Sunday, May 15, 2011

ஆனைக்கோட்டையின் சொத்து அமெரிக்கா வசமானது எப்படி?



சில ஆண்டுகளுக்கு முன்னர், யாழ்ப்பாணத்துக்கே சொந்தமான பொருளொன்று அமெரிக்காவின் சொத்தாக மாறியிருந்தமை வெளி உலகுக்குத் தெரிய வந்தது. அந்த விடயத்தை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியவையும் ஊடகங்களே!
யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டை பகுதியில் ஏறத்தாழ 3 தசாப்தங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ணுயிரி ஒன்று அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே காப்புரிமை செய்யப்பட்டது. அந்த நுண்ணுயிரி மூலம் அந்த்ராசைக்கிளின் (Anthracycline) என்ற நுண்ணுயிரெதிர்ப்பு மருந்து தயாரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அந்த நுண்ணுரெதிர்ப்பு மருந்துக்கே அமெரிக்காவில் காப்புரிமை செய்யப்பட்டது. அதன் கண்டுபிடிப்பாளர்கள் காப்புரிமைக்குரியவர்கள் யாவருமே மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
1981 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டு 1983 இலே காப்புரிமையும் அதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டன.
ஆனைக்கோட்டையில் வயல் நிலமொன்றிலிருந்து பெறப்பட்ட மண்மாதிரியிலிருந்தே இந்த நுண்ணுயிரி பிரித்தெடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அது புதிய நுண்ணுயிரி இனம் என விளக்கப்பட்டு அதற்கு மார்சியா சி ஷியரர் (Marcia C.Shearer) என்று பெயரிடப்பட்டது.
அமெரிக்காவிலே இந்த நுண்ணுயிரி பதிவு செய்யப்பட்டபோது அதற்கான காப்புரிமை பெற்றவர்களின் பெயர்ப்பட்டியலில் மார்சியா சி. ஷியரர் என்ற பெயரும் காணப்படுகிறது.
அது எங்கே, எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்றோ அல்லது காப்புரிமை செய்த விஞ்ஞானிகளுக்கு அந்த நுண்ணுயிரி பற்றி அறிவித்தது யார் என்ற விபரங்களோ காப்புரிமை பற்றிய ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
அது உள்நாட்டு விஞ்ஞானியால் / விஞ்ஞானிகளால் சேகரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு விற்கப்பட்டிருக்கலாம். இந்த விடயத்தைக் காட்டிக்கொடுத்தவரும் ஒரு விஞ்ஞானிதான். அன்று அவர் பணத்துக்கு ஆசைப்பட்டு காட்டிக்கொடுக்காமல் இருந்திருந்தால் இந்த விடயம் உலகுக்குத் தெரிந்தே இருக்காது.
ஃப்ரஜைலோமைசின் A என்ற சிக்கல் சேர்வையும் இந்த நுண்ணுயிரிலிருந்து தான் பிரித்தெடுக்கப்படுகிறது என்கின்றனர் காப்புரிமை பெற்றவர்கள். ஃப்ரஜைலோமைசின் தி யை மனிதர்கள், விலங்குகளுக்கு ஏற்படும் பக்டீரியா தொற்றின்போது எதிர்ப்பு மருந்தாக்கப் பாவிக்க முடியும்.
நுண்ணுயிரிகள் தனித்துவமான இயல்புகளைக் கொண்டிருந்தால் அவற்றைக் காப்புரிமை செய்ய முடியும் என்ற நடைமுறை 1873 இல் லூயி பாஸ்டருடன் ஆரம்பமானது. விளைவு மூன்றாம் உலக நாடுகளுக்கேயுரித்தான பல நுண்ணுயிரிகள் மேற்குலகின் சொத்துக்களாயின. அவற்றின் காப்புரிமையை மேல் நாடுகளின் வர்த்தக நிறுவனங்களும் ஆய்வு நிலையங்களும் பெற்றுக் கொண்டன.
உயிர்க்கொள்ளைக்கு இலங்கையும் பலியானதாக அறியப்பட்ட முதற் சம்பவம் இதுவாகும். உயிர்க்கொள்ளை என்ற சொற்பதம் அறியப்பட்டதென்னவோ 1993 இல் தான். ஆனால் அதற்கு முன்னரே இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது. அது பற்றிய போதிய அறிவோ விழிப்புணர்வோ இல்லாததால் எவராலும் அதைக் கண்டு கெள்ள முடிந்திருக்கவில்லை.
ஆனால் இந்த உயிர்க்கொள்ளையை மேற்கொள்ளும் கொள்ளையர்களும், அவர்களது முகவர்களும் இலங்கை போன்ற நாடுகளில் மிக நீண்டகாலமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். தமது தேவைகளை நிறைவேற்றுவதற்காக உள்ளூர் விஞ்ஞானிகளைத் தொடர்பு கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
உள்ளூர்வாசிகளின் ஆதரவு இருப்பதால்தான் முகவர்களால் தமது தேவைகளை சுலபமாகப்பூர்த்தி செய்ய முடிகிறது. ஏனெனில் பிறர் அறியாமல் காரியத்தை முடிப்பதென்பது உள்ளூர்வாசிகளால் மட்டுமே முடிந்த காரியமாகும். இதுதான் நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய விடயமும் கூட.
மேற்குலக நாடுகளை விட மூன்றாம் உலக நாடுகளில் உயிர்ப்பல்வகைமை, வளங்களில் செறிவு மிகமிக அதிகமாகும். மேற்குலக நாடுகள் வளச்சுரண்டலில் வல்லவை என்பதை வரலாறு சொல்கிறது.
உறங்கிக்கிடந்த பாரதத்தை விவேகானந்தர் அன்று தட்டி எழுப்பியிருக்காவிட்டால் அங்கு எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச பொக்கிஷங்களும் கூட சுலபமாக மேற்குலகுக்குப் போயிருக்கும்.
இந்தியா, இலங்கை உட்பட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் கொண்டிருக்கும் பாரம்பரியங்கள் தனித்துவமானவை. எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்கு அவைதான் முன்னோடியாக இருக்கின்றன.
ஆனால் இன்று மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலில் இருப்பவையும் அந்த நாடுகள் தான்.
இந்தப் பாரம்பரிய அறிவு முழுவதும் வாய்மொழி மூலமும் பயிற்சி மூலமுமே கடத்தப்பட்டு வந்தது. பல நூற்றாண்டுகளின் பின்னர் அது ஓலைச்சுவடிகள் போன்ற மூலங்களில் பதிக்கப்பட்டது. ஆனால் பிற்காலங்களில் மூன்றாம் உலகிலே காலனித்துவம் என்ற பெயரில் கால்பதித்த மேற்குலகு எல்லாவற்றையும் அள்ளிச்சென்றது. அது அள்ளிச்சென்றது என்று கூறுவதைவிட மக்கள் அதற்குத் தாரைவார்த்துக்கொடுத்தனர் என்று கூறுவது பொருந்தும். அவர்களுடைய அறிவுமட்டம் அந்தளவில் தான் இருந்தது. அறியாமை இருளிலே அவர்கள் மூழ்கி இருந்தனர்.
இப்போது மேலை நாட்டு அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டிருக்கும் தமது நாட்டு அரும் பொருட்களை ஆர்வத்துடன் பார்த்து அதிசயிக்கின்றனர்.
இன்று விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. கல்வியறிவு மட்டம் உயர்ந்து விட்டது. ஆகவே மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கத்தானே வேண்டும் என்று ஒரு போதும் எண்ணக்கூடாது.
ஏனெனில், என்னதான் வளர்ச்சி அமைந்தபோதும் அவர்களின் அடிப்படை மனப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் ஆனைக்கோட்டைக்கே உரித்தான சொத்தின் காப்புறுதியை அமெரிக்கா பெறுவதற்கு வழிசமைத்துக் கொடுத்திருப்பார்களா?
உயிர்க்கொள்ளை (Biopiracy) என்ற சொல் புதிதாக இருக்கலாம். ஆனால் காப்புரிமையே அந்தச் சொல்லின் அடிப்படையாகும். உண்மையில் உயிர்ப்பொருட்களின் காப்புரிமை இயற்கைக்குரியது. ஆனால் சுயநலமிக்க மனித இனம் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
உயிர்ப்பொருளொன்று வர்த்தகமயமாக்கப்படாத வரை அதன் பாவனை பற்றியோ காப்புரிமை பற்றியோ எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் அது வர்த்தகமயமாக்கப்படும் போது கிடைக்கும் நன்மைகளை யார் அனுபவிக்கப்பபோகிறார்கள் என்னும் போது தான் பிரச்சினை உருவாகிறது.
ஏனெனில் உயிர்ப்பொருள் வர்த்தகமயப்படுத்தப்பட்டால் கிடைக்கும் வருமானம் மிகவும் அதிகமாகும். அது தனிமனித சொத்தாகக் கருதப்படாமல் மனிதத்துக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அதற்கு உற்பத்தி பல மடங்குகளாக்கப்பட அதற்கேற்ப இலாபத்துடன் விற்கப்பட வேண்டும்.
மனிதத்தை மட்டும் கருத்தில் கொண்டு இலாப நோக்கின்றி விற்றால், உற்பத்தி பல மடங்குகளாகப் பெருகாது. அதேசமயம் உற்பத்தியாளரும் நட்டமடைய வேண்டி ஏற்படும். எவரும் அதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.
நோக்கம் நல்லதாக இருந்தாலும் உற்பத்திச் செலவை ஈடுசெய்வதற்கான ஒரே வழி வர்த்தகமயப்படுத்தலேயாகும்.
அதேவேளை அல்லும் பகலும் அயராது முயற்சி செய்து அந்த உயிர்ப்பொருளைக் கண்டுபிடித்தவருக்கும் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டிய தேவை ஒன்று காணப்படத்தான் செய்கிறது.
அவற்றின் அடிப்படையில் தான் உயிர்ப் பொருளின் விலை தீர்மானிக்கப்படுகிறது. கண்டுபிடிப்பாளரொருவர் உற்பத்தியாளராக முடியாது என்பது வெளிப்படை. ஏனெனில் இருவரது மன இயல்புகளும் வேறுபட்டவை. கண்டுபிடிப்பாளர் உற்பத்தியாளராக முயன்றால், இலாபம், பணம் என்ற நோக்கங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவை பூர்த்தி செய்யப்பட்டால் அவருள் இருக்கும் ஞானமும் வேகமும் தமது உயிர்ப்பை இழந்து விடும்.
பொதுவாக கண்டுபிடிப்பாளர்கள் ஆய்வுகளிலும் புதிய கண்டுபிடிப்புக்களிலும் பைத்தியமாக இருப்பார்கள். ஆதலால் அவர்கள் தமது கண்டுபிடிப்பின் உற்பத்திகளைப் பலமடங்குகளாக்குவது பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
ஆனால் அவர்களது கண்டுபிடிப்பினாலான பயனை வர்த்தக ரீதியாக எவரோ அனுபவிப்பதென்பது அநீதியாக கருதப்பட்டது.
இதனால்தான் உலகளாவிய ரீதியில் காப்புரிமை தொடர்பான சட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்படலாயின.
 'எமக்குச்சொந்தமான பொருளொன்றுக்கு  இன்னொருவர் காப்புரிமை பெற்றார் என்று வைத்துக்கொள்வோம். நாளை அந்தப்பொருளை ஏதோ  ஒரு தேவைக்காக நாம் பயன்படுத்த வேண்டி இருப்பின், சட்டப்படி அவருக்கு ஒரு பெருந்தொகைப் பணத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். அத்துடன் அப்பொருளைப் பயன்படுத்துவதால் எமக்கு கிடைக்கும் இலாபத்திலும் அவருக்கு பங்கிருக்கும். '
இந்தக் காப்புரிமை என்பது உயிர்ப்பொருட்களுக்கு மட்டுமல்ல. தனித்துவமான படைப்புகள், கண்டுபிடிப்புகள் யாவற்றுக்குமே பொருந்தும். மேற்குலக நாடுகள் இந்த காப்புரிமை தொடர்பில் ஒருபோதும் தளர்வைக் கடைப்பிடிப்பதில்லை.
ஆனால் மாறாக மூன்றாம் உலக நாடுகள் காப்புரிமை பற்றி அதிக கரிசனை செலுத்துவதில்லை எனலாம். அதனால் தான் மேற்குலகின் கலைப் படைப்பாளிகள் பெரும் செல்வந்தர்களாக இருக்கும் அதேவேளை எமது கலைப் படைப்பாளிகள் வறுமையிலேயே மடிந்து போகின்றனர்.
ஏனெனில் மேற்குலகில் கலைப்படைப்பாளியின் படைப்பொன்று எப்போதெல்லாம் மற்றொருவரால் பாவிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அவர் அப்படைப்பு மீது கொண்டிருக்கும் காப்புரிமைக்குரிய பணம் வழங்கப்படுகிறது. ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் அம்முறைமை நடைமுறைப்படுத்தப்படுவது மிகவும் அரிதாக இருக்கிறது.
இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இசை நிகழ்ச்சிகள், ஒலி, ஒளிபரப்புகள் மூலம் பலகோடி வருமானங்களை ஈட்டும் நிறுவனங்கள் பல தாம் உபயோகப்படுத்தும் கலைப்படைப்புகளின் காப்புரிமை பற்றிச் சிந்திப்பதில்லை. அல்லது அப்படைப்புக்களின் காப்புரிமையைத் தாமே வாங்கி விடுகின்றன.
முதன்முறையாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தான் ஒலிபரப்பும் பாடல்களின் படைப்பாளிகளையும் நன்மை பெறச் செய்தது என்பதையும் நாம் மறக்கக்கூடாது.
இவை இப்படி இருக்க, இன்றைய உலகில் உயிர்ப்பொருளைப் பொறுத்துவரையிலே காப்புரிமை என்பது மிக முக்கிமான விடயமாகி விட்டது.
ஆங்கில மருத்துவத்தின் ஆதிக்கம் தலை தூக்க முதல், சித்த, ஆயுர்வேதம் போன்ற பல பாரம்பரிய மருத்துவ முறைகளே புழக்கத்தில் இருந்தன. அவை குருசிஷ்ய முறைப்படி பரம்பரை பரம்பரையாகக் கடத்தப்பட்டு வந்தன.
அந்த முறைமைகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகளின் திறனைக் கண்டு கொண்டது மேற்குலகு. அவற்றில் இருக்கும் மருத்துவ குணமுடைய பகுதியை மட்டும் பிரித்தெடுத்து ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தத் தொடங்கியது. விளைவு, ஆங்கில மருத்துவத்தால் நோய்க்கு உடனடி நிவாரணி கிடைத்தது. பக்கவிளைவுகள் அதிகரித்தன. ஆனால் அவைபற்றி கருத்தில் கொண்டவர்கள் மிகச்சிலரே.
அவசர உலகில் அல்லலுறும் மக்கள் உடனடி நோய் நிவாரணியையே நாடினர். மருந்துக் கம்பனிகள் பெருகின. சுதேச மருத்துவத்துக்கே உரித்தானதாக இருந்த மூலிகைகளிலிருந்து தேவையான பதார்த்தங்கள் பிரித்தெடுக்கப்பட்டன. அவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவற்றிற்கு மேற்குலகின் காப்புரிமையும் கிடைத்தது. இவ்விடயத்தில் அமெரிக்கா முன்னணியில் திகழ்கிறது எனலாம்.
இந்த நிலை மூலிகைகளுக்கு மட்டுமே உரித்தானதல்ல. இயற்கையின் அங்கங்கள் யாவற்றிற்கும் பொருந்தும்.
20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே, மிகவும் சுவாரசியமான வழக்கு ஒன்று நடைபெற்றது. வேம்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பதார்த்தங்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றிருந்தது. இந்திய விவசாயிகள் விழித்துக் கொண்டனர். அதனை ஒரு உயிர்க் கொள்ளை முயற்சியாகக் கருதினர்.
