Sunday, May 22, 2011

பேராசிரியர் சரத்கொட்டகம இப்படிச் சொல்கிறார்...

வடக்கிற்கும் தெற்கிற்கும் தங்குதடையின்றிப் பயணிக்கும் வாகனங்களால் இலங்கை முழுவதும் பார்த்தீனியம் பரவும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.

கடந்த கால வரலாறும் அதையே சுட்டி நிற்கிறது. யுத்தகாலங்களில் வாகனச் சோதனைச் சாவடிகள் இருந்த பகுதிகளின் அயற் சூழலில் பார்த்தீனியம் செறிந்து காணப்படுகிறது. லொறிகளிலிருந்து பொருட்கள் ஏற்றி இறக்கப்படும் போது பார்த்தீனியம் விதைகள் இலகுவாகப் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தற்போது இலங்கை முழுவதும் எந்தத் தடையுமின்றி வாகனங்கள் பயணிக்கின்றன. வடக்கிற்கும் சென்று வருகின்றன. இதனால் பார்த்தீனியம் இலங்கை முழுவதும் விரைவில் பரவக் கூடும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அவர்கள் உடனடிக் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தம்மை அறியாமலே காவிகளாக மாறலாம். ஆதலால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

வடக்கில் மட்டுமன்றி இலங்கை முழுவதும் பார்த்தீனியம் செடியின் பரம்பல் தொடர்பிலான ஆய்வுகள் மேற்கெள்ளப்பட வேண்டும்.

பார்த்தீனியம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நிலைமை கையை மீறுவதை எவராலும் கட்டுப்படுத்த முடியாது.
 
 
யாழ். விவசாய திணைக்களத்தைச் சேர்ந்த பயிர் பாதுகாப்பு பாடவிதான உத்தியோகத்தர் தனபால சிங்கம் இப்படிக் கூறுகிறார்...


யாழ்ப்பாணத்தில் பார்த்தீனியத்தின் பரம்பல் எமது கட்டுப்பாட்டில் இல்லை என்றே கூற வேண்டும். (பாத்தீனியம்) பல பொது இடங்களில் பரவிக் காணப்படுகிறது.

முன்னர் எமது திணைக்களம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வெவ்வேறு நிலைகளில் சிரமதானங்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கூட்டங்கள், பிரசாரங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. பல விவசாய அமைப்புகளும் ஒத்துழைத்தன. ஆனால் மக்களிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் அவை எவையும் வெற்றியளிக்கவில்லை. மக்கள் தமது தோட்டத்திலிருக்கும் பார்த்தீனியம் செடிகளைக் களையக்கூட தயாராக இல்லை. இப்படி இருக்கும் போது பொது இடங்களில் இருப்பவற்றை எப்படிக் களைய முடியும்?

பார்த்தீனியம் செடிகளை ஒரேதரத்தில் அழிக்கமுடியாது. அழிப்பு நடவடிக்கைகளை குறித்த கால இடைவெளிகளில் கிரமமாக நடைமுறைபடுத்த வேண்டும். அத்துடன் செடிகள் பூக்க முதலே அழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் விதைகள் விரைவாகப் பரப்பிவிடும்.

இந்த வருடம் பார்த்தீனிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

களை கொல்லிகள் மூலம் அவற்றை ஒழிப்பதற்கு போதிய நிதியுதவியும் கிடைக்கவில்லை. பார்த்தீனிய ஒழிப்பில் பிரதேச செயலகங்கள், பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரதும் ஒன்றிணைந்த ஒத்துழைப்பு அவசியமாகிறது. அந்த ஒத்துழைப்பு இல்லாமல் நாம் தனித்து நின்று எதையுமே செய்ய முடியாது.

No comments:

Post a Comment