Wednesday, November 12, 2014

எதிர்கால இலங்கையில் தொலைக்காட்சியுடன் நாம்

(முதலாவது உலக தொலைக்காட்சி தினத்தை முன்னிட்டு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் கலாசார அமைச்சும் இணைந்து நடாத்திய அகில இலங்கை ரீதியிலான கட்டுரைப்போட்டியில் திறந்த பிரிவில் மூன்றாம் பரிசு பெற்ற கட்டுரை..)


ஆறடியிலும் குறைந்த உயரம்....கிடுகால் மேய்ந்த கூரை... களிமண்ணும் சாணமும் கலந்து மெழுகிய தரை.. செங்கற்கள் அடுக்கிய சுவர்.. சமையலறைப்பகுதியில் ஒரு சில பாத்திரங்கள்... ஆங்காங்கே கொடிகளில் இடம் பிடித்திருக்கும் உடு புடைவைகள்.... கட்டொன்றில் நிலை கொண்டிருக்கும்  நேர்த்திரை தொலைக்காட்சி......விதைவைத் தாய்.. மகள்... மண் விளையாட்டே தஞ்சமான இரு பேரக்குழந்தைகள்... வீட்டை விட உயரத்தில் செய்மதித் தொலைக்காட்சிக்கான சமிக்ஞை வாங்கி...
இந்த விவரணம் கண்காணாத தேசத்துக் காட்சியை மனக்கண்ணில் உருவாக்குவதற்காக சித்தரிக்கப்பட்டதல்ல. இதுவே  நிகழ்கால இலங்கையின் யதார்த்தம். இலங்கையில் தொலைக்காட்சி  காலடி எடுத்து வைத்து ஆக 3 தசாப்தங்கள் மட்டுமே கடந்து விட்டிருக்கின்றன. அன்று ஊருக்கொன்றாய் எட்டிப் பார்த்த தொலைக்காட்சிகள் இன்று வீட்டுக்கு இரண்டிலும் அதிகமென நிலைகொண்டிருக்கின்றன.
ஆசியாவின் ஆச்சரியமாக மாறுதல் தொடர்பில் வீறு நடை போட்டுக்கொண்டிருக்கும் எம் நாட்டில் மின்சார இணைப்பு கிடைக்காத கிராமங்களிலும் கூட ஓர் ஆடம்பரக் குறிகாட்டியாக இருப்பதில் தொலைக்காட்சிகளே முன்னணி வகிக்கின்றன.|
இக்கட்டுரையிலே வட மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றைய இலங்கையின் யதார்த்தத்தை வெளிப்படுத்துதல் சிறப்பாக இருக்கும் என நான் எண்ணுவதில் தவறேதும் இல்லை என நம்புகிறேன்.
பிச்சை புகினும் தென்னிந்திய சின்னத்திரைத் தொடர்களைப் பார்த்தால் தான் அன்றைய நாள் மன நிறைவுடன் கழியும் என நம்பும் குடும்பங்கள் சடுதியாக அதிகரித்து வருகின்றன. முன்னொரு காலத்திலே கூட்டு வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருந்த வாழ்வியல் இன்று சின்னத்திரையில் தங்கிய தனிமை வாழ்வியலை அணுகும் நிலைக்கு வந்து விட்டது.  அன்று நாம் கொண்டிருந்த கூட்டு வாழ்வியலானது ஒன்றாய் கூடி உணவருந்துதல் தொட்டு முடிவெடுத்தல் வரை சகலதையும் உள்ளடக்கியதாக இருந்தது. அவ்வாழ்வியலிலே துயர்கள் பகிரப்பட்டன. உணர்வுகள் மதிக்கப்பட்டன. இன்பம் துளிர் விட்டு கிளை பரப்பியிருந்தது. குடும்பக்கட்டமைப்பு பேணப்பட்டது. சமூகப்பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.
இன்றோ நிலைமை தலை கீழாய் மாறிவிட்டது. என்று செய்மதித் தொலைக்காட்சி கூட்டு வாழ்வியலினுள் ஊடுருவத்தொடங்கியதோ அன்றே ஒட்டகத்துக்கு இடங்கொடுத்த கதையாக அந்த வாழ்வியல் தொலைந்து போகத்தொடங்கியது.
முதலாளித்துவப் பொருளாதாரம் வலுப்பெறும் இந்த நவீன உலகிலே அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளே நுகர்வுக் கலாசாரத்துக்கு வெகுவாக ஈர்க்கப்படுவன என்பதில் எதுவித ஐயமுமில்லை. இலங்கையும் அந் நிலைமைக்கு விதிவிலக்கல்லவே!
சனத்தொகை பெருகத்தொடங்கி விட்டது. தேவைகள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. வளங்கள் அருகத்தொடங்கி விட்டன. மனித வாழ்வு போட்டி மிக்கதாகவே மாறிவிட்டது. தனிநபர் மையச் சிந்தனைகள் பெருகத்தொடங்கி விட்டன. அவையே மனித வாழ்வின் குறிக்கோள்களாகவும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் எம்மவர் மத்தியில் வலுவாக வேரூன்றியிருந்த சக மனிதர் பற்றிய அக்கறை, அன்பு, ஆதரவு, இரக்கம், மதிப்பு , மரியாதை என யாவுமே செல்லாக்காசாகி விட்டன.
வட இலங்கையிலே சமூக நிலைமை இப்படியிருக்க, உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே. பெரும்பாலானவர்களுடைய தொலைகாட்சிகளிலே உள்ளூர் அலை வரிசையை பார்க்கும் வசதி கூட இருக்காது.       நாளைய நாட்டின் தூண்கள் என எப்போதுமே வர்ணிக்கப்படும் இளஞ்சமுதாயத்துக்கு இந்த உள்ளூர் அலைவரிசைகள் மீது எதுவித நாட்டமும் இல்லை என்று கூறினாலும் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
 புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போல, தென்னிந்திய தொலைக்காட்சிகளைப் பின்பற்றத்தொடங்கிய உள்ளூர் அலை வரிசைகள் தம் சுயத்தை இழந்து கொண்டிருக்கின்றன. அடிப்படையில் அவர்கள் பாசாங்கு செய்ய முயலும் இந்திய-ஆங்கிலத் தமிழ் மொழி நடையானது எம் கொஞ்சு தமிழ் மொழியின் அழகிய நடையைத் தொலைந்து போகச் செய்துவிட்டது.
இன்றும் கூட தூய தமிழை ஒரளவேனும் வழக்கொழியச் செய்யாமல் அடுத்த சந்ததிக்கு கடத்திச் செல்லும் பணியை அரச ஊடக நிறுவனங்கள் மட்டுமே செய்கின்றன எனலாம். ஆனாலும் மக்கள் மனங்களை வெல்வது தொடர்பில் தென்னிந்திய அலைவரிசைகளோடு இலங்கையின் உள்ளூர் அலை வரிசைகளால் போட்டி போட முடியவில்லை. இதே நிலைமை எதிர்காலத்திலும் தொடருமானால் உள்ளூர் அலைவரிசைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் சாத்தியக் கூறுகளே அதிகம் எனலாம்.
தொழில்னுட்ப ரீதியாக நோக்கினால், இந்த உள்ளூர் அலைவரிசைகள் செய்மதித் தொழில் நுட்பத்தால் உள்வாங்கப்படல் அவசியமாகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளை எல்லாம் ஊடுருவக் கூடிய வகையிலே அவற்றின் வீச்சு விரிவாக்கப்படலும் அவசியமாகிறது. இணையத்தொழில் நுட்பத்தை பாவிக்கத் தொடங்குவதன் மூலம் நிகழ்ச்சிகளை இணையம் மூலமும் ஒளிபரப்பலாம்.
நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையிலே, காலத்தின் தேவை கருதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மொழி நடையோ அல்லது கலாசாரமோ மாற்றப்படாத வகையில் நவீன போக்குடன் இணைத்து வழங்க முயற்சி செய்யலாம். 1990 களின் ஆரம்ப காலங்களில் அரச தொலைக் காட்சி ஒளிபரப்பிய பல தரமான நிகழ்ச்சிகள் இன்று மருந்துக்குக் கூட கிடைப்பதில்லை.
எம்மவர் வாழ்வியலாகட்டும்; இன்று அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளாகட்டும்; அவர் தம் வரலாறாகட்டும்; தொலைத்துக்கொண்டிருக்கும் பண்பாடாகட்டும்; சமயமாகட்டும், மொழி, இலக்கியங்களாகட்டும்; கலைப்படைப்புகளாகட்டும்; வேற்றுமையில் ஒற்றுமை காணும் பல்லின கலாசாரமாகட்டும்; அவற்றை எல்லாம் நவீனம் கலந்து வெளிப்படுத்துதல் இளைஞர்களையும் ஈர்க்கத்தொடங்கும்.
இலங்கையின் பாரிய சொத்தாகக் கருதப்படும் இயற்கை வளங்களையும் உயிர்ப்பல்வகைமையையும் பேணக்கூடிய வழியிலான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எதிர்கால நோக்கில் மிக மிக அவசியமானவை.
சுற்றுலாத்துறையில் அதிகமுதலீடுகளை மேற்கொண்டு வெளி நாட்டுப் பயணிகளைக் கவரும் முயற்சிகளில் ஈடுபடும் நாம் உள்ளூர்வாசிகளை எப்படிக் கவர்வது என்பது தொடர்பில் அதிக அக்கறை காட்டுவதில்லை. அந்த மாபெரும் பணியை முன்னெடுக்கவேண்டியது தொலைக்காட்சியேயன்றி வேறெதுவுமல்ல.

இவற்றையெல்லாம்  நவீனம் கலந்து செவ்வனே நடைமுறைப்படுத்தினால் மட்டுமே தொலைக்காட்சிகளால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் பங்களிக்க முடியும்.

சாரதாஞ்சலி கர்ணன்

எனது இலங்கை.. எனது எதிர்காலம்

ஐ. நா வின் இலங்கைக் கிளை நடாத்திய 'மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இலங்கை' என்ற தொனிப்பொருளிநாலான 'எனது இலங்கை.. எனது எதிர்காலம்' என்ற புகைப்படப் போட்டியில் எனது புகைப்படமும் முதல் நூறில் தெரிவாகி கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.

Monday, July 21, 2014

இலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி - 1

(தினக்குரலில் பிரசுரமாகிய என் முதலாவது கட்டுரை 2005, இதன் நாளதுவரையாக்கம் அடுத்த கட்டுரையில்..)

ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் ரீதியான உலகின் திறவுகோலாக ஆங்கிலம் இருக்கின்றது. உலகின் பல நாடுகள் ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் இலங்கை போன்ற சில நாடுகளில் தாய்மொழிமூலக்கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வரலாற்று பின்னணியை நோக்கும் போது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில்தான் இலங்கையின் பொருளாதார சமூக, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கது ஆங்கில மொழிமூலக்கல்வியின் அறிமுகம் ஆகும்.

இதற்கு 1831 ஆம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட கல்விச் சீர்திருத்தங்கள் வித்திட்டன. டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட எச்.டபிள்யூ.ஹோவஸ் என்பவரின் A தரப் பாடசாலைகள் நவீன அறிவுடன் கூடிய ஆங்கிலக் கல்வியைப் போதித்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பாடசாலைகளின் தோற்றம் ஆங்கில மொழிமூலக்கல்வியை இலங்கை எங்கனும் பரப்பியது. இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமாக இருந்த தமிழர்கள் 90 வீதமாக இருந்த A தரப் பாடசாலைகளில் கல்வி கற்றனர். பல்வேறுபட்ட காரணங்களுக்காக அதிகளவு கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள் சிங்கள பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ப்பிரதேசங்களிலேயே அதிகளவாக நிறுவப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமாகாணம், இலங்கையின் 20 வீதமான ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1972 ல் வடமாகாணத்தில், 6 மாணவர்களில் ஒருவர் ஆங்கில மொழிமூலப் பாடசாலையில் கல்வி கற்றிருந்த அதேவேளை, தேசிய சராசரி விகிதமாகிய 1:10 உடனும் ஏனைய மாகாணங்களின் விகிதங்களுடனும் ஒப்பிடும்போது இது மிக உயர்வானதாகும்.

1960 களில் இலங்கையின் பல்கலைகழகத்தில் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறைகளில் தமிழ் மாணாவச் சமூகத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. தமிழ்- விஞ்ஞான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு சிங்கள கலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிலும் அதிகமாக இருந்தது. நிர்வாக வேலைவாய்ப்புகளுக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தமிழர்களே முதன்மை வகித்தமையால், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அன்றைய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1943 இல், இன்று இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கராவின் கல்வி மறுமலர்ச்சி, சிங்கள சுயபாசைக்கு ஆதரவான அறிவாளிகளின் சமூகத்தின் மத்தியில் ஆங்கில மொழியாக்கம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களான கலாசார மற்றும் பொருளாதாரச் சுரன்டல்கள் பற்றிய தெளிவான அறிவை ஏற்படுத்தியது. இச் சமூகத்தின் அரசியல் சக்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை 1956 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்த்தியது.

சுதந்திரத்தின் பின்னரும் ஆங்கில அரச கரும மொழியக்கப்பட்டமையால் தவிர்க்கப்பட்ட சுதேச மொழியில் கல்வி கற்ற பெரும்பான்மைச் சமூகத்தின் நியாயமான மனத்தாங்கல்களை சிங்கள அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக உபயோகித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்த்தன ஆகியோர் ஆங்கில மொழியின் மேலாதிக்க அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சுதேசிய பொருளாதார மற்றும் கலாசாரத்தை விடுவிப்பதாக உறுதி கூறினர். இதே சமயம் தெற்கிலே வேரூன்றிய தமிழ்த் தலைமைகள் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கு, ஆங்கில மொழிக்கு ஆதரவான சிங்கள வாக்காளர் சமூகத்திடம் இருந்து உதவி கிட்டிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. 1956ஆம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் அரச கரும மொழியாக்கப் பட்டது. பிலிப் குணவர்த்தன மற்றும் டி.பி. இலங்கரட்ன ஆகியோர் கிராமிய பொருளாதாரம், கிராமிய முதலீட்டு விருத்தி, கிராமிய வங்கியின் முதலீடு, கிராமிய தொடர்பாடல், கிராமிய வர்த்தகம், கிராமிய நிலச்சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீள் கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிங்களம் அரச கரும மொழியாக்கப்படாதிருந்தால் இம்முயற்சிகள் சாத்தியப்பட்டிருக்காது.

இது உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும், தனிச் சிங்களச் சட்டம் இனவாதத்திற்கு வித்திட்டது. சாதிப்பாகுபாடுகள், சமூக வேற்றுமைகளை தோற்றுவித்தது. வேலையில்லாத கல்விச் சமூகத்தை உருவாக்கியது. அரச உத்தியோகங்களில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை வளங்கியது. இத்தனிச் சிங்களச் சட்டம் மற்றும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படல், 1960 களில் நடைமுறைக்கு வந்த தாய்மொழிமூலக் கல்விமுறைமை ஆகிய ஆங்கில மொழியை இரண்டாம் பட்சமாக்கின. மிஷனரிப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதுடன் எல்லாப் பாடசாலைகளிலும் தாய்மொழி மூலக்கல்வி நடைமுறைக்கு வந்தது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் பின்தங்கிய மற்றும் கிராமிய மக்கள் மத்தியில் ஆங்கிலம் மீதான ஒரு வெறுப்பை உண்டு பண்ணின. இதனால் இரண்டாம் மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் படிப்படியாக ஒதுக்கப்பட்டது.

கிராமியச் சிங்களவர்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையகம் வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதத்தினை கொண்டிருப்பினும், முதற்தர கல்வியினதும், ஆங்கிலத்தினதும் நன்மைகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனைய இனத்தவரிலும் பார்க்கத் தமிழர்களால் சிறப்பாக செயற்பட முடிந்தது. இதற்கான முக்கிய காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து வரும் மூத்த தலைமுறையினரின் கல்விப் பின்னணி இளைய தலைமுறையினரின் கல்வியில் செலுத்தி வந்த ஆதிக்கமே ஆகும்.

தனிச் சிங்களச் சட்டத்தின் குறுகிய நோக்கை இப்போது தான் அரசு உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய இளம் சமுதாயமும், இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆங்கில மொழியின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், மற்றும் பணரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மொழியாக மட்டுமல்லாது, உயர் கல்வி, பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான திறவுகோலாகவும் செயற்படுகிறது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியாது என்பது யதார்த்தம். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஆங்கில மொழிமூலக் கல்வியை பிரபலமடையச் செய்துள்ளது.

பிந்திய ஞனம் பெற்ற இன்றைய அரசு ஆங்கில அறிவு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உயர்தர விஞ்ஞான பிரிவிற்கும் 2002 இல் தரம் 6க்கும் 2003 இல் தரம் 7 க்கும் ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழிமூலக் கல்வி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு 84 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 40 பாடசாலைகளே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றன. 2002 இல் 150 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தப் பாடசாலையும் இடைநிறுத்தவில்லை. அத்துடன் 2003 ஆம் ஆண்டு மேலும் 300 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கிலமொழி மூலக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்தகைய திட்டங்கள் இலங்கையில் ஆங்கில அறிவுடையோர் சதவீதத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அத்துடன் விஞ்ஞானக் கற்கைகளைத் தாய்மொழியில் கற்கும் போது உருவாகும் தடைக்கற்களெல்லாம் இலகுவில் தகர்த்தெறியப்படும். இதனால் விஞ்ஞானம் இலகுவில் யாவரையும் சென்றடையும் அத்துடன் புத்தகங்கள் நற்றும் விஞ்ஞான தொழில்நுட்டபப்பதங்களை தாய்மொழிக்கு மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அத்துடன் விஞ்ஞானக் கல்வியானது தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுவதால் ஆங்கில மொழிமூலக் கல்வி விஞ்ஞானக் கல்வியை இலகுவாக்கும்.

ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவற்றுள் முக்கியமானது ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும். தனியே ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் தொகையே குறைவாக உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களை தேடுவது சற்றுக் கடினமான விடயமே. அத்துடன் ஆங்கில மொழி ஆசிரியர்களினால் ஏனைய பாடங்களில் பூரண விளக்கத்தை வழங்க முடியாமையும் முக்கியமானது. உயர்திறனற்ற ஆங்கில ஆசிரியர்களை வைத்து ஆங்கில மொழிமூலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படுத்தல் குறைக்கப்படுவதுடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தராதரமும் குறைக்கப்படும்.

இதனை நிவர்த்தி செய்ய இன்று அரசாங்கம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் பலவற்றை நடாத்திவருகின்றது. ஆனால் சுயபாஷைக் கொள்கையும் கன்னங்கரவின் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தபடாதிருந்தால், இன்று அரசு இத்தகைய பயிற்சிப்பட்டறைகளுக்கு செலவிடும் பல பில்லியன் ரூபாய்களை வேறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தரம் வாய்ந்தவர்களை பிறநாடுகளில் இருந்து வரவழைத்து உள்ளூர் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கலாம்.

இம்முயற்சிகள் வெற்றிகரமாக்கப்பட தனியார் மற்றும் அரச-சார்பற்ற துறைகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அரசின் கையில் இருக்கும் இலங்கையின் கல்வி அரசின் பிடி தளர்த்தப்பட்டு தனியார் துறையை நோக்கி தள்ளப்படலாம். கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிகப்பட இலவசக் கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போகும். இதனால் அக்கல்வியை பெறுவதற்கான செலவு எல்லோராலும் ஈடுசெய்யப்பட முடியாதது ஆகும்.

இன்றைய சூழலில் "ஆங்கிலமொழிமூலம்" எனும் பதம் கல்வித்துறையில் உள்ள வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர உத்தியாகும். தமது கல்வி நிலையத்தை பிரபல்யப்படுத்துதலையும், நன்கொடைத் தொகையை அதிகரித்தலையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டே மேற்கூறிய பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முடியாத, ஆங்கில மொழிமூலக் கல்வியை வீட்டில் வழங்க முடியாத நடுத்தரவர்க்கப் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர்மட்ட ஆங்கிலத்திறன் வழங்கலை கையாள்கின்றன. இதற்கான ஒரு காரணம் சகல பாடங்களும் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுதல். மற்றையது சம்பந்தப்பட்டவர்களின் சகல சமூகக் கலாச்சாரச் செயற்பாடுகளும் சூழலும் ஆங்கிலம் சார்ந்தனவாக இருத்தலாகும். இது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைமை ஆகும்.

ஒரு அந்நிய மொழியைக் கற்கும் போது மொழிமூலம் அதே மொழியாக இருத்தல் கற்றலை இலகுவாக்கும்.எவ்வளவு தூரம் அம்மொழி காதால் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கற்றலும் இலகுவாக்கப்படும்.ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் தத்தமது தாய் மொழியினாலேயே கற்பிக்கப்படும்.

இலங்கை போன்ற பல்தேசிய அடையாளங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் ஒரு பொது மொழி இருப்பது அவசியமாகிறது.அத்தகையதொரு பொது மொழியான ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தமை கண்கூடு.முன்னைய நாட்களில் ஆங்கிலமொழிமூலம் வழக்கில் இருந்தபோது வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களுக்கிடையில் ஒரு தொடர்பாடல் ஊடகமாக அது செயற்பட்டது.சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒரே வகுப்பில்,ஒரே பாடசாலையில் கல்வி கற்றனர்.அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஆங்கில மொழிமூலக் கல்வியே தீர்வாகாது. எமது தேவை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் இடையே இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியக்கூடிய ஒரு கல்வித்திட்டமே. ஒரு தேசிய அடையளத்தின் கீழ் தொழிற்படும் பல்வேறு இன அடையாளங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. இத்தகைய ஒன்றிணைந்த கல்வித்திட்டம் ஆங்கில மொழிமூலக்கல்வியினால் மட்டும் உருவாக முடியாது. சகல இனங்களுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் அதேவேளை தத்தமது தாய்மொழியில் கற்பற்கான சிறுவரின் பிறப்புரிமையும் மறுக்கப்பட முடியாதது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் கொண்டுள்ள வரலாற்றுத் தொடர்புடைமைகளை உற்று நோக்குகையில், அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆனால் தமிழ்-சிங்கள புரிந்துணர்வு என்பது தமிழ்-சிங்கள மொழிகளினால் உருவாகும் போது தான் அது வினைத்திறன் மிக்கதாகும்.

நன்றி: இளந்தென்றல்-2006
தமிழ்ச்சங்கம்
கொழும்பு பல்கலைக்கழகம்

Wednesday, July 16, 2014

இணைப்பின் ஆறுதல்..






அது ஒரு காலம்.. செய்தித்தளங்களை மட்டுமே சுற்றி வந்த மனதோடு தலைநகரில் இருந்தபடி இருதலைக் கொள்ளி எறும்புகளாய் தவித்துக்கொண்டிருந்தவர்களுள் நானும் ஒருத்தி.. வைத்தியசாலைகள் வரை தம் பயணத்தைத் தொடர்ந்தவர்களுக்கு சமூக வலைத்தளங்களினூடு நட்புகளின் பெரு உள்ளங்கள் சேர்ந்து சகோதர மொழி பேசும் உறவுகள் மூலம் என்னால் முடிந்தவரை உதவ முடிந்ததில் சிறு ஆறுதல். 

வவுனியா... அன்றைய கால கட்டத்தில் ஒரு ஆறுதல் மையம். வடக்கிலிருந்து வந்த தேவைகளும் தெற்கிலிருந்து வந்த தீர்வுகளும் சந்தித்த வன்னிப் பெரு நிலம் தான் இந்த வவுனியா என்று கூறுவதில் தவறேதும் இல்லை. 

நிவாரணக் கிராமங்களாய் பெரியார்களின் பெயர்கள் சூட்டப்பட்ட முகாம்களில் செறிந்திருந்தோர் பலவகை. சிறுவர்..முதியோர்..கர்ப்பிணித்தாய்மார்... கைவிடப்பட்ட, விதவையாக்கப்பட்ட பெண்கள்..வலுவிழந்தோர் என எண்ணிலடங்கா குழுமங்கள்.... கணிதம் கற்றவளாய் கூற விழைந்தால் அது ஒரு சிக்கலான இடைவெட்டுகளுடன் கூடிய தொடைத் தொகுதி எனலாம்.
குடும்பமாய் வந்தவர்களை விட ஆதரவின்றி வந்தோர் மிக அதிகம்... அவர்களை எல்லாம் எங்கு இணைப்பதென்பது பெருங்கேள்விக்குறி..
வவுனியாவில் நிலைபெற்றிருந்த ஆதரவற்றோர் இல்லங்கள் நிறைந்து வழியத்தொடங்கின. புதிய இல்லங்கள் பல உருவாகத்தொடங்கின.  அவையும் குறையின்றி நிறையவே செய்தன.

அன்றைய காலத்தில் வேறு எதையும் எண்ணத் தோன்றவில்லை. திக்கற்று நின்றவர்களுக்கு ஓரளவேனும் பாதுகாப்பாக இருக்க ஒரு புகலிடம். அத்தோடு  நிர்வாகத்தரப்பின் பணி முடிந்து போக இல்லங்களின் பணி ஆரம்பமாகியது. 

கட்டுப்பாடான கட்டமைப்புக்குள் பல காலம் வாழ்ந்து இன்னல்கள் பல கடந்து மரண வாயில் வரை சென்று மீண்டவர்களை இயல்பு நிலைக்குத் திருப்புதல் ஒன்றும் சாதாரணமானது அல்லவே? இல்லங்கள் செய்யும் பணியும் அத்தகையது தான். அதை எவரும் சுலபமாக எடைபோட்டு எள்ளி நகையாடி விட முடியாது. 

அந்த சிக்கலான ஆரம்பம் இன்று அரைத் தசாப்தங்களையும் தாண்டி தன் முடிவிலிப்பாதையிலே பயணித்துக்கொண்டிருக்கிறது. இல்லங்களை நிர்வகிக்கும் உள்ளங்கள் இனியும் சலித்துப் போகாமல் இருப்பதற்காக ஒரு பயிற்சிப்பட்டறை காலத்தின் தேவையாக இருந்தது. பொதுக்கூட்டமொன்றில் பலரின் கோரிக்கைக்கமைய ஏகமனதாய் தீர்மானிக்கப்பட்டது. 

உடனடியாய் மனக்கண்ணில் தெரிந்த வளவாளர் உள நல மருத்துவர் வைத்தியக் கலாநிதி  சிவசுப்பிரமணியம் சிவதாஸ். வன்னியின் துயரறிந்து தலைநகரிலிருந்து அதே சிக்கலான காலத்தில் வவுனியாவுக்கு தன் சுயவிருப்பிலே பணியாற்ற வந்தவர். பல தளர்ந்த மனங்களை புத்துணர்வு பெற வைப்பதில் அவருக்கு  நிகர் அவர் மட்டுமே.
சலிப்புற்ற அந்த உள்ளங்களை புத்துணர்வு பெறச் செய்வதற்காக தவசிகுளத்தில் அமைந்திருக்கும் சேவா லங்கா பயிற்சி மையம் தேர்வு செய்யப்பட்டது.  பராமரிப்பு குறைவாக இருந்த போதும் இயற்கை அன்னையின் அருட்கொடையாய் வீசிய காற்றின் சுகம் குறைகளை மறைய வைத்துவிட்டது.

