Showing posts with label நல்லூர். Show all posts
Showing posts with label நல்லூர். Show all posts

Tuesday, August 30, 2011

காலம் கடந்த பின் வருந்த வேண்டுமா?

அது இவ்வருடத்தின் வைகாசிப்பொழுது.. வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ/பொங்கல் காலம். என்றுமில்லாத சனத்திரள் ஆலயச்சூழலில் நிறைந்து காணப்பட்டது. ஆலய மஹோற்சவங்களிலே பூசை வழிபாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கடைவீதிக்கும் கொடுக்கப்படுகிறது என்பதை மறுப்பவர் எவருமிலர்.

அதற்கு வற்றாப்பளை அம்மனும் விதிவிலக்கல்லவே.. உள்ளூர் வர்த்தகர்களுடன் சேர்ந்து தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலரும் கடை வீதியை நிறைத்திருந்தனர். சிறிதும் பெரிதுமாக பல கடைகள்.. பல்வேறு பட்ட வியாபாரங்கள்.. அவற்றிலே அலை மோதும் சனத்திரளுக்கும் குறைவிருக்கவில்லை.. அங்கே ஒரு சிறிய தற்காலிகக் கடை.. வாசலிலேயே உடலில் ஒட்டும் ஸ்டிக்கர்களான டட்டூஸ் (Tatoos) தொங்க விடப்பட்டிருந்தன. இளைஞர் கூட்டம் மொய்த்துகொண்டிருந்தனர். அது வேறு எந்த வியாபாரமும் அல்ல. பச்சை குத்தும் வியாபாரம் தான்..

பச்சை குத்துவதொன்றும் எமக்கு புதிது அல்லவே.. அது பல கீழைத்தேய கலாசாரங்களுடன் ஒன்றித்துப் போனதொன்று.அக்குபஞ்சர் போல ஊசியால் பச்சை குத்துவதால், நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உற்சாகமாக செயற்பட முடியும். பச்சை குத்த பயன்படுத்தப்படும் மருதானி உள்ளிட்ட பச்சிலைகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்றெல்லாம் கூறப்படுகின்றன. ஆனால் என்று எச்.ஐ.வி தொற்று உட்பட்ட பாரதூரமான தொற்றுகள் உருவாக பச்சை குத்துவதும் ஒரு காரணம் என்று அறியப்பட்டதோ, அன்றிலிருந்து தான் அது தொடர்பான சர்ச்சைகள் பலவும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகத் தொடங்கின. ஆயினும் எம் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பதை வற்றாப்பளை அம்மன் பொங்கல் உற்சவமும் அதைத் தொடர்ந்து நல்லூர் திருவிழாவும் புடம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

கடந்த வாரங்களுக்கு முன்னர் நல்லூர் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டிருந்தது. ஐயன் முருகனின் அருளொளி வெள்ளத்தில் மூழ்கவென பக்தர்கள் வயது வேறுபாடின்றி கூடத் தொடங்கினர். கடை வீதிகளும் கூடக் களை கட்டின. இளைஞர் கூட்டத்திற்கும் குறைவில்லை. வர்த்தகர்கள் சகல தரப்பினரையும் அதிலும் குறிப்பாக சிறுவர்கள், இளை ஞர்களைக் கவரக்கூடிய வியாபார முயற்சிகள் பலவற்றை ஆரம்பித்திருந்தனர் . அவற்றிலே இந்த பச்சை குத்தும் வியாபாரம் இளை ஞர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் எவருமே அதனால் உருவாகப்போகும் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை.

இளை ஞர்கள் ஆர்வமாக இருந்தாலும், பெரியவர்கள் விழிப்படைந்தனர். பல தரப்புகளிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. மருத்துவ சமூகம் எச்சரிக்கை செய்தது. சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு இரவுப் பொழுதிலே பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டோர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களடு பச்சை குத்தும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
பச்சை குத்துதல் என்பது அம் மத்தியில் காலங்காலமாக நிலவி வரும் ஒரு பாரம்பரியம். ஆனால் நவ நாகரிக மோகம் தழைத்தோங்கியிருக்கும் இன்றைய காலப் பகுதியில் பச்சை குத்தும் செயற்பாடும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து விட்டது.

தென்னிந்தியாவின் கொங்கு நாட்டுப் பகுதியில் காணப்படும் கைவினைக் கலைகளில் பச்சை குத்துதலுக்கு முக்கியயைடம் இருக்கிறது. கலைத்தன்மையும், தொழில் தன்மையும் இணைந்த. கைவினைக் கலை (Folk craft) எனவும் இது கூறப்படுகிறது. இந்தப் பச்சை குத்தும் கலை தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பல உலக நாடுகளிலும் இன்றும் கூடக் காணப்படுகின்றது. பழங்குடி மக்களிடம் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ரஷ்யா பொலினீசியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் இந்த வழக்கம் காணப்படுகிறது.
மஞ்சள் பொடியை அகத்திக் கீரையோடு அரைத்துத் துணியில் வைத்துத் திரியாக்கி எரித்த கரியினை நீர் அல்லது முலைப்பாலுடன் கலந்து மையாக்கி ஊசிகளைக் கொண்டு உடலில் பச்சை குத்துவர். கரும்பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகை மையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல் பச்சை குத்துதல் என்று விளக்கம் தருகிறது க்ரியாயின் தமிழ் அகராதி. குறவர் இனத்தவர் பச்சை குத்துதலை ஒரு தொழிலாகவே செய்து வந்தனர்.
வெவ்வேறு நம்பிக்கைகளுக்காகப் பேணப்பட்டு வந்த பச்சை குத்தும் வழக்கத்தின் எச்சங்களாக இன்றைய மருத்தாணியிடலும் டட்டூக்கள் ஒட்டுவதும் மிஞ்சியிருக்கின்றனவோ என்றும் சில வேளைகளில் சிந்திக்கத் தோன்றும். பச்சை குத்துதல் என்பது தற்போது அழகுக் கலையாகவே மாறி விட்டிருக்கிறது. அழகுணர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பச்சை குத்திக் கொள்ளும் பலரைக் காண முடிகிறது.

ஊசியிலே வர்ண மையை இட்டு உடலிலே கீறுவதன் மூலம் பச்சை குத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட சில பச்சிலைகளின் சாற்றை எடுத்து, அவற்றை ஊசி மூலம் கை பெருவிரல் அல்லது மணிக்கட்டின் மேல்பகுதி, மார்பு ஆகிய இடங்களில் பச்சை குத்துவர்.

முன்பு, பச்சை குத்துவதற்கென்றே ஒரு இனம் இருந்தது. தற்போது அப்படி இருப்பது மிக அரிதாகும். வெளிநாடுகளில், 'டட்டூ' என்ற பெயரில் பச்சை குத்தும் தொழில் அமோகமாக நடக்கிறது. விதம் விதமான உருவங்களை உடல் முழுவதும் வரைந்து கொள்வதை, மேலை நாட்டினர், நாகரிகமாக கருதுகின்றனர். தற்போது இந்த கலாசாரம் எமது நாட்டிலும் பரவி விட்டது.
பாவிக்கப்படும் மையைப் பொறுத்து பச்சை குத்திய வடிவத்தை அழிக்கவும்/இல்லாமல் செய்யவும் முடியும். ஆனால் இது மிகுந்த வலியைத் தோற்றுவிக்கும்.
பச்சை குத்துதல் ஒன் றும் தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்வதனால் இருக்கும் அபாயங்களையும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளையும் நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும். பச்சை குத்துதல் அபாயகரமானதாக மாறுவதற்குரிய பிரதான காரணம் அதற்குப் பாவிக்கப்படும் ஊசியாகும். சுகாதாரமற்ற ஊசிகளாலும் ஒரே ஊசியைப் பலருக்குப் பயன்படுத்துவதாலும் பாவித்த ஊசிகளைச் சரியாக அப்புறப்படுத்தாமையாலும் பல பார தூரமான தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு ஏற்படும். ஆதலால் அந்த ஆபத்தை நாம் உணர வேண்டும். பச்சை குத்தத் தான் வேண்டுமென்றால் இந்த அபாயங்களைத் தவிர்க்கக் கூடிய வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நல்லூர் ஆலயச் சூழலிலே பச்சை குத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரித்து விடுவிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணமாகும். ஆலயச் சூழலில் இத்தகைய பச்சை குத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லையென்றும் மறைமுகமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் யாழ். மாநகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கூறியிருந்தனர். இந்த விடயம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவிழாக்காலங்களில் ஆலய வெளி வீதிகளில் கடைகளை அமைக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் , அக்கடைகளி எத்தகைய வியாபாரங்கள் மேற்கொள்ளப்படப்போகின்றன என அறிந்து அவை சமூகத்துக்கு பாதகமற்றவை என அறியப்படும் பட்சத்தில் மட்டுமே அனுமதியை வழங்க வேண்டும்.
அதே வேளை நவ நாகரிகம் தான் உலகம் என்ற மனப்பாங்கை எம் இளை ஞர்கள் மாற்றியமைக்க வேண்டும். எமது கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்கள் தான் எமது அடையாளங்கள். நாம் எமது மனப்பாங்கை மாற்றியமைக்காவிடில் அவை யாவுமே எதிர்காலசந்ததிக்குக் கடத்தப்படாமல் எம்முடன் முடிந்து போய் விடும். அடையாளமின்றிய எதிர்காலசந்ததியை உருவாக்கியவர்கள் என்ற அவப்பெயர் மட்டும் தான் எமக்கு மிஞ்சும்.
ஆலயச் சூழலில் பச்சை குத்தும் விடயம் தொடர்பாக விழிப்புடன் நடந்து கொள்ளுமாறு நோயாளர் மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் விசுவலிங்கம் கந்தவேள் பொதுமக்களை எச்சரித்திருந்தார். இளை ஞர்கள் மட்டுமன்றி பெற்றோரும் விழிப்பாக இருக்க வேண்டும். தம் பிள்ளை என்ன செய்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும். ஆனால் அத்தகைய நிலைமை எம்மவர் சமூகத்தில் சற்றுக் குறைவாக வே காணப்படுகிறது.
இத்தகைய விழிப்புணர்வை ஊட்டுவதில் வெகுசனத் தொடர்பூடகங்களுக்கு தலையாய் கடமை ஒன்று இருக்கிறது. நல்லூர் ஆலயச் சூழலில் பச்சை குத்தும் வியாபாரம் நடை பெறுவது கூட வெகு சனத் தொடர்பு ஊடகங்களால் தான் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.
எச்.ஐ.வி தொற்று தொடர்பில் பலத்த சவால்களை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது எம் வடபுலச் சமூகம்.அத்தகையதோர் சூழலில் பச்சை குத்துதல் போன்ற விடயங்களை அலட்சியப்படுத்துதல் எத்துணை பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் காலம் கடந்த ஞானத்தைப் பெற்று கடந்து போன காலத்துக்காக வருந்துவதில் பயனேதுமிருக்காது. வருத்தம் மட்டுமே எஞ்சும். வெள்ளம் வந்த பின் அணையைக் கட்டி என்ன பயன் ?

