Friday, December 2, 2011

கை வழி நயனம் செல்ல...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சனிக்கிழமை நூபுர நாதத்திலே கொழும்பு கதிரேசன் மண்டபம் லயித்துப் போயிருந்தது. கொஞ்சும் மழலையர் தொட்டு அழகு நங்கையர் வரை சகல வயதினரதும் நாட்டியத்தில் முழு அரங்கமுமே சொக்கிப் போயிருந்ததெனலாம். இலங்கையில் மட்டுமன்றி உலகிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்திருக்கும் நாட்டிய கலா மந்திரின் மாணவியர் தான் அதற்குக் காரணமானவர்கள் என்பதில் மிகையேதுமில்லை.
“கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல, ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு”
என்ற கம்பராமாயண வரிகள் தான் நினைவுக்கு வந்தன. ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தனக்கே உரித்தான தனித்துவத்துடன் தலை நகரில் நிமிர்ந்து நிற்கும் கட்புல அரங்காற்றுகை மையம் தான் நாட்டிய கலா மந்திர். அதன் பின்னணியில் ஒரு பெரும் கலைப்பாரம்பரியம் மட்டும் காணப்படவில்லை. மூன்று சந்ததிகளின் உழைப்பு, ஆர்வம், ஊக்கம், ஒத்துழைப்பு, நம்பிக்கை என சகலதையும் இணைத்து கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் நாட்டிய கலாமந்திரை வழி நடத்துகிறார். அவரது நெறியாள்கையிலே மாணவிகள் வழங்கிய நடனப்பிரசாதம் தான் நூபுர நாதம்.
நூபுரம் என்றால் சிலம்பு சலங்கை என்று பொருள் படும். பெயருக்கேற்ப சலங்கைகளின் நாதம் காதில் ஒலித்த படியே தான் இருந்தது.
பல்வேறு படி நிலைகளில் நடனக்கலையைப் பயிலும் நாட்டிய கலாமந்திர் கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்கள் இணைந்து தம் திறன்களை மிக அருகாமையாக வெளிப்படுத்தியிருந்தார். கண்ணைக்கவரும் வகையிலே வடிவமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான ஆடை ஆபரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சியும் நாட்டிய கலா மந்திரின் தனித்துவத்தை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியிருந்தன எனலாம்.
சிவ கணேச வந்தனத்தில் ஆரம்பித்து ஐதீஸ்வரம் திருவாசகம் தொட்டு பாரதியார் பாடல், திருக்குறள் பரதம், வர்ணம், ஷக்தி கூத்து, எனக் கடந்து தில்லானா, தோல் என்ற பல்சுவை நடனத்துடன் நிறைவுற்ற நூபுர நாதம் இன்னும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டிய கலாமந்திரின் மூன்றரை தசாப்த கால கலைப் பாரம்பரியத்திலே இந்த நூபுர நாதம் ஒரு மைல் கல் ஆகும். கலைக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த பெற்றோரான சண்முகம் பிள்ளை - விஜயலக்ஷ்மி தம்பதியிடமிருந்து தான் பெற்ற இந்த அரிய கலைச் செல்வத்தை அடுத்த சந்ததிக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறார் வாசுகி. அவரது சிரேஷ்ட மாணவியருள் இருவரான மங்களா கெளதம், வைத்தியக் கலாநிதி அஞ்சனா பால ரட்ணராஜா இருவர் தமது கணவர்கள் சகிதம் கெளரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். நூபுர நாதத்தின் ஒரு அங்கமாக, தம் குரு வாசுகியுடனும், நாட்டிய கலா மந்திருடனுமான தமது அனுபவங்கைளப் பகிர்ந்தமை நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்.
நாட்டிய கலாமந்திர் மாணவியராக இருந்த காலத்தில் தமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களான, சிதம்பரம் நாட்டியோற்சவம், பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபாவின் முன்னிலையில் அரங்கேற்றிய நாட்டியம். தஞ்சை பெருங்கோவிலின் ஆயிரமானவது ஆண் விழாவில் ஆடிய ஆயிரம் கலைஞர்களுடன் இணைந்து பங்கேற்ற நடனம் போன்ற சந்தர்ப்பங்களில் தமக்குக் கிடைத்த அனுபங்கள், தம் மன உணர்வுகள், பரதம் கொண்டிருந்த தெய்வீகம் எனப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களது அனுபவங்கள் அரங்கத்தை மெய் சிலிர்க்க வைத்தது. பரதக் கலையின் உன்னதத்தை உணர வைத்தது. அத்துடன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. பரதம் கற்பதாயின் பணச் செலவு மிக அதிகம் என்பது ஒரு சாராரின் கருத்து. அதில் உண்மை இல்லாமல இல்லை. ஆனால் பணத்துக்கு அப்பால் பரதக்கலையின் பின்னணியில் பல விடங்கள் இருக்கின்றன. மனிதப் பிறப்பின் உன்னத குறிக்கோளான தெய்வீகத்தை அடைய இக்கலை வழி வகுக்கும் என மங்களா கெளதம் அழகாக கூறியிருந்தார். பரதம் என்பது கலை மட்டுமல்ல. அதுவே கணிதம், அதுவே விஞ்ஞானமும் கூட என்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளியின் நிறுவுநர் தனஞ்சயன் ஐயா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அது லயம், தாளம் பிறழாமல், ஆழ்ந்த அவதானிப்புடன் ஆடவேண்டிய கலையாகும். அங்கு நுண்கணித அறிவு வளர்கிறது. எதை அபி நயிக்கவேண்டுமாயினும், முதலில் அதன் பின்னணியிலிருக்கும் விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. என்று தனஞ்சயன் ஐயா அழகாக விளக்கியிருந்தார். அவரது கூற்றிலே எத்துனை பெரிய உண்மை இருக்கிறது என்பதை நூபுர நாதம் உணர்த்தியது.
அவை மட்டுமன்றி இந்த அரங்காற்றுகைகள் மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மேடைக்கூச்சம், மனப்பயம் போன்றவற்றை தூர விலக்கி விடும் வல்லமை வாய்ந்தவை. அதேவேளை, அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வேரூன்றவும் வழி வகுக்கின்றன. வாழ்க்கையில் தன்னம்பிக்கையின்றி எதையுமே சாதிக்க முடியாதென்பது கண்கூடு. எந்த வித பயமுமின்றி, பிழை விட்ட போது கூட நயமாகத் திருத்தி ஆடிய பிஞ்சுப் பாதங்கள் அந்த உண்மையை அழகாக உணர்த்தின. கண்டிப்பான ஆசிரியை எனப் பெயர் பெற்ற போதும் தன் மாணவச் செல்வங்களின் நூபுர நாதத்தை அரங்கிலிருந்து பார்த்த குரு வாசுகியின் முகம் கொண்டிருந்த பெருமிதமும் அரங்கத்தை நிறைத்திருந்த மக்கள் கூட்டமும் வெற்றிச் சங்கை முழங்காமல் முழங்கின எனலாம்.
அவசர உலகில், மனதுக்கு இனிமை தர இப்படியான நூபுர நாதங்கள் நிச்சயம் தேவை தான்!

No comments:

Post a Comment