Thursday, April 29, 2010

அரண்மனையென்பது ஆடம்பரம் அல்ல!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சிறிய ஊரே பத்மநாபபுரம் ஆகும். சிறிய ஊராயினும், சரித்திரப்புகழ் வாய்ந்தது. அது தற்போதைய கேரளத்தில் காணப்பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக நான்கு நூற்றாண்டு காலம் நிலைத்து நின்றது.



மன்னன்
மார்த்தாண்ட வர்மா

தென்னிந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் பலம் பெற்று விளங்கிய சேரப் பேரரசின் அதிகாரத்துக்குட்பட்ட சிறிய இராசதானியாக வேணாடு விளங்கி வந்தது. வேணாடு இராசதானியிலுள்ள ஒரு சமஸ்தானமாக, திருவாங்கூர் சமஸ்தானம் காணப்பட்டது. கி.பி. 840 –860 இல் அய்யனடிகள் திருவடிகளின் காலம் தொட்டு 1931-1949 இல் சிறி சித்திர திருநல் பாலராமவர்மா வரை பல மன்னர்கள் இந்த சமஸ்தானத்தை ஆட்சி புரிந்தனர்.

நவீன திருவாங்கூர் சமஸ்தானத்தை உருவாக்கியவராக மகாராஜா மார்த்தாண்ட வர்மா கருதப்படுகிறார். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1729- கி.பி 1758 வரையான 29 வருடங்களாகும். அக்காலப் பகுதியிலே திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு பல்வேறுபட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் காணப்பட்டன.

அவர் தனது தளராத உறுதியினாலும் இராஜதந்திரத்தாலும் கிளர்ச்சிகளை வெற்றிகொண்டு சமஸ்தானத்தின் எல்லைகளை விஸ்தரித்தார். பின்னர் பொருளாதார, நிர்வாக சீர்திருத்தங்களை உருவாக்கி செல்வம் கொழிக்கும் சமஸ்தான மாக மாற்றினார்.

அரண்மனைகள், கோவில்கள் மற்றும் கோட்டைகளைக் கட்டி னார். அவ்வாறு கட்டப் பட்ட கோட்டையும் அரண்மனையும் பத்மநாபபுரத்திலே காணப்படுகின்றன. திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர்கள் தம்மை, விஷ்ணுவாகிய ஸ்ரீபத்மநாபனின் தாசர்களாகக் கொண்டு தம் இறைவனின் பெயரையே தமது இராசதானிக்கும் சூட்டினர். அதனால் கற்குளம் என அழைக்கப் பட்ட திருவாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரும் பத்மநாபபுரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பத்மநாபபுரம் அரண்மனை யானது, பத்மநாபபுரக் கோட்டைக் குள்ளே, மேற்கு தொடர்ச்சி மலையான வெள்ளிமலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதனை மாளிகை என்று குறிப்பிடுவதைவிட, மாளிகைத் தொகுதியென்று குறிப்பிடுவதே பொருத்தமானதாக அமையும். ஏறத்தாழ 14 மாளிகைகளைக் கொண்ட தொகுதியாகவே இந்த அரண்மனை காணப்படுகிறது.




அரண்மனையின் முகப்பு


காண்போரைக் கொள்ளை கொள்ளும் விதத்திலே எளிமையான கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது.

ஆரம்பத்தில் சிறிய மாளிகையாகவிருந்து, காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டு இன்று காட்சியளிக்கும் நிலையை 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இவ்வரண்மனை அடைந்ததாக வரலாறு கூறுகிறது.

கற்பனை செய்து பார்க்கப்பட்ட முடியாதளவு நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காணலாம். திரைப்படங்களில் மட்டுமே பார்த்துப்பழகிய பிரமாண்டமான அரண்மனைகளுக்கு மத்தியில், யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் ஓர் அரண்மனையாகவே பத்மநாபபுரம் அரண்மனை தெரிந்தது.

அரண்மனையென்றவுடனேயே மனக்கண்ணில் தெரியும் பிரமாண்டமான அரங்குகளையும் தகதகக்கும் அலங்காரங்களையும் பத்மநாபபுர அரண்மனையில் காணமுடியாது. ஆனால், அரண்மனைக்கே யுரித்தான செல்வச் செழிப்பை, அரண்மனையின் உள்ளக, வெளியக வடிவமைப்பில் காண முடியும்.



தென்னிந்தியாவை ஆங்கிலேயர் தம் வசப்படுத்தியபோது, திருவாங்கூர் போன்ற பல சமஸ்தானங்கள் காணப்பட்டன. அத்தகைய சமஸ்தானங்கள் வெள்ளையர்களுக்கான வரியைக் கட்டி ஆட்சிபுரிந்து வந்தனர். அவற்றுள் திருவாங்கூரும் ஒன்றாகும்.

இன்று பொது மக்கள் பார்வையிடக் கூடியதாகவிருக்கும் பத்மநாபபுரம் அரண்மனையிலே, சீனர்கள் உட்பட வெளிநாட்டவர் பலரும் அன்பளிப்பாகக் கொடுத்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுடன் இந்த சமஸ்தானம் நல்லுறவைப் பேணி வந்தமைக்கு இந்த அன்பளிப்புப் பொருட்களும், அரண்மனை அமைக்கப்பட்ட பாணியிலிருந்து வேறுபட்ட பாணியில் அமைக்கப்பட்ட விருந்தினர் மாளிகையும் சான்று பகர்கின்றன.

அரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் பிரதான வாசல் பிரமாண்டமானது, மரவேலைப்பாடு களுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. கேரளப்பாரம் பரியத்துக்கே யுரித்தான கலை நயத்துடன் அமைக்க ப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப் போரைப் பிரமிக்க வைக்கும். ஒன்றி லொன்று வேறுபட்ட90 வகைத்தாமரைப்பூக்கள் செதுக்கப்பட்ட மரக்கூரை மிகவும் பிரசித்தமானது.

பொதுமக்களின் பார்வைக்கென, சீனர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட சிம்மாசனம், முற்று முழுதாக கருங்கல்லாலான சாய்மனைக்கதிரை, உள்ளூர் பிரதானிகளால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட ஒணவில்லு போன்றவை பூமுகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை காணப்படுகிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது. தனியே மரத்தால் ஆனது. அந்தப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும்.

பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையிலே சலாகைகள் மூலமும் மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக் கின்றன.


மந்திரசாலை யைக் கடந்து படிகளால் கீழே இறங்கி னால் வருவது மணிமாளிகை ஆகும். கிராமத்தவர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப் பட்டதாகக் கருதப் படுகிறது. இம்மணிக் கூட்டின் பின்னணி யிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூட்டின் மணியோசையை 3 கிமீ சுற்றுவட்டார த்திற்குள்ளிருக்கும் சகலராலும் கேட்க முடியும்.

மணிமாளிகையைத் தாண்டிச் செல்ல வருவது, ஒரு மாடியையுடைய அன்னதான மண்டபமாகும். கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த முடியும். ஊறுகாயை பேணுவதற்குப் பாவிக்கப்படும் சீனச்சாடிகளும் இம் மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மன்னர்கள் அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்துகிறது. அன்னதான மண்டபத்தைக் கடந்தால் தெரிவது தாய்க்கொட்டாரம். இந்த தாய்க்கொட்டாரமே மாளிகைத் தொகுதியில் மிகவும் பழைமையான மாளிகையாகும்.

இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி இரவி வர்மா குலசேகர பெருமாளினால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்தமண்டபம் சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத்தூண்களையுடையது. இந்தத் தாய்க் கொட்டாரம், பாரம்பரிய நாற்சார் வீடமைப்பில் கட்டப்பட்டது. முதலாவது மாடியில் செதுக்கப்பட்ட மரப்பலகை களால் பிரிக்கப்பட்ட படுக்கையறைகள் காணப்படு கின்றன.

தாய்க் கொட்டாரத்தின் வட பகுதியிலே ஹோமபுரம் காணப்படுகிறது. இங்குதான் யாகம் வளர்க்கப்பட்டு வந்தது. அதன் கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோவிலொன்று காணப்படுகின்றது. இன்றும் கூட நவராத்திரி காலங்களில், இக்கோவிலிலுள்ள சரஸ்வதி திருவுருவம் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

அடுத்துக் காணப்படும் உப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகை யில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக் காணப்பட்ட தாகவும் தெரிவிக்கப் படுகிறது.

முதலாம் மாடியில் மருத்துவக் குண முடைய மரத்தாலான மருத்துவக் கட்டி லொன்று காணப் படுகிறது. இரண்டா வது மாடி, மன்னனின் ஓய்வெடுக் கும் பகுதியா கக் காணப் படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம் மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன.

உப்பரிகையின் முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன.

அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபமாகும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடைய வனாகக் காணப்படுகின்றன.


மண்டபத்தின் வழியே சென்றால் இந்திர விலாசத்திற்குச் செல்ல முடியும். மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்திலே, விருந்தினர்களுக்கென அமைக்கப்பட்ட மாளிகையே இந்திரவிலாசமாகும். அதன் கதவுகளும் யன்னல்களும் பெரியவை. அம்மாளிகை அமைக்கப்பட்ட பாணி சற்று நவீனமானது. விருந்தினர் மாளிகையின் யன்னல்கள், அந்தப் புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கியதாக அமைந்திருந்தமை மனதை வருடியது.

இந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். தற்போது காணப்படும் கருங்கல் மண்டபமும், அதனையொட்டிய சரஸ்வதி ஆலயமும், கி.பி. 1744 இல் மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை. மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லினாலானது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலாசார நிகழ்வுகளை அரங்கேற்றுவதற்கென இந்த, நவராத்திரி மண்டபம் பயன்பட்டது.

மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளதெனக் கூறப்படு கிறது.

நவராத்திரி மண்டபத்தைப் பார்கையில் ஏற்படும் உணர்வு விபரிக்க முடியாதது. கலை தெரிந்தவர்கள் மட்டுமன்றி கலையை இரசிப்பவர்களும் கூட அம்மண்டபத்தைப் பார்க்கையில் விபரிக்கமுடியாததோர் உணர்வைப் பெறுவர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அந்தப்புரப் பெண்களின் பாவனைக்கான நீர்த்தடாகத்தைத் தாண்டிச் செல்ல வருவது தெற்குக் கொட்டாரம் ஆகும். இது அரண்மனைத் தொகுதியை விட்டு விலக்கிக் காணப்படினும், அத்தொகுதியின் ஒரு பகுதியாகும். தெற்குக் கொட்டாரம் மூன்று சிறிய கட்டடங்களைக்கொண்டது. அவை மூன்றுமே, மிகவும் கவர்ச்சிகரமான மரச் செதுக்கல் வேலைப்பாடுகளுடன் அழகான தோற்றத்தையுடைய பகுதிகளாகும்.

யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இந்த பத்மநாபபுரம் அரண்மனையின் வாசல்களும் பாதைகளும் மிகவும் ஒடுக்கமானவை. அவற்றினூடு செல்கையில் ஒருவர் பின் ஒருவராகவே செல்லமுடியும்.

பல உள்நாட்டு, வெளிநாட்டுக் கிளர்ச்சிகளின் அச்சுறுத்தல்கள் காணப்பட்டன என்று வரலாறு கூறுவதால், கிளச்சியாளர்களைச் சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைதான் இந்த ஒடுக்கமான வடிவமைப்போ எனவும் எண்ணத் தோன்றுகிறது. பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைக்கான வழியும் கூட அதனையே பறைசாற்றுகிறது.

வெளியிலிருந்து அரண்மனை யன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக யன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப் பட்டிருக்கின்றன.

அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.

ஏறத்தாழ 400 வருடங்கள் பழைமையான இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் இன்றும் கூட மின் விளக்குகளைக் காணமுடியாது. இயற்கை ஒளி முதலாகிய சூரியனின் ஒளியே போதியளவான வெளிச்சத்தை வழங்குகிறது. ஆகையால் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணிவரையே அரண்மனை பொதுமக்களின் பார்வைக்காகக் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த அரண்மனையின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் யாவுமே உள்நாட்டில் கிடைக்கக்கூடிய மரப் பலகைகள், செங்கற்கள், கருங்கற்கள், சுன்னக்கற்கள் ஆகியனவாகும்.

எரிக்கப்பட்ட தேங்காய் ச்சிரட்டை, எலுமிச்சை, முட்டைவெண்கரு மற் றும் மரக்கறிகள் சிலவற்றிலிருந்து பெறப் பட்ட சாறு ஆகிய வற்றைக் கொண்டுதான் பளிச்சிடும் கரிய நிறத்தரை உருவாக்கப் பட்டிருக்கிறது.

மலசல கூடங்கள் முதலாம் மாடியிலேயே காணப்படுகின்றன. கழிவுகள், மூடப்பட்ட கற்கால்வாய்களினூடு கடத்தப்படும் வகையில், அவை அமைக்கப் பட்டிருக்கின்றன. இரவுக ளில் ஒளியூட்டுவதற்காகக் கலைநயம் மிக்க விளக்குகள் வகை வகையாகக் காணப்படுகின்றன.

இந்த அரண்மனையும் அருகிலுள்ள நூதன சாலையும் தமிழ்நாட்டிலே காணப்பட்டாலும் கேரள அரசினாலேயே பராமரிக்கப்படுகிறது. தொல்லியல்துறையில் ஆர்வமுடைய எவரையும் சட்டென ஈர்க்கும் வல்லமை படைத்த பத்மநாபபுரம் அரண்மனை திருவனந்தபுரத்திலிருந்து 55 கி. மீ தொலைவிலும் கன்னியாகுமரி யிலிருந்து 35 கி. மீ தொலைவிலும் காணப்படுகிறது.

செவ்வாய் முதல் ஞாயிறு வரையான நாட்களில் இவ்வரண் மனையைப் பொதுமக்கள் பார்வையிட முடியும். அரண்மனையின் வெளிச்சூழலிலே, சுற்றுலாப் பயணிகளுக்காகவே அமைக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன. அங்கே கேரளப் பாணியை பிரதிபலிக்கும் மரம், புல், ஓலைகளினாலான கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

கேரளக் கலாசாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் அரண்மனையும் அதன் சூழலும், ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளுக்குச் சிறந்ததோர் இடமாகும்.

No comments:

Post a Comment