Showing posts with label ஆட்சி. Show all posts
Showing posts with label ஆட்சி. Show all posts

Sunday, February 3, 2019

ஊழலில்லா உலகு?

யாவரையும் உள்ளடக்கிய சுபிட்சமான உலக அபிவிருத்தியும் நிலையான, தாங்கும் சக்தி மிக்க புவித்தொகுதியும் என்ற  நெடுந்தூரக் கனவுடன் நாம் நிலத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் காலம்  இது. புதிய மாற்றம் என்பது சாத்தியமானதே. ஆயினும் எமது கனவை அடைவதற்கு நாம் பல்வேறு வழி வகைகளைக் கையாள முடியும். இனிமேலும் இப்பூமிப் பந்தை அழுத்தங்களுக்கு ஆளாக விடாமல் நாம் தற்போது வாழும் வாழ்க்கைப் பாங்கை எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கொண்டு செல்ல வேண்டும். அல்லது துரித பொருளாதார வளர்ச்சியினூடு நிலைத்து நிற்கும் தன்மையை எய்த வேண்டும். அல்லது சகல வழிகளிலும் இறுக்கமான நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.  அதுவுமில்லையேல் சாதுரியமான முறையிலான நிலைமாற்றத்தை உருவாக்க வேண்டும்.
இத்தகைய நாங்கு வழிமுறைகள் தொடர்பிலும் இயக்க மாதிரிகள் உருவாக்கப்பட்டு நோர்வே நாட்டிலுள்ள பல்கலைக்கழகமொன்றினால் பரீட்சிக்கப்பட்ட து. அப்பரீட்சிப்பு அறிக்கையின் முடிவு  சற்று அதிர்ச்சியூட்டுவதாகத் தான் இருந்தது.  உலகளாவிய ரீதியிலே தற்போதைய வளர்ச்சிக்கொள்கையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை  2030 ஆம் ஆண்டளவில் அடைதலானது சாத்தியமற்ற ஒன்றாகவே  காணப்படுவதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. 
துரித வளர்ச்சியை நாடும் போது பொருளாதார, சமூக விடயங்களுடன் தொடர்புடைய இலக்குகளையும் அடைவுகளையும் அடைய முடியும். ஆயினும் சுற்றுச்சூழலை விலையாக க் கொடுத்தே  அவற்றை அடைய முடியும்.
ஆயினும் நாம் சாதுரியமான நிலை மாற்றத்தை நாடும் போது பெரும்பாலான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை 2030 ஆம் ஆண்டளவிலே அடைய முடியும். சாதுரியமான நிலை மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் நாம் பின்வரும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முதலாவதாக புதுப்பிக்கத்த க்க சக்தி வழிவகைகளின் வளர்ச்சி துரிதமாக்கப்பட வேண்டும்.  அடுத்ததாக உணவுச் சங்கிலிகளின் உற்பத்தித்திறனும் துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.  மூன்றாவதாக வறுமை மிகு நாடுகளில் புதிய அபிவிருத்தி மாதிரிகள் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.  அடுத்து சமத்துவமின்மை குறைக்கப்பட வேண்டும். இறுதியாக யாவருக்குமான கல்வி, பால் நிலை சமத்துவம், குடும்பத் திட்டமிடல் ஆகியவற்றின் மீதான முதலீடுகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

  நாடளாவிய ரீதியிலும் சரி, பிராந்திய ரீதியிலும் சரி உலகளாவிய ரீதியிலும் சரி  மேற்குறிப்பிட்ட விடயங்களை முன்னிறுத்தி ஆட்சித்துறை செயற்படுமாயின்  ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பிராந்தியமும் கூட நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலகுவாக இருக்கும்.

இத்தகையதோர்  சாதுரியமான நிலை மாற்றம் உருவாவதற்கு நல்லாட்சி மிக மிக அவசியமாகிறது.  உதாரணமாக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களின் வளர்ச்சியைத் துரிதமாக்கவேண்டியதான தொரு சூழலில் நிலக்கரி மூலம் மின்னை உற்பத்தி செய்யும் புதிய செயற்றிட்டமொன்றை ஒரு நாடு அறிமுகம் செய்யுமாயின் எவ்வாறு அது தனக்கான இலக்கை எய்த முடியும்? அந்த செயற்றிட்டம் உருவாக உயர் மட்ட கொள்கைத் தீர்மானம் முக்கியதான தோர் இடத்தைப் பிடித்திருக்குமல்லவா? மாறாக  ‘எமது நாடு இனிமேல் புதுப்பிக்கத் தக்க சக்தி வளத்தை மாத்திரமே  பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும்’ என்பது போன்ற கொள்கைத் தீர்மானம் காணப்படும்  நாட்டிலே நிலக்கரி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்த்திட்டத்தை  நடைமுறைக்குக் கொண்டு வரத்தான் இயலுமா?
இவ்வினாக்களுக்கான விடைகளாய் நாம் ஒவ்வொருவரும் தேடவேண்டிய தருணம் இது.
அண்மையிலே டென்மார்க் னாட்டின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட பிரசுரம் ஒன்றிலே  எண்முறை சார் முறைமைகளினூடாக எங் ஙனம் தமது அரசு ஊழலைக் கையாள விழைகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன்  ஊழலுக்கு எதிராகப் போரிடுவதற்காக போது தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் போது  ஆண்களும் பெண்களும் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது தொடர்பிலும் அப்பிரசுரம் விளக்கியிருந்தது. ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் தொடர்பிலும் அதில் விளக்கப்பட்டிருந்தது.  இவ்விடயப்பரப்பிலே ‘இரட்டை சமத்துவமின்மை’ என்ற பதம் விளக்குவதானது, ஊழலினால் விகிதசமனின்றி பாதிக்கப்படுபவர்களுக்கு பொதுவாக எண்முறை ஆயுதங்களை (சாதுரிய கைத்தொலைபேசி, இணையம் )அணுகும் கிடைக்காமல் இருக்கும் என்பதாகும்.  ஆதலினால் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் பால் நிலை சார் கூருணர்வு மிக்கவையாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்சி பற்றியும் நல்லாட்சி பற்றியும்  ஆராயும் போது ஊழலும் ஊழலொழிப்பும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவையாக் காணப்படுகின்றன.
ஊழல் பலவகைப்படும். அவற்றிலொன்றே இலஞ்சமாகும். ஆயினும் எம்மில் பெரும்பாலானோர் ‘ஊழல்’ என்றால் இலஞ்சம் என்றே பொருள் கொள்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரசுரமானது சிறியளவிலான ஊழலையும் பாரியளவிலான ஊழலையும் பிரித்தறிகிறது.  ஏனெனில் அவை ஒவ்வொன்றையும் ஒழிப்பதற்கு வேறுபட்ட ஆயுதங்கள் தேவைப்படுகின்றன.
 நவீன உலகிலே ஊழலை ஒழிப்பதற்கு நான்குவிதமான  வழிகளைக் கையாளலாம் என அப்பிரசுரம் குறிப்பிடுகிறது. அவையாவன, திறந்த தரவுகளும்வெளிப்படைத்தன்மையும், இலத்திரனியல் ஆட்சி மூலம் ஊழல் நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களைக் குறைத்தல், கட்டச் சங்கிலித் தொழில் நுட்பம் மூலம் உரிமைகளை உறுதி செய்தலும் இடைத் தரகர்களை இல்லாமல் செய்தலும், கூட்ட முதலீட்டினூடு ஊழலை எதிர்த்துப் போராடுபவர்களை ஊக்குவித்தல் என்பனவாகும். 
கடந்த வருட இறுதிப் பகுதியில் டென்மார்க்கின் கோப்பன் ஹார்கனில் நடைபெற்ற சர்வதேச ஊழல் ஒழிப்பு மா நாட்டிலே இப்பிரசுரம்  முன்னளிக்கப்பட்டது.   .
அபிவிருத்தியடைந்த நாடுகளிலே இவை யாவும் சாத்தியமாக இருந்தாலும் வளார்முக நாடுகளிலும் வறிய நாடுகளிலும் நிலைமை தலை கீழாகவே உள்ளது.
யாவற்றுக்கும் முதன்மையான இயற்கை வளப்பரம்பலை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் எண்முறைத் தொழில் நுட்பத்துக்கான அணுகலில் பின்னிற்கிண்றமை தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இந் நிலைமையிலிருந்து வெளியே வருதலொன்றும் இலகுவான காரியமல்ல.அடிப்படையில் அதற்கான முதலீடுகள் மிக அவசியமாகின்றன.

ஆட்சியும் ஊழலும் வர்த்தக, நிதித் துறைகளுடன் பின்னிப்பிணைந்தவை என்பது வெளிப்படை உண்மையாகும். பெறுகை நடைமுறைகளில் ஊழலுக்கான சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டிருக்கிறது. நிலைத்து நிற்க க் கூடிய பெறுகை நடைமுறைகளின் தோற்றமென்பது ஊழலை ஒழிப்பதற்கான முதலடியாகப் பார்க்கப்படுகிறது.  அம்முதலடியை எடுத்து வைக்கும் ஒவ்வொரு நிறுவனமும்  நிலைத்து நிற்கும் இவ்வபிவிருத்தி இலக்குகளில் பதினாறாவது இலக்கை அடைவதில் தனது பங்களிப்பைச் செலுத்தும். இலங்கையிலும் ஆட்சித்துறையின் பெறுகை நடவடிக்கை முறைகளை இலத்திரனியல் படுத்தும் செயற்பாடுகள் நடந்த வண்ணமேயுள்ளன. 

ஊழல் ஒழிக்கப்பட வேண்டுமாயின் கண்ணுக்குப் புலப்படாதவற்றை புலப்படுத்துதல் வேண்டும் என்பர். தகவலுக்கான அணுகலையும் வெளிப்படைத்தன்மையையும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவற்றைப் புலப்படுத்த இயலும்.
இங்கு  நான்காவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கான ‘தரமான கல்வி’ தொடர்பிலும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கல்வி சார் பெறுபேறுகளை மாத்திரம் கருத்தில் கொள்ளாது சில அடிப்படைத் திறன்களையும் நல்ல பெறுமானங்களையும் மாணவர்கள் மத்தியில் வளர்த்து விடுவதாக கல்வி முறைமைகள் மாற்றப்பட வேண்டும்.
ஊழல் என்பது சங்கிலித்தொடர் போன்றது. அது வீட்டிலிருந்தே ஆரம்பிக்கிறது. அந்த சங்கிலித்தொடரை இடையிலே அறுப்பதற்கு மாணவர்களால் இயலும்.
கடந்தவாரம் ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’  நிறுவனத்தினால் 2018 ஆம் ஆண்டுக்கான ஊழலுக்கெதிரான தரப்படுத்தல் சுட்டிகள் வெளியாகியிருந்தன. 2017 இலிருந்து 22018 ஆம் ஆண்டுக்கிடையே இலங்கையைப் பொறுத்தவரை எந்தவொரு முன்னேற்றமும் நடைபெறவில்லை. அது தொடர்ந்தும் 38 புள்ளிகளையே  தக்கவைத்துக்கொண்டிருக்கின்றமையை அறிய முடிந்தது. நாடொன்று 0 புள்ளிகளாய்ப் பெற்றால் அது ஊழல்  நிறைந்ததாகவும் 100 புள்ளிகளைப் பெற்றால் ஊழலற்றதாகவும் தீர்மானிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியிலே இலங்கை 89 ஆவது இடத்தையும் தென்னாசியாவைப் பொறுத்தவரையிலே 3 ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறது.  உலகளாவிய தரப்படுத்தலிலே 25 ஆவது இட த்தைப் பெற்று பூட்டான் தென்னாசியாவிலே முதலாம் இடத்தையும்  78 ஆவது இடத்தைப்  பெற்ற இந்தியா தென்னாசியாவிலே இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறது. 
2013 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையானது 36 ஆம் இடத்துக்கும் 38 ஆம் இட த்துக்கும் இடையேயே இருந்து வந்த மையை  ‘ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்னஷனல்’  நிறுவனத்தின் இலங்கைக் கிளை இங்கு சுட்டிக்காட்டுகிறது.  ஜன நாயகத்துக்கும் ஊழலுக்கு மான தொடர்பையும் அவ்வறிக்கை தெளிவு படுத்த விழைகிறது.
ஒரு சேவையொன்றைப் பெறுவதற்காக வரிசையில் பலர் நிற்கும் போது எமக்கும் சேவை வழங்கு நருக்குமான நல்லுறவைப் பயன்படுத்தி  முதலில் சென்று சேவையைப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் எம்மில் பலருக்கு உண்டு. அதே போல சேவை வழங்கு நருக்குப் பரிச்சயமான ஒருவரின் சிபாரிசுடன் சென்று சேவையைப்பெறும் பழக்கமும் எம்மில் பலரிடம் உண்டு.  பெறுகைகளின் போது உறவினர்களையும் நண்பர்களையும் விண்ணப்பிக்ச் செய்து தேர்வு செய்யும் திறனும் பொது பெறுகை நடைமுறைகளின்றி தெரிந்தவருக்கே ஒப்பந்தத்தை வழங்கும் செயற்பாடுகளையும் பலர் மேற்கொள்கின்றனர்.  சேவை வழங்கு நரிடம் தாம் நாடிச் சென்ற சேவை பூரணமாக க் கிடைக்கப் பெற்றதும் ‘ சந்தோஷத்துக்காக’ என அன்பளிப்புகளை வழங்கும் சேவை நாடிகளும் இருக்கிறார்கள். இவை யாவுமே ஊழலின் வகைகளே. ஊழல் என்பது குற்றம் என்பதை அறிந்திருந்தும்  கேட்ட தைக் கொடுக்காவிட்டால், அல்லது அது பற்றி முறையிட்டால் தாம் நாடி வந்த சேவை தமக்கு க் கிடைக்காமல் போய்விடுமோ? அல்லது தமக்கு அச்சுறுத்தல் ஏதேனும் உருவாகுமோ என்பதற்காகவே ஊழலை ஊக்குவிப்பவர்களும் இல்லாமல் இல்லை.  இங்கு தான் சமூக அக்கறையும்  நா ன்காவது  இலக்கு தொடர்பில் நான் குறிப்பிட்ட பெறுமாங்கள் சேர் கல்வியும் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஒரு நாடு ஊழல் மிக்கதாக இருப்பதற்கும் ஊழலற்றதாக இருப்பதற்கும் ஆட்சி த்துறையின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானது. ஆயினும் நான் ஏலவே குறிப்பிட்து போல ஊழல் எனப்படுவது சங்கிலித்தொடர் போன்றது. அதன் ஒரு இணைப்பையேனும் முறித்து விட்டால் ஊழல் தொடராது போகும். பொதுமக்களாக நாம் இருந்து கொண்டு ஆட்சித்துறையை மாத்திரம்  நாம் குறை கூறிப் பயனில்லை. ஏனெனில் இவ்வூழல் சங்கிலியின் இணைப்புகளில் நாம் ஒவ்வொருவரும் இணைந்திருக்கிறோம். ஏதேனும் ஒரு வகையில் எம்மால் அந்த இணைப்பை அறுத்தெறிய இயலுமானால்


ஊழல் ஒழிப்பு தொடர்பில் எமக்குக் கிடைக்கும் முதல் வெற்றி அதுவே. ஊழலுக்கு அடிமையாகாமல் இருக்கும் அதே வேளை ஊழலை ஊக்குவிக்காமல் இருக்கவும் நாம் உறுதி பூண வேண்டும்.  முயன்று தான் பார்க்கலாமே?

