Tuesday, August 30, 2011

காலம் கடந்த பின் வருந்த வேண்டுமா?

அது இவ்வருடத்தின் வைகாசிப்பொழுது.. வற்றாப்பளை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ/பொங்கல் காலம். என்றுமில்லாத சனத்திரள் ஆலயச்சூழலில் நிறைந்து காணப்பட்டது. ஆலய மஹோற்சவங்களிலே பூசை வழிபாடுகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கடைவீதிக்கும் கொடுக்கப்படுகிறது என்பதை மறுப்பவர் எவருமிலர்.

அதற்கு வற்றாப்பளை அம்மனும் விதிவிலக்கல்லவே.. உள்ளூர் வர்த்தகர்களுடன் சேர்ந்து தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தகர்கள் பலரும் கடை வீதியை நிறைத்திருந்தனர். சிறிதும் பெரிதுமாக பல கடைகள்.. பல்வேறு பட்ட வியாபாரங்கள்.. அவற்றிலே அலை மோதும் சனத்திரளுக்கும் குறைவிருக்கவில்லை.. அங்கே ஒரு சிறிய தற்காலிகக் கடை.. வாசலிலேயே உடலில் ஒட்டும் ஸ்டிக்கர்களான டட்டூஸ் (Tatoos) தொங்க விடப்பட்டிருந்தன. இளைஞர் கூட்டம் மொய்த்துகொண்டிருந்தனர். அது வேறு எந்த வியாபாரமும் அல்ல. பச்சை குத்தும் வியாபாரம் தான்..

பச்சை குத்துவதொன்றும் எமக்கு புதிது அல்லவே.. அது பல கீழைத்தேய கலாசாரங்களுடன் ஒன்றித்துப் போனதொன்று.அக்குபஞ்சர் போல ஊசியால் பச்சை குத்துவதால், நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உற்சாகமாக செயற்பட முடியும். பச்சை குத்த பயன்படுத்தப்படும் மருதானி உள்ளிட்ட பச்சிலைகள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை என்றெல்லாம் கூறப்படுகின்றன. ஆனால் என்று எச்.ஐ.வி தொற்று உட்பட்ட பாரதூரமான தொற்றுகள் உருவாக பச்சை குத்துவதும் ஒரு காரணம் என்று அறியப்பட்டதோ, அன்றிலிருந்து தான் அது தொடர்பான சர்ச்சைகள் பலவும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் உருவாகத் தொடங்கின. ஆயினும் எம் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பதை வற்றாப்பளை அம்மன் பொங்கல் உற்சவமும் அதைத் தொடர்ந்து நல்லூர் திருவிழாவும் புடம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

கடந்த வாரங்களுக்கு முன்னர் நல்லூர் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டிருந்தது. ஐயன் முருகனின் அருளொளி வெள்ளத்தில் மூழ்கவென பக்தர்கள் வயது வேறுபாடின்றி கூடத் தொடங்கினர். கடை வீதிகளும் கூடக் களை கட்டின. இளைஞர் கூட்டத்திற்கும் குறைவில்லை. வர்த்தகர்கள் சகல தரப்பினரையும் அதிலும் குறிப்பாக சிறுவர்கள், இளை ஞர்களைக் கவரக்கூடிய வியாபார முயற்சிகள் பலவற்றை ஆரம்பித்திருந்தனர் . அவற்றிலே இந்த பச்சை குத்தும் வியாபாரம் இளை ஞர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் எவருமே அதனால் உருவாகப்போகும் ஆபத்துகளை உணர்ந்தவர்களாகத் தெரியவில்லை.

இளை ஞர்கள் ஆர்வமாக இருந்தாலும், பெரியவர்கள் விழிப்படைந்தனர். பல தரப்புகளிலும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. மருத்துவ சமூகம் எச்சரிக்கை செய்தது. சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கினர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு இரவுப் பொழுதிலே பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டோர் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களடு பச்சை குத்தும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
பச்சை குத்துதல் என்பது அம் மத்தியில் காலங்காலமாக நிலவி வரும் ஒரு பாரம்பரியம். ஆனால் நவ நாகரிக மோகம் தழைத்தோங்கியிருக்கும் இன்றைய காலப் பகுதியில் பச்சை குத்தும் செயற்பாடும் ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து விட்டது.

தென்னிந்தியாவின் கொங்கு நாட்டுப் பகுதியில் காணப்படும் கைவினைக் கலைகளில் பச்சை குத்துதலுக்கு முக்கியயைடம் இருக்கிறது. கலைத்தன்மையும், தொழில் தன்மையும் இணைந்த. கைவினைக் கலை (Folk craft) எனவும் இது கூறப்படுகிறது. இந்தப் பச்சை குத்தும் கலை தமிழ்நாட்டில் மட்டுமன்றி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் பல உலக நாடுகளிலும் இன்றும் கூடக் காணப்படுகின்றது. பழங்குடி மக்களிடம் மிகுதியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, ரஷ்யா பொலினீசியா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் இந்த வழக்கம் காணப்படுகிறது.
மஞ்சள் பொடியை அகத்திக் கீரையோடு அரைத்துத் துணியில் வைத்துத் திரியாக்கி எரித்த கரியினை நீர் அல்லது முலைப்பாலுடன் கலந்து மையாக்கி ஊசிகளைக் கொண்டு உடலில் பச்சை குத்துவர். கரும்பச்சை நிறத்துடன் இருக்குமாறு ஒரு வகை மையில் ஊசியைத் தொட்டு உடலில் குத்துதல் பச்சை குத்துதல் என்று விளக்கம் தருகிறது க்ரியாயின் தமிழ் அகராதி. குறவர் இனத்தவர் பச்சை குத்துதலை ஒரு தொழிலாகவே செய்து வந்தனர்.
வெவ்வேறு நம்பிக்கைகளுக்காகப் பேணப்பட்டு வந்த பச்சை குத்தும் வழக்கத்தின் எச்சங்களாக இன்றைய மருத்தாணியிடலும் டட்டூக்கள் ஒட்டுவதும் மிஞ்சியிருக்கின்றனவோ என்றும் சில வேளைகளில் சிந்திக்கத் தோன்றும். பச்சை குத்துதல் என்பது தற்போது அழகுக் கலையாகவே மாறி விட்டிருக்கிறது. அழகுணர்ச்சியை மேம்படுத்திக் கொள்வதற்காகப் பச்சை குத்திக் கொள்ளும் பலரைக் காண முடிகிறது.

ஊசியிலே வர்ண மையை இட்டு உடலிலே கீறுவதன் மூலம் பச்சை குத்துதல் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட சில பச்சிலைகளின் சாற்றை எடுத்து, அவற்றை ஊசி மூலம் கை பெருவிரல் அல்லது மணிக்கட்டின் மேல்பகுதி, மார்பு ஆகிய இடங்களில் பச்சை குத்துவர்.

முன்பு, பச்சை குத்துவதற்கென்றே ஒரு இனம் இருந்தது. தற்போது அப்படி இருப்பது மிக அரிதாகும். வெளிநாடுகளில், 'டட்டூ' என்ற பெயரில் பச்சை குத்தும் தொழில் அமோகமாக நடக்கிறது. விதம் விதமான உருவங்களை உடல் முழுவதும் வரைந்து கொள்வதை, மேலை நாட்டினர், நாகரிகமாக கருதுகின்றனர். தற்போது இந்த கலாசாரம் எமது நாட்டிலும் பரவி விட்டது.
பாவிக்கப்படும் மையைப் பொறுத்து பச்சை குத்திய வடிவத்தை அழிக்கவும்/இல்லாமல் செய்யவும் முடியும். ஆனால் இது மிகுந்த வலியைத் தோற்றுவிக்கும்.
பச்சை குத்துதல் ஒன் றும் தவறில்லை. ஆனால் அவ்வாறு செய்வதனால் இருக்கும் அபாயங்களையும் அவற்றைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளையும் நாம் அறிந்து வைத்திருக்கவேண்டும். பச்சை குத்துதல் அபாயகரமானதாக மாறுவதற்குரிய பிரதான காரணம் அதற்குப் பாவிக்கப்படும் ஊசியாகும். சுகாதாரமற்ற ஊசிகளாலும் ஒரே ஊசியைப் பலருக்குப் பயன்படுத்துவதாலும் பாவித்த ஊசிகளைச் சரியாக அப்புறப்படுத்தாமையாலும் பல பார தூரமான தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு ஏற்படும். ஆதலால் அந்த ஆபத்தை நாம் உணர வேண்டும். பச்சை குத்தத் தான் வேண்டுமென்றால் இந்த அபாயங்களைத் தவிர்க்கக் கூடிய வகையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நல்லூர் ஆலயச் சூழலிலே பச்சை குத்தும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் எச்சரித்து விடுவிக்கப்பட்டமைக்கும் அதுவே காரணமாகும். ஆலயச் சூழலில் இத்தகைய பச்சை குத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவில்லையென்றும் மறைமுகமாகவே இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் யாழ். மாநகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கூறியிருந்தனர். இந்த விடயம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
திருவிழாக்காலங்களில் ஆலய வெளி வீதிகளில் கடைகளை அமைக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகள் , அக்கடைகளி எத்தகைய வியாபாரங்கள் மேற்கொள்ளப்படப்போகின்றன என அறிந்து அவை சமூகத்துக்கு பாதகமற்றவை என அறியப்படும் பட்சத்தில் மட்டுமே அனுமதியை வழங்க வேண்டும்.
அதே வேளை நவ நாகரிகம் தான் உலகம் என்ற மனப்பாங்கை எம் இளை ஞர்கள் மாற்றியமைக்க வேண்டும். எமது கலாசாரம், பண்பாடு, பாரம்பரியங்கள் தான் எமது அடையாளங்கள். நாம் எமது மனப்பாங்கை மாற்றியமைக்காவிடில் அவை யாவுமே எதிர்காலசந்ததிக்குக் கடத்தப்படாமல் எம்முடன் முடிந்து போய் விடும். அடையாளமின்றிய எதிர்காலசந்ததியை உருவாக்கியவர்கள் என்ற அவப்பெயர் மட்டும் தான் எமக்கு மிஞ்சும்.
ஆலயச் சூழலில் பச்சை குத்தும் விடயம் தொடர்பாக விழிப்புடன் நடந்து கொள்ளுமாறு நோயாளர் மக்கள் நலன்புரி சங்கத்தின் தலைவர் விசுவலிங்கம் கந்தவேள் பொதுமக்களை எச்சரித்திருந்தார். இளை ஞர்கள் மட்டுமன்றி பெற்றோரும் விழிப்பாக இருக்க வேண்டும். தம் பிள்ளை என்ன செய்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியவேண்டும். ஆனால் அத்தகைய நிலைமை எம்மவர் சமூகத்தில் சற்றுக் குறைவாக வே காணப்படுகிறது.
இத்தகைய விழிப்புணர்வை ஊட்டுவதில் வெகுசனத் தொடர்பூடகங்களுக்கு தலையாய் கடமை ஒன்று இருக்கிறது. நல்லூர் ஆலயச் சூழலில் பச்சை குத்தும் வியாபாரம் நடை பெறுவது கூட வெகு சனத் தொடர்பு ஊடகங்களால் தான் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது.
எச்.ஐ.வி தொற்று தொடர்பில் பலத்த சவால்களை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறது எம் வடபுலச் சமூகம்.அத்தகையதோர் சூழலில் பச்சை குத்துதல் போன்ற விடயங்களை அலட்சியப்படுத்துதல் எத்துணை பாரதூரமான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் காலம் கடந்த ஞானத்தைப் பெற்று கடந்து போன காலத்துக்காக வருந்துவதில் பயனேதுமிருக்காது. வருத்தம் மட்டுமே எஞ்சும். வெள்ளம் வந்த பின் அணையைக் கட்டி என்ன பயன் ?

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
தோலின் மேற்படையில் ஊசியால் கீறுவதன் மூலம் பச்சை குத்தப்படுகிறது. தற்போது கையால் இயக்கப்படும் சிறிய ரக இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய இயந்திரத்தில் பொருத்தப்படும் ஊசி அல்லது ஊசிகள் தோலின் மேற்படையில் தொடர் துளைகளைப் போடும். அத்துளைகளில் மை பரவும் . பச்சை குத்தப்படும். சிறிதளவிலான நோ கூட உருவாகலாம்.இரத்தமும் வரலாம்.
1. அபாயத்தை உணருங்கள்!
  • ஒவ்வாமைத் தாங்கங்கள் ஏற்படலாம். பாவிக்கப்படும் மையின் ஒவ்வாமை காரணமாககதோல் தொற்று ஏற்படும். பச்சை குத்திப் பல காலங்கள் ஆன பின்னர் கூட இது ஏற்படக் கூடும்.
  • தோலில் பக்டீரியா தொற்று ஏற்படலாம். பச்சை குத்திய இடத்தில் சீழ் வடியலாம்.
  •  ஏனைய சில தோல் நோய்களும் ஏற்படலாம். இழையங்கள் மிகையாக வளரலாம்.
  • குருதியால் பரவும் நோய்களின் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கும். பச்சை குத்தும் ஊசியி லே நோய்த்தொற்றுள்ள குருதி படிந்திருந்தால், ஹெப்பட்டைட்டிஸ்-B,ஹெப்பட்டைட்டிஸ்- C , எச்.ஐ.வி போன்ற தொற்றுக்கள் ஏற்படலாம்.
  •  பச்சை குத்தியபின்னர் வேறு ஏதோ ஒரு தேவைக்காக நீங்கள் MRI ஸ்கான் செய்து கொள்ள நேரும் போது அப்பகுதியில் எரிவுகள் ஏற்படலாம். அத்துடன் நீங்கள் பச்சை குத்திருப்பதானது திருத்தமான ஸ்கான் முடிவுகளைப் பெறுவதில் தடையாக இருக்கும்.  
  • பச்சை குத்திய பின்னர் அந்த ஊசிகளைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தாவிடில் அவை கூட நோய்த் தொற்றுகள் உருவாகக் காரணமாகி விடும். 
2. பாதுகாப்பைக் கவனியுங்கள்! 
  • பச்சை குத்துவது யார்?
அங்கீகரிக்கப்பட்ட, பயிற்சியைப் பெற்றவர்களிடம் சென்று பச்சை குத்துங்கள். அவர்களிடம் தேவையான அனுமதிப் பத்திரங்கள் இருக்கின்றனவா என்பதையும் சோதித்துக் கொள்ளுங்கள்.
  •  கையுறை அணிந்திருக்கிறாரா?பச்சை குத்துபவர் கையுறைகளை அணிந்திருக்கிறாரா என்பதையும் கவனியுங்கள். பச்சை குத்த ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர் தனது கைகளைக் கழுவுகிறார் என்பதையும் புதிய கையுறைகளைத் தான் அணிகிறார் என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்!
  • சரியான உபகரணமா?பச்சை குத்துபவர் சரியான உபகரணத்தைத் தான் பயன்படுத்துகிறாரா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தடவையும் புதிய ஊசி/ஊசிகள் தான் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் உறுதி செய்யுங்கள். அவர் பாவிக்கும் வர்ணங்கள், பாத்திரங்கள் கூட முன்னர் பாவிக்கப்பட்டிருக்காதவை (புதியவை) என் பதை உறுதி செய்யுங்கள்.
  • தொற்று நீக்கப்படுகின்றனவா? பாவித்தபின் எறிய முடியாத உபகரணங்கள் தொற்று நீக்கப்பட்ட பின்னர் மீளப்பாவிக்கப்படுகின்றனவா என்பதை அவதானியுங்கள்.
  •   உங்களையே கேளுங்கள்!பச்சை குத்தத் தான் வேண்டுமா என உங்களையே ஒன்றுக்கு இரண்டு தடவைகள் கேட்டுக்கொள்ளுங்கள். ஆம் எனின் பச்சை குத்த வேண்டிய இடத்தைக் கவனமாகத் தேர்வுசெய்யுங்கள். மது பானம், மருந்துகள் படக்கூடிய பகுதிகளில் பச்சை குத்தாதீர்கள்.
 பச்சை குத்திய பின்...
  •  அப்பகுதியில் சுற்றப்பட்டிருக்கும் பந்தனத்தை 24 மணி நேரத்துக்குக் கழற்றாதீர்கள். புண் இருந்தால் அதற்குரிய மருந்தை வைத்திய ஆலோசனையுடன் தடவுங்கள்.
  • பச்சை குத்திய பகுதியை எப்போது துப்புரவாக வைத்திருங்கள். அப்பகுதியில் சொறியாதீர்கள்.
  • பச்சை குத்திய பின் சில காலங்களுக்கு அப்பகுதியில் சூரிய ஓளி நேரடியாகப் படுவதைத் தவிருங்கள்,தேவையெனில் தோல் வைத்திய நிபுணரை நாடுங்கள்.

No comments:

Post a Comment