Sunday, February 3, 2019

காணி நிலம் வேண்டும்!

உலகளாவியரீதியிலே பண்டைக்காலந்தொட்டு நடந்த போர் வரலாறுகளிலெல்லாம் நிலத்துக்கு பெரு முக்கியத்துவம் உள்ளது. தமிழர் வாழ்வியலும் காணியும் பின்னிப்பிணைந்ததெனலாம்.  காணியின் அறிமுகம் சோழர் காலத்தில் ஆரம்பிக்கிறது. காணியென்பது உரிமையின் மறு பொருளாக க் கருதப்பட்டாலும் 1/80 என்ற அலகை அடிப்படையாக க் கொண்ட முறையாக க் குறிப்பிடப்படுகிறது.
தமிழர் வரலாற்றிலே இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னன்  இராஜ ராஜ சோழனுடைய காலத்தில் தான் முதன் முதல் நிலங்கள் அளவை செய்யப்பட்டன. எல்லைகள் வகைக் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் உரித்தான நிலங்கள் கணக்கிடப்பட்டன. நிலங்கள் மீதான  விளைச்சலின் அடிப்படையில் அவை தரம்பிரிக்கப்பட்டன.  நில அளவையில் வேலி, மா, காணி, முந்திரி போன்ற சொற்பதங்கள் மிக முக்கியமானவை.
ஈழ தேசமும் ஜன நாதமங்கலம் எனவும் மும்முடிச் சோழ புரம் எனவும்  நெடுங்காலம் சோழர் ஆட்சியின் கீழ் இருந்தமையாலோ என்னவோ  எம்மவர்  வாழ்வியலிலும் காணிக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
 நுகர்வை அடிப்படையாகக் கொண்ட இன்றைய உலகிலே  காணி எனப்படுவது நிலமாகக் கருதப்படுவதுடன் மிகவும் பிரதானமானதோர் பொருளாதார வளமாகப் பார்க்கப்படுகிறது.  ஏனெனில் காணி மீதான உரிமையை அடிப்படையாக க் கொண்டே ஏனைய பொருளாதார, உற்பத்தித்திறன் சார் வளங்கள் மீதான அதிகாரம் பிரயோகிக்க ப்படுகிறது. நகர்ப்புறமோ கிராமப்புறமோ அவ்வதிகாரம் தொடர்பில் ஒத்த போக்கே காணப்படுகிறது.   நிலமின்றி மேற்கொள்ளப்படும் விவசாயம் நடைபெற்றாலும் கூட அதிகரித்துவரும் உலக சனத்தொகையின் உணவுத் தேவையை ஓரளவேனும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கின்றதென்றால் நிலமன்றி வேறேதும் துணை புரியாது. நிதி வளங்களைப் பெற்றுக்கொள்வதற்கான பிடியாக மட்டுமன்றி  திருமணங்களின் போதும் காணியின் செல்வாக்கு மிக அதிகமாகவே காணப்படுகிறது.
அடிப்படையில் வறுமையை ஒழிக்க வேண்டுமாயின், உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமாயின்,  நிலையான அபிவிருத்தியை  அடைய வேண்டுமாயின் நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியன  அத்தியாவசியமானவையாக மாறி விடுகின்றன. அதனால் தான் கற்றுக்கொண்ட பாடங்கள், மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் கூட நிலம், அதன் மீதான உரிமை, அதிகாரம் ஆகியவற்றுக்கும்  அவற்றின் மீது பெண்களின் பங்குக்கும் அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது.  இலங்கையைப் பொறுத்த வரையிலே ஏறத்தாழ 80 சதவீதத்துக்கும்  அதிகமான காணிகள் மீதான உரிமையை அரசே வைத்திருக்கிறது. ஆயினும் அவற்றுள் பெரும்பாலானவை  பல்வேறு தேவைகளுக்காக பொது மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும்  நிபந்தனைகளின் பிரித்தளிக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் போன்று பிரித்தானியரின் நிர்வாக மையமாகச் செயற்பட்ட மாவட்டங்களில் தனியார் காணிகள் அதிக சதவீதத்திலும் அரச  காணிகள்  குறைவான சதவீதத்திலும் காணப்படுகின்றன. 
காணி உரிமை, அதிகாரம் போன்றவை இலங்கையைப் பொறுத்தவரையிலே ஆண்வழி சமூக க் கட்டமைப்பை அடிப்படையாக க் கொண்டவையாகவும் பெண்களைப் பின்னிறுத்தியவையாகவுமே காணப்படுகின்றன. 1970 களில் உருவாக்கப்பட்ட காணிச் சீர்திருத்தங்களின் பின்னரும் கூட அதிகளவு நில புலங்களை வைத்திருந்த பலர் வடக்கு கிழக்கு பகுதிகளை விட்டு புலம் பெயர்ந்து விட்டனர். இந் நிலையில்  அரச காணியாகிலும் சரி தனியார் காணியாகிலும் சரி காணி மீதான உரிமை, அதிகாரம் தொடர்பில் சிக்கலான நிலைமைகள் உருவாகியமை தவிர்க்கமுடியாததாகி விட்டது.  நாட்டில் நிலவிய அசாத்தியமான சூழ் நிலை காரணமாக பிரித்தளிக்கப்பட்ட அரச காணிகளை அபிவிருத்தி செய்ய முடியாது கைவிட்டுச் சென்றோர் மிகப்பலர்.  இந் நிலைமைக்கு தனியார் காணிகளும் விதி விலக்காக அமையவில்லை.
கைவிட்ட நிலையில் காணப்பட்ட காணிகள் பல காலத்துக்குக் காலம் பல்வேறு தரப்பினராலும் அத்து மீறிப் பிடிக்கப்பட்டு ஆட்சி செய்யப்பட்டு வருகின்ற  நிலைமையும்  தவிர்க்க முடியாததாகிவிட்டது என்றே கூற வேண்டும். யுத்தமும் சுனாமி அனர்த்தமும் பல உரித்தாவணங்களும் கோவைகளும் அழிந்து போகவும் கைவிடப்படவும் காரணமாகி விட்டன. 1970 களின் பின்னர் காணி அத்து மீறல்கள் அளவை செய்யப்பட்டு வரைபடங்கள் இற்றைவரைப்படுத்தப்படவில்லை. கடந்த 3 தசாப்தகாலங்களுள் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளும் பகிர்ந்தளிப்புகளும் கூட வரை படங்களில் இற்றை வரைப்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகிறது.
அசாத்திய சூழ் நிலைகளால் கைவிடப்பட்ட காணிகளை 3 தசாப்த காலம் கடந்து , ஆவணங்களை இழந்து உரிமை கோரும் போது அவை வேறு தேவைகளுக்காக பாவிக்கப்பட்டிருக்கின்றமையையும்  அவற்றின் நிலப்பயன்பாடு மாறி இருக்கின்றமையையும் அதன் காரணமாக அவை பல்வேறு பட்ட திணைக்களங்களின் அதிகார எல்லைக்குள் ஆட்பட்டிருக்கின்றமையையும் அவதானித்தபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள காணிகளின் உரித்து, அவற்றின் மீதான அதிகாரம்  தொடர்பில் தொடர்ந்தும் தெளிவற்ற நிலைமைகள் காணப்படுகின்றமையை அவதானிக்க முடிகிறது.  அத்துடன் ஆறு, குள ஒதுக்கீடுகளும் பாதை ஒதுக்கீடுகளும்  அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு நிலையான குடியிருப்புகளாக மாற்றப்பட்ட நிலையில் அவற்றை ஒழுங்குபடுத்துதல்  தொடர்பான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்தும் நீடித்த வண்ணமேயுள்ளன.
யுத்த சூழலில் உள் நாட்டில் இடம்பெயர்ந்து மீளக்குடியமராதவர்களும் புலம் பெயர்ந்தவர்களுள் பெரும்பாலானோரும் தமக்கான காணி உரிமையை வட கிழக்கு மாகாணத்தில் கொண்டிருக்கின்ற அதேவேளை மீளக்குடியமர்வின் பின்னர் தற்போது குடியமர்ந்திருக்கும் பல புதிய, உப குடும்பங்களுடைய காணி உரிமை தொடர்பில் இன்னும் சிக்கலான நிலைமையே காணப்படுகிறது.
அரச காணிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட இயலாதவையாக இருந்த போதும் விற்பனை உடன்படிக்கை மூலம் கைமாற்றுபவர்கள் இன்னும் வாழ்ந்த வண்ணமே இருக்கின்றனர். மூன்று தசாப்த கால அசாதாரண சூழ் நிலைகளின் போது உருவாகிய இப்பழக்கத்தை எந்தவொரு தரப்பினரும் கைவிடுவதாக இல்லை. காணிகளை பிரிக்கப்படஇயலாத விஸ்தீரணங்களுக்கும் குறைவாகப் பிரிவிடை செய்து விற்பனை உடன்படிக்கைகள்  மூலம் கைமாற்றுபவர்களும் திருந்தாத நிலையே தோன்றியுள்ளது.  இவை யாவுமே அரச நிர்வாக இயந்திரங்களின்  எல்லைகளுக்கப்பால் தினந்தோறும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளன.  
ஏறத்தாழ ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னரே  அப்போது காணப்பட்ட அரச காணிகளுக்கு வெளிப்படுத்துகை உறுதிகளை எழுதி கைமாற்றும் முறைமைக்கு பழக்கப்பட்ட எம்மவர்கள் அதைத் தற்காலத்திலும் தொடர்கின்றமை  பல முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. மத்திய வகுப்பினருக்கென வழங்கப்பட்ட காணிகளும் கூட நிபந்தனைகளை மீறி பிரிவிடை செய்யப்பட்டும் உரிமை கோரப்படாமலும் பல்வேறு தரப்பினரால் அத்துமீறிப்பிடிக்கப்பட்டும் சிக்கலானதோர் நிலையில் காணப்படுகின்றன.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் சிபாரிசுக்கமைய காணி ஆணையாளரால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்களின் அடிப்படையிலே அத்து மீறிப்பிடிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் ஆவணங்கள் தொலைந்த, ஏலவே பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணிகளுக்கும் உரித்தாவணங்கள் வழங்கப்பட்டு பல்லாயிரக்கணக்காணோரின் காணி உரிமை உறுதி செய்யப்பட்டமையை ஒரு போதும் மறுக்க முடியாது.
மூன்று தசாப்த கால அசாத்திய சூழல் காரணமாக எந்தவித திட்டமிடலுமின்றி திடீரென பெரு நகரங்களாக வளர்ச்சியடைந்த பிரதேசங்கள் பலவும் வடகிழக்கிலே காணப்படுகின்றன. நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகள் நீண்ட கால க்குத்தகையில் வழங்கப்பட வேண்டியவை. ஆயினும் இப்புதிய நகரங்களுள் அவை இன்னும் முற்றாக ஒழுங்கமைக்கப்பட்டு குத்தகை அறவிடப்பட்டு வருகின்ற நிலைமை அரிதாகவே காணப்படுகிறது. ஆயினும் அக்காணிகளை மேட்டு நிலமாகப் பயன்படுத்த அனுமதி பெற்ற தனி நபர்கள்  பெருந்தொகை பணத்தை பெற்று அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குகின்றமையையும்   அரசினால் வழங்கப்படும் குத்தகை உடன்படிக்கைகளை கை மாற்றூகின்றமையையும் கூட பரவலாக அவதானிக்க முடிகின்றது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களில் காணப்படும் வளப்பற்றாக்குறை காரணமாக இத்தகைய செயற்பாடுகள் அவற்றின் கைகளை மீறியவைகளாகவே இருக்கின்றன.
அரச காணிகள் தொடர்பிலான  நிலைமை இவ்வண்ணமிருக்க கடந்த கால அசாதாரண சூழ் நிலையால் அத்து மீறிப்பிடிக்கப்பட்ட தனியார் காணிகள் மீதான வழக்குகள் அரை தசாப்தத்துக்கும் மேலாக  நீதி மன்றுகளில் நடைபெற்று வருகின்றன.  காணிக்கான உண்மை உரித்தாவணங்களுடன் உரிமையாளரும் எந்தவித ஆவணங்களின்றி அத்துமீறிப்பிடித்தவர்களும் அரை தசாப்தங்களுக்கு வழக்காடுகின்றமை சிலவேளைகளில் யதார்த்தத்துக்கும் தர்க்கத்துக்கும் அப்பால் பட்டவைகளாகவே காணப்படுகின்றன. மாவட்டப் பதிவகங்களிலிலிருந்த காணி உரித்தாவணப்பதிவேடுகள் அழிவடைந்தமையால்  2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பதிவு செய்த தனியார் உறுதிகள் சத்தியக்கடதாசியுடன் மீளவும் பதிவு செய்யப்படுகின்றன. இவை பற்றிய விழிப்புணர்வு  கற்றவரிடமும் மற்றோரிடமும் குறைவாகவே காணப்படுகின்றன.
யாழ்ப்பாணத்திலே 80 சதவீதமான காணிகள் தனியார் காணிகளாதலால் தனியார் உறுதிகளைக் கைமாற்றிப் பழக்கப்பட்டோர் வட மாகாணத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச காணிகளையும் தனியார் காணிகள் என கல்வியறிவு வேறுபாடின்றி அனைவரும் நம்பி ஏமாறும் பல  நிகழ்வுகள் அன்றாடம் இடம்பெற்றவண்ணமே உள்ளன. 
குறித்த காணியொன்று தனியார் காணியா? அரச காணியா என்பதை அக்காணி அமைந்துள்ள பிரிவுக்குரிய பிரதேச செயலகத்தில் காணப்படும் நில அளவை வரைபடங்களை அடிப்படையாக க் கொண்டு அறிய முடியும். இலையேல் நில அளவைத் திணைக்களத்திலுள்ள இற்றைவரைப்படுத்தப்பட்ட நில அளவை வரைபடங்களைக் கொண்டும் அறிய இயலும். காணி தொடர்பிலான நிர்வாக இயந்திரங்களில் மூன்று தசாப்தகாலமாக ஏற்பட்ட இடைவெளியை பூர்த்தி செய்து  சம காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க இன்னும் சில தசாப்தங்களாகும் எனலாம்.
இவை இப்படி இருக்க பெண்களின் காணி உரிமை பற்றி எவரும் பெரிதளவில் கருத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அடிப்படையில் நிலம் மீது பெண்ணுக்கு உரிமையோ அல்லது அதிகாரமோ காணப்படும் பட்சத்தில் பல அபிவிருத்தி இலக்குகளை இலகுவாக எட்டமுடியும் என ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.பெண்களுக்கு காணிமீதான அதிகாரமும் உரிமையும் காணப்படும் போது  பொருளாதார ரீதியிலான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும். ஆண்களுடன் ஒப்பிடுகையில் நிலப் பாவனை தொடர்பாக பெண்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் வினைத்திறனானவையாக இருக்கும். அக்காணியிலிருக்கும் இயற்கை வளங்கள் நிலைத்திருக்க க் கூடிய வகையிலே பாவனையிலிருக்கும். ஆண்களுக்குக் கிடைப்பனவான பௌதிக வளங்கள் பெண்களுக்கும் கிடைக்கப்பெற்று அவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் விளைச்சல் 20-30 சதவீத த் தால் அதிகரிக்கும்.  உணவுப் பாதுகாப்பு தானாகவே அதிகரிக்கும்  என்றெல்லாம் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆயினும் காணி மீதான உரிமை, அதிகாரத்தை பெண்களுக்கும் சமமாக வழங்க நாம் தயாராக இருக்கிறோமா என்பது பணப்பரிசுக்குரிய
கேள்வியாகவே இன்றும் இருக்கிறது.

No comments:

Post a Comment