Tuesday, August 30, 2011

யானைகள் எத்தனை தெரியுமா?

 


ஆதிகாலத்திலிருந்து மனிதனுக்கும் விலங்குகளுக்குமிடையே ஏதோ ஒரு தொடர்பு இருந்து தான் வருகிறது. விலங்குகள் அவற்றின் தன்மைகளுக்கும் இயல்புகளுக்குமேற்ப மனிதனால் வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையிலேயே யானைகளும் ஆதிகாலத்தில் இருந்து மனித வாழ்வுடன் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றன. அடிப்படையில் யானைகள் இரு இனங்களைச் சார்ந்தவை. ஒன்று ஆபிரிக்க யானை இனம். இரண்டாவது ஆசிய யானை இனம். பாரமான பொருட்களைத் தூக்குவதற்கும், பயணிப்பதற்கும், யுத்த முனைகளிலும் யானைகள் பயன்படுத்தப்பட்டன. யானைகளின் தந்தமும் மயிரும் விலையுயர்ந்த பொருட்களாக வர்த்தக ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றன. யானைகள், அவை செறிந்து வாழும் சில நாடுகளின் அடையாளமாகவும் வணக்கத்துக்குரிய விலங்காகவும் இருக்கின்றன. இலங்கையிலும் அத்தகைய பாரம்பரியங்களைக் காணலாம். பெரஹராக்களிலும் சில இந்துக் கோயில் திரு விழாக்களிலும் யானைகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளமையை நாம் அறிவோம். சில பெரிய நில உரிமையாளர்களைப் பொறுத்த வரையிலே யானைகளை வைத்திருப்பது கௌரவத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.

முன்னொரு காலத்தில் அவுஸ்திரேலியா, மற்றும் சில தீவுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளெல்லாம் பரவியிருந்த யானைகள் இன்று ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் மட்டுமே காணப்படுகின்றன. அதற்கு உலகு அடைந்து வரும் அபிவிருத்தி பிரதான காரணாமாகும். அதே வேளை தந்தத்துக்காக யானைகளைக் கொல்லும் கொடூரம் இன்னும் நடந்தேறிய வண்ணம் தான் உள்ளது. ஆதலால் தான் அழிவடையும் விலங்குகளின் பட்டியலிலிருந்து தந்தத்தைக் கொண்டுள்ள யானைகளின் பெயர் மட்டும் இன்னும் நீக்கப்படவில்லை.

காடுகள் அழிக்கப்படுவதால் யானைகள் வாழிடத்தை இழந்து மனிதனுடன் முரண்படத் தொடங்குகின்றன என்ற கருத்தே பொதுவாக நிலவி வருகிறது.ஆதலால் காடுக ளை அழிக்கும் மனிதனுக்கும் அதனால் வாழ்விடத்தை இழக்கும் யானைகளுக்கும் இடையிலே முரண்பாடுகள் எழத்தொடங்கின. அவை அத்துடன் நின்று விடவில்லை. காலத்துக்குக் காலம் அதிகரித்த படி தான் செல்கின்றன.

காடுகள் அழிக்கப்பட்டதால் தான் யானை-மனிதன் முரண்பாடு தோன்றியது என நாம் எண்ணிக்கொண்டிருக்க , மாறுபட்ட கருத்தொன்றை முன் வைக்கிறார் பேராசிரியர் சரத் கொட்டகம.

ஆசிய யானைகளின் குடித்தொகையில் 1 சதவீதம் மட்டுமே அடர்ந்த காடுகளில் வசிக்கின்றன எனத் தரவுகள் அவர் கூறுகிறார்.

மிகுதி 99 சதவீதமான யானைகளும் அடர்த்தி குறைந்த வனப்பகுதிகளிலே, தமக்குத் தேவையான தாவரங்களும் நிரந்தரமான நீர் நிலைகளும் உள்ள பகுதியிலேயே செறிந்து வாழ்கின்றன. இங்கு தான், யானை - மனிதன் முரண்பாட்டிற்கான காரணம் காடழிப்பு என்ற கருத்து தொடர்புபடுத்தப்படுகின்றது. பெருகிவரும் சனத்தொகையின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக, அடர்ந்த வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டது. மனிதன் வாழ்வதற்கும் கூட தாவரங்களும் நிலையான நீர்நிலைகளுமே அத்தியாவசியமாக அமைக்கின்றன.
அழிக்கப்பட்ட இந்த வனப்பகுதிகளின் அயலை வாழிடமாகக் கொண்ட யானைகள், தமக்குத் தேவையான உணவும் நீரும் சுலபமாகக் கிடைக்கும் குடியிருப்புப் பகுதிகளை நோக்கிச் செல்கின்றன. அத்துடன் மனிதர்கள் சமைக்கும் உணவின் மணமும் சுவையும் யானைகளுக்குப் பிடித்து விடுவதால் அவை மனிதக் குடியிருப்புகளை நோக்கிச் செல்வதாக இந்திய ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தியாவிலே அத்தகைய பல சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன. காடுகளை அழித்து குடியேற்றப்பட்ட சமுதாயங்கள் பொதுவாக விவசாயத்தை மூலாதாரமாகக் கொண்டவை. விவசாயம் மேற்கொள்ளப்படும் நிலப்பகுதிகளிலே, நிலையான நீர்நிலைகள் நிச்சயம் காணப்படும். யானைகளுக்குத் தேவையானவையும் அவ்விரண்டுமே!

