Showing posts with label கண்ணாடி. Show all posts
Showing posts with label கண்ணாடி. Show all posts

Wednesday, November 10, 2010

கண்ணாடிக் கொள்கலன்கள் பாவனைக்கு பாதுகாப்பானவை

ஒரு காலகட்டத்திலே, கண்ணாடிப்பொருட்களின் பாவனை மிக வும் அதிகமாக இருந்தது. ஆனால் அவை இலகுவில் உடைந்து விடக்கூடியவை. இந்த இயல்பு காரணமாக அவற்றை நீண்ட காலத்துக்கு உபயோகப்படுத்துவதில் ஒரு நிச்சயமற்ற தன்மையும் காணப்பட்டது. விளைவாக நீண்டகாலம் பாவிக்கக் கூடிய, பாரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை நோக்கி, தேவைகளின் சந்தை நகர்ந்தது. கண்ணாடிப் பொருட்களின் பொதுவான பாவ னையும் தேவையும் அருகியது.

பிளாஸ்டிக் பொருட்களின் பரவ லான பாவனையைத் தொடர்ந்து சில காலங்களில் சூழல் மாசடைதல் பிரச்சினை தலைதூக்கியது.

பின்னர்தான், கண்ணாடிப் பொருட்களின் அருமை உணரப் பட்டது. கண்ணாடிப்பொருட்கள் அவற்றின் உபயோகம் முடிந்த பின்னர் மீள்சுழற்சி செய்யப்படக் கூடியவை. இம்மீள் சுழற்சி மிகவும் எளிமையானது. மட்டுமின்றி எமக்கு நன்மை பயக்கக் கூடியதுமாகும்.
சுற்றுச் சூழலைப் பொறுத்த வரையிலே, கண்ணாடிப் பொருட் களை வீணே குப்பைகளில் எறிந்து விடாமல் மீள் சுழற்சி செய்வது சாலச்சிறந்தது எனலாம். கண்ணாடிப் போத்தலொன்றை குப்பையிலே எறிந்தால், அது உக்கி மண்ணோடு மண்ணாக பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் மாறாக, நீங்கள் குப்பையில் எறிந்த கண்ணாடிப் போத்தல் 30 நாட்களுக்குள் புதிய வடிவைப்பெற்று கடை அலுமாரியை அலங்கரிக்கும்.

கண்ணாடியாலான பொருட்களை 100 சதவீதம் மீள் சுழற்சி செய்யலாம். பொதுவாக மீள் சுழற்சி செய்யப்படும் போது பதார்த்தங்கள் மீள மீள மீள் சுழற்சி செய்யப்பட முடியாதவை. மாறாக, கண்ணாடிப் பொருட்களோ, எத்தனை தடவைகள் மீள் சுழற்சி செய்யப்பட்டாலும் தமது தரத்தையோ தூய்மைத்தன்மையையோ இழப்பதில்லை.
கண்ணாடிப் பொருட்களின் மீள் சுழற்சியானது வினைத்திறன் மிக்கது எனக் கூறப்படுகிறது.

இம்மீள் சுழற்சியால் பெறப்படும் கண்ணாடியே கண்ணாடித் தயாரிப்பின் பிரதான மூலப்பொருட்கள் ஆகும். அத்துடன் 80 சதவீதமான மீள் சுழற்சிக்கண்ணாடிகள் மீண்டும் புதிய கண்ணாடிக் கொள்கலன்களாக மாறிவிடுவதைக் கண்ணாடி மீள் சுழற்சி செய்யும் துறையினர் உறுதி செய்கின்றனர்.
கண்ணாடி, மீள் சுழற்சி செய் யப்படுவதால் இயற்கை வளங்கள் பேணப்படுகின்றன. கண்ணாடித் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் இயற்கை வளங்களிலிருந்தே பெறப்படுகின்றன. மீள் சுழற்சி செய்யப்படும் ஒவ்வொரு தொன் கண்ணாடிப் பொருட்களும் ஏறத்தாழ ஒரு தொன்னிலும் அதிகமான மூலப்பொருட்களை மீதப்படுத் துகின்றன. இம்மூலப்பொருட்களுள் 600 கிலோ கிராம் மணல், 205 கிலோ கிராம் சோடாத்தூள், மற்றும் 180 கிலோ கிராம் சுண்ணாம்புக்கல் ஆகியனவும் அடங்குகின்றன.
இன்றைய உலகிலே, சக்தித் தேவையானது துரித கதியிலே அதி கரித்து வருகிறது. ஆதலால் சக்தி வளங்களைப் பேணுவதும் சக்திப் பாவனையைச் சிக்கனமாக்கி சக்தியைச் சேமிப்பதும் அவசியமாகிவிட்டன. கண்ணாடிப் பொருட்களை மீள் சுழற்சி செய்தல் சக்தியைச் சேமிக்கும் செயற்பாடாகக் கருதப்படுகிறது.
புதிய கண்ணாடியை உற்பத்தி செய்தலானது மணலையும் ஏனைய பதார்த்தங்களையும் ஏறத்தாழ 2600 பாகை பரனைற் வரை வெப்ப மாக்குவதன் மூலமே பெறப்படுகிறது. அதற்கு பாரியளவிலான சக்தி தேவைப்படுகிறது. அச்சக்தியைப் பெறுதலானது சுற்றுச்சூழல் மாசையும் தோற்றுவிக்கிறது.
கண்ணாடியை தூளாக நொருக் குதலே கண்ணாடி மீள் சுழற்சியின் முதற்படியாகும். அத்தூளிலிருந்து கண்ணாடியாலான முடிவுப்பொருளை உருவாக்கும் போது இயற்கை மூலப்பொருட்களிலிருந்து அதே முடிவுப்பொருளை உருவாக்கும் போது தேவைப்படும் சக்தியின் 60% மட்டுமே தேவைப்படுகிறது. ஏனெனில் இத்தூளானது மிகவும் குறைந்தளவிலான வெப்ப நிலையி லேயே உருகும் தன்மையுடையது.
கண்ணாடி, இயற்கை மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப் படுவதாகும். ஆதலால், கண்ணாடிக் கொள்கலன்களுக்கும் அவற்றினுள் பேணப்படும் பதார்த்தங்களுக்கும் இடையிலான இரசாயனத் தாக்கம் புறக்கணிக்கத்தக்களவிலேயே நடைபெறுகிறது. இவ்வியல்பு காரணமாக, கண்ணாடிக் கொள் கலன்களை மீளப்பாவித்தலானது ஆரோக்கியமானதும் பாதுகாப் பானதுமாகுமெனக் கருதப்படுகிறது.

மீள் சுழற்சி செய்யப்படும் கண்ணாடிப் பொருட்கள் கண்ணாடி தயாரிப்பின் மூலப்பொருளாக மட்டும் பயன்படுவதில்லை. அலங்கரிக்கப்பட்ட நில ஓடுகளின் உற்பத்தியிலும் நிலவடிவமைப்பிலும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட கரையை மீளக் கட்டமைப்பதிலும் துணை புரிகின்றன.
மீள் சுழற்சி செய்தல் சுலபமானது எனக் கருதப்படும் பதார்த்தங்களுள் கண்ணாடி முக்கிய இடத்தைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இலகுவானது, மலிவானது எனக்கருதி நாம் கொள்வனவு செய்யும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை முடிந்தபின்னர் மறை முகமாக நாம் கொடுக்கும் விலை மிகப்பெரியது. இதை உணர்ந்த பலர் கண்ணாடிப் பொருட்களின் இயன்றவரையான பாவனைக்குத் திரும்பிவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிளாஸ்டிக் குடிநீர்ப் போத்தல்களின் பாவனை உச்சகட்டமாகிய காலம் மாறி, இன்று பலர் கண்ணாடிப் போத்தல்களைப் பாவிப்பவர்களாக மாறியிருப்பதை அலுவலகங்களிலே கண்டிருப்பீர்கள். இத்தகைய மாற்றங்களே வரவேற்கத்தக்கவை!