Wednesday, December 29, 2010

மருத்துவமனைக் கழிவுகள் புற்றுநோயையும் உருவாக்கும்!

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சுகாதார நிலைமையில் சூழல் காரணிகள் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. அந்நாடுகளின் குடிமக்கள் மத்தியிலே ஏற்படும் நோய்த்தாக்கங்கள், மரணங்கள், ஊனங்கள் போன்றவற்றிற்கு சுற்றுச் சூழலும் ஒரு முக்கிய காரணமாகிவிடுகிறது.
தாம் வேலை செய்யும் இடத்தினதோ வீட்டினதோ அல்லது வாழும் சூழலினதோ தாக்கத்தால் அவர்கள் அடையும் பாதிப்புகள் எண்ணற்றவை.
இத்தகையதோர் நிலையிலே, சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளின் கழிவுகளால் உருவாகும் அச்சுறுத்தல் என்பது ஜீரணிக்கப்பட முடியாததாகவே இருக்கிறது.
வைத்தியசாலை போன்ற சுகாதாரத் துறை அமைப்புகளினால் வெளியேற்றப்படும் கழிவுகள் எந்த வகையில் அகற்றப்பட வேண்டும் என்ற கோட்பாடுகள் உலகளாவிய ரீதியிலே வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் ஒவ்வொரு நாடும் கூட தனக்கு ஏற்றபடி, உலகளாவிய கோட்பாடுகளுக்கு அமைவாகச் சட்ட திட்டங்களை அமைத்திருக்கிறது.
ஆனால் அச்சட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போதுதான் பல சிக்கல்கள் உருவாயின. சுகாதாரத் துறைக் கழிவுகளை அப்புறப்படுத்துதல் ஒன்றும் இலகுவானதல்ல. ஏனெனில், அவற்றுள் பல ஆபத்தானவை.
அதேசமயம் அவற்றைப் பாதுகாப்பாக அகற்றும் நடைமுறைகள் செலவு மிக்கவை. அச்செலவு அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்த வரையிலே, ஈடுசெய்யப்பட முடியாததாகவே இருக்கிறது.
தென்னாசியாவைப் பொறுத்தவரையிலே மருத்துவமனைக் கழிவுகளுள் சில வகைகள் உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. சில வகைகள் தொற்று நீக்கம், நுண்ணுயிரழிவாக்கம் செய்யப்பட்டு பரிகரிக்கப்படுகின்றன. அல்லது மீள் சுழற்சி செய்யப்படுகின்றன.
தொற்றுக்களையுடைய கழிவுகளும் பரம்பரை அலகுகளிலே பிறழ்வுகளை ஏற்படுத்தக் கூடியவையும் உயர் வெப்பநிலையிலே எரிக்கப்படுகின்றன. அவ்வுயர் வெப்ப நிலையைத் தாக்குப் பிடிக்கக் கூடியவை மிக உயர் வெப்பநிலையிலே பிரிகையடையச் செய்யப்படுகின்றன.
திரவ நிலையிலுள்ள கழிவுகள், இரசாயனப் பதார்த்தங்கள் மூலம் தொற்று நீக்கப்படுகின்றன. நீராவியால் நுண்ணுயிரழிவாக்கம், நுண்ணலைகள் மூலம் கழிவுகளின் ஈரப்பற்றுக்களை அகற்றுதல் போன்ற செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
பிளாஸ்மா ஆக் என்ற நவீன தொழில்நுட்பம் மின்வாய்கள் மூலம் கழிவுகள் சுத்திகரிக்கப்பட வழிவகுக்கிறது. இத்தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கழிவுகள் பரிகரிக்கப்பட்டால் சாம்பல்கூட மீதமாகாது.
இவ்வாறு பரிகரிக்கப்பட்ட கழிவுகள் யாவுமே, சூழலுக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தமாட்டா எனக் கருதப்படுமிடத்து, கழிவகற்றலுக்காக அமைக்கப்பட்ட கிடங்குகளுக்குள் நிரப்பப்பட்டு கிடங்குகள் மூடப்படுகின்றன.
ஆனால் தெற்காசிய நாடுகளின் சகல சுகாதாரத் துறை அமைப்புகளும் இந்த முறைமைகளைத்தான் பின்பற்றுகின்றனவென ஒருபோதும் கூறமுடியாது. ஏனெனில் இந்த முறைகள் கூட பெருஞ் செலவு மிக்கவை.
ஆனால் பெரும்பாலான வைத்தியசாலைகளில் கழிவுகளை உயர் வெப்பநிலையிலே எரிக்கும் வசதிகள் காணப்படுகின்றன. அவ்வாறு எரிக்கப்படுவன தவிர ஏனையவை யாவும் நகர சபைக் கழிவுகளுடன் கலக்கப்பட்டு அகற்றப்படுகின்றன. இல்லையேல், மருத்துவமனைச் சூழலிலேயே நிலத்தினுள் புதைக்கப்படுகின்றன.
பல நாடுகளில் நகர சபைக் கழிவுகள் சன சந்தடியில்லாத வெளிகளிலே கொட்டப்படுகின்றன. சில நாடுகளில் ஆறுகளுடன் கலக்கவிடப்படுகின்றன.
இத்தகைய செயற்பாடுகளுக்கெல்லாம் சம்பந்தப்பட்ட நாடுகளின் பொருளாதார நிலையும், சம்பந்தப்பட்ட துறைகளின் அலட்சியப் போக்கும் பொது மக்களிடையேயான விழிப்பணர்வுக் குறைவும் காரணமாக அமைந்துவிடுகின்றன.
ஆரம்பத்தில் அவ்வாறு பாதுகாப்பாற்ற முறையிலே அகற்றப்படும் சுகாதாரத் துறைக் கழிவுகள் பற்றி எவரும் பெரிதாகச் சிந்திக்க முனையவுமில்லை. ஆனால் அத்தகைய கழிவுகளால் உருவாக்கப்படும் சுகாதார சீர்கேடுகள் விஸ்வரூபம் எடுத்த பின்னர் தான் அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டியதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது.
உயர் வெப்பநிலையிலே கழிவுகளை எரிக்கும் போது கூட வாயுக்கள் வெளியேற்றப்படும். அவை, குறித்த அளவுக்கு மேலதிகமாக வெளியேற்றப்பட்டால், வளி மண்டலம் மாசடைவது தவிர்க்கப்பட முடியாததாகும்.
வளிமண்டலம் மட்டுமன்றி நிலமும் நீர்நிலைகளும் கூட மாசடையும். மனிதனாலும் ஏனைய உயிரினங்களாலும் அப்புகை நேரடியாகச் சுவாசிக்கப்படலாம். இது உயிருக்கே அச்சுறுத்தலாகக் கூட அமைந்துவிடலாம்.
வளிமண்டலத்திலே பரவும் இப்புகை நீர் நிலைகளில் கூட படிவதற்கு வாய்ப்புண்டு. இது நீர் நிலைகளில் இருந்து நீரை நேரடியாகப் பெரும் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும். அந்நீர் நிலைகளில் வாழும் மீன்களின் உடலினுள்ளும் படியத் தலைப்படும். இதனால் மீன்களை உணவாக உட்கொள்வோரும் பாதிக்கப்படுவர்.
இப்புகை விவசாய நிலங்களிலும் பயிர்களிலும் கூடப் படிவதற்கு வாய்ப்புண்டு. அப்பயிர்களை உணவாக்கும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகும்.
நிலத்திலே ஊறிய இப்புகை, மீண்டும் பயிர்களால் மண்ணிலிருந்து அகத்துறிஞ்சப்படும். ஆதலால் புகையில் உள்ள பாதிப்பை ஏற்படுத்தும் மூலகங்களின் செறிவு பயிர்களின் விளைபொருட்களிலும் அதிகளவில் காணப்பட வாய்ப்பு உண்டு.
உயர் வெப்பநிலையின் போது சாம்பல் மீதமாகும். இந்தச் சாம்பலாலும் நிலமும் நீர் நிலைகளும் மேற்கூறிய வழிகளிலேயே மாசடையும்.
சுகாதாரத் துறையிலே கூரிய உபகரணங்களின் பாவனை மிக அதிகமாகும். கடந்த காலங்களில் எயிட்ஸ், ஹெப்படைட்டிஸ் கி, வி போன்ற வைரஸ் தொறறுக்கள் மிக வேகமாகப் பரவின. இதனால் ஒரு தடவை பாவித்தபின் எறியும் உபகரணங்களின் பாவனை அதிகரித்தது. அவற்றுள் பெரும்பாலானவை ஊசி, கத்தி, பிளேட் போன்ற கூரான உபகரணங்களாகும்.
அவை காயங்களை ஏற்படுத்தவல்லவை. அவ்வாறான சந்தர்ப்பங்களிலே அந்த உபகரணங்களில் உள்ள தொற்றுக்கள் காயங்களினூடு பரவும் வாய்ப்பு மிக அதிகமாகும்.
வைத்தியசாலை ஊழியர்கள் தொட்டு கழிவுகளைத் தெரிந்தோ தெரியாமலோ கையாள்பவர்கள் வரை இத்தகைய காயங்களுக்கு உள்ளாகிறார்கள்.
இத்தகைய உபகரணங்கள் வைத்தியசாலைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறு தரப்பினரால் தனியாருக்கு விற்கப்படுவதாகத் தகவல்களும் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன. இச் செயற்பாடானது மறைமுகமாகப் பல சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்குகின்றது.
இவை தவிர தொற்றுள்ள உடற்பாகங்கள் மற்றும் கழிவுகள் காரணமாக நேரடியான தொற்றுக்கள் ஏற்படும் வாய்ப்புகளும் மிக அதிகமாகும். அத்துடன் அவை காரணமாக மாசடையும் நிலம், நீர் நிலைகள் காரணமாக ஏலவே குறிப்பிட்டபடி பல மறைமுகமான சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகும் வாய்ப்பு மிக அதிகமாகும்.
சுகாதாரத் துறையிலே பாதரசத்தின் பாவனை மிக அதிகமாகும். வெப்ப மானிகள், குருதி அமுக்கத்தை அளவிடும் கருவிகள் போன்ற பல உபகரணங்களிலும் ஆய்வுகூடங்களிலும் இன்னும் பாதரசம் பாவனையில் உள்ளது.
இந்த உபகரணங்கள் உடைந்தால் அவற்றில் இருக்கும் பாதரசம் வெளியே சிதறும். அவ்வாறு சிதறிய பாதரசத்தை அப்புறப்படுத்துவதற்கான பிரத்தியேக நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படுவதில்லை. அது ஒன்றில் குப்பைத் தொட்டியினுள் போடப்படும். இல்லையேல், உயர் வெப்பநிலையில் எரிக்கப்படும்.
பாதரசம் பார உலோகங்களில் ஒன்றாகும். நச்சுத்தன்மை மிக்கது. உணவுச் சங்கிலியினூடு அது கடத்தப்படுவதனால், பல நோய்கள் உருவாகி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகியது.
பாதரசம் கலக்கப்படுவதால் நிலமும் நீரும் நச்சுத்தன்மையடையும். பாதரசம் பல்வேறு நிலைகளில் சுற்றுச் சூழலுடன் கலக்கிறது. அந்நிலைகளில் சில நச்சுத்தன்மை அதிகமானவை. பலவிதமான நோய்களுக்கும் நரம்பியல் பாதிப்புகளுக்கும் பாதரசம் காரணமாகிவிடுகிறது.
ஜப்பானின் மினமாட்டா அனர்த்தம் கூட இத்தகைய பாதரசத்தினால் உருவானதே.
பாதரசமானது உணவினூடாகவோ அல்லது சுவாசத்தினூடாகவோ அல்லது தோலினூடாகவோ உறிஞ்சப்பட்டு மனித உடலினுள் உள்ளெடுக்கப்படுகிறது.
பார உலோகங்கள் தவிர சுகாதாரத் துறையிலே பயன்படுத்தப்படும் ஏனைய மருந்துகள், இரசாயனப் பதார்த்தங்கள் மற்றும் கதிர்த்தொழிற்பாட்டு மூலகங்கள் கூட பல சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தவல்லன.
வளிமண்டலத்திலே கலந்திருக்கும் சுகாதாரக் கழிவு மாசுக்களால் சுவாச நோய்கள் பல ஏற்படுகின்றன. ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகளும் மிக அதிகமாகும்.
பார உலோகங்களின் படிவாலும் ஏனைய பல இரசாயனப் பதார்த்தங்களுடனான தொடர்பாலும் பலவிதமான புற்று நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.
காபன் பதார்த்தங்களை எரிக்கும் போது தேவையானளவு சக்தி கிடைக்காத பட்சத்தில் அவை குறை தகனத்துக்கு ஆட்படும். அதன் காரணமாக காபன் மொனொக்சைட் வாயு வெளிவிடப்படும். இது நச்சுத்தன்மையானது. மரணத்தைக்கூட ஏற்படுத்த வல்லது. சுற்றுச் சூழலில் அகற்றப்படும் கதிர்த் தொழிற்பாட்டுப் பதார்த்தங்களும் புற்றுநோயை ஏற்படுத்தவல்லவை.
நீரிலே கலக்கப்படும் சுகாதாரக் கழிவுகள் நீரை மாசடையச் செய்து அதன் தரத்தைக் குறைக்கின்றன. இதனால் நீரால் பரவும் சகல நோய்களும் பரவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும்.
அதேபோல, கழிவகற்றல் இடங்குகளுக்குள் கொட்டப்படாமல் வெளியான நிலங்களிலே கொட்டப்படும் கழிவுகளால் நிலம், நீர் நிலைகள் மட்டுமன்றி நிலக்கீழ் நீரும் மாசுபடும். இதனாலும் ஏலவே குறிப்பிட்ட நோய்கள் பரவ வாய்ப்புண்டு.
இதுவரை காலமும் சுகாதாரத் துறைக் கழிவுகள் இத்துணை ஆபத்தானவையா என எண்ணிக்கூடப் பார்த்திருக்கமாட்டோம்.
எப்பொழுதும் நோய்கள் வந்தபின் பரிகரிப்பதைவிட வருமுன் காத்தலே சிறந்ததாகும்.
ஆதலால் இக்கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றும் செயற்றிட்டங்கள் மூலைமுடுக்குகளிலெல்லாம் ஆரம்பிக்கப்பட வேண்டும். அத்துடன் எங்கு கழிவுகளை கையாள்கின்ற போதும் அவற்றுக்குரிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறை ஊழியர்கள் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் இக்கழிவுகள் பற்றிய விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும்.
இவையாவும் சமகாலத்திலே மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லாவிடில் எந்த ஒரு முன்னேற்றமுமின்றிய பின்னடைவான நிலையையே யாவரும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பது நிதர்சனம்.