அவை சுலபமாகக் கிடைக்கும் இடம் அருகிலேயே இருக்கும் போது யானைகள் ஏன் வனப்பகுதிகளை நோக்கி நகர வேண்டும்? ஆறறிவுள்ள மனிதனே, எதனைப் பற்றியும் கவலைப்படாமல், சுலபமாகக் கிடைக்கும் வளங்களைத் தேடிச் செல்கையில் ஐந்தறிவுள்ள யானை மட்டும் விதிவிலக்கா? அதற்குத் தேவை உணவும் நீரும் மட்டுமே. இலங்கையில் இதனை விளக்கத்தக்க நிகழ்வுகள் பல ஏற்கெனவே நடைபெற்றிருக்கின்றன.

உடவளவைப் பகுதியின் 70 சதவீதமான நிலப்பரப்பு ஒரு காலத்தில் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. பல்வேறு தேவைகளுக்காகக் காடு அழிக்கப்பட, 70 சதவீதமாக இருந்த வனப்பகுதி 4 சதவீதமாகக் குறைவடைந்தது. இதையடுத்து 1974 ஆம் ஆண்டு உடவளவை தேசிய வனப்பூங்கா உருவாக்கப்பட்டு ஆதரவற்ற யானைகள் தற்காலிகமாக அங்குவைத்துப் பேணப்பட்டன. பின்னர் அழிந்த வனப்பகுதியில் மீள் காடாக்கலை மேற்கொள்வதா அல்லது அப்படியே இருக்கவிடுவதா என்ற சிந்தனை உருவாகியது. ஆனால் யானைகள் வாழ்வதற்கேற்ற சூ ழல் உடவளவை தேசிய வனப்பூங்காவில் காணப்பட்டமையாலும் தற்காலிகமாகப் பேணப்பட்ட யானைகளின் குடித்தொகை பெருகியமை அறியப்பட்டதாலும் மீள்காடாக்கல் எண்ணம் கைவிடப்பட்டு அப்பகுதி யானைகளின் வாழிடமாகவே ஆக்கப்பட்டது. அதே போல பின்னவலை யானைகள் புகலிடத்தையும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் ஆதரவற்ற யானைகள் அங்கே கொண்டு செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டன. ஆனால் தற்போது அங்குள்ள யானைகள் அச் சரணாலயத்திலேயே பிறந்து வளர்ந்தவை. ஆதலால் பின்னவலை யானைகள் புகலிடத்தை இனியும் அ நாதை /ஆதரவற்ற யானைகளுக்கானது என்று குறிப்பிடல் பொருந்துமா என்பது தெரிய வில்லை.

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கையில் யானை இனமே இருக்காது என்றே எதிர்வு கூறப்பட்டது. மாறாக இந்தப் போக்கு எதிர்த்திசையில் திரும்பி இன்று யானைகளின் குடித்தொகை அதிகரித்துள்ளது.

இது யானைகள் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலையொன்று தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருவதையே சுட்டி நிற்கிறது. நிலைமை இப்படி இருக்கும் போது தான் யானைகளின் தொகைக் கணக்கெடுப்பும் முக்கியத்துவம் பெறுகிறது . அத்துடன் அது காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.

இம்மாதத்தின் நடுப்பகுதியில் ஓரிரு நாட்களுக்கு இலங்கையில் உள்ள விலங்குகள் சரணாலயங்கள் பல மூடப்பட்டன. ஏன் தெரியுமா? இலங்கையில் இருக்கும் யானைகளைக் கணக்கெடுக்கும் பணி நாடளாவிய ரீதியிலே ஆரம்பிக்கப்பட்டது. அந்தப் பணிக்கு இடையூறு விளைவிக்காமலிருக்கவே வில்பத்து , யால, வஸ்கமுவ உள்ளிட்ட 22 சரணாலயங்கள் சில நாட்களுக்கு மூடப்பட்டிருந்தன. தற்போது இலங்கையிலே 5000 க்கும் அதிகமான யானைகள் இருக்கலாமென எதிர்வுகூறப்படுகிறது. அவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன என்பதை அண்ணளவாக மதிப்பிடவே இந்த கணக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

1993 இலேயும் இத்தகைய மதிப்பீடு ஒன்று நடாத்தப்பட்டது.ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை. 18 வருடங்களின் பின்னர் தற்போது இந்த மதிப்பீடு மீண்டும் நடைபெறுகிறது. அதிலும் கடந்த ஒரு நூற்றாண்டு காலத்திலே முதன் முறையாக இலங்கை முழுவது ம் நடாத்தப்படும் முதற் கணக்கெடுப்பும் இதுவாகும். நீண்ட கால அடிப்படையிலே தரவுகளை ஆராய்ந்தால்இ யானைகளின் குடித்தொகை அதிகரிக்கும் போக்கையே காட்டுகிறது. அதை உறுதிப்படுத்தும் செயற்பாடாக இந்த கணக்கெடுப்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

சாதாரணமாக ஒரு கணக்கெடுப்பு எனப்படுவது குறித்த குடித்தொகை ஒன்றிலே உள்ள அங்கத்தவர்கள் தொடர்பான தரவுகளை ஒழுங்கான படி முறை மூலம் பெற்றுக்கொள்ளுதலைக் குறிக்கும். இது மனிதர்களுக்கும் பொருந்தும். மனிதர்கள் மத்தியில் எடுக்கப்படும் கணக்கெடுப்பை சனத்தொகைக் கணக்கெடுப்பு என்பர்.

தற்போது யானைகளின் எண்ணிக்கையை அறிய மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு சற்று மாறுபட்டது. யானைகள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு நீரருந்தச்செல்லும் யானைகளின் கூட்டத்தை அவதானித்தே இது மேற்கொள்ளப்பட்டது. இது யானைகளை நேரடியாகக் கணக்கிடும் ஒரு முறைமையாகும். காட்டு யானைகள் பொதுவாக மாலை வேளைகளில் அதிலும் வறண்ட காலப்பகுதியில் நீர் நிலைகளைத் தேடிச்செல்லும். ஆதலால் வறட்சி நிலவும் காலப்பகுதியொன்றின் உச்ச கட்டத்திலே இக்கணக்கெடுப்பை மேற்கொள்வது உசிதமானது. ஏனெனில் அத்தகைய கால கட்டத்தில் தான் பல நீர் நிலைகள் வறண்டு ஒரு சில நீர் நிலைகள் மட்டும் எஞ்சி இருக்கும். ஆதலால் கணக்கெடுப்பையும் இலகுவாக மேற்கொள்ளலாம்.

யானை – மனிதன் இடையிலான மோதலை மட்டுப்படுத்துவதற்கும் யானைகளுக்கென தனியான இடம் ஒதுக்குவதற்காகவும் இந்தக் கணிப்பீடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் முப்படையினர் கிராம மக்கள் போன்றௌரும் வனவள அதிகாரிகளுடன் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் துணையுடன் கணக்கெடுப்புப் பணி முடிவடைந்து விட்டது.

திரட்டப்படும் விபரங்கள் பேராதனை பல்கலைக்கழகத்தினூடாக விஞ்ஞானபூர்வமாக ஆராயப்பட்டு அறிக்கையாகத் தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. . ஆண் யானை , பெண் யானை ,தனியான யானை, கூட்டமாக உள்ள யானைகள், அவற்றின் வயது வேறுபாடுகள், அவை தங்கியிருக்கும் பகுதிகள், அவற்றின் பாதை, அவை கொண்டிருக்கும் நோய்கள், காயங்கள் என யானைகள் பற்றிய சகல விதமான விபரங்களும் திரட்டப்பட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்படும். நாட்டில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ள மற்றும் அவற்றினால் தொல்லைகள் ஏற்படும் பகுதிகளை அடையாளம் காணவும் இந்த கணக்கெடுப்பு வழி வகுக்கும் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் இலங்கைக்குப் பொருந்தக் கூடிய யானைகளின் பாதுகாப்புத் திட்டங்களுக்குப் பயன் படும் எனக் கூறப்படுகிறது. ஆனால் இக்கணக்கெடுப்பு முறைமையிலும் பல சிக்கல்கள் காணப்படத்தான் செய்கின்றன. இம்முறைமையின் வினைத்திறன் எவ்வாறு அமைந்திருக்கிறது என்பதை ஆய்வறிக்கை தான் சொல்ல வேண்டும். இந்த ஆய்வுஎங்ஙனம் யானை-மனிதன் முரண்பாட்டைத் தீர்க்கப்போகிறது என்பதையும் அதே ஆய்வறிக்கை தான் சொல்ல வேண்டும்.








இலங்கை யானைகள்

இலங்கை யானை ஆசிய யானையின் உப இனமாகும். 1986 வரை இலங் கை யானைகள் அழிவடைந்து செல்லும் அச்சுறுத்தலையே கொண்டிருந்தன. அதற்கான முக்கிய காரணமாக வாழ்விடம் இழக்கப்படுதலும் காடழிப்பும் கருதப்பட்டது. 1758 இலேயே இந்த யானை இனம் முதன் முதலில் கண்டறியப்பட்டது. தற்போது உடவளவை, யால, வில்பத்து, மின்னேரியா போன்ற தேசிய வனப் பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலேயே அவற்றிலும் உலர் வலயத்திலேயே அவற்றின் இருப்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


ஆபிரிக்க யானைகளுடன் ஒப்பிடும் போது ஆசிய யானைகள் பருமனில் சிறியவை. பெண் யானைகள் ஆண் யானைகளை விடச் சிறியவையாக இருக்கும். கிட்டத்தட்ட 7 சதவீதமான ஆண் யானைகளுக்கே தந்தங்கள் இருக்கும். யானைகள் சமுதாய விலங்குகளாகும். அவை கூட்டமாக வாழ்வதில் அதிக விருப்புடையவை. ஆசிய யானைகளைப் பொறுத்தவரையிலே அவை பழைய நட்பை ஒரு போதும் மறப்பதில்லை எனவும் அவற்றின் சமூக வலையமைப்பு விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விடப் பெரியது எனவும் தெரிவிக்கப்படுகிறது. யானைகளும் மனிதர்களைப் போலவே சமூக விரும்பிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய யானைகளில் ஆண் யானைகள் தனித்து வாழ்வதையே விரும்புகின்றன. பெண் யானைகள்ம் குட்டி யானைகளும் கொண்டிருக்கும் உறவூ வலையமைப்பு மிகவும் சிக்கலானது. சாதாரண மனிதர்கள் மத்தியில் காணப்படும் உறவுகளும் நட்புகளும் யானைகள் மத்தியிலும் காணப்படுகின்றன.


அவை அவற்றிற்கே உரித்தான மணத்தைக்கொண்டும் ஒன்றையொன்று கூப்பிட்டும் மிக நீண்ட தூரத்திலிருக்கும் சகபாடியை இலகுவாக இனங்காண வல்லவை.


மிகப்பெரிய சமூகக் குழுவின் ஒரு சிறிய தொகுதியே நாம் காணும் யானைக்கூட்டம் எனலாம். நீண்ட காலத்தின் பின் சந்தித்தாலும் தம் உறவூகளை அவை இலகுவாக இனங்காணும். நட்பைப் புதுப்பித்துக்கொள்ளும் என்கிறார்கள் ஆய்வாளார்கள். நண்பர்கள் என்று அமையூம் போது அவற்றின் முகத்தை இந்த ஆசிய யானைகள் ஒரு போதும் மறக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.


உடவளவை தேசிய வனப்பூங்காவில் கடந்த 20 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. யானைகளுக்கிடையிலிருக்கும் இந்தப் பிணைப்பு கோடைக்காலங்களில் மிகவும் இறுக்கமாக இருக்குமாம். அவ்வாறு இருப்பதன் மூலம் தமக்கான உணவு மற்றும் நீரின் பாதுகாப்பை அவை உறுதி செய்து கொள்ளுமாம். ஏனெனில் நாளொன்றுக்கு யானை ஒன்று 16 மணித்தியாலங்கள் உண்ணும். 225 லீற்றர் நீரை அருந்தும்.


நீர் பற்றாக்குறையாக இருக்கும் போது அவை பெரிய குழுக்களாகத் திரியூம். தாம் நீரருந்தும் இடங்களில் பழக்கமற்ற யானைகளை நீரருந்த விடாது கலைக்கும். அத்துடன் இந்த யானைகள் தம் உறவு, நட்பு வட்டத்தை ஒருபோதும் மாற்றுவதில்லை.

1 comment:

Anonymous said...

how many elephants killed during the war

Post a Comment