Sunday, May 30, 2010

சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய் கசிவு



எங்கு பார்த்தாலும் சூழல் மாசடைதல், பூகோளம் வெப்பமடைதல், உயிரினங்கள் அழிந்து போதல் என சூழல் சம்பந்தமான பிரச்சினைகளையும் அவற்றிலிருந்து மீள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் பற்றியே மாநாடுகள் நடக்கின்றன. செய்திகள் வெளியிடப்படுகின்றன. மனித செயற்பாடுகளால் இயற்கை மீறப்படுகிறது என உணரப்பட்டதால் இயற்கையையும் அது சார்ந்த சூழலையும் பாதுகாக்கும் பொருட்டு பல நடைமுறைகளை மனிதன் ஏற்படுத் தத் தொடங்கினான். இயற்கையை மீறிய மனிதனே அதைப் பாதுகாக்கும் நடவடிக்கை யெடுப்பது வேடிக்கையான விடயம் தான். எனினும் அதை எற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திலே தான் மனித சமுதாயம் இருக்கிறது.

இயற்கை வளங்களும் உயிரினங்களின் பல் வகைமையும் துரிதமாக அழிந்து வருகின்ற நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக முனைந்து கொண்டிருக்கிறான் இந்த அதிபுத்திசாலை மனிதன்! இத்தகையதோர் நிலையிலே, மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவு சூழலியலாளர்களை மட்டுமன்றி முழு உலகையுமே கலங்கடிக்க வைத்திருக்கிறது.

சமுத்திரப் பகுதிகள் வளமானவை. உயிர்ச் சுவட்டு எரிபொருட்களும் அவை கொண்டிருக்கும் வளங்களுள் பிரதானமானவையாகும். இந்த எண்ணெய் வளம், சமுத்திரங்களிலே, பல்லாயிரம் அடி ஆழத்திற்குக் கிணறுகளைத் தோண்டுவதன் மூலம் அகழ்ந்தெடுக்கப்படுகின்றது.

சிலவேளைகளில் அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெய் கசிந்து சமுத்திரத்தின் நீர்ப்பரப்பிலே பரவத் தொடங்கும். இத்தகையதோர் நிலைமையே கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியும் ஏற்பட்டது.

பெயொண்ட் பெட்ரோலியம் எனப்படுவது எண்ணெய் அகழ்வில் ஈடுபடும் முன்னணி பிரித்தானிய நிறுவனங்களுள் ஒன்று. அது உலக சமுத்திரங்களின் பல இடங்களில் இயந்திர மேடைகளை அமைத்து ஆழ்துளை இயந்திரங்களின் மூலம் எண்ணெய் அகழ்வை மேற்கொள்கிறது. இந்நிலையில் மெக்ஸிக்கோ வளைகுடாவில், கரையிலிருந்து 48 மைல் தூரத்தில் இருக்கும் அந்நிறுவனத்தின் ஆழ்துளை இயந்திரம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் வெடித்தது. அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தொழிலாளர்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

பொதுவாக எண்ணெய் கிணறுகளில் எண்ணெய்க் கசிவைத் தடுக்கும் பாதுகாப்புக் கருவியொன்று பொருத்தப்பட்டிருக்கும். எண்ணெய்க் கசிவு கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், அக்கருவி விரைந்து செயற்பட்டு எண்ணெய் கிணற்றைத் தற்காலிகமாக மூடிவிடும்.

மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவைப் பொறுத்த வரையிலே, இந்தப் பாதுகாப்புக் கருவி இயங்க மறுத்தது. இதற்கு முகாமையாளர்களின் அலட்சியப் போக்கும் ஒரு காரணமென, இந்த எண்ணெய் கசிவு உயிர்தப்பிய தொழிலாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.



ஒரு கருவி செயலிழந்தால், அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் உப கருவி உடனடியாகத் தொழிற்பட ஆரம்பிக்கும். ஆனால் இங்கோ இரு கருவிகளுமே செயலிழந்திருந்தன. எனவே எண்ணெய் கசிவதும் தவிர்க்க முடியாததாயிற்று.

இந்த எண்ணைக் கசிவானது எண்ணிப் பார்க்க முடியாதளவு விசாலமானது. பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகவே ஆய்வாளர்கள் இந்த எண்ணெய் கசிவைக் கருதுகின்றனர். ஆரம்பத்தில் தினமும் 1000 பரல்கள் எண்ணெய் கசிவதாகக் கூறப்பட்டது. பின்னர் இம்மாதத் தொடக்கத்தில் தினமும் 5000 பரல்கள் எண்ணெய் கசிவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணெய் கசிவு தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட ஒளிப்படக் காட்சியின் அடிப்படையில், தினமும் 25,000 – 80,000 பரல்கள் வரையான எண்ணெய் கசிவதாகக் கூறப்படுகிறது.

கசிவு ஏற்படத் தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்பதே வருத்தத்திற்குரிய விடயமாகும்.

தினமும் 25,000 பரல்களுக்கும் அதிகமாகக் கசிந்து வரும் எண்ணெய் ஏற்படுத்தும், ஏற்படுத்தப் போகும் பாதிப்புக்கள் பாரதூரமானவையாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

எண்ணெய்க் கசிவு எனப் பொதுவாகக் குறிப்பிடப்பட்டாலும் அக்கசிவினுள் உயிர் வாயு, மசகெண்ணெய், சேறு, நீர் என்பனவும் காணப்படுகின்றன. நீரைவிட அடர்த்தி குறைந்த பதார்த்தங்கள் நீரின் மேற்பரப்பைச் சென்றடைய, நீரைவிட அடர்த்தி கூடிய பதார்த்தங்களோ சமுத்திரங்களின் அடியில் படிந்துவிடுகின்றன.

சமுத்திர நீரோட்டங்களின் காரணமாக இந்த எண்ணெய்க் கசிவு மெக்சிக்கோ வளைகுடாவிலிருந்து அதன் அயற்பகுதிகளுக்கும் பரவி வருகிறது. சாதாரணமாக இச்சமுத்திர நீரோட்டங்கள் ஒரு நாளைக்கு 80 முதல் 160 கி.மீ- வரையான தூரம் பயணிக்க வல்லவை. கசியும் எண்ணெயும் அவற்றுடன் சேர்ந்து பயணிக்கும். முதலில் லூசியானா, அலபாமா, மிசிசிபி மற்றும் புளோரிடா ஆகிய இடங்களின் கடற் பிராந்தியங்கள், கடற்கரைகள், சதுப்பு நிலங்களை அடையும் எண்ணெய்க் கசிவு, பின்னர் ஏனைய பிராந்தியங்களையும் சென்றடையும் என எதிர்வுகூறப்படுகிறது. தற்போது லூசியானாவின் சந்தெலூர் தீவுகளை எண்ணெய்ப் படை அடைந்துள்ளது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

ஆழ்கடலில், ஏறத்தாள 10 மைல்களுக்கு அப்பால் பரவியிருக்கும் இந்த எண்ணெய் கசிவு கட்டுப்படுத்தப்படாவிடில் சமுத்திர நீரோட்டங்கள் உள்ள பகுதியை வெகு விரைவில் அடைந்துவிடும் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.

ஏறத்தாள 4000 மைல் ஆழத்தில் உள்ள எண்ணெய்க் கிணற்றிலே ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்துவதொன்றும் இலகுவான காரியமல்ல. தர்க்க ரீதியிலான கொள்கைகளின் அடிப்படையில் பல வழிமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை அவை எவையுமே பூரண வெற்றியை அளிக்கவில்லை. பலவித புதிய வழிமுறைகளைப் பாவித்துக் கட்டுப்படுத்தும் சாத்தியக் கூறுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு வருகின்றன.

