Sunday, March 28, 2010

மனிதனும் மாறி வரும் காலநிலையும்

"மனிதன் தன்னை இயற்கையில் இருந்து வேறு படுத்திப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்"



நாகரிக உலகில் மனிதன் அடியெடுத்து வைத்த காலத்திலிருந்து மனிதனுக்கும் இயற்கைக்குமிடையிலான உறவு விரிசலடைய ஆரம்பித்தது. இந்த விரிசல் கைத்தொழில் புரட்சியுடன் துரிதமாக அதிகரித்தது. அதன் விளைவைத்தான் இன்று ‘காலநிலை மாற்றம்’ எனும் பெயரில் முழு உலகுமே அனுபவிக்கின்றது.

இயற்கையும் மனிதனும் தன் தன் வழியில் சுயாதீனமாக இயங்கத் தொடங்கிவிட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம். இதனால் ஏற்படும், ஏற்படப் போகும் இழப்பு இரு தரப்பினருக்கும் பொதுவானது. ஒன்றை ஒன்று சார்ந்த வாழ்வியல் முறைமையே எப்போதும் வரவேற்கப்படுகிறது. அதே சமயம் அதுவே நியதியெனவும் கருதப்படுகிறது.

தன்னலமிக்க மனிதனின் ஊனக் கண்ணுக்கு நியதிகள் தெரிவதில்லை. பொருளாதாரமும் வாழ்க்கைத்தரமுமே அடிப்படைத் தேவைகளாக மாறிவிட்ட இயற்கையை மதிக்காத நவீன உலகினுள் அடியெடுத்து வைத்தவனுக்கு இயற்கை கொடுத்த தண்டனை தான் ‘காலநிலை மாற்றம்’ என்பர்.

சூழல் பிரச்சினையாகிய காலநிலை மாற்றத்தின் விளைவுகளாகக் கருதப்படக் கூடிய வகையிலே நாம் அன்றாடம் பல விடயங்களை அவதானிக்கின்றோம். ஆனால் அவை பற்றி ஆழச் சிந்தித்து, அவற்றின் பின்னணி தொடர்பாக ஆராய முற்படுவதில்லை. அவசர உலகுடன் உழல்கையில் நேரமும் அதற்கு இடங்கொடுப்பதில்லை.

அண்மையில் கொழும்பில் பூமியின் வெப்பநிலை உயர்தல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்றை கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் முக்கிய வளவாளராக, பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ் கலந்துகொண்டிருந்தார். அவருடன் இலங்கையின் ஆய்வாளர்களும் வளவாளர்களாக இணைந்திருந்தனர். பிரதம விருந்தினராக விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திஸ்ஸ விதாரண அழைக்கப்பட்டிருந்தார். ஊடகவியலாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உட்படப் பலதரப்பட்ட விஞ்ஞான மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். ஆர்வலர்களின் சந்தேகங்களை வளவாளர்கள் தீர்த்து வைத்தனர். அத்துடன் ஆர்வலர்களும் வளவாளர்களும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கலந்துரையாடல் ஒரு களமாக அமைந்திருந்தது.

அசாத்தியமான பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு விடயங்களை இலங்கையிலும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்கள் தொடர்பாக ஆர்வலர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ஒரு குறித்த பருவ காலத்தில் மட்டுமே பரவும் நோயாகக் காணப்பட்ட டெங்கு, இன்று வருடத்தின் பல மாதங்களுக்கு நீடிப்பதற்கும் கூடப் பருவகால மழையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே காரணமெனக் கருதப்படுகின்றன. மழை, பருவம் மாறிப் பெய்ய ஆரம்பித்துள்ளதை விவசாயிகள் மட்டுமன்றி சாதாரண பொதுமக்களும் உணர்ந்துள்ளனர்.

அத்துடன் அண்மையில் வெளிநாட்டவரொருவர் பேருவளை கடற்பரப்பில் மூழ்கிய செய்தியும் காலநிலை மாற்றத்தின் அறிவிப்பாகவே தென்பட்டதாக பல வருடங்களாகச் சுழியோடிவரும் ஆழ்கடல் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்தார். பொதுவாக தை, மாசி மாதங்களில் இலங்கையின் தென் பகுதிக் கடற் பரப்பில் சுழியோடுவதற்குகந்த சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று அத்தகைய சூழ்நிலை மாறிவருவதையே அந்த வெளிநாட்டவரின் மரணச் செய்தி புலப்படுத்துவதாக அப்பொறியியலாளர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் யுனெஸ்கோ அமைப்பினால் விஞ்ஞானத்துறை அமைச்சர்களுக்கான கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்திலே காலநிலை மாற்றத்துக்கு உலக மனிதர்களின் மனப்பாங்கு பங்களிக்கிறதா என ஆராயப்பட்டது. ஆனால் கடந்த வருடம் ஒழுங்கு செய்யப்பட்ட அத்தகைய கூட்டத்தில் உலக மனிதர்களின் மனப்பாங்கு, காலநிலை மாற்றத்தை தோற்றுவிப்பதில் தனது பங்களிப்பை செய்கிறது என்பதை சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தன்னைப் பற்றி மட்டுமே கருத்தில் கொள்ளும் மனித மனப்பாங்குகள் மாற்றம் பெற்றாலன்றி வேறெந்த வகையிலும் காலநிலை மாற்றத்தை வினைத்திறன் மிக்க வகையில் கட்டுப்படுத்த முடியாதென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவத்தை உலகின் மூலை முடுக்குகளில் உள்ளவர்கள் வரை யாவரும் உணர வேண்டும். அதற்கு வெகுசனத் தொடர்பூடகங்கள் முன்னிலையில் நின்று செயற்பட வேண்டும்.

அபிவிருத்தியடைந்த நாடுகளிலே வசிக்கும் பலருக்கு காலநிலை மாற்றம் பற்றியோ அதனை ஏற்படுத்தும் காரணிகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியோ அறியும் ஆர்வம் மிக மிகக் குறைவு.

ஆனால் அபிவிருத்தியடைந்த நாடுகளே, தமது காபன் வெளியேற்றத்தின் மூலம் காலநிலை மாற்றத்துக்கு அதிக பங்களிப்பைச் செலுத்துகின்றன. மாறாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், காலநிலை மாற்றத்துக்கு மிகக் குறைந்தளவிலான பங்களிப்பை வழங்கியுள்ள போதும் அதிகளவிலான பாதிப்பை எதிர்நோக்கும் நாடுகளாகவும் காணப்படுகின்றன. காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் அழிந்து போகும் அபாயத்திலுள்ளன. இலங்கை போன்ற நாடுகளின் கரையோரப் பகுதிகளும் அழிந்து போய்விடும் நிலையிலேயே காணப்படுகின்றன. அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால் இலங்கையின் தலைநகர் கூட மத்திய பகுதிக்கு -கியோட்டோ உடன்பாடானது (றிiyoto ஜிrotoணீol) உலக நாடுகள் பச்சையில்ல வாயுக்களின் வெளியேற்றத்தை வருடாந்தம் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென வலியுறுத்தியது. அத்துடன் ஒவ்வொரு நாடுகளும் அவ்வுடன்பாட்டில் கைச்சாத்திட வேண்டியதும் கட்டாயமாகியது. அதிகளவில் பச்சையில்ல வாயுக்களை வெளிவிடும் முக்கிய நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டது.

அதேபோல, கடந்த ஆண்டு பலரும் எதிர்பார்த்திருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டிலே காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான எந்தவொரு உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை யென்பது வருந்தத்தக்க விடயமாகும். உலகமே அரசியல் மயப்படுத்தப்பட்ட நிலையில் காலநிலை மாற்றமும் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விஞ்ஞான நிகழ்ச்சித் தொகுப்பாளரான கலாநிதி போல் ரோஸ், அண்டார்டிகா பிரதேசத்தில் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகளுடன் இணைந்து பல வருடங்களாகப் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹேகன் மாநாட்டில் கலந்துகொள்வோர், அண்டார்டிக்காவில் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுடன் காலநிலை மாற்றம் தொடர்பாகக் கலந்துரையாடக் கூடிய வகையில் செய்மதித் தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

இது போன்ற பனிப் பிரதேசங்களில் செய்மதித் தொழில் நுட்பத்தால் நேரடித் தொடர்பாடல் வசதிகளை மேற்கொள்வதொன்றும் இலகுவான காரியமல்ல. பல சிரமங்களுக்கு மத்தியில் ஒளிப்பட உதவியுடன் நேரடியாகக் கதைத்தல் போன்ற பல வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. விஞ்ஞானிகளும் மாநாட்டிலிருந்து வரும் அழைப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். மாநாட்டில் பங்குபற்றியோர் மட்டுமன்றி முழு உலகுமே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என எதிர்பார்த்திருந்தது. எனினும் காலநிலை மாற்றத்தை ஆய்வுசெய்த விஞ்ஞானிகளுடன் கதைத்து நிலைமையை ஆராய வேண்டுமென்ற எண்ணம் எவருக்கும் தோன்றவில்லை. அழைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஞ்ஞானிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியது. தொடர்பாடல் வசதிகளைப் பெறுவதற்காக அவர்கள் எடுத்த முயற்சிகளும் பட்ட சிரமங்களும் விழலுக்கிறைத்த நீராயின.

இது நாம் ஒவ்வொருவரும் வருந்த வேண்டியதோர் விடயமாகும். நடந்தவை நடந்தவைகளாகவே இருக்க, இனியாவது நாம் எமது மனப்பாங்குகளை மாற்ற முயல வேண்டும். இல்லையேல், காலநிலை மாற்றத்தால் உருவாகப் போகும் புதுப்புது விளைவுகள் தவிர்க்க முடியாதனவாகிவிடும்.

காலநிலை மாற்றம் எனப்படுவது எங்கோ நடக்கும் விடயமல்ல. மனித நடமாட்டமுள்ள கண்டங்களின் செயற்பாடுகளால் மனித நடமாட்டமற்ற துருவப் பகுதிகளிலுள்ள பனி உருகுகிறது. துருவப் பகுதிப் பனிப் பாறைகளே உலகின் காலநிலையைப் பேணும் பிரதான காரணிகளாகையால், அவை உருக, பூமியின் காலநிலையும் மாறத் தொடங்குகிறது.

காலநிலை என்பது, நீண்டகால அடிப்படையில் அவதானிக்கப்படும் விடயம் என்பது மட்டுமன்றி இயற்கையுடன் தொடர்புடைய விடயமுமாகும். காலநிலையின் அடிப்படையிலேதான் மனித நாகரிங்கள் வளர்ச்சியுற்று மனிதன் தனது இருப்பை உறுதி செய்துகொண்டுள்ளான். ஆயினும், காலநிலையின் அடிப்படை பற்றி ஆழச் சிந்திக்கத் தவறியதால் கைத்தொழிலாக்கம், நவீன மயமாக்கம், தொழில் நுட்ப அபிவிருத்தி, இலத்திரனியல் அபிவிருத்தியென ஒன்றுக்கு மேற்பட்ட பல பரிமாணங்களில் அபரிமித வளர்ச்சி கண்டான்.

இந்நிலையில் தான் ‘ஓசோன் படை அரிப்படைதலும் பச்சையில்ல வாயுக்களின் அதிகரிப்பும் கண்டு பிடிக்கப்பட்டது. அபரிமித வளர்ச்சியின் வேகம் குறைந்தது. சூழலுக்குத் தீங்கை விளைவிக்காத வகையிலான பசுமை உற்பத்திகளின் தேவை அதிகரித்தது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு அந்தாட்டிக்கா பகுதியிலுள்ள பெரிய பனிப்பாறையொன்று, பனிப்படையிலிருந்து பிரிந்து விலகியது.

செய்மதித் தொழில்நுட்பத்தால் இந்நிகழ்வை உணர்ந்த ஆய்வாளர்கள், விமானங்களில் சென்று, பனிப்பாறை விலகுவதைப் பல கோணங்களில் ஒளிப்படம் மற்றும் புகைப்படம் எடுத்து ஆராய்ந்தனர்.

இந்நிலையில் தான் உலகம் காலநிலை மாற்றத்தை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதத் தொடங்கியது. பல்வேறு மட்டங்களிலும் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

தொடர்ந்து ஆறு மாதங்கள் பகலாகவும் அடுத்த ஆறு மாதங்கள் இரவாகவும் காணப்படும் துருவப் பகுதிகளிலே வருடக் கணக்காகக் கூடாரமிட்டு, காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுகளைப் பல நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. மனித சஞ்சாரமற்ற இந்தத் துருவப் பகுதிகளில் பல நாடுகள் தமக்கான உரிமையை நிலைநாட்டி ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

எமது அண்மை நாடான இந்தியா கூட அண்டார்டிகாவில் தக்ஷின கங்கோத்ரி எனும் பெயரிலே ஆய்வு நிலையமொன்றை அமைத்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

துருவப் பகுதிகள், பனிப் பிரதேசங்களாக இருக்கின்ற போதிலும், ஈரப்பற்றற்றவை உலர்ந்த வளிமண்டலத்தையுடையவை. அப்பிரதேசங்களிலே தங்கி ஆய்வினை மேற்கொள்வதற்கு அது தொடர்பான ஆர்வமும் விருப்புமுடையவர்களால் மட்டுமே முடியும்.

விஞ்ஞான ஆய்வு என்பது குறுகிய காலத்திற்குள்ளே நிகழ்த்தப்பட்டு முடிவுகளை வெளிவிடத்தக்க ஆய்வல்ல. ஆய்வுக்காலம், ஆய்வைப் பொறுத்து மாறுபடும். சில ஆய்வுகள் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். விஞ்ஞானம் எனும் பெருங்கடலிலே, இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவை ஒரு கைப்பிடியளவானவை மட்டுமே. ஆகையால் விஞ்ஞான ஆய்வுகள் விடப்பட்ட இடத்திலிருந்து தொடரப்பட வேண்டியவை. விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் நிரந்தரமானவையல்ல. காலத்துடன் அம்முடிவுகளும் புதுப்புதுக் கோணங்களில் பரிணமிக்கும். அவ்வாறு பரிணமிக்க முடியாத முடிவுகள் வழக்கொழிந்து போகும். இதுவே விஞ்ஞானத்தின் அற்புதம்.

இத்தகையதோர் நிலையை விஞ்ஞானம் கொண்டுள்ளதாதல் தான் பல விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் கடதாசிகளுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் முடங்கிப்போய்விடுகின்றன. விஞ்ஞானச் சங்கேத மொழியை விளங்கக் கூடிய சமூகத்தவரைச் சில ஆய்வுகள் சென்றடைகின்றன. மிகச் சில மட்டுமே சாதாரண பாமரன் வரை சகலரையும் சென்றடைகின்றன. இன்றைய காலகட்டதில் காலநிலை மாற்றமானது உலகளாவிய ரீதியிலான பிரச்சினையாக உருவெடுத்துள் ளது. அது மட்டுமன்றி இனிவரும் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதனதும் வாழ்க்கைப் பிரச்சினை யாகக் காலநிலை மாற்றம் மாறிவிடும் என்று எதிர்வு கூறக்கூடிய அளவுக்கு அது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

உலகின் பொருளாதார சமூக நிலைமைகளில் பெருஞ் செல்வாக்கு செலுத்தும் காரணியாகவும் இக்காலநிலை மாற்றம் தி!றிவருகிறது.

அண்மைக் காலங்களில் பரவலாகப் பேசப்பட்டு வந்த உலகளாவிய நிதி நெருக்கடியை விட அதிகளவிலான நிதி நெருக்கடியைக் காடழிப்பு தோற்றுவித்துள்ளது. ஆனால் அதை எவரும் உணர்வதில்லை.

இயற்கை வளங்கள் மனிதத் தலையீடு இன்றி இயற்கையாகவே கிடைக்கப் பெறுவதால் அவை இலவசமானவை என்று நாம் கருதுகின்றோம். ஆகையால் அவற்றின் பண ரீதியான பெறுமதி பூச்சியமாகவே கருதப்படுகிறது. இயற்கை வளங்களுக்கான பண ரீதியான பெறுமதியைக் கணிக்க எத்தனிக்கும் போதே எவ்வளவு பெரியளவிலான நிதி அநியாயமாக விரயம் செய்யப்பட்டுள்ளது என்ற உண்மை விளங்கும். இன்று முழு உலகுமே வர்த்தகமயப்பட்டமை தான், இயற்கை வளங்களின் பெறுமதியையும் பண ரீதியாக அளவிட வழிகோலியது. இயற்கை வளங்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் பயன்களை அடிப்படையாகக் கொண்டே இப்பெறுமதி கணிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட வளங்களை மீள உருவாக்க முயல்கையிலேயே, அவ்வளங்களின் உண்மைப் பெறுமதி விளங்குமென அனுபவசாலிகள் கூறுவர். இந்நிலை தான், சூழல் பொருளியல் எனும் புதியதோர் துறை தோன்றுவதற்கும் வழி வகுத்தது.

