Sunday, May 1, 2011

தொழிலுக்காக வாழ்க்கையா?

மே தின சிறப்புக் கட்டுரை 

அது மேற்குலகில் கைத்தொழில் புரட்சி ஆரம்பித்திருந்த காலம். உற்பத்தித் திறனுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலம்.
அப்போது, சூரியோதயத்திலிருந்து சூரியாஸ்தமனம் வரை என்பது தான் தொழிலாளர்களுக்குரிய வேலை நேரம். அது 14 மணித்தியாலங்களாகலாம். ஏன் சிலவேளைகளில் 16, 18 மணித்தியாலங்களாகக் கூட இருக்கலாம். அந்தக் கால மேற்குலகில் இவையெல்லாம் சர்வசாதாரணம். இதற்கு ஐக்கிய அமெரிக்கா ஒன்றும் விதிவிலக்கல்ல.
தொழிலாளர்கள் 19 மணித்தியாலங்களுக்கு மேலும் வேலை செய்கிறார்கள். என்பதே 1806 ஆம் ஆண்டு தான் வெளிச்சத்துக்கு வந்தது. இதுதான்  என்று மே மாதம் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட வித்திட்டது எனலாம்.
ஆனால் இந்த தொழிலாளர் தினமொன்றும் அவ்வளவு இலகுவாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களிலே தொழிலாளர்களின் வேலைநேரத்தைத் 10 மணித்தியாலங்கள் ஆக்கக் கோரி பல கைத்தொழில் நிலையங்களிலே போராட்டங்கள் வெடித்தன. வேலை நிறுத்தங்கள் ஆரம்பித்தன. உலகின் முதலாவது தொழிற்சங்கமாகக் கருதப்படுவது பிலடெல்பியா திருத்துநர்கள் சங்கமாகும். இங்கிலாந்திலே தொழிலாளர்கள் இணைந்து சங்கமொன்றை உருவாக்குவதற்கு 2 வருடங்களுக்கு முன்னரே அது உருவாக்கப்பட்டது.
பிலடெல்பியாவில் 1827 ஆம் ஆண்டு 10 மணித்தியால வேலை நேரத்தைக் கோரி ஆரம்பிக்கப்பட்ட தொழிச் சங்கங்கள் வெகு விரைவிலே ஒரு இயக்கமாக இணைந்தன. அதனால் 1837 இல் பெரு நெருக்கடி ஒன்று உருவாகியது. அப்போதிருந்த அமெரிக்க ஜனாதிபதி வான் பரென் அரச துறையில் வேலை செய்வோரின் வேலை நேரத்தை மட்டும் 10 மணித்தியாலங்களாகக் குறைத்தார். ஏனைய துறைகளிலும் அதே மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான போராட்டங்கள் அடுத்த சில தசாப்தங்களுக்குத் தொடர்ந்தன. ஆனால் தொழிலாளர்கள் 8 மணித்தியால வேலை நேரத்தைக் கோரிப் போராட்டம் நடத்த முன்னரே பல கைத்தொழில் நிறுவனங்கள் அவர்களின் வேலை நேரத்தை 10 மணித்தியாலங்களாகக் குறைத்தன.
பின்னர், அமெரிக்காவில் மட்டுமன்றி அவுஸ்திரேலியாவிலும் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்கள் வலுப்பெறத் தொடங்கின. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரப் பொழுது போக்கு என்ற சுலோகங்களுடன் தொழிலாளர்கள் 1856இல் போராட ஆரம்பித்தனர். வெற்றியும் கண்டனர். அவுஸ்திரேலியாவில் இந்த 8 மணித்தியால இயக்கம் தான் மே தினத்தின் தோற்றத்துக்கு வழிவகுத்தது எனலாம். உலகளாவிய ரீதியிலே இந்தத் தொழிற்சங்கங்கள் இணைய ஆரம்பித்தன. அமெரிக்க தொழிலாளர் சம்மேளனத்தினால் 1884 ஒக்டோபர் 4 ஆம் திகதி பிரேரணை ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 1886 மே மாதம் 1 ஆம் திகதியிலிருந்து தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணித்தியாலமாக்கப்பட வேண்டுமென்பதே அந்தப் பிரேரணையாகும். அப்படி இருந்தும் கூட பல கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் பெரும் போராட்டங்களின் பின்னரே 8 மணித்தியால வேலை நேரம் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கிடையில் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைந்து உருவான தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் தலைமைப்பீடம் லண்டனிலிருந்து 1872 இல் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
1886 இலே தொழிலாளர் போராட்டங்கள் அதிகரித்தன. போராட்ட மையமாக சிக்காக்கோ இருந்தபோதும் பல நகரங்கள் சிக்காக்கோவுடன் இணைந்தன. ஏறத்தாழ 500,000 பேர் அந்த ஆண்டின் மே 1 ஆம் திகதி பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை ‘சமூக யுத்தம்’ என்றும் ‘முதலாளித்துவத்தின மீதான வெறுப்பு’ என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் வர்ணித்தனர். அந்தமேதினத்தன்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுள் அரைவாசிக்கு மேற்பட்டோருக்கு வெற்றி கிடைத்தது என்றே கூறவேண்டும். அவர்களது வேலை நேரம் 8 மணித்தியாலங்களாகக் குறைக்கப்படாத போதும் கணிசமானளவு குறைக்கப்பட்டமையானது முன்னேற்றகரமானதாகவே தெரிந்தது.
சிக்காக்கோவில் நடைபெற்ற மே தினப் போராட்டமானது மிகவும் மூர்க்கத்தனமாக இருந்தது எனலாம். தொழிலாளர்களுடைய தொழிற் சூழல் மேம்பட வேண்டுமென்பது மட்டுமன்றி முதலாளித்துவம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்குகளோடும் அது முன்னெடுக்கப்பட்டது.
அப்போது ஹே சந்தை சதுக்கத்தில் பொலிசார் மேற்கொண்ட திறந்த வெளித்துப்பாக்கிப்பிரயோகத்தின் போது நால்வர் கொல்லப்பட்டனர். இனந்தெரியாதோரால் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டது. ஒரு பொலிஸ் வீரருடன் 10க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டனர். உலகளாவிய ரீதியில் போராட்டங்கள் வலுப்பெற இச்சம்பவம் காரணமாகியது. இன்றும் மே தினத்தன்று இச்சம்பவம் நினைவு கூரப்படுகின்றது.
1889 இலே பிரெஞ்சு சமூகவியலாளர்களால் மே தினம் என்றழைக்கப்படும் மே 1 ஆம் திகதி தொழிலாளர்களுக்கும் அவர்களது பிரச்சினைகளுக்குமுரிய நாளாகக் கருதப்பட்டடது. அதுவே சர்வதேச தொழிலாளர் தினமாகியது.
1920 களிலிருந்து மே தின ஊர்வலங்களை நடத்தும் வழக்கம் தொடங்கியது. பல நாடுகளில் அன்றைய தினம் பொது விடுமுறை நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
மே தினம் என்பது 20 ஆம் நூற்றாண்டுக்குரியதல்ல. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே வசந்த காலத்தை வரவேற்கும் தினமாக மேதினம் அமைந்திருந்தது.
உரோம சாம்ராஜ்யம் வலுப்பெற்றிருந்த காலத்திலே மலர்களுக்கென தெய்வமாகக் கருதப்பட்ட ஃபுளோரா (பிlora) வுக்குரிய திருவிழா மே தினத்தன்று கொண்டாடப்பட்டது. அதேபோல் ஜேர்மனிய ஆட்சிப் பகுதிகளிலும் வசந்த காலத்தில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது.
கிறிஸ்தவ மதத்தின் தோற்றத்தையடுத்து மேற்குலகில் அது வேகமாகப்பரவியது. அப்போது இக்கொண்டாட்டங்கள் கிறிஸ்தவமயப்படுத்தப்பட்டன. ஐரோப்பா, அமெரிக்காவில் மே தினக் கொண்டாட்டங்கள் பிரபலமடைந்தன. அடிப்படையில் வசந்தகாலத்தை வரவேற்பதாக அமைந்த போதிலும் மே கம்பத்தைச் சுற்றி ஆடுவதும் மே அரசியாகக் கண்டறியப்படுபவருக்கு முடிசூடுவதும் சம்பிரதாயங்களாயின.
உரோமன் கத்தோலிகர்களைப் பொறுத்தவரையிலே மே தினம் கன்னி மேரிக்குரிய திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. மேரியின் தலையிலே மலர்க்கிரீடங்களைச் சூட்டியும் மகிழ்வர்.
இத்தகைய புராதனமான மே தினம் தற்போது சர்வதேச தொழிலாளர் தினமாக மாறிவிட்டது.
இந்தியாவிலோ இரு மாநிலங்கள் மட்டும் தாம் உருவாகிய தினமாக மே தினத்தைக் கொண்டாட, ஏனையவை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
பொம்பே என்ற மேற்கு மாநிலத்திலிருந்து செளராஷ்டிர மீள் ஒருங்கிணைப்புச் சட்டத்தின் கீழ் 1960 ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் திகதி இரு மாநிலங்கள் தோன்றின. அவைதான் இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் அமைந்திருக்கும் குஜராத் மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களாகும். மராத்தி மற்றும் குஜராத்தி என்ற இரண்டு மொழிகளின் அடிப்படையிலேயே இம் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
இப்படி உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடும் தனக்கே உரித்தான சிறப்பு சம்பிரதாயங்களுடன் மே தினத்தைக் கொண்டாடுகின்றது.
ஆனால் சர்வதேச தொழிலாளர் தினம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் தத்தமது தனித்துவமான சம்பிரதாயங்களுடன் தொழிலாளர் தினத்தையும் இணைத்து யாவரும் ஒத்து அனுஷ்டித்து வருகின்றனர்.
8 மணித்தியாலப் போராட்டம் நடந்து இன்று ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. அதற்குப் பின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள், தொழிலாளர் நலன் போன்ற பல விடயங்கள் தொடர்பான பிரகடனங்கள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. அதேபோல, அன்று தொழிலாளர்களையே நம்பியிருந்த பல வேலைகளை இன்று இயந்திரங்கள் மேற்கொள்கின்றன. ஆதலால் அன்றுடன் ஒப்பிடுகையில் தொழிலாளர்களின் வேலைப்பழு குறைந்துதான் உள்ளது.
இவற்றிற்கெல்லாமப்பால் சகல தொழில் விடயங்களிலும் சர்வதேச ரீதியிலான தரக் கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதும் அவசியமாக்கப்பட்டுள்ளது. அங்கும் தொழிலாளர் நலன் முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் தற்போதைய நிலை கடந்த நூற்றாண்டை விட மோசமாக இருக்கிறதோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.
இவ்வளவு விடயங்கள் இருந்தாலும் உலகளாவிய ரீதியிலே ஓய்வின்றி வேலை செய்யும் தொழிலாளர்களும், ஊன் உறக்கமின்றி வேலை வாங்கப்படும் தொழிலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார். அவர்கள் வெகுசிலர் மட்டுமே என்று சுலபமாகக் கூறிச் செல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் கணிசமான தொகையினர் ஒரு நூற்றாண்டு கடந்தாலும் கூட முதலாளித்துவம் இன்றும் தன் கோரமுகத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.
தொழிலாளர் நலன் தொடர்பான விடயங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும், பல தொழில் வழங்குநர்கள் அவற்றைப் பின்பற்றுவதாகத் தெரியவில்லை.
தொழிலாளர்களுடைய நோக்கிலே, அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. அதேசமயம் தமது வாழ்க்கைத்தரத்தை உலகின் போக்கோடு ஒருமிக்கச் செய்ய வேண்டிய தேவையும் காணப்படுகிறது.
அவை அடிப்படைத் தேவைகளாகிவிட தொழிலாளர்கள் அவற்றிற்கு அதிக முக்கியத்துவத்தை வழங்கத் தலைப்படுகிறார்கள். இதனால் தமது நலன், தாம் வேலை செய்யும் நேரம் என்பன தொடர்பாக அதிக கரிசனை செலுத்தத் தவறி விடுகின்றார்கள். கடைசியில் அவர்களுக்கு வேலையே வாழ்க்கையாகி விடுகிறது.
இது நாட் கூலிபெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருத்தமானது என நாம் ஒருபோதும் எண்ணிவிடக் கூடாது. ஒரு முதலாளித்துவத்தின் கீழ் தொழில் மேற்கொள்ளும் சகலருக்கும் பொருந்தும்.
முதலாளித்துவமோ, தான் கொடுக்கும் சம்பளத்திற்கான உச்சப் பயனைப் பெறவே எத்தனிக்கிறது. அத்துடன் அத்தகையோர் பலருக்கு சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளர் நலன் தொடர்பிலான விழிப்புணர்வு மிக மிகக் குறைவாகும். பல தொழில் வழங்குநர்கள் தம்மிடம் வேலை செய்வோருக்கு அவை பற்றி அறிவுறுத்தும் கடமையிலிருந்து தவறி விடுகின்றன. இன்றைய தினத்திலாவது சகல தொழிலாளர் மட்டங்களி லும் அத்தகைய விழிப்புணர்வை ஊட்டுவ தற்கு சகல வெகுசனத் தொடர்பு ஊடகங்க ளும் ஒன்றிணைய வேண்டும். அதே போல ஒவ்வொரு தொழிலாளரும் தான் வாழ்வதற்காக வேலை செய்கிறாரா?
இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறாரா? என்று சிந்திக்க வேண்டும்.
அந்த சிந்தனையின் பின்னர் கிடைக்கும் தெளிவு தான் தொழிலாளர் நலன் தொடர்பான விழிப்புணர்வுக்கு முதற்படியாகும். முயன்று தான் பார்ப்போமே!

No comments:

Post a Comment