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
தோலின் மேற்படையில் ஊசியால் கீறுவதன் மூலம் பச்சை குத்தப்படுகிறது. தற்போது கையால் இயக்கப்படும் சிறிய ரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய இயந்திரத்தில் பொருத்தப்படும் ஊசி அல்லது ஊசிகள் தோலின் மேற்படையில் தொடர் துளைகளைப் போடும். அத்துளைகளில் மை பரவும் . பச்சை குத்தப்படும். சிறிதளவிலான நோ கூட உருவாகலாம்.இரத்தமும் வரலாம்.
1. அபாயத்தை உணருங்கள்!
  • ஒவ்வாமைத் தாங்கங்கள் ஏற்படலாம். பாவிக்கப்படும் மையின் ஒவ்வாமை காரணமாககதோல் தொற்று ஏற்படும். பச்சை குத்திப் பல காலங்கள் ஆன பின்னர் கூட இது ஏற்படக் கூடும்.
  • தோலில் பக்டீரியா தொற்று ஏற்படலாம். பச்சை குத்திய இடத்தில் சீழ் வடியலாம்.
  •  ஏனைய சில தோல் நோய்களும் ஏற்படலாம். இழையங்கள் மிகையாக வளரலாம்.
  • குருதியால் பரவும் நோய்களின் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும். பச்சை குத்தும் ஊசியி லே நோய்த்தொற்றுள்ள குருதி படிந்திருந்தால், ஹெப்பட்டைட்டிஸ்-B,ஹெப்பட்டைட்டிஸ்- C , எச்.ஐ.வி போன்ற தொற்றுக்கள் ஏற்படலாம்.
  •  பச்சை குத்தியபின்னர் வேறு ஏதோ ஒரு தேவைக்காக நீங்கள் MRI ஸ்கான் செய்து கொள்ள நேரும் போது அப்பகுதியில் எரிவுகள் ஏற்படலாம். அத்துடன் நீங்கள் பச்சை குத்திருப்பதானது திருத்தமான ஸ்கான் முடிவுகளைப் பெறுவதில் தடையாக இருக்கும்.  
  • பச்சை குத்திய பின்னர் அந்த ஊசிகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தாவிடில் அவை கூட நோய்த் தொற்றுகள் உருவாகக் காரணமாகி விடும். 
2. பாதுகாப்பைக் கவனியுங்கள்! 
  • பச்சை குத்துவது யார்?
அங்கீகரிக்கப்பட்ட, பயிற்சியைப் பெற்றவர்களிடம் சென்று பச்சை குத்துங்கள். அவர்களிடம் தேவையான அனுமதிப் பத்திரங்கள் இருக்கின்றனவா என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
  •  கையுறை அணிந்திருக்கிறாரா?பச்சை குத்துபவர் கையுறைகளை அணிந்திருக்கிறாரா என்பதையும் கவனியுங்கள். பச்சை குத்த ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர் தனது கைகளைக் கழுவுகிறார் என்பதையும் புதிய கையுறைகளைத் தான் அணிகிறார் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்!
  • சரியான உபகரணமா?பச்சை குத்துபவர் சரியான உபகரணத்தைத் தான் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தடவையும் புதிய ஊசி/ஊசிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் உறுதி செய்யுங்கள். அவர் பாவிக்கும் வர்ணங்கள், பாத்திரங்கள் கூட முன்னர் பாவிக்கப்பட்டிருக்காதவை (புதியவை) என் பதை உறுதி செய்யுங்கள்.
  • தொற்று நீக்கப்படுகின்றனவா? பாவித்தபின் எறிய முடியாத உபகரணங்கள் தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீளப்பாவிக்கப்படுகின்றனவா என்பதை அவதானியுங்கள்.
  •   உங்களையே கேளுங்கள்!பச்சை குத்தத் தான் வேண்டுமா என உங்களையே ஒன்றுக்கு இரண்டு தடவைகள் கேட்டுக்கொள்ளுங்கள். ஆம் எனின் பச்சை குத்த வேண்டிய இடத்தைக் கவனமாகத் தேர்வுசெய்யுங்கள். மது பானம், மருந்துகள் படக்கூடிய பகுதிகளில் பச்சை குத்தாதீர்கள்.
 பச்சை குத்திய பின்...
  •  அப்பகுதியில் சுற்றப்பட்டிருக்கும் பந்தனத்தை 24 மணி நேரத்துக்குக் கழற்றாதீர்கள். புண் இருந்தால் அதற்குரிய மருந்தை வைத்திய ஆலோசனையுடன் தடவுங்கள்.
  • பச்சை குத்திய பகுதியை எப்போது துப்புரவாக வைத்திருங்கள். அப்பகுதியில் சொறியாதீர்கள்.
  • பச்சை குத்திய பின் சில காலங்களுக்கு அப்பகுதியில் சூரிய ஓளி நேரடியாகப் படுவதைத் தவிருங்கள்,தேவையெனில் தோல் வைத்திய நிபுணரை நாடுங்கள்.

Sunday, August 22, 2010

நல்லை நகரில் உறையும் அலங்காரக் கந்தன்





“பஞ்சம் படை வந்தாலும்
பட்டினி தான் வந்தாலும்
அஞ்சுவமோ நாங்களடி கிளியே,
நல்லூர் கந்தன் தஞ்சமடி”


என்று நல்லைக் கந்தனின் புகழை யோகர் சுவாமிகள் கூறுகிறார். தமிழர்களின் கடவுளாகவும் குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகவும் போற்றப்படுபவன் முருகன். முருகன் என்றால் அழகன் என்பர். அழகன் என்றால் இலங்கை வாழ் மக்களைப் பொறுத்தவரையில் மனக் கண்ணில் தெரிபவன் நல்லூர்க் கந்தனேயாவான்.

இலங்கையிலே உள்ள பிரபல முருகன் கோவில்கள் ஒவ்வொன் றையும் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பர். செல்வச் சந்நிதியில் உறையும் இறைவனை அன்னதானக் கந்தன் என்றும், கதிர்காமத்திலே உறையும் இறைவனை காவற் கந்தன் என்றும் அழைப்பர். அதேபோல அலங்காரக்கந்தன் என்று அழைக்கப்படும் முருகன் நல்லூர் பதியிலே உறையும் இறைவனாவான்.

ஒரு காலத்திலே யாழ். மண் சைவத்துக்கும் தமிழுக்கும் பெயர் போனதாய் அமைந்திருந்தது. கந்தபுராணக் கலாசாரத்தை அடியொற்றி, யாழ்ப்பாணக் கலாசாரம் எனத் தனக்கேயுரித்தான கலாசாரப் பாங்கையும் தனித்துவத்தையும் பேணி வந்தது.

மூலைக்கு மூலை, வீதிக்கு வீதி, கிராமத்திற்குக் கிராமம், நகரத்திற்கு நகரம் என எங்கு பார்த்தாலும் சிறியதும் பெரியதுமாக கோயில்களால் நிறைந்து காணப்படும் மண்ணாகக் காணப்பட்டது. இன்றும் காணப்படுகிறது. யாழ். மண்ணின் தொன்மைக்குச் சான்றாக இன்றும் தலைநிமிர்ந்து நிற்கும் ஊர்களுள் நல்லூரும் ஒன்றாகும்.

இலங்கையின் வட பகுதித் தமிழர்களின் இராசதானியாகவும் யாழ்ப்பாண இராச்சியம் அந்நியர் கைகளிலே வீழும் வரை அதன் தலைநகராகவும் நல்லூர் விளங்கியது.

நல்லூர் என்றதுமே யாவரது நினைவுகளையும் நிறைப்பது நல்லூர்க் கந்தசுவாமி கோயிலாகும். யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாய மாலை போன்ற தொன்மையான நூல்களிலிருந்தும் ஈழத்துடன் தொடர்புடைய இலக்கிய நூல்களிலிருந்தும் வரலாற்றுக் குறிப்புக்களிலிருந்தும் இக்கோயிலின் தொன்மையை அறிய முடியும்.

கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து கி. பி. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக நல்லூர் விளங்கியது. அவ்விராச்சியத்தின் இறுதிக் காலத்தில் நல்லூரிலிருந்த மிகப் பெரிய கோவில் இக்கந்தசுவாமி கோவிலேயென போர்த்துக்கேயரின் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலின் தோற்றம் பற்றிய சரியான தெளிவு இதுவரை காணப்படவில்லை. ஆயினும் யாழ்ப்பாண அரசு அமைந்திருந்த காலப் பகுதியில் இக்கோயில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது என்பதில் எவரும் ஐயம் தெரிவிக்கவில்லை.

யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரிய சக்கரவர்த்திகளின் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சன் புவனேகவாகுவால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவ மாலையும் கைலாய மாலையும் கூறுவதாகச் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

15ஆம் நூற்றாண்டிலே, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கோட்டே அரசனான ஸ்ரீ சங்கபோதி புவனேகபாகு எனப்படும் சண்பகப் பெருமாளால் கட்டப்பட்டதாக ஒரு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். இதற்கு ஆதாரமாக அவர்கள் குறிப்பிடுவது, கோயிலிலே இன்றும் கூறப்பட்டு வரும் கட்டியம் ஆகும். இக்கட்டியம் சமஸ்கிருதத்திலே கூறப்பட்டு வருகிறது.

முன்னர் சிறியதாகவிருந்த கோயிலைத் தனது ஆட்சிக் காலத்தில் புவனேகபாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்று கருத்துத் தெரிவிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கிழக்கே வெயிலுகந்த பிள்ளையார் கோயில், தெற்கே கைலாசநாதர் கோயில், மேற்கே வீரமாகாளி அம்மன் கோயில், வடக்கே சட்டநாதர் கோயில் ஆகிய கோயில்களை நாற்றிசைகளிலும் அரணாகக் கொண்டு அமைந்திருக்கிறது நல்லூர்க் கந்தசுவாமி கோயில்!

யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்ததுக்கேயத் தளபதியாகிய பிலிப் டி ஒலிவேரா, 1620 இல் தனது அரசின் தலைநகராக யாழ்ப் பாணத்தை மாற்றினான். அதையடுத்து நல்லூர் கந்தசுவாமி கோயிலை இடித்து தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான்.

அவ்வாறு இடித்துப் பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் கோட்டை கட்டுவதற்குப் பயன்படுத் தப்பட்டதாகத் தெரியவருகிறது. அத்துடன் கோயில் இருந்த இடத்திலே போர்த்துக்கேயர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்திருந்தனர். ஆட்சி ஒல்லாந்தரிடம் கைமாறிய போது அவர்கள் அதனை புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினர்.

ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்திலே இந்துக் கோயில்கள் பற்றிய இறுக்கமான நிலைப்பாடு தளர்வடைந்தது. நல்லூர்க் கந்தசுவாமி கோவிலும் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தனர். அந்தக் கோயிலே இன்று நாம் காணும் நல்லைக் கந்தன் ஆலயம் ஆகும்.

நல்லூரிலே இன்று பாழடைந்து காணப்படும் யமுனாரிக்கு செல்லும் ஒழுங்கையில் அதற்கண்மையில் காணப்படும் கட்டடச் சிதைவுகள் நல்லைக் கந்தனின் பழைய கோயிலின் மதிலுக்குரியவையென கலாநிதி கந்தையா குணராசா குறிப்பிடுகிறார்.

அகத்தியனுக்குத் தமிழைத் தந்தவனாகவும் ஒரு நாவற்பழத்தை வைத்தே ஒளவையாருக்கு ஞானத்தை அருளியவனாகவும் குமரகுருபரருக்கு பேச்சுத்திறனை அளித்தவனாகவும் முத்து சுவாமி தீட்சிதருக்கு பாடும் வல்லமையை அருளியவனாகவும் முருகன் ஒரு தமிழ்க் கடவுளாகவே சித்தரிக்கப்படுகிறான்.



நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை இரகுநாத மாப்பாண முதலியார் வம்சத்தினரே பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். மண்ணிலே வாழ்பவர்கள் மட்டுமன்றி இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் நல்லூர்க் கந்தன் பிரபலமானவன்.

நல்லூர்க் கந்தனை இறைவனாய் வரித்து உயரத்தில் வைத்தாலும் தமது வீட்டு உறுப்பினர்களுள் ஒருவனாய் வரித்து உரிமையுடன் வழிபடும் வழக்கத்தை முருகனடியார்கள் யாவர் மத்தியிலும் காணமுடியும். அவர்கள் முருகன் மீது அளப்பரிய அன்பும், அவ்வன்பை மீறிய பக்தியும் கொண்டு உரிமையுடன் சேவிப்பவர்கள்.

நல்லை முருகனும் ஒன்றும் சளைத்தவனல்லவே. அவன் எவர்க்கும் அடிபணிந்ததில்லை. எவருக்காகவும் தனது வழக்கங்களை மாற்றியதுமில்லை. கோயிலினுள் நுழையும் போது ஆண்கள் மேலாடையைக் கழற்ற வேண்டுமென்பது நல்லூர் முருகன் கோயிலின் சட்டம். எந்த பிரபலமானவர் வந்தாலும் அந்தச் சட்டத்தை மதித்தால் தான் கோயிலினுள் செல்ல முடியும். முருகனையும் தரிசிக்க முடியும்.

உண்மையில் முன்னைய காலங்களிலே இந்தப் பாரம்பரியம் சகல இந்துக் கோயில்களிலும் பேணப்பட்டது. ஆனால் பல கோயில்கள் காலத்துடன் தமது பாரம்பரியங்களையும் மாற்ற, இந்தப் பாரம்பரியமும் இல்லாமல் போய்விட்டது.

ஆயினும் நல்லூர்க் கந்தன் ஆலயம் போன்ற ஒருசில கோயில்கள் மட்டும் இன்னும் பழைய பாரம்பரியங்களைப் பேணி வருகின்றன.

அவை அவ்வாறு பேணப்படாவிட்டால், எதிர்காலச் சந்ததிக்கு அவை பற்றித் தெரியாமலே போய்விடும் என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

இந்துக் கோயில்களிலே மிகவும் அரிதாகக் காணப்படும் வழக்கங்களுள் நேரந்தவறாமையும் ஒன்றாகும். நல்லைக் கந்தன் ஆலயத்தின் பூசைகளாயினும் சரி, திருவிழாவாயினும் சரி, குறித்த நேரத்திலே நடந்தேறும். எவருக்காகவும் முருகன் தனது நேர அட்டவணையை மாற்றமாட்டான். மழையோ வெயிலோ பூஜைகள், வீதியுலா யாவுமே குறித்த நேரத்தில் நடந்தேறும்.

1996 ஆம் ஆண்டு காலப் பகுதியிலே மக்களின் மின் பாவனையைக் குறைப்பதற்காக இலங்கையின் நேரம் மாற்றப்பட்டது. ஆனால், நல்லூர் முருகனின் பூஜை நேரங்கள் எவையும் புதிய நேர மாற்றங்களுக்கமைய மாற்றப்படவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் இன்றைய காலத்தின் போக்கு கோயில்களையும் விட்டு வைக்கவில்லை என்பது ஜீரணிக்க முடியாத ஒரு உண்மையாகும். அர்ச்சனைச் சீட்டுக்களிலும் இறை தரிசனத்திலும் பணத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதாகவே பெரும்பாலான கோயில்கள் இன்று காணப்படுகின்றன.

ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நல்லூர் முருகன் ஆலயத்திலே அர்ச்சனைச்சிட்டையின் பெறுமதி ஒரு ரூபா மட்டுமே. அத்துடன் நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவ்வளவு பெறுமதிக்கும் அர்ச்சனைச்சிட்டைகள் தான் கிடைக்குமே தவிர மீதிப்பணம் கிடைக்காது.

பணமிருந்தால் தான் சுவாமி தரிசனம் என்ற இன்றைய காலத்திலும் ஏழையென்ன பணக்காரன் என்ன யாவரும் என்னடியில் சமன் என உணர்த்தி நிற்கிறான் நல்லூர்க் கந்தன்.

கடும் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுக் காலங்களைத் தவிர இக்கோயிலின் நித்திய நைமித்தியங்கள் நேரம் தவறாமல் இடையறாது நடைபெறுகின்றன. உற்சவங்களும் அவ்வாறே!

ஆடி அமாவாசையிலிருந்து ஆறாம் நாள் கொடியேறி 25 நாட்கள் இக்கோயிலின் மகோற்சவம் நடைபெறும்.

எங்கிருந்தாலும் இந்த உற்சவ காலத்திலாவது நல்லைக்கந்தன் அடியார்கள் ஊருக்கு வந்துவிடுவர். வரமுடியாதவர்கள் கூட விரதமிருந்து பயபக்தியோடு முருகனை வழிபடுவர்.

கொடியேற்றத்துடன் ஆரம்பித்து மஞ்சம், கார்த்திகை, கைலாய வாகனபவனி, தங்கரத பவனி, மாம்பழத்திருவிழா, சப்பைரதம், தேர்த்திருவிழா, தீர்த்தம், பூங்காவனம் ஆகிய முக்கிய திருவிழாக்களையடுத்து வைரவர்மடையுடன் உற்சவம் நிறைவுறும். ஒவ்வொரு திருவிழாவின் போதும் ஒவ்வொரு புதுவித அலங்காரத்துடன் ஐயன் முருகன் ஆடிவரும் அழகை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

இதற்காகத்தானோ அவனை ‘அலங்காரக் கந்தன்’ என அழைக்கிறார்கள் என எண்ணத்தோன்றும். முக்கிய திருவிழாக்களின் போது முத்துக்குமாரசுவாமியும் ஏனைய நாட்களில் மூலவராகிய வேலும் வீதியுலா வருவர். உற்சவ காலத்திலே காலையும் மதியமும் உள்வீதியை வலம் வரும் மூர்த்தி மாலையிலே வெளி வீதியை வலம் வருகிறார்.




சிறுவர் முதல் பெரியவர்கள் வருடாந்தம் நல்லூரானின் உற்சவத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பர் என்றால் மிகையாகாது. உற்சவ காலங்களிலே கோயில் மட்டுமன்றி முழு ஊருமே களைகட்டி இருக்கும்.

கோயில் வீதிகளில் சனத்திரளின் மத்தியிலே முருகன் அசைந்து அசைந்து வரும் காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். அங்கப் பிரதட்சனை செய்பவர்கள், அடி அழிப்பவர்கள், கற்பூரச்சட்டி எடுப்பவர்கள், காவடி எடுப்பவர்கள் அருள் வந்து ஆடுபவர்கள் என தம்மால் இயன்ற வழியில் நேர்த்திக்கடன் செலுத்தும் அடியவர்களும் வீதியில் நிறைந்திருப்பர்.

எவ்வளவு துன்பங்கள், கவலைகள், இழப்புகளைச் சந்தித்த போதும் ‘உன்னையல்லால் துணை எவரும் உண்டோ?’ என முருகனைத் தேடி லட்சக்கணக்கில் திரண்டிருக்கும் பக்தர்களைக் காண மெய்சிலிர்க்கும்.

ஈழத்துச்சித்தர் பரம்பரைக்கு களமாக அமைந்ததும் நல்லூர் தேரடி என்றால், எவராலும் மறுக்கமுடியாது... இதே நல்லூரின் வீதி தான், பல யாகங்களுக்கும் களமாய் அமைத்ததை எந்த ஒரு தமிழனும் மறக்க மாட்டான்..

நல்லூர்க்கந்தசுவாமி கோயிலின் உற்சவகாலங்களிலே கடை வீதிகளும் களைகட்டிப்போயிருக்கும். யாழ்ப்பாணத்தின் பிரபலமான ஐஸ்கிaம் கடைகள் எல்லாம் பெரிய பந்தல் அமைத்திருக்கும். உற்சவகாலங்களிலே அவற்றின் விற்பனையும் அமோகமாக இருக்கும். கடலைக்கடைகளும் சுண்டல்கடைகளும் தண்ணீர்ப்பந்தல்களும் வீதியெங்கிலும் நிறைந்து காணப்படும். இவை தவிர பலதரப்பட்ட வயதினரையும் கவரும் வகையிலே கடை வீதிகளை கட்டிக்காணப்படும்.

ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நல்லூர்த் திருவிழாவிலே அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளும் பொய்க்கால்க்குதிரை ஆட்டமும் தஞ்சாவூர் பொம்மைகளும் இன்றும் மனக்கண்ணில் பசுமையாய் நிழலாடுகின்றன. திருவிழாவிலே சுவாமி தரிசனத்தைப் பகுதிநேர வேலையாய் வைத்துக்கொண்டு கடலையைக் கொறித்து ஐஸ்கிaமைச் சுவைத்து அரட்டை அடிப்பதற்காகவே காத்திருக்கும் இளம்பருவத்தினரையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

அவையெல்லாம் அந்தந்தப் பருவத்திலே அனுபவிக்க வேண்டியவை. நல்லூர்த்திருவிழாக் காலத்தை அனுபவித்த ஒவ்வொருவருக்கும் அந்த நினைவுகள் பசுமையானவைதான். அதற்கு மதம் ஒரு தடையாக இருந்தல்ல என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

இம்முறை உற்சவ காலத்திலே வழக்கத்திற்கு மாறாக, சகல இனத்தவரும் கலந்துகொள்வதாலும், நவீன நாகரீகத்தை எளிதாகப் பற்றிக்கொள்ளும் இளஞ்சந்ததியினர் அதிகளவில் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுவதாலும் கோவிலுக்குள் செல்லும் போது உடுத்தியிருக்க வேண்டிய உடை தொடர்பாகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது.



இது வரவேற்கப்படத்தக்க விடயமாகும். கோயில் குளங்களோடும் இறைவழிபாட்டோடும் ஒன்றிப்போன வழங்கங்களை உடைய உயரிய பண்பாடு எங்கள் பண்பாடு.

வைகறைப்பொழுதிலே ‘முருகா’ எனக் கூவியழைத்து பெருவீதி மணலிலே உடல்புரண்டு பிரதட்டை செய்யும் எம்மவரின் பக்திமழையைக் காண்கையில் எங்கள் இனம்; எங்கள் மொழி; எங்கள் முருகன்; எங்கள் இறை நம்பிக்கை; இவற்றுக்கெல்லாம் ஏதுகுறையென இவ்வளவு காலமும் மார்தட்டிவந்தோம். இனியும் அப்படியே இருக்க வேண்டும் என்பதுதான் எம் யாவரது அவாவும் கூட. அது வேறு எவர்கையிலும் இல்லை. எமது கைகளிலேயே இருக்கிறது. முயன்றுதான் பார்ப்போமே?