Friday, October 28, 2011

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-3

தராசேற்றப்பட்ட குத்துவிளக்குகள்

சம காலத்து கருங்கற் சிற்பங்களும் கூட அரங்கை அலங்கரித்தன. கடந்த சில காலம் வரை அன்றாடப் புழக்கத்திலிருந்து தற்போது அருகிப்போயிருக்கும் பித்தளைப் பொருட்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பழங்கால பித்தளைச் சாவிகள், சருவங்கள், குடங்கள், வெற்றிலைத் தட்டம், தாம்பாளம், இட்டலிச் சட்டி, விளக்குகள், பாக்குவெட்டி, பல அடுக்குச் சாப்பாட்டுப் பெட்டிகள், மூக்குப்பேணி முதலான பொருட்களும் அவற்றுள் அடங்கும். அவற்றின் விபரங்களைச் சிறுவர்கள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
மூக்குப்பேணிகளைப் பொறுத்தவரையில் ஒரு பின்னணி இருக்கிறது. மூக்குப்பேணி என்பது பேணியில் வாய் படாமலும், அதேவேளை உள்ளிருக்கும் பானம் வெளியே சிந்தாமல் அருந்தத்தக்க வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும். அவைதான் மூக்குப்பேணி உருவாகவே காரணமாயிருந்தன. யாழ் மண்ணில் மூக்குப்பேணியின் பரவலான பாவனைக்கு அங்கு நிலவிய இறுக்கமான சாதிப்பாகுபாடுகளும் காரணமாய் அமைந்திருக்கின்றன.
அதாவது, வெவ்வேறு சாதிக் கட்டமைப்புகளைப் பொறுத்தவரையிலே, ஒரு சாராருடைய எச்சில் பட்ட பேணியில் இன்னொரு சாரார் குடிப்பதென்பது பெருங்குற்றமாகக் கருதப்பட்டது. ஆதலால் மூக்குப்பேணிகள் சகஜமான பாவனையில் இருந்தன.
தற்போது இந்த சாதியப் பாகுபாடுகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படாமையால் மூக்குப்பேணிகளின் பாவனை தேவையற்றதாகி, அவை அருகத்தொடங்கி விட்டன என்றார் விளக்கமளித்த மாணவியொருவர். ஒரு காலத்திலே குடும்பங்களின் அந்தஸ்தைக் கணிக்கும் அளவு கோல்களாக மட்டுமன்றி, அன்றாட வாழ்வியலிலே புழக்கத்தில் இருந்தவையுமான குத்து விளக்குகள், வெற்றிலைத் தட்டங்கள், மூக்குப் பேணிகள் எல்லாம் பகிரங்கமாகத் தராசில் தொங்கிய காலம் ஒன்றும் யாழ். மண்ணில் உருவாகத் தொடங்கியதை எவரும் மறுக்க முடியாது.
யுத்தம் தணிந்து சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்த 2002 - 2003 காலப்பகுதியில் யாழ். நாச்சிமார் கோயிலடியில் ஒரு சோடி பித்தளை குத்துவிளக்கை வெறும் 250 ரூபாவுக்கு விற்றிருக்கிறார்கள். என் நண்பியொருவர் அதை தான் வாங்கிவந்து பேணி வருவதாகக் கூறியிருந்தார். அந்தக் குத்துவிளக்குகளின் அடிப்பாகத்திலே உரிமையாளரின் பெயர் மிகவும் நுணுக்கமாகப் பொறிக்கப்பட்டிருந்தது என்றார் அந்த நண்பி. அந்தக் குத்துவிளக்குகள் மட்டும்.
நாச்சிமார் கோயிலடியில் விற்கப்படவில்லை. மூக்குப்பேணிகள், கமண்டலங்கள் போன்ற பல பழங்காலத்துப் பொருட்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கின்றன. ஒன்றில் அவை திருடப்பட்டு விற்கப்பட்டிருக்கலாம். அல்லது முன்னோர் வழி வந்தவை, இனித் தேவையில்லை. காசாக்கி விடுவோம் என உரிய இளஞ்சந்ததியினர் விற்றிருக்கலாம்.
இந்த நிலை அன்றுடன் ஓய்ந்து விடவில்லை. இன்றும் மறைமுகமாகத் தொடர்கிறது. ஒரு கிலோ செம்பு இவ்வளவு ரூபா, ஒரு கிலோ பித்தளை இவ்வளவு ரூபா என தம்மிடமுள்ள பழம் பெருட்களை உலோகத்தின் நிறைக்கு ஏற்ப விற்றுவிடுவதில் எம்மவர்கள் வல்லவராகவே இருக்கிறார்கள்.
எம்மவருக்கு அவற்றின் பயன்பாடு தேவையில்லாது போய்விட்டதா? அல்லது அவற்றில் காணப்படும் கலை நயத்தையாவது இரசிக்கத் தெரியவில்லையா? அல்லது அவர்கள் அதன் பெறுமதியை உணரவில்லையா? அல்லது அவற்றுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வரலாறு பற்றி அக்கறை கொள்ளவில்லையா? எனப் பல கோணங்களில் சிந்திக்கத் தோன்றுகிறது.
அந்த சிந்தனைக்கும் அப்பால் பணம் எனும் பேய் தான் யாழ். மண்ணில் எம்மவரின் அடிப்படைத் தேவை என்ற நிலை உருவாகி விட்டதா? அல்லது உருவாக்கப்பட்டு விட்டதா? என்று நாம் சிந்திக்க வேண்டும். எம்மவர்கள் மத்தியில் பணம் தான் அத்தியாவசியம் என்ற எண்ணப்பாடு உருவாகாமல் விட்டிருந்தால் பழங்கால உலோகப்பொருட்கள் எல்லாம் தராசில் ஏறியிருக்குமா? இன்னும் ஏறிக்கொண்டு தான் இருக்குமா? இது நாம் சிந்திக்க வேண்டிய தருணம். இவ்வளவு நாளும் நாம் கண்டும் காணதவர்களாய் இருந்து விட்டோம். உலோகப் பொருட்களும் தராசேறி, தெற்குக்கும் தீக்குள்ளுமாய்ச் சென்றுவிட்டன.
ஆனால் இனியும் அப்படி இருத்தல் தகாது. எம்மால் இயன்றவரை அவை எம் கண் முன்னே தராசேறுவதைத் தடுக்க முயல வேண்டும். ஒன்றில் எம்மிடம் இருப்பவற்றை விற்க முயலக் கூடாது. பண வசதி படைத்தவர்கள் அவற்றை வாங்கி தாமே பேணலாம். இல்லையேல் நல்லுள்ளம் படைத்தவர்கள் அவற்றை யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினருக்கு அன்பளிப்பாக வழங்கலாம். புலம்பெயர் தமிழர்களுக்கும் இது பொருந்தும்.
நான்காவது கண்காட்சி அரங்கையடுத்து அமைக்கப்பட்டிருந்த அரங்கிலே தொன்று தொட்டு பயன்பாட்டிலே இருந்து வரும் மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி முறைமைகள் போன்றன புகைப்படங்களாகவும் பொருட்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மீன்பிடித் தொழிலோடு தொடர்புடைய வலை வகைகள், தங்கூசி வகைகள், இறால் கூடு என்பவற்றுடன், மாதிரி படகு மற்றும் கட்டுமரம் போன்றனவும் கூட மிகவும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருநதன. அவற்றுடன் யாழ்ப்பாணத்துக்கே உரித்தான தோட்டப் பயிர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
‘கந்தன் நல்ல கமக்காரன்’ என்று தொடரும் சிறுவர் பாடல்.... புத்தகத்தின் பின்னணியில் விவசாயி ஒருவர் தோலிலே ஏரை வைத்தபடி நடந்து செல்லும் ஓவியம் வரையப்பட்டிருக்கும். கலப்பை பூட்டிய மாட்டுடன் வயலை உழும் விவசாயியின் படம் வரையப்பட்டிருக்கும். அதைப் பாடப் புத்தகத்திலே பார்த்த சந்ததியொன்று இருக்கிறது. அதற்கடுத்த சந்ததியினருக்கோ உழவு இயந்திரம் இருந்தால் தான் விவசாயம் என்ற எண்ணம். ஏரும் கலப்பையும் அருஞ்சொற்களாகப் போய்விட்டன.
அதே கண்காட்சி அரங்கிலே ஏர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அது என்ன என்று கேட்டறிய முயலும் சிறுவர்களையும் இதுவா ஏர் என வியக்கும் இளைஞர்களையும் பரவலாகக் காண முடிந்தது. ஏர் என்பது ஆரம்பகாலத்திலிருந்து நிலத்தைக் கிளறிப் பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக்குவதற்கு உதவிவரும் ஒரு கருவியாகும். ஏர்கள் விவசாயத்திற்கு மட்டுமன்றி கடலடிக் கம்பி வடங்கள் பதிப்பதற்கும் உதவுகின்றன.
ஆனால் பிற்காலத்தில் உழவு இயந்திரங்கள் அறிமுகமாகத் தொடங்கியது. ஏர்களின் பாவனையும் அருகத் தொடங்கிவிட்டது. மரத்தினால் செய்யப்பட்ட கருவியாகிய ஏர், நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. ஆரம்ப காலங்களில் ஒரு எருதினாலும் பிற்காலங்களில் இரு எருதுகளாலும் இழுத்துச் செல்லும் வண்ணம் பயன்படுத்தப்பட்டது. ஏரின் நவீன வடிவமே கலப்பையாகும்.
பாவனை பொருட்கள்]
கலப்பையானது மண்ணைப் புரட்டிப்போடும் தொழிற்பாட்டை மட்டுமே மேற்கொள்கிறது. மாறாக ஏரோ மண்ணை ஆழமாக உழும். புரட்டிப் போடாது. ஏரை நாட்டுக் கலப்பை என்று கூறுவோரும் உளர். இக்கண்காட்சியில் ஏருடன் சேர்த்து நுகமும் வைக்கப்பட்டிருந்தது.
நுகம் என்பது மரக்கட்டையினால் செய்யப்பட்ட ஒருவகைக் கருவியாகும். மிருகங்களைக் கொண்டு பாரங்களை சுமப்பதற்கு அல்லது வண்டிகளை இழுப்பதற்கு இது அதிகளவில் பயன்படுத்தப்படும். மிருகங்களின் கழுத்தில் இதைச் சொருகுவர். மாட்டு வண்டியின் ஒரு பாகமாகவும் நுகம் கருதப்படுகிறது.
இப்போதும் ஒரு சில பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக நுகம் பூட்டிய எருதுகள் பயன்படுத்தப்படுகின்றன.
கம்மாலைகள் என்றால் என்ன என்று கேட்கும் காலம் இன்று உருவாகிவிட்டது. தற்போது ஊர்ப்பகுதிகளில் எங்காவது ஒரு மூலையில் ஓரிரண்டு கம்மாலைகளை வெகு அரிதாகக் காண முடியும்.
கம்மாலைகள் இரும்பை உருக்கி வார்க்கும் நிலையங்களாகும். இரும்பு வேலைகள் யாவும் அங்கேயே நடைபெறும்.
கம்மாலைகளிலே தீச் சுவாலையைத் தொடர்ந்து பேணுவதற்கான வளி விநியோகத்தை ஏற்படுத்த ஒரு சிறப்பு விசிறி அமைக்கப்பட்டிருக்கும். அந்த விசிறியும் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
விசிறியைத் தனியாக வைத்திருந்ததைக் காட்டிலும் கம்மாலை போன்ற அமைப்பைச் செய்து அதிலே விசிறியைப் பொருத்தியிருந்தால் இளஞ்சந்ததியர் மேலும் பயனடைந்திருப்பர்.

No comments:

Post a Comment