Tuesday, March 8, 2011

எண்ணெயின்றி அமையுமோ உலகு?


நைல்நதியினை அண்டிய ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பைத் தவிர மிகுதியாவுமே பாலைவனத்தை ஒத்தவை என்று கூறப்படக்கூடிய நாடு எகிப்து. ஏறத்தாழ 80 மில்லியனை அண்டிய குடிசனத் தொகையுடைய ஒரு நாட்டிலே விவசாயம் செய்யக்கூடிய நிலப்பகுதி 3% சதவீதம் மட்டுமே என்பது வெளிப்படை உண்மையாகும். எகிப்தின் வருடாந்த மழை வீழ்ச்சி 2 அங்குலத்திலும் குறைவானதாகும்.
1960 களிலே 27 மில்லியனாக இருந்த சனத்தொகை தற்போது கிட்டத்தட்ட 3 மடங்காகியுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் 2050 அளவிலே எகிப்தின் சனத்தொகை இரட்டித்து 160 மில்லியனாகும் என எதிர்வு கூறப்படுகிறது.
தனது உணவு விநியோகத்தில் 40 சதவீதத்தையும் தானியத்தேவையின் 60 சதவீதத்தையும் இறக்குமதியிலேயே நம்பியிருக்கச் செய்கிறது எகிப்து. கொடூர ஆட்சியாளர் என வர்ணிக்கப்பட்ட எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக் காலத்திலே எகிப்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதம் உணவு மற்றும் எரிசக்தி மானியங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை 1996 இலே உச்சத்தைத் தொட்டிருந்த எகிப்தின் எண்ணெய் உற்பத்தி தற்போது 30 சதவீதத்தாலும் எண்ணெய் ஏற்றுமதி 50 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது எகிப்தினுடைய நிலையாக இருந்தாலும் பெரும்பாலான வளைகுடா நாடுகள் இதே நிலையைத்தான் எதிர்நோக்குகின்றன.
ஒரு மாதத்துக்கு முன்னர் 96 அமெரிக்க டொலர்களாக விருந்த மசகெண்ணெய் பரல் ஒன்றின்விலை எகிப்தில் மக்கள் போராட்டம் வெடித்து ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதுடன் 115 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது.
எகிப்தில் தொடங்கிய மக்கள் போராட்டம் வளைகுடா மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் தொடர்கிறது. லிபியா, பஹ்றெயின், யெமன், ஈரான், அல்ஜீரியா என அந்தநாடுகளின் பட்டியல் நீளுகிறது. உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு இந்த நாடுகள் பங்களிக்கின்றன.
ஏலவே 1973 இல் ஈரானியப் புரட்சியின் போது உருவாகிய நிலையொன்றைத் தற்போதும் எதிர்பார்க்கமுடியுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஷியா முஸ்லிம் சமூகத்தவர் மேற்கொண்டுவரும் அரச எதிர்ப்புப் போராட்டம் தனது நாட்டுக்கும் பரவிவிடுமோ என சவுதி அச்சம் கொண்டிருக்கிறது. ஏனெனில் ஷியா முஸ்லிம்கள் வசிப்பதும் பிரதான எண்ணெய்க்கிணறுகள் காணப்படுவதும் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணங்களிலேயே ஆகும்.
பஹ்றெயின், எண்ணெய் உற்பத்தியிலே குறைந்தளவான பங்களிப்பைச் செலுத்தும் சிறிய தீவாயினும் பாரசீக வளை குடாவிலே அதன் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் வளைகுடாநாடுகளின் 18 சதவீத எண்ணெய்க்கிணறுகள் பஹ்றெயினை ஒட்டிய கடற்பகுதியிலே காணப்படுகின்றன. அமெரிக்காவின் 5வது கப்பற் தொகுதியும் பஹ்றெயினில் தளம் அமைத்திருக்கிறது.
பல வளைகுடா நாடுகளில் தொடரும் அமைதியற்ற நிலைமை சவுதியிலும் தொடரலாமென அஞ்சியதாலோ என்னவோ ஏறத்தாழ 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சலுகைகளையும் நன்மைகளையும் சவுதி அரசர் தன் நாட்டு மக்களுக்கு அறிவித்திருந்தார்.
“எண்ணெய் விலை தற்போது மூன்றிலக்கங்களாக அதிகரித்திருப்பதானது எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா நாடுகள் பெறும் வருமானத்தை அதிகரிக்கத்தானே வேண்டும்? மாறாக அமைதியின்மையல்லவா ஏற்பட்டிருக்கிறது!” என்ற சந்தேகம் பலர் மனதில் எழுத்தான் செய்கிறது.
ஏனெனில் சக்தி உள்Zடுகளுக்கும் உணவுப் பொருட்களின் விலைக்குமிடையே நேரடித் தொடர்பு உள்ளது. எண்ணெய் விலை அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. எண்ணெய் விலை அதிகரித்தாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய்க்கு மானியங்கள் இருக்கின்றன. ஆனால் தானிய மற்றும் உணவுப் பொருள் விலை அதிகரிக்கும் போது, ஏற்றுமதி செய்யும் பிரதான நாடுகளான கனடா, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலே மானியங்கள் வழங்கப்படுவதில்லை.
அத்துடன் விவசாயத்துக்குப் பயன்படும் உழவு இயந்திரங்களும் நீர்இறைக்கும் இயந்திரங்களும் கூட எரிபொருளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த நாடுகள் எல்லாம் நவீன நீர்ப்பாசன முறைமைகளைப் பயன்படுத்துபவை. நவீன நீர்ப்பாசன முறைமையும் எரிபொருள் பயன்பாடும் ஒன்றுடனொன்று பின்னிப்பிணைந்தவை இதனாலேயே மசகெண்ணெயின் விலை உயர்வு உணவுப் பொருள் விலையில் நேரடியாகத் தாக்கம் செலுத்துகிறது எனலாம்.
உலகிலேயே உணவுப் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யும் பிராந்தியமாக மத்திய கிழக்குப் பிராந்தியம் காணப்படுகிறது. எண்ணெய் விலை அதிகரிக்க இறக்குமதிசெய்யும் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. விளைவைச் சமாளிக்க முடியாத பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இந்த நாடுகளின் வரிசையில் அடுத்ததாக சவுதி அரேபியா இருக்குமோ என்ற சந்தேகமும் வலுப்பெற்றுவருவதும் உண்மையே. எண்ணெய் உற்பத்தியில் சவுதி அரேபியாவையே முழு உலகும் நம்பியிருக்கிறது. எண்ணெய் வள நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி மீது பாரிய அழுத்தத்தைப் பிரயோகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலதிகமாக சவூதி அரேபியாவால் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையே ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் எண்ணெய்ச் சந்தையைப் பொறுத்த வரையிலே இறுக்கமான தன்மையொன்றே காணப்படுகிறது. லிபிய எண்ணெயை சவுதி எண்ணெய் பிரதியீடு செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது. ஆனால் லிபிய எண்ணெயுடன் ஒப்பிடும்போது சவுதி எண்ணெயின் செறிவும் கந்தகக் கலப்பும் அதிகமாகும். ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் பழைய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் கந்தகக் கலப்பு அதிகமுள்ள செறிவான எண்ணெயைச் சுத்திகரிக்க முடியாதவை.
ஆகையால் சவுதியின் எண்ணெயை ஆசிய நாடுகளுக்கே அனுப்பவேண்டி உள்ளது. ஏனெனில் அந்த நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் புதியவை. பல்வேறு தரங்களை உடைய எண்ணெயையும் சுத்திகரிக்கக் கூடியவை.
ஆசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மேற்கு ஆபிரிக்க எண்ணெய் லிபிய எண்ணெயை ஒத்தது. ஆதலால் அந்த எண்ணெயை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய நிலை உள்ளது.
இத்தகையதோர் நிலையானது எண்ணெயின் கேள்விக்கும் விநியோகத்துக்குமிடையே ஒரு சமநிலையை ஒருபோதும தோற்றுவிக்காது. அத்துடன் இந்தப் பிரதியீட்டு முயற்சிகளுக்கிடையிலான விலை வித்தியாசம் கிட்டதட்ட 15 அமெரிக்க டொலர்களாகும். இது இப்படியே தொடர்ந்தால் 1978 இலே எண்ணெய் சந்தை வீழ்ச்சி கண்டதை ஒத்த நிலைமை மீண்டும் உருவாகலாமென நம்பப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 26ம் திகதி தீவிரவாதத் தாக்குதலொன்றை யடுத்து ஈரானின் பிரதான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை முற்றாக மூடப்பட்டது. விளைவு உலகின் நாளாந்த எண்ணெய் உற்பத்தியில் 500,000 பரல்கள் கேள்விக் குறியாயின.
இந்த சமிக்ஞைகள் எல்லாம் உலக பொருளாதாரத்தை ஒரு இருண்ட யுகத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனவோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது மூன்றாம் உலக நாடுகளே. ஏனெனில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தலா வெளியீட்டுக்கான எண்ணெய் பாவனை 3ம் உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவாகும்.
அமெரிக்காவின் பொருளாதாரம் சீனாவுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு பெரியது. ஆனால் சீனாவின் எண்ணெய்ப் பாவனையில் இரண்டு மடங்கே அமெரிக்காவின் எண்ணெய்ப் பாவனையாக இருக்கிறது.
அபிவிருத்தியடைந்த நாடுகளிலே அதிகளவில் பாதிக்கப்படப்போகும் நாடாக அமெரிக்கா இருக்கிறது. ஏனெனில் அதன் பொருளாதாரம் எண்ணெயை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்காவில் எண்ணெய் விலையில் ஏற்படும் 10 சதவீத அதிகரிப்பானது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 0.2 சதவீதத்தால் குறைக்குமென அறியப்பட்டுள்ளது.
அதேபோல ஆசிய நாடுகளும் மிகச் சிக்கலான தொரு நிலையையே எதிர்நோக்குகின்றன. விளைவு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றபோது எதிர்காலம் என்ன சொல்லப்போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

Thursday, March 3, 2011

உலகை உலுக்கியிருக்கும் மற்றொரு நிலநடுக்கம்

“குடந்தையில் நெருப்பால் இழந்தோம் 
சுனாமியில் நீரால் இழந்தோம் 
போபாலில் வாயுவால் இழந்தோம் 
ஆந்திராவில் வான் மழையால் இழந்தோம் 
குஜராத்தில் நிலடுக்கத்தால் இழந்தோம்
ஐந்தையும் பூதங்கள் என்றவன்
தீர்க்கதரிசிதான்”

என்கிறது கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதையொன்று.



சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழியை அண்மைக் காலமாக இயற்கையும் மெய்ப்படுத்திக் கொண்டே வருகிறது.
அதற்கமையவோ என்னவோ கடந்த செவ்வாயன்று நியூசிலாந்தின் தோட்ட நகரம் என்று பெயர்பெற்ற கிரைஸ்ட் சேர்ச் நகரிலே 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரம் கிரைஸ்ட் சேர்ச். அதன் சனத்தொகை ஏறத்தாழ 377000 ஆகும். கன்டபரி சமவெளியிலே அமைந்திருக்கும் கிரைஸ்ட் சேர்ச் பகுதியிலே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 7.1 ரிச்டர் அளவிலான ஒரு பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவால் ஏற்பட்ட பின் அதிர்ச்சியே கடந்த செவ்வாயன்று 6.3 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.
இந்த இரண்டு அனர்த்தங்களையும் தவிர கன்டபரி சமவெளிப் பகுதியானது ஆயிரக் கணக்கான வருடங்களாக எந்தவொரு பூமி அதிர்ச்சியையும் எதர்நோக்கவில்லை. கடந்த ஆண்டு பூமியதிர்ச்சி இடம்பெறும் வரை அப்பகுதியில் நிலக்குறை இருப்பதை விஞ்ஞானிகள் அறிந்திருக்கவும் இல்லை.
நகரின் பெரிய கட்டடங்களும் 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயமும் முற்றாக இடிந்து போயுள்ளன. இடிபாடுகளுக்குள் இருந்து ஏறத்தாழ 100க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 164 பேர் அபாயகர நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2500க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். இன்னும் 200க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கின்றனர் மீட்புப் பணியாளர்கள். இடிபாடுகளுக்குள் சிக்குண்டிருப்போரை உயிருடன் மீட்கும் சாத்தியம் குறைவாகவே இருப்பதாக அவர்கள் அவநம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கடந்த செவ்வாயன்று நிகழ்ந்த நில நடுக்கத்தின் பின்னரும் 70 தடவைகள் அப்பகுதியில் அதிர்வு உணரப்பட்டதாகவும், இந்நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கலாமெனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த அனர்த்தத்துடன் ஒப்பிடும்போது இந்த அனர்த்தம் ரிச்டர் அளவில் சிறியதுதான். ஆயினும் கடந்த வருடம் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2010 இல் ஏறபட்ட நிலநடுக்கம் நிலத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏற்பட்டது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையன்றோ நிலத்தில் 4 கிலோ மீற்றர் ஆழத்திலே ஏறபட்டிருக்கிறது. அத்துடன் நெரிசல் மிகுந்த நேரத்திலே நடந்திருக்கிறது. விளைவு; நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்ச்சேதம், பல இலட்சங்கள் பெறுமதியான பொருட் சேதமும் ஏற்பட்டிருக்கின்றது.
இடிபாடுகளுக்குள் சிக்குண்டோரின் சிதைவடைந்த கைகளும் கால்களும் அந்த இடத்திலேயே முறையாக வெட்டி அகற்றப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
கடந்த தசாப்தங்களில் நியூசிலாந்து சந்தித்த மிக மோசமான அனர்த்தமாக இது கருதப்படுகிறது. இந்த அனர்த்தத்தைத் தொடர்ந்து குளிர்க் கால நிலையும் மழையும் மீட்புப் பணியாளர்களை நம்பிக்கையிழக்கச் செய்துள்ளது. மிகவும் அபாயகரமான நிலையில் துணிச்சலுடன் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இடிபாடுகளுக்குள் சிக்குண்ட ஒருவரை மீட்பதற்காக வைத்தியர்கள் சுவிற்சலாந்து இராணுவக் கத்தியைக் கொண்டு அவரது கால்களை அகற்றி உயிருடன் மீட்டதாக வெளிவரும் தகவல்கள் மயிர்கூச்செறியச் செய்கின்றன.
‘இது மிகவும் பயங்கரமானது’ ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற எமக்கு வேறு வழியிருக்கவில்லை’ என்று வைத்தியரொருவர் அந்நாட்டின் செய்திப் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
ஆங்கிலம் கற்கும் ஆசிய மாணவர்களின் சொர்க்கபுரியாக இருந்த ஆறு மாடிக் கட்டடம் தீப்பற்றியதுடன், இடிந்து போயுள்ளது. அந்தக் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்தே பெருமளவிலான உடல்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
பல ஆசிய மாணவர்கள் ஆங்கிலம் கற்பதற்காகவே நியூசிலாந்துக்குச் செல்கின்றனர். நியூசிலாந்தின் இயற்கை அழகு மட்டுமன்றி, அங்கு செலவு குறைவாக இருப்பதுவே மாணவர்கள் அவ்வாறு படையெடுக்கக் காரணமாகிறது. அத்துடன் நியூசிலாந்தைப் பொறுத்தவரையிலே வெளிநாட்டவர்களுக்கு கல்விச் சேவையை வழங்குவதானது, வருடாந்தம் 1.1 பில்லியன் பவுண்டுகளைப் பெற்றுத்தரும் பெரிய வணிகத்துறையாகும். 2010இல் மட்டும் ஏறத்தாழ 72,000 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்பதற்காக நியூசிலாந்துக்குச் சென்றிருக்கின்றனர்.
ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களுடன் அவுஸ்திரேலியரும் இணைந்து தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்த 6.3 ரிச்டர் அளவான நில நடுக்கத்தையடுத்து, நியூசிலாந்தின் மிக நீண்ட பனிமலையிலிருந்து 30 மில்லியன் தொன்கள் நிறைவுடைய பனி தளர்ந்து போயுள்ளது. அருகில் உள்ள தாஸ்மான் ஏரியை நோக்கி சிறிய பனிப் பாறைகளாக இப்பனி பயணிப்பதால் ஏறத்தாழ 11 அடி உயரமான அலைகள் தோற்றுவிக்கப்படுகின்றன.
அண்மைக் காலமாக லாநினா காலநிலையால் நியூசிலாந்து எதிர்நோக்கிய பெருமழையாலும் டாஸ்மான் ஏரியின் இயக்கவியலில் நிகழ்ந்த சடுதியான மாற்றத்தாலும் பனிமலையில் தளர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
5 kசீ கீ 2 kசீ பரிமாணமுள்ள டாஸ்மான் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை பனிப் பாறைகள் நிரப்பியுள்ளன.
ஆங்கிலேய பாணியில் அமைக்கப்பட்ட தோட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் பெயர் போனது கிரைஸ்ட் சேர்ச் நகரம்.
தேனிலவு கொண்டாட வரும் உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமானது. நியூசிலாந்தின் தென் தீவுக்கு நுழைவாயிலாகவும் கிரைஸ்ட் சேர்ச் நகரே காணப்படுகிறது.
ஆதிக் குடியேற்ற வாசிகள் இரு கண்டத்தட்டுக்களுக்கு இடைப்பட்ட வளைவான பகுதியிலே எதேச்சையாக இந்த நகரை அமைத்துவிட்டிருக்கிறார்கள்.
அந்த வளைவில் மேற்பரப்புக்கு அருகாமையிலேயே நிலக்கீழ் நீர் காணப்படுகிறது. 6 மாத கால இடைவெளியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கங்கள் காரணமாக நிலத்தின் உறுதித் தன்மை குலைக்கப்பட்டதால், வீதிகள் சிதைவடைந்துள்ளன. வாகனங்கள் புதைந்து போயுள்ளன. பாதிக்கப்பட்ட கட்டடங்கள் இன்னும் தளர்வடைந்துள்ளன.
அவுஸ்திரேலிய - இந்திய தட்டுக்கும் பசுபிக் தட்டுக்கும் இடையிலேயே நியூசிலாந்து அமைந்துள்ளது.
நிலத் தட்டுக்களின் எல்லைப் பகுதியில் மட்டுமன்றி பல இரண்டாம் நிலைத் தட்டுக்களுக்கு அருகாமையிலும் கிரைஸ்ட் சேர்ச் நகர் அமைந்திருக்கிறது. ஆகையால் கிரைஸ்ட் சேர்ச் பகுதியில் நிலநடுக்கங்கள் யாவுமே ஆழம் குறைந்த பகுதியிலேயே நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றால் ஏற்படும் சேதங்களும் மிக அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரை மீள் கட்டமைக்க மட்டும் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தால் நியூசிலாந்தின் 15 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமன்றி 4.4 மில்லியன் சனத்தொகையும் பெரும் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி யிருக்கின்றது.
உருக்குலைந்து போயிருக்கும் கிரைஸ்ட் சேர்ச் நகரைத் துரிதமாக மீள் கட்டமைக்க வேண்டிய தேவையொன்றும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில், றக்பி உலகக் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நியூசிலாந்திலே நடைபெறவிருக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள றக்பி ரசிகர்கள் நியூசிலாந்தை நோக்கிப் படையெ டுக்கவிருக்கிறார்கள். கிரைஸ்ட் சேர்ச் நகரமும் இந்த றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்க இருந்தது.
இந்த நகரை முற்றாக வேறு இடத்துக்கு நகர்த்துதலே சிறந்தது என ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார் நகரின் பிரதி மேயர். அது சாத்தியமாகாது விடின், நகரில் வர்த்தகப் பகுதியாவது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக இருக்கிறது.
முழு கன்டபரி மாநிலமுமே அதிர்ந்துகொண்டிருக்கும் போது, கிரைஸ்ட் சேர்ச் நகரை நகர்த்துவதென்பது பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
19ம் நூற்றாண்டிலே கிரைஸ்ட் சேர்ச் நகரில் குடியேறி, அந்நகரை வடிவமைத்த வர்கள் புவியியல் விடயங்களில் அதிக ளவு கவனம் செலுத்தியிருக்கமாட்டார் கள். ஆதலால் பூகம்ப வலயங்களில் அமைந்திருக்கும் நகரங்களான சான்பிரான் சிஸ் கோ போன்றவற்றின் திட்டமிடல், வடிவமைப்புகளை கற்றறிந்து அவற்றை கிரைஸ் சேர்ச் நகரிலும் கைக்கொள்ள வேண்டும்.
உருக்குலைந்த நகரம் விரைவில் மீளெழுந்து விடும் என்ற நம்பிக்கையை கடந்த கால வரலாறு உணர்த்தி நிற்கிறது. ஆதலால், காலமே சிறந்த மருந்தாகத் தெரிகிறது.

Monday, February 21, 2011

உணவின்றியும் வாழ முடியுமா ?

எகிப்து, டுனிசியா என்று ஆரம்பித்து இன்று அரபு நாடுகள் மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலும் பரவியிருக்கும் அரச எதிர்ப்புப் போராட்டங்களின் பின்னணியில் மக்கள் எதிர்கொண்ட அரசியல் மற்றும் பொருளாதர ரீதியிலான நெருக்கடிகளே காரணமாக இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

2010, 2011 ஆம் ஆண்டுகளிலே உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற தொடர் இயற்கை அனர்த்தங்கள் மக்கள் மீது பொருளாதார நெருக்கடி திணிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாய் அமைந்துவிட்டது.
பல உணவுப் பொருட்கள் என்றுமில்லாதவாறு உச்ச விலையை அடைந்திருக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருக்கிறது. இதனால் உலக மக்களின் உணவுப் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கிறது.
இற்றைக்கு ஒருவருடத்துக்கு முன் உலகளாவிய ரீதியில் 196.7 மில்லியன் தொன்களாக இருந்த கோதுமையின் இருப்பு தற்போது 175.2 மில்லியன் தொன்களாகக் குறைந்திருக்கிறது. சோளத்தின் இருப்பு கடந்த மாதம் 130 மில்லியன் தொன்களாக இருந்தபோதும் தற்போது 127.3 மில்லியன் தொன்களாகவே இருக்கிறது. அதேபோல சோயா அவரையின் இருப்பு, இவ்வருட ஆரம்பத்தில் 60.4 மில்லியன் தொன்களாக இருந்தது. இந்தப் பருவ காலத்தின் முடிவில் அது 58.78 மில்லியன் தொன்களாகக் குறைவடைந்திருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்குள் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. உலகளாவிய ரீதியில் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக உலக வங்கியின் தலைவர் றெபேட் சொலிக் தெரிவித்துள்ளார்.
முதன் முறையாக உலகளாவிய விவசாய விளைச்சல் இம்முறை பெரு வீழ்ச்சி கண்டுள்ளது. கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுள் பெரும்பாலானவற்றிலே விளைச்சல் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. சீனா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, உக்ரெயின், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகியனவே அந்த முன்னணி நாடுகள் ஆகும்.
2010 இன் இலைதுளிர் காலத்தில் சீனாவின் பல மாகாணங்களிலும் வியட்நாம் தாய்லாந்து உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் கடும் வரட்சி நிலவியதுடன் பனிப்புயலும் தாக்கியது. தென் மேற்கு சீனாவைப் பொறுத்தவரையிலே இது கடந்த ஒரு நூற்றாண்டில் நிலவிய மிக மோசமான வரட்சியாகக் கருதப்படுகிறது.
இந்தியாவிலே பதிவு செய்யப்பட்ட வெப்ப அலைகளின் தாக்கமும் அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையும் அரசியல், பொருளாதார ரீதியாகப் பல அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றன.
ரஷ்யாவிலே கடந்த 130 வருடங்களுள், என்றுமில்லாதவாறான உயர் வெப்பநிலை பதியப்பட்டிருக்கிறது. பல இடங்களில் பரவியிருந்த வரட்சியும் மொஸ்கோ உட்பட 7 பிராந்தியங்களில் பரவிய காட்டுத்தீயும் கோதுமை விளைச்சலில் பெரும் பின்னடைவை எதிர்நோக்கின.
கடந்த வருடம் நிலவிய கடும் வரட்சியாலும் குளிர்கால நிலையாலும் பிரான்ஸ் அரசு தனது கோதுமை உற்பத்தி 2.7 சதவீதத்தால் வீழ்ச்சியடையும் என எதிர்வு கூறியிருக்கிறது.
கனடாவின் மேற்குப் பகுதியில் தானியங்கள் விளையும் பல மாநிலங்களில் நிலவிய வரட்சி விளைச்சலை வெகுவாகப் பாதித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் பார்லி அரிசி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் உக்ரெயின் கோதுமை உற்பத்தியில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. ரஷ்யாவைப் போலவே உக்ரெயினின் விளைச்சலை வரட்சியும் காட்டுத்தீயும் பாதித்தன. விளைவாக 2011 க்கான தானிய ஏற்றுமதியை உக்ரெயின் நிறுத்தியுள்ளது
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தம் தான் கோதுமைக்குப் பஞ்சம் ஏற்படப்போவதை உலகுக்கு உணர்த்தியது. ஏறத்தாழ பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் பரப்பளவையுடைய பிரதேசங்களை வெள்ளம் மூடியது. கோதுமைப் பயிர்கள் அழிந்தே போயின.
பாகிஸ்தான் எதிர்கொண்ட வெள்ள அனர்த்தமானது 17 மில்லியன் ஏக்கர் விளைநிலங்களைப் பாதித்தது. வெள்ளத்துடன் 200,000 க்கும் மேற்பட்ட கால் நடைகளும் தானியங்களும் அடித்துச் செல்லப்பட்டன. அடுத்த போகத்துக்கான விதைத் தானியங்கள் கூட இல்லாத நிலையில் தவித்துப் போய் நிற்கிறார்கள் பாகிஸ்தான் விவசாயிகள். இயற்கை அனர்த்தங்களால், கோதுமை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகள் மட்டும் பாதிக்கப்படவில்லை.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பிராந்தியமான தென் அமெரிக்காவும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கத்தை எதிர்கொண்டது. ஆர்ஜன்ரீனா பொலிவியா ஆகிய நாடுகள் கடும் வரட்சியை எதிர்நோக்கிய அதேவேளை, அப்பிராந்தியத்தின் மிகப் பெரிய நாடான பிரேசில் வெள்ள அனர்த்தத்தை எதிர்கொண்டது.
ஐக்கிய அமெரிக்காவின் 50 மாநிலங்களுள் 49 மாநிலங்களில் கடும் பனிப் பொழிவு காணப்பட்டது. புளோரிடாவில் நிலவிய மோசமான உறை பனிக்கால நிலையானது பயிர்களை வெகுவாகப் பாதித்தது. கலிபோனியாவில் பொழிந்த மழை காரணமாக பயிர்கள் பாரியளவில் அழிந்து போயின.
ஆசியாவிலே இறைச்சி ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் தென் கொரியாவில் கால்நடைகளுக்கு ஏற்பட்ட கால்வாய் நோயால் மில்லியன் கணக்கான கால்நடைகளை அழிக்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. மகரந்தச் சேர்க்கை இன்றி மரக்கறி மற்றும் பழவகைகளின் உற்பத்தி இல்லை என்பது வெளிப்படை உண்மை. மகரந்தச் சேர்க்கைக்கு ஒரு காரணமாய் அமையும் சில தேனி குடித்தொகைகள் ஐக்கிய அமெரிக்காவில முற்றாக அழிந்துபோயுள்ளன. அதேவேளை அமெரிக்காவின் வெளவால்களின் குடித்தொகையும் காரணமின்றி திடீரென அழிந்து போயுள்ளது. இவற்றிற்கான காரணங்கள் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் அவற்றின் பின்னணியில் மனித செயற்பாடுகள் தான் எஞ்சியிருக்கப் போகின்றன என்பது தெளிவான உண்மை.
இவ்வாறு மகரந்தச் சேர்க்கை நடைபெறக் காரணமாகும் உயிரினங்களின் அழிவாலும் விளைச்சலில் பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கடந்த 3 தசாப்தங்களுள் என்றுமில்லாதவாறு சீனியின் விலை உயர்ந்திருக்கிறது. அதற்கான பிரதான காரணம், அவுஸ்திரேலியாவைத் தாக்கிய யாசி என்ற சூறாவளியால் கரும்புப் பயிர்ச் செய்கை அழிந்து போனமையாகும்.
மலேசியா எதிர்கொண்ட வெள்ள அனர்த்தத்தால் மூன்றாம் உலக நாடுகளின் பிரதான சமையல் எண்ணெய்யாகிய பாம் எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.
நாம் யாவரும் ஒருமித்து எதிர்கொள்ளவுள்ள இந்த உணவு நெருக்கடியால் வளர்முக நாடுகளில் மட்டும் 870 மில்லியன் மக்கள் பட்டினியாலும் போஷாக்கின்மையாலும் பாதிக்கப்படுவர் என உலக வங்கி எச்சரித்துள்ளது. அதே சமயம் அந்த எண்ணிக்கை 925 மில்லியனாக அதிகரிக்கும் என உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.
தானிய உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பல நாடுகள் தற்போது தானிய இறக்குமதிக்கான வரியை இரத்துச் செய்துள்ளன. அதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் 820,000 தொன் அரிசியை இறக்குமதி செய்தது இந்தோனேசியா. அத்துடன் அரிசி, சோயா அவரை மற்றும் கோதுமை ஆகியவற்றிற்கான இறக்குமதி வரியையும் இரத்துச் செய்தது.
மக்கள் உண்பதற்கு உணவு இல்லாமல் போனால் மூன்று விடயங்கள் நடக்கலாம். ஒன்று மக்கள் புரட்சி வெடிக்கும் இல்லையேல் குடிபெயர்வர். அதுவும் இல்லையேல் அவர்கள் இறந்து போகக்கூடும் என்கிறார் உலக வங்கியின் தலைவர்.
இது விளையாட்டாகக் கருதக்கூடிய ஒரு நிலைமை அல்ல என்பதை நாம், நினைவில் கொள்ள வேண்டும். இன்று உண்ண உணவு இருக்கிறது. எதற்காக எதிர்காலத்தைக் எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற பொதுவான நிலைப்பாடும் மனநிலையும் எம்மில் பலர் மத்தியில் காணப்படுவது உண்மை.
எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்படவேண்டும் என்ற அவசியம் இல்லைத் தான். ஆயினும் எதிர்காலத்தை எண்ணி அதற்காக எம்மைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் எமக்கு உண்டு.
நாகரிக வளர்ச்சியுடன் அதிகரித்த மனிதனின் தேவைகள் அடிப்படை, அத்தியாவசியம் எனப் பல நிலைகளைக் கடந்து எங்கோ சென்றிருக்கின்றன. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை உணவு அடிப்படைத் தேவையாகத்தான் இருந்து வருகிறது.
ஆதலால் எதிர்காலத்தில் முழு உலகுமே எதிர் நோக்கவிருக்கும் உணவு நெருக்கடியை நிதி நிலைமையின் அடிப்படையில் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டிய தேவையொன்று எமக்கு இருக்கிறது.
உலக உணவு நெருக்கடி அதிகரிக்க, உணவுப் பொருட்களின் விலை தானாகவே உயரும். அத்தகையதோர் நிலையில் பெரும்பான்மையான மக்களால் அதற்கு ஈடு கொடுத்து வாழ முடியாமல் போகலாம். ஆகவே அத்தகைய நெருக்கடி உருவாவதற்கு முன்னரே எம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு இதுவரை காலமும் நாம் கைக் கொண்டுவந்த பழக்கங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைக்க வேண்டும்.
எமது உணவுச் செலவுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்து ஆராயவேண்டும். வீட்டிலே சமைக்கும் உணவு வகைகளுக்கும் உள்ளூர் விளைச்சலால் பெறப்படும் தானிய, மரக்கறி மற்றும் பழவகைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். அவசர உணவுக்கலாசாரத்தினுள் சிக்குண்டிருக்கும் பலருக்கு அது சிரமமாகத்தான் இருக்குப்போகிறது.
உணவுப் பழக்கங்களை மாற்றவேண்டும். சத்தான உணவை அளவாக உண்ணும் நடைமுறைகளைக் கைக் கொள்ளவேண்டும். 2ம் உலக மகாயுத்த காலங்களில் பல நாடுகளிலே உணவுப் பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன. அதனால் மக்களின் உணவுப் பழக்கங்களில் பாரிய மாற்றமொன்று ஏற்பட்டது.
எதற்குமே இயலாத கட்டமொன்று ஏற்படும்போது இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதனவாகி விடுமென்பது கண்கூடு.
நாம் மழைக்காலங்களிலோ அல்லது வேறு சில நெருக்கடியான காலங்களிலோ எதிர்காலத்துக்காக உணவுப் பொருட்களைச் சேமித்துவைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தோம். அந்த வழக்கம் இன்று மலையேறிவிட்டது. மாறாக அன்றாடப் பிரச்சினையை மட்டுமே நோக்கும் புதுவித வழக்கத்தைக் கைக்கொண்டு வருகிறோம்.
ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான உணவுப் பொருட்களைச் களஞ்சியப்படுத்தி வைக்கவேண்டிய கடப்பாடு எமக்கு உருவாகிவிட்டது. அதற்கு மேலதிகமான பணம் செலவாகும் தான். ஆயினும் நெருக்கடிக் காலத்துக்காக களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் இருக்கின்றன என்பதே மனநிம்மதியைத் தரும். அத்துடன் ஒவ்வொரு மாதமும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ள ஒரு சிறு தொகைப் பணத்தைத் தனியாக சேமித்து வரவேண்டும். இந்த நடைமுறைகள் தான் உணவு நெருக்கடி எம்மை முற்றாகப் பாதிக்காமல் இருக்க உதவப் போகின்றன என்பது மட்டுமே நிதர்சனம்.

Sunday, February 6, 2011

இயற்கையிலும் ஒரு குருஷேத்திரம்





‘கடைசியாய் ஒருமுறை

கூவிக் கொள்க குயில்களே’

என்று தொடங்கி,

‘திட்டுத் திட்டாய் பூமிக்குள்ளிருக்கும்

தட்டுக்கள் எழும்

ஓன்றன் மீதொன்று படையெடுக்க...



பூமியின் வயிற்றெரிச்சலாயக்

காலங்காலமாய் கனன்று கிடந்த

அக்கினிக்குழம்புகள்

விடுதலை கேட்க....



வெறிகொண்ட மேகங்கள்

விரைவதைப் போலப்

பாறைகள் பூமிக்குள்

பயணப்பட...



தொடங்கிவிட்டது தொடங்கிவிட்டது

பூமிக்குள் ஒரு குருஷேத்திரம்’

என்று நீளுகின்றன.

கவிஞர் வைரமுத்துவின் வரிகள்.



முழுமையாகப் படித்துணர்ந்தவர்களுக்கு அவ்வரிகளின் யதார்த்தம் விளங்கியிருக்கும்.

அண்மைக் காலங்களாக நாம் கண்டும் கேட்டும் அனுபவித்துக் கொண்டும் இருக்கும் இயற்கை அனர்த்தங்கள் இக்கவிதையை மேன்மேலும் நியாயப்படுத்துவதாகவே அமைகின்றன.

அவற்றிற்கப்பால் இன்று பலராலும் பேசப்படும் ஒரு விடயமாக ‘2012’ மாறிவிட்டது. அண்மைக்காலங்களில் நிகழும் தொடர் இயற்கை அனர்த்தங்கள் ‘2012’ தொடர்பான ஊகங்களை வலுப்பெறச் செய்கின்றனவோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

ஆனால் அந்த ஊகங்களை மறுக்கின்றனர் நாசா விஞ்ஞானிகள் 2012 தொடர்பான ஊகங்களுக்கான நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் எங்கே? என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. அவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்ட புனைகதைகளே என்கின்றனர் அவ்விஞ்ஞானிகள்.

2012 தொடர்பான ஊகங்களில் ஒன்றுதான் புவிக்கோளத்தின் வட, தென் முனைவுகளின் இடமாற்றமாகும். வட, தென்முனைகளின் இடமாற்றம் என்றதுமே வடமுனைவு தென்முனைவாகவும் தென்முனைவு வடமுனைவாகவும் மாறிவிடும் என்றே பலர் எண்ணுகின்றனர். ஆனால், ஒரு எல்லை வரை அது உண்மையாகாது.

புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமே இந்த வட, தென் முனைவுகளின் இடமாற்றம் என்கின்றனர் விஞ்ஞானிகள். புவிச்சுழற்சி அச்சில் ஏற்படும் மாற்றமானது நிலநடுக்கங்கள், சுனாமி அனர்த்தம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்களை ஏற்படுத்தலாமென அவர்கள் தரப்பில் எதிர்வு கூறப்படுகிறது.
புவிக்கோளத்தைச் சூழ காந்தப்புலமொன்று தொழிற்படுவது நாம் யாவரும் அறிந்ததோர் விடயமே. புவிச்சுழற்றி அச்சில் ஏற்படும் மாற்றம் புவியைச் சூழவுள்ள காந்தப்புலத்திலே மாற்றத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது. புவிக்கோளத்தின் வரலாற்றிலே இது ஒன்றும் புதிய விடயமல்ல.

அத்தகையதோர் மாற்றம் 785,000 ஆண்டுகளுக்கோ அதற்கும் முன்னரோ, நிகழ்ந்திருக்கலாம். எனக் கூறப்படுகிறது.

விஞ்ஞான ரீதியான அனுமானங்களின் அடிப்படையில் புவிச்சுழற்சி அச்சின் இடமாற்றம் ஏறத்தாழ 300,000 ஆண்டுகளின் முன்னர் இடம்பெற்றதாகக் கணிப்பிடப்படுகிறது. புவிக்கோளத்தைப் பொறுத்தவரை அது இயற்கையானது.


