Sunday, November 28, 2010

ஆபத்தைத் தரும் ஆஸ்பத்திரிக் கழிவுகள்


தெய்வம் வந்து தாங்கிடாத
பொழுதுகளில்
மனிதனை உயிர்ப்பிக்கும்
விஞ்ஞான வளாகம்!

பணம் போட்டு
நலம் காக்கும்
பொதுச் சேவை வியாபாரம்!

என மருத்துவமனையை வரிக்கிறது இணையத்தில் வெளியாகியிருந்த கவிதையொன்று. பூவும் தலையுமாய் நாணயம் கொண்டிருக்கும் இருபக்கங்கள் போல, இந்த மருத்துவமனைக்கும் இருபக்கங்கள் உண்டு. அவற்றுள் ஒன்றைப்பற்றியே இக்கவிதை குறிப்பிடுகிறது. மற்றைய பக்கமானது இம்மருத்துவமனையிலிருந்து வெளியேறும் கழிவுகளுடன் தொடர்புடையதாகும்.
இன்று நகரமயமாக்கலுடன் சேர்ந்து வீதிக்கு வீதி சிறியதும் பெரியதுமாகப் பல மருத்துவமனைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.
பணமிருந்தால் எவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையிலே வளர்ந்து வரும் துறையாக மருத்துவத்துறை மாறிவருகிறது.
இலங்கையிலே அரச வைத்தியசாலைகளிலே மருத்துவ சேவை இலவசமானதாகும். ஆயினும் நகரமயப்படுத்தப்பட்ட பகுதிகளிலே அரச மருத்துவ சேவை நிலையங்களை விடத் தனியார் மருத்துவ சேவை நிலையங்கள் அதிகமாகக் காணப்படுவதை எவராலும் மறுக்க முடியாது.
நாடொன்றில் உள்ள மருத்துவ சேவைகளின் வளர்ச்சி அந்நாட்டின் அபிவிருத்தி அளவு கோல்களில் தாக்கம் செலுத்தும் பிரதான காரணிகளுள் ஒன்றாகக் காணப்படுகிறது.
நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உடனடி மருத்துவ சேவைகளும் நல்ல கழிவகற்றல் வசதிகளும் பிரஜை ஒருவரின் சராசரி ஆயுட்காலத்தை அதிகரிக்கின்றன. அதேசமயம் நாட்டின் சிசு மரண வீதத்தைக் குறைக்கின்றன.
நாடொன்றின் அபிவிருத்திச் செயற்பாடுகள் அதிகரிக்க, சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படும் கழிவுகளும் அதிகரிக்கின்றன.
வீட்டுக்கழிவுகள், அவற்றைக் கண்ட இடங்களில் கொட்டுவதால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர் கேடுகளைப் பற்றி நாம் அறிவோம். பலவற்றை அன்றாடம் நேரிலும் கண்டிருப்போம்.
ஆனால் வீதிக்கு வீதி முளைத்திருக்கும் மருத்துவ சேவை நிலையங்களாலும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அக்கழிவுகளுக்கு என்ன நடக்கும்? அவை எப்படி வெளியேற்றப்படுகின்றன? என்பது பற்றிய சிந்தனை கூட எமக்கு வந்திருக்காது.
ஆனால் வீட்டுக்கழிவுகளுடன் ஒப்பிடும் போது மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதாரத்துறை அமைப்புக்களினால் வெளியேற்றப்படும் கழிவுகளில் ஒரு பகுதி நச்சுத்தன்மையானது. மிகவும் ஆபத்தானது. நோய்த்தொற்றை ஏற்படுத்தவல்லது. சவச்சாலைக் கழிவுகளும் இக்கழிவுகளுக்குள் அடங்கி விடுகின்றன.
உலகளாவிய ரீதியிலே வருடாந்தம் பல மில்லியன் தொன்கள் அளவிலான சுகாதாரத்துறைக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. அவற்றுள் ஏறத்தாழ 10 - 25 சதவீதமானவை மிகவும் ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.
ஆரம்ப காலங்களிலே பல மருத்துவ உபகரணங்கள் தொற்று நீக்கப்பட்டு மீள மீள உபயோகிக்கப்பட்டு வந்தன.
ஆயினும், எச்.ஐ.வி. ஹெப்படைடிஸ் - கி போன்ற சில வைரஸ் தொற்றுக்கள் வேகமாகப் பரவின. இதையடுத்து ஒரு தடவை பாவிக்கப்பட்டபின் வீசப்படும் மருத்துவ உபகரணங்களின் பாவனையும் அதிகரித்தது. விளைவு வெளியேற்றப்படும் சுகாதாரத்துறைக் கழிவுகளைப் பலமடங்குகளாக அதிகரித்தன.
ஆனால், பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலே அவை பாதுகாப்பான முறையிலே அகற்றப்படுவதில்லை. ஏனெனில் அவ்வாறு அகற்றுவதற்கான செலவு மிக அதிகமாகும். அத்துடன் அந்நாடுகளால் ஈடுசெய்யப்பட முடியாதது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது நாட்டின் சுகாதார அமைச்சு சுகாதாரத் துறைக் கழிவுகளுக்கான பொதுவான வகைப்படுத்தல் முறைமையொன்றை 2006 ஆம் ஆண்டிலே வகுத்தது. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு நிறக்குறியீடும் வழங்கப்பட்டது. சகல அரச சுகாதாரத்துறை அமைப்புக்களும் அம்முறைமையைப் பின்பற்றுமாறு பணிக்கப்பட்டன.
