Showing posts with label வரப்பு. Show all posts
Showing posts with label வரப்பு. Show all posts

Thursday, November 18, 2010

வரப்புயர வன்னி உயரும்!


‘வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்’

என்று அரசன் ஒருவனை ஒளவையார் வாழ்த்திப் பாடியதை நாம் அறிவோம். ‘வரப்புயர’ என்ற ஒற்றை வார்த்தையால் மன்னனை வாழ்த்திப் பாடிய ஒளவையின் மதிநுட்பம் வார்த்தைகளால் விபரிக்கப்பட முடியாதது.
விவசாய நிலத்தின் வரப்பை உயர்த்தினால், வயலில் நீர் அதிகளவு தங்கியிருக்கும். அப்போது நெல் விளைச்சல் உயரும். நெல் விளைச்சல் நன்றாக அமைந்தால் தான் மக்களின் வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும். மக்களின் வறுமை ஒழியும். அப்போதுதான் அரசு சிறக்கும். ஒரு அரசின் பெருமை, வரப்பு உயர்வதை ஆதாரமாகக் கொண்டே அமைந்து விடுகிறது என்பதை ஒளவையார் எளிமையாக விளக்குகிறார்.

வரப்பு உயர்ந்து அரசு சிறப்பதற்கு அடிப்படையாக அமைபவை ஆறுகளும் குளங்களுமே யாகும். அவற்றை உருவாக்குதல், உருவாக்கிய வற்றை காலத்துக்குக் காலம் புனர்நிர்மாணம் செய்து பாது காத்தல் ஒரு தேசத்துக்கு மிகவும் முக்கிய மானவை.
இலங்கை யைப் பொறுத்த வரையிலே கிளிநொச்சியை வடக்கின் நெற் களஞ்சியம் என்பர். கிளிநொச்சியின் வரப்புயர்வதில் பெருந் துணை புரிபவை இரணைமடு, கல்மடு, அக்கராயன், புதுமுறிப்பு போன்ற பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் ஏனைய பல நடுத்தர மற்றும் சிறிய ரகக் குளங்களுமாகும்.

கடந்த 3 தசாப்த காலமாக நீடித்து வந்த யுத்தத்தினால் இக் குளங்களும் பாதிக்கப் பட்டனவென் பதை எவராலும் மறுக்க முடியாது. போதிய பராமரிப் பின்றியும் வேறுபல காரணங்களாலும் அவற்றின் கட்டமைப்புகள் குலைந்து போயிருந்தன.




உடைப்பெடுத்த கல்மடு
குளத்தின் வெவ்வேறு கோணங்கள்


இத்தகைய தோர் நிலையில் அக்கொடூர யுத்தமும் முடிவுக்கு வந்தது. மீள் குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் இருக்கின்றன. கிடைக்கும் வளங்களை கொண்டு அபிவிருத்தித் திட்டங்களும் புனர் நிர்மாண வேலைகளும் துரித கதியிலே மேற்கொள்ளப்படுகின்றன.
வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் 38 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் இரணைமடுக் குளத்தின் நீர்ப்பாசனத் திட்டமும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 169 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் கல்மடுக் குளமும் புனரமைப்புச் செய்யப்படுவதற்கான திட்டங்கள் கட்டங்கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அவற்றின் சில கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டும்விட்டன.
அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டவற்றுள் இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அமையும் திருவையாறு நீர்ப்பாசனத் திட்டமும்,  ஒன்றாகும்.

இரணைமடு நீர்ப்பாசனத் திட்டம் 1902 ஆம் ஆண்டிலிருந்து கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அக்குளத்தின் இடது கரையினால் நீரைப் பெறும் 3ம் வாய்க்காலின் நீர்க்கட்டுப்படுத்திகளும் விழுத்திகளும் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டன.
3ம் வாய்க்கால் எனப்படுவது, வட்டக்கச்சியின் கோவிந்தன் கடைச் சந்தியிலிருந்து பூநகரியின் ஊரியான் வரை மிக நீண்ட தூரத்துக்கு இரணைமடு நீரைக் காவிச் செல்லும் வாய்க்கால் ஆகும்.
அதன் நீர்க்கட்டுப் படுத்திகளும் விழுத்திகளும் ஏறத்தாழ 38மில்லியன் ரூபா மதிப்பீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மிகவும் குறுகிய காலத்துக்குள் செவ்வனே முடிக்கப்பட்ட இவ்வபிவிருத்திப் பணி கிளிநொச்சி வாழ் மக்களின் வாழ்வை மேம்படுத்த வழிவகுக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

கல்மடுக் குளமானது கிளிநொச்சியி லிருந்து 18 km கிழக்காக அமைந்திருக்கிறது. 1951 – 1953 காலப் பகுதியிலே மீள்கட்டமைக்கப்பட்டது.
இக்குளத்தின் வான் கதவுகளூடு நீர் பாய்வது கிளிநொச்சி மாவட்டத்துக்காக இருக்கின்ற போதிலும் நீரேந்து பரப்பு முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது. 2003ஆம் ஆண்டளவிலே நிகொட் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் இக்குளம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.கடந்த காலங்களின் கொடூர யுத்தம் இக்குளத்தையும் விட்டு வைக்கவில்லை.
நீரியல் ரீதியான அல்லது கட்டமைப்பு ரீதியான செயலிழப்புக்கள் எவையுமின்றி இக்குளம் உடைப்பெடுத்த விடயம் நாம் யாவரும் அறிந்ததே.வான் கதவுகளை உள்ளடக்கிய அணையின் ஒரு பகுதி உடைக்கப்பட்டது.
நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர் முழுவதும் வெளியில் பாய்ந்தபோது மண்ணையும் அள்ளிச் சென்றது. அதனால் ஏறத்தாழ 10 சீ ஆழமான பள்ளம் உருவாகியது.
மீளக் குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தைக் கருதும் போது நீர்ப்பாசனத் திட்டங்கள் செவ்வனே அமைய வேண்டியது அவசியமாகியது.


கல்மடுக்குளத்தின் புனர்நிர்மாணம் -
மீள்நிரப்பப்படும் மண் அணை





இத்தகையதோர் நிலையில் கட்டமைப்பு முற்றாகச் சிதைக்கப்பட்ட கல்மடுக் குளத்தின் தேவையும் உணரப்பட்டது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியுதவியுடன் 169 மில்லியன் ரூபா நிதி மதிப்பீட்டில் என்ரெப் திட்டத்தின் கீழ் கடந்த ஒகஸ்ட் மாதம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. புதிய வான் கதவுகள் கட்டப்படும் அதேவேளை புனர்நிர்மாணப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தற்போது 40 சதவீதப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்ட நிலையில் அடுத்த வருட இறுதிக்குள் இத் திட்டம் பூரணப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகிறது.புவியீர்ப்பினாலான நீர்ப்பாசனத்தின் கீழ் முன்றாம் வாய்க்காலினால் 7500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலம் தற்போது பயன்பெறத் தொடங்கிவிட்டது.

கல்மடுக் குளத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் போது ஏறத்தாழ 1350 ஹெக்ரயர் விவசாய நிலம் வளம் பெறும் என்பதில் எதுவித ஐயப்பாடுமில்லை.கிளிநொச்சி விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட பிரதேசமாகும். இரணைமடு மற்றும் கல்மடு ஆகிய குளங்கள் மட்டுமன்றி ஏனைய பெரிய, நடுத்தர மற்றும் சிறியளவிலான குளங்களும் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டங்களின் வெற்றியில் தான் கிளிநொச்சி மண்ணின் உச்ச வளப் பாவனையும் தங்கியிருக் கிறது. சிறந்ததோர் எதிர்காலத்தை நோக்கிய கிளிநொச்சியின் பாதையில் இந்த நீர்ப்பாசனத் திட்டங்களின் அபிவிருத்தியும் ஒரு மைல் கல்லே!