Friday, November 26, 2010

'விக்கி லீக்ஸ்':இரகசியங்கள் அம்பலமாகின்றன!

‘விக்கி லீக்ஸ்’ என்ற சொற் பதத்தினால் இன்று பல வல்லரசுகள் அதிர்ந்து போயிருக்கின்றன. அமெரிக்க இராணுவத்தின் பாவனைக்காகக் கண்டுபிடிக்கப்பட்டு பின் பொதுப் பாவனைக்குரியதாக மாற்றப்பட்ட இணையம் இன்று அமெரிக்காவையே கலங்கடித்திருக்கிறது.
தகவலை அறிவதற்கான சுதந்திரத்துக்கு வழிகோலும் ஊடகக் கருவியாக பலர் இத்தளத்தைச் சித்தரித்திருக்கிறார்கள்.
‘விக்கி லீக்ஸ்’ எனப்படுவது அடிப்படையில் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனமாகும். முக்கியமான செய்திகளையும் தகவல்களையும் சாதாரண பொது மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் நோக்கிலேயே இவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியிலே தன்னார்வத் தொண்டர்களாகப் பணி புரியும் ஊடகவியலளர்களின் வலையமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வலையமைப்பினூடு பெறப்படும் செய்திகளும் தகவல்களும் இணையத்தளம் மூலம் பொது மக்களைச் சென்றடைகின்றன.
இங்கு முக்கியமான விடயம் யாதெனில், அத்தகவல்களும் செய்திகளும் உண்மையான ஆதாரத்துடன் அல்லது மூல ஆவணத்துடன் வெளியிடப்படுகின்றன. ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே செய்தியை அறியும் நபரொருவர் ஆதாரத்தையும் பார்வையிட முடிகிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விணையத்தளம் நவீன தொழில் நுட்பங்களுடன் இசைவடைந்து மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
பேச்சுச் சுதந்திரத்தை உறுதி செய்யும் அதேவேளை ஊடகங்களிற்கான சுதந்திரத்தையும் உறுதிசெய்து புதியதோர் வரலாறு படைப்பதை இலக்காகக் கொண்டே இவ்விணையத்தளம் உருவாக்கப்பட்டது.
இந்த இலக்கானது, சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். குறிப்பாக அப்பிரகடனத்தின் 19வது உறுப்புரிமையில் குறிப்பிடப்படும் ‘கருத்துக்களை வெளியிடுவதற்கான சுதந்திரத்தை’ இது அடிப்படையாகக் கொண்டது.
உண்மையில் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளமானது இணையத்தின் உயர் பாதுகாப்புத் தொழில் நுட்பத்துடன் ஊடகவியல் மற்றும் ஒழுக்கக் கொள்கைகளையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊடகத்துறையைப் பொறுத்தவரையிலே, புலனாய்வு என்பது பிரதான இடத்தை வகிக்கிறது. ‘ஊடகவியலாளனின் ஆயுதம் பேனா’ எனப் பலர் குறிப்பிடுவதன் பின்னணியில் புலனாய்வும் அமைந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது. இதற்கு ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் விதிவிலக்கல்ல.
இவ்விணையத்தளத்திலே, தெரியாத நபர்களால் கிடைக்கப்பெறும் தகவல்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
அவ்வாறு தகவல்களை வழங்கும் மூலங்களைப் பாதுகாக்கும் கடப்பாடும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்துக்கு உண்டு. ஆதலால் தான் ‘விutting- லீனீgலீ விryptographiணீ யிnஜீorசீation’ என்ற உயர் பாதுகாப்புத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
இதனால் இவ்விணையத்தளத்திற்குச் செய்தியை வழங்கும் மூலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவ்விணையத்தளத்திற்கு அத்தகைய தகவலொன்று கிடைத்ததும் வலையமைப்பிலே இணைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர்கள் தொழிற்படத் தொடங்குவர்.
அவர்கள் அத்தகவலை ஆராய்ந்து, அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்வர். பின் அத்தகவல் தொடர்பாக, அத்தகவலின் முக்கியத்துவத்தைச் சமுதாயத்துக்கு உணர்த்தும் வகையிலே செய்திக் குறிப்பொன்றை எழுதுவர். பின்னர் அச்செய்திக் குறிப்பையும் அதன் உண்மை ஆதாரத்தையும் இணைத்து ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே வெளியிடுவர்.
இத்தகைய செயற்பாடானது, குறித்த செய்தியை வாசகர்கள் ஆதாரத்துடன் அலசி ஆராய வழிவகுக்கின்றது.
கட்டற்ற கலைக்களஞ்சியமான ‘விக்கி பீடியா’ இணையத்தளத்தைப் பற்றி நாம் யாரும் அறிவோம். அவ்விணையத்தளத்திலே தகவல்கள் வெளியிடப்படும் வடிவமைப்பை ஒத்த முறைமையையே ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளமும் பின்பற்றுகிறது.
இந்த ஒரு ஒற்றுமையைத்தவிர ‘விக்கிபீடியா’ இணையத்தளத்துக்கும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத் தளத்துக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை. ‘விக்கி பீடியா’ இணையத்தளத்தைப் பொறுத்த வரையிலே எவரும் அதன் தகவல்களை/ மூல ஆவணங்களை மாற்றியமைக்க முடியும். ஆனால் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே அவ்வாறு செய்ய முடியாது.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே வெளியிடப்படும் செய்திகள் தணிக்கை செய்யப்படுவதில்லை. ஆனால் சில வேளைகளில் அச்செய்திப்பதிவுகள் நீக்கப்படும். அல்லது அப்பாவி மக்களின் வாழ்வைக் காப்பாற்றும் நோக்கிலே அவை காலந் தாழ்த்தப்பட்டு பதிவிலடப்படும்.
ஒரு ஊடக நிறுவனமான ‘விக்கி லீக்ஸ்’ ஐ சட்டச் சிக்கலிலிருந்து காப்பாற்றுவதற்காக பல திறமை வாய்ந்த சட்டத்தரணிகளும் ‘விக்கி லீக்ஸ்’ வலையமைப்பிலே இணைலீ;திருக்கிறார்கள்.
தகவல்களைப் பிரசுரித்தலானது உண்மைகள் ஒளிவு மறைவின்றி வெளியிடப்படுவதை மேம்படுதுகிறது. அத்தகைய தன்மைதான் ஒரு வளமான சமுதாயம் உருவாக வழிவகுக்கிறது. இதற்கு ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். இத்தகையதோர் செயற் பாட்டையே ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளமும் மேற்கொள்கிறது.
இவ்விணையத் தளத்தின் நிறுவுனர் ஜுலியன் போல் அஸாஞ் என்பவராவார். அவரே பிரதம ஆசிரியராகவும் செயற்படுகிறார். இவரைப் பத்திரிகைகள் பல ‘புதிர் மனிதன்’ என்று விபரிக்கின்றன.
ஏனெனில் இவர் நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருப்பார். தனது தொடர்பு முகவரிகள், இலக்கங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பார். இந்த இணையத்தளத்துக்காக நிரந்தரமாக ஊழியஞ் செய்பவர்கள் மிகச் சிலரே. ஏனையவர்கள் பகுதி நேர ஊழியர்களாகவே வேலை செய்கின்றனர்.
இவ் விணையத்தளத்தின் ஊழியர்கள் ஒருவரையொருவர் அறிந்திருக்கமாட்டார்கள் என்னும் விடயம் மிகவும் சுவாரசியமானது. அவர்களை எல்லாம் இணைக்கும் பாலமாக இருப்பவர் ஜுலியன் அஸாஞ் மட்டுமே.
உலகெங்கிலும் இருந்து பலர் விக்கி லீக்ஸ் இணையத்தளத்துக்கு தகவல்களை வழங்கி வருகிறார்கள். ஆனால் தகவல்களை வழங்குபவர்கள் பற்றிய குறிப்புகள் ஜுலியன் அஸாஞ்க்குக் கூடத் தெரிந்திருக்காது.
கணனித்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைபவை கணனி மொழிகள் மற்றும் சங்கேத மொழிகளின் பிரயோகமும் அல்கோரிதம் எனப்படும் செய்கை வழி முறைகளுமேயாகும்.
இந்த சங்கேத மொழியின் அடிப்படையிலேயே தொழிற்படுகிறது. சங்கேத மொழிகளை எழுதி அவற்றை அவிப்ழ்பதில் வல்லுநர்கள் பலர் இவ்விணையத்தளத்துடன் இணைந்து தொழிற்படுகிறார்கள்.
ஒருவிடயத்தை ஆராய்ந்து அறிவதற்கு தகவல்கள் தேவை. ஆனால் மனித உயிர் மனித உரிமைகள், பொருளாதாரம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும் போது தகவல்கள் மிகவும் பெறுமதியானவையாகவே தெரிகின்றன. ஏனெனில் அந்தத் தகவல்களுக்காகக் கொடுக்கப்படும் விலை எதனாலும் ஈடுசெய்யப்பட முடியாததாகும்.
ஊடகவியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கும் வகையிலே ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் செயற்பட்டு வருகிறது. அவ்விணையத்தளத்திலே வெளியிடப்படும் தகவல்களும் செய்திகளும் ஏனைய ஊடகங்களுக்கு தரவு மூலங்களாகப் பயன்படுகின்றன.
இவ்விணையத்தளத்துக்கு ஒருவர் தகவல் ஒன்றை வழங்கப் போகிறார் எனின், அதைப் பாதுகாப்பாக வழங்கப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் இணையத்தளத்திலேயே குறிப்பிடப்படுகின்றன. அவற்றின் அடிப்படையில் தகவல்களை வழங்க முடியும். தகவலை வழங்கியவரின் அடையாளம் ஆரம்பத்திலேயே மறைக்கப்படுவதால் மூலம் ஒருபோதும் அடையாளம் காட்டடப்பட மாட்டாது.
அரசாங்கங்கள், வர்த்தகம், பேச்சுச் சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் மட்டுப்படுத்தப்படல், ராஜதந்திரம், உளவு பார்த்தல், புலனாய்வு, யுத்தங்கள், கொலைகள், தடுப்புக்காவல்கள் போன்றன தொடர்பான பல விடயங்கள் ‘விக்கி லீக்ஸ்’ தளத்திலே வெளியிடப் பட்டிருக்கின்றன.
அவற்றுள் சூழலியல் காலநிலை, இயற்கை, விஞ்ஞானம், ஊழல், நிதி மற்றும் வரிகள், தணிக்கை கைத்தொழில் நுட்பம், துஷ்பிரயோகங்கள் போன்றன பற்றிய தகவல்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இவை யாவும் ஏதோ ஒரு காரணத்துக்காக வெளி உலகுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டவையாகும்.
அமெரிக்க- ஈராக்கிய யுத்தத்திலே ஃபளுஜா சிறைச்சாலை முக்கிய இடத்தை வகித்ததை நாம் அறிவோம். அச்சிறைச்சாலையின் நிலை பற்றிய ஐக்கிய அமெரிக்காவின் விளக்க அறிக்கை எப்படியோ ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்தில் வெளியாகியி ருந்தது. அதே போல 2007 ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்த அமெரிக்க இராணுவத் தள பாடங்கள் பற்றிய முழு விபர மும் கூட வெளியாகியிருந்தது.
2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கிழக்கு திமோர் போராளிகளின் தலைவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் சாட்சி ஆவணங்கள் கூட இவ்விணையத் தளத்திற்குக் கிடைத்திருக்கின்றன.
இத்தகைய ஆவணங்கள் எல்லாம் அந்தந்த நாடுகளின் உயர் மட்டங்களிலே மிகவும் இரகசியமாகப் பேணப்படுபவையாகும். இவையெல்லாம் எப்படி ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திற்குக் கிடைத்தன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஊடகங்களிலே வெளியாகும். சில தகவல்களும் ஆதாரங்களும் பின்னர் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தணிக்கை செய்யப்படுகின்றன. இணை யத்தில் வெளியாகும் அத்தகைய தகவல்கள் இத்தணிக்கையின் பின் நீக்கப்படுகின்றன.
அவ்வாறு நீக்கப்பட்ட பலவற்றை ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் சேமித்து வைத்திருக்கிறது.
2008 ஆம் ஆண்டு அமெரிக்க புலனாய்வுத்துறையினர் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்தை முற்றாகச் செயலிழக்கச் செய்ய எண்ணினர். இதற்காக 32 பக்க புலனாய்வு அறிக்கை ஒன்றைத் தயாரித்தனர். ஆனால் அந்த அறிக்கையும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திடம் சிக்கிவிட்டிருந்தது.
இப்படி எண்ணற்ற இராணுவ, அரச இரகசியங்கள் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே ஆதாரங்களுடன் கசிந்து கொண்டிருக்கின்றன.
காலநிலை மற்றும் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுகளின் உண்மை முடிவுகள் ஒருபோதும் உடனடியாக வெளியிடப்படுவதில்லை. இதற்கு அம்முடிவுகளின் நிச்சயமற்ற தன்மையும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.
ஆனால் அந்த ஆய்வுகளுக்காகச் சேகரிக்கப்பட்ட தரவுகளிலிருந்து முடிவுகளை வெளியிடும் அறிக்கைகள், மாதிரிகள் எனச் சகல விடயங்களும் ‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்துக்குக் கிடைத்திருக்கின்றன.
எவருமே எதிர்பார்த்திருக்காத பற்பல விடயங்களை ‘விக்கி லீக்ஸ்’ எவ்வித தணிக்கைகளும் இன்றி வெளியிடுகிறது.
கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்திலே திசைதிருப்பி சிறந்த எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் நோக்கிலேயே இத்தகவல்கள் வெளியிடப்படுகின்றன என்பதே ‘விக்கி லீக்ஸின்’ வாதமாக இருக்கிறது.
ஊழலற்ற திறந்த அரசாங்கம் ஒன்று அமைவதற்கு ‘விக்கி லீக்ஸ்’ காரணமாக இருக்கிறது. என்றும் விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள்.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளத்திலே வெளியிடப்படும் ஆவணங்களைச் சான்றுகளாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுககு நியாயமான தீர்வொன்று கிடைப்பதற்கு அந்த ஆவணங்களும் துணையாக அமையும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இன்று இணைய வசதி மூலை முடுக்குகளிலெல்லாம் பரவிவிட்டது. இணையத்தினூடு கோப்புகள் பல தாராளமாகப் பரிமாற்றப்படுகின்றன; பகிரப்படுகின்றன. அனுப்புநரிடமிருந்து பெறுநரைச் சென்றடையும் வரை அக்கோப்புகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை. அதற்கு ஒரு காரணம் அத்தொழில் நுட்பம் கறுப்புப்பெட்டித் தொழில்நுட்பம் ஆகும். மற்றையது கோப்புப் பரிமாற்றத்துக்கு எடுக்கும் நேரம் மிகவும் குறுகியது ஆகும்.
ஆனால் அந்தக் குறுகிய நேரத்துக்குள் நாம் பரிமாறும் மின் ஆவணங்கள் துரிதமாகப் பிரதி செய்யப்படக் கூடியவை. இப்பிரதி பண்ணாலானது, எமக்குத் தெரியாமலே நடைபெற்று அந்த ஆவணங்கள் வேறு எவருக்காவது விற்கப்பட்டுவிடும். அல்லது அவற்றின் உள்ளடக்கம் கசியவிடப்படும்.
மிகவும் இரகசியமான மின் ஆவணங்களில் உள்ள விடயங்களைக்கூட மிகவும் எளிதிலே கசிய விடமுடியும்.
ணிiணீrosoஜீt worனீ, tலீxt paனீ மற்றும் ஜிளிபி கோப்புக்களாகப் பரிமாற்றப்படும் தகவல்கள் மிக இலகுவாகப் பிரதி செய்யப்படக் கூடியவை.
இந்தச் செயற்பாடானது தற்போது பல சர்ச்சைகளைக் உருவாக்கியுள்ளது. இதைத் தடுக்கும் வழியிலே தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பங்களும் சங்கேத மொழி முறைமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆயினும் அத்தகவலின் பாதுகாவலர்களாலேயே வெளியிடப்படும் போது எந்தத் தொழில்நுட்பமும் பயனற்றுப் போய்விடுகிறது.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தளம் பிரபலமடைந்து வருவதானது. தகவல் பாதுகாப்புத் தொழில் நுட்பத்தையும் இன்னொரு புதிய பரிணாமத்துக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘விக்கி லீக்ஸ்’ இணையத்தில் தகவல்கள் கசிவதைத்தடுக்க பல புதிய நுட்பங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் ‘விக்கி லீக்ஸ்’, இணையத் தொழில் நுட்பத்தின் புதியதோர் பரிமாணத்துக்கு வித்திட்டது மட்டுமன்றி புதிய ஊடகக் கலாசாரத்துக்கும் வழிசமைத்துக் கொடுத்திருக்கிறது. இவை உலகை எங்கே கொண்டு சென்று விடப்போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment