Showing posts with label இலங்கைத் தமிழர். Show all posts
Showing posts with label இலங்கைத் தமிழர். Show all posts

Wednesday, August 17, 2011

இக்கரைக்கு அக்கரை பச்சை?

எம்மவருக்கு இலண்டன் ஒரு சொர்க்கபுரி. என்ர பிள்ளை இலண்டனிலென்றுபெருமிதமாய்ச் சொல்லும் தாய்மார் பலரைக் கண்டிருப்போம். தன் பிள்ளை அங்கு வீதியைத் துப்புரவு செய்கிறானா? ஹோட்டலில் பாத்திரம் கழுவுகிறானா? படிக்கச் சென்றவன் படிப்பை முடித்து அதனுடன் தொடர்புடைய தொழிலைத் தான் மேற்கொள்கிறானா என்பது பற்றியெல்லாம் இங்கிருக்கும் பெற்றோர் கவலைப்படுபவர்களாகத் தெரியவில்லை. தலையை அடமானம் வைத்தேனும் ஒரு சிறிய கல்லூரியிலாவது அனுமதியைப் பெற்று தம் பிள்ளையை இலண்டனுக்கு அனுப்பிவிடுவதில் அவர்கள் வல்லவர்களாகத் தான் இருக்கிறார்கள். காலம் அவர்களை அப்படி மாற்றிவிட்டிருக்கிறது.
 
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது இவர்கள் விடயத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். இங்கு பாதுகாப்பில்லை; உயிருக்கு அச்சுறுத்தல் என்று எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியில் கடல் கடந்து சென்றவர்கள் பலர். எந்த நாடு தமக்கு பாதுகாப்பாக இருக்கும் என நம்பி அகதி அந்தஸ்து கோரி தம் வாழ்வை நிலைப்படுத்திக் கொண்டார்களோ, இன்று அதே நாட்டிலே அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், இலங்கையில் வசிக்கும் குடும்பத்தவர்களுக்கோ தம் உறவுகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டிருப்பது கூடத் தெரியவில்லை என்பது தான் வெளிப்படை உண்மை.

கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்த கலவரமும் தொடர் கொள்ளை, தீவைப்புச் சம்பவங்களும் பிரித்தானியாவையே உலுக்கிப்போட்டிருந்தன. கடந்த 4 ஆம் திகதி வடக்கு இலண்டனின் டொட்டன் ஹாம் பகுதியில் மார்க் டக்கன் என்ற 29 வயது இளைஞர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த இளைஞர் ஸ்தலத்திலேயேபலியானார். அதனால் ஆத்திரமடைந்த மக்கள் கடந்த 6 ஆம் திகதி டொட்டன் ஹாம் பிரதான வீதியில் உள்ள பொலிஸ் நிலையம் முன்பாக நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாகிப் பின் கலவரமாகியது. வடக்கு இலண்டனில் தொடங்கிய கலவரம் அங்கேயே முடிந்து போகவில்லை. மத்திய இலண்டன், கிழக்கு இலண்டன், தெற்கு இலண்டன் மட்டுமன்றி பிரித்தானியாவின் முக்கிய வர்த்தக நகரங்களுக்கும் பரவியது. முகமூடிகளை அணிந்த இளைஞர் கூட்டம் களத்தில் இறங்கியது. கடைகள் சூறையாடப்பட்டன. கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது. ஏ.டி.எம் இயந்திரங்கள், வணிக வளாகங்கள் உட்பட அசையாச்சொத்துக்கள் பல அடித்து நொறுக்கப்பட்டன. பொலிஸ் வாகனங்களும் பொலிஸ் நிலையங்களும் கூடத் தப்பவில்லை. எல்லா இடங்களிலும் பதற்றம் நிலவியது. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு எச்சரிக்கை செய்யப்பட்டனர்.
விடுமுறையை கழிக்கவென இத்தாலி சென்றிருந்த இங்கிலாந்து பிரதமர் கமரூன் உடனடியாக நாடு திரும்பினார். பாராளுமன்றை அவசரமாகக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பொலிசாரின் விடுமுறைகள் யாவும் இரத்துச்செய்யப்பட்டன. நான்காம் நாள் இரவு 16 ஆயிரம் பொலிசார் வீதிகளில் இறக்கப்பட்டனர். இலண்டனின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆயினும்இ ஏனைய நகரங்களில் பதற்ற நிலைமை தொடர்ந்த வண்ணமே இருந்தது.

சில கொள்ளைக்காரர்கள் பொது மக்கள் சிலரின் உடைகளைக் கழற்றச்சொல்லி அவற்றையும் பணப்பை, அலை பேசி உட்பட்ட பொருட்களையும் கூட கொள்ளையடித்துச் சென்றனர். மக்களைக் காயங்களுக்குள்ளாக்கினர்.

இங்கு கொள்ளை என்று குறிப்பிடும் போது ஒருவரே அதிகளவிலான பொருட்களைக் கொள்ளையடித்தார் என்று அர்த்தப்படாது. சிறு துளி பெரு வெள்ளம் என்பார்களே.. அது போல பெரும்பாலான கொள்ளைக்காரர் ஒவ்வொருவரும் குறைந்தளவிலான பொருட்களையே கொள்ளையடித்துச் சென்றனர். ஆனால் கூட்டாகக் கருதும் போது ஒவ்வொரு சம்பவத்தையும் பெருங்கொள்ளைச்சம்பவமாகக் கருதலாம். கொள்ளையடித்தவர்களுள் வெள்ளை, கறுப்பு என்ற இன பேதமோ வயது வேறுபாடோ வேறு எந்த வித பாகுபாடுகளோ காணப்படவில்லை. 11 வயதுச் சிறுவர் முதல் பாடசாலை ஆசிரியர், அமைசரின் பிள்ளைக்ள்  தொட்டு தபால் உத்தியோகத்தர் , பிரித்தானியாவின் ஒலிம்பிக் தூதர், இலட்சாதிபதியின் மகள் வரை சகல தரப்பினரும் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நிலைமையானது இக்கலவரம் தொடர்பாக பல்வேறு கோணங்களிலும் சிந்திக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.
அத்துடன் இதுவரை 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒருவர் காயம் காரணமாக உயிரிழந்தார். மற்ற மூவரும் பாகிஸ்தானியர்கள். அவர்கள் காரினால் வேண்டுமென்றே இடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். ஏறத்தாழ 1500க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுள் 11 வயதுச் சிறார்களும் அடக்கம் என்ப¬¬து தான் கவலைக்குரிய விடயமாகும்.

தொடரும் பதற்ற நிலைமையை அடுத்து தமது நகரின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் முயற்சியில் பொதுமக்கள் பொலிசாருடன் கை கோர்த்திருக்கிறார்கள். சீக்கியர்களும் முஸ்லிகளும் தமது வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் காவல் காக்கிறார்கள். தன்னார்வத்தொண்டர்கள் தத்தமது நகரைத் துப்புரவு செய்து பழைய நிலைமைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் அல்லவா? கொள்ளையர்களின் ஆதிக்கம் ஓய்ந்து நீதியின் ஆதிக்கம் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. வீதிகளெங்கும் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராக்களில் பதியப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் கொள்ளையர்கள் இனங்காணப்பட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்றிலே ஆஜர் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் கொள்ளையடித்த பொருட்களும் மீட்கப்பட்டு வருகின்றன. பலருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இக்கலவரத்தை அடக்குவதில் பொலிசார் நடந்து கொண்ட விதம் தொடர்பாகப் பல சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆரம்ப கட்டத்தில் கொள்ளைகள் நடக்கும் போது பொலிசார் பார்வையாளர்களாகவே இருந்திருக்கின்றனர். கொள்ளையரின் முகமூடிகளை அகற்றக் கூட பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. இந்த கலவரம் பொலிசார் எதிர்பார்த்திராத ஒன்றாக இருந்ததால் அது அவர்களுக்குப் பெரும் சவாலாக அமைந்திருந்தது. இக்கலவரம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடத்தப்பட்டது. அவ்விவாதத்தில் கலகத்தை அடக்குவதற்கு பொலிசார் பாவித்த உத்திகள் பெரியளவில் பயனளிக்கவில்லை என்பதை கமரூனும் ஒத்துக்கொண்டிருந்தார். அத்துடன் நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் பழைய நிலையைத் தோற்றுவிப்பதற்காகப் பல உறுதி மொழிகளையும் வழங்கியிருந்தார்.

பிரித்தானியா தொடர்பில் உலக நாடுகள் மத்தியிலே நல்லபிப்பிராயத்தைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியம் ஒன்று அவர்களுக்கு இருக்கிறது. ஏனெனில் பிரித்தானியாவின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக உலக நாடுகள் மத்தியில் அவ நம்பிக்கை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அந்த நாடு மிகவும் அவதானமாக உள்ளது.

 

2012 ஒலிம்பிக் போட்டிகள் இலண்டன் மாநகரிலே நடக்கவிருக்கின்றன. தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமை காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் பற்றி பலரும் சந்தேகங்களை வெளியிட்டிருக்கின்றனர். போட்டியின் பாதுகாப்பு நிலைமைகளும் கேள்விக்குறியாகியுள்ளன. இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சர்வதேச ஒலிம்பிக் குழுவின் பேச்சாளர் பிரித்தானியா மீது தாம் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார். அத்துடன் ஒலிம்பிக் போட்டிகளின் போது பாதுகாப்புக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார். இதேவேளை இந்தக் கலவரங்கள் 2012 ஒலிம்பிக் போட்டிகளை ஒரு போதும் பாதிக்காது என பிரித்தானிய அரசாங்கம் உறுதி கூறியுள்ளது.

அதே வேளை அடுத்தவருடம் எலிசபெத் மகாராணியின் வைர விழாக் கொண்டாட்டங்களும் நடைபெறவிருக்கின்றன. இக்கலவரங்கள் அக்கொண்டாட்டங்களைக் கெடுக்கும் முயற்சியாகவும் இருக்கலாமெனப் பலர் சந்தேகிக்கின்றனர்.

பிரித்தானியாவில் இனமுரண்பாடுகளால் கலகம் ஏற்படுவது இதுவே முதற்தடவையல்ல.அத்துடன் இது ஒரு குற்றவாளியான மார்க் டக்கன் கொலை செய்யப்பட்டதற்கான எதிர்ப்பலையாகவும் தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகம் பொருளாதார ரீதியில் மிகக் கீழ்நிலையில் உள்ள சமூகம் தனது எதிர்ப்பை ஒருவகையில் வெளிப்படுத்த முயன்றுள்ளது. இவை அவ்விளைஞர்களை வேலையற்றவர்களாக மாற்றி குற்றச்செயல்களை நோக்கித் தள்ளுகின்றது. தற்போதைய கலகங்கள் திட்டமிட்ட முறையில் களவு கொள்ளைக்கும் பயன்படுத்தப்படுகிறது. கலகக் காரர்களுள் இனபேதம் காணப்பட்டதாகத் தெரியவில்லை.

பொருளாதார நிலையில் மிகவும் கீழ்நிலையில் உள்ள மக்கள் அதிகம் வாழும் பகுதிகள் இவ்வாறான கலகங்கள் இன்னும் அதிக பாதிப்பையே ஏற்படுத்தி விடுகின்றன. இப்பகுதிகளில் புதிய பொருளாதார முயற்சிகள் மேற்கொள்வது மேலும் கடினமாகும். இது வேலைவாய்ப்பின்மைகளை அதிகரிக்கும்.

அத்துடன் பிரித்தானிய அரசு பல்வேறு பொதுத்துறைசார் விடயங்களிலும் நிதிக்குறைப்பைச் செய்துள்ளது. இந்நிலையில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் அப்பகுதி மக்களுக்கு நீண்டகால அசௌகரியத்தை ஏற்படுத்த வல்லவை எனவும் அஞ்சப்படுகிறது.

அத்துடன் பிரித்தானியா ஒரு பல்லின கலாசார நாடாகும். ஆனால் பல்லின கலாசாரத்தின் பிரதான பண்பான மனிதம் என்பது அங்கு தொலைந்து போய்விட்டதோ என்றும் சில வேளைகளில் எண்ணத் தோன்றும்.

இக்கலவரம் கறுப்பு - வெள்ளை இனத்தவர் மத்தியில் நடைபெற்றது என பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை பூச்சியம் என்பதை CCTV கமரா காணொளிகள் நிஷரூபித்திருக்கின்றன. அத்துடன்இ கொலை செய்யப்பட்ட பாகிஸ்தானியர்களுக்கு இன, மத வேறுபாடின்றி அஞ்சலி செலுத்திய பொது மக்களும் எந்த பாகுபாடுமின்றி ஒன்றிணைந்த தன்னார்வத்தொண்டர்களும் உண்மையை விளக்கப் போதுமானவர்கள்.

பிரித்தானியாவின் பிரபல ஊடகங்களிடமிருந்து பலரும் கற்க வேண்டிய பாடம் ஒன்று இருக்கிறது. அங்கு எந்த ஒரு பிரதான ஊடகமுமே கலவரத்தைத் தூண்டும் வகையில் அறிக்கையிடவில்லை. ஆனால் உண்மையை இலாவகமாக வெளிப்படுத்தின. நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு செய்திகளை அறிக்கையிட்டன. இது ஊடகங்களின் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுகிறது. அவற்றின் இணையத்தளங்களிலே இன முரண்பாட்டைத் தூண்டும் வகையிலே குறிப்பிடப்பட்டிருந்த பொது மக்கள் கருத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

யுத்தம் ஓய்ந்து இலங்கை அபிவிருத்திப்பாதையை நோக்கி நடை பயிலத் தொடங்கி விட்டது. தாய்மடியை விட வேறு சுகமேது? எமது தாய் நாட்டிலே பல்வேறு சுய தொழில் வாய்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்க்கொண்டிருக்கின்றன. மேற்குலகை விட்டால் வேறு சொர்க்கம் இல்லை என்ற மனப்பாங்கு தான் அம்மத்தியில் காணப்படுகிறது. தாய் நாட்டில் விவசாயம் செய்வதை விட இலண்டனில் கோப்பை கழுவலாம் என்கிறது எம் பேதை மனம். அதற்கு பணம் மட்டும் தான் பெரிதாகத் தெரிகிறது.



‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்

தொழுதுண்டு பின் செல்பவர் ‘

என்று வள்ளுவன் காரணமின்றிச் சொல்லவில்லை. அதற்காக விவசாயம் தான் ஒரே வழி என்று கூறவில்லை. தாய் நாட்டில் நாம் எத்தனையோ சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். அவற்றிற்கான முயற்சியாண்மையும் எம்மிடம் தாராளமாக இருக்கிறது. ஆனால் எமது மனப்பாங்கு அதற்கு இடங்கொடுப்பதில்லை.அதிலிருந்து இருந்து நாம் மாறாவிட்டால் எம்மை எவராலுமே காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்பது தான் நிதர்சனம்.


யார் இந்த மார்க் டக்கன்?

3 பிள்ளைகளின் தந்தையான மார்க் டக்கன் 29 வயது கறுப்பின இளைஞராவார். டொட்டன் ஹாம் பகுதியில் இடம்பெறும் குற்றச்செயல்களில் இவர் தொடர்புபட்டிருந்ததால் பொலிசாரினால் நன்கு அறியப்பட்டவர். இவருடைய மைத்துனர் ஒருவருடைய கொலையிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாகப் பொலிசார் நம்புகின்றனர்.

லண்டனில் கறுப்பின சமூகத்திடையே காணப்படுகின்ற துப்பாக்கி வன்முறை மற்றும் போதைவஸ்துக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவு மார்க் டக்கனைக் கண்காணித்து வந்துள்ளது. அவர்கள் மார்க் டக்கனைக் கைது செய்யத் திட்டமிட்டனர்.


பிரித்தானியாவில் பொலிசார் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதில்லை. துப்பாக்கிகள் அவசியமெனக் கருதும் பட்சத்தில் ஸ்கொட்லண்ட் யாட் இன் துப்பாக்கிப் பிரிவு வரவழைக்கப்படும்.


மார்க் டக்கன் அறியப்பட்ட ஒரு குற்றவாளியாக இருந்ததாலும் அவர் துப்பாக்கியை தன்னுடன் வைத்திருப்பதாக பொலிஸாரின் புலனாய்வுப்பிரிவு கூறியதால் விசேட துப்பாக்கிப் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டது. சம்பவதினத்தன்று சிறிய டக்சியில் தன் காதலி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மார்க் டக்கனை பொலிசார் பின் தொடர்ந்தனர்.


அதை மார்க் டக்கனும் உணர்ந்தார். உடனேயே தான் பொலிசாரால் பின் தொடரப்படுவதைத் தன் காதலிக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தவும் செய்தார். அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் அவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மார்க் டக்கன் பொலிசாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளவில்லை என்பதை சுதந்திர பொலிஸ் விசாரணை ஆணைக்குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.

அத்துடன் மார்க் டக்கனின் குடும்ப அங்கத்தவர்கள் இக்கலவரத்தைக் கண்டித்திருக்கிறார்கள்.



தூபம் போட்ட இணையத் தொழில் நுட்பம்?


டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களினூடும் பிளாக் பெரி மெசஞ்சர் போன்ற அலைபேசித் தொழில் நுட்பங்களின் உதவியுடனும் கலவரக் காரர்கள் தொடர்புகளை மேற்கொண்டனர். அவர்கள் ஒருங்கிணைந்த கொள்ளைகளையும் கலவரங்களையும் ஒரே நேரத்தில் மேற்கொள்வதற்கு இந்த இணையத் தொழில் நுட்பம் காரணமாய் அமைந்து விட்டதாக பல தரப்புகளிலிருந்தும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய நபர்களைப் பிடிப்பதற்கு தம்மால் இயன்ற சகல உதவிகளையும் செய்வோம் என பிளாக் பெரி நிறுவனத் தலைவர் உறுதி கூறியிருக்கிறார். சமூக வலைத்தளங்கள் கலவரத்தைத் தூண்டுவதிi; பெரும் பங்களிப்பை ஆற்றியதால் அவற்றைத் தடை செய்யும் யோசனையை கமரூன் முன் வைத்திருக்கிறார்.




உலகம் போகும் போக்கு

எந்த வித பாகுபாடுகளுமின்றி சிறுவர் முதல் பெரியவர் யாவரும் கொள்ளைகளில் ஈடுபட்டமையானது உலகின் போக்கு எதிர்ப்பக்கமாகச் செல்வதையே காட்டி நிற்கிறது. மேலைத்தேய நாடுகளில் மக்களின் சுதந்திரத்தில் எவருமே தலையிடுவதில்லை. அதே நிலைமையை பிரித்தானியாவிலும் காணலாம். சட்டம், உரிமை, ஒழுங்கு என்பவற்றை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அதிகார வர்க்கம் தீவிரமாக இருக்கிறதோ என்றும் சில வேளைகளில் கருத முடியும். ஆதலால் தான் ஆரம்பத்தில் கடைகள் கொள்ளையிடப்பட்ட போது பொலிசார் தடுக்கவில்லை.
 

கொள்ளையர்கள் மத்தியில் கற்றவர்கள் மற்றவர்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை. வயது வித்தியாசம் இருக்கவில்லை. சிறுவர்கள் விளையாட்டுக்காகக் கொள்ளையடித்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். பல பொது மக்கள் கலகக் காரரால் தாக்கப்பட்டார்கள். சிலரது ஆடைகள் கூட விட்டுவைக்கப்படவில்லை. 3 பாகிஸ்தானியர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.


இவையெல்லாமே அற்பத் தேவைகளுக்காகத்தானா? மானுடம் மரணித்துக்கொண்டிருக்கிறது என்று தான் கூற வேண்டும்.



குடிபெயர்ந்த ஆசியர்களின் நிலை என்ன?





பிற நாடுகளிலலிருந்து பிரித்தானியாவிற்குக் குடிபெயர் ந்தவர்களில் கணிசமான தொகையினர் ஆசியர்கள். 2001-2009 வரையான 8 வருட காலத்தில் பிரித்தானியாவின் சனத்தொகை 37 சதவீதத்தால் அதிகரித்தது. அதற்கு குடிபெயர்ந்தோரே காரணம் என அறியப்பட்டுள்ளது. அது அப்படி இருக்க, இந்த கலவரங்களால் இலண்டனில் வசிக்கும் ஆசியர்கள் பெரும் அச்சத்தில் இருந்தமை தெரியவந்துள்ளது. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் கடைத்தொகுதிகளை அமைத்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தமது கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே பெரும்பாலானோர் காணப்பட்டனர். அத்துடன் 3 பாகிஸ்தானியர்கள் மீது காரை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். அந்த சகோதரர்கள் கொல்லப்பட்ட இடத்திலே இன பேதமின்றி மக்கள் மௌன அஞ்சலி செலுத்து கிறார்கள்


அந்த அச்சத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை என்பதற்கு சிவகரன் கந்தையா என்ற இலங்கைத் தமிழரின் நிலை ஒரு சிறந்த உதாரணம்.


1996 ஆம் ஆண்டிலே குடிபெயர்ந்து அகதி அந்தஸ்தும் பெற்று வாழ்க்க்கையில் மெல்ல மெல்ல உயர்ந்தவர் சிவகரன். ஹக்னீயில் உள்ள அவரது பல்பொருள் அங்காடி சில நிமிடங்களிலே துவம்சம் செய்யப்பட்டது. சம்பவத்தை ஸ்கை தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்த அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். கடையைக் கொள்ளையடிக்க முடியாமல் போனதால் அடித்து நொறுக்கி விட்டுச்சென்றிருந்தனர் கலகக் காரர்கள். அதனால் சிவ கரனுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு 50,000 ஸ்ரேலிங் பவுண்களுக்கும் அதிகமாகும்.


"இலண்டன் தான் பாதுகாப்பு என்று கருதி வந்தேன். இன்று எல்லாவற்றையும் இழந்து போய் நிற்கிறேன் .எனது 11 வருட உழைப்பு கணப்பொழுதில் காணாமல் போய் விட்டது. எனது கையில் 25 பென்சுகள் மட்டுமே இருக்கின்றன.வாடிக்கையாளர்களே எனது கடையைக் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது தான் வருத்தத்திற்குரியது"எனப் புலம்புகிறார் சிவ கரன். 83 ஆடிக் கலவரத்துடன் ஒப்பிடுகையில் இதொன்றும் பெரிதல்லவே எனப் பெரு மூச்சு விட்ட இலங்கையர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


நிரஞ்சனா யோகேஷ் பட்டேல் என்பவரின் கடைத்தொகுதி தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. மனு பாய் என்பவரின் நகைக் கடை கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. பல இலங்கையரின் கடைகள் துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றன.அவர்கள் எவருக்குமே தமக்கான நட்ட ஈடுகள் கிடைக்குமா என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.இவர்களைப் போல இன்னும் எத்தனை ஆசியர்கள் இருக்கிறார்களோ?



வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பு?

பிரித்தானியாவில் வெளி நாட்டு மாணவர்களுக்குப் பஞ்சமில்லை எனலாம். வெளி நாட்டவருக்கோ பிரித்தானியக் கல்வி மீது மோகம். பிரித்தானியாவுக்கோ வருமானம். இரு தரப்பினருமே பரஸ்பரம் நன்மை பெறுவதால் மாணவர்கள் உயர் கல்விக்காக பிரித்தானியாவை நோக்கிப் படையெடுக்கின்றனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் புதிய கல்வியாண்டு ஆரம்பிக்கப்படவிருப்பதால் புதிய பல மாணவர்களும் பிரித்தானியா நோக்கி படையெடுக்க விருக்கிறார்கள். இந்த நிலையில் இக்கலவரங்கள் ஒரு அச்ச நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றன. பிரித்தானியாவில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் வெளி நாட்டு மாணவர்களை தமது இருப்பிடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாமெனவும் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்குமாறும் அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

இதே வேளை கலகக் காரரின் தாக்குதலில் காயமடைந்த மலேசிய மாணவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளான். தற்போது அவனது உடல் நிலை தேறி வருகிறது. அவனுக்கு பிரித்தானிய அரசு ஆறுதல் செய்தியொன்றையும் அனுப்பியிருந்தது.




முன்னரும் பின்னரும் பொருளாதார நெருக்கடி?

உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் ஆதிக்கத்தின் கீழ் தான் பிரித்தானியாவும் இருக்கிறது. இதை எவருமே மறுக்க முடியாது. அத்தகையதோர் சிக்கலான நிலையில் இந்தக் கலவரங்கள் ஏற்பட்டன. பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது. அதே வேளை இந்தக் கலவரங்களால் ஏற்பட்ட சேதம் 200 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களிலும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான செலவாக மதிப்பிடப்பட்டிருக்கும் தொகை 3.6 பில்லியன் ஸ்ரேலிங் பவுண்களாகும். இவையெல்லாம் மீட்கப்படாவிட்டால் பிரித்தானிய மக்கள் மீதான கடன் சுமை அதிகரிக்கும். அது நாட்டை அதளபாதாளத்துக்குள் கொண்டு போய்விடும் என்பது மட்டும் நிதர்சனம் .இந்த கலவரம் மற்றும் வன்முறைகளால் தமது வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் அதை மீண்டும் கட்டியெழுப்ப உதவ வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. இந்த துன்பியல் நிகழ்வுகளுக்கு முன்னரே இளைஞரில் ஒரு சாரார் மத்தியில் வேலையின்மை காணப்பட்டது. ஒரு தொழிலை மேற்கொள்வதற்கான திறனோ கல்வியோ அவர்களிடம் காணப்படவில்லை. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்திருக்கிறது. இந்த வன்முறைகள் திறனுடைய, தொழில் புரிபவர்களின் வயிற்றிலும் அடித்துவிட்டுச் சென்றிருக்கின்றன. இந்த கலவரத்தைப் பொறுத்தவரையிலே உள்ளீடாகவும் வெளியீடாகவும் இருப்பது பொருளாதார நெருக்கடியே எனலாம்.