ஆட்சியில்லா அபிவிருத்தி!




இலங்கையிலே ஆட்சி பற்றியும் நல்லாட்சி பற்றியும் அறியாதவர் எவருமிலர் எனலாம். இப்பதங்கள் அவற்றின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தினவா இல்லையா என்ற  வினாக்களுக்கப்பால் அரசுடன் தொடர்புடையவை என்பதில் ஒவ்வொரு இலங்கைப் பிரஜையிடமும் விழிப்புணர்வு காணப்படுகிறது.

சட்ட விதிகளை அடிப்படையாக க் கொண்ட சமாதானமும் நிலையான தன்மையும் மனித உரிமைகளும் விளைதிறன் மிக்க  ஆட்சியும்  இல்லாத நாடொன்றில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளில் அடைய முடியும் என எதிர்பார்க்க முடியாது. பொதுவாக பெரும்பாலானஅபிவிருத்தியடைந்துவரும்  நாடுகள் இவ்விடயங்கள் தொடர்பில் பின் தங்கிக் காணப்படுகின்றன. ஆதலினால் தான் இத்தகைய நாடுகளில் ஐ. நா வுடன் தொடர்புடைய பல நிறுவனங்கள்  சமாதானமும் நல்லிணக்கமும் என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு  அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இந் நிலையில் ஆட்சிக்கும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுக்குமான தொடர்புகள் பற்றி நாம் ஆராய முன்னர் சில சொற்பதங்கள் வெளிப்படுத்தி நிற்கும் கருத்துகள் பற்றி  அறிந்து கொள்ள வேண்டும்.

அரசாங்கம் எனப்படுவது யாதெனில், அது நாடொன்றை கொண்டு நடத்தும், நிர்வாகம் செய்யும் தரப்பினரை அல்லது பிரதி நிதிகளைக் கொண்ட குழுவைக் குறிக்கும் பதமாகும். ஒரு நாட்டின் வலுவானது பிரயோகிக்கப்படுவது இத்தரப்பினூடாகவேயாகும். அவ்வரசாங்கம் ஜன நாயகம் மிக்கதாகவோ அல்லது ஜன நாயகமற்றதாகவோ  இருக்க முடியும். ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கும் போது அது மீண்டும் மீண்டும் ஆட்சியில்  நிலைத்து நிற்கும்  சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

உரிய சட்ட திட்டங்களுக்கமைய, அரசாங்கத்தில் உள்ள பிரதிநிதிகளால் நாடு வழி நடத்தப்பட்டுச் செல்கின்றமையை  ஆட்சி எனப் பொருள் கொள்வர். ஆட்சி என்ற இக்கோட்பாடு அரசாங்கத்துக்கு மட்டும் பொதுவானதல்ல. எந்தவொரு நிறுவனத்திலும் இந்த ஆட்சி என்ற கோட்பாட்டை பிரயோகிக்க இயலும். இக்கருத்தை மிகவும் எளிமைப்படுத்தினால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஆட்சி எனப்பொருள் கொள்ளலாம்.  தான் அடைய வேண்டிய இலக்கை சில விதிகளைப் பின்பற்றி சிறந்த பெறுபேறு கிடைக்கும் வகையில் அடைதலே  ஆட்சியின் மிக முக்கிய நோக்கமாகும். இத்தகைய ஆட்சியை மேலும் சில கோட்பாடுகளின் அடிப்படையில் நடத்திச் சென்று இன்னும் சிறப்பான அடைவுகளை அடைதலை நல்லாட்சி என்பர்.

நாம் வாழும் உலகம் பரந்து பட்டது. ஏற்றத்தாழ்வுகள்  நிறைந்தது. சில பிராந்தியங்கள் நிலைத்து நிற்கும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும்  பாதுகாப்பையும் அனுபவிக்கின்றன. மாறாக ஏனைய பிராந்தியங்களோ வன்முறைகளையும் முரண்பாடுகளையும் எதிர் நோக்குகின்றன. வேறு சில பிராந்தியங்களோ வன்முறைகளிலிருந்து மீண்டெழுந்து  நிலைத்து நிற்கும் சமாதானத்தையும் சுபிட்சத்தையும் நோக்கி நடை பயில ஆரம்பித்திருக்கின்றன.  ஆதலினால் உலகளாவிய ரீதியிலே ஒவ்வொரு நாடும் நிலைத்து நிற்கும் சமாதானத்துக்காகவும் சுபிட்சத்துக்காகவும் பாதுகாப்புக்காகவும் போராட வேண்டிய நிலையிலேயே உள்ளது.

ஆயுத முரண்பாடுகளும் பாதுகாப்பற்ற நிலைமையும் காணப்படும் நாடுகள் அபிவிருத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பின் தங்கிய நிலையில் காணப்படுகின்றமையை  பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இந்த மந்த நிலை பல சந்ததிகளுக்குத் தொடர்ந்த வரலாறுகளும் இவ்வுலகில் இல்லாமலில்லை.

பால்முறை வன்முறைகள், குற்றங்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகள் நிறைந்து காணப்படுகின்றமையானது அந் நாட்டில் இருக்கின்ற சட்ட விதிகள் உறங்கு நிலையிலோ அல்லது சட்ட விதிகள் இல்லாத நிலைமையையோ வெளிப்படுத்துவதாக  ஐ. நா குறிப்பிடுகிறது. ஆதலினால் ஒவ்வொரு நாடும் தனது பிரஜைகளுள் அதிக அபாயத்தை எதிர் நோக்குபவர்களை மிக முக்கியமாக க் கருத்தில் கொண்டு பாதுகாக்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளின் வகி பாகம் வெளிப்படுகிறது.

எல்லா வகையான வன்முறைகளையும் வெகுவாக க் குறைப்ப தையும் அரசாங்கங்களுடனும் சமூகங்களுடனும் இணைந்து வேலை செய்வதன் மூலம் பாதுகாப்பின்மைக்கும்  முரண்பாடுகளுக்கான நிலைத்து நிற்கக் கூடிய தீர்வைக் கண்டு பிடிப்பதனையும்  நோக்காக க் கொண்டு பதினாறாவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கு வகுக்கப்பட்டிருக்கின்றது.  சட்ட விதிகளை வலுப்படுத்தி மனித உரிமைகளை உறுதி செய்யப்பட ஏதுவான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலமே இப் பதினாறாவது இலக்கை அடைய முடியும்.  அது மட்டுமன்றி இவ்விலக்கை அடைய வேண்டுமாயின் சட்ட விரோத ஆயுதங்களின் நகர்வைக் கட்டுப்படுத்துவதோடு  சர்வதேச  நிறுவனங்களில் ஆட்சியில் அபிவிருத்தியடைந்து வரும்  நாடுகளின் பங்களிப்பையும் அதிகரிப்பதாலும் இவ்விலக்கை அடைய இயலும். 

நிலையான அபிவிருத்தி இலக்குகளைப் பொறுத்தவரையிலே ஆட்சியென்பது இரு பொருள் கொள்ளப்படுகிறது.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான செயற்பாடுகளுக்காக, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றை மீளாய்வு செய்வதற்காகத்துணை புரியும் ஆட்சியும் கட்டமைப்புகளின் ஒழுங்கமைப்பையும் குறிப்பது முதலாவதாகும்.  ஒவ்வொரு நாடும்  நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கான தனது உடன்பாட்டை தெரிவித்து மீண்டபோதும் அது எவரோ உருவாக்கிய கோட்பாடு என்று கருதாமல் ஒவ்வொரு இலக்கும் தன்னுடைய நாடும் அடைய வேண்டிய, தனது நாட்டுக்கான இலக்கு என்று கருத வேண்டுமாயின் அவ்விலக்குகளை அடைவதற்கு சாத்தியமான சூழல் உருவாக்கப்பட வேண்டும்.  அதற்கு இவ்வகை ஆட்சிக் கோட்பாடு துணை புரிகிறது.

அந்த வகையிலே இலங்கையிலும் சாத்தியமான சூழல் உருவாக்கப்பட்டு மேலும் முன்னேற்றப்பட்டு வருகிறது.  நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கெனத் தனியாக அமைச்சொன்று உருவாக்கப்பட்டது நிலைத்து நிற்கும் அபிவிருத்திச் சட்டம் .  2017 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தினூடு சகல வரிசை   அமைச்சுகளும் திணைக்களங்களும் தமக்கான நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடையும் திட் டத்தை வகுக்க வேண்டியமை கட்டாயமாக்கப்பட்டது. நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுடன் இயைந்து செல்லும் வண்ணம் தேசிய கொள்கைகள் உருவாக்கப்பட்டன. உருவாக்கப்பட்டு வருகின்றன.  தேசிய மதிப்பீட்டுக் கொள்கைக்கமைய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கினால் வகைக் குறிக்கப்படும்  ஆட்சி எனப்படுவது இரண்டாவதாகும்.  இவ்விரு பொருள் கொள்ளல் களும் கூட  ஒன்றுடனொன்று தொடர்புபட்டவை.  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளின் அழகும் அதுவே!

ஆட்சி என்ற எண்ணக்கரு  தனியானதொரு இலக்காக க் கொள்ளப்படுகின்ற போதும் அது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகள் ஒவ்வொன்றுடனும் பின்னிப்பிணைந்ததாகவே காணப்படுகிறது. ஆட்சியின்றி எந்தவொரு இலக்கையும் அடைதல் சாத்தியமன்று. ஏனெனில் நிலைத்து  நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்த ஆட்சியால் மாத்திரமே இயலும்.

இவ்வாட்சியானது நல்லாட்சியாக மாத்திரம் இருந்து பயனில்லை. அது விளைதிறன் மிக்கதாகவும் சமத்துவம் மிக்கதாகனும் காணப்பட வேண்டும். நல்லாட்சிக் கோட்பாடினுள் விளைதிறனும் சமத்துவமும் அடக்கப்பட்டிருந்தாலும் அவற்றைத் தனித்தனியாகப் பார்த்தல் தகும் எனக் கருதுகிறேன்.

நல்லாட்சி எனக்கருதுகையில் தீர் மானங்களை மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் அவற்றிற்கான சட்ட , நிர்வாக க் கட்டமைப்பையும் அது குறிப்பதாக அமைகிறது. மிலேனியம் வெளிபடுத்துகை தொட்டு சர்வதேச கட்டமைப்புகள், செயற்பாடுகளின் கொள்கைகள், செயற்றிட்டங்கள் யாவற்றிலும்  நல்லாட்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பங்களிப்பு, யாவரையும் உள்ளடக்கும் தன்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறும் தன்மை, தகவலுக்கான அணுகல் போன்ற பல பெறுமானங்களை இத்  நல்லாட்சிக் கோட்பாடு தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது.  ஊழலை ஒழித்தல், அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாத்தல் , சட்ட விதிகளை மீறாது செயற்படல் என்பனவும் நல்லாட்சிக் கோட்பாடு முக்கியத்துவம் செலுத்தும் விடயங்களாவன.

பதினாறாவது இலக்கானது நல்லாட்சிக்கேகோட்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  அபிவிருத்திக்கான நிதி வழங்கலில் நல்லாட்சிக்கோட்பாட்டைப் பின்பற்றலென்பது  என்பது ஒரு நிபந்தனையாகவே முன்வைக்கப்படுகிறது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்  இக்கோட்பாட்டை தாமாகவே நடைமுறைப்படுத்துவதில் பல இடர்பாடுகளையும் நிதி நெருக்கடிகளையும் எதிர் நோக்குவதால் இத்தகைய நிபந்தனைகள் நன்மை பயப்பனவாகவும் அமைந்து வித் தவறுவதில்லை.

விளை திறன் மிக்க ஆட்சியென்பது  நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமை மிக்க  அரசாங்கங்களை உருவாக்குவதுடன் தொடர்புபட்டதாகும்.   அரசாங்கத்தில் உள்ள கட்டமைப்புகளின் இயலளவு, தொழில் நுட்பம், சிறப்புத்தேர்ச்சி, நிதி வளங்கள் ஆகியவற்றுடனும்  நீண்ட காலத்திட்டமிடலுடன் இணைந்து ஒன்றுடனொன்று தொடர்பு பட்ட பிரச்சினைகளைக் கையாளும் வல்லமையுடனும் தொடர்பு பட்டதே  விளைதிறன் மிக்க ஆட்சியாகும். மாறாக பலரும் கருதுவது போல் வெறுமனே சட்ட திட்டங்களையும் நடைமுறைகளையும் மட்டுமே பின்பற்றும் ஆட்சி விளைதிறன் மிக்க ஆட்சியாகாது. அதேவேளை எந்தவொரு கட்டத்திலும் ஆட்சியானது  சட்ட விதிகளை மீறாமல் இருக்கின்றமை உறுதி செய்யப்பட வேண்டும்.

சமத்துவமான ஆட்சியென்பது  பரந்துபட்ட விளைவுகளையும் வறுமைக் கோட்டுக்கு க் கீழ்ப்பட்டவர்கள் தொட்டு ஒதுக்கப்பட்டவர்கள் வரை அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவமான பராமரிப்புகளையும் கருத்தில் கொண்டதாகும். அல்லாவிடில் ஆட்சி எத்துணை நல்லதாக இருந்தாலும் விளைதிறன் மிக்கதாக இருந்தாலும் பயனற்றுப் போனதொன்றாகவே அதனைக் கருத முடியும்.  நாடளாவிய ரீதியிலே முடிவுகளை மேற்கொள்வதற்கும்  சமத்துவத்தின் தேவை மிகுந்த இவ்வுலகிலே உலகளாவிய ரீதியில் முடிவுகளை மேற்கொள்வதற்கும்  சமூகங்கள் மத்தியிலே செல்வமும் வளங்களும் சந்தர்ப்பங்களும் பரம்பிக் காணப்படுவதற்கும் இச் சமத்துவமான ஆட்சி உறுதுணை புரியும்.  இம்மூவகை ஆட்சிக் கோட்பாடுகளும் ஒன்றுடனொன்று தொடர்பு பட்டவை மட்டுமன்றி நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்குகளுடனும் பின்னிப் பிணைந்தவை.  ஒவ்வொரு நிலைத்து நிற்கும் அபிவிருத்தி இலக்கை அடைவதிலும் ஆட்சியின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து கொள்ளாவிடில் அவ்விலக்குகளை அடைவதற்கான பங்களிப்பை எம்மால் மேற்கொள்ள இயலாது போய்விடும்.

இங்கு ஆட்சியை நடத்துபவையாக சட்டவாக்கத்தை மேற்கொள்ளும் நிறுவங்களையும் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களையும் கருதமுடியும். உங்கள் அருகிலிள்ள ஒவ்வொரு அரச திணைக்களமும் அமைச்சும் உள்ளூராட்சி  உட்பட்ட அதிகார சபைகளும் கூட மேற்குறிப்பிடப்பட்ட ஆட்சியை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களேயன்றி  வெறுமனே அதிகாரத்தைப் பிரயோகிக்கும் நிறுவனங்களல்ல. குறிப்பாக அரச நிர்வாக இயந்திரத்தின் பங்காளிகளான இந்த நிறுவனங்கள் என்ன அடிப்படையில் இயங்குகின்றன என்பது பற்றிய தெளிவு எம் ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது!