Monday, January 7, 2019

பசுமைப்பந்து இயக்கம்: சொல்லிய வண்ணம் செயல்!



அண்மையில் இலங்கை விமானப்படையினரால் இலங்கையிலேயே முதன் முறையாக மீள்காடாக்கத்தைக் கருத்தில் கொண்டு விதைப்பந்துகள்  வீசப்பட்டமை பற்றி ஊடகங்களிலே அறிந்திருப்பீர்கள். மாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் , பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை விமானப்படை ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து ஏறத்தாழ 5000 விதைப்பந்துகளை வடமத்தியமாகாணத்தின் நொச்சியாகம பகுதியிலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலே வீசின. இலங்கை விமானப்படையின் ஊடகப்பிரிவின் தகவலுக்கமைய இலங்கையின் வனப்பகுதிகளின் சதவீதத்தை  அதிகரிக்கும் நோக்கிலேயே இச் செயற்றிட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  அவ்விதைப்பந்துகளைத் தயாரித்து வீசும் நல்லெண்ணத்தை விதைத்த முன்னோடியாகத் திகழ்பவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.
சில வாரங்களுக்கு முன்னர் முக நூலிலே தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சூழலிலியல் தொடர்பான கற்கை நெறியொன்றின் செயன்முறைக் கையேட்டை எதேச்சையாகக் காணக்கிடைத்தது. அதில் விதைப்பந்து தயாரிப்பும் ஒரு செயன்முறையாக க் குறிப்பிடப்பட்டிருந்தது. சாதாரணமாக பௌதிக, உயிரியல் விஞ்ஞானப் பட்டப்படிப்பின் பாடத்திட்டங்களிலே நடை முறை விடயங்களை உள்ளடக்கியதான செயன்முறைகளை அரிதாக க் காணும் சூழலே இலங்கையில் நிலவுகிறது. இந் நிலையில் காலத்தின் தேவையை ஒட்டியதாக மிகவும் பயன்மிக்கதான ஒரு செயன்முறை  பல்கலைக்கழக மாணவர் மத்தியில்   அக்கையேட்டினூடு அறிமுகம் செய்யப்பட்டிருந்தமையைக் கண்டு அது பற்றி மேலும் தேடியபோது விதைப்பந்துகள் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இவ்விதைப்பந்துகளை வீசும் பாரம்பரியம் கிரேக்க காலத்திலேய பின்பற்றப்பட்டிருந்தது . ஆயினும் நவீன உலகிலே ஜப்பானில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலகின் பல பாகங்களிலும் குறிப்பாக இந்தியாவிலும் தாய்லாந்திலும் கூட இவ்விதைப்பந்துகளை வீசி மரம் நடும் முறைமைகள் மிகவும் பிரபலமானவை. இயற்கை முறைமைகள், சூழலைப்பாதுகாக் க க் கூடிய வாழ்க்கை முறைமைகள் என வேறொறு பரிணாமத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் சமூகங்கள் மத்தியிலே இவ்விதைப்பந்துகள் பிரபலமானவை.  மீள் காடாக்கல் எனவோ அல்லது மர நடுகை எனவோ மரங்களை நட்டு வளர்த்தல் போல பாதுகாப்பான வகையில் விதைகளை நடுகை செய்து எறிவதன் மூலம் மரங்களை வளர்க்கும் முறைமையே ‘விதைப்பந்து எறிதல்’ என அழைக்கப்படுகிறது. அத்தகையதோர் முறைமையை இலங்கையில் அதுவும் குறிப்பாக இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகம் செய்த பெருமை சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடை ச்  சாரும்.

இவ்விதைப்பந்துகள் பற்றி மேலும் அறிய வேண்டும் என்ற ஆவலுடன்  அவரைத் தொடர்புகொண்டபோது இந்த நற்செயற்றிட்டம் கருக்கொண்ட விதம் தொட்டு அதன் வெற்றிப்பாதை, எதிர்காலம், நிலைத்திருக்கும் தன்மை வரை தெளிவாக விளக்கியிருந்தார்.  1990-2005 வரையான 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் மொத்த வனப்பகுதி 17.74 சதவீதத்தால்  குறைவடைந்திருக்கிறது. அதே 15 வருட காலப்பகுதிக்குள் இலங்கையின் முதன்மைக் காடுகள் 35.02 சதவீத த்தால் குறைவடைந்திருக்கின்றன. பெருந்தோட்டங்களோ  12.81 சதவீத்தால் குறைவடைந்திருக்கின்றன. இத்தரவுகள் யாவும் செயற்கைக்கோள்களின் உதவியுடன் உலகளாவிய ரீதியிலே  பேணப்பட்டு இணைய வெளியிலே வெளியிடப்பட்டவையாகும்.  இலங்கையின் காடுகளைப் பொறுத்த வரையிலே அவை பெரும் அச்சுறுத்தல்களை எதிர் நோக்கி வருகின்றன. இத்தகையதோர்  நிலையில் காடழிப்பினால் நாமும் எமது எதிர் கால சந்தியும் எதிர் நோக்கி வரும், எதிர் நோக்கவுள்ள ஆபத்துகளை தவிர்க்க அல்லது குறைக்க வேண்டுமாயின் மீள்காடாக்கலும் மரங்களை மீள் நடுகை செய்தலும் அத்தியாவசியமானவை.   

இத்தகையோர் வருத்தமிகு சூழலில் தான் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின் எண்ணத்திலும் விதைப்பந்துகள் பற்றிய எண்ணக்கரு உருவானது. ஆரம்பத்திலே அவர் விதைப்பந்துகள், அவற்றின் தயாரிப்பு, பயன் பாடு தொடர்பிலான சகல விபரங்களையும் திரட்டினார். பின்னர் விதைப்பந்துகளைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தயாரித்த விதைப்பந்துகளைப் பரீட்சார்த்தமாக பல்கலைக் கழக வளாகத்திலேயே வீசி விதைப்பந்துகளின் தாங்கும் திறன், விதைகளின் முளைதிறனையும் பரீட்சித்தார். புளி, வேம்புபோன்ற மரங்களின் விதைகளைக் கொண்டு பத்து பத்து விதைப்பந்துகளைத்தயாரித்து வீசி,  மழை போன்ற தோற்றப்பாடை செயற்கையாக உருவாக்கி அவதானித்தார். விதைகள் முளைக்கத்தொடங்கின. வீசியெறிந்தவற்றுள் ஏறத்தாழ 90 சதவீதமானவை முளைத்தன. ஆதலினால் இச் செயற்பாட்டை பாரியளவிலே பிரதி பண்ண இயலும் என்றதோர் உறுதியான முடிவுக்கு வந்தார். விதை சேகரிப்பிலிருந்து  விதைப்பந்துகளை வீசியெறிதல் வரை இச் செயற்பாட்டின் ஒவ்வொரு அங்கமும் தவறி முயல்தலாலும் அனுபவத்தினாலுமே மேம்பட்டு வெற்றியளித்தன எனக் குறிப்பிடுகிறார் சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட். 

இலங்கை சிறியதொரு தீவாக க் காணப்படுகின்ற போதும் பிராந்தியங்களின் கால நிலை, மண்வளம்,  நீர் வளம் என்பவற்றுக்கிணங்க அதன் தாவரப்பரம்பல்கள்  வெகுவாக வேறுபடுவதுடன் பல்வகைமையில் செறிந்தும் காணப்படுகின்றன. இலங்கையிலே அதிகளவு பரப்பளவிலான முதன்மைக் காடுகளைக் கொண்ட மாகாணமாக வடபகுதி  திகழ்கின்றது என்பதிலும் எதுவித ஐயமுமில்லை. ஆயினும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அனுசரணையுடன் மீள்காடாக்கல் நடை பெறும் போது மிகச் சில தாவர இனங்களே பயன்படுத்தப்படுகின்றன. சில வேளைகளில் அவை மீள்காடாக்கல் நடைபெறும் பிராந்தியத்திலே இயற்கையாக வளரக்கூடிய தாவர இனங்களாகக் காணப்படுவதில்லை. அப்பிராந்தியங்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் தாவர இனங்களாகவே காணப்படுகின்றன. அத்தகைய தாவர இனங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றமைக்குப் பல நியாயமான காரணங்களும் இல்லாமலில்லை. அவற்றின் அரிமரப் பயன்பாடு, தாக்குபிடிக்கும் இயல்பு, துரிதமாக வளரும் தன்மை , முதிர்ச்சிக்காலம் போன்ற பல காரணங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