புவியைச் சூழவுள்ள காந்தப்புலம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, என்பது இன்றும் விஞ்ஞானிகள் மத்தியில் புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், புவிக்கோளத்தில் உள்ள உயிர்களின் நிலைப்பு அந்தக் காந்தப்புலத்திலேயும் தங்கியுள்ளது என்பதை அவர்களால் உணரமுடிகின்றது.

புவிக்காந்தப்புலத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட உலகளாவிய அழிவை ஏற்படுத்தவல்லது என்பதை நம் முன்னோர்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்திருந்தனர்.

புவிக்கோளத்தின் உட்படைகளுள் அதன் மையத்தில் திண்மக் கோளமும், அதைச்சூழ திரவ இரும்பையொத்த குழம்பும் காணப்படும். ஆக வெளியிலே உள்ளபடைதான் புவியோடு எனப்படுகிறது. புவியின் இந்தக் கட்டமைப்பை ஒரு பிரமாண்ட டைனமோவின் இயக்கத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கிறது விஞ்ஞானிகளின் ஞானம்.

அந்த அடிப்படையில் புவிக்கோளத்தின் கட்டமைப்பு தான் அதைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குக் காரணம் என்ற விளக்கத்தையும் சேர்த்தே முன்வைக்கின்றனர் விஞ்ஞானிகள்.

உண்மையில் முனைவுகளின் இடமாற்றம் என்பது ‘புவிச் சுழற்சி அச்சு இன்று இருக்கும் இடத்தில் நாளை இருப்பதில்லை’ என்ற கருதுகோளையே குறிக்கிறது.


முனைவுகளின் இடமாற்றத்தை புவித்தட்டுக்களுடன் இணைந்து குழப்ப வேண்டிய அவசியமில்லை. புவித் தட்டுக்களின் நகர்வு முற்றிலும் வேறு பட்டதானதோர் நிகழ்வாகும். அதேபோல முனைவுகள் இடம்மாறினால் காந்தம் வடக்கும் தெற்கும் கூட இடம்மாறும் என்று அனுமானிப்பதும் மிகத்தவறான விடயமாகும்.

அண்மைக்காலங்களிலே புவியியலாளர்களும் விஞ்ஞானிகளும் இணைந்து நடாத்தினர். அவற்றின் அடிப்படையில் புவிக்கோளமானது ஏறத்தாழ 800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் (முன்கம்பிரியன் காலம்) தனது சமநிலையை மீளமைத்துக் கொண்டது எனக் கூறப்படுகிறது. அடையற் பாறைகளிலுள்ள காந்தத்தன்மையுடைய கனியங்களை ஆய்வு செய்வதன் மூலம் இந்த முடிவுபெறப்பட்டது. கடந்த 20 மில்லியன் வருடங்களில் வடமுனைவானது ஏறத்தாழ 50 பாகை இடமாறியிருப்பதாக (அசைந்திருப்பதாக) அந்த ஆய்வு தெரிவிக்கிறது. GPS (Global Positioning System) தொழில்நுட்பத்தினடிப்படையிலான ஆய்வொன்று இப்படித் தெரிவிக்கிறது.

சாதாரண பருவகால மாற்றங்கள் கூட புவிக்கோளத்தின் நீர், பனிப்பாறைகளின் பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துமெனவும், அந்தமாற்றமானது முனைவுகளில் மிகச் சிறிதளவிலான இடமாற்றத்தை ஏற்படுத்தும். இதுவே அந்த மிஜிஷி ஆய்வு சொல்லும் தகவலாகும்.

அத்தகையதோர் மாற்றம் ஏற்படுமாயின் பூமியில் என்ன எல்லாம் நடக்கலாமெனப் பலரும் பலவிதமான எதிர்வு கூறுகின்றனர்.



காந்தப்புலத்துடன் தொடர்புடைய சகல விடயங்களுமே பாதிக்கப்படுமென்பது பொதுவான ஊகமாகும். அவற்றுள் கப்பல்களும் ஆகாய விமானங்களும் கூட அடங்கிவிடுகின்றன. ஏனெனில் அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் திசையறி கருவி காந்தப்புலத்துடன் தொடர்புடையது. சகல திசைகாட்டிகளும் செய்மதிகளும் கூட செயலிழந்து விடும் நிலையே ஏற்படும். காலத்துக்குக் காலம் இடம்பெயரும் மிருகங்களும் பறவைகளும் கூட எங்கே செல்வது என்று குழப்பமடையும் நவீன தொழில் நுட்ப வசதிகள் யாவுமே ஸ்தம்பித்துப் போகும். மனித சக்திக்கு அப்பாற்பட்டதாக பேரழிவுகள் நிகழும் என்று தெரிவிக்கின்றனர் ஒருசாரார்.

வட- தென் முனைவுகளில் அத்தகைய இடமாற்றம் நிகழ்ந்தால் என்ன நடக்கும் என்பதே எவராலும் துல்லியமாகக் கூறமுடியாது. புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலம் ஏதேச்சையானது என்று ஒருபோதும் கூறமுடியாது. அதன் பிரதான தொழிலே அண்டக் கதிர்களிலிருந்தும் சூரியக் கதிர்களில் இருந்தும் புவிக்கோளத்தை (எம்மை)ப் பாதுகாப்பதாகும்.

இந்த காந்தப்புலம் இல்லையென்றால் பூமியில் உயிர்வாழ்க்கையென்பது கூட சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்திருக்கும். அதே போல புவியில் உயிர்வாழ்க்கை இத்தனை மில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்கின்றதென்றால், அதற்கும் இந்த காந்தப்புலம் ஒரு காரணமாகும். அது இல்லாவிடில் உயிரைப் பறிக்க வல்ல சூரியக்கதிர்ப்புகள் பூமியை நேரடியாக வந்தடையும்.


இயற்கையை மனிதன் முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும். அவன் அறியாத எண்ணற்ற விடயங்களையும் அற்புதங்களையும் புதிர்களையும் இயற்கை தன்னகத்தே கொண்டுள்ளது.



இயற்கையை ஆராயும் இந்த விஞ்ஞானிகளுக்கு 'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற ஒளவையார் வாக்கு மிகவும் பொருந்தும். டேவிட் மொரிஸன் என்ற நாசாவின் சிரேஷ்டவிஞ்ஞானியோ புவி முனைவுகளின் தலைகீழான மாறல் ஒருபோதும் சாத்தியமில்லை என்றே கூறுகிறார். இவ்வளவு காலமும் அத்தகையதோர் நிகழ்வு நடக்கவில்லை. நடக்கவும் மாட்டாது என்பதே அவரது வாதமாக இருக்கிறது. கண்டங்களின் நகர்வு என்பது பலமில்லியன் ஆண்டுகளைக் கருதும் போது சாத்தியம்தான்.

ஆனால் அதற்கும் புவிமுனைவுகளின் தலைகீழான இடமாற்றத்துக்கும் தொடர்பில்லையென்றே கூற வேண்டும். ஆனால் புவிச்சுழசிக்கும் புவிக்கோளத்தைச் சூழவுள்ள காந்தப்புலத்துக்குமிடையே தொடர்புள்ளதாகச் சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் புவி சூழலும் திசைக்கும் காந்தமுனைவுத்தன்மைகுமிடையே எந்தவொரு தொடர்பும் இல்லை. அத்துடன் புவியின் வட தென் முனைவுகள் இடம்மாறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை. பேரழிவுகள் கூட சாத்தியமற்றவையே. மக்கள் இந்த ஊகங்களையெல்லாம் வீணே எண்ணிக் குழப்பமடையத் தேவையில்லை என்பதே விஞ்ஞானி டேவிட் மொரிஸனின் கருத்தாக இருக்கிறது.

எது எவ்வாறாயினும், தனிநபர்களாக நாம் ஒவ்வொருவரும் இயற்கையை மதித்து அதனுடன் இயைந்து வாழப்பழக வேண்டும். எம் நடவடிக்கைகள் இயற்கையின் சமநிலையைக் குழப்புவனவாக அமையக் கூடாது. “நான் மட்டும் செய்வதால் என்ன? மற்றவர் எவரும் செய்யவில்லையே?” என்ற மனப்பாங்கைத் தவிர்க்க வேண்டும். அவைதான் இயற்கை சீற்றமடையாமல் தன் வழியிலேயே பயணிக்க வழிவகுக்கும்.



அடிப்படையில் இயற்கை சாதுவானது. எமக்கு நன்மையே பயப்பது. அந்த சாது மிரளும் போது நாடு தாங்காது. இது ஒன்றும் புதிய விடயமல்ல. கடந்த கால அனுபவங்கள் கூட இதைத்தான் தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கின்றன. இயற்கை சீற்றமடைவதும் சாதுவாக இருப்பதும் கூட எமது கைகளிலேயே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Friday, January 14, 2011

பொங்கலின் பின்னணியில்...

கரும்பு சொல்லும் தத்துவம்


பொங்கல் திருநாளின் போது கரும்பு பெறும் முக்கியத்துவத்தையும் நாம் அறிவோம். ஆனால் கரும்பின் பின்னணியில் இருக்கும் தத்துவம் மிகப்பெரியது. கரும்பு இனிக்கும் என்பதே நாம் பொதுவாகக் கொண்டிருக்கும் அபிப்பிராயம்.
ஆனால் கரும்பின் அடிப்பகுதியிலிருந்து நுனி வரை சுவை ஒரேமாதிரி இருப்பதில்லை.
‘கனை கடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்பு தின்றற்றே...’ என்று தொடர்கிறது நாலடியாரின் பாடலொன்று. நுனிக்கரும்பு உவர்ப்புச் சுவையுடையது.
ஆனால் அடிக்கரும்போ தித்திக்கும் இனிப்புச் சுவையுடையது. கற்றறிந்தோரின் நட்பும் நுனிக்கரும்பி லிருந்து அடிக்கரும்பு வரை சுவைப்பதைப் போன்றது என்கிறது அந்தப் பாடல்.
காலபோகத்திலே விவசாயி கொண்ட கடும் உழைப்பின் பயனே பொங்கலன்று அவன் பொங்கும் அரிசியாகும்.
அந்த உழைப்பின் தத்துவத்தையும் கரும்பு மிக அழகாக உணர்த்துகிறது. வாழ்க்கையும் ஆரம்ப காலங்களில் போராட்டமாக இருந்தாலும் முடிவில் இனிமையைத் தரவல்லது.
கரும்பின் வெளிப்பகுதியிலே எத்தனையோ வளைவுகளும் முடி ச்சுக்களும் இருக்கத்தான் செய்கி ன்றன. ஆனால் அதன் சாறு இனி ப்பானது. அதேபோல சோத னைகளைக் கடந்து சென்றால் தான் வாழக்கை தரும் இனிப் பைச் சுவைக்க முடியும்.
இவை கரும்பின் சுவையிலும் மேன்மையான தத்துவங்கள்.


சர்க்கரைப் பொங்கல் பொங்குவது ஏன்?


தை பிறந்தால் நினைவுக்கு வருவது தைப் பொங்கல். தைப் பொங்கலில் முதன்மை பெறுபவன் சூரியன் ஆவான். தைப் பொங்கலன்று தமிழர்கள் சர்க்கரைப் பொங்கல் பொங்கி சூரியனுக்குப் படைப்பதன் பின்னணியில் புராணக்கதை ஒன்று கூறப்படுகிறது.
தக்கனுடைய மகள் தாட்சாயணி என்பதும் அவளை ஈசன் மணம் முடித்ததும் நாம் அறிந்து விடயமே.
ஒரு முறை தக்கன் கைலாயம் சென்றிருந்த வேளை ஈசனைத் தரிசிக்க பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவாதி தேவர்களும் கூட வந்திருந்தார்கள். மாமனார் என்ற வகையிலே தன்னை ஈசன் விசேடமாகக் கவனிப்பான் என்று எண்ணியிருந்தான் தக்கன். அவ்வாறு நடக்காததால் அவனுக்குக் கிடைத்த ஏமாற்றம் கோபமாக மாறியது.
ஈசன் தன்னை அவமானப்படுத்தியதாக எண்ணிய தக்கன் ஈசனைப் பழிவாங்க எண்ணினான். பெருயாகமொன்றை ஏற்பாடு செய்திருந்தான். யாவரையும் அழைத்திருந்தான். தாட்சாயணியும் அந்த யாகத்திற்குப் போக எண்ணியிருந்தாள்.
ஈசனிடம் தனது எண்ணத்தைத் தெரிவித்திருந்தாள். ‘அவமானம் மட்டுமே உனக்கு மிஞ்சும்!’ என்றான் ஈசன். அதையும் மீறி தக்கனின் யாகத்துக்குச் சென்றாள் தாட்சாயணி. அவளைக் கவனிக்காது அவமானப்படுத்திய தக்கன், ஈசனையும் கேலி பேசினார்.
அங்கு வருகை தந்திருந்த சூரிய பகவான் உட்பட தேவர்கள் பெரிதாகச் சிரித்தனர். அவமானத் தைத் தாங்க முடியா தாட்சாயணி தன் யோக சக்தியால் அக்கினியைத் தோற்றுவித்து அதனுடன் சங்கமமானாள். இதை அறிந்து ஈசன் தன்னுடைய இன்னோர் அம்சமான வீரபத்திரரைத் தோற்றுவித்து யாகசாலையைத் துவம்சம் செய்யப் பணித்தார்.
தேவியை அவமானப்படுத்திய தேவர்களுள் சூரிய பகவான் முக்கியமானவர். சூரியனை நெருங்கிய வீரபத்திரர் “உனது வாய்தானே ஈசனை நிந்தித்தது? எனக் கேட்ட படி சூரிய பகவானின் கன்னத்தில் அறைந்தார். சூரியனின் பற்கள் விழுந்தன. அதன் பின்னர் பிரம்மன் வந்து யாரையும் சமாதானப் படுத்தினான்.
ஈசனை வழிபட்டு, மன்னிப்பு கோரிய தேவர்களை ஈசன் மன்னித்தருளினார். ஆயினும் சூரியன் மீது அவருக்கிருந்த கோபம் மட்டும் தணியவில்லை. ஆதலால் அவன் இழந்த பற்களை மீளப்பெற அவர் அனுக்கிரகமும் செய்யவில்லை. பல்லில்லாதவர்கள் உண்பதற்கும் சர்க்கரைப் பொங்கல் எளிமையாக இருக்குமல்லாவா? ஆதலால் தான் பொங்கல் திருநாளின் போது சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் பொங்கிப் படைக்கப்படுகிறது.


பச்சையரிசி சொல்லும் தத்துவம்


சாதாரணமாக நாம் சோற்றுக்குப் பயன்படுத்தும் அரிசியானது பதப் படுத்தப்பட்ட அரிசியாகும். அதா வது நெல்லை அவித்து உலர்த்திக் குற்றிய அரிசியாகும். ஆனால் மாறாக பச்சை யரிசியென்பது நெல்லை அவ்வாறு அவிக்காமல் குற்றிப்பெறப்பட் டதாகும். பச்சைய ரிசியைப் போன்று பக்குவப்படாத நிலையிலேயே நாங்கள் காணப்படுகி றோம்.
பச்சையரிசியைப் பொங்கியதும் சாப் பிடக்கூடிய பக்குவ நிலையை அது அடை ந்துவிடுகிறது. அதற்க மைய மனம் என்ற அடுப்பிலே இறைசிந்தனை என்ற நெருப்பைச் சுடர் விடச்செய்ய வேண்டும். இறைவன் விரும்பும் பிரசாதமாக நாம் மாற வேண்டும்.
அரிசியைத்தனியே வேகவைத்து சுவையான பொங்கலை ஆக்க முடியாது. பச்சையரிசியுடன் தேங் காய்ப்பால், சர்க்கரை, பயறு, நெய், கொடி முந்திரிகை மரமுந் திரிகை, ஏலக்காய் எல்லாம் சேர்ந் தால் தான் சுவைமிகுந்த பொங் கலாகும்.
உலகியல் இன்பங்களிலே திளைத்து ஆசைகளைச் சுமந்தபடி பக்குவமின்றி திரியும் சாதாரண மாந்தர் நாங்கள்.
பச்சையரிசியுடன் இதரபொருட்கள் சேர் ந்து சுவைமிகு பொங்க லாவதுபோன அன்பு, அருள், சாந்தம், கருணை, அமைதி, பொறுமை போன்ற நற்குணங் களை யும் எம்முடன் சேர்த் துக்கொள்ள வேண்டும்.
பக்தி எனும் பானை யிலே அக்குணங்க ளுடன் கூடிய எம்மை ஏற்றி ஞானம் என்ற நெருப்பிலே எம் மைப் பதப்படுத்தி னால் பொங்கல் போன்ற அருட்பிரசாதமாகி விடுவோம்.
இறைவனும் எம்மை உக ந்து ஏற்றுக்கொள்ளுவான்.

இந்திர விழா பொங்கலுக்கு வழிசமைத்ததோ?

தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது.
சென்னி வெண்குடை நீட நபாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக்
குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன்
னுடைய
நவஞ்சி றந்தது வளம்புகார் நகரம்
என்கிறது அந்தப் பாடல்.

அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு.

தைப்பொங்கல் திருநாள் நாளை
அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.
காவிரிப்பூம் பட்டினத்திலே நிலைத்து நின்று வாழும் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். படைப்புக் காலந்தொட்டே வாழும் குடியினர் என அதற்கு உரை கூறுவர்.
சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் தென்னிந்தியப் பகுதியை ஆண்ட காலத்திலே சோழப் பேரரசின் தலைநகராக காவிரிப்பூம் பட்டினம் இருந்தது. கி.பி. 850 களின் பின்பு, பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டபோது பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டதால், பேரரசின் தலைநகரம் தஞ்சாவூராகியது. காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக் கொண்ட ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
சங்க காலம் தொட்டு தட்சணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையிலே ‘இந்திர விழா’ பற்றிக் கூறப்படுகிறது. அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தில் ஏறத்தாழ 28 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் செம்பியன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.
இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.
தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடக்கிவைத்த விழா ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்தது. இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வீதிகளிலும் கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன.
பொன்னாலான பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டன. கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் பூஜைகள் நடாத்தப்பட்டன.
இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப்பட்டமையால் தான், காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் குறிப்பிடுவர்.
மழை, இடி, மின்னல்களின் கடவுளாக இருப்பவன் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழிக்குமென மக்கள் நம்பினர். மழைக்கடவுளான இந்திரனை வழிபட்டனர்.
சங்க காலத்திலேயே இந்திர வணக்கமும் அவனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் தமிழர்கள் மத்தியில் இந்திருக்கிறது. இதை சங்க இலக் கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்வழக்கம் ஆழ வேரூன்றியிருந்தது.
இந்திரவிழா கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே மழையாகும். மழைக்கடவுளான இந்திரனை விழா எடுத்து வணங்கி அவனது அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதாகும்.
ஆயினும் காலப் போக்கில் வைணவ ஆதிக்கம் மேலோங்க இந்திர விழா எடுக்கும் வழக்கம் அருகி மறைந்துவிட்டது. கண்முன்னே தெரியும் சூரியனே காலநிலையை நிர்ணயிப்பவன் என்ற நம்பிக்கை வந்தது.
விவசாயம் சிறக்க வழிவகுக்கும் முதற்காரணி காலநிலை. அந்த வகையிலே சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம் அறுவடை செய்த புது நெல்லை தை முதல் நாளன்று சமைத்தனர். சூரியனுக்குப் படைத்து நன்றி செலுத்தினர். அது தைப் பொங்கலாகியது.
ஆகையால்தான் இந்திர விழா பொங்கலுக்கு வழி சமைத்தது என்பர். தமிழகத்திலே பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதலாவது நாள் போகியாகும். போகிபோகம் துய்ப்பவனாகிய இந்திரனுக்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டது என்றும் கூறுவர். அன்றைய நாளை வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கும் நாள் என்றும் கூறுவர். இந்திர விழா என்றும் அழைப்பர்.
அறுவடை கண்ட பூரிப்பால் அந்த மகிழ்வைக் கொண்டாடுவதே பொங்கலாகும்.
ஒரு காலத்தில் ஊரே திரண்டு பெருந்திரு விழாவாகக் கொண்டாடிய பண்டிகைகள் எல்லாம் இன்று வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்படுவனவாகச் சுருங்கிவிட்டன. உலகமயமாதலாலோ என்னவோ முழு உலகுமே கிராமமாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டையும் தனி உலகமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். எமது பாரம் பரியங்களும் கலாசார நெறிமுறைகளும் கூட மறக்கடிக்கப்பட ஆரம்பித்துவிட்டன.
புது மண்பானையில் மஞ்சள் கிழங்கு சுற்றி முற்றத்திலே பொங்கல பொங்கிய காலமொன்றும் இருந்தது. அது இன்று எரிவாயு அடுப்பிலே, கறையில் உருக்குப் பானையிலே பொங்கி உண்ணும் காலமாக மாறிவிட்டது. நகரப் பகுதிகளிலே, சூரியனுக்காகப் பொங்கிய பொங்கலை சூரியனுக்குப் படைக்கும் சாத்தியம் காணப்படுவது கூட அரிதாகிவிட்டது.
பொங்கல் திருநாளின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் முதலில் நாம் உணரத் தலைப்படவேண்டும். அத்திருநாளுக்கே உரித்தான விழுமியங்களைக் கைவிடாது தொடர்ந்து பேணவேண்டும். அன்றேல் எமது அடுத்த சந்ததி அந்திருநாளை அறியாமல் போவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்பது மட்டும் தான் நிதர்சனமான உண்மையாகும்.

Saturday, January 1, 2011

இயற்கை தொடுத்திருந்த எதிர்க்கணைகள் 10

 

 
 

1.ஹெயிட்டி பூகம்பம்


ஹெயிட்டி அரசியல் ஊழல்கள், வறுமை, பட்டினி என துன்பங்கள் மலிந்து காணப்பட்ட நாடு. மரத்தில் இருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக ஹெயிட்டியை ஸ்தம்பிக்கச் செய்தது ஒரு நிலநடுக்கம். அதன் பருமன் 7 ரிச்டர் அளவு ஆகும். இந்த நூற்றாண்டில் உலகம் சந்தித்த மிகப்பெரும் அழிவுகளுடனான அனர்த்தமாக அது கருதப்படுகிறது.
அட்டைகளால் உருவாக்கப்பட்ட வீடுகள் கணப்பொழுதில் சிதைந்து போவது போல ஹெயிட்டியின் கட்டடங்கள் இடிந்து போயின. ஹெயிட்டிக்குத் தேவையான பணத்துக்கும் ஏனைய வளங்களுக்கும் உலக நாடுகள் இறைஞ்சி நின்றன. பலி எண்ணிக்கை 2 1/2 இலட்சமாக உயர்ந்தது.
பூகம்பத்தால் உருவான இடிபாடுகளுக்குள் சிக்கி மட்டும் மக்கள் இறக்கவில்லை தற்காலிக வைத்தியசாலைகளில் இரண்டாம் நிலைத்தொற்றுக்களாலும் உடலில் நீரிழப்பினாலும் கூட உயிரிழந்தனர். ஹெயிட்டியின் பணக்கார இரவு விடுதிகள் சில வாரங்களுக்குள்ளேயே பழைய நிலைமைக்குத் திரும்பின.
அவ்விடுதிகளுக்கு அருகிலே அகதிமுகாம்கள் அமைக்கப்பட்டிருந்தமையானது ஏற்றத்தாழ்வுகளின் கொடூரத்தை எடுத்தியம்பியது. அமெரிக்க மக்கள் ஹெயிட்டிக்காகச் சேகரித்த நிதி 61 மில்லியன் டொலர்களையும் தாண்டியது. அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் 476 மில்லியன் டொலர்களைச் சேகரித்திருந்தது.
ஆனால் உலக நாடுகளால் உறுதியளிக்கப்பட்டிருந்த நிதியுதவியில் மிகச்சிறிதளவான சதவீதமே (5.3 பில்லியன் டொலர்கள்) ஹெயிட்டியைச் சென்றடைந்திருக்கிறது. இந்த அவலங்களுள் இருந்து மீளுவதற்கு இன்னும் முயன்று வருகிறது ஹெயிட்டி.


2.ஐஸ்லாந்து எரிமலை

அதிஷ்டவசமாக ஐஸ்லாந்தின் இந்த எரிமலை வெடிப்பானது எந்த ஒரு மனித உயிரையும் காவுகொள்ளவில்லை. Eyja Fjallajokull  என்ற அந்த எரிமலையின் பெயரை உச்சரிக்கவே பலர் சிரமப்பட்டனர்.
அது வெடித்தபோது நீராவி, உடைந்த பாறைத்துண்டுகள், கண்ணாடித்துகள் என்பன பெரும் ஆறாக ஓடின. காற்றினால் பாரிய புகைமூட்டம் ஏற்படுத்தப்பட்டது.
ஐரோப்பாவின் பிரதான விமான நிலையங்களின் வான் பாதைகளைப் புகை மூடியது. எரிமலை வெடிப்பினால் தோன்றிய கண்ணாடித் துணிக்கைகள் விமான இயந்திரங்களில் சேதங்களை ஏற்படுத்தக் கூடுமெனவும் உணரப்பட்டது.
ஏறத்தாழ 23 நாடுகளில் அவற்றிற்கான விமான சேவையை 6 நாட்களுக்கு நிறுத்த ஐரோப்பிய யூனியன் முடிவு செய்தது. ஏறத்தாழ அத்தகைய 100,000 விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. 8 மில்லியன் பயணிகளுக்கு வேறு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன. இதனால் விமான சேவை வழங்குநர்களுக்கு நாளொன்றுக்கு 250 மில்லியன் டொலர்கள் செலவாயிற்று.
உலக நாடுகளுக்கிடையே விமானங்கள் மூலம் பரிமாற்றப்பட்டு வந்த தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிப்பாகங்கள், ஏனைய முக்கியமான பொருட்களின் பரிமாற்றம் தடைப்பட்டது.
உலக நாடுகளின் பொருளாதாரம் ஒன்றிலொன்று தங்கியிருந்தமையைத் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலே காயப்படும் அமெரிக்க இராணுவத்தினர் மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால் அப்பணியும் ஸ்தம்பித்தது.
ஆதலால் அவர்கள் அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த எரிமலையின் அயற் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த 800 பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். எரிமலை தோற்றுவித்த புகை மூட்டம் சுவாசப் பிரச்சினையை ஏற்படுத்தியது.


3.பாகிஸ்தானின் மினி சூறாவளி


பாகிஸ்தானைப் பொறுத்தவரையிலே, ஜூலை மாதம் பருவக்காற்றுகளுக்குரியது. ஆனால் கடந்த 100 வருடங்களுள் என்றுமில்லாத வகையிலே பாகிஸ்தானின் 1/5 பகுதி நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியது.
ஏறத்தாழ 2000 பாகிஸ்தானியர் பலியாயினர். 6 மில்லியன் மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தனர். டெங்கு கொலரா நோய் அச்சுறுத்தல் அதிகரித்தன.
சேதமானது 9.6 பில்லியன் டொலர்களென மதிப்பிடப்பட்டது. 7.8 மில்லியன் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டன. சர்வதேச உதவிகள் ஓரளவு கிடைத்தன. அவை பெருமளவில் கிடைக்காமல் போனதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருந்ததையும் ஊகிக்க முடிந்தது.

4.ரஷ்யாவில் பரவிய காட்டுத்தீ

பாகிஸ்தான் வெள்ள அழிவால் பாதிக்கப்பட்டிருந்த அதேநேரம் 7 ரஷ்ய பிராந்தியங்கள் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டன. 300,000 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டது.
ஜுலை மாதம் பதியப்பட்ட உயர்வெப்ப அலையானது ரஷ்யாவில் காட்டுத்தீயைப் பரவலாக ஏற்படுத்தியிருந்தது. வளிடண்டலம் நச்சுத்தன்மை மிக்க புகையால் நிரம்பியிருந்தது.
அடர்த்தியான புகை மூட்டம் மொஸ்கோவை மூடியது. விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டன. பல வாரங்களாகப் காட்டுத்தீ நீடித்தது. ஏறத்தாழ 50 பேர் கொல்லப்பட்டனர். 3000க்கும் அதிகமானோர் இருப்பிடங்களை இழந்தனர்.
கதிர்த் தொழிற்பாட்டுக் கழிவுகள் உள்ள பகுதிக்கு தீபரவுவதை முழு உலகுமே அவதானித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக ஓகஸ்ட் மாதமளவில் உருவான வெப்பநிலை வீழ்ச்சியும் மழை வீழ்ச்சியும் தீயை அணைத்தன.
வளி மண்டலத்தில் 6.6 மடங்கால் அதிகரித்திருந்த காபன் மொனொக்சைட்டின் அளவு சாதாரண நிலைக்குத் திரும்பியது. அதுவரை முகமூடிகளை அணிந்து வீதிகளில் பயணித்த ரஷ்ய மக்கள் முகமூடியின்றி பயணிக்கத் தொடங்கினர்.
காட்டுத்தீயால் உருவாகிய வரட்சி ரஷ்யாவின் கோதுமைப் பயிரைப் பெருமளவில் பாதித்தது. விளைவாக ஜுலை மாதம் முழுவதும் கோதுமை ஏற்றுமதியை ரஷ்யா தடைசெய்தது. தானிய உணவை இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
1.4 மில்லியன் ரஷ்யர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டனர்.
அந்த நிலையிலிருந்து ரஷ்யா மீள 15 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.

5.நாஷ்வில்லே வெள்ளப்பெருக்கு

அமெரிக்காவின் நாஷ்வில்லே பகுதியினூடு பாய்ந்து செல்வது கும்பர்லாந்து நதியாகும். ஒருநாளும் இல்லாதவாறு அந்த நதியிலே உருவாகிய வெள்ளப்பெருக்கு நாஷ்மிலே நகரை ஸ்தம்பிக்கச் செய்திருந்தது.
அமெரிக்காவின் மத்தியில் அமைந்திருக்கும் நாஷ்வில்லே இசைக்குரிய நகராகக் கருதப்படுகிறது. இவ்வெள்ளப்பெருக்கால் நாஷ்வில்லே நகருக்கு மட்டும் 2 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருந்தது.
பல இசைக்கருவித் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்க வரலாற்றிலே அதிகளவு சேதத்தை ஏற்படுத்திய இயற்கை அனர்த்தமாக இந்த வெள்ள அனர்த்தம் கருதப்படுகிறது.
வெள்ளத்தால் சேதமடைந்த இசைக்கருவிகள் ஏலத்தில் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளுக்கு நிதி திரட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



6.மச்சு பிச்சு நிலச்சரிவு

பெருநாட்டிலே அந்தீஸ் மலைத்தொடரின் ஒரு பகுதியே மச்சு பிச்சு ஆகும். மறைந்துபோன இன்கா நாகரிகத்தின் எச்சங்கள் அப்பகுதியில் காணப்படுகின்றன.
2010 ஜனவரி 24 ஆம் திகதி வீசிய புயலானது நிலச்சரிவு உருவாகக் காரணமாகியது.
குடிசைகள், வயல் நிலங்கள் தொட்டு வீதிகள், பாலங்கள் வரை சகல கட்டமைப்புகளுமே பாதிக்கப்பட்டன. பெருவின் சுற்றுலாத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
பெருவுக்கு நாளாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டித்தந்த சுற்றுலாத்தலம் 2 மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தமை பெரிய அந்நியச் செலாவணி இழப்பைத் தோற்றுவித்திருந்தது.


7.சிலி பூகம்பம்

உலகையே உலுக்கிவிட்டிருந்த ஹெயிட்டி பூகம்பம் நிகழ்ந்து ஆறு வாரங்களுக்குள் 7 ரிச்டர் அளவிலான பூகம்பம் சிலியைத் தாக்கியது. சிலியின் கடலோரக் கிராமங்களை சுனாமி அலையும் தாக்கியது.
900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாயினர். 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் தமது இருப்பிடங்களை இழந்தனர். 30 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்தன. சிலி நாட்டின் 20 சதவீத வைன் உற்பத்தி முற்றாகப் பாதிக்கப்பட்டது.
ஹெயிட்டி எதிர்கொண்டதைப்போல பாரிய அழிவுகளை சிலி எதிர்கொள்ளவில்லை. ஏற்பட்ட சேதங்களைத் தம்மால் எதிர்கொள்ள முடியும் எனப் பெருமையுடன் கூறிய சிலி அரசு முதலில் சர்வதேச உதவிகளைக் கூட மறுத்து விட்டிருந்தது.
இக்கருத்தானது சிலி நாட்டுமக்கள் பலரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருந்தது. கரையோர மக்கள் மத்தியில் சுனாமி குறித்து எச்சரிக்காததற்கும் அவசரப் பணிகளைத் தாமதமாக மேற்கொண்டமைக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்றனர் சிலிமக்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் களவுகளும் கொள்ளைகளும் மலிந்து போயிருந்தன. பின்னர் மெதுவாக வெளிநாடு உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இன்னும் பல அகதிகள் கூடாரங்களிலேயே வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிலியின் இப்பூகம்பத்தை இதுவரை காலமும் பதியப்பட்டவற்றுள் 5 வது பெரிய பூகம்பமாக நாசா குறிப்பிடுகிறது. இப்பூகம்பம் புவிக்கோளத்தின் வாழ்நாளை 1.26 மைக்ரோ செக்கன்களால் குறைத்தும் விட்டிருப்பதாக நாசா தெரிவிக்கின்றது.


8.கெளதமாலாவில் ஏற்பட்ட ஆழ்துளை

நிலத்திலே ஆழமான பாரிய துளை ஒன்று ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா? கெளதமாலாவின் நகரொன்றில், அது ஏற்பட்டது.
நிலக்கீழ் நீர், நிலத்திற்குக் கீழுள்ள பாறைகளை இளகச் செய்யும். புயல் காலங்களில் அப்பாறைகள் குழிவடைய நிலத்தில் அத்தகைய பாரிய துளைகள் குழிகள் தோன்றும். ஆனால் அவை பரவலாக உருவாவதில்லை.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைப் பொறுத்தவரையிலே அவை சகஜமானவை. கடந்த மே மாதம் 30 ஆம் திகதி உருவான அகத்தா புயலை அடுத்து கெளதமாலாவின் நகரொன்றிலே ஒரு ஆழ்துளை உருவாகியது. அது ஏறத்தாழ 66 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்டதாகக் காணப்பட்டது.
அதனால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தனர். 180 பேர் வரையில் உயிரிழந்தனர்.
சில மாதங்களின் பின்னர் அந்த ஆழ்துளையின் பரிமாணங்கள் 130 அடி அகலமாகவும் 65 அடி ஆழமாகவும் மாற்றம் பெற்றது.
விஞ்ஞானிகள் மத்தியிலும் கூட இந்த ஆழ்துளை ஒரு மர்மமாகவே இருக்கிறது.



9.சீனாவின் பூகம்பம்

2 வருடங்களுக்கு முன்னர் 7.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கியிருந்தது. கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதியும் அதையொத்த பூகம்பம் குயிங்காய் மாகாணத்தைத் தாக்கியது. 2000 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சிச்சுவான் மாகாணத்தில் நிகழ்ந்த பூகம்பம் 90,000 பேரைக் காவுகொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவைப் பொறுத்தவையிலே ஏப்ரல் என்பது பனிக்காலமாகும். அத்துடன் இந்த பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் திபெத்திய விவசாயிகளும் ஆயர்களுமாவர். அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ்ப்பட்டவர்கள்.
90 சதவீதமானோரின் வீடுகள் மரத்தாலும் களிமண்ணாலும் ஆனவை. சீன இராணுவத்தினரும் பெளத்த மத குருமாரும் இணைந்து உதவிப்பணிகளை முடுக்கிவிட்டனர்.
ஆரம்பத்தில் வெளிநாட்டு உதவியைப்பெற சீனா தயக்கம் காட்டிய போதும் கடைசியில் 4 மில்லியன் டொலர்களை உலக நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டது. பூகம்பம் நிகழ்ந்த பகுதி பனிபடர்ந்த மலைப் பகுதியாகையால் மீள்கட்டமைப்புப் பணிகள் தாமதமாகவே நடைபெற்று வருகின்றன. ஏனெனில் விநியோகப் பொருட்களைக் குறித்த பகுதிக்கு கொண்டு செல்வதற்காகப் பெருஞ்சிரமப்பட வேண்டியுள்ளது.
ஆனால் இந்த மீள்கட்டமைப்புப் பணிகள் மூலம் பின் தங்கிய அப்பகுதிக்கு புதிய தொழில்நுட்பங்கள் சென்றடையவுள்ளன. நதி நீரைச் சுத்திகரிக்கும் திட்டமும் பூகம்பம் பாதிக்காத கட்டடங்களை அமைக்கும் திட்டமும் கூட அத்தொழில்நுட்பங்களுள் அடங்கும்.


10.கிழக்குக் கடற்கரை பனிப்புயல்

மத்திய அத்திலாந்திக் கடற்கரையினூடு வீசிய பனிப்புயலானது அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில் 2 அடி உயரத்துக்கு பனியை நிரப்பியது. ஏறத்தாழ 4 நாட்கள் வொஷிங்டன் மாநிலமே ஸ்தம்பித்துப் போயிருந்தது.
இதனால் 450 மில்லியன் டொலர் மதிப்பிலான உற்பத்தித்திறன் இழப்பு ஏற்பட்டதாகக் கணிப்பிடப்பட்டது.

குறைந்தளவிலான (2) உயிரிழப்புகளே ஏற்பட்டன. விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. பாடசாலைகள் மூடப்பட்டன, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். விளைவாக உற்பத்தித் திறனில் பாரிய வீழ்ச்சி காணப்பட்டது.