Friday, December 24, 2010

மனம் உண்டானால் இடம் உண்டு



3 தசாப்தகால யுத்தம் முடிவுக்கு வந்து இடம்பெயர்ந்திருந்த கிளிநொச்சி மக்கள் மீளக் குடியமர்ந்துவிட்டார்கள். ஒரு புதிய வாழ்வை ஆரம்பித்த அம்மக்கள் மத்தியில் இந்த நத்தார் பண்டிகை பெரும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இடப்பெயர்வுக்கு முன்...
அவர்கள் அடை மழையுடனான மார்கழி மாதத்தைப் பெரும் சவால்களுடன் எதிர்கொண்ட வண்ணம் தம் வாழ்வை வழிநடத்திச் செல்கின்றனர்.
அவர்களைப் பொறுத்த வரையிலே இத்தனை சவால்களுக்குள்ளும் பிறக்கும் இயேசு கிறிஸ்துவை எப்படிக் காணப்போகிறார்கள் என்பதே இந்த நத்தார் பண்டிகை ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்பாகும்.
கருணா நிலையத்திலும் கூட அத்தகையதோர் எதிர்பார்ப்பே காணப்பட்டது. ஏ-9 வீதியில் பயணிப்பவர்கள் பலர் கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே வித்தியாசமான பாணியிலே அமைக்கப்பட்டிருக்கும் தேவாயலமொன்றைக் கண்டிருப்பர். அது என்ன என்று அறியும் ஆர்வம் கூடச் சிலரிடம் இருந்திருக்கும்.

சமாதான இல்லத்திலே...
அந்த தேவாலயத்தை ஒட்டிய வளாகம் தான் கருணா நிலையமாகும். இறுதியாக நடந்து முடிந்த யுத்தம் கருணா நிலையத்தையும் கூட விட்டு வைக்கவில்லை.
ஒரு காலத்திலே முன்றலை அலங்கரித்து வருகின்ற அடர்ந்த மாமரங்களும் நிமிர்ந்து நின்ற கட்டடங்களும் பூத்துக் குலுங்கிய சோலையும், துள்ளித் திரியும் சிறுமியர் முதல் மூதாட்டியரும் என அனைவரையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்திருந்தது கருணா நிலையம்.
அத்தகையதோர் இடத்தை இடிந்து சிதைந்து போன கட்டடங்களும் பாறி விழுந்த மரங்களுமாக இந்த யுத்தம் வெறிச்சோடச் செய்திருந்தது. எரிந்த சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவையாக, இடிபாடுகளுக்குள் இருந்து தற்போது கருணா நிலையமும் மீள எழத் தொடங்கியிருக்கிறது.
தன் பெயருக்கு அமைவாக 1955 ஆம் ஆண்டு அதரவற்ற பெண்களுக்காகவும் பெண் குழந்தைகளுக்காகவும் செல்வி மூரியல் ஹச்சின்ஸ் அவர்களால் பிரித்தானிய மிஷனரியின் கீழ் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

பாலர் பாடசாலையிலே....
பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி ஹச்சின்ஸ், பிரித்தானிய மிஷனரியின் கீழ் இலங்கையிலே பணியாற்றியவராவார். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, சுண்டிக்குளி மகளிர் கல்லூரி போன்ற பாடசாலைகளிலே ஆசிரியராகச் சேவையாற்றிய இவர் ஓய்வுபெற்றதும் தன் தாய்நாட்டுக்கே திரும்பினார்.
அங்கே, இறையருளினாலோ என்னவோ, கிளிநொச்சியிலே கஷ்டப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தொலைநோக்கை உணர்ந்தார் செல்வி ஹச்சின்ஸ். மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய அவர் கிளிநொச்சியிலே ஏ-9 வீதியுடன் ஒட்டிய குறித்த காணியை வாங்கினார். ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கான இல்லமொன்றை ஆரம்பித்தார்.
1955 – 60 காலப் பகுதியானது கிளிநொச்சியில் பல விவசாயக் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியாகும். அத்தகையதோர் காலப் பகுதியில் கருணா நிலையம் போன்றதான இல்லமொன்றின் தேவையும் இன்றியமையாததாக இருந்தது.

மேசையிலிருக்கும் செல்வி
ஹச்சின்ஸின் புகைப்படம்
ஆதரவற்ற சிறுமியர் மற்றும் மகளிருக்கும் மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகளிருக்கும் கருணா நிலையம் அடைக்கலம் தந்தது. அடைக்கலம் தந்தது என்பதைவிட, அவர்கள் புதிய வாழ்வொன்றை வழிநடத்திச் செல்ல உதவியது என்றே கூறமுடியும்.
கருணா நிலையத்தின் ஆரம்பகால வளர்ச்சிப் பாதையின் ஒவ்வொரு படிக்கட்டுகளும் செல்வி ஹச்சின்ஸ் அவர்களின் பெயர் சொல்லும் என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
ஏறத்தாழ 40 வருடங்களுக்கும் மேலாக கருணா நிலையத்துக்காகவே வாழ்ந்து அங்கேயே தன் இன்னுயிரை நீத்தவர் செல்வி ஹச்சின்ஸ். இறுதிக் காலங்களில் உடல் தளர்ந்து கண்பார்வை குன்றியிருந்த போதிலும் பிறரிடம் அன்பு செலுத்தும் தன் உன்னத குணத்தில் மாற்றமேதுமின்றி வாழ்ந்தவர்.
கருணாநிலையம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலே, தையல் வேலை செய்யப்பட்ட துணிகளை சைக்கிளிலே கொண்டு சென்று யாழ்ப்பாணத்தில் விற்றுவிட்டு தன்னந்தனியாக சீமெந்து மூடைகளை சைக்கிள் இருக்கையில் வைத்துக் கட்டிக் கொண்டு வருவாராம் செல்வி ஹச்சின்ஸ். ஆரம்பகாலங்களில் அவருடன் பழகியவர்கள் இப்படி அவரை நினைவு கூர்வர்.
இவ்வாறு செல்வி ஹச்சின்ஸ் அவர்களின் உழைப்பால் வளர்ந்த கருணா நிலையத்தில் தற்போது 40 பெண் பிள்ளைகளும் 22 மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகளிரும் இருக்கிறார்கள்.
இவர்களில் பெரும்பாலானோர் யுத்தத்தாலும் சுனாமி அனர்த்தத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள்.
யுத்தத்தால் சிதைந்து போயிருக்கும் கருணா நிலையக் கட்டடத் தொகுதியை புனர்நிர்மாணம் செய்வதற்கு மட்டுமே ஏறத்தாழ 22 மில்லியன் ரூபா தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத் தொகுதி 12 கட்டடங்களை உள்ளடக்கியது. அவற்றுள் சில முற்றாக இடிந்து போயுள்ளன. சில சுவர்களை மட்டுமே கொண்டிருக்கின்றன.

பொன்விழா நிகழ்வுகளின் போது...
இடம்பெயர்ந்து, பல அல்லல்களுக்குப் பின் வவுனியாவை வந்தடைந்த கருணா நிலையத்தினர் அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். வளர்ந்தோர் நல்லூர் புனித ஜேம்ஸ் தேவாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
பாடசாலை செல்லும் சிறுமியரோ, தற்காலிகமாக வீடொன்றிலே தங்கியபடி சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலே கல்வி கற்கின்றனர்.
அங்லிக்கன் திருச்சபையின் உதவியுடன் ஏறத்தாழ 8 மில்லியன் ரூபா செலவில் கருணா நிலையத்தின் 2 கட்டடங்கள் முற்றாகத் திருத்தப்பட்டிருகின்றன. ஆதலால் வயது வந்த மகளிரும் மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட மகளிரும் மீள கிளிநொச்சிக்கு அழைத்து வரப்பட்டுவிட்டார்கள்.
‘சமாதான இல்லம்’ என அழைக்கப்படும் கட்டடம் மன வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களை முற்றாகப் புனர்நிர்மாணம் செய்து ஓரளவாவது பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒரு பெரிய நிதி தேவைப்படுகிறது.
ஆனால் எந்தவித வெளி உதவிகளும் இல்லாது அங்லிக்கன் திருச்சபையின் உதவியுடன் மட்டுமே புனர்நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிதிப் பற்றாக்குறை, அப்பணிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படுவதற்குத் தடையாகவே இருக்கின்றது.
கட்டடங்கள் புனரமைக்கப்படும் வரை யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக கல்வி கற்றுவரும் மாணவியரை கிளிநொச்சிக்கு அழைத்து வருதல் என்பது இயலாத காரியமாகவே இருக்கிறது.
அவர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் கல்வி வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்ட பின்னரே அவர்களைக் கிளிநொச்சிக்கு அழைத்து வர முடியுமென அதி வண நேசக்குமார் அடிகளார் தெரிவித்திருந்தார்.
கருணா நிலையத்திலிருந்து கல்வி கற்று இலங்கையின் பல்கலைக்கழகங்களில் தமது உயர் கல்வியைத் தொடரும் மாணவியர் 18 பேரும் கூட கருணா நிலையத்தின் பராமரிப்பின் கீழேயே இருக்கிறார்கள்.
இவர்கள் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகங்களிலே கல்வி கற்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்தகால யுத்தம் உக்கிரமடைவதற்கு முற்பட்ட காலங்களிலே கருணா நிலையத்தில் தையல் உட்பட மகளிருக்கான தொழில் பயிற்சி வகுப்புகள் பல நடத்தப்பட்டன.
அதேபோல பாலர் பாடசாலையும் நடத்தப்பட்டது. தற்போதும் நடாத்தப்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் மீள் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த பெப்ரவரி மாதமளவில் பாலர் பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது. அங்கே தற்போது 130 சிறார்கள் கல்வி பயில்கிறார்கள்.
கிடைக்கும் வளங்களையும் அன்பர்களின் நன்கொடைகளையும் கொண்டு கருணா நிலைய நிர்வாகம் தம்மால் இயன்றவரை யாவரையும் பேணி வருகின்றது. ஆயினும் தனது முன்னைய நிலையை எட்டுவதற்கே கருணா நிலையம் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.
கருணா நிலையத்தை நன்கு அறிந்த எவராலும் இதை மறுதலிக்க முடியாது.
ஒரு மேற்கத்தைய நாட்டைச் சேர்ந்த பெண்மணி நல்லெண்ணத்தில் விதைத்துச் சென்ற விதைதான் கருணா நிலையம்.
அது துளிர்விட்டு பெருவிருட்சமாக வேரூன்றுவதற்கிடையிலேயே யுத்தம் தன் கோரமுகத்தைக் காட்டிவிட்டது. இன, மத, மொழி பேதங்களுக்கப்பால் நாம் இணைந்து செயற்பட்டால் தளர்ந்திருந்த இவ் விருட்சத்தின் வேர்கள் வெகு விரைவிலேயே உறுதிபெற்று விடும் என்பது திண்ணம்.
சிறு துளி பெரு வெள்ளம் என்பர். நாம் செய்யும் சிறிய பங்களிப்பு கூட அத்தகைய பல பங்களிப்புகளுடன் இணையும் போது பல மடங்குகளாகிவிடும். ஏனெனில் இந்த யுத்தம், எம்மவர்களின் பலரை, ஆதரவற்றவர்களாக, கைவிடப்பட்டவர்களாக மாற்றிவிட்டது. அத்தகையோரின் நலனைக் கருத்தில் கொள்கையில் கருணா நிலையம் போன்ற இல்லங்கள் எத்துணை அவசியமானவை என்பது புரியும்.
குறிப்பாகப் பெண்களைப் பொறுத்தவரையிலே பாதுகாப்பு என்பது மிகப் பெரிய தேவையாக இருக்கிறது.
மதங்களுக்கு அப்பால் அமைதியான ஆன்மீகத்துடன் இணைந்த சூழல் தான் ஆதரவற்றோருக்கு வளமான வாழ்வை வகுத்துக் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.
‘ஐயம் புகினும் செய்வன செய்’ என்கிறது கொன்றை வேந்தன்.
‘மனம் உண்டானால் இடம் உண்டு’ என்கிறது முதுமொழி.
யாராயினும் நாம் மனம் வைத்தால் ஆதரவற்ற எம்மவர்களின் வாழ்வு வளம் பெற எமமாலான உதவிகளைச் செய்ய முடியும்.
பிறக்கவிருக்கும் புத்தாண்டிலே யாவரது வாழ்விலும் ஏற்றத்தாழ்வுகளின்றி சாந்தியும் சுபீட்சமும் நீடிக்க வேண்டும் என்பதே எமது அவாவாக இருக்க வேண்டும்.
கருணா நிலையத்துடன் தொடர்பு கொண்டு அவர்களுக்குக் கை கொடுக்க விரும்புவோர் அதிவண நேசக்குமார் அடிகளாரை 021-3211096 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்புகொள்ள முடியும்.
நிதியுதவி செய்ய விரும்புவோர், Karuna Nilaiyam - A/C No. 1610050001 (Commercial Bank - Kilinochchi) என்ற வங்கிக் கணக்கிலே வைப்பிலிட முடியும்.
அவர்களும் எம்மைப் போன்றவர்களே.
எம்மைப் போலவே அவர்களது வாழும் உரிமையும் மறுக்கப்பட முடியாதது என்ற உண்மையை நாம் உணர்ந்தாலே ஏற்றத் தாழ்வு நீங்கிய புதியதோர் உலகு சமைந்துவிடும்.

Saturday, December 18, 2010

'யாவரும் கதைத்தார்கள்; எவரும் கேட்கவில்லை"

நடைமுறைப்படுத்தப்படாத உடன்படிக்கைளுடன் மாநாடுகள் பல நிறைவடைந்திருக்கின்றன. கடந்த ஞாயிறன்று நிறைவுபெற்ற கான்குன் காலநிலை மாற்றத்துக்கான ஐ.நாவின் மாநாடும் அவற்றிற்கு விதிவிலக்கல்ல.
2009ம் ஆண்டு டென்மார்க்கின் கோபன்ஹாகன் மாநகரிலே நடைபெற்ற மாநாடு பெரும் தோல்வியில் முடிவடைந்தது. ஏறத்தாழ 45,000 பேர் அம்மாநாட்டுக்காக கோபன் ஹாகன் நகரிலே கூடியிருந்தார்கள். ஆனால் எந்த உறுதியான முடிவுகளையுமே எட்டாமல் வெளியேறினார்கள்.
கோபன் ஹாகன் மாநாட்டிலே,
“யாவரும் கதைத்தார்கள்; உண்மையில் எவரும் கேட்கவில்லை” என பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் செய்தியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
2009ம் ஆண்டிலே நடந்த மாநாடுகளில் எட்டப்படமுடியாமல் இருந்த உடன்பாடுகளை அமெரிக்கா, பிரேசில், தென்னாபிரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கோப்பன்ஹாகன் மாநாட்டின் கடைசி நிமிடங்களில் விவாதித்தன. அந்த விவாதங்கள் கூட விழலுக்கிறைத்த நீராயின.
கடந்த காலங்களில் நடந்த அபெக் (APEC) மாநாடுகளின் உடன்படிக்கைகளில் கூட காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய விடயங்களும் உள்ளடக்கப்பட்டு வருகின்றன.
கோபன்ஹாகன் மாநாட்டின் அறிக்கையில் மி8 போன்ற மாநாட்டு அறிக்கைகளில் உள்ள விடயங்கள் மாற்றப்படாமல் அப்படியே சேர்க்கப்பட்டிருக்கின்றன.
அது மட்டுமன்றி ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் முறைமை கூட கோபன்ஹாகன் மாநாட்டில் தாக்கம் செலுத்தியது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவின்றி எந்த ஒரு நிலைப்பாட்டையும் வெளிப்படுத்த முடியாமல் ஒபாமா இருந்தார்.
ஒபாமாவைப் பொறுத்துவரையிலே கோபன்ஹாகன் மாநாடு சில காலங்கள் பிந்தி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது பலரின் கருத்தாகும். கோபன்ஹாகன் மாநாட்டை நடாத்திய டென்மார்க் அரசும் நாடுகளுக்குரிய முக்கியத்துவத்தை வழங்கியிருக்கவில்லை. முக்கியமான நாடுகள் எனச் சில நாடுகளே குறிப்பிடப்பட்டிருந்தன. கால நிலை மாற்றத்தின் விளைவுகளால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் நாடுகள் கூட கருத்தில் கொள்ளப்படவில்லை.
ஒழுங்கமைப்பு குழுவில் காணப்பட்ட உட்பூசல்கள் கூட கோபன்ஹாகன் மாநாட்டில் செல்வாக்குச் செலுத்தின.
கடந்த தசாப்தமானது வெம்மை மிக்க தசாப்தமாகப் பதிவாகியிருந்தது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் அக்கால நிலைக்கு வட அமெரிக்கப் பகுதி விதிவிலக்காக இருந்ததாக உலக வானிலை அமைப்பு தெரிவித்திருந்தது.
ஒருவேளை வட அமெரிக்காவும் பாதிக்கப்பட்டிருந்தால் அமெரிக்க மக்கள் அரசுக்கு அழுத்தமொன்றைக் கொடுத்திருக்கக்கூடும். அவ்வழுத்தமே கோபன்ஹாகன் மாநாட்டை வெற்றியடையச் செய்திருக்குமென்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.
ஐரோப்பிய யூனியனின் அரசியல் நிலையும் கோப்பன் ஹாகன் மாநாட்டுக்குச் சாதகமாக அமையவில்லை. அமெரிக்காவை எதிர்த்துச் செல்ல வழக்கம் போலவே ஐரோப்பிய யூனியனும் விரும்பவில்லை.
விளைவு கோப்பன் ஹாகன் மாநாடு தோல்வியில் முடிவடைந்தது. அதன் பின்னர் சிறியளவிலான மாநாடுகள் கூட்டப்பட்டு பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. ஆனால் உடன்பாடுகள் எட்டப்படவில்லை. தற்போது 2010 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாடும் நடந்து முடிந்து விட்டது.
காலநிலை மாற்றத்தால் உருவான பல பிரச்சினைகளும் அச்சுற்றுத்தல்களும் ஆராயப்பட்டன.
சுற்றுச்சூழலுக்கான காபன் வெளியீடானது காலநிலை மாற்றத்தில் பெருஞ்செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இருக்கிறது. இந்த வெளியீடு காபன் சேர்வைகளான வாயுக்கள், காபன் துகள் போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.
கியோட்டோ உடன்படிக்கையின் இலக்கு 2012 ஆம் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உலகளாவிய ரீதியில் 2012 அளவிலே காபன் வெளியீட்டை குறித்த மட்டத்துக்குக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கையின் அடிப்படையாம். வளர்ந்த நாடுகள் இலாபத்தையே முதன்மை நோக்காகக் கொண்டவை.
அவற்றைப் பொறுத்தவரை காபன் வெளியீட்டை குறித்த மட்டத்துக்குக் குறைத்து கட்டுப்படுத்துதல் என்பது இயலாத காரியம். அது தமது பொருளாதாரத்தையும் ஸ்திரத்தன்மையையும் பெருமளவில் பாதிக்கும் என்ற எண்ணப்பாடு அவற்றிற்கு உண்டு.
பாலி உடன்படிக்கையின்படி 2012 என்ற கியோட்டோ உடன்படிக்கையின் இலக்கை 2012 க்கு அப்பாலும் நீடிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
கான்குன் மாநாட்டின் முடிவுகள் என்னவாக இருப்பினும் காபன் வெளியீட்டைக் கட்டுப்படுத்துமாறு ஏறத்தாழ 60 நகரங்களும் மாநிலங்களும் பணிக்கப்பட்டிருந்தன.
அதற்கான வழிமுறைகள் பிராந்தியத்திற்குப் பிராந்தியம் மாறு படலாம். ஆனால் வினைத்திறன் மிக்க சக்திப் பாவனையையும் காபன் வெளியீடு குறைவான வாகனப் பாவனையையும் அந்த வழிமுறைகள் உள்ளடக்கியிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
கோப்பன்ஹாகன் மற்றும் கியோட்டோ உடன்படிக்கைகளின் இலக்குகளை எட்டிய எட்டும் நிலையில் இருக்கும் நகரங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு அவற்றிற்கான புதிய இலக்குகளும் தீர்மானிக்கப்பட்டன.
இவை இப்படி இருக்க, ஜப்பான், ரஷ்யா, கனடா ஆகிய நாடுகள் 13 ஆண்டுகள் பழைமையான கியோட்டோ ஒப்பந்த அடிப்படையில் காபன் வெளியீட்டைக் குறைப்பதை விரும்பவில்லை. ஒரு முழுமையான உடன்பாட்டை எட்டுவதற்கு இந்நாடுகள் பெரும் தடையாகவே இருந்தன.
மாறாக வளர்முக நாடுகளோ கியோட்டோ ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தன.
“இயற்கையையும் காடுகளையும் பூமி என்ற இந்தக் கோளையும் பாதுகாக்கவே நாம் கான்குன்னுக்கு வந்திருக்கிறோம். இயற்கையை ஒரு பண்டமாக்கவோ அல்லது காபன் சந்தையுடன் கூடிய முதலாளித்துவத்தை உறுதி செய்யவோ நாம் இங்கு வரவில்லை” என்றார் பொலிவிய ஜனாதிபதி.
1997 இல் கியோட்டோ உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டபோதே ஜப்பான் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ரஷ்யா, கனடா, துருக்கி ஆகிய நாடுகள் ஜப்பானுடன் வெளிப்படையாகவே இணைந்தன. சில வளர்முக நாடுகளும் இந்த எதிர்ப்பு நாடுகளுக்கு தமது ஆதரவை மறைமுகமாக வழங்கின.
ஆனால் பல வளர்முக நாடுகளுக்கு கியோட்டோ உடன்படிக்கையில் உடன்பாடு இருந்தது. ஏனெனில் அது சட்ட ரீதியாக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடியது. அத்துடன் அவ்வுடன்படிக்கையின் கீழ் சேகரிக்கப்படும் நிதி வளர்முக நாடுகளின் நிலையான அபிவிருத்திக்குப் பயன்படுத்தக்கூடியதாகும்.
ஐ. நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சுக்களுக்கு ஜப்பான் தொடர்ந்தும் முட்டுக்கட்டையாக இருக்குமாயின் பல விளைவுகளை அது சந்திக்கவும் நேரிடும். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் வகிக்கும் ஜப்பானின் நம்பிக்கையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்படும் என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது.
“பணக்கார நாடுகள் காபன் வெளியீட்டைக்குறைக்க வேண்டும். ஒவ்வொரு வருடம் தலா 100 பில்லியன் டொலர்களை மீதப்படுத்தி வறிய நாடுகள் காலநிலை மாற்றத்தை வெற்றிகரமாகக் கையாள உதவவேண்டும்” என்ற கருத்தை நோர்வே பிரதமர் வெளிப்படுத்தியிருந்தார்.
2009 இன் கோபன் ஹாகன் மாநாட்டிலே காபன் வெளியீட்டைக்குறைத்து நிதியமொன்றை உருவாக்கும் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.
2010 இன் கான்குன் மாநாட்டிலே, எந்தெந்த வழிகளில் அந்நிதியத்திற்கான நிதியைச் சேகரிக்கலாமென ஆராயப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு காபன் கழிவை வெளியேற்றுவதில் ஆகாய விமானங்களும் கப்பல்களும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
ஆதலால் சர்வதேச ரீதியிலே அவற்றிற்கு வரிவிதிப்பதுடன் வங்கிப்பரிமாற்றங்களுக்கான வரிவிதிப்பும் ஒரு வழிமுறை என பிரேரிக்கப்பட்டது.
இன்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தைகளுள் ஒன்றாக காபன் சந்தை காணப்படுகிறது. காபன் சந்தைக்கும் கியோட்டோ உடன்படிக்கையே வித்திட்டது எனலாம். அவ்வுடன்படிக்கையின்படி சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக காபன் வர்த்தக நடைமுறைகள் பல உருவாக்கப்பட்டன.
சுருங்கக் கூறினால் காபன் சேர்வைகள் அதிலும் குறிப்பாக காபனீரொட்சைட் வாயு ஒரு பெறுமதியான பண்டமாகக் கருதப்படும் காலத்தை நாம் எட்டியிருக்கிறோம். ஒவ்வொரு நாடும் குறித்தளவு காபன் சேர் வெளியீடுகளைத்தான் வருடாந்தம் சூழலுக்கு வெளியேற்ற முடியும் என்ற வரையறை உள்ளது. குறித்த நாடொன்று தனது வரையறை யிலும் குறைவான காபன் சேர் வெளியீடுகளைச் சூழலுக்கு வெளியேற்றுமாயின் மீதமிருக்கும் அளவை அதிகமாக வெளியேற் றும் நாடுகளுக்கு விற்கமுடியும். இதை காபன் வர்த்தகம் என்பர். காபன் வர்த்தகத்தை அடிப்படை யாகக் கொண்ட சந்தை காபன் சந்தை எனப்படும்.
காபன் சேர் வெளியீடுகளுக்கான அனுமதிப்பத்திரம் காபன் சந்தையில் ஏலத்தில் விடப்படும்.
பசுமை நிதியத்துக்கான 100 பில்லியன் டொலர் இலக்கை அடைய ஏலத்தொகையை தொன்னுக்கு 20-25 டொலர் என அதிகரிக்க வேண்டும் என ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டன. வங்கிப்பரிமாற்றத்துக் கான வரிவிதிப்பை அபிவிருத்தி யடைந்த நாடுகள் விரும்பாத அதேநேரம் ஆகாய விமான கப்பல் போக்குவரத்துக்கான வரிவிதிப்பை சிறிய தீவுகளாகக் காணப்படும் வளர்முக நாடுகள் விரும்பவில்லை.
சிறிய தீவுகளைப் பொறுத்தவரையிலே, அவை கப்பல்களை வர்த்தகத்திற்காகவும் விமானங்களைச் சுற்றுலாத்துறைக்காகவும் முற்றுமுழுதாக நம்பியிருக்கின்றன. ஆகையால் இவ்வரியானது பொருளாதார ரீதியாகத் தம்மைப் பாதிக்குமென்று அச்சமடைகின்றன.
இவை எல்லாம் ஆலோசனை அறிக்கை மட்டத்திலிருந்து உடன்படிக்கை மட்டத்துக்குச் செல்வதற்குக்கூட சகல நாடுகளிலும் அரசியல் மட்டத்திலான ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது.
கோபன் ஹாகன் மாநாடு தோல்வியடைந்த போதிலும் அதில் எட்டப்பட்ட உடன்படிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதென்பதே கான்குன் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்ட விடயமாகும்.
அந்த பசுமை நிதியத்துக்கும் இந்த கான்குன் மாநாடு தான் உத்தியோகபூர்வமான அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது. அதிலும் கூட பலவித கருத்து முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்துள்ளன.
சில நாடுகள் வருடத்துக்கு 100 பில்லியன் டொலர் போதாது என்றன. சிலவோ வருடத்துக்கு 800 பில்லியன் டொலர் நிதி தேவை என்பதுடன் அது முழுவ தும் மேற்குலகிடமிருந்தே வசூ லிக்
கப்பட வேண்டும் என்றன.
கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக வருடாந்தம் 75-100 பில்லியன் டொலர்கள் செலவாகும் என  கடந்த வருடத்துக்கான உலக வங்கியின் அறிக்கை தெரிவித்திருந்தது.
சர்வதேச சக்தி முகவர் அமைப்போ அபிவிருத்தியடைந்த னாடுகளில் தூய சக்தித்தொழில் நுட்பங்களை ஆதரிக்க வருடாந்தம் 110 மில்லியன் டொலர் செலவாகும் என அறிக்கையிட்டிருந்தது.
இந்த அறிக்கைகள் யாவுமே 2010 இலிருந்தே நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தி நிற்கின்றன.
கால் நிலை மாற்றத்தால் அழிந்து போகும் அபாயத்தை எதிர் நோக்கியிருக்கும் சிறிய தீவுகளுள் முன்னிலை வகிப்பது மாலை தீவுகளாகும்.
“பணக்கார  நாடுகள் மட்டுமன்றி வறிய நாடுகளும் கூட காபன் சேர் வெளியீடுகளைக் குறைக்க முயல வேண்டும்” என மாலை தீவுகளின் ஜனாதிபதி கான்குன் மா நாட்டிலே தெரிவித்திருந்தார்.
“வளி மண்டலத்திலே காபனீரொட்சைட்டை வெளியேற்றும் உரிமையை உறுதி செய்ய முனைதல் முட்டாள்தனமானது” என்ரும் அவர் தெரிவித்திருந்தார்.
“காபன் வெளியீட்டை மேற்குலக நாடுகள் குறைக்க வேண்டும். அதேசமயம் வளர்முக நாடுகளோ காபன் வெளியீட்டின் சதவீதத்தைக் குறைக்க வேண்டும்” என்ற கருத்தில் G 7 நாடுகளின் கூட்டமைப்பு உறுதியாக நின்றது.
காலநிலை மாற்றத்தால் பெரும் அச்சுறுத்தல்களுக்குள்ளாகியிருக்கும் மாலைதீவுகளுக்கும் இத்தகைய நாடுகளின் கூட்டமைப்புடன் இணைந்து நிற்க வேண்டிய நிலையே கான்குன் மாநாட்டில் உருவானது.
2020 அளவிலே காபன் நடுநிலையான நாடு என்ற நிலைக்கு மாறுவரே மாலை தீவுகளின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த நூற்றாண்டுக்கான உலகளாவிய வெப்பநிலை உயர்வு எதிர்வரும் 2-3 தசாப்தங்களுக்குள் இரட்டிப்பாகும் என்கிறது. காலநிலை மாற்றம் தொடர்பான புதிய ஆய்வொன்று.
காலநிலை அனர்த்தங்களால் உருவாகப்போகும் சேதங்களோ 300% இலும் கூடிய அளவு அதிகரிக்கும் எனவும் அதே ஆய்வறிக்கைதான் தெரிவிக்கிறது.
இந்த எதிர்வு கூறலை நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது. ஏறத்தாழ 50 வறிய நாடுகள் வெகுவாகப் பாதிக்கப் படலாம் என அடையாளமிடப் பட்டுள்ளன. அவற்றுள் பர்மா, பூட்டான், பங்களாதேஷ், றைகர், செனகல் போன்ற நாடு களும் அடங்குகின்றன.
காலநிலை மாற்றத்தால் வறிய நாடுகள் மட்டும் பாதிக்கப்படப் போவ தில்லை. மாறாக ஐக்கிய அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகளும் பொருளாதாரக் குழப்பங் களை எதிர்நோக்கலாமென்கிறது அந்த ஆய்வு.
இவை இப்படி இருக்க, கான்குன் மாநாடு நடுநிலையான தீர்மானங்கள் பலவற்றை எட்டியுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. அவை சுற்றுச்சூழல் மாசைக் குறைப்ப தற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
அரசாங்கங்கள் காபன் வெளியீட்டைக் குறைப்பதில் சாத்தியமான நிலைப்பாட்டை இம்முறை வெளிப்படுத்தி யிருக்கின்றன. அதே சமயம் தமது செயற்பாடுகளுக்கு தாமே பொறுப்புக்கூற வேண்டும் என்ற கடப்பாட்டையும் உணர்ந்திருக்கின்றன.
ஒரு பொதுத் தேவையைக் கருத்தில் கொண்டு நாடுகள் இணைந்து செயற்பட முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றன.
‘பசுமை நிதியம்’ தொடர்பாக மேலும் ஆராயப்பட்டு வறிய, பணக்கார நாடுகள் ஆகிய இரு தரப்பினதும் சம பங்களிப்புடன் அதனைத் தாபிப்பதற்கான வரைவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஆயினும் சில நாடுகள் கான்குன் மாநாடு வெற்றியளித் துள்ளது என்ற கருத்தப்பட அபிப்பிராயங்களை வெளிப்படுத்தி இருந்தன. மாறாக வேறு சில நாடுகள் இம்மாநாட்டில் திருப்பதிகரமான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என்று தமது அதிருப்தியை வெளியிட்டன.
மொத்தத்தில் கான்குன் மாநாடும் ஏனைய மாநாடுகளைப் போலவே அமைந்து விட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது.
ஆனால், இம்மாநாடுகளையும் உடன்படிக்கைகளையும் கருத்தில் கொள்ளாது ஒவ்வொரு நாடும் தன்னை ஒரு தனிநபராகக் கருதிச் செயலில் இறங்க வேண்டும்.
‘எமக்கென்ன?’ என்ற அலட்சியப்போக்கைத் தவிர்த்து தமது காபன் சேர் வெளியீடுகளை இயன்ற வரை குறைத்தாலே காலநிலை மாற்றம் கட்டுப்பாட் டுக்குள் வந்து விடுமென்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

Friday, December 10, 2010

மேற்குலகின் பிடிவாதத்தால் மாநாடுகள் தோல்வியடைகின்றன



‘கடந்த 25 வருடங்களுள் என்றுமில்லாத பனிப்பொழிவு’
‘பல ஆண்டுகளின் பின் வான்கதவுகள் திறப்பு’
‘என்று மில்லாத பெருமழை’

இவையெல்லாம் சமீபகாலமாக நாம் காணும் செய்தித் தலைப்புகள் ஆகும். அவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வது கூட இல்லை. ஆனால் அவை எல்லாம் ஏதோ அறிகுறியை வெளிக்காட்டி நிற்பனவாகவே தெரிகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 2007 ஆம் ஆண்டிலேயே விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்வதும் சிறந்த விடயமாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களிலே அதிகரிக்கலாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் தெரியும் புதுவித மாற்றங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தோற்றப்பாடுகள் தானோ என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டன.
மனிதன் இயற்கையைக் கருத்தில் கொள்ளாது, அதனுடன் இயைந்து வாழ முயலாது தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் இயற்கையின் சீற்றங்களாக இருக்கின்றன.
பணமும் அரசியலும் மலிந்துபோய்விட்ட இப்பூமியில் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்கள் வெகுசிலரே.
காலநிலை மாற்றம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அரசியல் தலைவர்களோ அத்தகையதோர் அவசர நிலையைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹாகன் மாநாடு (2009) கிட்டத்தட்ட தோல்வியில் முடிவடைந்த கதையை நாம் அறிந்திருப்போம்.
அம்மாநாட்டிலே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் காலநிலை மாற்றம் பற்றிப் பேசி தீர்மானமொன்றையெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாக உலக நாடுகளின் தலைவர்கள் மாநாடுகளிலே கூடி, புவி வெப்பமடைவது பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் மிக மும்முரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்பேச்சுக்களின் அடிப்படையில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதே யாவரும் அறிய வேண்டிய உண்மை ஆகும்.
புவி வெப்பமடைதலைப் பொறுத்த வரையிலே கியோட்டோ உடன்படிக்கை மிக முக்கியமானதாகும். அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது.
19ம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலே கைத்தொழில் புரட்சி உருவாகியது. பிற்காலங்களில் தோன்றிய சகல தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கும் அக்கைத்தொழில் புரட்சியே வித்திட்டது எனலாம். கைத்தொழில் புரட்சி உருவாக்கிவிட்டிருந்த எதிர்மறையான விளைவாக புவி வெப்பமடைவதைக் குறிப்பிட முடியும்.
அதாவது சுவட்டு எரிபொருட்களின் பாவனை அதிகரித்துச் சென்ற நகரமயமாக்கலும் அபிவிருத்திப் பணிகளும் காடழித்தல் துரித கதியில் நடைபெற வழிவகுத்தன.
விளைவாக வளிமண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்தது. புவிச் சூழலின் வெப்பநிலையும் அதிகரித்தது. புவிச் சூழலைப் பொறுத்தவரையிலே அதன் வெப்பநிலை காலத்துடன் அதிகரித்து வருவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல சமயங்களில் நாம் உணர்ந்தும் இருப்போம்.
மனித நடவடிக்கையால் அதிகளவில் வெளிவிடப்படும் பச்சை இல்ல வாயுக்களான காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரசன் சேர் வாயுக்கள் போன்றனவே புவிச் சூழலை வெப்பமடையச் செய்கின்றன.
இவை சூரிய கதிர்கள் புவி மேற்பரப்பில் பட்டு மீளத்தெறிப்படைந்து செல்வதைத் தடுக்கின்றன. ஆதலால் புவிச் சூழல் வெப்பமடைகிறது.
வாகனங்கள், ஆகாய விமானங்கள், எரிசக்தி நிலையங்கள், தொழிற்சாலைகளிலே சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் வளிமண்டலத்துக்கு காபனீரொட்சைட் வெளிவிடப்படுகிறது.
சூழலில் இருக்கும் காடுகளும் மரங்களும் தான் வளி மண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் விவசாயம், கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கல் போன்ற பல தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டன.
புவிச் சூழலிலே வளிமண்டலத்தில் இயற்கையாக அமைந்த படலமாக ஓசோன் படை காணப்படுகிறது.
சூரியனிலிருந்து வரும் உயர் சக்திமிக்க நச்சுத்தன்மையான புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் தடுப்பதும் இந்த ஓசோன் படையேயாகும்.
குளோரோபுளோரோ காபன் என்ற வாயுவின் வெளியேற்றத்தாலும் ஏனைய சில நைதரசன் சேர் வாயுக்களின் வெளியேற்றத்தாலும் இந்த ஓசோன் படை அரிப்படையத் தொடங்கியது. அதனால் புவி மேற்பரப்பை வந்தடையும் புற ஊதாக் கதிர்களின் சதவீதம் அதிகரித்தது.
புவி மேற்பரப்பு வெப்பமடையத் தொடங்கியது.
ஆய்வாளர்கள் காலங்கடந்த பின்னரே விளைவுகளைக் கண்டுணரத் தொடங்கினர். ஒசோன் படையிலே உருவாகிய ஓட்டைகள் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகக் காரணமாயின என கண்டுபிடித்தனர்.
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வளிமண்டலத்தில் இருந்த காபனீரொட்சைட்டின் அளவு 275 ppm (parts per million)  ஆகும். அது தற்போது 392  ppm  ஆக அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைதலானது பல விளைவுகளை உருவாக்கி உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைச் சீற்றங்களின் அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வரலாறு காணாத, அதிக வெப்பநிலையுடைய ஆண்டாக 2010 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது. நிலைமை விபரீதமாகிக் கொண்டு போவதை உணர்ந்த விஞ்ஞான உலகு, அரசாங்கங்களை எச்சரிக்கவும் தவறவில்லை. காலநிலை மாற்றத்துக்கு தாமும் ஒரு காரணம் என அரசாங்கங்கள் உணர்ந்தன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை நடுநாயகமாக வைத்து செயற்பாடுகளில் ஈடுபட முனைந்தன.
1992 இலே, ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு பிறேசிலின் ரியோ - டி - ஜெனிரோ நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஸினிபிவிவிவி  UNFCCC (United Nations Frame work Convention on Climate Change) என்ற ‘காலநிலை மாற்றத்துக்கான செயற்றிட்டப் பேரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்துக்கான மாநாடு (Conference of Parties – COP)  நடத்தப்பட்டு வருகிறது.
1997ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நடத்தப்பட்ட அத்தகைய மாநாட்டிலே தான் கியோட்டோ உடன்படிக்கையும் எட்டப்பட்டது.
கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் புவிச் சூழலில் வளிமண்டல காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பதற்குக் காரணமான நாடுகள் கியோட்டோ மாநாட்டில் பட்டியலிடப்பட்டன. அவை 1991 இலே காபனீரொட்சைட் வாயு உட்பட்ட நான்கு பச்சை இல்ல வாயுக்களை எந்தளவு வெளியேற்றினவோ அந்த அளவை 2012 ஆம் ஆண்டளவில் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென்பதே அந்த கியோட்டோ உடன்படிக்கை யாகும். இந்த 5.2 சதவீதமென்பது ஒரு கூட்டான அளவாகும். ஒவ்வொரு தனித்தனி நாட்டையும் கருதும்போது குறைக்க வேண்டிய சதவீதம் மாறுபடும்.
வளிமண்டலத்தை அதிகளவில் மாசுபடுத்தும் நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. 5.2% என்ற கூட்டு அளவின் அடிப்படையில் தனது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை அமெரிக்கா 7 சதவீதத்தால் குறைக்க வேண்டி இருந்தது.
கியோட்டோ உடன்படிக்கையைப் பொறுத்த வரையிலே, இந்தியாவும் சீனாவும் தமது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முன்வரவில்லை. அதற்கு அவை முன்வைத்த காரணம் தாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பதாகும்.
மேற்குலக நாடுகளில் உருவான கைத்தொழில் புரட்சியே வளிமண்டலத்தின் பச்சை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணமாகியது. மேற்குலக நாடுகளின் செயற்பாட்டுக்கு மூன்றாம் உலக நாடுகளும் பலிக்கடாவாயின என்பது தான் வெளிப்படை உண்மையாகும்.
ஆனால் கியோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்ட போது இணைந்த அமெரிக்கா பின்னர் அதிலிருந்து விலகிவிட்டது.
நிலைமை கையை மீறுவதை உணர்ந்த ஐ. நாவின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 1990 ஆம் ஆண்டின் பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012 அளவிலே 80 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென 2007இல் அறிவித்தது.
இம்முடிவு தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக 2007 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் கூட்டப்பட்டது.
நடைமுறையில் இருந்து வரும் கியோட்டோ உடன்படிக்கையின் கால இலக்கை நீடிக்கவும் உறுப்புரிமையிலிருந்து விலகிய அமெரிக்காவை இணைத்து நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அங்கு உடன்பாடுகள் பல எட்டப்பட்டன.
அதற்காகத் தயார் செய்யப்பட்ட வழிகாட்டி பாலி வழிகாட்டி எனப்பட்டது. அவ்வழிகாட்டியின் அடிப்படையிலே 2009ஆம் ஆண்டுக்கான கோப்பன்ஹேகன் மாநாடும் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பிடிவாதம் கோபன்ஹேகன் மாநாட்டைத் தோல்வியடையச் செய்தது.
ஆயினும் 2010 இலே, பேச்சுவார்த்தைகள் தொடரப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும் என அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல், ஜூன், ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களிலே கூட்டம் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது. ஆனால் முடிவுகள் எவையுமே எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
இத்தகையதோர் நிலையிலே இவ்வாண்டுக்கான ஐ.நாவின் 16வது காலநிலை மாற்ற மாநாடு கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி மெக்சிக்கோவின் கான்குன் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இன்று அதன் இறுதி நாளாகும்.
கோபன்ஹேகன் மாநாட்டிலே தவறவிடப்பட்ட உடன்பாடுகள் கான்குன் மாநாட்டிலே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொனிப் பொருட்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவு தான் என்ன? என்பதை முழு உலகுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் புதிய தலைவரான ஹேர்மன் வன்ரொம்புய் ‘இம்மாநாடும் கோபன்ஹேகன் மாநாட்டைப் போல ஒரு அனர்த்தமாகவே இருக்கும்’ எனத் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் கோபன்ஹேகன் மாநாட்டை மிக மோசமாக விமர்சித்திருந்தமையையும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மேற்குலக நாடுகளின் மனப்பாங்கு எத்தகையது என்பதை இந்த விக்கிலீக்ஸ் தகவல் தெளிவாக எடுத்தியம்புகிறது.
தன்னை விஞ்சியவர் எவருமில்லையென்ற அகம்பாவம் மனிதனை மற்ற உயிர்கள் பற்றிச் சிந்திக்க விடுவதில்லை. இயற்கைச் சமநிலையைச் சீர்குலைத்து அவன் அடையும் முன்னேற்றங்கள் அவனுக்கே உலை வைக்கும் போது கூட அவன் தன் அகந்தையை ஒழிப்பானா என்பது சந்தேகமே! எப்படி இன்னும் புதிய முன்னேற்றங்களைக் கண்டு அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது பற்றி மட்டும் தான் சிந்திப்பான்.
இந்த இயல்பு தான் இயற்கையுடன் இயைந்திருந்த மனிதனை விலக்கி இன்று எதிர்த்திசையிலே பயணிக்கச் செய்துவிட்டது.
‘நாம் மீண்டும் ஆதி மனிதர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும்’ என்ற ஒஷோவின் வரிகள் தான் நிதர்சனமாகத் தெரிகின்றன. அவை நடந்தால் தான் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சாபத்துக்கான விமோசனமும் கிடைக்கும்.

Sunday, December 5, 2010

தூரிகையில் கண்ட உயிர் வண்ணம்


“மலரினில் நீல வானில்
மாதரர் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன்
இயற்றினான், ஈசன் இந்த
உலகினில் எங்கும் வீசி
ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக்கண்ணால்
அனைத்தையும் நுகருமாறே”
என்கிறது மகாகவி பாரதி பாடிய இரங்கற்கவிதையொன்று ஓவியக்கலையிலே, இந்தியப்பாணிக்குள் மேலைத்தேயப் பாணியைப்புகுத்தினான் கேரள ஓவியன் ஒருவன். எத்தனை தடவைகள் திரும்பத்திரும்பப் பார்த்தாலும் மனதை லயிக்கச் செய்யும் அவ்வோவியங்களை வெறும் சொற்களால் விபரிக்க முடியாது.
இந்திய ஓவியப்பாணிக்கு புதுப்பரிமாணத்தை வழங்கி இன்று தன் ஓவியங்களால் வாழ்ந்து வரும் ஓவியன்தான் ராஜா ரவிவர்மா. அவரது இறந்த போது மகாகவி பாரதியார் பாடிய இரங்கற்கவிதையே மேலே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
உலக்கப்புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவரான ராஜா ரவிவர்மா கேரள மாநிலத்தின் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்.
இன்றைய கேரள மாநிலத்தின் தலை நகராகிய திருவனந்த புரத்திலிருந்து 40 கிலோ மீற்றர் தூரத்திலே கிளிமனூர் அமைந்திருக்கிறது. அங்குள்ள அரண்மனையிலே திருவாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்துக் குழந்தையாக 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி ரவிவர்மா பிறந்தார்.
இயற்கையிலேயே அவருக்கு ஓவிக்கலையில் நாட்டமிருந்தது. சிறு வயதிலேயே தான் வாழ்ந்த அரண்மனைச் சுவர்களிலெல்லாம் பல வகையான மிருகங்களையும் தான் அன்றாடம் காணும் காட்சிகளையும் வரைவார்.
அரண்மனையிலேயே சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார். அவரது நெருங்கிய உறவினரான ராஜாராஜ வர்மா, ரவிவர்மாவின் ஓவியத்திறனைக் கண்டுணர்ந்தார். தான் அறிந்திருந்த ஓவியக்கலை நுட்பங்களை ரவிவர்மாவுக்குப் புகட்டினார்.
ராஜாராஜ வர்மா தான் ரவிவர்மாவின் முதல் ஓவியகுரு ஆவார். ரவிவர்மாவின் 13 வது வயதிலே ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவர் கிளிமனூர் அரண்மனையிலிருந்து திருவாங்கூர் அரண்மனைக்கு சுயம்வரம் ஒன்றுக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அக்கால அரசகுல வழக்கப்படி, சுயம்வரத்தின் மூலமே மணமகளுக்குரிய மணமகன் தேர்ந்தெடுக்கப்படுவான்.
சுயம் வரத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு இளைஞனைப் பற்றியும் சிறிய அறிமுகம் ஒன்று நடைபெறும். அதனடிப்படையில் ரவிவர்மாவும் அறிமுகம் செய்யப்பட்டார். சமஸ்கிருதம் மற்றும் மலையாளத்திலே காவியங்கள் பற்றிய தேர்ச்சியும், கதகளி, சங்கீதம் ஆகிய கலைகள் மட்டுமன்றி ஓவியக்கலையிலும் சிறந்த தேர்ச்சியுடையவராக அறிமுகம் செய்யப்பட்டார்.
ஆயினும் திருவாங்கூர் மகாராஜா அவர் கறுப்பாக இருப்பதாகக் கூறி அவரை நிராகரித்தார். அந்தச்சம்பவம் கூட ரவிவர்மாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததோ என்றே எண்ணத்தோன்றுகிறது. ஏனெனில் பின்னொரு காலத்திலே, இச்சம்பவம் பற்றிய நினைவுகளை ரவிவர்மா மீட்டிருந்தார். அப்போது ‘நான் அரண்மனை, அந்தப் புரங்களின் வாசியாக மாறி அரசவம்சத்தின் மாப்பிள்ளை என்ற ஆடம்பர வாழ்விலே அடைபட்டிருந்தால், என்னை இந்த உலகம் அறிந்திருக்குமா? எனக்கூறியிருந்தார்.
ரவிவர்மாவின் எதிர்காலம் ஓவியக்கலையுடன் சிறக்க வழிவகுத்தவர் ராஜா ராஜவர்மா என்றால் மிகையாகாது. அக்காலத்திலே திருவாங்கூர் மன்னராக இருந்த ஆயிலியம் திருநாள் மகாராஜாவிடம் ரவிவர்மாவை ராஜவர்மா அறிமுகப்படுத்தினார். ஆயிலியம் திருநாள் மகாராஜாவின் ஆதரவு ரவிவர்மாவுக்கு அவரது 14 வயதிலேயே கிடைத்தது.
திருவாங்கூர் அரண்மனையின் ஆஸ்தான ஓவியரான ராமசாமி நாயுடு என்ற நாயக்கர் எண்ணெய் வண்ண ஓவியக்கலையில் வல்லவராக இருந்தார். அக்காலத்தில் இந்தியாவிலே எண்ணெய் வண்ண ஓவியக்கலை பெரியளவில் பிரபலமடைந்திருக்க வில்லை. ஆனால் மேலை நாடுகளில் மிகவும் பிரபலம் வாய்ந்து காணப்பட்டது. ரவிவர்மாவின் ஓவியத்திறமையைக் கண்ட ராமசாமி நாயுடு எண்ணெய் வண்ண ஓவியக்கலை நுட்பங்களை ரவிவர்மாவுக்குச் சொல்லிக் கொடுக்க விரும்பவில்லை. ஏனெனில் ரவிவர்மா தனக்குப் போட்டியாக உருவாகிவிடுவாரோ என்ற பயம் அவருக்கு இருந்தது.
அது ரவி வர்மாவை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மகாராஜா ஆயிலியம் திருநாளால் பல இத்தாலிய ஓவியர்களின் அறிமுகம் அவருக்குக்கிடைத்தது. துல்லியமான எண்ணெய் வண்ண நுட்பங்களைக் கற்க முடியாவிடினும் இத்தாலிய ஓவியர்களின் ஓவியங்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டார். கண்பார்க்க, கை வரையும் கொடை இயற்கையாகவே ரவிவர்மாவுக்குக் கிடைத்திருந்தது. அக்கொடையை மனம் பார்க்க கைவரையும் திறனாக வளப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் ராமசாமி நாயுடுவின் மாணவராகிய ஆறுமுகம் பிள்ளையின் அறிமுகம் அவருக்குக்கிடைத்தது. ஆனால் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை ரவிவர்மாவுக்குக் கற்பிக்க தன் குருவின் அனுமதியைப் பெற அவர் தயங்கினார்.
ஆதலால் இரவு நேரங்களில் யாரும் அறியாமல் இரகசியமாக ரவிவர்மாவின் அரண்மனைக்குச் சென்று தமக்குத்தெரிந்த எண்ணெய்வர்ண ஓவியக்கலை நுட்பங்களைப் பகிர்ந்து கொண்டார். 1868 ஆம் ஆண்டு ரவிவர்மாவின் வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. ஆயிலியம் திருநாள் மகாராஜாவைச் சந்திக்க வந்த ஐரோப்பிய ஓவியரான தியோடோர் ஜென்சனின் அறிமுகம் ரவிவர்மாவுக்குக் கிட்டியது.
ஆயிலியம் திருநாள் மகாராஜா, மற்றும் மகாராணியை ஜென்சன் ஓவியமாக வரைந்தார். அதேநேரம் ரவிவர்மாவும் அவர்களை வரைந்தார். அவரது ஓவியத்தின் முன்னே ஜென்சனின் ஓவியம் எடுபடவில்லை.
ஏற்கனவே ஜென்சனின் உத்திகளை ரவிவர்மா இலகுவில் புரிந்து கொண்டார். ரவிவர்மா தன்னை விஞ்சிவிடுவாரோ என்ற பயம் ஜென்சனுக்கும் இருந்தது. ஆதலால் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை ரவிவர்மாவுக்குக் கற்றுக்கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால் தான் வரையும் போது உடனிருந்து பார்க்க அனுமதித்தார். அதுவே ரவிவர்மாவுக்கு எண்ணெய்வர்ண ஓவியக்கலையின் நுட்பத்தை அறியப்போதுமாக இருந்தது.
எண்ணெய்வண்ணம் இந்தியாவுக்குப் புதியதாகையால் அதன் தயாரிப்பு பற்றியும் பெரிதாக எவரும் அறிந்திருக்கவில்லை. அதுவரை காலமும் இலைகள் மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து சுதேசமுறையிலே வண்ணங்கள் தயார் செய்யப்பட்டன.
ரவிவர்மாவுக்குத் தேவையான எண்ணெய் வண்ணங்களை ராஜா ராஜவர்மாதானே தயார் செய்து கொடுத்தார்.
மூகாம்பிகை கோயிலிலே அமர்ந்து தியானம் செய்யும் வழக்கத்தையும் ரவிவர்மா உருவாக்கிக் கொண்டார். நீதிபதி ஒருவரின் திருவுருவத்தை வரைந்து அதற்கான கட்டணத்தையும் பெற்றுக்கொண்டார்.
அரச குடும்பத்தவர் ஒருவர் ஓவியக்கூலி பெறுவதில்லை என்ற மரபை உடைத்த பெருமையும் ரவிவர்மாவையே சாரும்.
இவர் மிகவும் வித்தியாசமானவர். விடியும் போதே தூரிகைகளைக் கையில் எடுத்துக்கொள்வார். பழம்பெரும் வித்துவான்களின் இசையை விரும்பிக் கேட்பார். கதகளி நாட்டியத்தை இரசிப்பார். அரச வம்சத்தவர்களாலும் ஏனையோர்களாலும் காலங்காலமாகப் பேணப்பட்ட ஓலைச் சுவடிகளை எடுத்துவைத்து ஆராய்வார். பழைய நாடக நூல்களை வாசிப்பார். கிட்டத்தட்ட ஒரு ராஜயோகியாக வாழ்ந்தார். அன்னை மூகாம்பிகையின் அருளால் ஓவியக்கலையில் பல புதிய பரிணாமங்களை வகுத்தார் என்றால் கூட மிகையாகாது.
ஆயிலியம் திருநாள் மகாராஜா தன்னை அற்புதமாக வரைந்ததற்காக ‘வீரஸ்ருங்கலா’ என்ற உயரிய விருதை ரவிவர்மாவுக்கு அளித்து கெளரவித்தார்.
உலகளாவிய ரீதியிலே பல ஓவியக் கண்காட்சிகளில் ரவிவர்மாவின் ஓவியங்கள் விருதுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றன. பிற்காலத்தில் அவர் ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஜேர்மன் ஆகிய மொழிகளிலே பாண்டித்தியமும் பெற்றார். உலகின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் அவருக்குப் பாராட்டுக் கடிதங்கள் வந்து குவிந்தன. கிளிமனூரிலேயே அவர் தங்கியிருந்து ஓவியங்களை வரைந்தார். அவருக்காகவே கிளிமனூரில் அஞ்சலகத்தைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவரது ஓவியங்கள் எனைய இந்திய ஓவியங்களுடன் ஒப்பிடும் போது தனித்துவமானவை. அவற்றில் முக்கிய கதா பாத்திரங்களாக பெண்களே இருந்தனர். திருவாங்கூர் அரண்மனைகளில் இருந்த பெண்கள், ஆடவர்கள் ஆகியோரை மாதிரியாக நிறுத்தி ஓவியங்களை வரைந்திருக்கிறார். அரண்மனையில் இருந்தோர் அணிந்திருந்த ஆடை அணிகலன்களையே தமது ஓவியக்கதாபாத்திரங்களுக்கும் அணிவித்து அழகு பார்த்தார் ரவிவர்மா. சுகுணாபாய் என்ற மகாராஷ்டிரப் பெண்மணி தான் ரவிவர்மா வரைந்த லக்ஷ்மி, சரஸ்வதி ஓவியங்களுக்கு மாதிரியாக இருந்தவர்.
19 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலே இந்தியா முழுவதும் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டார். அங்கு தான் கண்டவற்றை ஓவியங்களிலே பிரதிபலித்தார்.
அவரது ஓவியங்களிலே கட்டடங்கள், தரைத்தோற்றங்கள் திருவிழாக்கள் போன்றவற்றை பெரியளவில் காணமுடியாது. ஆனால் பல கற்பனை ஓவியங்களையும் அவர் வரைந்திருக்கிறார். அவருடைய ஓவியங்களில் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டிருந்தது. இந்திய இதிகாசங்கள், புராணங்கள் காவியங்களிலிருந்து கருப்பொருட்களை எடுத்து ஓவியங்களை வரைந்திருக்கிறார். இந்தியக் கருப்பொருளுக்கு அவர் கொடுத்த மேற்கத்தேய உயிரோட்டம் தான் அவரது ஓவியங்களை தனித்துவம் மிக்கனவாகக் காட்டியிருக்கிறது.
சாகுந்தலம், நளசரித்திரம், அரிச்சந்திரன் கதை, மகாபாரதம், பகீரதன் தவம், சத்தியவான் சாவித்திரி கதை, ராதா கிருஷ்ணா, கிருஷ்ணாயசோதா¡, லக்ஷ்மி, சரஸ்வதி என இவரது ஓவியங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
ஷேக்ஸ்பியர் போன்றோரின் காவியங்களையே அறிந்திருந்த மேலை நாட்டவருக்கு இந்தியாவிலும் அழகிய காவியங்கள் உள்ளன என உணர்த்திய ரவிவர்மாவின் ஓவியங்கள், அத்தனை உயிரோட்டமானவை. பெண் தெய்வங்களை, சாதாரண மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலே அழகான சேலைகளையும் நகைகளையும் கொண்டு அலங்கரித்தவர் ரவிவர்மா என்றால் மிகையாகாது.
இந்தியாவில் மட்டுமன்றி உலகின் வெவ்வேறு நாடுகளின் அரச பரம்பரையினரை ரவிவர்மா ஓவியமாக வரைந்தார். அவர்களுடன் நல்லுறவைப் பேணினார். தனது ஓவியத்திறமைக்குக்கிடைத்த பணத்தைக் கொண்டு லிதோ கிராஃபிக் அச்சகமொன்றைத் தாபித்தார். இதன் மூலம் பணம் படைத்தவர்கள் மட்டுமன்றி சாதாரண மக்களுக்கும் அவரது ஓவியப் பிரதிகள் கிடைத்தன.
ஓவியத்துறையில் புதியதோர் கலாசாரமே உருவாகியது. ‘கலண்டர் ஓவியர்’ என ரவிவர்மாவை எள்ளி நகையாடியவர்களும் இருக்கிறார்கள். ‘ஓவிய மரபைச் சிதைக்கிறார்’ எனத் தூற்றியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் இன்று நாம் காணும் இந்துக் கடவுளர்களின் உருவப்படங்கள் உருவாகக் காரணமாக இருந்தவரே ஓவியர் ரவிவர்மா தான்.
மரபுக்கு விரோதமாகவும் அவர் சில ஓவியங்களைப் படைத்திருந்தார். மீசைக்காரப் பரமசிவன் தலையை விரித்தபடி இருக்கும் சரஸ்வதி, லக்ஷ்மி போன்ற ஓவியங்களைக் கூற முடியும். ஆனால் பிற்காலத்தில் அவையே பிரபலமாகி விட்டன.
இவர் ஓவியம் வரைவது கூட தனித்துவமானதாகத்தான் இருக்கும். விடியும் முன்னரே எழுந்து விடியும் வரை காத்திருந்து ஓவியம் வரைய ஆரம்பிப்பார். எப்போதும் இளந்தளிர் வெற்றிலைகளை வாசனைச் சரக்குகளுடன் சேர்த்து மென்றபடிதான் ஓவியம் வரைவார். ஓவியம் வரைவதற்கு முன் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட மூக்குப் பொடியில் ஒரு சிட்டிகையை இழுத்து அனுபவிப்பார். பின் ஏதோ ஒரு உலகிலே சஞ்சரித்தபடி கனவுகாணும் தன்மையுடன் வரையத் தொடங்குவார். அவரது கைகளும் தூரிகைகளும் திரையில் நர்த்தனமாகும்.
அக்காலத்தில் சமுதாயத்தின் வெவ்வேறு நிலைகளில் இருந்த மக்கள் கூட்டத்தினர் அவர் ஓவியம் வரைய ஓவியக்கூடத்திலே நின்று பார்த்துக் கொண்டிருப்பர். ஓவியம் வரைந்தபடியே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார். யாராவது ஓவியம் தொடர்பாக ஆக்கபூர்வமான யோசனைகளை முன்வைத்தால் அவற்றை ஏற்று மாறுதல்களையும் செய்வார்.
அவருடைய ஓவியங்கள் சில ஆபாசமானவை என இந்துக்கள் சிலர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். தானே சுயமாக வழக்காடி வழக்கில் வெற்றியீட்டினார்.
1906 ஆம் ஆண்டு நீரிழிவு நோயால் வெகுவாகப் பாதிக்கப்பட்டார். அவ்வாண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி இப்பூவுலகை நீங்கினார்.
அவர் ஏறத்தாழ 700 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருந்தார் எனக்குறிப்பிடப்படு கிறது. சில மங்கி, அழிந்துவிட்டன. சில பல இலட்சம் ரூபாவுக்கு அண்மையில் ஏலம் போயின.
அவரது மரணத்தின் பின்னர், பல ஓவியங்கள் திருவனந்த புரம் ஓவியக்கூடத்திலே வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் 75 ஓவியங்கள் 1940 இல் கிளிமனூர் அரண்மனை ஓவியக்கூடத்தில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டன.
அவற்றுள் சில ஓவியங்களைக் காணவில்லையென அண்மையில் ரவிவர்மாவின் பேத்தி கேரள நீதிமன்றில் வழக்குத் தொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. யாதாயினும் யாவரும் அக்கறையுடனும் விழிப்புடனும் இருந்திருந்தால் ரவிவர்மாவின் தொலைந்து போன ஓவியங்கள் உட்பட இந்தியாவின் அரிய பல பொக்கிஷங்கள் காப்பாற்றப்பட்டிருக் கும் என்பது தெளிவு.
இந்த உயிரோட்டமான ஓவியங்களில் ரவிவர்மாவும் அவரது பாத்திரங்களும் மட்டும் வாழவில்லை. எமது புராண இதிகாசங்களின் கதாபாத்திரங்களுடன், ரவிவர்மா காலத்து ஆடையணிகளும் சேர்ந்தே வாழ்கின்றன என்பது கண்கூடு. அந்த அற்புதமான கலைஞனின் கைகளும் தூரிகையும் இணைந்த நர்த்தனத்தில் உருவான இவ்வுயிர் வண்ணங்கள் காலத்தால் அழியாமல் நிலைத்து நிற்குமென்பதில் எதுவித ஐயமுமில்லை.

Wednesday, December 1, 2010

எச்.ஐ.வி/எய்ட்ஸ் - ஐயமும் தெளிவும்..

எய்ட்ஸ் (AIDS) எனப்படுவது யாது?


AIDS  என்ற சொல் Acquired Immune Deficiency Syndrome  என விளக்கப்படுகிறது.
AIDS   என்பது ஒரு மருத்துவ நிலை என்று கூடக் கூறலாம்.  AIDS இனங்காணப்பட்ட நோயாளி ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் நலிவடைந்ததாக இருக்கும். இதனால், பாரதூரமற்ற நோய்த்தொற்றுக்கள் கூட அவரை இலகுவில் பாதிப்புக்குள்ளாக்கும்.
1980 களின் முற்பகுதியிலே, எய்ட்ஸ் தொற்று முதன்முதலாக இனங்காணப்பட்டபோது வெகு சிலரே பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது உலகளாவிய ரீதியிலே 33.3 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.


எய்ட்ஸ் என்ற நிலைக்கு பரிகாரம் இருக்கிறதா?


பலர் அவ்வாறு பரிகாரம் இருப்பதாகவே எண்ணுகிறார்கள். எய்ட்ஸ் என்ற நிலைக்கு ஆளானவர்களை அந்த எண்ணம் தான் தாம் பாதுகாப்புடன் இருப்பதாக உணரச் செய்கிறது.
ஆனால் உண்மையில் எய்ட்ஸ் என்ற நிலைக்கு எந்த ஒரு பரிகாரமும் இல்லை. வந்த பின் காப்பதை விட வருமுன் காத்தலே சிறந்ததாகக் கருதப்படுகிறது.







எய்ட்ஸ் என்ற நிலைக்கான

அறிகுறிகள் யாவை?


நோய் எதிர்ப்புக்கலங்களான CD4 கலங்களின் எண்ணிக்கை குருதியிலே குறித்த மட்டத்தை விடக் குறைவடையும் போது எய்ட்ஸ் என்ற நிலை உருவாகியிருப்பதாகக் கணிக்கப்படும்.
ஆரம்பத்திலே ஃபுளூ வை ஒத்த அறிகுறிகளான காய்ச்சல், தலையிடி, களைப்பு போன்றன தோன்றும். இதனை அறிகுறிகள் வெளிப்படாத காலப்பகுதி என்பர். ஆயினும் இந்தக் காலகட்டத்தில் உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதி வெகுவாக நலிவடையத் தொடங்கும்.
ஏனெனில் H I V  வைரஸ் ஆனது நோயெதிர்ப்புக் கலங்களான CD4 கலங்களைச் சேதமடையச் செய்யும். அடிப்படையில் இக்கலங்கள் பிறபொருள் எதிரிகளுக்கெதிராகத் தொழிற்படுவன ஆகும்.
களைப்பு, நிறை குறைவடைதல், அடிக்கடி காய்ச்சல் ஏற்படுதல், வியர்த்தல், சரும வியாதிகள் மற்றும் ஏனைய தொற்றுக்கள், தற்காலிக ஞாபக மறதி போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.
காலப்போக்கிலே, உடலின் ஒவ்வொரு தொகுதியாகப் பாதிப்படையத் தொடங்கும்.

எச். ஐ. வி. சோதனையில் எச். ஐ. வி. (+) மற்றும்

எச். ஐ. வி. (-) முடிவுகள் வெளிப்படுத்துவது என்ன?

சாதாரணமாக எமது உடலிலே தொற்று ஒன்று ஏற்பட்டால், நோய் எதிர்ப்புக்கலங்கள் பிறபொருள் எதிரியைத் தோற்றுவித்து தொற்றுக்களுடன் போரிடும்.
எச். ஐ. வி. தொற்றின் போதும் இதுவே நடைபெறுகிறது. எச். ஐ. வி. வைரசிற்குரிய பிறபொருளெதிரிகள் ஒருவரிடம் அடையாளம் காணப்பட்டால் அவர் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானவராகக் கருதப்படுவார். எச். ஐ. வி. சோதனையில் அவருக்கு (+) முடிவு கிடைக்கும். அவ்வாறான பிறபொருளெதிரிகள் எவையும் அடையாளங் காணப்படாவிடில் அவருக்கு (-) முடிவு கிடைக்கும்.
ஆனால் முக்கியமான விடயம் யாதெனில், எச். ஐ. வி. தொற்று ஏற்பட்டு ஆறு வாரங்கள் ஆகும் போதே உடலில் பிறபொருளெதிரிகள் தோற்றுவிக்கப்படும். எச். ஐ. வி. சோதனையில் (-) முடிவு கிடைத்த ஒருவருக்கு அத்தொற்று இல்லை என்றும் கருதமுடியும். அதேசமயம், அத்தொற்று ஏற்பட்டு 6 வாரங்கள் ஆகவில்லை என்றும் கூடக் கருதமுடியும்.
ஒவ்வொருவரும் எச். ஐ. வி. தொடர்பான தமது நிலை என்ன? தமது கணவன்/மனைவியின் நிலை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துவைத்திருத்தல் ஆரோக்கியமானது என வலியுறுத்தப்படுகிறது. எச். ஐ. வி. சோதனையும் சாதாரண குருதிச் சோதனையை ஒத்ததாகும். எச். ஐ. வி. சோதனையில் (+) முடிவு கிடைத்ததால் அதை உறுதிசெய்ய மேலும் இரண்டு சோதனைகள் செய்யப்படும். அவற்றின் பின்னரே முடிவுகள் மேற்கொள்ளப்படும்.

எச். ஐ. வி. வைரஸ் மனித உடலுக்கு வெளியே

எவ்வளவு காலம் உயிர் வாழும்?



எச். ஐ. வி. தொற்றுடைய ஒரு பொருளைத் தொடுவதால் அவ்வைரஸ் தொற்றுக்குள்ளாக முடியுமா என்ற சந்தேகம் பலருடைய உள்ளத்திலே எழத்தான் செய்கிறது. ஆனால் அதிஷ்டவசமாக எச். ஐ. வி. தொற்று அவ்வாறு ஏற்படுவதில்லை.
இவ்வைரஸ் உடலை விட்டு வெளியே, ஒரு புறச் சூழலில் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை என்பதை ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. புறச்சூழலில் உள்ள எச். ஐ. வி. வைரஸ் தொற்றுள்ள கலங்களின் எண்ணிக்கையானது சில மணித்தியாலங்களுக்குள் 99 சதவீதத்தால் குறை வடைந்து விடுகிறது.
குருதியிலோ அல்லது ஏனைய உடற்திராவகங்களிலோ இருக்கும் எச். ஐ. வி. தொற்றின் செறிவு மிகக் குறைவாகும். புறச்சூழலில் இருக்கும் குருதியிலோ அல்லது உடற்திராவகங்களிலோ இருக்கும் எச். ஐ. வி. தொற்று பூச்சியம் எனக் கொள்ளலாம். ஆயினும் அவற்றில் ஹெப்படைடிஸ் -B, C தொற்றுக்கள் கூட இருக்கக் கூடுமா கையால் அவற்றை மிகவும் அவதானமாகக் கையாளவேண்டும்.