Sunday, August 29, 2010

மாயவலையின் கரிய முகம்


அண்மையில், பாடசாலை செல்லும் பதின் பருவத்து மாணவியொருவரின் தற் கொலை தொடர்பான செய்தியொன்று இணையத்திலும் பத்திரிகையிலும் வெளியாகியிருந்தது. முகநூல் (face book) என்ற சமூக வலைத் தளத்திலே இலண்டனிலிருக்கும் 19 வயது இளை ஞனுடன் சம்பந்தப்பட்ட மாணவி தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாராம்.

அவர்களது உறவும் முகநூலிலே வளர்ந்திருக்கிறது. அவ்விளைஞன் இலங்கை வந்தபோது அந்த மாணவியை நேரிலும் சந்தித்திருக்கிறாராம். அவர் மீண்டும் இலண்டன் சென்ற பின்னர் அம்மாணவியுடன் தொடர்பு கொள்வ தைத் தவிர்க்க அவர் முயன்றிருக்கிறார். அவரைப் பலமுறை தொடர்பு கொண்ட மாணவி தனது முயற்சிகள் தோல்வி கண்டதால் தற்கொலை செய்துகொண்டார் என்கிறது அந்தச் செய்தியின் சாராம்சம்.

அந்தச் செய்தியை அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் பயனெதுவும் இருக் கப் போவதில்லை. ஏனெனில் உயிரொன்று போய்விட்டது. எமது அலசல்களும் ஆராய்ச்சிகளும் போன உயிரைத் திரும் பக் கொண்டு வந்து விடப் போவதில்லை.

ஆனால் இந்தச் செய்தியால் குறிப்பு ணர்த்தப்படும் எச்சரிக்கையை விளங்கிக் கொள்ளவேண்டிய கடப்பாடு எம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஏனெனில் இத்தகைய சம்பவங்கள் இனியும் நிகழாமல் தடுக்க, முன்னின்று செயற்பட வேண்டியவர்கள் நாங்களே!

தொழில்நுட்பங்களும், இணைய வசதிகளும் இன்றைய காலகட்டத்திலே துரித வளர்ச்சி கண்டு வருகின்றன. அத்துடன் வீட்டுக்கு வீடு கணனிகளும் இணைய வசதிகளும் இருக்குமளவிற்கு அவை மலிவாகவும் கிடைக்கின்றன.

மாணவர்களைப் பொறுத்தவரையிலே அவர்களின் இன்றைய கல்வித் திட்ட மானது, தேடலை ஊக்குவிக்கிறது. இந்தத் தேடலுக்கான சுலபமான திறவு கோலாக இணையம் மாறிவிட்டதை எவராலும் மறுக்க முடியாது.

குறிப்பாக நகரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, இணைய வசதி ஒரு அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. அத்துடன் இலங்கையின் கல்வித் திட்டத்தில் கணனிக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளமையால் இணையப் பயன்பாட்டின் அறிமுகமும் சுலபமாகக் கிடைத்துவிடக்கூடிய நிலையே காணப்படுகிறது.

தன் பிள்ளை கற்கத் தேவையான வசதிகளை, உயிரைக் கொடுத்தாவது வழங்க வேண்டுமென்ற அப்பாவிப் பெற்றோர்களின் ஆவலை பிள்ளைகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகிறார்கள். அத்தகையதோர் செயற்பாட்டின் விளைவொன்றே இத் தற்கொலையுமாகும்.

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி இணைய விடயத்தில் மிகவும் பொருந்திப் போகிறது என்றே சொல்ல வேண்டும். இணையத்தில் எவ்வளவோ பயன்தரத் தக்க தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆயினும் ஒருவர் இணையப் பாவனை யில் தனது எல்லையைக் கடக்கும்போது வினையும் கூடவே தலைவிரிக்க ஆரம்பிக்கிறது.



இணையம் இன்று சமூகமயப்படுத்தப் பட்ட வசதியாக மாற்றம் பெற்று வருகிறது. அந்தவகையிலே தான் சமூக வலைத் தளங்கள் உருவாக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் மின் கற்றலாக இருந்த இணைய வழிக் கல்வி இன்று சமூகக் கற்றலாகப் பரிணமித்திருக்கிறது.

அடிப்படையில் இந்த சமூக வலைத் தளங்களானவை, உலகின் எந்த மூலை யிலுமிருக்கும் ஒருவருடன் தொடர்பை மேற்கொள்ளுதல் எனும் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை. இணை யத் தொழில்நுட்பம் உலகத்தை அந்த ளவு குறுக்கி உள்ளங்கைக்குள் வைக்கி றது என்பதற்கு முகநூல் போன்ற சமூக வலைத் தளங்கள் மிகச் சிறந்த உதார ணங்கள். இவ்விணையத்தளங்கள் மிகவும் பிரபலமடைந்து வருவதால் தினமும் புதிது புதிதாய் உருவாக்கப்படு கின்றன. அத்துடன் சிறுவர் முதல் முதியவர்கள் வரை சகல வயதினரையும் தம் வசப்படுத்தி வைத்திருக்கின்றன.

எமக்குத் தெரிந்த, தெரியாத நபர்களை நண்பர்களாக இணைப்பது தான் இவ்வலைத்தளங்களின் அடிப்படை. அவ்வாறு நண்பர்களாக இணைபவர் களுடன் செய்திகள், புகைப்படங்கள், ஒளிப்படங்கள், அவற்றுக்கான கருத்துக் கள், குறிப்புகள் எனப் பலவற்றை தமக்கிடையே பகிர்ந்து கொள்ளல் இவ்விணையத்தளங்களின் அங்கத்தவர் கள் செய்யும் வேலையாகும். அத்தளங் களில் இணைந்து மேலும் மேலும் துலாவிச் செல்ல திகட்டாத சுவாரசியம் மிகுந்தவையாக அவை மாறிவிடுகின்றன.

ஆழ ஆராய்ந்து பார்த்தால், பாவனையாளர்களை ஒரு மாயா கற்பனை உலகுக்குள்ளே முடக்கிவிடு கின்றன என்ற உண்மையை உணரலாம்.

முன்னர் தொழில்நுட்ப வசதி வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டன. உலகம் பரந்து விரிந்திருந்தது. இளைஞர்கள் மத்தியில் இருந்த அறிவுத் தேடலும் விரிந்திருந்தது. இளைஞர்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகளும் தற்கொலைகளும் குறைந்தளவில் காணப்பட்டன.

ஆனால் இன்று அந்நிலை தலைகீழாக மாறிவிட்டது. பள்ளி மாணவர்களை இணையம் சமூக வலைத்தளங்களின் பெயரால் தனக்கு அடிமைப்படுத்திக் கொண்டது.

அவசர உலகிலே அதிகரித்து வரும் நேரப் பற்றாக்குறைக்கு மத்தியில் உறவுகளைப் பேணும் சிறந்த ஊடகங்களாக இந்த சமூக வலைத் தளங்கள் இருப்பது உண்மை தான்.

ஆனால் அவை தற்கொலைகளில் கொண்டு போய் முடிக்கும் போதுதான், அவற்றின் பின் விளைவுகளைப் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டு விடுகிறது.

வளரிளம் பருவத்தினர் மத்தியில் காணப்படும் இத்தகைய பிரச்சினைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பெற்றோர்களே தவிர, பிள்ளைகளல்ல.

தம் பிள்ளைகளுக்குத் தேவையான வசதி வாய்ப்புகளை எப்படியாவது வழங்கிவிடத் துடிக்கும் பல பெற்றோர், அவற்றை வைத்துத் தம் பிள்ளைகள் எப்படியெல்லாம் பயன்படுத்துவார்கள் என்பதைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இதை அனுகூலமாகக் கருதும் பிள்ளைகள், அவ்வசதி வாய்ப்புகளைத் துஷ்பிரயோகம் செய்ய முயல்கிறார்கள். விளைவு மன அழுத்தங்களாகவும் தற்கொலைகளாகவும் பரிணமிக்கிறது.

அவ்வசதி வாய்ப்புகளைப் பிள்ளைகளுக்கு வழங்க தாம் படும் சிரமங்களைப் பிள்ளைகளுக்குத் தெரிவிக்க பெற்றோர்கள் தவறிவிடுவதை இதற்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட முடியும். தமக்காகத் தமது பெற்றோர் படும் கஷ்டத்தைப் பிள்ளைகள் உணர்வதில்லை. பெற்றோரும் உணர்த்துவதற்கு முயல்வதில்லை.

நேரகாலமின்றி இந்தச் சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகிவிடும் இளம் பருவத்தினரில் கல்வியும் நடத்தைக் கோலங்களும் பாதிக்கப்படுகின்றன. நண்பர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஆர்வமும் போட்டியும் மிகுதியாவதால், தெரியாதவர்களை எல்லாம் நண்பர்களாக்குகிறார்கள். இது கடைசியில் காதல் தோல்விகளிலும் தற்கொலைகளிலும் முடிகிறது. அறிவும் தேடலும் விசாரிக்கும் அளவுக்கு மனவிருத்தி விசாலப்படாமை இதற்குக் காரணம். உலகின் யதார்த்தங்களை விளங்கிக் கொள்ளும் அளவுக்கு மனம் உளர்ச்சி அடைந்திருப்பதில்லை.



வளரிளம் பருவத்தினரின் இறப்பு வீதத்துக்கு மூன்றாவது முக்கிய காரணமாக தற்கொலை மாறி வருகிறது என்பது கவனத்துக்குரியது. உலகில் தினமும் 11 வளரிளம் பருவத்து இளைஞர்கள் தற்கொலை செய்து உயிரை மாய்ப்பதாகத் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றுள் பெரும்பாலானவை உளவியல் மற்றும் உணர்வு ரீதியான தாக்கங்களால் ஏற்படுபவையாகும்.

நம் நாட்டில் தற்போது உயர்தரப் பரீட்சை நடைபெற்று முடிவுறும் தறுவாயில் இருக்கிறது. இந்தப் பரீடசைக்குத் தோற்றும் பல மாணவர் களை பரீட்சையை அண்மித்த, பரீட் சைக் காலங்களில் கூட முகநூலில் face book காணமுடிகிறது. படித்தவற்றை மீட்டுப்பார்க்க வேண்டிய பொன்னான நேரத்தை முகநூலில் வீணே செலவிடுகிறார்கள். ஆனால் மூளை, மன ஓய்வுக்காக என்று தமக்கே உரித்தான நியாயப்படுத்தலையும் கூடவே வைத்திருக்கிறார்கள்.

பெற்றோர்கள் விழிப்புணர்வுடனும் தமது பிள்ளை என்ன செய்கிறது? என்ற தெளிவுடனும் இருந்தால் இத்தகைய பல விடயங்களைத் தவிர்க்க முடியும்.

வளரிளம் பருவத்தினருடன் கண்டிப்பாகவும் இருக்க முடியாது. அதே சமயம் எடுத்தேன்; கவிழ்த்தேன் எனவும் முடிவெடுக்க முடியாது. ஆகவே அவர்களை நட்புடன், இலாவகமாகக் கையாள வேண்டும்.

சமூக வலைத் தளங்களின் பாவனையைக் கட்டப்படுத்துவதாயின், முதலில் பெற்றோருக்கு அவை பற்றிய அறிவு தேவை. தற்கொலைகள் மலிந்துவிட்ட இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்கள் தங்கள் கெளரவத்தையோ அல்லது சிரமத்தையோ கருதாமல், கணனி, இணையம் தொடர்பான அடிப்படைக் கற்கை நெறிகளையாவது கற்கத் தலைப்பட வேண்டும். அது இரு வழிகளில் நன்மை பயக்கிறது. ஒன்று பெற்றோருக்கு, தமது பிள்ளைகள் கணனியில் என்ன செய்கிறார்கள் என்பது தெளிவாகும். தமது பெற்றோருக்கும் இந்த விடயங்கள் பற்றிய அறிவு உண்டு என உணரும் பிள்ளைகள் இணையத்தையும் கணனி வசதிகளையும் துஷ்பிரயோகம் செய்யப்பயப்படுவார்கள் என்பது இரண்டாவது நன்மை.

அதேபோல பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பிள்ளைகளுடன் அளவளாவி அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும். பிள்ளையின் நடத்தைக்கோலத்தில் மாற்றங்கள் தென்பட்டாலோ அல்லது மன அழுத்தம், தற்கொலை முயற்சிக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ, உடனடியாக வைத்திய உதவியை அல்லது மனநல ஆலோசகரின் உதவியை நாடுவதே மிகச் சிறந்தது.

வளமான பழக்கவழக்கங்களையும் பண்புகளையுமுடைய பண்பாடான கீழைத்தேயக் கலாசாரத்தை சார்ந்த மக்கள் நாங்கள்!

மேலைத்தேய நாகரிக மோகத்தில் எமது கலாசாரத்தின் நல்ல பண்புகளைக் காற்றுடன் கலந்து விட்டு, மேலைத் தேயக் கலாசாரத்தின் ஆரோக்கியமற்ற விடயங்களை மட்டும் உறுதியாகப் பற்றி நிற்கிறோம். இது எம்மை எங்கு கொண்டு போய் விடுமென்பதில் எவருக்குமே வெளிச்சமில்லை.

எமது நிலையை நாம் உணர்வதற்குள் ஒரு மாணவியின் உயிர் பலியாகி விட்டது. ஆனால் இனியும் அவ்வாறு உயிர்கள் பலியாகாமல் இருப்பது எமது கைகளில் மட்டுமே தங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment