Saturday, May 8, 2010

கேரளத்தின் பெருமை பேசும் பத்மநாபபுர அரண்மனை


முக்கடல்களாகிய அரபிக் கடல், இந்து சமுத்திரம், வங்களா விரிகுடா ஆகிய மூன்றும் ஒன்றாகச் சங்கமிக்கும் கன்னியா குமரிக் கடற்கரை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கோடி மாவட்டமே கன்னியாகுமரியாகும்.

அது கேரள தமிழக மாநிலங்களின் எல்லை மாவட்டங்களிலும் ஒன்று. தமிழகத்திற்கே உரித்தானது. மிகவும் தொன்மையான வரலாற்றையுடையது. தமிழகத்தின் அடையாளமான வெம்மையின் ஆதிக்கம் கூட, சென்னை போன்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு குறைவாகவே இருக்கும்.

எங்கு பார்த்தாலும் குளிர்ச்சிதரும் தென்னை, இறப்பர் தோட்டங்களைக் கொண்டிருக்கும். பசுமையான நாகர்கோவில் பிரதேசமும் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே அமைந்திருக்கிறது.

யாழ்ப்பாணத் தமிழின் பாணியையும், மட்டக்களப்புத் தமிழின் பேச்சுத் தொனியையும் நாகர்கோவில் மக்கள் பேசும் தமிழில் தெளிவாக உணரலாம். தமிழகத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் பேசுவது மலையாளப் பாணியாகவே தெரியும். நாகர் கோவில், கேரள மாநிலத்தின் எல்லையில் இருப்பதால் மொழிவழக்கில் மலையாளத்தின் பாதிப்பு இருப்பது தவிர்க்க முடியாததே.

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் அடிக்கடி பிரயோகிக்கப்படும் ‘பின்ன’ போன்ற பல சொற்பதங்கள் அவற்றிற்கேயுரித்தான தொனி களுடன் பயன்பாட்டில் இருப்பது வியக்கவைக்கிறது. ஒன்றாய் இருந்த நிலம், கடலன்னை கொண்ட சீற்றத்தால் பிரிந்து தனித்தனியான தோ என்று பலர் ஊகங்களைத் தெரிவிக்கின்ற போதிலும், அவற்றை எல்லாம் வலுப்படுத்து கின்ற ஆதாரமாகவே நாகர்கோவில் மக்களின் கலாசாரம் தெரிந்தது.

நகர்கோவிலிலிருந்து கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் செல்லும் வழியிலே, தக்கலை எனும் இடத்தில் பத்மநாபபுரம் என்ற ஊர் இருக்கிறது.

கேரளத்து திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசித் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியமைக்கு கம்பீரமாய் நின்று அழகு மிளிர வசீகரிக்கும் பத்மநாபபுரம் கோட்டையும் அரண்மனையும் சான்றுகளாய் அமைகின்றன.

எந்தவித ஆடம்பரங்களுமின்றிய இந்த அரண்மனை முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் மரவேலைப் பாடுகளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

இந்த அரண்மனை 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டது. பின்னர், காலத்துக்குக் காலம் ஆட்சி புரிந்த மன்னர்களால் விஸ்தரிக்கப்பட்டது.

நவீன திருவாங்கூர் சமஸ்தானத்தின் மூலகர்த்தாவாக மன்னர் மாத்தாண்ட வர்மா கருதப்படுகிறார். இவரது ஆட்சிக் காலம் கி.பி. 1729 - 1758 வரையான காலப் பகுதியாகும். இக் காலப்பகுதியில் தான் திருவாங்கூர் சமஸ்தானத்தில் பல மறுமலர்ச்சிகள் ஏற்பட்டன.

மாளிகைத் தொகுதியின் பல பகுதிகள் இம்மன்னனின் காலத்திலேயே கட்டப்பட்டன. திருவாங்கூர் சமஸ்தானம் பலம்பொருந்திய சமஸ்தானமாக மாறியதும் கூட மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் காலத்திலேயே!

அரண்மனையில் வைக்கப்பட்டிருக்கும் வரலாற்று நிகழ்வுகள் தொடர்பான ஓவியங்களும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுடனேயே தொடர்புபட்டவை. இந்த சமஸ்தானத்தின் கடைசி மன்னராக சிறி சித்திரதிருநல் பாவவர்மா (1931 - 1949) கருதப்படுகிறார்.

பிரித்தானியருடைய ஆட்சிக் காலத்திலும் இந்த சமஸ்தானம் சுதந்திரமாகவே இயங்கி வந்தது. சில கூரைகள் ஒரே மரத்திலே கடைந்தெடுக்கப்பட்ட வேலைப்பாடுகளையுடையவை.

அரண்மனையாகக் கருதுகையில் கேரளக்கட்டடக் கலை யின் பாணி ஆதிக்கம் செலுத்தினாலும் சில பகுதிகள் விஜயநகரப் பாணியையும், சில பகுதிகள் மேற்கத்தையப் பாணியையும் ஒட்டி அமைக்கப்பட்டிருக்கின் றன. ஏறத்தாழ 127 அறைகளையுடைய இவ்வரண்மனையில் பல அறைகள் இன்னும் பூட்டப்பட்டே காணப்படுகின்றன.

பத்மநாபபுர அரண்மனையின் படிகளும் வாயில்களும் ஒடுக்கமானவை. எதிரி களின் அச்சுறுத்தல் களிலிருந்து அரச குடும்பம் இலகுவாகத் தப்புவதற்கு ஏற்றவகையில் தான் அவை அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளனவோ என்று எழும் சந்தேகத்தை அரண்மனையில் காணப்படும் சுரங்கப் பாதை உறுதி செய்கிறது.

ஆறரை ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அரண்மனை வளாகத்திலுள்ளே அருங்காட்சியகமொன்றும் அமைந்துள்ளது. தென்னிந்தியாவிலுள்ள அருங்காட்சியகங்களில், கல்வெட்டுக்களுக்கான மிகப் பெரிய அருங்காட்சியகம் இந்த பத்மநாபபுரம் அருங்காட்சியகமேயாகும்.

பத்மநாபபுரம் அரண்மனைக்குள் செல்லும் வாசலின் இடப்புறத்திலே, அரண்மனை கட்டப்பட்ட அதே பாணியிலேயே இந்த அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் 1962 இலே ஆரம்பிக்கப்பட்டு, அரண்மனையை ஒத்த பாணியுடனும் கட்டமைப்புடனும் 1993 இலே முடிவடைந்தது.

இங்கே வைக்கப்பட்டுள்ள பொருட்கள் விலை மதிக்க முடியாதவை. முன்னோர்களின் செல்வச் செழிப்பை உணர்த்தும் அவை, பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் தன்மையன. அப்பொருட்களுக்குள் மரச்சிற்பங்கள், கருங்கற் சிலைகள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பழங்கால நாணயங்கள், முன்னைய காலங்களில் பாவிக்கப்பட்ட ஆயுதங்கள், வாள்கள், கேடயங்கள், அரண்மனையின் உப்பரிகை மாளிகையில் வைக்கப்பட்டிருக்கும் ஓவியப் பிரதிகள், திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிகழ்வுகளை விளக்கும் முப்பரிமாண விளக்கப் படங்கள் போன்றவற்றால் அருங்காட்சியகம் நிறைந்து காணப்படுகிறது.


பொருட்கள் யாவுமே மிகவும் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் பேணப்படுகின்றன. நூதனசாலையில் செயற்கை வெளிச்சத்தின் பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பகலிலும் கூட இருள் சூழ்ந்த தன்மையொன்றைக் காணக் கூடியதாகவிருக்கிறது. இந்த அருங்காட்சியகமும் நாற்சார் வீடமைப்பை உடையது. இங்குள்ள பொருட்கள், முன்னைய காலங்களிலே பயன்படுத்தப்பட்ட போர் உத்திகளையும் தென் கேரளத்தின் சமூகக் கட்டமைப்புக்களையும் நன்கு விளங்குகின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள், சிலைகள் மற்றும் கல்வெட்டுக்கள் யாவும் 9ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரையிலான காலத்திற்குட்பட்டவை. 10 ஆம் நூற்றாண்டின் குபேரன் சிலையும், சப்த கன்னியர்களின் சிலையும், சிற்பக்கலையின் தாற்பரியத்தை எடுத்தியம்புகின்றன.

இங்கு காணப்படும் மரச்சிலைகளில் பெரும்பாலானவை பத்மநாபபுரத்திலுள்ள பழம்பெரும் கோயிலாகிய நீலகண்ட சுவாமி கோயிலின் பழைய தேரிலே காணப்பட்டவையாகும். இந்த மரச்சிலைகள் உலோகச் சிலைகளோ? என எண்ணுமளவிற்கு பளபளத்துக் கொண்டிருந்தன.

ஏறத்தாழ 300 வருடங்கள் பழைமையான சிலைகள் கூட, நேற்றுத்தான் செதுக்கி முடித்த புதிய சிலைகள் போல காணப்படுகின்றன.

மரச்சிலைகள், 17ம் நூற்றாண்டையும் அதற்குப்பிற்பட்ட காலத்தையும் சேர்ந்தவை. 17 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்துச் சிலைகள் யாவுமே கருங்கற்களால் ஆனவை. ஆனால் கலைநயகத்தைப் பொறுத்த வரையிலே மரச்சிலைகளும் கருங்கற் சிலைகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

சிலைகளின் வடிவமைப்பிலுள்ள பரிமாணத் தொடர்புகளும் முகங்களில் காணப்படும் சிலைகளுக்கு உயிரோட் டத்தை வழங்குகின்றன. ஒவ்வொரு சிலையையும் செதுக்கி முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ? எத்தனை பேர் உழைத்திருப்பார்களோ? என்ற ஆச்சரியம் கலந்த வினாக்கள் அவற்றை பார்வையிடுவோர் மனதில் நிச்சயம் எழும். சிலைகள் வைக்கப்பட்ட மண்டபத்தைத் தாண்டிச் செல்ல, அடுத்து மண்டபத்தில் முன்னைய காலங்களிலே பாவிக்கப்பட்ட ஆயுதங்களுடன் வாள்கள், கத்திகள், கேடயங்கள், கைவிலங்குகள், கால்விலங்குகள் போன்றனவும் தூக்கிவிடுவதற்குப் பயன்பட்ட இரும்புக் கூண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. குற்றம் செய்வோருக்கும் துரோகிகளுக்கும் வழங்கப்பட்ட தண்டனையின் கொடூரத்தை தூக்கிலிடும் இரும்புக்கூடு தெளிவாக விளங்குகிறது.

ஆரம்ப காலங்களில், குற்றங்களுடன் தொடர்புடைய வர்களை இந்தக் கூட்டில் அடைத்து, திறந்த வெளிகளிலுள்ள மரங்களில் தொடங்கவிடுவார்களாம். தூக்கிலிடப்பட்டுள் மனிதனின் மாமிசத்தைக் கழுகுகள் உணவாகக் கொள்ளத் தொடங்க, அவன் மிகவும் கொடூரமான மரணத்தை மெல்ல மெல்ல எதிர்கொள்வானெனக் கூறப்படுகிறது.

அடிப்படை மனித உரிமைகளுக்கப்பாற்பட்ட இத்தகைய கொடூரமான தண்டனைகள் திருவாங்கூர் சமஸ்தானத்திலே நிலவிவந்தமை மறுக்கப்பட முடியாத உண்மையாகத்தான் இருக்கிறது.

இங்கே, திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னர்களும் தளபதிகளும் பாவித்த உடைவாள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னன் மார்த்தாண்டவர்மா, தளபதி டிலானாய் போன்றோரின் வாள்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் பொற்காலமாக, மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் காலம் (கி. பி. 1729 - 1758) கருதப்படுகிறது. தளபதி டிலானாய் ஒரு ஒல்லாந்தராவார். அவரது திறமை கண்டு, மன்னர் அவரைத் தமது படைத் தளபதியாக்கினார். டிலானாயின் முயற்சியில் மன்னனின் சேனைகள் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று மேலும் விஸ்தரிக்கப்பட்டன. மண்கோட்டைகள் எல்லாம் கருங்கல் கோட்டைகளாக விஸ்வரூபமெடுத்தன.

திருவாங்கூர் சமஸ்தானத்தின் வரலாற்றில் நடந்த முக்கியமான நிகழ்வு கள் முப்பரிமாண விளக்கப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.

அவை மன்னன் மார்த்தாண்ட வர்மா வின் ஆட்சியையும், அவரைக் கொல்ல எட்டு வீட்டுப் பிள்ளைமார் செய்த சதிச் செயல்களையும் பிரமிக் கத்தக்க வகையிலே வெளிப்படுத்துகின்றன.

ஒருமுறை மன்னன், இறைவனைத் தரிசிக்கும் பொருட்டு கோயிலுக்குத தனியே சென்றிருந்தானாம். இதை அறிந்து கொண்ட எதிரிகள் மன்னனைக் கொல்லும் பொருட்டு, கோவிலின் வாசலிலே வாள்களுடன் காத்திருந்தனராம். கோவிலிலுள்ள மன்னனும் பூசாரியும் மட்டுமே இருந்தனராம். மன்னன் வெளியே வந்தால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த பூசாரி, மன்னனைப் பணிந்து மன்னனது ஆடையை அணிந்து வெளியே வந்து எதிரிகளின் வாள் வீச்சுக்கு இரையாகினானாம். மன்னனோ பூசாரியின் உடையுடன் வெளியே வந்து தப்பிச் சென்றானாம்.

இது போன்ற பல சம்பவங்கள் முப்பரிமாண விளக்கப்படங்களாக உயிரோட்டத்துடன் உலாவருகின்றன.

அவற்றுடன் திருவாங்கூர் சமஸ்தானத்திலேயே பாவிக்கப்பட்ட நாணயங்களும் தனியாக வடிவமைக்கப்பட்ட பெட்டிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த சமஸ்தானம், வல்லமை படைத்த செழிப்பானதோர் அரசாக விளங்கிய காலங்களிலிருந்து பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலும்கூட, திருவாங்கூர் சமஸ்தானத்தின் நாணயங்களும், தபால் தலைகளும் புழக்கத்திலிருந்திருக்கின்றன.

பொதுவாக திருவாங்கூர் சமஸ்தான நாணயங்களில், மகா விஷ்ணுவின் உருவங்களே அதிகளவில் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த சமஸ்தானத்தின் மன்னர்கள் யாவரும் தம்மை மகா விஷ்ணுவாகிய ஸ்ரீபத்மநாபனின் தாசர்களாகக் கருதி, அவன் பிரதிநிதிகளாக நல்லாட்சி புரிந்து வந்தனர். அதனாலேயே நமது சமஸ்தானத்தின் தலைநகருக்கு, பத்மநாபபுரம் எனப்பெயர் சூட்டி நாணயங்களிலும் மகா விஷ்ணுவின் உருவத்தைப் பொறித்தனர்.


நாணயங்கள் வைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தையடுத்து வருவது படிங்காலக் கல்வெட்டுக்கள் வைக்கப்பட்டுள்ள கூடமாகும். இந்தக் கூடமே தென்னிந்தியாவிலுள்ள, கல்வெட்டுக்களுக்கான மிகப் பெரிய காட்சிக் கூடமாகக் கருதப்படுகிறது. இங்கே, எண்ணற்ற கல்வெட்டுக்கள் கிரமமாக அடுக்கப்பட்டு, விபரங்கள் மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் குறிக்கப்பட்டுள்ளன.

கிரந்தத் தமிழ், வட்டெழுத்துக் களில் எழுதப்பட்டுள்ள சமஸ்கிருதத் தமிழ், தமிழ், மற்றும் மலையாளம் கல்வெட்டுக்கள் பலவும் இங்கே காணப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை 9ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. வேணாடு, சோடி, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன.

மன்னர்கள் கோயில்களுக்கு வழங்கிய நிலத்தானங்கள் மற்றும் பொருட் தானங்கள் தொடர்பான விடயங்கள் கருங்கற்களிலே கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, கோவில்களின் பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தியமை, கோயில்களின் சொத்துரிமை போன்ற பல தகவல்கள், காலத்துக்கும் அழியாத விதத்திலே ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. தென்குமரியில் உள்ள கோயிலொன்றுக்கு -விஜாதி இராஜசோழன் வழங்கிய நிலம் தொடர்பான செய்தி யைக் கூறும் கல்வெட்டு, சோழப் பேரரசு தென் குமரி வரை பரந்திருந்ததைத் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

போரில் வீழ்ந்த வீரர்களுக்காக அமைக்கப்படும் நடுகற்கள் இரண்டும் இங்கே காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அரசர்கள், தமது நன்மையையும் கருதி கோவில்களுக்கு உப்பளங்களையும் நிலங்களையும் கோயில்களுக்குத் தானமாக வழங்கியதை 1 ஆம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்று உணர்த்துகிறது.

பஞ்சம் நிலவுகின்ற காலங்களில் மன்னர்களால் வழங்கப்பட்ட வரிவிலக்கு பற்றிய குறிப்புக்களும் வீதிகளின் பெயர் மாற்றங்கள் மற்றும் குடியேற்றங்கள் தொடர்பான குறிப்புக்களும் கூடக் காணப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டிருக்கும் செப்பேடுகளும் கூட அத்தகைய பல குறிப்புக்களைக் கொண்டுள்ளன.


தொல்லியல் துறையில் ஆர்வமுடைய புதியவர்களைப் பிரமிக்க வைத்து, மேலும் ஆர்வத்தைத் தூண்டும் அதிசயங்களாகவே இந்தக் கல்வெட்டுக்கள் தென்படுகின்றன. தேவையான இடங்களிலெல்லாம் சலிக்காமல் விளக்கமளிக்க பயிற்றப்பட்ட உதவியாளர்களும் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் வரலாறுகளின் மடியில் புரண்டோடி வருகின்ற காலத்தை, வரலாற்றின் துணையுடன் அசை போடும் சுகமான அனுபவத்தை பத்மநாபபுரம் அரண்மனையும் அருங்காட்சியகமும் தருகின்றனவென்றால் மிகையாகாது.

4 comments:

Anonymous said...

Saratha,
This article was written very well. Great work Saratha! I'm proud of you.
Siva aunty

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

thankyou siva aunty...

வாசுகி said...

கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. படங்களும் தான்.
பத்ம நாபபுர அரண்மனை கேரள மக்களின் நிர்வாகத்திலா தானே இருக்கிறது.
பழைய கலாச்சாரங்களை போற்றி பாதுகாப்பதில் கேரள மக்களை மிஞ்ச முடியாது.
தமிழ் நாட்டில் பல அரண்மனைகள் கவனிப்பாரற்று இருக்கிறது.
ராஜ ராஜன் சமாதி கேரளாவில் இருந்திருந்தால் அதற்கு கிடைத்திருக்கும் மரியாதையே வேறு.

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

நன்றி அக்கா... கேரள தொல்லியல் துறை தான் அரண்மனையைப்பராமரிக்கிறது..இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வரலாற்றுச்சின்னங்கள் நிறைந்து காணப்படுவதால் அவர்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை போலும்... அங்குள்ளவற்றுடன் பார்க்கையில் இங்குள்ளவை........????

Post a Comment