ஆயினும் இளமைக்காலங்களில்  நாம் காணும் இடங்க ளிலெல்லாம் நின்ற பல காட்டுமரங்களை இப்போது நாம் காண்பது அரிதாகிவிட்டது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கிராமங்களிலே காலத்துக்கு க் காலம் ஏதாவதொரு காட்டுப்பழமேனும் எம் கைகளுக்கு கிடைத்து விடும். அவை ஈச்சம்பழம், நாவற்பழம், ஏன்  பாலைப்பழமாக்ககூட இருக்கும். இன்று பல குழந்தைகள் இப்பழங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்க க் கூட மாட்டார்கள்.

 இலங்கையின் பல பகுதிகளிலே  மரங்களின் பெயர்கள், நீர் நிலைகளின் வடிவங்கள் போன்ற இயற்கையின் தோற்றப்பாடுகளை இணைத்ததாகவே ஊர்களின் பெயர்கள் காணப்படும். உதாரணமாக தேத்தாத்தீவு, இலுப்பைக்குளம், கருவல கஸ் வெவ போன்ற ஊர்களின் பெயரைக் குறிப்பிடலாம். அவை மரங்களின் பெயர்கள் என்பதைக் கூட அறியாத சந்ததியாக நாம் வாழும் காலமிது.

இத்தகையதோர் சூழலிலே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்  அணுகுமுறையானது நிலைத்திருக்க க் கூடிய எதிர்காலமொன்றை இலங்கையில்  தோற்றுவிக்க வல்லதாகவே எனது பார்வையில் தென்படுகிறது. முதலாவது விடயம் விதைப்பந்துகள் தயாரிக்கும் செயன்முறைபோன்றவற்றை அவர்  விஞ்ஞான பீடத்தின்  பாடத்திட்டத்திலே உள்ளடக்கியமையாகும். இது உரிய பாடத்தைக் கற்கும் சகல மாணவர்களுக்கும் கட்டாயமானதாகையால் அவர்களின் பங்கு பற்றலை உறுதி செய்யும். சாதாரணமாக உயிரியல், பௌதிக விஞ்ஞானப் பட்டதாரிகளாகி மாணவர்கள் பல்கலைக்கழகத்தை  வெளியேறிய பின்னர் தாம் கற்ற விடயங்களையும் கோட்பாடுகளையும் எங்ஙனம் நடைமுறை வாழ்க்கையிலே பிரயோகிப்பதென்ற ஐயம் மாணவர்களுக்கு எழும். இத்தகைய நடைமுறை விடயங்கள் கற்பிக்கப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சியும் வழங்கப்படும் போது அவர்களால் பட்டக்கல்விக்குப்பின்னரான வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள இயலும். நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுள்  நான்காவதான ‘தரமான கல்வி’ எனும் இலக்கின் மூன்றாம் , ஏழாம் அடைவுகளை அடவதற்கு வழி வகுக்கும்.

இரண்டாவதாக விதைகள் சேகரிப்பு தொடர்பிலான அவரது அணுகு முறை பற்றியும் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும்.  அவர் கற்பிக்கும் பிரயோக விஞ் ஞான பீடத்திலே பெரும்பாலான மாணவர்கள் சிங்கள் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அத்துடன் பெரும்பாண்மையானோர் பெண்பிள்ளைகளுமாவர். அம்மாணவர்களுக்கும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் விபுலாந்த அழகியற் கற்கை நிறுவனத்தின் மாணவர்களுக்கும் விடுமுறைக்கு வீடு செல்லும் போது விதைகளைச் சேகரித்துவரும் பொறுப்பு  வழங்கப்பட்டது. தற்போது காண்பதற்கு அரிதான மரங்களைப் பற்றி தத்தமது பெற்றோரிடமும் ஊரிலுள்ள முதியவர்களிடமும் கேட்டறிந்து அவற்றின் விதைகளைச் சேகரித்து அவற்றின் விபரம் தொடர்பாக வழங்கப்பட்ட படிவத்தையும் பூர்த்தி செய்துகொண்டு கொண்டு வருதலே அவர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பாகும். அவ்வாறு காண்பதற்கு அரிதாகிக்கொண்டு வரும் மரங்களின் விதைகளைக் கொண்டு விதைப்பந்துகளைத் தயாரித்து அம்மரங்களின் பரம்பலை அதிகரிப்பதோடு மட்டுமன்றி வனப்பகுதிகளைப் பெருக்கி காட்டு விலங்கிங்களின் வாழிடத்தையும் விஸ்தரித்து அவற்றின்  நிலைப்பை உறுதி செய்தலே  இச்செயற்பாட்டின் நோக்கமாகும்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளிலே பதினைந்தாவதான ‘நிலம் மீதான வாழ்வு’ எனும் இலக்கின் இரண்டாம், ஐந்தாம், எட்டாம் இலக்குகளை இலங்கை அடைவதில் இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும்.
 

சிறு துளி பெரு வெள்ளமென்பர்.மாணவர்கள் விடுமுறை கழிந்து பல்கலைக்கழகம் திரும்பிய போது கொண்டு வந்த இலட்சக்கணக்கிலான விதைகள் அப்பழமொழியின் தார்ப்பரியத்தை  விளக்கின. ஏறத்தாழ 130 பாரம்பரிய இனத் தாவரங்களின் விதைப் புதையலே கிடைக்கப்பெற்றது எனலாம். இளைஞர்களின் சக்தி அளப்பரியது  என்ற விவேகாந்தரின் கூற்றின் பின்னாலிருந்த தீர்க்க தரிசனம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.  ஒய்வு நேரங்களிலும் வார விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் இணைந்து விதைப்பந்துகளை உருவாக்கினர்.  விதைப்பந்துகளைப் பக்குவமாக உருவாக்குவதில் பெண்பிள்ளைகளின் பங்களிப்பு அதிகமாக இருந்து எனலாம்.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளில் ஐந்தாவதான ‘பால் நிலை சமத்துவம்’ என்ற இலக்கின் ஐந்தாம், எட்டாம் அடைவுகளை அடைவதற்கு இத்தகைய செயற்பாடுகள் நேரடியாகப் பங்களிக்கும். 


வனப் பாதுகாப்புத் திணைக்களமும் வன விலங்குகள் திணைக்களமும் கூட கை கோர்த்தன.  மாணவரின் சக்தியும் நல்லாசானின் வழிகாட்டலும் தற்போது  பிராந்திய ரீதியிலான பசுமைப்பந்து இயக்கமாக உருவெடுத்துள்ளது.

பெயரும் புகழும் தேவையில்லை. இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் கைங்கரியம் யார் குற்றியேனும் அரிசியாகட்டும் என்பதே சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமடின்   சிந்தனையாக இருக்கிறது,  அவரது  நல்லணுகுமுறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பலர் தாம் வாழும் பிராந்தியங்களிலெல்லாம் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள எத்தனித்து வருகின்றனர். இப்பசுமைப்பந்து இயக்கத்தை தேசிய ரீதியிலே முன்னெடுத்து இயற்கை அன்னையைக் காக்கும் நல்லெண்ணத்தை அடுத்தடுத்த சந்ததிகளுக்கும் கடத்துவதே தன் கனவு எனக்கூறி

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்  என்ற வள்ளுவன் வாக்கை  நிரூபிக்கிறார்
சிரேஸ்ட விரிவுரையாளர்  ரியாஸ் மொகமட்.

கல்வியின் வீரியம் பல மடங்குகளாய்ப் பெருகும் என்பதற்கும் மாற்றமொன்றை உருவாக்க, நாம் வாழும் வாழ்வை மாற்ற முயற்சிக்க உயர்கல்வி நிறுவன ங்களால் எத்தகைய பங்களிப்பைச் செய்ய இயலும் என்பதற்கும் இலவசமாக, மக்களின் வரிப்பணத்திலே இலங்கையில் நாம் கற்ற கல்வியை எங் ஙனம் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம் என்பதற்கும் இம்முயற்சி சிறந்தோர் உதாரணமாகும். இப்பசுமைப்பந்து இயக்கத்தின் பாதையில் நடந்து எம் வனங்களின் தலையெழுத்தையும் மாற்றிப் பார்ப்போமே?

சாணேற முழம் சறுக்கியதோ?


அண்மையில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட சுட்டி ஒன்று தொடர்பில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. அச்சுட்டி வேறெதுவுமல்ல. ‘ஜேர்மன் வொச்’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான  நீண்டகால கால நிலை அபாயச்சுட்டியேயாகும்.  1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 20 வருட காலப்பகுதியில் வெள்ளம், வரட்சி, புயல் போன்ற வானிலை சார் பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளின் பாதிப்பின் அடிப்படையில் இச்சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற கால நிலை உச்சி மா நாட்டிலே வெளியிடப்பட்ட உலகளாவிய கால நிலை அபாயச்சுட்டி 2019 என்ற அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இச்சுட்டி தொடர்பில் நான்காம் இட த்தை வகித்த இலங்கை 2019 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இது ஒரு முன்னேற்றத்துக்கான அறிகுறியன்று. இலங்கையின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துச் செல்வதற்கான அபாய அறிகுறியேயாகும். கால நிலைக்கும்.

அதிகூடிய வெப்பமும் எதிர்பாரா மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் என இலங்கை தொடர்ந்து பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந் நிலைமை தவிர்க்கமுடியாததாகி விட்டமையையும் உணர முடிகிறது.

கால நிலை மாற்றத்தை மனிதன் கையாளத்தவறும் ஒவ்வொரு கணமும் குறிப்பாக சிறுதீவுகளாக க் காணப்படும் நாடுகளின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்த வண்ணமே செல்கிறது.  உலகளாவிய சராசரி வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க இந்த மோசமான நிலைமைகள் உருவாகும் நிகழ்தகவும் அதிகரித்துச் செல்வதாக எதிர்வு கூறப்படுகிறது. ஆயினும் சில வானிலை நிகழ்வுகளுக்கும் கால நிலை மாற்றத்துக்குமான தொடர்புகளை இன்னும் விஞ் ஞான ரீதியாக உறுதி செய்ய முடியவில்லை. புவிக்கோளத்தின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க சில வானிலை நிகழ்வுகளின் மீடிறனும் செறிவும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் செல்கின்றமையை மட்டும் விஞ்ஞானத்தால்அவதானிக்க முடிகிறது.

அது மட்டுமன்றி ஒரு தனிப்பட்ட வானிலை நிகழ்விலே கால நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்டறிதலானது மிகவும் சிக்கலானதாகும். வேறுபட்ட பிராந்தியங்களில் நிலைமைகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. அவை தொடர்பான நீண்டகாலத்தரவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக க் காணப்படுகின்றன. கடந்த சிலகாலமாக  திடீரெனெ நிகழும் அதி தீவிர வானிலை  நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருவதும் உண்மையே. 

கால நிலை மாதிரிகளை உருவாக்கிப் பரீட்சித்து இத்தகைய அதீதமான வானிலை நிகழ்வுகளை எதிர்வு கூறுவதும் அவை   இடம்பெற்ற பின்னர் அவற்றுடன் ஒப்பிட்டு கால நிலை மாதிரிகளை மேலும் செம்மைப்படுத்துவதும் உலகளாவிய ரீதியிலே நடைபெற்ற வண்ணம் உள்ளன.  நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வானிலை அறிக்கைகள், அவற்றின் விவரணம் கூட இத்தகைய கால நிலை மாதிரிகள் எதிர்வு கூறுபவற்றை அடிப்படையாக க் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.  இத்தகைய கால நிலை மாதிரிகள் மூலம் புவி வெப்பமயமாதலினால் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் வெப்ப நிலை நீர்ச் சக்கரத்தை மேலும் செறிவுற்றதாக மாற்ற வல்லது. ஆதலினால் அதிகளவிலான ஆவியாதல் நடை பெற்று அதீத வரட்சியும் அவ்வாவியாதலுக்கேற்ற அதீத வீழ்படிவினால் பெரு வெள்ளங்களும் ஏற்படுகின்றமை சகஜமாகி விட்டது.வளி மண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படுவதையும் பல சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது.  இலங்கையில் நாம் அதிகளவில் கேள்விப்படும் சொற்களாக மாறிவிட்ட வெள்ள நிவாரணத்தையும் வரட்சி நிவாரணத்தையும் இக்கணத்தில் எண்ணிப்பார்க்க முடிகிறது. 