இந்தியர்களைப் பொறுத்த வரையிலே அவர்களது சுதேச அறிவின் சின்னமாக வேம்பு கருதப்படுகிறது. வேப்ப மரத்தின் ஒரு இனத்தின் உயிரியல் பெயர்கூட திzaனீiraணீhta inனீiணீa என்பதாகும். அப்பெயர்கூட அது இந்தியாவின் சுதேச இனம் என்பதைக் கூறுகிறது. வேப்ப மரத்தின் வேரிலிருந்து பட்டை தொட்டு இலை, பூ, வரையான சகல பகுதிகளுமே மருத்துவ குணமுடையவை.
ஆண்டாண்டு காலமாக பல்வேறுபட்ட மனிதத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தவை. தொன்மை வாய்ந்த பல இந்திய நூல்களிலே வேம்பின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பல நூற்றாண்டுகளாக, இந்த மேற்குலகம் வேம்பை கருத்தில் கொள்ளவே இல்லை. இந்தியாவில் தொழிலாளர்களும் சுதேச மருத்துவர்களும் தம் பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய வேம்பைப் பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் காலனித்துவ ஆட்சியாளர்களான பிரித்தானியர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரெஞ்சுக்காரர் போன்றோரின் கவனத்தை அது ஈர்க்கவில்லை. காலனித்துவத்தின் பின்னரான காலப்பகுதியில் (மேற்குலகிற்கு) விசேட பூச்சி கொல்லிகளைத் தயாரிக்க வேண்டிய தேவையொன்று ஏற்பட்டது. அப்போதுதான் வேம்பின் மருத்துவ குணத்தால் மேற்குலகும் ஈர்க்கப்பட்டது.
1971 இலே அமெரிக்க கம்பனியொன்று வேம்பு (இந்தியாவிலே) பயன்படும் விதத்தை அவதானித்தது. வேப்பங்கொட்டையை இறக்குமதி செய்யத் தொடங்கியது. அதில் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளை மேற்கொண்டு பூச்சி கொல்லியாகப் பாவிக்கக் கூடிய பதார்த்தமொன்றைப் பிரித்தெடுத்தது.
1985 இலே அப்பதார்த்தத்துக்கான காப்புரிமையை அமெரிக்கா வழங்கியது. பின்னர் அந்தக் கம்பனி காப்புரிமையை பல்தேசிய கம்பனி ஒன்றுக்கு விற்றது. அந்த பல்தேசிய கம்பனியின் கீழ் இயங்கும் கிரேஸ் என்ற கம்பனியொன்று இந்தியாவிலே தொழிற்சாலையொன்றை நிறுவியது. வேம்புடன் தொடர்புடைய பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்களை அணுகியது. அவர்களுடைய உற்பத்தி, தொழில்நுட்ப முறைமைகளைப் பணம் கொடுத்து வாங்கும் முயற்சிகளில் ஈடுபட்டது. அத்துடன் அவர்களுடைய உற்பத்திகளை நிறுத்தி மூலப்பொருளாகவே தமக்கு விற்குமாறும் வலியுறுத்தியது. பல்வேறு வகைகளிலும் அழுத்தங்களைக் கொடுத்தது.
இன்னொரு கம்பனியுடன் இணைந்து வேப்பங்கொட்டைகளைப் பண்படுத்தத் தொடங்கியது. தினமும் 20 தொன் வேப்பங்கொட்டைகள் அவ்விதம் பண்படுத்தப்பட்டன. உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் நியாய விலையிலே மூலப்பொருளைக் கொள்வனவு செய்தது.
இதனால் உள்ளூர் உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவோ மிகவும் சுலபமாக பல மில்லியன் வருமானத்தை ஈட்டியது.
வேம்பு உற்பத்திப் பொருட்களின் மீது கிரேஸ் கம்பனி கொண்டிருந்த மூர்க்கத்தனமான ஆர்வம் இந்தியாவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் என பலதரப்பினரிடமிருந்து ஒருமித்த எதிர்ப்பு உருவாகக் காரணமாகிது.
வேம்பு உற்பத்திக்கான காப்புரிமையைப்பெற பல்தேசிய கம்பனிகளுக்கு அதிகாரம் இல்லை என்ற கருத்து அவர்களால் முன்வைக்கப்பட்டது.
வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்தன. திடீரென புதிய திருப்பம் உருவாகியது. வேம்பின் தாயகம் இந்தியா அல்ல. கென்யாதான் என்றது அமெரிக்கா. சுவடுகள் ஆராயப்பட்டன. அப்போதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. 1948 இலே இலங்கை கென்யாவுக்கு வேப்பங்கொட்டைகளை அனுப்பியமை தெரியவந்தது.
ஆசியாவின் பல பகுதிகளிலும் வேம்பு பரம்பி இருப்பதால் ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு எதிராகப் போராடின. இறுதியில் வெற்றியும் பெற்றன.
இதுதான் இன்றைய நிலைமை, நாம் விழிப்படையாவிட்டால் எமது வளங்கள் யாவுமே மேற்குலகினால் சுரண்டப்பட்டுவிடும்.
ஆனால் நாமொன்றும் அப்பாவிகளல்லர். இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்களுள் பிரதானமான தேயிலை, இறப்பர் ஆகியன எமது சுதேச பயிர்கள் அல்ல. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சீனாவிலிருந்து தேயிலையும் தென்னமெரிக்காவிலிருந்து இறப்பரும் கொண்டுவரப்பட்டு இலங்கையில் பயிரிடப்பட்டன.
அவற்றால் இன்று பெருவருமானம் பெறும் நாம் அதில் ஒரு சிறிய பகுதியையேனும் அவற்றின் தாய் நாட்டுக்குக் கொண்டுக்கிறோமா? இல்லையே.... இதுதான் இன்றைய உலகின் நடைமுறை.
இந்த உயிர்க் கொள்ளையால் சுற்றுச்சூழல் மாற்றியமைக்கப்படுகிறது. அதன் விளைவால் உயிர்ப்பல் வகைமை இழக்கப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசியாவில் மட்டும் 100,000 க்கும் அதிகமான நெல்லினங்கள் காணப்பட்டன. ஆனால் இன்று அவை 12 இலும் குறைவாகி விட்டன. ஏன் இலங்கையிலும் அதே நிலை தான் காணப்படுகிறது. முன்னர் ஏறத்தாழ 2000 இனங்கள் காணப்பட்டன. தற்போது 5 இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இவையெல்லாம் உயிர்ப்பொருளின் வர்த்தகமயப்படுத்தல் ஏற்படுத்திய விளைவுகளாகும்.
உயிர்ப்பல்வகைமை இழக்கப்படுதலானது, உணவுப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும். இயற்கை அனர்த்தங்களை அதிகரிக்கச் செய்யும் சம போஷாக்குள்ள உணவு கிடைக்காமலே போகும்.
சுத்தமான நீர் கிடைக்காது, சமூக உறவுகள் பாதிக்கப்படும், உயிர்ப் பல்வகைமை அழிக்கப்பட்டால் அதை பழைய மாதிரியே மீள உருவாக்க முடியாது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
உயிர்க்கொள்ளையைத் தடுப்பதற்கு பல்வேறு நடைமுறைகளும் சட்டதிட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கண்காணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் கூட அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் மரபணுக்கொள்ளைகள் அவற்றை எல்லாம் மீறிவிடுகின்றன என்பதும் மறக்கப்பட முடியாதது.
உயிர்ப்பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் என்பது இலங்கையில் தடைசெய்யப்பட்டிருக்கிறது. ஆனால் படித்தவர்கள் பலர் அவ்வாறு தாவரப்பதார்த்தங்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லும் போது சுங்கத்தில் பிடிபட்டிருக்கிறார்கள்.
இவ்விடயம் தொடர்பில் எமது சட்டமூலங்கள் மேலும் திருத்தப்பட வேண்டும் என்கிறார் சுற்றாடல் சட்ட வல்லுநர் ஜெகத் குணவர்தன.அப்படி இல்லாவிட்டால் பன்னெடுங்காலமாக இந்தியா பாகிஸ்தானில் விளைவிக்கபடும் பாஸ்மதி அரிசியின் காப்புரிமையை அமெரிக்கா பெற்றிருப்பது போன்றதான நிலை தான் எமது சுதேச உற்பத்திகளுக்கும் உருவாகும் என்பது கண்கூடு.

1 comment:

Sulaxy said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment