Sunday, February 7, 2010

சாது மிரண்டால் காடு கொள்ளாது

"பகுத்தறிவற்ற மிருகங்களைவிட பகுத்தறிவுள்ள மனிதனே அதிக அழிவுகளை எதிர்நோக்குகின்றான்"



பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்ட கொடூரமான ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்து சரியாக அரை தசாப்தம் கடந்துவிட்ட நிலையிலும் கூட இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான பல விடயங்கள் இன்னும் புரியாத புதிர்களாகவே காணப்படு கின்றன. இயற்கையை மீறத் தெரிந்த மனிதன், இயற்கையின் சீற்றத்தை முற்றாக எதிர்கொள்ள முடியாத நிலையிலேயே காணப்படுகின்றான்.

இயற்கை அனர்த்தமெனப்படுவது இயற்கையாகச் சூழலில் ஏற்படுத்தப்படும் நிகழ்வுகளேயாகும். அவை இயற்கையாக ஏற்படுத்தப்படினும் அவற்றின் பின்னணியில் கணிசமான பங்கை வகிப்பது மனித இனமன்றி வேறில்லை. அத்துடன் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படுத்தப்படும் அழிவுகளில் பெருமளவில் பாதிக்கப்படுவதும் மனித சமுதாயமே.

இந்த பிரபஞ்சம் பஞ்ச பூதங்களாலான தென்பர். பஞ்ச பூதங்களாலான நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகியன சீற்றம் கொள்வதால் உருவாவதே இயற்கை அனர்த்த மெனக் கருதப்படுகின்றது. இப்பஞ்சபூதங்கள் நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச் சரிவு, வெள்ளம், கடற்கோள், சூறாவளி, காட்டுத்தீ, வறட்சியென வெவ்வேறு வடிவங்களில் தமது சீற்றத்தை வெளிப்படுத்துகின்றன.

இச்சீற்றம் பல உயிர்ச் சேதங்களையும் சொத்துக்களின் அழிவையும் ஏற்படுத்துவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். எனினும் அவை யாவற்றிற்கு மப்பால், அவற்றை உருவாக்கும் காரணிகளைப்பற்றிச் சிந்திக்கத்தவறிவிடு கிறோம். காரணிகளைப் பற்றிச் சிந்தித்தால்தான இயற்கை அனர்த்தத்தைக் குறைப்பதற்கோ அல்லது அதிலிருந்து எம்மைப்பாது காப்பாதற்கோ உரிய வழி முறைகளைக் கையாள முடியும்.

இயற்கை அனர்த்தங்களினடிப்படை யாகவிருப்பது சூரியனும் புவியின் உட்பகுதியுமாகும். பூமியின் உட்பகுதி பூமியை வெப்பமாக்குவதன் மூலம் அதன் தட்டுக்களை அசையச் செய்யும். இத்தட்டுக்களினசைவுகளே நிலநடுக்கங்களைத் தோற்றுவிக்கும். ஆனால் இந்தத் தோற்றப்பாடுகளே, பூமி தொழிற்படும் நிலையிலிருப்பதற்கான சமிக்ஞைகளாகக் கருதப்படுகின்றன.

பூமியில் இயற்கையாகவே கண்டங்கள், சமுத்திரங்கள், மலைகள் மற்றும் சமவெளிகள் உட்பகுதித் தட்டுக்கள் ஆகியன சமநிலையில் காணப்படும். இத்திணிவுகள் மெதுவாக அசைந்து தமக்கிடையிலான சம நிலையைப் பேணிக்கொள்ளும் பூமியின் உட்பகுதியின் வெப்பநிலை மேற்பகுதியின் வெப்பநிலையை விட மிக அதிகமாகக் காணப்படும்.

இவ்வெப்பம், தட்டுக்களை நகரம் செய்யும் இத்தட்டுக்களின் நகர்வே நில நடுக்கங்க ளையும் ஆழிப் பேரலையையும் தோற்றுவிப் பதில் முன்னணி வகிக்கிறது. அத்துடன் தட்டுக்களுக்கிடையிலான இடைவெளியில் அமுக்கமொன்று தோற்றுவிக்கப்படுவதால் எரிமலை வெடிப்புகள் உருவாகும்.

சூரியனானது புவிமேற்பரப்பைச் சூடாக்குவதன் மூலம் காலநிலையைச் சீராகப் பேணுகின்றது. புவிமேற்பரப்பிலுள்ள நீரானது. ஆவியாகி மழையாகப் பெய்வதற்கும் வளியமுக்க முறைமைகளுக்கும் சூரியனே காரணமாகின்றது. சூரியவெப்பத் தினால் உயரமுக்கம் உருவாக்கப்படுவதுடன் உயரமுக்கப்பகுதிகளிலிருந்து தாழமுக்கப் பகுதிகளை நோக்கி வளி அசைவதால் காற்று உருவாகும். புயல், சூறாவளி, மினிசூறாவளி மற்றும் உக்கிரமான கடல் அலை, மழை ஆகியன தோற்றுவிக்கப்பட மேற்கூறிய செயற்பாடே காரணமாகின்றது.

இயற்கை சம நிலையானது ஆதரிக்கும் சனத் தொகை உட்கட்டமைப்பு வசதிகளின் விரிவாக்கம், நகரமயமாதல், இயற்கை வளங்களின் அதீத பாவனை, நீர், நிலம் மற்றும் வளியில் கழிவுகள் வெளியேற்றப்படல் போன்ற மனித செயற்பாடுகளால் குலைவடைகின்றது. கடந்த சில தசாப்தங்களாக நிகழ்ந்துவரும் இயற்கை அனர்த்தங்கள் முன்னைய தசாப்தங்களுடன் ஒப்பிடுகையில் சடுதியான அதிகரிப்பைக் காட்டுவதை ஆய்வுகள் அவதானித்துள்ளன.

துரிதமாக மாறிவரும் காலநிலையும் இயற்கை அனர்த்த எண்ணிக்கையின் அதிகரிக்கும் போக்குக்கு காரணமாகிறது.

வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, காட்டுத்தீ உட்படப்பல இயற்கை அனர்த்தங்கள் மனித நடவடிக்கைகளினாலேயே மிகவும் உக்கிரமமாகத் தென்படுகின்றன.

ஆறு கடல் போன்ற நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்வதால் நீரானது. அவற்றின் எல்லையைத் தாண்டி நிலத்தை நோக்கிப்பாய்கின்றது. அவ்வாறு நீர் பாய்ந்தோடும் சிலப்பகுதிகள் அழிவுக்குட்படுத்தப்பட்டால் மட்டுமே அது வெள்ளப்பெருக்கு எனப்படும். காடழிப்பு, திட்டமிடப்படாத நகரமயமாக்கல், விஞ்ஞான ரீதியான மண் பாதுகாப்பு நடைமுறைகளைப் பயன்படுத்தாமை போன்ற மனித செயற்பாடுகளே வெள்ள அழிவுகளின் பின்னணியில் பெரும் பங்கு வகிக்கின்றன.

நிலச்சரிவானது பூகற்பவியல் தொடர்பான ஒரு விடயமாகக் கருதப்படுவதுடன், அது நில அசைவு, மண் சரிவு போன்ற பலவற்றை உள்ளடக்கியதாகும். பொதுவாக மலைப்பாங்கான பிரதேசங்களிலும் கடற்கரையோரங்களிலும் நிலச்சரிவு தொடர்பான நிகழ்வுகள் எதிர்பார்க்கப்படும்.

நிலச்சரிவு ஏற்படுவதற்குப் புவியீர்ப்பினால் ஏற்படுத்தப்படும் விசையே அடிப்படையாக அமைகின்றது. அத்துடன் நிலக்கீழ் நீரினால் ஏற்படுத்தப்படும் அமுக்கம், சரிவுகளின் சமநிலையைக் குலைப்பதாலும் நிலைக்குத்தான மரங்கள் அல்லது பயிர்கள் இல்லாத, மண்கட்டமைப்புக் குலைந்த சரியான நிலயங்களிலும், ஆறுகளாலும் சமுத்திரங்களாலும் ஏற்படுத்தப்பட்ட மண்ணரிப்பினாலும் எரிமலை வெடிப்பு, கடும்மழை போன்ற இயற்கைக் காரணிகளாலும் நிலச்சரிவு ஏற்படும்.

இவை தவிர பாரிய இயந்திரங்கள், வாகனங்கள் மற்றும் குண்டு வெடிப்புகளின் அதிர்வு காரணமாகவும், நிலச் சரிவின் வடிவம் மாற்றியமைக்கப்படும் வகையிலான வேலைத்திட்டங்களாலும் உறுதியற்ற நில மேற்பரப்பில் ஆழ வேரூன்றிய தாவரங்களை அழிப்பதாலும், நிலத்தினுள் வடிந்தோடும் நீரினளவைக் குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் நிர்மாணம், விவசாயம், வனவளம் தொடர்பான செயற்பாடுகளாலும் நிலச்சரிவு ஏற்படுகின்றது.

மிகவும் பாரதூரமான அழிவுகளை ஏற்படுத்தும் அனர்த்தங்களிலொன்றாகக் கருதப்படும். காட்டத்தீயானது வெப்பமான காலநிலை அதிகரிக்கும். சந்தர்ப்பங்களில் மர இலைகளின் வடிவிலுள்ள எரிபொருட்கள் தமது எரிபற்று நிலையை அடைவதால் ஏற்படுகின்றது.

நீர்வழங்கலில் ஏற்படும் பற்றாக்குறை காரணமாகவே வறட்சி ஏற்படுகின்றது. சில பிரதேசங்களில் குறுகியகால வறட்சி சாதாரணமாகக் கருதப்படுகிறது. ஆனால் வறட்சி மிக நீண்டகாலத்துக்கு நீடிக்கப்படும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

உலக வரை படத்திலே இலங்கை ஒரு மிகச் சிறிய தீவாக இருக்கின்ற போதிலும் இயற்கை அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்ற உலக நாடுகளுள் 42 ஆவது இடத்தை வகிக்கின்றது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி ஆழிப்பேரலை அனர்த்தத்தை எதிர்நோக்கும் வரை அடிக்கடி இடம்பெறும் வெள்ளப்பெருக்கு கடலரிப்பு, மண்சரிவு, வறட்சி போன்றனவே நாம் எதிர்நோக்கிய இயற்கை அனர்த்தங்களாகக் காணப்பட்டன.

இலங்கையைப் பொறுத்தவரையில் மலைநாட்டைப் பெரும் அச்சறுத்தலுக்குள்ளாகும் இயற்கை அனர்த்தமாக நிலச்சரிவு காணப்படுகின்றது. நிலச்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள் அறியப்பட்டுள்ளன.


குறுகிய காலத்தில் கிடைக்கும் தேவைக்கதிகமான மழைவீழ்ச்சி காரணமாக வழிந்தோடும் நீர் இயற்கை நீர் மேற்பரப்புத் தொகுதிகளின், கொள்ளளவை மீறும் சந்தர்ப்பங்களில் வெள்ளம் உருவாகும். இலங்கையின் பிரதான ஆறுகள் யாவும் மத்திய மலைநாட்டிலேயே உற்பத்தியாகின்றன. மலையகப் பிரதேசங்கள் மழை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் போது, மலைகள் சூழ்ந்திருக்கும் மேட்டுநிலப் பிரதேசங்களில் குறுகிய காலத்துக்குள்ளேயே வெள்ள அபாயம் ஏற்படும். இதன் காரணமாக, அப்பிரதேச மக்கள் காலங்காலமாகப் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இலங்கையின் மேற்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதிகளே வெள்ள அபாயத்தை எதிர்நோக்கும் பகுதிகளாகும். போதியளவு வடிகாலமைப்பு வசதிகளின்மையும் திட்மிடப்படாத துரித அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் நிலப்பாவனை முறைமைகளும் ஆறுகள் பெருக்கெடுக்கக் காரணமாகின்றன.

இலங்கையின் மேற்குப் பகுதியிலுள்ள ஆறுகளில் வருடம் முழுவதும் நீர் காணப்படும். ஆனால் ஏனைய பகுதிகளிலுள்ள ஆறுகள் சிலபருவங்களில் வற்றி விடும் தன்மையானது. ஆதலால் அப்பகுதிகளில் வறட்சியென்பது தவிர்க்க முடியாததொரு அனர்த்தமாக மாறிவிடுகிறது. இலங்கையில், மழை வீழ்ச்சியின் போக்கு அண்மைக் காலமாக மாறிவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வறட்சியின் அச்சுறுத்தல் எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாமெனக் கருதப்படுகிறது.

இலங்கையின் தென் கீழ் வட மற்றும் வடமேல் மாகாணங்களே இவ்வச்சுறுத்தலை அதிகளவில் எதிர்நோக்குகின்றன. அவற்றில் அமைந்துள்ள புத்தளம், அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் அம்பாறை மாவட்டங்கள் பெரியளவிலான அழிவுகளை எதிர்நோக்கும் மாவட்டங்களாகக் கருதப்படுகின்றன. இலங்கையின் மேற்குப்பகுதியே வறட்சிக்கான அபாயம் குறைந்த பகுதியாகக் கருதப்படுகின்றது.

இலங்கையில், புயல் மற்றும் சூறாவளி ஆகியன வங்காளவிரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம் காரணமாக உருவாகின்றன. குறிப்பிட்ட சில மாதங்களில், இலங்கையின் சில பகுதிகளை இத்தாழமுக்கம் கடந்து செல்கின்றது. கடந்த 100 வருடங்களில் சூறாவளியானது 4 தடவைகள் மட்டுமே பாரியளவிலான சேதங்களை ஏற்படுத்தியி ருந்தது. அத்துடன் குறிப்பிடத்தக்களவிலான எண்ணிக்கை புயல்களும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கையின் கிழக்குக் கரையோரம் மற்றும் வடபகுதி ஆகியனவே பாரியளவில் அச்சுறுத்தலை எதிர்நோக்கும் பகுதிகளாகக் கருதப்படுவதுடன் 80 சதவீதமான சூறாவளி அனர்த்தங்கள் நவம்பர், டிசெம்பர் மாதங்களிலே ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் தென்மேற்கு மலைப்பகுதிகளிலும், வட கிழக்கு, தெற்கு பகுதிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட இத்தகைய அனர்த்தங்களை அதிகளவில் எதிர்நோக்கும் அபாயமுடையனவாகக் கருதப்படுகின்றன. அப்பகுதிகளிலுள்ள கேகாலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே முக்கியமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய அனர்த்தங்கள் எதிர்பார்க்ககப்படக் கூடியன. ஆனால் இவை தவிர, சமுத்திரங்களில் எங்கோ ஒரு பகுதியின் கீழுள்ள புவித்தட்டுக்கள் அசைவதால் ஏற்படும் நிலநடுக்கம், ஆழிப்பேரலைகளைத் தோற்றுவித்து, அவை மூலம் பாரியளவிலான அனர்த்தம் ஏற்படலாம். இத்தகையதொரு அனர்த்தமே 2004 இல் நாம் கண்ட சுனாமியாகும்.

பல்வேறுபட்ட அபாய அறிவிப்பு அல்லது எச்சரிக்கைச் செயற்றிட்டங்கள் காணப்பட்டாலும் இத்தகைய அனர்த்தங்களின் விளைவுகள் எதிர்வு கூறப்பட முடியாதவை.

அத்துடன் இத்தகைய இயற்கை அனர்த்தங்கள் தவிர்க்கப்பட முடியாதவையென்பதையே வரலாறும் கூறுகின்றது. இன்று நாம் காணும் கண்டங்கள் யாவும் இத்தகைய பாரியளவிலான இயற்கை அனர்த்தங்களாலுருவானவையாகவே கருதப்படுகின்றன.

பனியுகத்தில், பனிதிரண்டு காணப்பட்டமையால் சமுத்திர நீர்மட்டம் தாழ்வாகக் காணப்பட்டது. அப்போது உலகின் கண்டங்களும் தீவுகளும் பல பகுதிகளில் இணைந்து காணப்பட்டன. தமிழகத்துடன் இலங்கையும், புளோரிடாவுடன் கியூபாவும், அவுஸ்திரேலியாவுடன் பப்புவாநியூகினி தீவும் இணைந்து காணப்பட்டதாகக் கருதப்படுகிறது. பனியுகம் மாறி, சூழலின் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கப் பனிப்பாறைகள் உருகிக் கடல்மட்டம் உயர்த்ததாலேயே இன்று காணப்படும் பல தீவுகள் கண்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்படுகிறது.

ஆதி நாகரிகங்களான இந்து நாகரிகம், தென்னமரிக்காவின் மாயா நாகரிகம் முதல் கிரேக்க ட்ராய் சமுதாயம் வரை திடீரென அழிந்து கட்டங்கள் சிதைந்து போனமைக்குப் பெரும் பூகம்பங்கள் காரணமாக அமைந்திருக்கலாமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூம்புகார் நகர் கடலுக்கடியில் சென்றமைக்கும் கடற்கோள் அனர்த்தம் காரணமாகவிருக்கலாமென நம்பப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்கள் பெருந்துயரையும் பாரிய அழிவுகளையும் ஏற்படுத்தினாலும் அவற்றை எமக்கான படிப்பிகையாகக் கருத வேண்டும். திணையெனும் பெயரில் வினையை விதைத்து இறுதியில் வினையையே அறுவடை செய்யும் எம்மொவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயற்கை அனர்த்தமும் உயிரின் மதிப்பை உணர்த்துவதாகவே தெரிகின்றது. இயற்கை அனர்த்தங்களினால் ஆறறிவற்ற ஜீவராசிகளை விட ஆறறிவுடைய மனிதனே அதிக அழிவுகளை எதிர்நோக்குகின்றானென்பது மறுக்க முடியாத உண்மையாகும். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற முதுமொழியை, ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது எம்மில் பலர் உணர்ந்திருப்பர்.

இயற்கை அனர்த்தத்திலிருந்து எம்மைப் பாதுகாக்கக் கூடிய வழிமுறைகளை எமது செயற்பாடுகள் ஒவ்வொன்றிலும் கைக்கொள்வதோடு இயற்கை அனர்த்தத்தைத் தோற்றுவிக்க ஏதோ ஒரு வகையில் காரணியாக அமையும் செயற்பாடுகளை நிறுத்தவும் ஒன்றிணைவதே எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும்.

No comments:

Post a Comment