இலங்கையின் கடற்பரப்பு ஆழங் குறைந்ததாகையால், கடல் வாழ் உயிரினங்களின் வளம் இங்கு ஏராளம் இலங்கை பவளப் பாறைகளுக்கும் பெயர்போனது. கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்குள் இந்த அழகிய பவளப் பாறைகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

அதற்கு பவளப் பாறைகளின் தொடர் அகழ்வும், 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தமுமே காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

இதையடுத்து, இயற்கை வளங்களை மீள உருவாக்குவதில் ஆர்வமுடைய அரச சார்பற்ற நிறுவனமொன்று பவளப் பாறைகளை ஒத்த சீமெந்துப் பாறைகளை கடலுக்கடியில் அமைத்து கடல் வாழ் உயிரினங்கள் வாழ்வதற்குகந்த சூழலை ஏற்படுத்தியது. அப்படியிருந்தும் இயற்கையான பவளப் பாறைகளில் பெருகுமளவிற்கு செயற்கை பாறையில் கடல் வாழ உயிரினங்கள் உடனடியாகப் பெருகவில்லை. அத்துடன் இத்திட்டத்திற்கான முதலீட்டுச் செலவும் பராமரிப்புச் செலவும் மிகமிக அதிகமாகும். அச்செலவுகளை உணர்கையிலேயே அழிந்த பாறைகளின் பெறுமதி விளங்குவதாக அந்தத் திட்டத்தில் பணிபுரிவோர் தெரிவித்திருந்தனர்.

அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பொறுத்தவரை யிலே, அவை பண வசதி படைத்தவை. எந்த ஒரு அனர்த்தத்தை எதிர்கொண்டாலும், அதிலிருந்து இலகுவாக மீளக்கூடியவை. ஆனால் இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அவ்வாறானவை யல்ல. 5 வருடங்களுக்கு முன் இலங்கையைத் தாக்கிய ஆழிப் பேரலை அனர்த்தத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நாம் முற்றாக மீளவில்லை. இத்தகைய நிலை அபிவிருத்தியடைந்த நாடுகளில் காணப்படுவதில்லை. விரைவிலேயே அவை தம்மை சுதாரித்துக்கொள்ளும்.

எம் ஒவ்வொருவரினதும் மனப்பூர்வமான, ஒன்றிணைந்த பங்களிப்பின் மூலமே இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ளலாம். சிறந்த வினைத்திறன் மிக்க அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்களை பொதுமக்களின் பங்களிப்புடன் தான் உருவாக்க முடியும்.

சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு சமூகத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தும் வகையிலே தேசிய ரீதியிலான கொள்கைகளும் சட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது அன்றாடச் செயற்பாடுகளிலே மாற்றத்தைக் கொண்டு வருவதன் மூலமே, பல்வேறு வகைகளில் எமது பங்களிப்பைச் செலுத்திச் சூழலைப் பாதுகாக்க முடியும்.

ஆடம்பரமான வாழ்க்கை முறைமைகளைத் தவிர்த்து எளிமையாக வாழப் பழகவேண்டும். எந்த ஒரு பொருளையும் பாவனையைக் குறைத்தல், மீள்பாவனை செய்தல், மீள் சுழற்சி செய்தல் ஆகிய தத்துவங்களுக்கமைய பாவிக்க வேண்டும். சிறிய பொலித்தீன் துண்டாயினும், குப்பைகளைக் கண்டபடி வீசியெறியாது. அவற்றிற்குரிய இடத்திலே போடவேண்டும். வீடுகளில் தேவையற்ற மின்சக்திப் பாவனையைக் குறைக்க வேண்டும். தேவையற்ற வாகனப் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். இத்தகைய சிறிய செயற்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் கைக்கொள்ள முயற்சித்தாலே, காலநிலை மாற்றம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

இவை யாவற்றிற்குமப்பால், சகல வெகுசனத் தொடர்பூடகங்களும் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் பொதுமக்களுக்கு அறிவூட்ட ஒன்றிணைய வேண்டுமென்பதே காலத்தின் தேவையாகும்.

No comments:

Post a Comment