலும் கற்கிறோம். இந்த உதாரணமே புத்தகங்களின் சக்தி எத்தகையது என்பதை விளக்கப் போதுமானதாகும்.

புத்தகங்கள் அச்சிடப்படும் முன்னர் கீழைத்தேசங்களிலே ஓலைகளினாலான ஏடுகளில் எழுதிப் பேணும் வழக்கம் இருந்தது. இடையிலே, கடதாசிகளில் கையெழுத்துப் பிரதிகளாகப் பேணும் வழக்கமும் காணப்பட்டது. ஏடுகளில் எழுதப்பட்டுப் பேணப்படுவதற்கு முன்னர் தகவல்கள் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட்டுப் பேணப்பட்டன.

இப்படிப் பல்வேறு வழிவகைகளிலும் எம் முன்னோர்கள் தகவல்களைப் பேணி வைத்தமையால் தான், எமது சமூகத்தின் மொழியின், சமயத்தின் தொன்மையைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் எம்மால் இவ்வளவு தூரம் பேச முடிகிறது.

‘காயசண்டிகை’ பற்றி அறிந்திருப் போம். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய மணிமேகலையிலே, ‘யானைப் பசி’ எனும் நோயை உடைய காயசண்டிகை என்பவள், எவ்வளவு உணவை எந்த நேரம் கொடுத்தாலும் பசி அடங்காதவளாகச் சித்தரிக்கப்படுகிறாள்.

சிறுவர்கள் மத்தியிலும் அத்தகைய வாசிப்புப் பசி உருவாகினாலே போதும். அவர்கள் தம் வழியிலேயே பயணித்து தமக்கான இலக்கைச் சுலபமாக எட்டிவிடுவர். இல்லையேல் கிணற்றுத்தவளை போல, ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே தமது எதிர்காலத்தையும் முடக்கிவிடுவர்.

இன்று பிரபலமாயிருக்கும் இணையவசதிகள் மின் நூல்களையும் இணைய வாசிப்பையும் கூட பிரபல்யப்படுத்தியிருக்கின்றன.

கணனி மொழியிலே வன் பிரதிகள் என அழைக்கப்படும் கடதாசியிலே அச்சிடப்பட்ட நூல்களின் நிலையாத தன்மை, சேமித்து வைக்கும் சிரமங்கள், செலவு, அவற்றினால் உருவாகும் செலவு. அவற்றைப் பகிர்ந்து கொள்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் போன்ற பல நடைமுறைச் சிக்கல்களை இணைய வழி வாசிப்பும் மின் நூல்களும் தவிர்த்து விடுகின்றன.

தேவையான நூல்களை இணையத்திலேயே தேடலாம். வாசிக்கலாம். தேவையேற்படின் அனுமதியுடன் தரவிறக்கலாம். ஏன், உங்களிடம் இருப்பவற்றை இணையத்திலே பதிவேற்றி மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.

இவையெல்லாம், நவீன தொழில் நுட்பம் எமக்கு வழங்கியிருக்கும் வசதி வாய்ப்புகள். ஒருகாலத்திலே வன்பிரதிகளாக மட்டுமே வெளிவந்து கொண்டிருந்த சஞ்சிகைகளை இன்று மென்பிரதிகளாகவும் பெற்றுக்கொள்ள இணையம் வழிவகுக்கிறது.

வன்பிரதிகளாக அல்லாமல், மின்சஞ்சிகைகளாகவும் மின் நூல்களாகவும் பல வெளிவரத் தொடங்கிவிட்டன. உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. அதன் வேகத்துக்கு ஆரோக்கியமான வழியிலே நாம் ஈடுகொடுக்காவிட்டால், இவ்வுலகில் எமது ஆக்கபூர்வமான நிலைப்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதே நிதர்சனம்!