Monday, May 24, 2010

உயிர்கள் வாழா சூனியமாகுமா மெக்சிகோ வளைகுடா பிரதேசம்?




சூழல் தொகுதியொன்று நிலைத்திருக்க வேண்டுமாயின், உயிர்ப்பல்வகைமை பாதிக்கப்படாமல், இழக்கப்படாமல் இருக்க வேண்டுமென நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம்.

உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கான அடிப்படைக் காரணி மனிதனாவான். மனிதனின் இன்றைய போக்கு, பாரிய அழிவுகள் ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுமளவிற்கு வளர்ச்சியடைந்து செல்கிறது.

இந்த நூற்றாண்டிலே உயிர்ப்பல்வகைமை அழிவடையும் விதமானது அதன் அடி வீதத்தின் 1000 மடங்காகும். இதேபோக்கு தொடர்ந்தால் அடுத்த நூற்றாண்டில் அது 10,000 மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் உயிர்ப்பல்வகைமையில் 10% - 30% மான இனங்கள் மனித நடவடிக்கைகளால் அழிவடையும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருப்பதாக 2005 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றிலே உலகிலுள்ள பின்வரும் இனங்கள் எவ்வாறான அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி,

* எட்டிலொரு பறவை

* நான்கிலொரு முலையூட்டி

* நான்கிலொரு மரம்

* மூன்றிலொரு ஈரூடகவாழி

* ஏழில் ஆறு கடலாமைகள்

அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன அத்துடன்,

* 75% மான மரபு ரீதியான விவசாயப் பயிர்கள்

* 75% மான மீன் வளம்

ஆகியன அழிந்து போய்விட்டன.

அவை மட்டுமன்றி,

* முருகைக் கற்பாறைகளை உருவாக்கும் கடல் வாழ் உயிரினங்களில் மூன்றிலொரு உயிரினம் அச்சுறுத்தலை எதிர்நோக்குகிறது.

* ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவிலான மழைக்காடு ஒவ்வொரு வருடமும் அழிந்து வருகின்றது.

எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதிகரிக்கும் தேவைகளும் அவற்றை ஈடுசெய்யும் வசதி வாய்ப்புக்களும் இத்தகையதோர் விளைவைத்தானா எதிர்பார்த்தன? என்ற கேள்வி பலரது மனதில் எழத் தொடங்கிவிட்டது.

உயிர்ப்பல்வகைமை அழிவதானது மெதுவாக நடைபெற்றால், சூழல் தொகுதிகள் புதிய பொறிமுறைகளை உருவாக்கி, தமக்கிடையிலான சமநிலையைப் பேணிக்கொள்ளும் துரிதமாக அழிவடையும் வீதத்தின் கழிவு என்ன என்பதை எவராலும் கூறமுடியாது.

ஊகங்களை மட்டுமே தெரிவிக்க முடியும். உயிர்ப்பல்வகைமையின் இழப்பால் பாரியளவிலான விவசாயப் பிரச்சினைகள் உருவாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பலநூறு மில்லியன் மக்கள் பட்டினியால் அவதிப்படத் தலைப்படுவர். இந்த ஊகங்கள் பூகோளம் வெப்ப மயமாதலைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

வர்த்தகமயமாக்கப்பட்ட பல மீனினங்கள் அழிந்து போவதற்கு மீன்பிடித் தொழில் காரணமாகிவிட்டது. மிகை மீன்பிடியைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையுமே வெற்றியளிக்கவில்லை.

கடந்த 50 வருடங்களுள் சமுத்திரங்களில் உள்ள பெரிய மீனினங்களில் 90 சதவீதமானவை மறைந்துவிட்டன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் 20 வருடங்களுக்குள் அவை முற்றாக அழிந்துவிடுமென எதிர்வுகூறப்படுகிறது.

பவளப் பாறைகள் தோன்றி நிலைக்க 1000 வருடங்களுக்கு மேல் எடுக்கும். அவை சில தசாப்தங்களுக்குள்ளேயே அழிக்கப்பட்டதாலும் வாழிடம் இழந்து மீனினங்கள் அழிந்து போகின்றன.

ஈரூடக வாழிகள், காட்டி உயிரினங்களாகக் கருதப்படுபவையாகும். உயிர்ப்பல்வகைமையின் ஆரோக்கியத்தை இந்த ஈரூடக வாழிகளின் ஆரோக்கியத்தை வைத்து மதிப்பிடமுடியும். ஆனால் துரதிஷ்டவசமாக இன்று இந்த ஈரூடக வாழிகளும் வெகுவாக அருகிவரும் உயிரினங்களாக மாறிவருகின்றன. அதனை உயிர்ப்பல்வகைமையின் எதிர்காலம் தொடர்பாக எச்சரிக்கும் ஓர் செயற்பாடாகவே கருதமுடியும்.

அண்மையில் இரு முக்கியமான சம்பவங்கள் இடம்பெற்றன. முதலாவது மெக்சிக்கோ வளைகுடாவில் கடலுக்கடியில் ஏற்பட்ட மசகு எண்ணைக் கசிவாகும். மற்றையது ஐஸ்லாந்தில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பாகும்.

மெக்சிக்கோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதனை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. அதனால் பல உயிரினங்கள் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

அதேபோல ஐஸ்லாந்தின் எரிமலை வெடிப்பால், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு உதாரணங்களும் நடைமுறையில் இயற்கையாலோ அல்லது மனிதனாலோ மனிதன் தவிர்ந்த ஏனைய உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதற்குச் சிறந்த உதாரணங்களாகும். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் பழகிய மனிதனுக்கு இவை தெரிந்திருக்க நியாயமில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment