Sunday, October 2, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் -1

 யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி..
கேட்டதுமே ஒரு வித குற்ற உணர்வு எம்மை  உறுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.  எமக்கே உரித்தான வாழ்வியலைப் பற்றி எமக்குக் கூற ஒரு கண்காட்சி.. அதை   யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின்  வரலாற்றுத் துறை ஏற்பாடு செய்திருந்தது என்பது இக்கண்காட்சிக்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.   இந்தக் கண்காட்சியால் ஏற்பட்டிருக்கும் சகல சாதகமான மாற்றங்களுக்குமான பெருமைகூட வரலாற்றுத் துறையையே சாரும்.

எமது நிலையை எண்ணி நாம் நாண வேண்டிய தருணம் இது; இனியும் தூங்கிக் கொண்டிருக்காமல்,  விழித்தெழ வேண்டிய தருணம்   என்று  சொல்லாமல் சொல்லிய பெருமையும்  இந்தக் கண்காட்சியையே சாரும்.
ஏறத்தாழ 15-20 வருடங்களுக்கு முன்னர் பாவனையிலிருந்த பொருட்கள் எல்லாம் இன்று அரிய பொருட்களாகி விட்டன என்பதைக் கூட  இந்தக் கண்காட்சியைப்  பார்த்த பின்னரே  பலரால் உணர முடிந்தது.   அதாவது , இது வரை காலமும் நாம் எத்தகைய இருளிலே மூழ்கியிருந்திருக்கிறோம் என்பது தெரிகிறதல்லவா?

கடந்த 24 ஆம் திகதி தொடங்கிய இக் கண்காட்சி கடந்த 27 ஆம் திகதி நிறைவு பெற்றது. யாழ்.பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் வசந்தி அரியரட்ணம், பேராசிரியர்  சி. பத் ம நாதன், பேராசிரியர்  ப. புஷ்பரட்ணம் போன்றோரின் ஆதரவு, வழி காட்டல்களுடன்  இனிதே ஒழுங்கு செய்யப் பட்டிருந்தது. கண்காட்சி நடந்து கொண்டிருக்கும் அதே வேளை ஆய்வரங்குகளும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

பல்கலைக்கழக நூதன சாலையில் இருந்த பொருட்களுடன்,  நிறுவனங்கள், ஆலயம் போன்ற பொது அமைப்புகள்,  பொது மக்களிடம் சேகரிக்கப் பட்ட பொருட்களும்,   மாணவர்களால் தயாரிக்கப் பட்ட மாதிரி உருக்களும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. யாழ்ப்பாண வாழ்வியலின் அம்சங்கள் சில புகைப் படங்கள் வாயிலாகவும்  காட்டப்பட்டிருந்தன.

இறை வழிபாடு, கிராமிய நடனங்களுடனான வரவேற்பு என ஆரம்பமாகிய கண்காட்சி தொடர்ந்து நான்கு நாட்களுக்கு நடைபெறும் எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் ஆர்வலர்களின் ஒருமித்த வேண்டுகோளுக்கமைய ஐந்தாவது நாளாகவும் நடைபெற்று கடந்த புதன் கிழமையுடன் நிறைவு பெற்றது.
ஆரம்ப விழாவின் பிரதம அதிதியாக தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் கலா நிதி செனரத் திச நாயக்க கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக யாழ். பல்கலைக் கழக துணை வேந்தர் வசந்தி அரியரட்ணமும், கௌரவ அதிதிகளாக யாழ். மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, பேராசிரியர் சி. பத்ம நாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதிதிகளின் உரையைத் தொடர்ந்து பேராசிரியர் சி. பத்மநாதன் எழுதிய யாழ்ப்பாண  இராச்சியம் -ஒரு சுருக்கவரலாறு என்ற நூலும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

கண்காட்சி அரங்கங்களின் நுழைவாயிலை பாரம்பரிய சொக்கட்டான் மணவறை அலங்கரித்தது. மாவிலை, தோரணங்கள், தானியக் கோலம், மண் விளக்குகள்  போன்றனவும் அலங்கரிக்கத் தவறவில்லை.
கண்காட்சியை ஏற்பாடு செய்யத்தொடங்கிய போதே  பல் கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறையினர் குறிப்பாக மாணவர்களும் விரிவுரையாளர்களும் சிறு குழுக்களாகப் பிரிந்து தொலை தூர இடங்களுக்கெல்லாம் வீடு வீடாகச் சென்றனர்.  இக் கண்காட்சி பற்றித் தெளிவு படுத்தி, ஒவ்வொருவரிடமும் இருக்கும் அரிய பொருட்களைச் சேகரித்தனர். பத்திரிகைகளிலே விளம்பரங்களும் பிரசுரிக்கப் பட்டன. அவற்றைப் பார்த்த மக்கள் பலர் தாமாகவே முன் வந்து அத்தகைய அரிய பொருட்களை வழங்கியிருந்தார்கள். சிலர் தமது முகவரியைக் குறிப்பிட்டு தகவல்  அனுப்பியிருந்தார்கள். அத்தகையோரிடம் வரலாற்றுத் துறையினர் நேரடியாகச் சென்று பொருட்களைப் பெற்றுக் கொண்டனர். சிலர், பல்கலைக்கழகத்துக்காகவே அப்பொருட்களை வழங்கியிருந்தார்கள்.  சிலர் கண்காட்சி முடிந்த பின் மீளக் கையளிக்க வேண்டுமென இரவலாக வழங்கியிருந்தார்கள். இக்கண்காட்சிக்கு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பையும் எம் மக்களிடம் இருந்த , இருக்கின்ற அரும்பெருஞ்சொத்துக்களின் பெறுமதியையும்  எம் யாழ்ப்பாண வாழ்வியல் எத்துணை செழிப்பானதாக இருந்தது என்பதையும் இக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எடுத்தியம்பின.

அதே வேளை வரலாற்றுப் பெறுமதியுடைய பொருட்களைத்  தம்மிடம் ஒப்படைக்க  சிலர் தயங்குவதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் குறிப்பிட்டிருந்தார். " பல வீடுகளில் செப்பேடுகள் இருப்பதாக அறிகிறோம். முன்னோர்கள் கோயில்களுக்குத் தானமாக வழங்கிய  நிலங்கள் தொடர்பான குறிப்புகள் அவற்றில் காணப்படுவதாக அறிய முடிகிறது. அவற்றை எல்லாம் எம்மிடம் ஒப்படைத்தால் நிலங்கள் மீது தாம் கொண்டிருக்கும் உரிமை பறி போய்விடுமோ என மக்கள் அஞ்சுகிறார்கள். என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
இக்கண்காட்சி யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தினுள்  ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பகுதி 12 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு எம்மவரின் வாழ்வியல் கோலங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. யாழ்ப்பாண வாழ்வியலிலே  சமயத்துக்கு மிக முக்கியமான இடம் இருக்கிறது. அதன் பாங்கை வடிவமைத்த பங்கு சமயத்துக்கே அதிகம் உண்டு. யாழ். குடா நாட்டில்  அடையாளம் காணப்பட்ட புராதன இந்து , பௌத்த, இஸ்லாம், கிறிஸ்தவ  வழிபாட்டிடங்களின் புகைப்படங்களும்  அப்பகுதிகளில் கிடைத்த தொல்பொருட்சின்னங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அண்மையில் சாவகச்சேரிப் பகுதியிலே கண்டெடுக்கப்பட்ட இந்துத் தெய்வங்களின் உருவச்சிலைகள் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்து ஆலய வழிபாடுகளில் பயன்படுத்தும் பொருட்களின் தொகுதி வியக்க வைத்தது. ஒவ்வொரு பொருளிலும் காணப்படும் வகைப்பாடுகள்  வாய் பிளக்க வைத்தன.  விளக்குகளாகட்டும்.. செம்புகளாகட்டும். கமண்டலங்களாகட்டும்.. ஆரத்திகளாகட்டும்.. ஒவ்வொன்றிலும் எத்தனை  எத்தனை வகைகள்..? அத்தனையும்  நுண்ணிய உலோக வேலைப்பாடுகளுடன் கூடியவை..

கண்ணாடிப் பேழைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கும்  தெய்வ உருவச் சிலைகள் புத்தம் புதிதாய்த் தெரிந்தன. ஆனால் அவற்றின் வரலாறோ  நூற்றாண்டு காலத் தொன்மையை  எடுத்தியம்புகிறது.  இவையெல்லாம் எமக்கே  உரித்தானவை என எண்ணும் போதே மெய் சிலிர்த்து விடுகிறது.
இப்படியே இரண்டாவது அரங்கிற்குச் சென்றால் அங்குள்ள காட்சிப் பொருட்களின் தொன்மை  ஏலவே நாம் கொண்டிருந்த பிரமிப்பை அதிகரிக்கச் செய்தது. 
" எம்மவருக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டு கால வரலாறு உண்டு. அதைத் தொலைத்து விடாதே "  என்று அவை ஒவ்வொன்றும் காதுக்குள் கூறுவது போல்  இருந்தது.  கி.மு 3 ஆம் நூற்றாண்டு தொட்டு 20 ஆம் நூற்றாண்டுவரை காலத்துக்குக் காலம் பாவனையிலிருந்த நாணயங்கள் , ஓடுகள் , போன்றவை கால அடிப்படையில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன. அத்துடன்  ஈரெழுத்து பொறிக்கப்பட்ட ஆனைக் கோட்டை சாசன முத்திரை, சுடு மண் கிணறு , பல்வேறு சாசனங்கள் போன்றவை பிரதி பண்ணப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.  அத்துடன் பண்டைத் தமிழர் வாழ்வியலுடன் பிணைந்திருந்த சுடுமண் கிணற்றின் மாதிரி, ஆதிகால  நாணயங்களின் மாதிரி ஆகியனவும் கூட பிரதி பண்ணப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

 புராதன காலத்திலிருந்து இன்றுவரை எம் வாழ்வியலிலே பாவனையில் இருக்கும்  குறியீடுகள் தொடர்பாகவும் விளக்கப்படம் அமைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடப் பட வேண்டியது.  எம்மை அறியாமல் இன்றும் நாம் பாவித்து வரும் குறியீடுகள் புராதன காலத்திலிருந்தே அறியப்பட்டவை என்பது ஆச்சரியப்படவேண்டிய, ஆனால் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய உண்மையாகும்.

 இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த  பழங்கால நாணயங்களானவை  சங்க காலத்திலிருந்து பிற்காலம்  வரை வெவ்வேறு கால கட்டங்களுக்குரித்தானவையாகும். தமிழக நாணயங்கள்,   சேது நாணயங்கள்,அனுராதபுர கால, பொலநறுவைக் கால,  சாவகன் கால, யாழ்ப்பாண அரசு கால, ஐரோப்பியர்கால நாணயங்களும் உள்ளடங்குகின்றன.  ஆதி கால நாணயங்கள் சிலவற்றின் மாதிரிகளும் செய்து வைக்கப்பட்டிருந்தன.

கல்லாயுதங்கள் தொட்டு மண் ஓடுகள்,மட்பாண்டப்  பகுதிகள், சீன மட்பாண்டங்கள் , பெருங்கற்கால ஓடுகள், கண்ணாடி ஓடுகள் வரை பல்வேறு கால கட்டங்களைச் சேர்ந்த தொல் பொருட்கள், அவற்றின் சிதைந்த பாகங்கள் போன்றன காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவை பூநகரி, இரணைமடு, மாந்தை, கந்தரோடை, சாட்டி, நெடுந்தீவு போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டவையாகும்.

ஆனைக்கோட்டையானது  உலகளாவிய ரீதியிலே வரலாற்றுப் பிரசித்தி வாய்ந்த இடமாகும். இதுவே யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்ட முதலாவது பூர்வீகக் குடியிருப்பு மையம் என அறியப்படுகிறது.  ஆனைக்கோட்டை  அகழ்வாராய்ச்சியிலும் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.  தென்னிந் தியாவிலே  நாகரிக எழுச்சி பற்றிய ஆய்வுகளுக்குத் தொடக்கப் புள்ளியாக இருப்பது பெருங்கற்காலப் பண்பாடாகும்.   தொல்லியல் ரீதியிலான பல்வேறு முடிவுகளைப் பெறுவதற்கு ஈரெழுத்துப் பொறித்த ஆனைக் கோட்டை சாசன முத்திரை உறுதுணையாக அமைந்திருந்தது. இதில் பொறிக்கப் பட்டுள்ள எழுத்துகளை பல்வேறு பரிமாணங்களில் விளக்கும் முயற்சிகளில் ஆய்வாளர்கள் இன்றும் ஈடுபட்டுள்ளனர். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் குறு நில அரசு இருந்தமைக்கான சான்றாக இம்முத்திரையைப் பார்க்கிறார் பேராசிரியர் இந்திரபாலா.

சுடுமண் கிணறு என்பது  நீரைப் பெறுவதற்கு பண்டைத் தமிழ் மக்கள் கையாண்ட தொழில்நுட்பமாகும்.  யாழ்ப்பாணம் ஜீவநதிகளற்ற பிரதேசம்.   அத்துடன் நிரந்தர நீருள்ள பகுதிகளிலேயே  குடியிருப்புகள் உருவாகின. ஆதலால் சிறிய தொழில் நுட்பத்துடன் இலகுவாக நீரைப் பெறும் வகையிலே மணற்பாங்கான இடங்களில் பண்டை யாழ் மக்கள் குடியிருப்புகளை ஏற்படுத்தினர்.  மணற்பாங்கான இடத்தில் ஒரு சிறிய குழியை ஏற்படுத்தி, நீரைப் பெற்றனர். இயற்கைக் காரணிகளால் அக்குழிகள் அழிந்து போகாமல் இருக்க , சுட்ட மண்ணைப் பயன் படுத்தினர். இதுவே  சுடுமண் கிணறு எனப் பட்டது.

யாழ்ப்பாண அரசன் சிங்கை ஆரியனின் கொட்டகம சாசனம், வல்லிபுரம் தங்கத் தட்டு போன்ற பல சாசனங்கள் படியெழுதப்பட்ட பலகைகளும் கூட  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

தொடரும்

3 comments:

கானா பிரபா said...

அருமையான தொகுப்பு, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Chandra said...

ஒளிப்படம் கண்களுக்கு விருந்து; எழுத்து, கண்காட்சிக்கு நேரில் சென்றது போல் இருந்தது!
இதை படிக்கும் பொழது
பண்டைய தமிழர்களின் வரலாறு கண்முன் நிற்பது போல் ஒரு பிரமிப்பு !

Unknown said...

தகவலும் புகைப்படங்களும் அருமை.

Post a Comment