Friday, January 14, 2011

இந்திர விழா பொங்கலுக்கு வழிசமைத்ததோ?

தென்னாட்டிலே கடல்கொண்ட வணிக நகரம் காவிரிப்பூம் பட்டினம். 12ம் திருமுறை யிலே, இயற்பகை நாயனார் புராணத்தின் 1 வது பாடல் அத்திருநகரத்தின் வளத் தைப் பாடுகிறது.
சென்னி வெண்குடை நீட நபாயன்
திருக்கு லம்புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல்புகழ் மருதநீர் நாட்டு
வயல்வ ளந்தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நன்னதி மிக்கநீர் பாய்ந்து
புணரி தன்னையும் புனிதமாக்
குவதோர்
நன்னெ டும்பெருந் தீர்த்தமுன்
னுடைய
நவஞ்சி றந்தது வளம்புகார் நகரம்
என்கிறது அந்தப் பாடல்.

அதாவது சோழ மரபிலே தோன்றிய வெண்கொற்றக் குடையையுடையவன் அநபாயச் சோழன். அவனது அரசியல் அருளுடைய மரபினரின் புகழை உலகறியச் செய்தது சோழவள நாடு. அத்தகைய பெருமை மிக்க மருதவளம் நிறைந்த சோழவள நாட்டை ஊடறுத்துப் பாய்கிறது காவிரியாறு.

தைப்பொங்கல் திருநாள் நாளை
அந்த வயல் வளத்துக்கும் காவிரியாறே காரணமாகிறது. காவிரி, காலந்தவறாது காவிவரும் வெள்ளநீர் கடலையும் தூய்மை செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது. இத்துணை நீர்வளம் மிக்க நலம் பெருக்கும் நகரம் காவிரிப்பூம் பட்டினம் என்று குறிப்பிடுகிறது அந்தப் பாடல்.
காவிரிப்பூம் பட்டினத்திலே நிலைத்து நின்று வாழும் மக்களை ‘பதியெழு அறியாப் பழங்குடியினர்’ என இளங்கோவடிகள் கூறுகிறார். படைப்புக் காலந்தொட்டே வாழும் குடியினர் என அதற்கு உரை கூறுவர்.
சேர சோழ பாண்டியர் என மூவேந்தர் தென்னிந்தியப் பகுதியை ஆண்ட காலத்திலே சோழப் பேரரசின் தலைநகராக காவிரிப்பூம் பட்டினம் இருந்தது. கி.பி. 850 களின் பின்பு, பிற்காலச் சோழர்களின் ஆட்சி ஏற்பட்டபோது பூம்புகார் என்ற காவிரிப்பூம் பட்டினத்தைக் கடல் கொண்டதால், பேரரசின் தலைநகரம் தஞ்சாவூராகியது. காவிரிப்பூம்பட்டினத்தை மையமாகக் கொண்ட ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இந்திர விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
சங்க காலம் தொட்டு தட்சணாயன காலத்தின் ஆரம்பத்தை இந்திர விழாவாகக் கொண்டாடும் வழக்கம் இருந்து வந்தது. மணிமேகலையின் ஆரம்பமான விழாவறை காதையிலே ‘இந்திர விழா’ பற்றிக் கூறப்படுகிறது. அதன்படி, காவிரிப்பூம்பட்டினத்தில் ஏறத்தாழ 28 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடாத்தப்பட்டுள்ளது.
சோழகுல மன்னர்களுள் ஒருவனான தூங்கெயில் எறிந்த தொழத்தோள் செம்பியன் என்பவன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்புறச் செய்ய ஆசைப்பட்டான். அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இந்திரனை வணங்கித் தவமிருந்தான்.
இந்திர விழாவை ஆண்டு தோறும் காவிரிப்பூம்பட்டினத்தில் நடத்தவும் அதற்கு இந்திரன் வருகை தரவேண்டும் எனவும் வேண்டினான். இவ்விழா 28 நாட்கள் நடைபெற இந்திரன் ஆசியளித்தான்.
தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் தொடக்கிவைத்த விழா ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வந்தது. இந்திரனின் கரும்பு வில்லை நினைவுகூரும் வகையிலே இந்திர விழாவில் கரும்பு முக்கிய இடத்தைப் பெற்றது. வீதிகளிலும் கோயில் வாசல்களிலும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டன.
பொன்னாலான பாலிகைகளால் நகரம் அலங்கரிக்கப்பட்டது. பாக்கு, வாழை மரத் தோரணங்கள் கட்டப்பட்டன. கோயில்களிலெல்லாம் சிறப்பாகப் பூஜைகள் நடாத்தப்பட்டன.
இப்படிக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்திரவிழா கைவிடப்பட்டமையால் தான், காவிரிப்பூம்பட்டினத்தின் ஒரு பகுதியைக் கடல் கொண்டதாகவும் குறிப்பிடுவர்.
மழை, இடி, மின்னல்களின் கடவுளாக இருப்பவன் இந்திரன். அவனை வழிபட்டால் மாதம் மும்மாரி பொழிந்து பயிர் செழிக்குமென மக்கள் நம்பினர். மழைக்கடவுளான இந்திரனை வழிபட்டனர்.
சங்க காலத்திலேயே இந்திர வணக்கமும் அவனுக்கு விழா எடுக்கும் வழக்கமும் தமிழர்கள் மத்தியில் இந்திருக்கிறது. இதை சங்க இலக் கியமான ஐங்குறுநூறு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் இவ்வழக்கம் ஆழ வேரூன்றியிருந்தது.
இந்திரவிழா கொண்டாடப்படுவதன் முக்கிய நோக்கமே மழையாகும். மழைக்கடவுளான இந்திரனை விழா எடுத்து வணங்கி அவனது அருளாகிய மழையைப் பெறுவது என்பதே. மழை பெய்தால் விவசாயம் சிறக்கும். உணவு உற்பத்தி பெருகும். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர் என்பதாகும்.
ஆயினும் காலப் போக்கில் வைணவ ஆதிக்கம் மேலோங்க இந்திர விழா எடுக்கும் வழக்கம் அருகி மறைந்துவிட்டது. கண்முன்னே தெரியும் சூரியனே காலநிலையை நிர்ணயிப்பவன் என்ற நம்பிக்கை வந்தது.
விவசாயம் சிறக்க வழிவகுக்கும் முதற்காரணி காலநிலை. அந்த வகையிலே சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தாம் அறுவடை செய்த புது நெல்லை தை முதல் நாளன்று சமைத்தனர். சூரியனுக்குப் படைத்து நன்றி செலுத்தினர். அது தைப் பொங்கலாகியது.
ஆகையால்தான் இந்திர விழா பொங்கலுக்கு வழி சமைத்தது என்பர். தமிழகத்திலே பொங்கல் 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதலாவது நாள் போகியாகும். போகிபோகம் துய்ப்பவனாகிய இந்திரனுக்காக இந்த நாள் ஒதுக்கப்பட்டது என்றும் கூறுவர். அன்றைய நாளை வீடு வாசல்களைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தமாக்கும் நாள் என்றும் கூறுவர். இந்திர விழா என்றும் அழைப்பர்.
அறுவடை கண்ட பூரிப்பால் அந்த மகிழ்வைக் கொண்டாடுவதே பொங்கலாகும்.
ஒரு காலத்தில் ஊரே திரண்டு பெருந்திரு விழாவாகக் கொண்டாடிய பண்டிகைகள் எல்லாம் இன்று வீட்டுக்குள்ளேயே கொண்டாடப்படுவனவாகச் சுருங்கிவிட்டன. உலகமயமாதலாலோ என்னவோ முழு உலகுமே கிராமமாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டையும் தனி உலகமாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டோம். எமது பாரம் பரியங்களும் கலாசார நெறிமுறைகளும் கூட மறக்கடிக்கப்பட ஆரம்பித்துவிட்டன.
புது மண்பானையில் மஞ்சள் கிழங்கு சுற்றி முற்றத்திலே பொங்கல பொங்கிய காலமொன்றும் இருந்தது. அது இன்று எரிவாயு அடுப்பிலே, கறையில் உருக்குப் பானையிலே பொங்கி உண்ணும் காலமாக மாறிவிட்டது. நகரப் பகுதிகளிலே, சூரியனுக்காகப் பொங்கிய பொங்கலை சூரியனுக்குப் படைக்கும் சாத்தியம் காணப்படுவது கூட அரிதாகிவிட்டது.
பொங்கல் திருநாளின் பாரம்பரியத்தையும் தொன்மையையும் முதலில் நாம் உணரத் தலைப்படவேண்டும். அத்திருநாளுக்கே உரித்தான விழுமியங்களைக் கைவிடாது தொடர்ந்து பேணவேண்டும். அன்றேல் எமது அடுத்த சந்ததி அந்திருநாளை அறியாமல் போவதற்கு நாமே காரணமாகிவிடுவோம் என்பது மட்டும் தான் நிதர்சனமான உண்மையாகும்.

No comments:

Post a Comment