இரண்டு இடங்களில் எண்ணெய்க் கசிவைக் கொண்டிருக்கும் இந்த எண்ணெய்க் கிணற்றில், பெரிய கசிவு உள்ள பகுதியில் சிறிய விட்டமுடைய குழாயை உட்புகுத்தி, கசியும் எண்ணெயை அகற்றும் பணியை மேற்கொண்டனர். வினைத்திறன் மிக்கதாக இது அமையவில்லை. ஏனெனில், கசியும் எண்ணெயில் ஐந்திலொரு பகுதியை மட்டுமே வெளியேற்ற முடிந்தது.

அதேபோல, பாரம்பரிய எண்ணெய்க் கசிவுப் பாதுகாப்பு முறையான பாதுகாப்புக் கிணறுகள் அமைத்தலும் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதற்குச் சில மாதங்கள் எடுக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மசகு எண்ணெயைப் பிரிகையடையச் செய்வதற்காக வளைகுடாவிலே ஏறத்தாழ 700,000 கலன்கள் இரசாயனப் பதார்த்தம் விசிறப்பட்டுள்ளது. அதேபோல் கசிவடையும் எண்ணெய்க் கிணற்றினுள்ளும் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவிலே எண்ணெயைப் பிரிகையடையச் செய்வதற்காக மிகவும் அதிகளவில் இரசாயனப் பதார்த்தம் பாவிக்கப் பட்ட சம்பவமாக இந்த மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய் கசிவு கருதப்படுகிறது. அத்துடன் வளைகுடாவின் ஏனைய எண்ணெய் அகழ்வுகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.




இப்போது பாவிக்கும் இரசாயனப் பதார்த்தத்தைவிட நச்சுத் தன்மை குறைவாக இருக்கும் இரசாயனப் பதார்த்தத்தைப் பாவிக்குமாறு பெயொன்ட் பெற்றோலியக் கம்பனியை வொஷிங்டனின் சூழல் பாதுகாப்பு எச்சரித்துள்ளது.

இந்த இரசாயனப் பதார்த்தங்கள் நீர் மேற்பரப்புகளில் படிந்துள்ள எண்ணெய்ப் படைகளை அகற்றுவதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதுடன் எண்ணெய் கசிவு கரையை அடைந்து விடாமலும் தடுக்கின்றன. ஆனால் மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவைப் பொறுத்த வரையில் இந்த முறைமையாலும் எண்ணெய்க் கசிவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

மெல்ல மெல்லக் கரையை அணுகிய மசகெண்ணைய்ப் படிவு கடற்கரைகளையும் கடற்கரைகளையொட்டிய சதுப்பு நிலங்களையும் பாழ்படுத்தத் தொடங்கிவிட்டது.

எண்ணெயையும் நீரையும் பகுத்து எண்ணெயை மட்டும் உறிஞ்சும் வகையிலான பஞ்சு பொருளொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது களியாலும் பிளாஸ்டிக்காலும் தயாரிக்கப்பட்டது. இந்தப் பதார்த்தம் வளைகுடாவின் எண்ணெய்க் கசிவை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குப் போதுமானது. ஆனால் எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியமானதென்பது சந்தேகத்துக்குரிய விடயமே!

சில நுண்ணுயிர்கள், இயற்கையாகவே பெற்றோலியத்தைப் பிரிகையடையச் செய்பவை. மரபுரிமை ரீதியாக வினைத்திறன் மிக்கனவாக மாற்றப்பட்ட இத்தகைய நுண்ணுயிரிகளை உருவாக்குவதில் பல நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. ஆனால் இத்தகைய உயிரினங்களை சமுத்திரங்களில் பரவ விடும் முறையின் வினைத்திறனும் இதுவரை அறியப்படவில்லை. ஏனெனில் அவை ஆய்வு கூடத்திலே நல்ல ஆரோக்கிய மான, நிறைந்த போசனையுடைய சூழலிலே வளர்க்கப்பட்டவை. சமுத்திரச் சூழலின் உவர்த்தன்மையும் குறை போசனையும் அவற்றை இறக்கச்செய்து விடலாமென எதிர்வுகூறப்படுகிறது.

இரசாயனப் பதார்த்தங்களைச் சேர்த்து கசிவடையும் எண்ணெயை எரிக்கும் செயற்றிட்டம் 1970 களில் ஆரம்பிக்கப்பட்டது. நீர் மேற்பரப்பிலே சேரும் எண்ணெய் கசிவுப்படலம் ஒரு மி.மீ. முதல் 6 மி. மீ. வரை தடிப்பானதாகும். இம்முறைமை மூலம் நீர் மேற்பரப்பிலுள்ள இத்தகைய தடிப்பான எண்ணெய்ப் படையை வினைத்திறன் மிக்க முறையில் அகற்றமுடியுமென நம்பப்படுகிறது.
கசிந்து பெருக்கெடுக்கும்
மசகு எண்ணெய்


அலஸ்கா பகுதியில் 1989 ஆம் ஆண்டு ஒரு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. அங்கு கசிவடைந்த எண்ணெயை அகற்ற ஒருவகை நுண்ணுயிர் பாவிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பூரண வெற்றியை அளிக்கவில்லை. ஏனெனில் அலஸ்கா எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட பகுதி இருண்ட குளிர் வலயமாகும். ஆனால் மெக்சிக்கோ வளைகுடா அத்தகையதல்ல. அது உஷ்ணமான, சூரிய ஒளி நன்கு ஊடுருவக் கூடிய பகுதியாகும். இச்சூழல் அலஸ்காவின் சூழலுடன் ஒப்பிடுகையில், நுண்ணுயிர்கள் வளர்வதற்குச் சாதகமானது. ஆனால் எண்ணெய்க் கசிவு சமுத்திரப் படிவுகளுடன் கலந்துவிடுவதால் அதனை இம்முறையால் நீக்குவது சற்றுக் கடினமானது. ஏனெனில் சமுத்திரப் படிவுகளில் ஒட்சிசன் செறிவு மிகவும் குறைவாகக் காணப்படும். இந்த வகை நுண்ணுயிர்களோ? தாம் நன்கு சுவாசிக்கக் கூடிய சூழல் காணப்பட்டால் மட்டுமே தொழிற்படு நிலையில் இருக்கும். ஆகையால் சமுத்திரப் படிவுகளில் அவை மெதுவாகவே தொழிற்படும்.

கடந்த காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட சிறியளவிலான எண்ணெய்க் கசிவுகள், சமுத்திரப் படிவுகளில் 20 அடி ஆழத்திற்கு இன்னும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த இயந்திர மேடையில் ஏற்பட்ட கசிவை, புனல் போன்ற அமைப்பு மூலமும் மெதேன் ஐதரைட் பளிங்குகள் மூலமும் கப்பல் ஒன்றிற்குள் சேகரிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியிலேயே முடிந்தது.

இந்த முயற்சிகள் எவையுமே சாதாரணமானவையல்ல. அவற்றை மேற்கொள் வதற்கான செலவும் மிக அதிகமாகும். ஆரம்பத்தில் அமெரிக்க அரசினால் அச்செலவு பொறுப்பெடுக்கப்பட்டிருந்தது. ‘பெயொன்ட் பெட்ரோலியம்’ நிறுவனத்தால் தற்போது பொறுப்பெடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய்க் கசிவினால் ஏற்பட்டுள்ள நட்டமே பல பில்லியன் டொலர்களைத் தாண்டியிருக்கும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த ஏற்படும் செலவுகளும் அதனால் சூழலுக்கு ஏற்படும் பிரச்சினைகளும் கணக்கிடப்பட்டால் இன்னும் பல பில்லியன் டொலர்களாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது-

மிகவேகமாகப் பரவி வரும் எண்ணெய்ப் படலத்தால் கடல் வாழ் உயிரினங்கள் பல அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. அதுமட்டுமன்றி கடற்கரையோரங்களும் அவற்றையண்டிய சதுப்பு நிலங்களும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. சதுப்பு நிலங்களுக்குள் எண்ணெய்க் கசிவு சென்று படியத் தொடங்கினால் மீட்சியே இல்லை என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

பல கடல்வாழ் உரியங்களின் உறைவிடமாகவிருக்கும் சதுப்பு நிலங்கள் உயிர்களேயற்ற வலயங்களாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனக் கூறப்படுகிறது.

கடல்வாழ் உயிரினங்களான நண்டுகள் முதல் திமிங்கிலங்கள் வரை அச்சுறுத்தலுக் குள்ளாகியுள்ளன. இந்த நீர்ப்பரப்பில் மீன்பிடி தடைசெய்யப்பட்டுள்ளது- உயிரினங்களும் மரங்கள் மற்றும் புற்களும் அழியத் தொடங்க, உயிர்ச்சமநிலை குலைக்கப்படும். அதனால் இயற்கை அனர்த்தங்கள் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் அதிகரிக்கின்றது. நிலைமை மேலும் மோசமடைந்தால் கடல் மட்டம் உயரலாம் எனவும் தீவிர புயல்கள் ஏற்படலாமெனவும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

உலகிலே வர்த்தக ரீதியாகப் பிடிக்கப்படும் மீன்களின் 1/3 பகுதி லூசியானாவின் கடற் பகுதியிலேயே பிடிக்கப்படுகிறது. அத்துடன் இந்தக் கடற் பிராந்தியத்திலே தான் உலகிலேயே அதிகளவான மட்டி உற்பத்தியாகிறது. அத்துடன் மெக்சிக்கோ வளை குடாவும் அதனை ஒட்டிய பகுதிகளும் சுற்றுலாத்துறைக்கும் எண்ணெய் அகழ்வுக்கும் பிரசித்தமானவை.

ஆனால் இன்று யாவுமே ஸ்தம்பித்துப் போயுள்ளன. சுற்றுலாத்துறை, மற்றும் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் பின்னடைவுகளால் ஏற்படப் போகும் விளைவுகளும் சூழல் தொகுதிகளின் சமநிலைக் குலைவால் ஏற்படப் போகும் விளைவுகளும் கணக்கிடப்பட முடியாதனவாக மாறிவிட்டன

ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகளில் கசிவு ஏற்படுவதற்கு மனிதர்களின் கவனயீனமே காரணம்.

இயந்திரங்களில் உருவாகும் சிறிய கோளாறுகளும், விஞ்ஞானிகள் மற்றும் பெயொன்ட் பெட்ரோலியம் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் கவனக் குறைவுமே மெக்சிக்கோ வளைகுடாவின் எண்ணெய்க் கசிவுக்குக் காரணமாகியுள்ளது. கடந்த காலங்களிலும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ள போதிலும் இந்தச் சம்பவமே பேரழிவை ஏற்படுத்தும் பாரதூரமான எண்ணெய்க் கசிவாகக் கருதப்படுகிறது.

எண்ணெய் கசிவுச் சம்பவங்களைப் பொறுத்தவரையில், உருவாக்கப்பட்ட விளைவுகளிலிருந்து சூழலைப் பாதுகாப்பதை விட எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத் துவதே சிறந்த பொறிமுறையாகக் கருதப்படுகிறது. மெக்சிக்கோ வளைகுடா, எண்ணெய்க் கசிவைப் பொறுத்தவரையிலேயே, என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாம் இலங்கையில் வசிப்பதால் அது எமக்குத் தேவையற்றவிடயம் என அலட்சியப்படுத்தவும் முடியாது. ஏனெனில், மெக்சிக்கோ வளைகுடா எண்ணெய்க் கசிவு ஏற்படுத்தப் போகும் உலகளாவிய மாற்றங்களில் நாங்களும் பாதிக்கப்படப் போவது உறுதி!

No comments:

Post a Comment