Tuesday, April 5, 2011

ஜப்பானியர்கள் வித்தியாசமானவர்களா?

நேரந்தவறாமைக்கும் ஒழுங்கான முகாமைத்துவத்துக்கும் பெயர்போனவர்கள் ஜப்பானியர்கள். எதையும் சிறப்பாக, வினைத்திறனுடன் செய்து முடிக்கும் மனப்பாங்குடையவர்கள். அவர்களது 5 எஸ் முகாமைத்துவ முறைமை மிகவும் பிரபலமானது. உலகளாவிய ரீதியிலே பல நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் ஜப்பானளவுக்கு மற்றைய நாடுகளில் அது வினைத்திறன் மிக்கதாக அமைந்திருக்குமா என்பது கேள்விக்குறியே.
ஏனெனில் ஜப்பானியர்களின் கலாசாரத்துக்கு ஏற்றதாக அது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையிலும் பல அமைப்புகளில் 5 எஸ் முகாமைத்துவத்தைப் பின்பற்ற முயற்சிகள் எடுக்கப்படுவது உண்மை தான். ஆனால், எமது கலாசாரமும் எம் மக்களின் மனப்பாங்கும் அதைச் சரியாக நடைமுறைப்படுத்த இடம்கொடுப்பதில்லை என்பதே உண்மையாகும்.
பூகம்ப நெருப்பு வலையத்தினுள் ஜப்பான் அமைந்திருப்பதால், எப்போதும் பூகம்ப அனர்த்தத்தை எதிர் நோக்கிய வண்ணமே தமது செயற்பாடுகளை மேற்கொள்வார்கள். அவர்கள் அவ்வாறு தம்மைத் தயார்படுத்தியமை தான் கடந்த மார்ச் 11 ஆம் திகதி, ஒரு பேரனர்த்தம் நிகழ்ந்திருந்த போதும் இறந்தவர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கையை 10,035 ஆகவும் காணாமற் போனோரின் எண்ணிக்கையை 17,443 ஆகவும் மட்டுப்படுத்தியிருக்கிறது. ஆனால் பூகம்பம் மற்றும் சுனாமியைத் தவிர்த்து, அவற்றின் பின்னர் ஏற்பட்ட அணு உலைகளின் கசிவினால் ஏற்பட்டிருக்கும் நேரடியான, மறைமுகமான சேதங்கள் மதிப்பிடப்பட முடியாதனவாகவே இருக்கின்றன. அவற்றை எதிர்வு கூறுவது சாத்தியப்படாததாகவே இருக்கிறது.
ஜப்பானின் புவியியல் ரீதியான அமைவிடம் அந் நாட்டின் கலாசாரத்தை வடிவமைத்ததில் பெரும் பங்கு வகித்தது. அங்கு இருக்கும் விவசாய நிலத்துக்கான பற்றாக்குறையானது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த சமுதாயக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அயலவர்கள் மிகவும் அருகருகிலேயே வசிக்கின்றனர். இதனால் தனி மனிதன் என்ற அடிப்படையை விட தாம் ஒரு சமுதாயம் என்ற அடிப்படையில் ஜப்பானியர்கள் தமது கலாசாரத்தை வளர்த்தனர்.
அவர்கள் விதிமுறைகளையும் திட்டங்களையும் விரும்புபவர்கள் எதையும் கிரமமாகச் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். எதையும் அமைதியாக, பொறுமையாக எதிர்கொள்பவர்கள், நியாயமானவர்கள். இவ்வளவு பெரிய அனர்த்தம் நிகழ்ந்து நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டபோது மிக நீண்ட வரிசைகளில் அமைதியாகக் காத்திருந்தே பெற்றுக்கொண்டனர். எவரும் வரிசைகளைக் குழப்பிக்கொண்டு விதிமுறைகளை மீறி முண்டியடித்து பொருட்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவில்லை. எவரும் பொருட்களை அறா விலைக்கு விற்க முயலவில்லை. எவரும் தவித்த முயல் அடிக்கவில்லை. இத்தகைய குணாம்சங்கள் எல்லாம் அவர்களது கலாசாரத்துக்கே உரித்தானவை.
ஜப்பானின் ஊடக சங்கத்திலே விதிமுறை ஒன்று உள்ளது. அதாவது எவராயினும் ஜப்பான் பற்றி அறிக்கையிடுவதாக இருந்தால், ஜப்பானிய பழமொழியொன்றின் கருத்தை அந்த அறிக்கையிடுதலில் எங்காவது குறிப்பிட்டேயாக வேண்டும், ‘நகமொன்று வெளித் தள்ளுமாயின் அது சுத்தியலால் அடிக்கப்படும்’ என்பதே அந்தப் பழமொழியின் நேரடி மொழி பெயர்ப்பு ஆகும். அதாவது அவர்களது ஒன்றிணைந்த கலாசார அமைப்பில் இருந்து எவரும் விலக முடியாது என்பதே அப்பழமொழி சொல்ல விழையும் கருத்தாகும்.
இந்தக் கலாசாரம் தான் அண்மையில் நிகழ்ந்த அணு உலை அனர்த்தத்தை அறிக்கையிடுவதிலும் பல சிக்கல்களையும் தடைகளையும் ஏற்படுத்தியிருந்தது. எதையும் வெளிப்படையாக அறிக்கையிட முடியவில்லை. உண்மைகளை வெளிப்படுத்த முடியாத நிலை ஒன்று காணப்பட்டது. ஜப்பானிய கலாசாரத்தில் ஒரு அமங்கலமான செய்தியை வெளிப்படையாகச் சொல்வதென்பது பெரும் சிரமமான விடயம். ஆதலால் அணுக் கதிர்வீச்சின் தாக்கம் மற்றும் பாதிப்பை வெளிக்காட்டுவதில் அரசும் ஊடகங்களும் தயக்கம் காட்டின என்பதும் உண்மை. அத்துடன் அவர்களது மொழியானது. வெளியுலகுடனான இலகு தொடர்பாடலுக்குப் பொருத்தமானதாக இல்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது.
அத்துடன் ஜப்பானின் உள்நாட்டு கைத்தொழிற்றுறைகள் எல்லாம் அரச கட்டுப்பாட்டில் இருப்பவை. இதற்கு அணு உலைகளும் விதி விலக்கல்ல. அனர்த்தத்தின் பின்னரான ஏற்பாடுகளில் அதனைத் தெளிவாக அவதானித்திருக்க முடியும். ஏன் ஜப்பானுக்கு கிடைத்த பல அவசர உதவிகளையும் மருந்துகள் உட்படப் பல நிவாரணப் பொருட்களையும் முறையான அனுமதிப் பத்திரமில்லை என்ற காரணத்துக்காகவே அரசு திருப்பி அனுப்பியிருந்தது. இதுவும் தரத்துக்கு முன்னுரிமை வழங்கும் ஜப்பானிய கலாசாரத்தின் அடிப்படையே. ஜப்பான் மக்கள் எம்மைப் போல பொருட்களைச் சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஆதனால் தான் இந்த அனர்த்தம் நிகழ்ந்தபோது பலரால், தமது உயிரையாவது காப்பாற்ற முடிந்தது.
முற்றாகச் சேதமடைந்திருந்த பெருந்தெரு ஒன்று வெறும் ஆறே நாட்களில் மீள நிர்மாணிக்கப்பட்டமை ஜப்பானியர்களின் தன்னம்பிக்கைக்கும் விடாமுயற்சிக்கும் நல்லதோர் உதாரணமாகும். தமது உயிரைத் துச்சமாக மதித்து கதிர் வீச்சைப் பொருட்படுத்தாமல் இன்னும் அணு உலைகளில் இரவுபகல் பாராது தொழிலாளர்கள் வேலை செய்வதானது ஜப்பானிய மக்களின் தேச பக்திக்கோர் உதாரணமாகும்.
நவீன ஜப்பானில் பல எதிர்பாராத நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது சகஜமானது தான். ஆனால் தற்போது அங்கு வயது கூடிய குடிமக்களின் தொகை அதிகரித்திருக்கிறது. பொதுமக்கள் மீதான கடன் சுமை கூடி இருக்கிறது. அரசியல் செயலிழந்துகொண்டு போகிறது. இத்தகையதோர் நிலையில் இந்தப் பேரனர்த்தம் ஜப்பானில் நீண்டகால பொருளாதார வீழ்ச்சியொன்றைத் தோற்றுவிக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் முதன் முறையாக ஜப்பானில் மின்வெட்டு ஏற்பட்டது கடந்த மார்ச் 11 அனர்த்தத்தின் பின்னர் தான். போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீருக்காக டோக்கியோ மக்கள் அலைந்தமையும் மின்வெட்டால் இருளில் மூழ்கிய வண்டபே நகரும் பல செய்திகளை உலகுக்கு எடுத்துச் சொல்லின. வசதிகள் அதிகமாய் இருந்த உலகின் மிகப் பெரிய நகரங்கள் கணப்பொழுதில் நிலைகுலைந்து போயின. ஆனால் இப்போதும், நாங்கள் ஒன்றிணைந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நம்பிக்கையுடன் இருக்கின்றனர் ஜப்பானிய மக்கள்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின், சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழுந்த நாடு ஜப்பான். ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்ட செய்தியை அறிந்தபோது அணு விஞ்ஞானி ஜன்ஸ்டீனே தனது கண்டுபிடிப்பிற்காக வருந்தியிருந்தார் என்று கூறுவர். அந்த யுத்தத்தால் 60 பிரதான நகரங்கள் அழிந்துபோயின. பத்து மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர். அரை மில்லியன் வரையான மனித உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் 1968 ஆம் ஆண்டே உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக ஜப்பான் மாறியது.
ஜப்பான் பெளதிக ரீதியாக, அந்தப் பேரனர்த்தத்தலிருந்து மீண்டெழுந்து உலக பொருளாதாரத்தில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அந்த அனர்த்தத்தின் மறைமுகமான தாக்கத்தை இன்றும் விப்பானிய மக்கள் சிலர் அனுபவித்து வருகின்றனர். அணுகுண்டு வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சின் தாக்கம் பல சந்ததிகள் கடந்தும் பரம்பரை அலகுகளில் பிறழ்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்னும் அங்கு பிறவிக் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கின்றன. இதை எவராலும் மறுதலிக்க முடியாது. அத்தகைதோர் நிலைமையானது மனிதனுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது என்றே கூற வேண்டும்.
இவையெல்லாம் இப்படி இருக்க, தற்போது ஏற்பட்டிருக்கும் அணு உலைக் கசிவுகளும் அவற்றினால் ஏற்பட்டிருக்கும் கதிர்வீச்சின் தாக்கமும் ஜப்பானின் எதிர்காலத்தில் பெரும் வெற்றிடமொன்றையும் கேள்விக்குறியையும் சேர்த்தே உருவாக்கி விட்டிருக்கின்றன. வளிமண்டலத்தில் கதிர் வீச்சின் மட்டம் சாதாரண எல்லையை விட அதிகரித்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அணு உலைகள் அமைந்திருக்கும் சூழலில் உள்ள மண்ணிலும் கதிர்வீச்சின் தாக்கம் எல்லையைத் தாண்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அணுப்பிளப்பான்களைக் குளிர்மைப்படுத்தி கதிர்த்தாக்கமுடைய எரிபொருளின் வெப்ப நிலையைக் குறைக்க பெருங்கனவளவில் நீர் பாய்ச்சப்பட்டது. அவ்வாறு குளிர்மைப் படுத்திய பின் அந்நீரிலே கதிர்த்தொழிற்பாட்டு மாசுக்கள் கலந்திருக்கும்.
அவ்வாறு மாசுக்கள் கலந்த நீரை எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி வெளியேற்ற முடியாது. அத்துடன் அந்த நீரைச் சேமிப்பதில் பெரும் இடப்பிரச்சினையும் தற்போது எதிர்நோக்கப்படுகிறது. இந்த நீரே பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. இத்தகைய கதிர்த் தொழிற்பாட்டு மாசு கலந்த நீரைச் சுத்திகரிப்பதில் வழிநடத்தவென 5 வல்லுநர்களை பிரான்ஸ் ஜப்பானுக்கு அனுப்பியிருக்கிறது. அதையடுத்து நாட்டின் சகல அணு உலைகளிலும் விசேட மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அமுல்படுத்துமாறு ஜப்பானிய அரசு உத்தரவிட்டிருந்தது. இதுவும் ஜப்பானிய தரத்தை விரும்பும் ஜப்பானிய கலாசாரத்தின் தாக்கத்தைப் பிரதிபலிக்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.
கதிர்வீச்சின் தாக்கமுள்ள பகுதிகளிலே விளையும் மரக்கறிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது கடல் நீரிலும் கூட கதிர்வீச்சின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தினமும் இரண்டுவேளை உணவு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவு வெறும் பிஸ்கட்டுகளும் பழச்சாறுமேயாகும். அது கூட மிகவும் நுணுக்கமான கதிர்வீச்சுப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் தான் வழங்கப்படுகிறது. தமது உற்றார் உறவினர் பலர் சுனாமி அலையினால் எங்கோ அடித்துச் செல்லப்பட்டு விட்டனர் என அனாதரவாய் நிற்கின்றனர் பல மக்கள். பெறறோரை இழந்த சிறார்களின் தொகையை இந்த அனர்த்தம் அதிகரித்திருக்கிறது. இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட பல சமூக பொருளாதாரச் சிக்கல்கள் ஜப்பானை ஆக்கிரமித்திரு க்கின்றன. ஆனால் அழுது கொண்டிரு ப்பதால் எந்தப் பயனுமில்லை, நாம் இணைந்து செயற்பட்டு எதையும் வெல்லுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் ஜப்பானிய மக்கள். மீண்டுமொரு பீனிக்ஸ் பறவை யாய் ஜப்பான் உயிர்த் தெழப் போவதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment