Sunday, May 3, 2020

அவளின்றேல்…..?


கடந்த தசாப்தம் வலிகள் மிகுந்த தசாப்தம். அவளது அழிவு நெருங்கிக்கொண்டிருப்பதாய்ப் பலரும் எண்ணினர். கூட்டங்கள் கூடினர்…. ஒப்பந்தங்கள் உருவாகின… கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன…. கடப்பாடுகள்  உருவாகின… எல்லாவற்றின் பின்னணியிலும் பணம் மட்டும் இருந்தது. யாவரும் கதைத்தார்கள். எவரும் செவிமடுத்ததாய்த் தெரியவில்லை. இத்தனை கோடி ஆண்டுகள் நின்று நிலைத்து உயிரின் ஆதாரத்துக்கே துணை செய்தவளுக்கு கடந்த சில தசாப்தங்களை  மட்டும் இலகுவாய்க் கடக்க முடியவில்லை. ஒற்றை இனத்தின்  நிலைப்புக்காய் அவள் செய்த தியாகங்கள் எண்ணிலடங்கா. அவற்றை அங்கீகரிக்க க் கூட பலருக்கு மனம் வரவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். சில சமயங்களில் பொங்கியும் எழுந்தாள். மாற்றங்கள் உருவானதாய் அவள் உணரவில்லை. ‘கொரோனா’ என்ற தன் சேய் கொண்டு அமைதியாய்ச் சாதிக்கத் தொடங்கியிருக்கிறாள்.  


எதனையும் செவிமடுக்காமல் மேலாதிக்கத்தின் பாதையில் தம் காய்களை நகர்த்தியவர்களெல்லாம் ஸ்தம்பித்துப் போயினர். உண்மையை மறைப்பதா எடுத்துரைப்பதா என விழி பிதுங்கி நின்றனர்.  மானிடத்தின் மகத்துவமே பணத்தில் தான் இருக்கிறது என எண்ணியவர்களின் சிந்தனைகளை மீள் பரிசோதனை செய்யச் சொல்கிறாள். இங்கென்ன இருக்கிறது எனத் தம் தாயை நீங்கியவர்களை, தாயுடன் இருந்தால் வாழ்வே இல்லை என எண்ணியவர்களையெல்லாம் அங்கென்ன இருக்கிறது என யோசிக்கச்  சொல்கிறாள். மானிட வாழ்வின்  நிலையாமையையும் யதார்த்தத்தையும் எடுத்துரைக்கிறாள். தன்னிறைவையும் கலாசாரத்தையும் மீள நினைவூட்டுகிறாள். அவசர உலகில் ஓடி ஓடி உழைத்த பலரின் பாதையைத் திசை திருப்பியிருக்கிறாள்.  பல வாண்மையாளர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறாள்.  எல்லாவற்றுக்கும் மேலாக, இது அவள் மீதான வடுக்கள் ஆறுவதற்கான ஓய்வு காலம். மானிடத்தின் உன்னதத்தை மனித இனம் உணரவேண்டிய அவசர காலம். அவளின்றேல் எவருமில்லை.  அவள் மானிடம் பற்றிக் கற்றுத் தரும் பாடங்கள் மனித இனம் திருந்தும் வரை தொடரும் என்பது மட்டும் திண்ணம்.

2 comments:

Jegan said...

இவள் உறுதி வரவோற்கத்தக்கது ஆழமாக சிந்திக்க வைக்கிறது.

Jegan said...

உங்கள் ஆகம் covid 19, ஏற்பட்ட நன்மைகளை சுட்டிக்காட்டியதால் அதனால் ஏற்ப்பட்ட தாக்கத்தில் இருந்து விடுபட உதவியாக உள்ளது.

Post a Comment