அந்த முறைமையின் படி தொற்றுள்ள கழிவுகள், கூர்மையான கழிவுகள், சாதாரண கழிவுகள், உயிரியல் ரீதியாக பிரிகையடையக் கூடிய கழிவுகள், கண்ணாடிக்கழிவுகள், கடதாசிக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என சுகாதாரத்துறைக் கழிவுகள் வகைப்படுத்தப்படுகின்றன.
இந்த வகைப்படுத்தலின் அடிப்படையிலேயே இலங்கையின் மருத்துவமனைக் கழிவுகள் தரம்பிரிக்கப்படுகின்றன. பக்aரியா, வைரஸ், பங்கசு மற்றும் ஏனைய உயிர்க் கூறுகளின் தொற்று இருக்கலாமெனக் கருதப்படும் கழிவுகள் யாவுமே தொற்றுள்ள கழிவுகளாகக் கருதப்படுகின்றன. சத்திரசிகிச்சைகளின் போது வெளியேற்றப்படும் இழையக் கழிவுகள், உடற்பாகங்கள் மற்றும் உடற் திராவகங்களுடன் தொடுகையில் இருக்கும் உபகரணங்கள், பொருட்கள், குழாய்கள், போன்றன யாவுமே தொற்றுள்ள கழிவுகளாகும்.
இவை மஞ்சள் நிறத்தினால் வகை குறிக்கப்படு கின்றன.
கூரிய / கூர்மையான கழிவுகள் எனப்படுபவை உடற்திராவகங் களுடன் தொடுகை ஏற்பட்டதால் மாசுபட்ட கூரிய ஊசிகள் மற்றும் உபகரணங் களைக் குறிக்கின்றன. இத்தகைய கழிவுகள் சிவப்புக்கோடுகளுடன் சேர்ந்த மஞ்சள் நிறத்தினால் வகைக் குறிக்கப்படுகின்றன.
மாசுகளற்ற சாதாரண அல்லது வீட்டுக் கழிவுகளையொத்த சுகாதாரத்துறைக்கழிவுகள் சாதாரண கழிவுகளாகும். இவை கறுப்பு நிறத்தினால் வகைக்குறிக்கப்படுகின்றன. உயிரியல் ரீதியாகப் பிரிகையடையக் கூடிய அல்லது உக்கக்கூடிய கழிவுகளில் தோட்ட, சமையலறை, மற்றும் உணவுக் கழிவுகளும் அடங்குகின்றன. இவை பச்சை நிறத்தால் வகைக் குறிக்கப்படுகின்றன.
பழுதடையாத அல்லது மாசுபட்டிருக்காத குடிநீர்ப் போத்தல்கள் மற்றும் தண்ணீர்ப் போத்தல்கள் கண்ணாடிக்கழிவுகளுக்குள் அடங்குகின்றன. இவை சிவப்பு நிறத்தால் வகைக் குறிக்கப்படுகின்றன.
கடதாசிகள், அட்டைகள் மற்றும் ஏனைய அலுவலக ஆவணங்கள் யாவுமே கடதாசிக் கழிவுகளுக்குள் அடக்கப்படுகின்றன. இவை நீல நிறத்தினால் வகைக்குறிக்கப்படுகின்றன.
அதேபோல, மாசுக்கள் மற்றும் தொற்றுக்களற்ற பிளாஸ்டிக் போத்தல்கள், ஊசியற்ற சேலைன் போத்தல்கள், பிளாஸ்டிக் பைகள் யாவுமே பிளாஸ்டிக் கழிவுகளுக்குள் அடங்குகின்றன. இவை செம்மஞ்சள் நிறத்தினால் வகைக்குறிக்கப்படுகின்றன.
இலங்கையின் சகல அரச வைத்தியசாலைகளும் இந்த நிறவகைக் குறிப்பு முறைமையைப் பின்பற்றி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயினும் அக்கழிவுகளை அப்புறப்படுத்துவதிலே பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்படத்தான் செய்கின்றன.
சில வைத்தியசாலைகளிலே கழிவுகளைச் சேகரிக்கும் முறைமைகள் பாதுகாப்பற்றவையாகக் காணப்படுகின்றன. சில சமயங்களிலே தொற்றுள்ள கழிவுகளும், சாதாரண கழிவுகளும் கூட ஒன்றாகக் கலக்கப்படுகின்றன.
பல வைத்தியசாலைகளில் கழிவுகள் சேகரிக்கப்படும் பகுதி பிரதான கட்டடங்களுக்கு அண்மையில் அமைக்கப்படுவதில்லை. ஆயினும் அப்பகுதிக்கு அண்மையில் இருக்கும் வேறு கட்டடங்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கொள்கலன்களில் உள்ள கழிவுகளை மனிதர்களே சேகரிக்கும் இடத்துக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த நிலைமைதான் இலங்கையின் பல வைத்தியசாலைகளில் காணப்படுகிறது.
கழிவுகளின் உருவாக்கத்தின் போது கையாள்வதற்கு பெரும்பாலான ஊழியர்கள் கையுறைகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்களுடன் ஒப்பிடும் போது கழிவுகளை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் மத்தியில் கையுறையின் பயன்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. அதனால் அப்புறப்படுத்தும் ஊழியர்கள் கூரான கழிவுகளால் காயப்படுகிறார்கள். அதேசமயம் பல்வேறு தொற்றுக்களுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
உண்மையில் சேகரிக்கப்பட்ட பின் இக்கழிவுகள் பொருத்தமான முறையிலே பரிகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னரே அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பல இடங்களில் அவை பரிகரிக்கப்படாமலே அப்புறப்படுத்தப்படுகின்றன. நகர சபைக் கழிவுகளுடன் சேர்க்கப்பட்டு வெளியே கொட்டப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் பரிகரிக்கப்படாமல் நிலத்திலே புதைக்கப்படுகின்றன.
ஆரம்பகாலங்களில் இத்தகைய செயற்பாடுகளின் பின்விளைவுகள் வெளிப்படவில்லை. ஆனால் அவை வெளிப்பட்ட போதுதான் நிலைமை கையை மீறிச் சென்று கொண்டிருப்பதும் புரியத் தொடங்கியது. இதற்காக எவரையும் குறை கூறிப் பயனில்லை. பின் பற்றும் நடைமுறைகளைத் தெளிவாக அக்கறையுடன் செயற்படுத்தினால் எந்தப் பிரச்சினையையும் எளிதில் வெல்ல முடியும் என்பது மட்டுமே நிதர்சனம்.
இப்பிரச்சினை தொடர்பான விழிப்புணர்வு பல சுகாதாரத்துறை ஊழியர்களிடையே காணப்படத்தான் செய்கிறது. சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் அதிகார சபை போன்றன மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. சர்வதேச நிதி நிறுவனங்களின் நிதி உதவியும் எமக்கு கிடைக்காமலில்லை.
பெரும்பாலான சுகாதாரத்துறை அமைப்புக்கள் அரச துறையைச் சேர்ந்தவை. அத்துடன் தனியார் தறையினருடன் கைகோர்த்து சுகாதாரத்துறைக் கழிவுகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள அரசும் ஆர்வமாக இருக்கிறது.
இவையெல்லாம் சுகாதாரத்துறைக் கழிவுகள் தொடர்பாக இலங்கையில் காணப்படும் சாதகமான விடயங்களாகும்.
ஆயினும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மத்தியிலே கழிவுகளைக் கையாள்வதற் கான பயிற்சிகள் போதியளவு காணப்படு வதில்லை. அத்துடன் கழிவுகளின் பாதுகாப்பான அப்புறப்படுத்தல் முறைமைகள் பல வரையறுக்கப் பட்டனவாகவே காணப்படு கின்றன. தனியார் மருத்துவ மனைகள் அரச மருத்துவமனை களுடன் இணைந்து செயற்படும் வழிமுறைகள் சாதகமான போக்கைக் கொண்டிருக்க வில்லை. அத்துடன் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகள் ஒழுங்காகக் கண்காணிக்கப்படுவதுமில்லை.
இத்தகைய பின்னடைவுகள் எல்லாம் சேர்ந்து சுகாதாரத்துறைக்கழிவுகளால் ஏற்படும் சீர்கேடுகளை விஸ்வரூபம் எடுக்கச் செய்துவிட்டன.
நச்சுத்தன்மையான கழிவுகளின் முகாமைத்துவம் பற்றிய விடயங்களை தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் 47 ஆவது சரத்தும் அதன் திருத்தங்களும் குறிப்பிடுகின்றன. சுகாதாரத்துறைக் கழிவுகளும் நச்சுத்தன்மையான கழிவுகளாகவே கருதப்படுகின்றன. அதனடிப்படையிலே சுகாதாரத்துறைக் கழிவுகளைக் கையாள்வதற்கான விரிவான நடைமுறைக்கோவையும் தயாரிக்கப்படுகிறது.
இத்தகைய தோர் நிலையில் தான் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை சுகாதாரத்துறைக் கழிவுகளை அப்புறப்படுத்தும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க விருப்பதாக கலாநிதி ஹேரத் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சுற்றுச்சூழல் அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து தேசிய ரீதியிலான செயற்றிட்டமொன்றை அமைப்பது பற்றிக் கலந்துரையாடி வருகின்றன.
இது இலங்கையின் சுகாதாரத்துறையை புதியதோர் பரிணாமத்துக்கு இட்டுச் செல்லும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

No comments:

Post a Comment