தன் அனுபவப் பகிர்வை இணைத்து வைத்தியக்கலாநிதி சிவதாஸ் இரு பகுதிகளாய் நடாத்திய முழு நாள் பயிற்சிப்பட்டறையின் போது என்  ஆழப்பதிந்தவற்றை பகிர்வதில் சிறு மகிழ்ச்சி. 

“ஒரு அதிகாலைப்பொழுதிலே முதலாவது நபராக என்னிடம் ஒரு வயதான அம்மா வந்திருந்தார். வெளி நோயாளர் பிரிவிலே புதினம் பார்க்க வந்த ஆச்சிக்கு இலக்கத்துண்டைக்கொடுத்து பெயரைப் பதிந்து விட்டார்கள் போலும். இயலாக்கட்டத்தில் என்னிடம் அனுப்பி இருக்கிறார்கள் என ஊகிக்க முடிந்தது. உள்ளே நுழைய முன்னரே எனக்கு மன நோயொன்றுமில்லை; தீராத நாரி உழைவு மட்டுமே என தெளிவாகக் கூறிவிட்டார். அவரது குடும்ப வரலாற்றையும் கூட ஊகிக்க முடிந்தது. எப்போது இந்த வியாதி வந்தது என்று கேட்டேன். கடைசி மகளை ஜேர்மனிக்கு பயணம் அனுப்பிவிட்டு திரும்பி வரும்போது குண்டும் குழியுமாய் இருந்த பாதையில் மகிழூந்து துள்ளித் துள்ளி வந்ததன் விளைவு என்றார். என் ஊகம் சரியாக அமைந்தது. 

மனதுக்கும் உடலுக்கும் இருக்கும் அந்த மறைமுகத் தொடர்பை எப்படி அந்த மூதாட்டிக்கு புரிய வைப்பது என்பது பெரும்புதிராக இருந்தது. தொடர் சிந்தனையில் இருந்த என் எண்னத்தில் தோன்றியது ஒரு விபத்து பற்றிய விவரணம்.
அம்மா..! நீங்கள் உங்கள் கணவருடன் ஒரு சைக்கிளிலே பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுவோம். எதிரே வந்த இன்னொரு சைக்கிளுடன் உங்கள் சைக்கிள் மோதி நீங்கள் விழுந்து விட்டீர்கள் என்றால் என்ன நடக்கும் என்று கேட்டேன். பயமாக இருக்கும் . அதனால்  நெஞ்சு படபடக்கும் என்றார். பயம் எங்கே இருக்கிறது என்று கேட்டேன்? மனதிலே என்றார். நெஞ்சு எங்கே இருக்கிறது என்று கேட்டேன்? உடலிலே என்றார்.   நீங்கள் கடைசியாகச் செய்த கடின வேலை என்ன என்று கேட்டேன்? மாவிடித்தேன் என்றார். நவீனம் தலை தூக்கிய உடலில் ஒரு மூதாட்டி தான் மாவிடித்தேன் என்று கூறுவதே அவரது உடலின் உறுதியைத் திறம்படச் சொல்லும். அத்தனை உறுதி வாய்ந்த உங்களுக்கு எப்படியம்மா நாரி உளைவு இருக்கும்? உங்கள் மனதில் உள்ள கவலை தான் உங்களுக்கு அப்படித்தெரிகிறது என்றேன். அன்று போனவர் இன்றுவரை  என்னிடம் திரும்பி வரவில்லை.” 

இது உடலுக்கும் மனதுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைப் புரிய வைப்பதற்காய் வைத்தியக் கலாநிதி சிவதாஸ் சொன்ன கதை.
மனம்-உடல் இவை இரண்டும் ஒன்றுடனொன்று மறைமுகமாகத் தொடர்புபட்டவை. ஒருவன் மகிழ்வாய் இருத்தல் என்பது அவனது கையில் மட்டுமே இருக்கிறது என்ற மிகப்பெரிய உண்மையை நாம் உணர வேண்டும். நாம் எதைச் செய்தாலும் காதலோடு செய்ய வேண்டும். அப்போது சலிப்படைதல் இருக்காது என்பது தெளிவு.

 மனம் – உடல் பற்றியெல்லாம் நாம் ஆராய முன்னர் மன நோய்க்கும் மன நலக்குறைபாட்டுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாட்டிலே மன நோயானது 10% க்கு மேற்படாமலே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல. ஆனால் மன நலக்குறைபாடு எனும் போது இலங்கையில் அது ஏறத்தாழ 60-70%  ஆக இருக்கிறது என அறியமுடிகிறது.

ஒருவர் மகிழ்வாய் இருப்பதில் 10% புறக்காரணிகளும் 90 % அகக்காரணிகளும் தொடர்புபட்டிருக்கின்றன.
 எம் வாழ்வில் நாம் நீடித்த மகிழ்ச்சியைக் காண வேண்டுமாயின் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கிறது. ஒரு விடயத்துடன் இணைப்பை ஏற்படுத்தினால் மகிழ்ச்சி தானே கிடைக்கும் என்பது திண்ணம். அதே போல சுய மதிப்பை எப்போதும் உயர்த்திக்கொள்ள வேண்டும். அதாவது தன்னை, தனது நேர் மறை இயல்புகளைக் கணித்து தன்னைத் தானாக ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

மாற்றங்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளவும் பழக வேண்டும். இன்றும் நாம் கொண்டிருக்கும் இந்த நீடித்த துயருக்கு மாற்றங்களை அன்று ஏற்றுக்கொள்ளாமல் இருந்தமையும் ஒரு காரணம் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.
பரிவு, இரக்கம் போன்ற நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அணுகும் விடயங்களை பரிவுடன் அணுகும் போது மகிழ்ச்சி தானே வந்து சேரும். 

பெறுமானங்களைச் சேர்த்துக்கொள்ள நாம் பழக வேண்டும். இந்த பெறுமானங்களை பொருள், பதவி, உறவு, ஆன்மீகம் என்ற நால்வகை  அடிப்படைகளில் உருவாக்க முடியும்.  நவீன உலகிலே நாம் பொருளுக்கும் பதவிக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் கொடுப்பதில்லை. 

சில தசாப்தங்களுக்கு முன்னர் எம் பாட்டன் பக்தி மிஞ்சி மெய்யுருகி கடவுளை வழிபட்ட போது கிடைத்த உணர்வை,  எட்டிப்பார்த்து ஒற்றை விரலால் திருநீறு பூசி விரையும் இன்றைய வாரிசு உணர வாய்ப்பில்லை.
எப்போது பொருளுக்கும் பதவிக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்து உறவுக்கும் ஆன்மீகத்துக்கும் அதிகமாகக் கொடுக்க முயல்கிறோமோ அப்போது நீடித்த மகிழ்ச்சி எம் வீட்டு வாசலை எட்டிப் பார்க்கும். 

குறிப்பாக சிறுவர்களைப் பராமரிப்பவர்கள் என்ற ரீதியில் ஒவ்வொருவரும் நீடித்த மகிழ்ச்சியைப் பெற்றுக்கொள்வது மிக மிக அவசியமாகிறது. 

சிறுவர்களானவர்கள் பெரியவர்களிடமிருந்து குறிப்பாகச் சில விடயங்களிலே வேறுபட்டுக்காணப்படுகிறார்கள். அவற்றுள் மிகப் பிரதானமானவை தங்கியிருத்தலும் வார்த்தைப்படுத்தலும் என்றால் மிகையாகாது. வளர்ந்தவர்கள் நாம் ஒரு விடயத்தை வாய்மொழி மூலம் விளங்கப்படுத்துவது போல் சிறுவர்களால் செய்ய முடிவதில்லை. ஆதலால் அவர்களுடனான தொடர்பாடலில் உடல்மொழியின் வகிபாகம் மிக அதிகம் எனலாம். 

குழந்தையொன்று தான் பிறந்த்திலிருந்து 6 மாதங்கள் வரைக்கும் காண்பவர்களை எல்லாம் பார்த்து சிரிப்பதை நாம் அவதானித்திருப்போம். 6-7 மாதங்களைக்கடக்கும் போது தான் அதற்கு தன் தாய் மிக முக்கியமான ஒருவர் என்ற புரிதல் ஏற்படத் தொடங்குகிறது. 15 மாதங்கள் கடந்தவுடன் தாயைப் பிரிந்தால் அது நிரந்தர பிரிவு என முடிவு செய்து விடுகிறது. ஆதலால் தான் அப்பருவத்தில் தாயை தற்காலிகமாகப் பிரிய நேரிட்டாலும் கூட அதை ஏற்க முடியாமல் குழந்தை வீரிட்டு அழும்.
3-4 வயதாகும் போது அக்குழந்தை பாதுகாப்பான பிணைப்பை உருவாக்க முயல்கிறது. சாதாரணமாக தாயும் தந்தையும் சண்டைபிடித்தால் அதை பாதுகாப்பற்ற தன்மையாக குழந்தை உணர்கிறது. இந் நிலைமை குழந்தையின் உள ஆரோக்கியத்திலே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவு.

3-4 வயதாகும் குழந்தை தாயின் தற்காலிக பிரிவை உணரத்தொடங்கும்.  குழந்தையின் 5 வயது வரை தேர்ச்சி, வளர்ச்சி, விருத்தி, மகிழ்ச்சி என்ற நான்கு பரிமாணங்களிலே மூளையின் விருத்தி நடைபெறும். ஆனால் அதன் விருத்தி அத்தோடு நின்றுவிடாது. முன் மூளையின் விருத்தி 24 வயதிலே பூரணப்படுவதாக அண்மைய நரம்பியல் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த முன்மூளையின் விருத்தி தான் புத்தாக்க செயற்பாடுகளுக்கும் தலைமைத்துவம், முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற பண்புகளுக்கும் காரணமாக அமைகிறது.

மூளையின் பிரதான விருத்தி நடைபெறும் காலப்பகுதியிலே அதனை மேலும் தூண்ட வேண்டிய கடப்பாடு குறிப்பாக பெற்றோருக்கு இருக்கிறது.பலதரப்பட்ட விளையாட்டுகள் மூலமே அவ்விருத்தியைத் தூண்ட முடியும். தலாட்டுப்பாடல் தொட்டு எண்ணெய்/சூரியக் குளியல் வரை எம்மவர் மத்தியில் வழங்கி வந்த நடைமுறைகள் குழந்தையின் ஐம்புலன்களை தூண்டுவதாக அமைந்திருந்தன. ஆனால் நவீனம் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டியே தஞ்சமென வாழும் பெற்றோர் தம் வழியிலே குழந்தையையும் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். இது காலப்போக்கில் குழந்தைகளுடைய திறன் விருத்தியைக் கருத்தில் கொள்ளும் போது பின்னடவைத் தோற்றுவிக்குமோ என்ற அச்சம் அறிவியலாளர்கள் மத்தியிலும் எழாமலுமில்லை.

குழந்தையானது தன் ஒரு வயதின் பின்னரே நிறங்களை வேறுபிரித்து அறிகிறது. ஆனாலும் அசைவுகளை அவதானித்தபடியே இருக்கிறது. சிறு குழந்தைகள் கேலிச்சித்திர ஒளிப்படங்களை விரும்பிப் பார்ப்பதற்கும் அதுவே காரணம். அதுவே சுலபமாகி விட, பெற்றோர் தம் பிள்ளையை கேலிச்சித்திரத்துக்கு அடிமையாக்கி அதன் திறன் விருத்திக்கு தாமே எதிரியாகிவிடுகிறார்கள்.

குடும்பச்சூழலிலே வாழும் குழந்தைகள் தாம் வளரும் புறச்சூழலிலிருந்தும்  தம் பெற்றோரிடமிருந்தும் காலத்துடன் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்கிறது. அதன் மூலம் தான் வாழ்வில் சந்திக்கப்போகும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வழிகளையும் கண்டுகொள்கிறது. ஆனால் இல்லங்களிலே வளரும் சிறார்களுக்கு அத்தகையதொரு சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை என்றே கூறமுடிகிறது. மிக இறுக்கமான சூழலிலே வாழப் பழகிக்கொண்ட அச்சிறார்கள் வெளிச் சூழலை எதிர்கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது கண்கூடு.

பிள்ளையைத் தந்தை அடித்தால் அது அழுகிறது. அந்த அழுகையானது தந்தை அடித்ததால் ஏற்பட்ட வலியின் விளைவு என்பதற்குமப்பால் தான் தந்தையால் புறக்கணிக்கப்பட்டுவிட்டேன் என்ற எண்ணத்தால் கிடைத்த ஏக்கத்தால் வந்தது எனலாம். இல்லக்குழந்தைகள் மத்தியிலும் இந்நிலை காணப்படுகிறது. குடும்பச் சூழலில் வளரும் குழந்தைகளைக் காட்டிலும் இல்லக் குழந்தைகள் அதீத பரிவுடன் கவனிக்கப் படவேண்டியவர்கள்.
சிறுவர்களை அணுகும் போது பச்சாதாபத்துடன் அணுக வேண்டும். அவர்களது மன உணர்வுகளை நாமும் புரிந்தவர்களாய் கனிவுடன் வழி நடத்தினால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களைப் பயணிக்கச் செய்ய முடியும்.

இத்துணை சிக்கலான விடயங்களையும் நகைச்சுவையாய் பகிர்ந்த அன்றைய பயிற்சிப் பட்டறை சலிப்படைந்து போன உள்ளங்களை நம்பிக்கையூட்டி துடிப்புடன் மீள வைத்தது என்றால் மிகையாகாது.

Sunday, July 13, 2014

நீங்களும் சாதனையாளர்களே!

(முதியோர்,சிறுவர், மாற்றுவலுவோர் தின அறிமுக உரை - 2013)



rpWtu; > KjpNahu;> khw;W tYTilNahu;.
,d;iwa R+oypy; vkJ gpuNjrj;jpy; ,e;j %d;W tFg;GfSf;Fs;Sk; mlq;FNthNu ngUk;ghd;ikapdu;. ,tu;fs; vtu;f;Fk; risj;jtu;fs; my;yu;.
rpd;dQ;rpwhu;fs; jhd; vk; tho;Tf;F xsPA+l;Lgtu;fs;. fsq;fkpy;yh cs;sj;Jld; ep[ cyfpy; ehk; fhZk; flTsu;fs; ,tu;fs;.
jk; mDgt mwpthy; vk;ik top elj;jp tUgtu;fs; vk; %j;j Fbfs;. kfs; ntsp ehl;Lf;F Nghdhnyd;d iftpl;L Nghdhnyd;d Ngug;gps;isfSf;F ehd; nghWg;G vd cWjp $Wk; Ngj;jpaplk; ,Uf;Fk; ty;yikia NtW vtuplKk; ehd; fhztpy;iy.
jkJ Raeyj;jpw;fhf kdpj Neaj;ij kz;Zf;Fs; Gijf;Fk; tpe;ijahd kdpju;fs; epiwe;j ,g;G+Tyif risf;fhJ vjpu;nfhs;Sk; tPuu;fs; ,e;j khw;WtYTilNahu;. 
,tu;fSf;nfd jdpj;jdpahf cupikfs; cs;sd. mtw;iwg; Ngz Ntz;ba flg;ghL vkf;F ,Uf;fpwJ. mtru cyfpy; mij kwe;J Ngha;tpLk;  vk;ktUf;F me;j flg;ghl;il epidT+l;Ltjw;fhfNt ehk; ,e;j tpohitf; nfhz;lhLfpNwhk;.
,d;iwa ehs; cq;fs; ahtUf;Fk; xU ed;dhshf mika ,iwtid Ntz;LfpNwhk;.
cq;fs; ahtiuAk; kPz;Lk; xUKiw cskhw tuNtw;gNjhL ,e;j mitia cq;fsplNk ifaspj;J tpil ngWfpNwd;.
cyfkakhjiyAk; jhz;b Ntw;Wikfspd;wpa cyifj; Njhw;Wtpf;f xd;wpizNthkhf!