Sunday, May 22, 2011

வடக்கில் பார்த்தீனிய கட்டுப்பாடு விழலுக்கு இறைத்த நீராகிப் போனது!



அது 1980 களின் பிற்பகுதி...
உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்கவென இந்திய அமைதிப்படை இலங்கையில் கால் பதித்திருந்த காலம். 1987 களில் இந்தியத்துருப்பினர் தம்முடன் செம்மறி ஆடுகளையும் கொண்டுவந்தனர். அவர்கள் கொண்டு வந்த ஆடுகள் மற்றும் பொதியுடன் ஒருவகை விதையும் சேர்ந்து வந்தது. அப்போது அந்த விதை பற்றி இலங்கையில் எவரும் அறிந்திருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியத்தின் பரம்பல் எமது கட்டுப்பாட்டில் இல்லை என்றே கூற வேண்டும். (பாத்தீனியம்) பல பொது இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

முன்னர் எமது திணைக்களம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெவ்வேறு நிலைகளில் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பல விவசாய அமைப்புகளும் ஒத்துழைத்தன. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. மக்கள் தமது தோட்டத்திலிருக்கும் பார்த்தீனியம் செடிகளைக் களையக்கூட தயாராக இல்லை. இப்படி இருக்கும் போது பொது இடங்களில் இருப்பவற்றை எப்படிக் களைய முடியும்?

பார்த்தீனியம் செடிகளை ஒரேதரத்தில் அழிக்கமுடியாது. அழிப்பு நடவடிக்கைகளை குறித்த கால இடைவெளிகளில் கிரமமாக நடைமுறைபடுத்த வேண்டும். அத்துடன் செடிகள் பூக்க முதலே அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் விதைகள் விரைவாகப் பரப்பிவிடும்.

இந்த வருடம் பார்த்தீனிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

களை கொல்லிகள் மூலம் அவற்றை ஒழிப்பதற்கு போதிய நிதியுதவியும் கிடைக்கவில்லை. பார்த்தீனிய ஒழிப்பில் பிரதேச செயலகங்கள், பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பு இல்லாமல் நாம் தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.
இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த வவுனியா விவசாயப் பாடசாலை வளாகத்தில் விழுந்த அந்த விதைகள் விழுந்து முளைத்தன. விளைவு, பார்த்தீனியம் என்ற அழிக்கும் இயல்புடைய (புதிய வகை)த் தாவரம் முளைக்கத் தொடங்கியது. பார்த்தீனியமானது இந்தியாவில் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என்றே கூறவேண்டும்.

இந்திய அமைதிப்படை முகாமிட்டிருந்த பகுதிகளிலெல்லாம் பார்த்தீனியம் மிகவும் வேகமாகப் பரவியது. அதன் பரவல் மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாகியது. ஏனெனில் பார்த்தீனியம் பரவியுள்ளது என்பதை அறியவே எமக்குப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன.
இந்திய அமைதிப்படை மீளவும் தன் தாய் நாட்டுச் சென்று சில வருடங்களின் பின்னரே பார்த்தீனியத்தின் பரவல் பற்றி அறியப்பட்டது. 1999 ஜுலை மாதத்தின் பிற்பகுதியிலே வவுனியாவில் இத்தாவரம் பரவலாகக் காணப்படுவது கண்டறியப்பட்டிருந்தது.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது யாழ் குடாநாடு, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, குருணாகல், கண்டி, மற்றும் பதுளை போன்ற பல மாவட்டங்களில் இதன் பரவல் கண்டறியப்பட்டது.

இந்திய அமைதிப்படை முகாமிட்டிருந்த பகுதிகளிலே பார்த்தீனியம் செறிந்து பரவியிருந்தது. ஆதலால் இலங்கையில் அதன் பரவலுக்கு வித்திட்டது இந்திய அமைதிப்படையே என்று கூறப்படுகிறது. ஆனால் 1985 களிலே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட் வெங்காயம், மிளகாய் விதைகளுடன் பார்த்தீனியம் விதைகளும் சேர்ந்தே வந்தாகவும் கூறப்படுகிறது.

பார்த்தீனியம் ஒரு சாதாரண களை தானே என எண்ணி அதை அலட்சியப்படுத்த முடியாது. விவசாயத்தில் மட்டுமன்றி சுற்றுச் சூழலிலும் மனித, விலங்குகளின் சுகாதாரத்திலும் பாரிய எதிர்விளைவுகளைத் தோற்றுவிக்கவல்லது.
இந்தியா, அவுஸ்திரேலியா, மெக்சிக்கோ, கர்பியத் தீவுகள் போன்ற நாடுகள் அந்த விளைவுகளை நன்கே அறிந்து வைத்திருக்கின்றன.
பார்த்தீனியத்தின் தாயகம் மெக்சிக்கோ வளைகுடாவை ஒட்டிய பகுதிகளாகும்.
1950 களிலே இந்தியா, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த கோதுமை விதைகளுடன் பார்த்தீனிய விதைகளும் சேர்ந்தே சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் பரவத் தொடங்கிய விதை இந்தியாவின் ஒருசில மாநிலங்களைத் தவிர ஏனைய சகல பகுதிகளுக்கும் பரவியது.
இப்படி ஏதோ ஒரு காரணத்தால், உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. தெற்கு தென்கிழக்காசியா, பசுபிக் மற்றும் மேற்கு ஆபிரிக்க பிராந்தியங்களில் வேகமாகப் பரவியது.
பார்த்தீனியத்தின் உயிரியல் பெயர் Parthenium Hystrophorous என்பதாகும். இது மூலிகைத் தாவரமாகவும் அறியப்படுகிறது. ஆணி வேரையும் உறுதியான தண்டையும் உடையது. இதன் இலைகள் இளம் பச்சை நிறமானவை. ஆவியுயிர்ப்பைக் குறைக்கும் நோக்கிலே இலைகளில் மயிர்கள் காணப்படும். இதன் பூவின் நிறம் பழுப்பான வெள்ளையாகும். பல்கிளைத்தண்டுகளைக் கொண்டது.

இதன் விதைகள் கறுப்பு நிறமானவை. அவற்றின் மேற்பரப்பில் வெள்ளை வரிகள் காணப்படும். அவை மிகவும் சிறியவை (1-2cm நீளம்) ஆதலால் வெற்றுக்கண்ணுக்குத் தெரியக் கூடியவை என்று கூறி விடமுடியாது.

அயன வலய நாடுகளின் சுவாத்தியம் பார்த்தீனியத்தின் பரவலுக்கு மிகவும் சாத்தியமானதாகும். இலை துளிர், வசந்த காலங்களில் விதைகள் முளைக்கும். முளைக்க ஆரம்பித்து 4 வாரங்களிலேயே பூக்க ஆரம்பித்துவிடும். பூக்க ஆரம்பித்தால் தாவரம் இறக்கும் வரை தொடர்ந்து பூத்துக் கொண்டேயிருக்கும். ஒரு தாவரம் மட்டுமே ஒரு இலட்சம் விதைகளை உற்பத்தி செய்யக்கூடியது. இலையுதிர், குளிர் காலங்களில் இத்தாவரம் இறந்து போகும். இப்படியே இதன் வாழ்க்கை வட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இது மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. புல் நிலங்களிலும் கைவிடப்பட்ட நிலங்கள், வீதியோரங்கள், நீர் நிலைகளை அண்டிய பகுதிகளில் கூட்டம் கூட்டமாகக் காணப்படும். வீட்டுத் தோட்டங்களைக்கூட இச்செடி விட்டு வைத்ததாகத் தெரியவில்லை.
இது பல்வேறு வழிகளால் பரவுகிறது. வாகனங்கள், இயந்திரங்கள், விலங்குகள், விதைகள், விலங்குணவு, மற்றும் நீரால் பரவுகிறது. வெள்ளத்தாலும் கூட பரவுகிறது.
நீர் நிலைகள், ஆறுகளிலிருந்து நீர் கொண்டு செல்லப்படும் பகுதிகள் யாவற்றிற்கும் இவை பரவும். பதுளை கண்ட கெட்டிய பகுதியிலிருந்து பண்டாரவளை வரை பார்த்தீனியம் பரவுவதற்கு மகாவலி கங்கையே காரணமாக இருந்தது. பார்த்தீனியம் விதைகளின் காவியாக அது தொழிற்பட்டது.

அதேபோல யுத்த காலங்களில் வடபகுதி லொறிகளையும் வாகனங்களையும் சோதனை செய்யும் சாவடிகளை அண்டிய பகுதிகளிலே பார்த்தீனியத்தின் பரம்பல் மிக அதிகமாகக் காணப்பட்டமையும் அறியப்பட்டது.
அதேபோல கால்நடைகளின் சாணத்தில் இவ்விதைகள் காணப்படும். இப்படி பல்வேறுபட்ட வழிமுறைகளால் மிக இலகுவாகப் பரவும் வல்லமை வாய்ந்தது பார்த்தீனியம்.

