Showing posts with label காலநிலை மாற்றம். Show all posts
Showing posts with label காலநிலை மாற்றம். Show all posts

Monday, January 7, 2019

சாணேற முழம் சறுக்கியதோ?


அண்மையில் உலகளாவிய ரீதியில் வெளியிடப்பட்ட சுட்டி ஒன்று தொடர்பில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தது. அச்சுட்டி வேறெதுவுமல்ல. ‘ஜேர்மன் வொச்’ என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான  நீண்டகால கால நிலை அபாயச்சுட்டியேயாகும்.  1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான 20 வருட காலப்பகுதியில் வெள்ளம், வரட்சி, புயல் போன்ற வானிலை சார் பேரிடர்களால் ஏற்பட்ட இழப்புகளின் பாதிப்பின் அடிப்படையில் இச்சுட்டி கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் போலந்து நாட்டில் நடைபெற்ற கால நிலை உச்சி மா நாட்டிலே வெளியிடப்பட்ட உலகளாவிய கால நிலை அபாயச்சுட்டி 2019 என்ற அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இச்சுட்டி தொடர்பில் நான்காம் இட த்தை வகித்த இலங்கை 2019 ஆம் ஆண்டுக்குரிய அறிக்கையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. இது ஒரு முன்னேற்றத்துக்கான அறிகுறியன்று. இலங்கையின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துச் செல்வதற்கான அபாய அறிகுறியேயாகும். கால நிலைக்கும்.

அதிகூடிய வெப்பமும் எதிர்பாரா மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளப்பெருக்கும் மண்சரிவும் என இலங்கை தொடர்ந்து பேரழிவுகளைச் சந்தித்து வருகிறது. இந் நிலைமை தவிர்க்கமுடியாததாகி விட்டமையையும் உணர முடிகிறது.

கால நிலை மாற்றத்தை மனிதன் கையாளத்தவறும் ஒவ்வொரு கணமும் குறிப்பாக சிறுதீவுகளாக க் காணப்படும் நாடுகளின் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்த வண்ணமே செல்கிறது.  உலகளாவிய சராசரி வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க இந்த மோசமான நிலைமைகள் உருவாகும் நிகழ்தகவும் அதிகரித்துச் செல்வதாக எதிர்வு கூறப்படுகிறது. ஆயினும் சில வானிலை நிகழ்வுகளுக்கும் கால நிலை மாற்றத்துக்குமான தொடர்புகளை இன்னும் விஞ் ஞான ரீதியாக உறுதி செய்ய முடியவில்லை. புவிக்கோளத்தின் வெப்ப நிலை அதிகரிக்க அதிகரிக்க சில வானிலை நிகழ்வுகளின் மீடிறனும் செறிவும் அவற்றினால் ஏற்படும் பாதிப்பும் அதிகரித்த வண்ணம் செல்கின்றமையை மட்டும் விஞ்ஞானத்தால்அவதானிக்க முடிகிறது.

அது மட்டுமன்றி ஒரு தனிப்பட்ட வானிலை நிகழ்விலே கால நிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்டறிதலானது மிகவும் சிக்கலானதாகும். வேறுபட்ட பிராந்தியங்களில் நிலைமைகள் மாறுபட்டுக் காணப்படுகின்றன. அவை தொடர்பான நீண்டகாலத்தரவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக க் காணப்படுகின்றன. கடந்த சிலகாலமாக  திடீரெனெ நிகழும் அதி தீவிர வானிலை  நிகழ்வுகள் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுவருவதும் உண்மையே. 

கால நிலை மாதிரிகளை உருவாக்கிப் பரீட்சித்து இத்தகைய அதீதமான வானிலை நிகழ்வுகளை எதிர்வு கூறுவதும் அவை   இடம்பெற்ற பின்னர் அவற்றுடன் ஒப்பிட்டு கால நிலை மாதிரிகளை மேலும் செம்மைப்படுத்துவதும் உலகளாவிய ரீதியிலே நடைபெற்ற வண்ணம் உள்ளன.  நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்க்கும் வானிலை அறிக்கைகள், அவற்றின் விவரணம் கூட இத்தகைய கால நிலை மாதிரிகள் எதிர்வு கூறுபவற்றை அடிப்படையாக க் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.  இத்தகைய கால நிலை மாதிரிகள் மூலம் புவி வெப்பமயமாதலினால் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றன. உதாரணமாக உயர் வெப்ப நிலை நீர்ச் சக்கரத்தை மேலும் செறிவுற்றதாக மாற்ற வல்லது. ஆதலினால் அதிகளவிலான ஆவியாதல் நடை பெற்று அதீத வரட்சியும் அவ்வாவியாதலுக்கேற்ற அதீத வீழ்படிவினால் பெரு வெள்ளங்களும் ஏற்படுகின்றமை சகஜமாகி விட்டது.வளி மண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்துக் காணப்படுவதையும் பல சந்தர்ப்பங்களில் உணர முடிகிறது.  இலங்கையில் நாம் அதிகளவில் கேள்விப்படும் சொற்களாக மாறிவிட்ட வெள்ள நிவாரணத்தையும் வரட்சி நிவாரணத்தையும் இக்கணத்தில் எண்ணிப்பார்க்க முடிகிறது. 

இவை யாவுமே வானிலை நிகழ்வுகள் நடை பெறும் நிகழ்தகவுகளை தினம் தினம் மாற்றிய வண்ணமே செல்கின்றன . 2016 ஆம் ஆண்டு  நிகழ்ந்த அதீத வானிலை நிகழ்வுகளை கால நிலை மாற்றத்தின் பார்வையில் அவதானித்து புதிய அறிக்கையொன்று அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கால நிலை மாற்றம் என்பது மனிதனது செயற்பாடுகளின் விளைவே என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆக இந்த அதீத வானிலை நிகழ்வுகளுக்கும் மனிதனே காரணியாகிறான்.  அதீத வானிலை நிகழ்வுகளின் உருவாக்கம் கால நிலை மாற்றமன்றி சாத்தியமற்றது என்கிறது அவ்வறிக்கை.

உலகளாவிய கால நிலை அபாயச் சுட்டி அறிக்கை 2019 இன் அடிப்படையில், அதீத மழை வீழ்ச்சியென்பது தவிர்க்க முடியாததோர் நிகழ்வு என்பது தெள்ளத்தெளிவாகிறது. தென்னாசிய, தென் கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளிலிருந்து பெறப்பட்ட வானிலைத் தரவுகளின் அடிப்படையில் எதிர்பாராத அதீத மழை வீழ்ச்சியும் அதனால் ஏற்படும் வெள்ளம், சரிவும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் தெளிவாக அறிக்கையிடப்பட்டிருக்கின்றன. இங் ஙனம் தனித்தனி அதீத மழை வீழ்ச்சியின் நிகழ்வு தொடர்ந்தும் அதிகரித்த வண்ணம் காணப்படும் எனத் தெளிவாக எதிர்வு கூறப்படுகிறது.

ஏனைய இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆறுகள் பெருக்கெடுக்கின்றமையால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் ஏற்படும் பல பில்லியன் டொலர் சொத்தழிவும் வருடாந்தம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன.   

எத்தகைய மனித நடவடிக்கைகளால் ஏற்படும் கால நிலை மாற்றம் இத்தகைய அதீத வானிலை நிகழ்வுகளை உருவாக்குகிறது என்பதை அறியமுடியாதளவு இந் நிலைமை கற்பதற்குச் சிக்கலானது.

கடந்த வாரத்திலிருந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிப்புக்குள்ளாகி வரும் வன்னி நிலப்பரப்பும் இத்தகையதோர் தோற்றப்பாட்டுக்கான உதாரணமாகும். திடீர் பேரனர்த்தங்களின் போது மக்கள் பாதிக்கப்படுகின்றமையில் பல காரணிகள் தாக்கம்  செலுத்துகின்றன. போதுமான தயார்படுத்தலின்மை தொட்டு வறுமை போன்ற பாதிக்கப்படும் தன்மை, கால நிலை மாற்றத்தைக் கருத்தில் கொள்ளாத அபிவிருத்திச் செயற்பாடுகள் என அக்காரணிகள் இரு வெவ்வேறு அந்தங்கள் வரை வேறுபடுகின்றன. இயற்கையும் இரங்காத நிலையில் சாணேற முழம் சறுக்கிய கதையாக வன்னி மண் தொடர்ந்து அழிவுகளைப் பார்த்த வண்ணமே உள்ளது. 

தொடர்ந்து பெய்த செறிவான மழையாலும் வான் பாய்ந்த குளங்களாலும் கதிர் வந்த பருவத்தில் காணப்பட்ட  நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணமான வயற்கானிகளை மூடி வெள்ளம் பாய்ந்தது. தொடர்மழைக்கு முன்னரே வளிமண்டலத்தின் ஈரப்பதன் அதிகரித்தமையால் உருவாகிய நோய்களுக்கும் பீடைகளுக்குமாக 3 சதவீத மாதாந்த வட்டிக்கு கிருமி நாசினிகளைக் கொள்வனவு செய்து பிரயோகித்த விவசாயிகளையும் காண முடிந்தது. வட பகுதியிலே அதிகளவில் காணப்படுகின்றன என விமர்சிக்கப்பட்ட குறு நிதி நிறுவனங்களையும் தாண்டி இக்கிருமி நாசினி வியாபாரங்களும் கடன் விற்பனை மூலம் விவசாயிகளைச் சுரண்டும்   உத்தியைப் பயன்படுத்துகின்றமையைக் கண்கூடாகக் காண முடிந்தது. தனியார் வங்கிகள் ஒன்றும் சளைத்தவை அல்லவே. 1.5 சத வீத மாத வட்டி எனும் கவர்ச்சிகர விளம்பரத்துடன் விவசாயிகளைத் தேர்வு செய்து விவசாயக் கடன் எனும் பெயரில் வர்த்தக க் கடனை அவர்கள் பெற்றுகொள்ள ஆவன செய்கின்றமையும் கூடக் காண முடிந்தது. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ என்டர்பிறைஸ் லங்கா’ இலகு கடன் கொடுப்பனவுகள் பற்றி விவசாயிகளுக்குத் தெளிவு படுத்தி அவற்றை ஊக்குவிக்கும் சூழல் வன்னியின் விவசாயி- வங்கி உறவிலே காணப்படாத நிலைமையையும் உணர முடிந்தது. நடந்து முடிந்த அரசியல் குழப்பங்களும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்களும் இத் தனியார் வங்கிகளின் நியாயப்படுத்தல்களாகின.  10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் விவசாயம் செய்யும் பெரு விவசாயிகள் ஆக க் குறைந்த மாதாந்த வட்டியாகிய 3 சதவீத வட்டியில கடனைப் பெற்றும் கடன் கொள்வனவை மேற்கொண்டும்  நகைகளை அடகு வைத்தும் தமது உழைப்புடன் சேர்த்து வயலிலே மேற்கொண்ட இலட்ச ரூபா பெறுமதியான முதலீடு ஒற்றை வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. 

ஒவ்வொரு போகத்தின் போதும் காப்புறுதி செய்தல்  எனப்படுவது தேவையற்றதோர் செலவு என்ற கருத்தையே வன்னிப்பெரு நிலப்பரப்பின்  பெரும்பாலான பெரு விவசாயிகள்  அனேகர் கொண்டிருக்கின்றனர்.  இம்முறை பாரிய இழப்புகளைச் ச்சந்தித்திருக்கும் பெரு விவசாயிகளுள் பெரும்பாலானோர் தாம் விதைத்த நிலங்களுள் 10 ஏக்கர் தவிர்ந்த ஏனைய வீஸ்தீரணத்துக்கு காப்புறுதி செய்யாமல் விட்ட நிலைமையே காணப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஏக்கர் வயலுக்கு குறைந்த வட்டியுடனான விவசாயக்கடன்  அரசினால் வழங்கப்படுவதால் அதற்கு காப்புறுதி செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கால நிலை மாற்றத்தாலும் அதீத வானிலை நிகழ்வுகளாலும் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கும் இலங்கையிலே காப்புறுதியின் அவசியம் பற்றிய தெளிவு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை  இலங்கையின் விவசாயக் காப்புறுதிக்கான சேத மதிப்பீடு தொடர்பில் காணப்படும் சிக்கலான, நீண்ட நேரமெடுக்கும்  முறைமைகள் இலகு படுத்தப்பட வேண்டும். அண்மையில் இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனத்தின் விளம்பரம் ஒன்றை வவுனியா  நகரின் மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த இலத்திரனியல் திரையிலே காணக்கிடைத்தது. ‘ட்ரோன்’  எனப்படும் சிறு வலவன் ஏவா வான ஊர்திகளைக்கொண்டு பெறப்படும் வான் புகைப்படங்களைக் கொண்டும்  அகச்சிவப்பு படங்களைக்கொண்டும் சேத விபரம், அவற்றின் விஸ்தீரணம், அகலாங்கு, நெட்டாங்கு ஆள்கூறுகள் ஆகியவற்றைத் தெளிவாகக் கணித்து விவசாயக் காப்புறுதி வழங்கும் முறைமை இலங்கையிலும்  அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றமையை அவ்விளம்பரத்தினூடாக அறிய முடிந்தது.

