Monday, January 7, 2019

சாணேற முழம் சறுக்கியதோ?


அண்மையில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட சுட்டி ஒன்று தொடர்பில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. அச்சுட்டி வேறெதுவுமல்ல. ‘ஜேர்மன் வொச்’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான  நீண்டகால கால நிலை அபாயச்சுட்டியேயாகும்.  1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 20 வருட காலப்பகுதியில் வெள்ளம், வரட்சி, புயல் போன்ற வானிலை சார் பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளின் பாதிப்பின் அடிப்படையில் இச்சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற கால நிலை உச்சி மா நாட்டிலே வெளியிடப்பட்ட உலகளாவிய கால நிலை அபாயச்சுட்டி 2019 என்ற அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இச்சுட்டி தொடர்பில் நான்காம் இட த்தை வகித்த இலங்கை 2019 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இது ஒரு முன்னேற்றத்துக்கான அறிகுறியன்று. இலங்கையின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துச் செல்வதற்கான அபாய அறிகுறியேயாகும். கால நிலைக்கும்.

அதிகூடிய வெப்பமும் எதிர்பாரா மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் என இலங்கை தொடர்ந்து பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந் நிலைமை தவிர்க்கமுடியாததாகி விட்டமையையும் உணர முடிகிறது.

கால நிலை மாற்றத்தை மனிதன் கையாளத்தவறும் ஒவ்வொரு கணமும் குறிப்பாக சிறுதீவுகளாக க் காணப்படும் நாடுகளின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்த வண்ணமே செல்கிறது.  உலகளாவிய சராசரி வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க இந்த மோசமான நிலைமைகள் உருவாகும் நிகழ்தகவும் அதிகரித்துச் செல்வதாக எதிர்வு கூறப்படுகிறது. ஆயினும் சில வானிலை நிகழ்வுகளுக்கும் கால நிலை மாற்றத்துக்குமான தொடர்புகளை இன்னும் விஞ் ஞான ரீதியாக உறுதி செய்ய முடியவில்லை. புவிக்கோளத்தின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க சில வானிலை நிகழ்வுகளின் மீடிறனும் செறிவும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் செல்கின்றமையை மட்டும் விஞ்ஞானத்தால்அவதானிக்க முடிகிறது.

அது மட்டுமன்றி ஒரு தனிப்பட்ட வானிலை நிகழ்விலே கால நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்டறிதலானது மிகவும் சிக்கலானதாகும். வேறுபட்ட பிராந்தியங்களில் நிலைமைகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. அவை தொடர்பான நீண்டகாலத்தரவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக க் காணப்படுகின்றன. கடந்த சிலகாலமாக  திடீரெனெ நிகழும் அதி தீவிர வானிலை  நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருவதும் உண்மையே. 

கால நிலை மாதிரிகளை உருவாக்கிப் பரீட்சித்து இத்தகைய அதீதமான வானிலை நிகழ்வுகளை எதிர்வு கூறுவதும் அவை   இடம்பெற்ற பின்னர் அவற்றுடன் ஒப்பிட்டு கால நிலை மாதிரிகளை மேலும் செம்மைப்படுத்துவதும் உலகளாவிய ரீதியிலே நடைபெற்ற வண்ணம் உள்ளன.  நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வானிலை அறிக்கைகள், அவற்றின் விவரணம் கூட இத்தகைய கால நிலை மாதிரிகள் எதிர்வு கூறுபவற்றை அடிப்படையாக க் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.  இத்தகைய கால நிலை மாதிரிகள் மூலம் புவி வெப்பமயமாதலினால் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் வெப்ப நிலை நீர்ச் சக்கரத்தை மேலும் செறிவுற்றதாக மாற்ற வல்லது. ஆதலினால் அதிகளவிலான ஆவியாதல் நடை பெற்று அதீத வரட்சியும் அவ்வாவியாதலுக்கேற்ற அதீத வீழ்படிவினால் பெரு வெள்ளங்களும் ஏற்படுகின்றமை சகஜமாகி விட்டது.வளி மண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படுவதையும் பல சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது.  இலங்கையில் நாம் அதிகளவில் கேள்விப்படும் சொற்களாக மாறிவிட்ட வெள்ள நிவாரணத்தையும் வரட்சி நிவாரணத்தையும் இக்கணத்தில் எண்ணிப்பார்க்க முடிகிறது. 

இவை யாவுமே வானிலை நிகழ்வுகள் நடை பெறும் நிகழ்தகவுகளை தினம் தினம் மாற்றிய வண்ணமே செல்கின்றன . 2016 ஆம் ஆண்டு  நிகழ்ந்த அதீத வானிலை நிகழ்வுகளை கால நிலை மாற்றத்தின் பார்வையில் அவதானித்து புதிய அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றம் என்பது மனிதனது செயற்பாடுகளின் விளைவே என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆக இந்த அதீத வானிலை நிகழ்வுகளுக்கும் மனிதனே காரணியாகிறான்.  அதீத வானிலை நிகழ்வுகளின் உருவாக்கம் கால நிலை மாற்றமன்றி சாத்தியமற்றது என்கிறது அவ்வறிக்கை.

உலகளாவிய கால நிலை அபாயச் சுட்டி அறிக்கை 2019 இன் அடிப்படையில், அதீத மழை வீழ்ச்சியென்பது தவிர்க்க முடியாததோர் நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாகிறது. தென்னாசிய, தென் கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்ட வானிலைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்பாராத அதீத மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளம், சரிவும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் தெளிவாக அறிக்கையிடப்பட்டிருக்கின்றன. இங் ஙனம் தனித்தனி அதீத மழை வீழ்ச்சியின் நிகழ்வு தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் காணப்படும் எனத் தெளிவாக எதிர்வு கூறப்படுகிறது.

ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆறுகள் பெருக்கெடுக்கின்றமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் ஏற்படும் பல பில்லியன் டொலர் சொத்தழிவும் வருடாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.   

எத்தகைய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கால நிலை மாற்றம் இத்தகைய அதீத வானிலை நிகழ்வுகளை உருவாக்குகிறது என்பதை அறியமுடியாதளவு இந் நிலைமை கற்பதற்குச் சிக்கலானது.

கடந்த வாரத்திலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகி வரும் வன்னி நிலப்பரப்பும் இத்தகையதோர் தோற்றப்பாட்டுக்கான உதாரணமாகும். திடீர் பேரனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றமையில் பல காரணிகள் தாக்கம்  செலுத்துகின்றன. போதுமான தயார்படுத்தலின்மை தொட்டு வறுமை போன்ற பாதிக்கப்படும் தன்மை, கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாத அபிவிருத்திச் செயற்பாடுகள் என அக்காரணிகள் இரு வெவ்வேறு அந்தங்கள் வரை வேறுபடுகின்றன. இயற்கையும் இரங்காத நிலையில் சாணேற முழம் சறுக்கிய கதையாக வன்னி மண் தொடர்ந்து அழிவுகளைப் பார்த்த வண்ணமே உள்ளது. 

தொடர்ந்து பெய்த செறிவான மழையாலும் வான் பாய்ந்த குளங்களாலும் கதிர் வந்த பருவத்தில் காணப்பட்ட  நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமான வயற்கானிகளை மூடி வெள்ளம் பாய்ந்தது. தொடர்மழைக்கு முன்னரே வளிமண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்தமையால் உருவாகிய நோய்களுக்கும் பீடைகளுக்குமாக 3 சதவீத மாதாந்த வட்டிக்கு கிருமி நாசினிகளைக் கொள்வனவு செய்து பிரயோகித்த விவசாயிகளையும் காண முடிந்தது. வட பகுதியிலே அதிகளவில் காணப்படுகின்றன என விமர்சிக்கப்பட்ட குறு நிதி நிறுவனங்களையும் தாண்டி இக்கிருமி நாசினி வியாபாரங்களும் கடன் விற்பனை மூலம் விவசாயிகளைச் சுரண்டும்   உத்தியைப் பயன்படுத்துகின்றமையைக் கண்கூடாகக் காண முடிந்தது. தனியார் வங்கிகள் ஒன்றும் சளைத்தவை அல்லவே. 1.5 சத வீத மாத வட்டி எனும் கவர்ச்சிகர விளம்பரத்துடன் விவசாயிகளைத் தேர்வு செய்து விவசாயக் கடன் எனும் பெயரில் வர்த்தக க் கடனை அவர்கள் பெற்றுகொள்ள ஆவன செய்கின்றமையும் கூடக் காண முடிந்தது. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ என்டர்பிறைஸ் லங்கா’ இலகு கடன் கொடுப்பனவுகள் பற்றி விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தி அவற்றை ஊக்குவிக்கும் சூழல் வன்னியின் விவசாயி- வங்கி உறவிலே காணப்படாத நிலைமையையும் உணர முடிந்தது. நடந்து முடிந்த அரசியல் குழப்பங்களும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களும் இத் தனியார் வங்கிகளின் நியாயப்படுத்தல்களாகின.  10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகள் ஆக க் குறைந்த மாதாந்த வட்டியாகிய 3 சதவீத வட்டியில கடனைப் பெற்றும் கடன் கொள்வனவை மேற்கொண்டும்  நகைகளை அடகு வைத்தும் தமது உழைப்புடன் சேர்த்து வயலிலே மேற்கொண்ட இலட்ச ரூபா பெறுமதியான முதலீடு ஒற்றை வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 

ஒவ்வொரு போகத்தின் போதும் காப்புறுதி செய்தல்  எனப்படுவது தேவையற்றதோர் செலவு என்ற கருத்தையே வன்னிப்பெரு நிலப்பரப்பின்  பெரும்பாலான பெரு விவசாயிகள்  அனேகர் கொண்டிருக்கின்றனர்.  இம்முறை பாரிய இழப்புகளைச் ச்சந்தித்திருக்கும் பெரு விவசாயிகளுள் பெரும்பாலானோர் தாம் விதைத்த நிலங்களுள் 10 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வீஸ்தீரணத்துக்கு காப்புறுதி செய்யாமல் விட்ட நிலைமையே காணப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஏக்கர் வயலுக்கு குறைந்த வட்டியுடனான விவசாயக்கடன்  அரசினால் வழங்கப்படுவதால் அதற்கு காப்புறுதி செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றத்தாலும் அதீத வானிலை நிகழ்வுகளாலும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இலங்கையிலே காப்புறுதியின் அவசியம் பற்றிய தெளிவு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை  இலங்கையின் விவசாயக் காப்புறுதிக்கான சேத மதிப்பீடு தொடர்பில் காணப்படும் சிக்கலான, நீண்ட நேரமெடுக்கும்  முறைமைகள் இலகு படுத்தப்பட வேண்டும். அண்மையில் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் விளம்பரம் ஒன்றை வவுனியா  நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் திரையிலே காணக்கிடைத்தது. ‘ட்ரோன்’  எனப்படும் சிறு வலவன் ஏவா வான ஊர்திகளைக்கொண்டு பெறப்படும் வான் புகைப்படங்களைக் கொண்டும்  அகச்சிவப்பு படங்களைக்கொண்டும் சேத விபரம், அவற்றின் விஸ்தீரணம், அகலாங்கு, நெட்டாங்கு ஆள்கூறுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கணித்து விவசாயக் காப்புறுதி வழங்கும் முறைமை இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமையை அவ்விளம்பரத்தினூடாக அறிய முடிந்தது.

உலகளாவிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது பசளை மானியத்தை விட கட்டாயக் காப்புறுதி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதெனலாம். இதில் அரசின் தலையீடு நிச்சயமாக அவசியமாகிறது. பெரு வெள்ளத்தால்  ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் பாரிய பொறுப்பு அரசையே சார்ந்ததாகி விடும். அச்செலவுடன் ஒப்பிடுகையில் கட்டாயக் காப்புறுதிக்காக அரசினால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு குறைவானதாகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். அல்லாவிடில் திடீர் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளும் மொத்த உள் நாட்டு உற்பத்தி, சமூகச் சுட்டிகளில் ஏற்படும் மாற்றமும் ஈடு செய்ய முடியாதனவாகிவிடுவன.

முன்னைய தசாப்தங்களைப் போலல்லாது வானிலையை ஒரளவு துல்லியமாக எதிர்வு கூறும் கால நிலை மாதிரிகள் புழக்கத்தில் வந்து விட்டன. விவசாயத்தை அடிப்படையாக க் கொண்ட பல நாடுகள் அம்மாதிரிகளை அடிப்படையாக க் கொண்டு விவசாயிகளின் பயிர் நாட்காட்டித் தரவுகளையும் இணைத்து வழிகாட்டும் செயலிகளை உருவாக்கி விவசாயிகளின் பயன்பாட்டுக்கென இலவசமாக வெளியிட்டிருக்கின் றன. 

ஆனால் வன்னியிலே இவ்வானிலை எதிர்வுகூறலில் நம்பிக்கை வைத்து, அதனைக் கருத்தில் கொண்டு தொழிற்படும் விவசாய சமூகத்தைக் காண்பது அரிதாகவே இருக்கிறது.வயல் நிலத்தின் மீது  இலட்சக் கணக்கிலான முதலீட்டை மேற்கொள்ள முன்னர் சிந்தித்துச் செயற்பட இவ்வெதிர்வுகூறல்கள் நிச்சயமாக விவசாயிக்கு உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  கால நிலை மாதிரிகளை ஒட்டி, விவசாயிகளுக்குப் பயன்படும் வகையிலான செயலிகள் பல அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  தகவல் தொழில்  நுட்ப விழிப்புணர்வை யாழ் மண்ணின் இளையோர் மத்தியில் பரப்பி வரும் ‘சுடர்’, ‘ஊக்கி’ போன்ற செயற்பாட்டு அமைப்புகள் இத்தகைய சமூகப் பொறுப்புள்ள செயற்பாடுகளில் இளையோரை ஈடுபடுத்த முன் வர வேண்டும்.

அரச இயந்திரங்களும் தம் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கால நிலை மாற்றத்தையும் அதீத வானிலை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்குத் தாக்குப்பிடிக்க க் கூடிய வகையிலே அவற்றை மேற்கொள்ளவேண்டும். மேலிருந்து கீழான கட்டளை நடைமுறைகளாலும்  மட்டுப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீடுகளாலும் இற்றைவரைப்படுத்தப்படாத திறன் விருத்தியாலும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை செவ்வனே நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கலாம். அரச தொழில் என்பது சவால்கள் நிறைந்ததே. களத்தின் நிலைமையை உயர் மட்டத்துக்கு  எடுத்துச் சொல்லி தேவைக்கேற்ற அபிவிருத்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதென்பது ஒவ்வொரு அரச ஊழியனதும் பொறுப்பாகும். இன்றேல் யாவருக்குமான அபிவிருத்தி என்பதும் , நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பதும் வெறும் வாய்ச்சொற்களாக காற்றிலே பறந்துவிடுவன. 

வீடு தொட்டு வீதி வரை சகல கட்டுமானங்களும்  காலநிலை மாற்றத்தையும் அதீத  வானிலை நிகழ்வுகளையும் தாக்குப் பிடிக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.  கட்டுமான வேலைகளில் ஈடுபடும் சகலதரப்பினரும் இத்தகைய தாங்குதிறன் மிகு கட்டுமானம் தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாண நகரையும் அதை அண்டிய பகுதிகளிலும்  காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட மழை  நீர் வடிகால்களின் அகலம், ஆழத்துடன் தற்காலத்தில் அமைக்கப்படும் அத்தகைய வடிகால்களின் அகலத்தையும் ஆழத்தையும் ஒப்பிட்டு நோக்கினால் தீர்க்கதரிசனம் மிகு அபிவிருத்தியின் தேவையையும் நிலையையும் உங்களால் உணர முடியும்.  

வடக்கின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் இன்றைய   நிலை எம் மத்தியில்  சிக்கலான பல வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பாரிய பொறுப்பை முன் வைத்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்து இயங்கினால் மாத்திரமே அவ்விடைகளுக்கான தேடல்களை எம்மால் ஆரம்பிக்க முடியும்!

கால நிலை மாற்றம் விதித்த சாபத்திலிருந்து இவ்வழகிய தீவை மீட்கும் பாரிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் கையிலுமே தங்கியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்திலேயே நாம் உயர் கல்வி வரை இலவசமாகக் கற்கிறோம்.  ஓரிரு வருடங்களேனும் நாம் கற்ற கல்வியை எம் தாய் நாட்டிலேயே பிரயோகித்தால் எதற்கும் சளைக்காத உறுதியான தேசமாக இலங்கையும் மாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

No comments:

Post a Comment