Wednesday, May 19, 2010

எம் இன்னுயிர் பறிக்க மின்னலுக்கு கண நேரம் கூடத் தேவையில்லை





முன்னொருபொழுதும் கேட்டறிந்திருக்காத வகையிலே இடி மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக செய்தி ஊடகங்கள் அறிக்கையிட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதன் தினையென விதைத்த வினையின் பயனை அறுக்கத் தொடங்கிவிட்டானோ எனச் சூழலியலாளர்கள் ஆய்வில் இறங்கிவிட்டனர். எவர் சந்தித்தாலும் இடியையும் மின்னலையும் பற்றித்தான் உரையாடுகிறார்கள்.

முன்னைய காலங்களில் பெரிய சத்தத்துடனான இடிமுழக்கமும் பிரகாசமான மின்னலொளியும் மிகவும் அரிதாகவே கேட்டது; கண்ணில் தெரிந்தது. ஆனால் அத்தகைய இடியும் மின்னலும் இன்று சகஜமாகிவிட்டன. அவற்றால் நிகழும் உயிரிழப்புகளும் பொருட் சேதங்களும் கூட இன்னும் சில நாட்களில் சகஜமாகப் போய்விடுமோ என்ற அச்சமும் பலர் மனதில் நிலவிவருகிறது. இத்தகையதோர் சூழ்நிலையில் தான் இடி முழக்கம், மின்னல் தொடர்பான தெளிவுபடுத்தல்களும் அவசியமாகின்றன.

அடிப்படையில், இந்த இயற்கை நிகழ்வுகளுக்குப் பின்னாலிருக்கும் தத்துவம் நிலை மின் கவர்ச்சியுடன் தொடர்புடையது. வளிமண்டலத்திலுள்ள உஷ்ணமான, ஈரப்பற்றுள்ள வளி வேகமாக மேலெழுந்து முகிலாக மாறும். அம்முகில்களிலுள்ள வளியும் நீரும் ஒன்றுடனொன்று உரசத்தலைப்படும். இச் செயற்பாடு நிலத்துக்கும் முகில்களுக்குமிடையே நேர், எதிரேற்றங்களால் மின்சாரத்தை உருவாக்கும். இவ்விளைவு எமது கண்ணுக்கு மின்னலாகத் தெரிகிறது.

மின்னல் தொடர்பான அடிப்படை விடயங்கள் எவையுமே இன்றுவரை உறுதியாகக் கூறப்படவில்லை. ஆகையால் இடியும் மின்னலும் விவாதத்துக்குரிய கருப்பொருட்களாகவே இன்னும் காணப்படுகின்றன. மின்னலெனப்படுவது நிலை மின்னின் இயற்கையான வெளிப்பாடாகும். மின் கடத்து திறன் குறைந்த பகுதிகளில் சேர்ந்திருக்கும் ஏற்றங்கள் சுயாதீனமாக இயங்கும் தன்மையன.

வளியிலுள்ள நடுநிலையான அணுக்களும் மூலக்கூறுகளும் நேரேற்றங்களையும் மறையேற்றங்களையும் உருவாக்கி, சுயாதீனமாக இயங்கும் ஏற்றங்களை நடுநிலையாக்கும். இந்த நேர், மறையேற்றங்கள் எதிரெதிர்த்திசைகளில் பயணிக்க, மின்னோட்டம் உருவாகி சேர்ந்திருந்த ஏற்றங்கள் நடுநிலையாகும். இந்தச் செயற்பாட்டின் ஆகக்குறைந்த அழுத்த வித்தியாசம் 10,000 வோல்ற்/சென்றி மீற்றராகும்.

இந்த சக்தியின் வெளிப்பாடு சூழவுள்ள வளியை வெப்பமாக்கும். அதன் விளைவே மின்னலாகும். அத்துடன் இச்சக்தி வெளிவிடும் அதிர்வலைகளைத்தான் இடி முழக்கம் என்கிறோம். மின்னல் செக்கனுக்கு 60,000 மீற்றர் வேகத்தில் பயணிக்கும். அவ்வாறு பயணிக்கையில் அது அடையும் வெப்பநிலை 30,000ணீ ஆகும். மின்னல் மிகவும் அபாயகரமானது.

மரங்களை மட்டுமன்றி மனிதரையும் நேரடியாகத் தாக்கும் வல்லமைமிக்கது. நெருப்பையும் உருவாக்கும்; உயிரையும் கொல்லும். மின்னலானது ஒரு இலக்கைத் தாக்கிய பின்னரும் கூட 8 கி. மீ தூரம் பயணிக்கக்கூடியது. அதன் வெப்பநிலை, 28000 ணீவரை உயரக்கூடியது.

மின்னலும் இடியும் ஏறத்தாழ ஒரே நேரத்திலேயே நிகழ்கின்றன. வளியில் ஒளியின் வேகம், ஒலியின் வேகத்தை விட மிக அதிகமாகையால் மின்னல் தெரிந்து சில செக்கன்களின் பின்னரே இடி முழக்கம் கேட்கும்.

மின்னலிலும் பல வகைகள் காணப்படுகின்றன. முகில்களுக்கிடையே நடைபெறுவது, முகிலுக்கும் நிலத்துக்குமிடையே நடைபெறுவது ஆகியன முக்கியமானவையாகும்.

புவியிலுள்ள மிகப்பழைமையான இயற்கையின் தோற்றப்பாடு மின்னலாகுமென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வானிலிருந்து செய்மதிகளினூடு அவதானிக்கும் ஆய்வாளர்கள் பூமியிலே தினமும் 3 மில்லியன் மின்னல் ஒளிக்கீற்றுக்கள் தோற்றம் பெறுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இடி முழங்கும் இடத்திலிருந்து நாம் நிற்கும் தூரத்தைப் பொறுத்தே இடியால் ஏற்படும் ஆபத்தின் தன்மை அமையும். அதாவது இடியின் சத்தத்தின் தன்மையைப் பொறுத்து காதுகள் பாதிக்கப்படும். இடியும் மின்னலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாயினும் இரண்டும் வெவ்வேறானவை. மின்னலானது மின்சாரத்தின் வெளிப்பாடாகையால் மிகவும் ஆபத்தானது. இடியென்பது ஒலிமட்டுமே. அதன் சத்தம் அதிகமாக இருக்கையில் காதுகளை மட்டும் பாதிக்கும்.

உயர்ந்த கட்டடங்களும் கோபுரங்களும் ஏன் மரங்களும் கூட முகில்களிலிருந்து ஏற்றங்களைப் பூமிக்கு விரைவாகக் கடத்த முயல்கின்றன. இதனாலேயே மரங்கள் பாதிக்கப்படுகின்றன. (மரங்களின்) உட்பகுதிகள் மரத்தின் பட்டைகளை விட விரைவாகக் கடத்த விழைகையில் மின்னலின் உயர் வெப்பம் காரணமாக பட்டைகள் எரிகின்றன. இதனால் மரங்கள் பாறி விழுவதுடன் கருகவும் செய்கின்றன.



மின்னலானது இயற்கையின் தோற்றப்பாடாகும். அதைக் கட்டுப்படுத்தவோ இல்லாமல் செய்யவோ மனிதனால் முடியாது. மின்னலினால் பாதிக்கப்பட முடியாதவாறு அல்லது ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் வகையிலான நடைமுறைகளைக் கையாளவேண்டும். இல்லையேல் உருவாகும் இழப்புக்கள் தவிர்க்க முடியாதனவாகிவிடும்.

மின்னல் ஒருவரைத் தாக்கும்போது அவர் உயர் செறிவுடைய மின்னதிர்ச்சிக்கு முகம் கொடுக்கிறார். மின்னல் தாக்கியவர்களில் 10 வீதமானோர் உயிரிழக்கின்றனர். அவர்கள் உயிரிழப்பதற்கான அடிப்படைக் காரணம் அவர்களது இதயத்துடிப்பும் சுவாசமும் தடைப்படுவதே பொருட்களைத் தாக்கவல்லது.

ஒருவெட்ட வெளியான இடத்தில் மனிதன் கூட உயரமான பொருள்தான். உலோகப் பொருட்களும் நீரும் மின்னலை ஈர்ப்பதில்லை. ஆனால் அவை மின் கடத்திகளாதலால் மின்னல் தாக்கியதும் உருவாக்கப்படும் மின்சாரத்தை இலகுவாக நிலத்துக்குக் கடத்துகின்றன. இதே அடிப்படையில்தான், மின்னல் தாக்குகையில் தொலைபேசிக் கம்பிகளூடும் மின்சாதனங்களூடும் மின்சாரம் கடத்தப்படுகிறது.

மின்னலானது மனிதனை நேரடியாகத் தாக்கவல்லது. அதே சமயம் மின்னல் தாக்கிய பொருளொன்றுக்கு அருகில் மனிதன் நிற்கும் போதோ அல்லது அப்பொருளைத் தொடும்போதோ அப்பொருளூடு கடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மின்சாரம் மனிதனைத் தாக்கலாம். நிலத்தினால் கூட மின்சாரம் மனிதனுக்குக் கடத்தப்படலாம். இவ்வாறு கணநேரத்தில் ஏற்படுத்தப்படும் அதிர்ச்சி மனிதனைத் தூக்கி வீசும் சக்தி வாய்ந்தது. இந்நிகழ்வு காரணமாக ஊமைக்காயங்களும் மனிதனுக்கு ஏற்படலாம்.

ஒருவர் மின்னலால் தாக்கப்பட்டால் அவரது இதயத்துடிப்பு நின்றுபோகலாம். அல்லது இதயம் விட்டுவிட்டுத் துடிக்கலாம். அத்துடன் சுவாசமும் தடைப்பட்டுவிடும். சற்றுப்பின் இதயம் தானாகவே மீளத்துடிக்க ஆரம்பிக்கும். ஆனால் சுவாசம் சீராக நடைபெறாவிடில், உடலுக்குத் தேவையான ஒட்சிசனின் அளவு குறைவடைய நரம்புத் தொகுதி பாதிக்கப்படும். விளைவாக இருதயம் துடிப்பது மீண்டும் தடைப்படும். மூளை பாதிக்கப்பட்டால் சுய நினைவு இழக்கப்படும்.


மின்னல் ஒருவரைத் தாக்குவதை நேரடியாக அவதானிக்க முடியும். இடி முழக்கம் அல்லது மின்னலின் பின்னர், வெளியே ஒருவர் நினைவிழந்து காணப்பட்டால் அவர் மின்னல் தாக்குதலுக்குள்ளாகியிருப்பார் என ஊகிக்கலாம். உடனடியாக அவசர உதவியை நாடுதலே சிறந்தது.

மின்னலால் தாக்குண்டவர்களது இதயத துடிப்பும் சுவாச வீதமும் மீளாத பட்சத்திலேயே மரணம் சம்பவிக்கிறது. ஆகையால் இடி மின்னல் காலங்களில் இயன்றவரை வெளி வேலைகளில் திரிவதைத் தவிர்க்க வேண்டுட். வீட்டுக்குள் இருக்கும்போது மின் சுற்றுக்களுடனான தொடுகையை தவிர்த்தல் நன்று. தொலைபேசியில் கதைத்தல், கணினியில் வேலை செய்தல், தந்திக்கம்பியுடன் இணைக்கப்பட்ட செவிப்பன்னியைப் பாவித்தல் போன்ற செயற்பாடுகள் தவிர்க்கப்படவேண்டும். யன்னல் மற்றும் கதவுகளை விட்டுத் தள்ளி இருப்பது உகந்தது.

கைத்தொலைபேசி மின்னலைக் கவருவதில்லை. ஆனால் கைத்தொலைபேசியில் கதைக்கும்போது உருவாகும் மின்காந்த அலைகள் மின்சாரத்தைக் கடத்தும் இயல்புடையவையாதலால் கைத்தொலைபேசியில் கதைத்தலும் ஆபத்தானதாகும்.

இன்றைய காலத்தில், மின்னல் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கைக்கொள்வதோடு மட்டும் நின்றுவிடாது இடி, மின்னல் தொடர்பாக நாம் அறிந்து வைத்திருக்கும் தவறான விடயங்களையும் தெளிவுபடுத்திக்கொள்வோமேயானால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.

உண்மையா?

1 நிலத்துக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ள மின் சுற்றுக்கள் பாதுகாப்பானவை.

விளக்கம்: நிலத்தைத் தாக்கும் மின்னல் நிலத்திற்குள் காணப்படும் உலோகங்களில் நாட்டமுடையது. நிலத்துக்குக் கீழே உள்ள மின், தொலைபேசி, தரவுத் தந்திக் கம்பிகளை மின்னல் தாக்கும் சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஆகையால் நிலத்துக்கு கீழே உள்ள கம்பிகள் மேலே உள்ள கம்பிகளை விடப்பாதுகாப்பானவை என்று கூற முடியாது என அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2 மின்னல் ஒரு தடவைக்கு மேல் ஒரு இடத்தில் தாக்காது.

விளக்கம்: இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஒரு இடத்தில் பல தடவைகள் மின்னல் தாக்கிய சந்தர்ப்பங்கள் பல உள்ளன.


3 மின்னல் உயரமான பொருட்களையே எப்போதும் தாக்கும்.

விளக்கம்: அடிப்படையில் உயரமான கட்டமைப்புக்களை மின்னல் தாக்கும் சாத்தியக்கூறுகள் அதிகமாகும். ஆனால் இந்த விடயம் மின்னலினால் உருவாக்கப்படும் அழுத்த வித்தியாசத்திலும் தங்கியுள்ளது.

4 இறப்பர் சப்பாத்துக்களை அணிவதன் மூலம் மின்னல் தாக்குதலிலிருந்து தப்பலாம்.

விளக்கம்: சிறிதளவே உயரமான இறப்பர் எந்த விதத்திலும் மின்னல் பாதுகாப்புக்கவசமாக இருக்காது.

5* இறப்பர் சக்கரங்கள் இருப்பதனால் உலோக வாகனங்கள் மின்னல் தாக்குதலின்போது பாதுகாப்பானவை.

விளக்கம்: மின்னலின்போது கார்போன்ற உலோக வாகனங்களினுள் இருப்பது பாதுகாப்பானவை. ஏனெனில் அவற்றில் உலோக மேற்பரப்பு மின்னலைத் தன்னூடாக நிலத்துக்குக் கடத்திவிடும். சிறந்த பாதுகாப்பைப்பெற வேண்டுமாயின் வாகனத்தின் நடுப்பகுதியினுள் இருக்க வேண்டும். வாகனத்தின் யன்னல்களை மூடுவதுடன் எந்த ஒரு உலோகப் பகுதியையும் தொடாமல் இருப்பது நல்லது. வாகனத்தின் வானொலியை நிறுத்தி வைக்கவேண்டும். மின்னல் வாகனத்தின் மேற்பரப்பினூடாக உலோக சில்லுகளை அடைந்து இறப்பர் சில்லைக் கடந்து நிலத்தை அடைவதால் இறப்பர் சில்லு எந்த விதத்திலும் பாதுகாப்புக்கவசமாக இருக்காது.

6 உலோகம் போன்ற கடத்திகளையே மின்னல் தாக்கும்.

விளக்கம்: மின்னலைப் பொறுத்த வரையில் யாவுமே கடத்திகளாகும். ஆனால் உலோகங்கள் எளிதில் கடத்திகளாக இருக்கும். மின்னலால் வெளிவிடப்படும் சக்தியின் மீடிறன் வானொலி அலைகளின் மீடிறன் எல்லைக்குள் இருப்பதால் அவை எந்த மேற்பரப்பினூடும் பயணிக்கும். உலோகங்கள் இல்லாத பட்சத்தில் அரிதிற்கடத்திகளினூடாகக் கூட மின்னல் தரையை அடையும்.


7 உலோகத்தினாலான நகைகள், சப்பாத்துக்களை மின்னல் தாக்கும் வேலைகளில் அணிதல் உகந்ததல்ல.

விளக்கம்: இது மிகவும் அவதானமாகச் சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும். உலோகப் பொருட்களை அணிவதால் அவை மின்னலைத் தம்பக்கம் ஈர்க்கும் என்ற கருத்து தவறானது.ஆனால் மின்னல் தாக்கிய ஒருவர் அத்தகைய பொருட்களை அணிந்திருந்தால் அவை மின்னல் தாக்கத்தால் விரைவில் வெப்பமடைந்து பாரதூரமான எரிகாயங்களை உடலில் தோற்றுவிக்கும்..

No comments:

Post a Comment