உலகளாவிய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இலங்கையின் நிலையைக் கருத்தில் கொண்டு நோக்கும் போது பசளை மானியத்தை விட கட்டாயக் காப்புறுதி தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டிய காலம் கனிந்து விட்டதெனலாம். இதில் அரசின் தலையீடு நிச்சயமாக அவசியமாகிறது. பெரு வெள்ளத்தால்  ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பிரதேசத்தை மீள பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் பாரிய பொறுப்பு அரசையே சார்ந்ததாகி விடும். அச்செலவுடன் ஒப்பிடுகையில் கட்டாயக் காப்புறுதிக்காக அரசினால் மேற்கொள்ளப்படும் பங்களிப்பு குறைவானதாகவும் இலாபகரமானதாகவும் இருக்கும். அல்லாவிடில் திடீர் அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புகளும் மொத்த உள் நாட்டு உற்பத்தி, சமூகச் சுட்டிகளில் ஏற்படும் மாற்றமும் ஈடு செய்ய முடியாதனவாகிவிடுவன.

முன்னைய தசாப்தங்களைப் போலல்லாது வானிலையை ஒரளவு துல்லியமாக எதிர்வு கூறும் கால நிலை மாதிரிகள் புழக்கத்தில் வந்து விட்டன. விவசாயத்தை அடிப்படையாக க் கொண்ட பல நாடுகள் அம்மாதிரிகளை அடிப்படையாக க் கொண்டு விவசாயிகளின் பயிர் நாட்காட்டித் தரவுகளையும் இணைத்து வழிகாட்டும் செயலிகளை உருவாக்கி விவசாயிகளின் பயன்பாட்டுக்கென இலவசமாக வெளியிட்டிருக்கின் றன. 

ஆனால் வன்னியிலே இவ்வானிலை எதிர்வுகூறலில் நம்பிக்கை வைத்து, அதனைக் கருத்தில் கொண்டு தொழிற்படும் விவசாய சமூகத்தைக் காண்பது அரிதாகவே இருக்கிறது.வயல் நிலத்தின் மீது  இலட்சக் கணக்கிலான முதலீட்டை மேற்கொள்ள முன்னர் சிந்தித்துச் செயற்பட இவ்வெதிர்வுகூறல்கள் நிச்சயமாக விவசாயிக்கு உதவும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.  கால நிலை மாதிரிகளை ஒட்டி, விவசாயிகளுக்குப் பயன்படும் வகையிலான செயலிகள் பல அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.  தகவல் தொழில்  நுட்ப விழிப்புணர்வை யாழ் மண்ணின் இளையோர் மத்தியில் பரப்பி வரும் ‘சுடர்’, ‘ஊக்கி’ போன்ற செயற்பாட்டு அமைப்புகள் இத்தகைய சமூகப் பொறுப்புள்ள செயற்பாடுகளில் இளையோரை ஈடுபடுத்த முன் வர வேண்டும்.

அரச இயந்திரங்களும் தம் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கால நிலை மாற்றத்தையும் அதீத வானிலை நிகழ்வுகளையும் கருத்தில் கொண்டு அவற்றுக்குத் தாக்குப்பிடிக்க க் கூடிய வகையிலே அவற்றை மேற்கொள்ளவேண்டும். மேலிருந்து கீழான கட்டளை நடைமுறைகளாலும்  மட்டுப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீடுகளாலும் இற்றைவரைப்படுத்தப்படாத திறன் விருத்தியாலும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களை செவ்வனே நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர் நோக்கலாம். அரச தொழில் என்பது சவால்கள் நிறைந்ததே. களத்தின் நிலைமையை உயர் மட்டத்துக்கு  எடுத்துச் சொல்லி தேவைக்கேற்ற அபிவிருத்தி செயற்றிட்டத்தை மேற்கொள்வதென்பது ஒவ்வொரு அரச ஊழியனதும் பொறுப்பாகும். இன்றேல் யாவருக்குமான அபிவிருத்தி என்பதும் , நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்பதும் வெறும் வாய்ச்சொற்களாக காற்றிலே பறந்துவிடுவன. 

வீடு தொட்டு வீதி வரை சகல கட்டுமானங்களும்  காலநிலை மாற்றத்தையும் அதீத  வானிலை நிகழ்வுகளையும் தாக்குப் பிடிக்கும் வண்ணம் அமைக்கப்பட வேண்டும்.  கட்டுமான வேலைகளில் ஈடுபடும் சகலதரப்பினரும் இத்தகைய தாங்குதிறன் மிகு கட்டுமானம் தொடர்பில் அறிவூட்டப்பட வேண்டும்.

யாழ்ப்பாண நகரையும் அதை அண்டிய பகுதிகளிலும்  காலனித்துவ காலத்தில் அமைக்கப்பட்ட மழை  நீர் வடிகால்களின் அகலம், ஆழத்துடன் தற்காலத்தில் அமைக்கப்படும் அத்தகைய வடிகால்களின் அகலத்தையும் ஆழத்தையும் ஒப்பிட்டு நோக்கினால் தீர்க்கதரிசனம் மிகு அபிவிருத்தியின் தேவையையும் நிலையையும் உங்களால் உணர முடியும்.  

வடக்கின் நெற்களஞ்சியம் என வர்ணிக்கப்படும் வன்னிப்பெரு நிலப்பரப்பின் இன்றைய   நிலை எம் மத்தியில்  சிக்கலான பல வினாக்களுக்கான விடைகளைத் தேடும் பாரிய பொறுப்பை முன் வைத்திருக்கிறது. சமூகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் ஒன்றாக இணைந்து இயங்கினால் மாத்திரமே அவ்விடைகளுக்கான தேடல்களை எம்மால் ஆரம்பிக்க முடியும்!

கால நிலை மாற்றம் விதித்த சாபத்திலிருந்து இவ்வழகிய தீவை மீட்கும் பாரிய பொறுப்பு எம் ஒவ்வொருவர் கையிலுமே தங்கியுள்ளது. மக்களுடைய வரிப்பணத்திலேயே நாம் உயர் கல்வி வரை இலவசமாகக் கற்கிறோம்.  ஓரிரு வருடங்களேனும் நாம் கற்ற கல்வியை எம் தாய் நாட்டிலேயே பிரயோகித்தால் எதற்கும் சளைக்காத உறுதியான தேசமாக இலங்கையும் மாறும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

Friday, December 10, 2010

மேற்குலகின் பிடிவாதத்தால் மாநாடுகள் தோல்வியடைகின்றன



‘கடந்த 25 வருடங்களுள் என்றுமில்லாத பனிப்பொழிவு’
‘பல ஆண்டுகளின் பின் வான்கதவுகள் திறப்பு’
‘என்று மில்லாத பெருமழை’

இவையெல்லாம் சமீபகாலமாக நாம் காணும் செய்தித் தலைப்புகள் ஆகும். அவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வது கூட இல்லை. ஆனால் அவை எல்லாம் ஏதோ அறிகுறியை வெளிக்காட்டி நிற்பனவாகவே தெரிகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 2007 ஆம் ஆண்டிலேயே விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்வதும் சிறந்த விடயமாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களிலே அதிகரிக்கலாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் தெரியும் புதுவித மாற்றங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தோற்றப்பாடுகள் தானோ என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டன.
மனிதன் இயற்கையைக் கருத்தில் கொள்ளாது, அதனுடன் இயைந்து வாழ முயலாது தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் இயற்கையின் சீற்றங்களாக இருக்கின்றன.
பணமும் அரசியலும் மலிந்துபோய்விட்ட இப்பூமியில் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்கள் வெகுசிலரே.
காலநிலை மாற்றம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அரசியல் தலைவர்களோ அத்தகையதோர் அவசர நிலையைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹாகன் மாநாடு (2009) கிட்டத்தட்ட தோல்வியில் முடிவடைந்த கதையை நாம் அறிந்திருப்போம்.
அம்மாநாட்டிலே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் காலநிலை மாற்றம் பற்றிப் பேசி தீர்மானமொன்றையெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாக உலக நாடுகளின் தலைவர்கள் மாநாடுகளிலே கூடி, புவி வெப்பமடைவது பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் மிக மும்முரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்பேச்சுக்களின் அடிப்படையில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதே யாவரும் அறிய வேண்டிய உண்மை ஆகும்.
புவி வெப்பமடைதலைப் பொறுத்த வரையிலே கியோட்டோ உடன்படிக்கை மிக முக்கியமானதாகும். அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது.
19ம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலே கைத்தொழில் புரட்சி உருவாகியது. பிற்காலங்களில் தோன்றிய சகல தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கும் அக்கைத்தொழில் புரட்சியே வித்திட்டது எனலாம். கைத்தொழில் புரட்சி உருவாக்கிவிட்டிருந்த எதிர்மறையான விளைவாக புவி வெப்பமடைவதைக் குறிப்பிட முடியும்.
அதாவது சுவட்டு எரிபொருட்களின் பாவனை அதிகரித்துச் சென்ற நகரமயமாக்கலும் அபிவிருத்திப் பணிகளும் காடழித்தல் துரித கதியில் நடைபெற வழிவகுத்தன.
விளைவாக வளிமண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்தது. புவிச் சூழலின் வெப்பநிலையும் அதிகரித்தது. புவிச் சூழலைப் பொறுத்தவரையிலே அதன் வெப்பநிலை காலத்துடன் அதிகரித்து வருவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல சமயங்களில் நாம் உணர்ந்தும் இருப்போம்.
மனித நடவடிக்கையால் அதிகளவில் வெளிவிடப்படும் பச்சை இல்ல வாயுக்களான காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரசன் சேர் வாயுக்கள் போன்றனவே புவிச் சூழலை வெப்பமடையச் செய்கின்றன.
இவை சூரிய கதிர்கள் புவி மேற்பரப்பில் பட்டு மீளத்தெறிப்படைந்து செல்வதைத் தடுக்கின்றன. ஆதலால் புவிச் சூழல் வெப்பமடைகிறது.
வாகனங்கள், ஆகாய விமானங்கள், எரிசக்தி நிலையங்கள், தொழிற்சாலைகளிலே சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் வளிமண்டலத்துக்கு காபனீரொட்சைட் வெளிவிடப்படுகிறது.
சூழலில் இருக்கும் காடுகளும் மரங்களும் தான் வளி மண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் விவசாயம், கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கல் போன்ற பல தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டன.
புவிச் சூழலிலே வளிமண்டலத்தில் இயற்கையாக அமைந்த படலமாக ஓசோன் படை காணப்படுகிறது.
சூரியனிலிருந்து வரும் உயர் சக்திமிக்க நச்சுத்தன்மையான புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் தடுப்பதும் இந்த ஓசோன் படையேயாகும்.
குளோரோபுளோரோ காபன் என்ற வாயுவின் வெளியேற்றத்தாலும் ஏனைய சில நைதரசன் சேர் வாயுக்களின் வெளியேற்றத்தாலும் இந்த ஓசோன் படை அரிப்படையத் தொடங்கியது. அதனால் புவி மேற்பரப்பை வந்தடையும் புற ஊதாக் கதிர்களின் சதவீதம் அதிகரித்தது.
புவி மேற்பரப்பு வெப்பமடையத் தொடங்கியது.
ஆய்வாளர்கள் காலங்கடந்த பின்னரே விளைவுகளைக் கண்டுணரத் தொடங்கினர். ஒசோன் படையிலே உருவாகிய ஓட்டைகள் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகக் காரணமாயின என கண்டுபிடித்தனர்.
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வளிமண்டலத்தில் இருந்த காபனீரொட்சைட்டின் அளவு 275 ppm (parts per million)  ஆகும். அது தற்போது 392  ppm  ஆக அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைதலானது பல விளைவுகளை உருவாக்கி உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைச் சீற்றங்களின் அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வரலாறு காணாத, அதிக வெப்பநிலையுடைய ஆண்டாக 2010 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது. நிலைமை விபரீதமாகிக் கொண்டு போவதை உணர்ந்த விஞ்ஞான உலகு, அரசாங்கங்களை எச்சரிக்கவும் தவறவில்லை. காலநிலை மாற்றத்துக்கு தாமும் ஒரு காரணம் என அரசாங்கங்கள் உணர்ந்தன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை நடுநாயகமாக வைத்து செயற்பாடுகளில் ஈடுபட முனைந்தன.
1992 இலே, ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு பிறேசிலின் ரியோ - டி - ஜெனிரோ நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஸினிபிவிவிவி  UNFCCC (United Nations Frame work Convention on Climate Change) என்ற ‘காலநிலை மாற்றத்துக்கான செயற்றிட்டப் பேரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்துக்கான மாநாடு (Conference of Parties – COP)  நடத்தப்பட்டு வருகிறது.
1997ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நடத்தப்பட்ட அத்தகைய மாநாட்டிலே தான் கியோட்டோ உடன்படிக்கையும் எட்டப்பட்டது.
கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் புவிச் சூழலில் வளிமண்டல காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பதற்குக் காரணமான நாடுகள் கியோட்டோ மாநாட்டில் பட்டியலிடப்பட்டன. அவை 1991 இலே காபனீரொட்சைட் வாயு உட்பட்ட நான்கு பச்சை இல்ல வாயுக்களை எந்தளவு வெளியேற்றினவோ அந்த அளவை 2012 ஆம் ஆண்டளவில் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென்பதே அந்த கியோட்டோ உடன்படிக்கை யாகும். இந்த 5.2 சதவீதமென்பது ஒரு கூட்டான அளவாகும். ஒவ்வொரு தனித்தனி நாட்டையும் கருதும்போது குறைக்க வேண்டிய சதவீதம் மாறுபடும்.
வளிமண்டலத்தை அதிகளவில் மாசுபடுத்தும் நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. 5.2% என்ற கூட்டு அளவின் அடிப்படையில் தனது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை அமெரிக்கா 7 சதவீதத்தால் குறைக்க வேண்டி இருந்தது.
கியோட்டோ உடன்படிக்கையைப் பொறுத்த வரையிலே, இந்தியாவும் சீனாவும் தமது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முன்வரவில்லை. அதற்கு அவை முன்வைத்த காரணம் தாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பதாகும்.
மேற்குலக நாடுகளில் உருவான கைத்தொழில் புரட்சியே வளிமண்டலத்தின் பச்சை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணமாகியது. மேற்குலக நாடுகளின் செயற்பாட்டுக்கு மூன்றாம் உலக நாடுகளும் பலிக்கடாவாயின என்பது தான் வெளிப்படை உண்மையாகும்.
ஆனால் கியோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்ட போது இணைந்த அமெரிக்கா பின்னர் அதிலிருந்து விலகிவிட்டது.
நிலைமை கையை மீறுவதை உணர்ந்த ஐ. நாவின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 1990 ஆம் ஆண்டின் பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012 அளவிலே 80 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென 2007இல் அறிவித்தது.
இம்முடிவு தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக 2007 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாடு இந்தோனேசியாவின் பாலித்தீவில் கூட்டப்பட்டது.
நடைமுறையில் இருந்து வரும் கியோட்டோ உடன்படிக்கையின் கால இலக்கை நீடிக்கவும் உறுப்புரிமையிலிருந்து விலகிய அமெரிக்காவை இணைத்து நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அங்கு உடன்பாடுகள் பல எட்டப்பட்டன.
அதற்காகத் தயார் செய்யப்பட்ட வழிகாட்டி பாலி வழிகாட்டி எனப்பட்டது. அவ்வழிகாட்டியின் அடிப்படையிலே 2009ஆம் ஆண்டுக்கான கோப்பன்ஹேகன் மாநாடும் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பிடிவாதம் கோபன்ஹேகன் மாநாட்டைத் தோல்வியடையச் செய்தது.
ஆயினும் 2010 இலே, பேச்சுவார்த்தைகள் தொடரப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும் என அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல், ஜூன், ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களிலே கூட்டம் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது. ஆனால் முடிவுகள் எவையுமே எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
இத்தகையதோர் நிலையிலே இவ்வாண்டுக்கான ஐ.நாவின் 16வது காலநிலை மாற்ற மாநாடு கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி மெக்சிக்கோவின் கான்குன் நகரில் ஆரம்பமாகியுள்ளது. இன்று அதன் இறுதி நாளாகும்.
கோபன்ஹேகன் மாநாட்டிலே தவறவிடப்பட்ட உடன்பாடுகள் கான்குன் மாநாட்டிலே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொனிப் பொருட்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவு தான் என்ன? என்பதை முழு உலகுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் புதிய தலைவரான ஹேர்மன் வன்ரொம்புய் ‘இம்மாநாடும் கோபன்ஹேகன் மாநாட்டைப் போல ஒரு அனர்த்தமாகவே இருக்கும்’ எனத் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர் கோபன்ஹேகன் மாநாட்டை மிக மோசமாக விமர்சித்திருந்தமையையும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மேற்குலக நாடுகளின் மனப்பாங்கு எத்தகையது என்பதை இந்த விக்கிலீக்ஸ் தகவல் தெளிவாக எடுத்தியம்புகிறது.
தன்னை விஞ்சியவர் எவருமில்லையென்ற அகம்பாவம் மனிதனை மற்ற உயிர்கள் பற்றிச் சிந்திக்க விடுவதில்லை. இயற்கைச் சமநிலையைச் சீர்குலைத்து அவன் அடையும் முன்னேற்றங்கள் அவனுக்கே உலை வைக்கும் போது கூட அவன் தன் அகந்தையை ஒழிப்பானா என்பது சந்தேகமே! எப்படி இன்னும் புதிய முன்னேற்றங்களைக் கண்டு அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது பற்றி மட்டும் தான் சிந்திப்பான்.
இந்த இயல்பு தான் இயற்கையுடன் இயைந்திருந்த மனிதனை விலக்கி இன்று எதிர்த்திசையிலே பயணிக்கச் செய்துவிட்டது.
‘நாம் மீண்டும் ஆதி மனிதர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும்’ என்ற ஒஷோவின் வரிகள் தான் நிதர்சனமாகத் தெரிகின்றன. அவை நடந்தால் தான் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சாபத்துக்கான விமோசனமும் கிடைக்கும்.

Friday, November 13, 2009

பு+மித்தாய்க்கு இழைக்கும் கொடுமைகள் இறுதியில் பிள்ளைகளுக்கே வந்துசேரும்


காலநிலை மாற்றமெனப் படுவது காலத்துடன் புவி அல்லது அதன் பிராந்தியங்களில் ஏற்படும் சீதோ ஷண மாற்றங்களைக் குறிக்கும். வளி மண்டலம் தனது சராசரி நிலையிலி ருந்து தசாப்தங்களிலோ அல்லது மில் லியன் வருடங்களிலோ அடையும் மாற்றத்தைக் காலநிலை மாற்றமெனலாம்.

காலநிலை மாற்றமானது புவியின் உள்ளக மாற்றங்கள், சூரிய ஒளிச் செறிவில் ஏற்படும் வேறுபாடு போன்ற புற விசைகள் மற்றும் சமீப நூற்றாண்டுகளின் மனித நடவடிக்கைகள் போன்ற காரணங்களால் ஏற்படலாம். இது இன்று பலராலும் பேசப்படும் ஒரு சொற்றொடராகவே காணப்படுகிறது.

புவி வெப்பமடைதல், பனிப் பாறை உருகுதல், கடல் மட்டம் உயருதல், வெள்ளம், வரட்சி, புதிய நேய்க்களெனப் பலரும் கதைக்கக் கேட்டிருப்போம். நாமும் கதைத்திரு ப்போம். ஆனால் அடிப்படையில் என்ன நிகழ்கிறது என்பதை அறிந்த வர்கள் அப்பலருள் மிகச் சிலரேயாவர்.

எமது அன்றாட பல்வேறு செயற் பாடுகள் காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிப்பதில் நேரடியாகப் பங்களிக்கின்றன என்பதை எம்மில் பலர் அறிவதில்லை. ஒவ்வொரு தடவையும் தொலைக்காட்சி பார்க்கும் போதும் வாகனங்களில் பயணிக்கும் போதும் நாம் கால நிலை மாற்றத்தின் பங்காளிகளாக மாறுகிறோம்.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து காலநிலை மாற்றமானது ஒரு மெது வான செயற்பாடாக நடைபெற்றுக் கொண்டுதானிருக்கிறது.

மிக மிக ஆரம்பத்தில் 10 பாகை செல்சியஸ் ஆகவிருந்த புவியின் வெப்பநிலை, காலப் போக்கில் உயிர்கள் நிலைத்து வாழக்கூடிய வகையில் மாறியது கூட இக்காலநிலை மாற்றத்தால்தா னெனக் கூறலாம்.

ஆனால் கடந்த இரு நூற்றாண்டுகளாக இக் கால நிலை துரித கதியில் மாற்றமடைந்து வருவதுடன் சாதாரண மனிதனின் அவதானிப்பால் உணரக்கூடியதாகவு மிருக்கிறது. இலங்கையின் கரை யோரப் பகுதிகளில் தொடர்ந்து பய ணங்களை மேற்கொள்பவர்கள், காலத்துடன் கடலரிப்பின் அதிகரி ப்பை நன்கு உணர்ந்திருப்பார்கள்.

பருவ காலம் கடந்த மற்றும் சீரற்ற மழை வீழ்ச்சியையும் எதிர்பாராத வரட்சியையும் எதிர்நோக்குகிறோம். ஆனால் இவையெல்லாம் எதனால் இடம்பெறுகின்றனவெனச் சிந்திக்கத் தவறிவிடுகிறோம்.

வேகமாகப் பெருகி வரும் சனத்தொகை மனிதனின் தேவைகளை அதிகரிக்கிறது. அத்தேவைகளின் அதிகரிப்புக்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கைத்தொழில், மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. அவை காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் அடிப்படைக் காரணிகளாகின்றன.

காலநிலை மாற்றத்தைத் தோற்றுவிக்கும் பிரதான காரணியாகப் பூகோளம் வெப்பமயமாதல் கருதப்படுகின்றது. இயற்கை மற்றும் மனித செயற்பாடுகள் பூகோளம் வெப்பமயமாதலைத் தோற்றுவிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கு வழிவகுக்கின்றன.

வளி மண்டலத்திலுள்ள பச்சை இல்ல வாயுக்களே பூகோளம் வெப்பமயமாதலைத் தோற்றுவிக்கின்றன. அடிப்படையில் இப்பச்சை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தின் மீது ஒரு படையாகச் செயற்பட்டு பூகோளத்தின் வெப்ப நிலையை உயிர்கள் நிலைத்திருக்கக்கூடிய வகையில் சீராகப் பேணுகின்றன.

காபனீரொட்சைட், மெதேன், நைதரசன்ரொட்சைட் போன்ற வாயுக்களும் பச்சை இல்ல வாயுக்களுள் அடங்குகின்றன. கடந்த இரு நூற்றாண்டுகளில் மிக வேகமாக வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் தொழில் நுட்ப முன்னேற்றம் இவ்வாயுக்கள் அதிகளவில் வெளிவிடப்பட வழி வகுத்தமையால், வளிமண்டலத்தில் இவ்வாயுக்களின் செறிவு அதிகரிக்கப்பட்டு புவி வெப்பமயமாதல் தோற்றுவிக்கப்படுகிறது.

பச்சை இல்ல வாயுக்களை வெளிவிடும் முக்கிய செயற்பாடாகப் பெற்றோலியப் பாவனை இருந்து வருகிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் 1996 ஆம் ஆண்டு 32 சதவீதமாகவிருந்த பெற்றோலியப் பாவனை, 2005 ஆம் ஆண்டளவில் 45 சதவீதமாக உயர்ந்திருந்தது.

இப்பாவனையில் போக்குவரத்து 50 சதவீதத்தையும் சக்தி மூலமாகப் பயன்படுத்துதல் 25 சதவீதத்தையும் ஏனைய தொழிற்சாலை மற்றும் வீட்டுத் தேவைகள் மிகுதி 25 சதவீதத்தையும் கொண்டிருக்கும்.

பெற்றோலிய எரிபொருள் பாவனையால் உலகளாவிய ரீதியில் வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட் மற்றும் மெதேன் வாயுக்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

இவை தவிர தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள பச்சை இல்ல வாயுக்களை வெளியேற்றும் குளிர்சாதனப் பெட்டி போன்ற உபகரணங்களின் பாவனையும் காடுகள் போன்ற இயற்கை வளங்களின் அழிப்பும் பூகோளம் வெப்பமயமாதலில் செல்வாக்குச் செலுத்துகின்றன.

பூகோளம் வெப்பமடைவதால், துருவப் பகுதியிலுள்ள பனிப்பாறைகள் உருகத் தொடங்கும். வெப்பத்தால் கடல் மற்றும் சமுத்திர நீர் விரிவடையத் தொடங்கும். உயரும் கடல் மட்டத்தால் எதிர்காலத்தில் மாலைதீவுகள் போன்ற சிறிய தீவுகள் கடலினுள் அமிழ்ந்து போகலாம்.

அத்துடன் நன்னீர் வளங்களுள் உவர் நீர் கலக்கப்படும் சாத்தியம் அதிகரிப்பதால் நன்னீர்ப் பற்றாக்குறை ஏற்படும். நீர் ஆவியாதல் அதிகரிக்கும். உலகின் நீர்ச் சமநிலை குலைவடையும்.

சூழலின் வெப்பநிலை அதிகரிப்பதால் சூழல் மாசடைதல் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். இன்னும் சில தசாப்தங்களில் பூகோளத்தின் சராசரி வெப்பநிலையானது 1.40வி – 5.40வி யால் அதிகரிக்குமெனவும் 2100 ஆம் ஆண்டளவில் கடல் மட்டமானது 9 ணீசீ – 88 ணீசீ வரை உயரும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

இவை யாவும் காலநிலை மாற்றத்தில் பெருஞ்செல்வாக்குச் செலுத்துகின்றன. ஒரு நாட்டின் தலா வருமானத்துடன் அந்நாடு வெளியேற்றும் பச்சை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்துச் செல்கிறது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

இக்காலநிலை மாற்றத்தின் அவதானிக்கப்படக் கூடிய விளைவுகளாகச் சீரற்ற மழைவீழ்ச்சி, பருவ காலங்களின் கால அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் புயல் மற்றும் இயற்கை அழிவுகள், வெள்ளப் பெருக்கு, வரட்சி, மண் சரிவுகள், காணாமற் போகும் கடற்கரையோரங்கள், இடம்பெயரும் மீன் வளங்கள், உவர் நீராகும் நன்னீர் வளங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

காலநிலை மாற்றமானது உயர் அகலாங்குகளில் உள்ள நாடுகளின் காலநிலையைப் பெருமளவில் பாதிக் குமென நம்பப்படுகிறது.

குறித்த காலங்களில் மட்டுமே பூக்கும் தாவ ரங்களின் பூக்கும் காலங்கள் மாறுபடு வதுடன் பருவ காலத்திற் கேற்ப இடம்பெயரும் உயிரினங்க ளின் இடப்பெயர்வும், நிலைப்பும் அச்சுறுத் தலுக்குள்ளாக்கப்படும்.

அத்தியாவசிய மான இயற்கை வளங்கள் மேலும் அழிவடையும். விவசாய முறைமை கள் குலைவ டையும். பனிக்கரடிகள், பென்குயி ன்கள், கடல் வாழுயிரினங் கள், பவளப் பாறைகள் மட்டுமன்றிப் பல உயிரினங்களின் வாழ்வு அச்சுறு த்த லுக்குள்ளாகும். உயிரினங்களுக் கிடையிலான சமநிலை குலைக்கப் படும்.

புராதன நினைவுச் சின்னங்கள் அழிவுக்குள்ளாகும். நீர்ப்பற்றாக்குறை அதிகரிக்கும். முடிவில் உயிர்களின் உயிர் வாழும் உரிமை கேள்விக் குறியாக்கப்படுமென்பதே நிதர்சன மான உண்மை.

நலிவாக்கப்பட்ட வளிமண்டல அமுக்க மாற்றங்களால் உலர்வலயப் பிரதேசங்கள் அதிக மழை வீச்சியைப் பெறுவதுடன் ஈரவலயப் பிரதேசங்கள் அதிகளவில் வரட்சியடைதலே எல்நினோக்கால நிலை எனப்படும். காலநிலை மாற்றம் எல்நினோக் காலநிலைக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்குமெனலாம்.

இவை தவிரப் பல நோய்கள் உரு வாவதற்கான அடிப்படைக் காரணி யாகவும் இக்காலநிலை மாற்றம் அமைகிறது.

பொதுமக்களின் சுகாதார மானது பாதுகாப்பான குடிநீர், போதுமான அளவு உணவு, பாதுகா ப்பான புகலிடம், சிறந்த சமூக நிலைமைகள் ஆகிய காரணிகளி லேயே தங்கியுள்ளது. காலநிலை மாற்றம் இக்காரணிகள் யாவற்றி லுமே பாதிப்பை ஏற்படுத்திப் பொது மக்களின் சுகாதார நிலைமைகளை யும் கேள்விக்குறியாக்குகிறது.

குறிப்பாகப் பருவ கால அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நுளம்பு போன்ற காவிகளால் பரப்பப்படும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் காலம் அதிகரிக்கப்படும். அதே நேரம் சீரற்ற மழை வீழ்ச்சி, காவிகளின் இனப் பெருக்கத்துக்கு வழிவகுப்பதுடன் நோய் பரவுதலையும் அதிகரிக்கும்.

மாசடையும் நன்னீர் வளங்களால் வயிற்றோட்டம், கொலரா போன்ற நோய்களின் அச்சுறுத்தல்களும் அதிகரிக்கும். இவை தவிர, அதிகரித்து வரும் சுவட்டு எரிபொருள் பாவனையால் சுவாச நோய்களும் அதிகரிக்கும்.

வெப்ப அலைகளால் தோல், சுவாச மற்றும் இருதய நோய்களும், குறைவடைந்துவரும் உணவு உற்பத்தியால் போசாக்கின்மையும் ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

எல்லாவற்றிக்கும் மேலாகக் காலநிலை மாற்றம் ஏற்படுத்தப் போகும் பொருளாதார ரீதியிலான பாதிப்புக்கள் பற்றியும் நாம் சிந்திக்கவேண்டிய நிலையில் உள்ளோம். நாடளாவிய ரீதியில் பஞ்சம், பட்டினி அதிகரிக்கும். அகதிகளின் சுமை அதிகரிக்கும்.

எஞ்சியிருக்கும் இயற்கை வளங்களுக்கான போட்டி அதிகரிக்கும். முகாமைத்துவப்படுத்தப்பட முடியாத அளவில் குடியகல்வு இடம்பெறும். மாசடையும் நன்னீர் வளங்கள் விவசாய உற்பத்தி மற்றும் கால்நடை வளர்ப்பைப் பாதிக்கும். இது நாடொன்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

காப்புறுதி நிறுவனங்கள் உட்படப் பல வர்த்தக நிறுவனங்கள் வீழ்ச்சியடையும் நிலைக்குத் தள்ளப்படும். விண்வெளி ஆராய்ச்சிகளும் பயணங்களும் பிற்போடப்படலாம். தொழில் நுட்ப முன்னேற்றங்களும் ஆராய்ச்சிகளும் தடைப்படலாம். இன்னொரு பொருளாதார நெருக்கடிக்கும் உலகம் மீண்டும் தள்ளப்படும் காலம் வெகுதொலைவிலில்லை.

அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், காலநிலை மாற்றத்துக்கு இலங்கை சிறியளவிலான பங்களிப்பையே செலுத்தியிருக்கிற போதிலும் பாரிய விளைவுகளை எதிர்நோக்கும் நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் இலங்கையின் உலர் வலயப் பிரதேசம் மேலும் வரட்சியை எதிர்நோக்குமெனவும் ஈரவலயப் பிரதேசம் இன்னும் அதிக மழை வீழ்ச்சியைப் பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது சிறிதளவிலான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கே பாதிப்புக்குள்ளாகும் நெல், தேயிலை, மற்றும் இறப்பர் போன்ற பயிர்ச்செய்கைகள் பாதிப்புக்குள்ளாகும். நுவரெலியா மாவட்டத்தில் உருளைக் கிழங்கு விளைவிக்கப்பட முடியாத காலம் கூட ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கடல் நீர் நன்னீருடன் கலப்பதால் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற துறைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதுடன், குடிநீர்ப் பிரச்சினையும் உருவாகும்.

கடற்கரையோரக் குடியிருப்பாளர் கள் உள்நோக்கி இடம்பெயரத் தலைப்படுவதால் விவசாய நிலங்கள் அபிவிருத்தித் தேவைகளுக்குப் பாவி க்கப்படும் சாத்தியம் உள்ளது. மீன்பி டித் தொழிலுடன் சுற்றுலாத்துறையும் பாதிப்புக்குள்ளாகும்.

இவை தவிர நுளம்புகள், ஈக்கள், கரப்பொத்தான் களின் பரம்பல் அதிகரிக்கப்படுவது டன் டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் அச்சுறுத்தல்களும் களைத் தாவரங்களின் பரவுதலும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப் படுகிறது.

எம்மால் காலநிலை மாற்றத்தைக் குறுகிய கால அடிப்படையில் தடுக்க முடியாவிடிலும், அயன மண்டல சூழல் தொகுதி உயிர் வாழ எம்மா லான உதவிகளைச் செய்ய முடியும். அதற்கு நீர்வலு, காற்றின் வலு, சூரிய சக்தி போன்ற இயற்கை வள ங்களிலிருந்தும் தொழிற்சாலை மற் றும் வீடுகளிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுகளிலிருந்தும் வினைத் திறன் மிக்க வகையில் சக்தியைப் பெற வழிசெய்யப்பட வேண்டும்.

பெரிய தொழிற்சாலைகள் தமக்குத் தேவையான சக்தியைப் பெறத் தாமே சக்தி மூலங்களை வைத்திருக்க வேண்டும். இயற்கை வளங்களின் மிகை பாவனை குறைக்கப்பட வேண்டும். சிறந்த கழிவு முகாமைத்துவத்துடன் பொருட்களின் மீள்பாவனையும் மீள் சுழற்சியும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்நோக்கக் கூடிய வகையில் புதிய முறைமைகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். தேசிய ரீதியில் வானியல், நீரியல், புவியி யல், கடல் வளம் மற்றும் சுகாதாரம் போன்ற சேவைத் துறைகளுக்கி டையே சிறந்த ஒத்துழைப்புப் பேணப்பட வேண்டும்.

கொள்கைகளும் சட்டங்களும் அமுலுக்கு வரவேண்டும். எனினும் பொதுமக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இளைஞர் கழகங்கள் போன்ற அமைப்புகளினூடு கிராமிய மட்டத்திலிருந்து மக்கள் மத்தியில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டியதுடன் ஏற்படப் போகும் விளைவுகளை எதிர்கொள்ளவும் பொதுமக்கள் தயார் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.

காலநிலை மாற்றம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் பல மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற காலநிலை மாற்றத்திற்கான மூன்றாவது உலக மகாநாடும், அடுத்த மாதம் நோர்வேயில் நடைபெறவிருக்கும் மாநாடும் இவற்றிற்குச் சில உதாரணங்களாகும்.

இவை தவிரக் காலநிலை மாற்றம் தொடர்பாக ஆராயவும், நடவடிக்கை களை மேற்கொள்ளவும் பல அரச சார்பற்ற நிறுவனங்களும், சுயாதீனக் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

எமது பூமி அன்னையை இக்காலநிலை மாற்றம் ‘மெல்லப்புவி இனிச்சாகும்’ எனும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. நாம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கான இயற்கை வளங்களை அழித்து வருகிறோம். சிறந்த பிரஜையாக, எம் எதிர்காலச் சந்ததியினருக்கு நல்வழி காட்டும் முன்னோராக நாம் செயற்பட வேண்டும்.

எளிமையாக வாழப்பழக வேண்டும். எம்மை ஆடம்பர வாழ்வியலுக்கு இட்டுச் செல்லும் மனப்பாங்கை மாற்ற வேண்டும். நாம் வாழும் சூழலின் காப்பாளரும் நாமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மின் குமிழ்கள், மின் விசிறிகள், ஏனைய மின் உபகரணங்கள், கணினி போன்றவற்றின் ஆளிகளைத் தேவையற்ற நேரங்களில் திறந்து வைத்தல், நீரைச் சேமிக்கும் வழிவகைகளை இயன்றவரை கையாளல், கைத்தொலைபேசி மின்னேற்றப்பட்டவுடனேயே மின் தொடர்பைத் துண்டித்தல், தேவையற்ற வாகனப் பிரயாணங்களைத் தவிர்த்தல், வீட்டிலுள்ள மின்னுபகரணங்களின் எண்ணிக்கையைக் குறைத்தல், மரங்களை நாட்டுதல், பிளாஸ்டிக் பைகளின் பாவனையைத் தவிர்த்தல், ஒரு பக்கம் மட்டும் அச்சிடப்பட்ட தாளை மீளப் பாவித்தல், சூரிய கலங்களின் பயன்பாட்டை அதிகரித்தல், கழிவுகளின் பெறுமதியை உணர்ந்து அவற்றை மீள் சுழற்சி செய்தல், சக்தியைச் சேமிக்கும் மின் குமிழ்களைப் பாவித்தல், நாம் சார்ந்துள்ள சமூகத்துக்கும் காலநிலை மாற்றம் தொடர்பான விடயங்கள் பற்றி அறிவூட்டல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடலாம்.

கி.பி. 1851 ஆம் ஆண்டு செவ் விந்தியருக்குச் சொந்தமான இருபது இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி செவ்விந்தியரிடம் விலைக்குக் கேட்ட போது, அவர்களின் தலைவனான சியட்டில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபல்யமானது. அக்கடிதத்திலிருந்து சில வரிகள் வருமாறு.

‘விலங்குகள் இல்லையென்றால் மனிதனேது? விலங்குகளெல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டால் ஆன்மாவை விட்டுச்சென்ற கூடு போல மனித னும் இறந்துவிடுவான். பூமி எங்கள் தாயென்று நாங்கள் எங்கள் குழந்தை களுக்குச் சொல்லிக் கொடுத்தோம். அதை உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள்.

பூமிக்கு எதுவெல்லாம் நேரிடுமோ, அது அதன் பிள்ளைகளுக்கும் நேரிடும். வாழ்க்கை என்ற வலையை மனிதன் பின்னவில்லை. அவன் அதிலோர் இழை மட்டுமே. அந்த வலைக்கு அவன் எத்தனை கேடுகள் செய்தா லும் அவற்றையெல்லாம் தனக்கே செய்து கொண்டவனாகிறான்.

நீங்கள் படுத்துறங்கும் நிலத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஓரிரவில் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சுத்திணறி நீங்கள் இறந்து போகலாம். நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக வைத்துக் கொள்வோம்.

உங்கள் நிலத்தை நாங்கள் நேசித்தது போலவே நீங்களும் நேசியுங்கள். உறுதியோடும் வலிமையோடு, பூரண விருப்பத் தோடும் உங்கள் குழந்தைகளுக்காக இந்த நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள்’

படிப்பறிவற்ற அப்பழங்குடியினர் அன்று உணர்ந்து கூறியதை, ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டுகளின் பின்னரே எம்மால் உணர முடிந்திருக்கிறது. இது இன்று நாகரிகமான சமுதாயமென மார்தட்டும் மனித இனத்தின் சாபக்கேடன்றி வேறென்ன?
-சாரதா மனோகரன் (source: www.thinakaran.lk)