இவை யாவுமே வானிலை நிகழ்வுகள் நடை பெறும் நிகழ்தகவுகளை தினம் தினம் மாற்றிய வண்ணமே செல்கின்றன . 2016 ஆம் ஆண்டு  நிகழ்ந்த அதீத வானிலை நிகழ்வுகளை கால நிலை மாற்றத்தின் பார்வையில் அவதானித்து புதிய அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றம் என்பது மனிதனது செயற்பாடுகளின் விளைவே என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆக இந்த அதீத வானிலை நிகழ்வுகளுக்கும் மனிதனே காரணியாகிறான்.  அதீத வானிலை நிகழ்வுகளின் உருவாக்கம் கால நிலை மாற்றமன்றி சாத்தியமற்றது என்கிறது அவ்வறிக்கை.

உலகளாவிய கால நிலை அபாயச் சுட்டி அறிக்கை 2019 இன் அடிப்படையில், அதீத மழை வீழ்ச்சியென்பது தவிர்க்க முடியாததோர் நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாகிறது. தென்னாசிய, தென் கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்ட வானிலைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்பாராத அதீத மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளம், சரிவும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் தெளிவாக அறிக்கையிடப்பட்டிருக்கின்றன. இங் ஙனம் தனித்தனி அதீத மழை வீழ்ச்சியின் நிகழ்வு தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் காணப்படும் எனத் தெளிவாக எதிர்வு கூறப்படுகிறது.

ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆறுகள் பெருக்கெடுக்கின்றமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் ஏற்படும் பல பில்லியன் டொலர் சொத்தழிவும் வருடாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.   

எத்தகைய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கால நிலை மாற்றம் இத்தகைய அதீத வானிலை நிகழ்வுகளை உருவாக்குகிறது என்பதை அறியமுடியாதளவு இந் நிலைமை கற்பதற்குச் சிக்கலானது.

கடந்த வாரத்திலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகி வரும் வன்னி நிலப்பரப்பும் இத்தகையதோர் தோற்றப்பாட்டுக்கான உதாரணமாகும். திடீர் பேரனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றமையில் பல காரணிகள் தாக்கம்  செலுத்துகின்றன. போதுமான தயார்படுத்தலின்மை தொட்டு வறுமை போன்ற பாதிக்கப்படும் தன்மை, கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாத அபிவிருத்திச் செயற்பாடுகள் என அக்காரணிகள் இரு வெவ்வேறு அந்தங்கள் வரை வேறுபடுகின்றன. இயற்கையும் இரங்காத நிலையில் சாணேற முழம் சறுக்கிய கதையாக வன்னி மண் தொடர்ந்து அழிவுகளைப் பார்த்த வண்ணமே உள்ளது. 

தொடர்ந்து பெய்த செறிவான மழையாலும் வான் பாய்ந்த குளங்களாலும் கதிர் வந்த பருவத்தில் காணப்பட்ட  நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமான வயற்கானிகளை மூடி வெள்ளம் பாய்ந்தது. தொடர்மழைக்கு முன்னரே வளிமண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்தமையால் உருவாகிய நோய்களுக்கும் பீடைகளுக்குமாக 3 சதவீத மாதாந்த வட்டிக்கு கிருமி நாசினிகளைக் கொள்வனவு செய்து பிரயோகித்த விவசாயிகளையும் காண முடிந்தது. வட பகுதியிலே அதிகளவில் காணப்படுகின்றன என விமர்சிக்கப்பட்ட குறு நிதி நிறுவனங்களையும் தாண்டி இக்கிருமி நாசினி வியாபாரங்களும் கடன் விற்பனை மூலம் விவசாயிகளைச் சுரண்டும்   உத்தியைப் பயன்படுத்துகின்றமையைக் கண்கூடாகக் காண முடிந்தது. தனியார் வங்கிகள் ஒன்றும் சளைத்தவை அல்லவே. 1.5 சத வீத மாத வட்டி எனும் கவர்ச்சிகர விளம்பரத்துடன் விவசாயிகளைத் தேர்வு செய்து விவசாயக் கடன் எனும் பெயரில் வர்த்தக க் கடனை அவர்கள் பெற்றுகொள்ள ஆவன செய்கின்றமையும் கூடக் காண முடிந்தது. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ என்டர்பிறைஸ் லங்கா’ இலகு கடன் கொடுப்பனவுகள் பற்றி விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தி அவற்றை ஊக்குவிக்கும் சூழல் வன்னியின் விவசாயி- வங்கி உறவிலே காணப்படாத நிலைமையையும் உணர முடிந்தது. நடந்து முடிந்த அரசியல் குழப்பங்களும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களும் இத் தனியார் வங்கிகளின் நியாயப்படுத்தல்களாகின.  10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகள் ஆக க் குறைந்த மாதாந்த வட்டியாகிய 3 சதவீத வட்டியில கடனைப் பெற்றும் கடன் கொள்வனவை மேற்கொண்டும்  நகைகளை அடகு வைத்தும் தமது உழைப்புடன் சேர்த்து வயலிலே மேற்கொண்ட இலட்ச ரூபா பெறுமதியான முதலீடு ஒற்றை வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 

ஒவ்வொரு போகத்தின் போதும் காப்புறுதி செய்தல்  எனப்படுவது தேவையற்றதோர் செலவு என்ற கருத்தையே வன்னிப்பெரு நிலப்பரப்பின்  பெரும்பாலான பெரு விவசாயிகள்  அனேகர் கொண்டிருக்கின்றனர்.  இம்முறை பாரிய இழப்புகளைச் ச்சந்தித்திருக்கும் பெரு விவசாயிகளுள் பெரும்பாலானோர் தாம் விதைத்த நிலங்களுள் 10 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வீஸ்தீரணத்துக்கு காப்புறுதி செய்யாமல் விட்ட நிலைமையே காணப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஏக்கர் வயலுக்கு குறைந்த வட்டியுடனான விவசாயக்கடன்  அரசினால் வழங்கப்படுவதால் அதற்கு காப்புறுதி செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றத்தாலும் அதீத வானிலை நிகழ்வுகளாலும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இலங்கையிலே காப்புறுதியின் அவசியம் பற்றிய தெளிவு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை  இலங்கையின் விவசாயக் காப்புறுதிக்கான சேத மதிப்பீடு தொடர்பில் காணப்படும் சிக்கலான, நீண்ட நேரமெடுக்கும்  முறைமைகள் இலகு படுத்தப்பட வேண்டும். அண்மையில் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் விளம்பரம் ஒன்றை வவுனியா  நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் திரையிலே காணக்கிடைத்தது. ‘ட்ரோன்’  எனப்படும் சிறு வலவன் ஏவா வான ஊர்திகளைக்கொண்டு பெறப்படும் வான் புகைப்படங்களைக் கொண்டும்  அகச்சிவப்பு படங்களைக்கொண்டும் சேத விபரம், அவற்றின் விஸ்தீரணம், அகலாங்கு, நெட்டாங்கு ஆள்கூறுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கணித்து விவசாயக் காப்புறுதி வழங்கும் முறைமை இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமையை அவ்விளம்பரத்தினூடாக அறிய முடிந்தது.

உலகளாவிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது பசளை மானியத்தை விட கட்டாயக் காப்புறுதி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதெனலாம். இதில் அரசின் தலையீடு நிச்சயமாக அவசியமாகிறது. பெரு வெள்ளத்தால்  ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் பாரிய பொறுப்பு அரசையே சார்ந்ததாகி விடும். அச்செலவுடன் ஒப்பிடுகையில் கட்டாயக் காப்புறுதிக்காக அரசினால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு குறைவானதாகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். அல்லாவிடில் திடீர் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளும் மொத்த உள் நாட்டு உற்பத்தி, சமூகச் சுட்டிகளில் ஏற்படும் மாற்றமும் ஈடு செய்ய முடியாதனவாகிவிடுவன.

முன்னைய தசாப்தங்களைப் போலல்லாது வானிலையை ஒரளவு துல்லியமாக எதிர்வு கூறும் கால நிலை மாதிரிகள் புழக்கத்தில் வந்து விட்டன. விவசாயத்தை அடிப்படையாக க் கொண்ட பல நாடுகள் அம்மாதிரிகளை அடிப்படையாக க் கொண்டு விவசாயிகளின் பயிர் நாட்காட்டித் தரவுகளையும் இணைத்து வழிகாட்டும் செயலிகளை உருவாக்கி விவசாயிகளின் பயன்பாட்டுக்கென இலவசமாக வெளியிட்டிருக்கின் றன. 

ஆனால் வன்னியிலே இவ்வானிலை எதிர்வுகூறலில் நம்பிக்கை வைத்து, அதனைக் கருத்தில் கொண்டு தொழிற்படும் விவசாய சமூகத்தைக் காண்பது அரிதாகவே இருக்கிறது.வயல் நிலத்தின் மீது  இலட்சக் கணக்கிலான முதலீட்டை மேற்கொள்ள முன்னர் சிந்தித்துச் செயற்பட இவ்வெதிர்வுகூறல்கள் நிச்சயமாக விவசாயிக்கு உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  கால நிலை மாதிரிகளை ஒட்டி, விவசாயிகளுக்குப் பயன்படும் வகையிலான செயலிகள் பல அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  தகவல் தொழில்  நுட்ப விழிப்புணர்வை யாழ் மண்ணின் இளையோர் மத்தியில் பரப்பி வரும் ‘சுடர்’, ‘ஊக்கி’ போன்ற செயற்பாட்டு அமைப்புகள் இத்தகைய சமூகப் பொறுப்புள்ள செயற்பாடுகளில் இளையோரை ஈடுபடுத்த முன் வர வேண்டும்.

அரச இயந்திரங்களும் தம் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கால நிலை மாற்றத்தையும் அதீத வானிலை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்குத் தாக்குப்பிடிக்க க் கூடிய வகையிலே அவற்றை மேற்கொள்ளவேண்டும். மேலிருந்து கீழான கட்டளை நடைமுறைகளாலும்  மட்டுப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீடுகளாலும் இற்றைவரைப்படுத்தப்படாத திறன் விருத்தியாலும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை செவ்வனே நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கலாம். அரச தொழில் என்பது சவால்கள் நிறைந்ததே. களத்தின் நிலைமையை உயர் மட்டத்துக்கு  எடுத்துச் சொல்லி தேவைக்கேற்ற அபிவிருத்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதென்பது ஒவ்வொரு அரச ஊழியனதும் பொறுப்பாகும். இன்றேல் யாவருக்குமான அபிவிருத்தி என்பதும் , நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பதும் வெறும் வாய்ச்சொற்களாக காற்றிலே பறந்துவிடுவன. 

வீடு தொட்டு வீதி வரை சகல கட்டுமானங்களும்  காலநிலை மாற்றத்தையும் அதீத  வானிலை நிகழ்வுகளையும் தாக்குப் பிடிக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.  கட்டுமான வேலைகளில் ஈடுபடும் சகலதரப்பினரும் இத்தகைய தாங்குதிறன் மிகு கட்டுமானம் தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாண நகரையும் அதை அண்டிய பகுதிகளிலும்  காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட மழை  நீர் வடிகால்களின் அகலம், ஆழத்துடன் தற்காலத்தில் அமைக்கப்படும் அத்தகைய வடிகால்களின் அகலத்தையும் ஆழத்தையும் ஒப்பிட்டு நோக்கினால் தீர்க்கதரிசனம் மிகு அபிவிருத்தியின் தேவையையும் நிலையையும் உங்களால் உணர முடியும்.  

வடக்கின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் இன்றைய   நிலை எம் மத்தியில்  சிக்கலான பல வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பாரிய பொறுப்பை முன் வைத்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்து இயங்கினால் மாத்திரமே அவ்விடைகளுக்கான தேடல்களை எம்மால் ஆரம்பிக்க முடியும்!

கால நிலை மாற்றம் விதித்த சாபத்திலிருந்து இவ்வழகிய தீவை மீட்கும் பாரிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் கையிலுமே தங்கியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்திலேயே நாம் உயர் கல்வி வரை இலவசமாகக் கற்கிறோம்.  ஓரிரு வருடங்களேனும் நாம் கற்ற கல்வியை எம் தாய் நாட்டிலேயே பிரயோகித்தால் எதற்கும் சளைக்காத உறுதியான தேசமாக இலங்கையும் மாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.