பார்த்தீனியம் ஒரு அழிக்கும் இயல்புடைய தாவரமாக / களையாக அறியப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பார்த்தீனியத்தின் வேகமாகப் பரவும் இயல்பு சுதேச தாவரங்களை அழித்து விடும் வல்லமை மிக்கது. இவை நிலங்களின் தரத்தைக் குறைக்கும் அத்துடன் கால்நடைகளின் உற்பத்தித் திறனையும் குறைக்கும். இவை காபனீரொட்சைட்டை வெளிவிடுபவையாதலால் நைதரசன் பதித்தல் பாதிக்கப்படும்.
பார்த்தீனியம் செடியின் மகரந்தமானது சிறுவர்கள், முதியோர்கள் மத்தியில் ஆஸ்துமாவை ஏற்படுத்தும். பல்வேறுபட்ட ஒவ்வாமை நோய்களையும் தோல்வியாதிகளையும் ஏற்படுத்தும். இதற்கு மனிதர் மட்டுமன்றி விலங்குகளும் விலக்கல்ல. விலங்குகளில் பால் உற்பத்தியை மட்டுமன்றி அவற்றின் நிறையையும் குறைக்கும். கண்களில் ஒருவித எரிச்சலைத் தோற்றுவிக்கும்.
பார்த்தீனியம் செடி ஏற்படுத்தும் சுகாதாரப் பிரச்சினைகள் வரையறையற்றவை என்று கூடக் கூறமுடியும்.

இலங்கையைப் பொறுத்தவரையிலே யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களிலேயே இது அதிகளவில் பரம்பிக் காணப்படுகிறது. அத்துடன் திருகோணமலை (சீனன்குடா), குண்டசாலை, பதுளை, அம்பிலிப்பிட்டிய, சூரியவெவ ஆகிய பிரதேசங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுகளில் பரம்பிக் காணப்படுகிறது.
யாழ். மாவட்டத்திலே பலாலி வீதி, காங்கேசன் துறை வீதி, பருத்தித்துறை வீதி போன்ற பிரதான வீதிகளின் ஓரங்களிலே இச்செடியைப் பரவலாகக் காணமுடிகிறது. அதேவேளை யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியம் செடிகளில் அதிக சதவீதமானவை கோப்பாய் பிரதேசத்திலேயே பரவியிருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.
பயிர்ச் செய்கையை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட பிரதேசம் கோப்பாய். பார்த்தீனியம் செடிகள் அங்கு செறிந்தளவில் பரம்பியிருப்பதால் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் அறியப்பட்டுள்ளது.
பாத்தீனியத்தின் பரம்பலைக் கட்டுப்படுத்தி அதனை முற்றாக ஒழிப்பதற்கு உலகளாவிய ரீதியில் பல்வேறு வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. அவற்றை வேரோடு பிடுங்கி அழிக்க முடியும். ஆனால் அது எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானவை என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஏனெனில் தனிமைப்படுத்தப்பட்ட செடிகளையே அவ்வாறு அழிக்க முடியும். கூட்டம் கூட்டமாக அழிப்பதாயின் தேவையான மனித வளம் மிக அதிகமாகும். அத்துடன் ஒவ்வாமை நிலைமைகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது. ஏற்கனவே பூத்த தாவரங்களை பிடுங்கி அழித்தலானது விதைகளை இன்னும் வேகமாகப் பரவலடையச் செய்யும்.
அத்துடன் பார்த்தீனியச் செடிகளைப் பிடுங்கி அழிப்பதற்குச் செலவாகும் நேரம் மிக அதிகமாகும்.

களைகொல்லிகளைப் பயன்படுத்தியும் பார்த்தீனியம் செடிகளை அழிக்க முடியும். இந்த முறையின் மூலம் இளந்தாவரங்களை அழித்தலே பயனுடையதாக இருக்கும். ஏனெனில் வயதான தாவரங்களை அழித்தாலும் அவற்றின் விதைகளால் மீண்டும் செடிகள் முளைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். அத்துடன் இம்முறையை முகாமை செய்வதற்கான செலவும் மிக அதிகமாகும்.
இலங்கையிலும் பார்த்தீனிய கட்டுப்பாட்டுக்கென சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் கணிசமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுகிறது.

உயிரியல் முறைமை மூலம் (உயிரிக் கொல்லிகள்) பார்த்தீனியம் செடிகளின் பரம்பலைக் கட்டுப்படுத்துதல் வினைத்திறன் மிக்கதாகக் கருதப்படுகிறது. பங்கசுகளை அறிமுகப்படுத்தி இவற்றின் பரம்பலைக் கட்டுப்படுத்த முடியும். பங்கஸ் தொற்று ஏற்படுவதற்கு ஈரப்பதன் மிக்க நிலைமை அவசியம். வெப்ப நிலை மாற்றங்கள் பங்கஸ் தொற்றைப் பாதிக்க வல்லன. ஆதலால் பார்த்தீனியம் செடியின் பரம்பலை பங்கஸ் விருத்தியைக் கொண்டு கட்டுப்படுத்துவதென்பது இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகிறது.
பார்த்தீனியம் செடியின் பாகங்களை உணவாகக் கொள்ளும் பூச்சி இனங்களை அறிமுகப்படுத்தி செடியின் வளர்ச்சி, விதை உற்பத்தி போன்வற்றைக் குறைக்க முடியும்.

அவுஸ்திரேலியாவிலே 20 வருடகால ஆராய்ச்சியின் பின் பார்த்தீனியம் செடிகளின் பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக 9 பூச்சிகள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால் நடைமுறையில் இரண்டு மட்டும் இச்செடிக்குப் பாதிப்பை ஏற்படுத்த வல்லவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.
ஏனெனில் களைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் பூச்சிகளின் செயற்பாடு காலநிலை, கால அவகாசம் போன்றவற்றில் தங்கியிருக்கிறது.
ஆனால் பொதுமக்களிடம் போதியளவு விழிப்புணர்வு இல்லாவிடில் மேற்குறிப்பிட்ட எந்த முறைமைகள் மூலமும் உச்சப் பயனைப் பெற முடியாமல் போய்விடும். எவ்வளவுதான் சட்டதிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதிகாரத் தரப்பும் பொதுமக்களும் இணைந்து அக்கறையோடு செயற்பட வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. மிக முக்கியமான இரு தரப்புகளும் கைகோர்க்க முனையாத காரணத்தால் தான் இன்று யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் பார்த்தீனியம் கட்டுப்படுத்த முடியாதளவுக்குப் பரம்பிக் காணப்படுகிறது.

கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின. குறித்த பிரதேசத்தில் பார்த்தீனியக் கட்டுப்பாட்டு / அழிப்பு நடவடிக்கைகளை ஒரு தடவை மட்டுமே மேற்கொள்ளவதால் எந்தப் பயனும் ஏற்படாது. ஒரே பிரதேசத்தில் குறித்த கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளும் போதே வெற்றியளிக்கும். இல்லாவிடில் பெருந்தொகை பணம் செலவாவது மட்டுமே மீதமாகும்.
இவை தொடர்பாக எவரும் அக்கறை கெள்வதாகத் தெரியவில்லை.

30 வருடகால யுத்தம் முடிந்து வடக்கு தெற்கு பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தும் தங்கு தடையின்றி நடைபெறுகிறது. பார்த்தீனியத்தின் பரம்பல் என்ற பார்வையிலே நோக்கும் போது இப்போதுதான் இலங்கை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கிறதோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
பார்த்தீனியத்தை இலங்கை முழுவதும் பரப்ப வடக்குக்கும் தெற்குக்குமாய் சென்று வரும் வாகனங்கள் மட்டுமே போதும் என்கிறார் கொழும்பு பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் சரத் கொட்டகம. அவர் கடந்த கால வரலாறுகளையும் சுட்டிக்காட்ட மறுக்கவில்லை.

அவ்வாறு பரவுவதைக் கட்டுப்படுத்த என்ன செய்யப்போகிறீர்கள் என யாழ்ப்பாண விவசாயத் திணைக்களத்திடம் வினவினால், இதுவரை எந்த ஒரு திட்டமும் இல்லை, அப்படிப் பரவுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவு. எதுவுமே பொதுமக்கள் ஒத்துழைத்தால்தான் வெற்றியளிக்கும் என்கிறார்கள்.

எவை எப்படியோ பொதுமக்கள், அதிகாரத்தரப்பினர், கற்றோர் என சகல தரப்பினரும் ஒன்றாகக் கைகோர்த்து முனைப்புடன் செயற்படாவிடில் ஏற்படப்போகும் பின்விளைவுகள் எமது கையை மீறிவிடும் என்பது மட்டுமே நிதர்சனம். எமது தோட்டங்களில் ஏதேச்சையாய் சில விதைகள் விழுந்த போது நாம் கவனிக்கவில்லை என்பது உண்மைதான். இன்று பார்த்தீனியம் எம் கண்ணுக்குத் தெரிந்தே பரவும் போது குருடராய் இருப்பதென்பது எப்படி நியாயமாகும்.

விவசாயத்துக்குத் தேவையான சகல வளங்களையும் இயற்கை அன்னை எமக்கு அள்ளி அள்ளித் தந்திருக்கிறாள்.அந்தப் பசுமை வளத்தைச் சுரண்ட முளைத்திருக்கும் பார்த்தீனியம் செடியை இனிமேலும் களைய முயற்சிக்காமல் இருப்பதென்பது எமது எதிர்காலச் சந்ததிக்கும் எம்மை வாழவைக்கும் தாய்நாட்டுக்கும் நாம் செய்யும் பெருந் துரோகமாகும்.

No comments:

Post a Comment