Monday, April 18, 2011

காடும் மலையும் இல்லையென்றால்....?

காடும் மலையும் இல்லையென்றால்
வீடும் நாடும் இனி யேது?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!


இந்த வரிகளின் யதார்த்தத்தை இப்போது மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறோம் என்றே கூற வேண்டும். இயற்கையின் ஆசிகளை ஒருங்கே பெற்ற திரு நாடு இலங்கை.
கடலோ மலையோ, ஆறோ குளமோ, வயலோ காடோ எங்கு செல்ல வேண்டுமென்றாலும் சில மணித்தியாலய பயணம் மட்டுமே போதுமானது. எல்லா நாடுகளுக்கும் இந்த வரம் கிடைப்பதில்லை. ஆனால் உலக வரைபடத்திலே ஒரு சிறு புள்ளியாய்த் தெரியும் இலங்கைத் தீவுக்குக் கிடைத்திருக்கிறது.
இயற்கையின் சொர்க்காபுரி என்று இலங்கையை வர்ணித்தல் தகும். எமக்கு அருகிலே இருக்கும் நாடு இந்தியா. அதிலும் தமிழ் நாடு மிக அருகில் என்று கூறலாம். அங்கே சனத்தொகை அடர்த்தி அதிகம். வளங்களின் அளவு குறைவு. ஆனால் இருக்கும் வளங்களைக் கொண்டு அவற்றின் உச்சப்பயனைப் பெற முயற்சிக்கும் அம்மக்களின் அயராத உழைப்பையும் தளராத நம்பிக்கையையும் நிச்சயம் பாராட்ட வேண்டும்.
மாறாக இலங்கையிலோ நிலைமை தலைகீழானது. தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் போது இங்கு சனத்தொகை அடர்த்தி குறைவு. இயற்கை வளச்செறிவு மிக அதிகம். ஆனால் எமக்குத் தான் அந்த அருமை புரிவதில்லை. இயற்கை வளங்கள் அருகக்கூடியவை என்ற சிந்தனை கூட இல்லாமல் அவற்றை வீணடிக்கிறோம்.
கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானப்பயணம் மேற்கொண்டால் யன்னலினூடு எம் பூமித்தாயை அவதானித்துப் பாருங்கள். விமானம் இலங்கைக்கு மேலாகப் பறக்கும் போது உங்களுக்குத் தெரிவது, பாம்பு போல வளைந்து நெளிந்து செல்லும் நதிகளும் நீர்த்தேக்கங்களும் பச்சைப்பசேலென்று தாவரங்களால் நிறைந்து போயிருக்கும் நிலப்பகுதியுமே. விமானம் மெல்ல மெல்ல இலங்கையைக் கடந்து தமிழ் நாட்டை அண்மிக்கும் போது வித்தியாசத்தை நன்கு உணர்வீர்கள்.
மரங்கள் நிறைந்து பச்சையாய்த் தெரிந்த நிலம் வெட்ட வெளியாய் மண்ணிறத்தில் தெரியத் தொடங்கும், கட்டடங்கள் மட்டும் எட்டிப்பார்க்கும். ஆங்காங்கே ஆறுகளும் தான் தெரியும். இந்தக் காட்சி மாற்றத்தை அனுபவித்து உணர்ந்து பார்த்தவர்களுக்கு எமது நாட்டுக்குக் கிடைத்த இயற்கையின் ஆசீர்வாதம் என்ன என்பது தெளிவாகப் புரிந்திருக்கும் ஆனால் நாம் அந்த ஆசீர்வாதத்தை உணர்வது கூட இல்லை.
இலங்கைக்கு இயற்கை அன்னை தந்த கொடைகள் யாவுமே இன்று பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி யிருக்கின்றன. எதிர்காலத்தைப் பற்றி சிறிதளவேனும் சிந்திக்காமல் நாம் மேற்கொண்ட செயற்பாடுகள் இன்று எம் மத்தியில் பெரும் சவால்களை உருவாக்கி விட்டிருக்கின்றன.
தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க எமது நாடு மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டப் படவேண்டியவை தான். ஆயினும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது பங்களிப்பை மட்டுப்படுத்துகின்றனரோ என்றும் சில வேளைகளில் எண்ணத்தோன்றுகிறது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது உண்மையில் சுற்றுச்சூழலைப் பேணுவதுடன் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதாகவும் அர்த்தப்படும். அவை மட்டுமன்றி சூழல் தொகுதிகளையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினுள் அடங்கும்.
இந்த இயற்கைச் சூழலுக்கு மனிதனால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியிலே பெருந்தொகையான அமைப்புகள் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
ஆசிய வலயத்திலே உயிர்ப்பல்வகைமை கூடிய நாடுகளுள் இலங்கையும் முதன்மை வகிக்கிறது. ஆசிய பிராந்தியத்திலே இலங்கையில் வனவளம் மிகவும் பெறுமதி மிக்கதாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் இங்கு இனப்பல்வகைமையின் அடர்த்தி மிக அதிகமாகும். ஆனால் அண்மைக்காலங்களிலே இந்த வன வளம் உட்பட இயற்கை வளங்களுக்கு எம்மால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது எம் தேசத்தின் இயற்கை அழகைக் கெடுத்து வருவது மட்டுமல்லாமல், மீண்டும் எமக்கே அச்சுறுத்தலாக மாறி விடுகிறது.
தற்போது இலங்கையின் நிலப்பரப்பில் 25 சதவீதத்துக்கும் குறைவானளவு நிலப்பரப்பிலேயே காடு இருக்கிறது. ஆனால் இது இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் இருந்த காடுகளின் அளவில் அரைவாசியாகும். ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட மர நடுகைத்திட்டங்களான மீள் காடாக்கல் செயற்பாடுகளால் உருவான காடு 30 சதவீதமளவிற்கு இருக்கிறது. இவை இயற்கையானவை அல்ல. அத்துடன் இவற்றில் பெரும்பாலானவை ஏகவினமானவை. அதலால் இயற்கைக் காடுகளில் இருக்கும் உயிர்ப் பல்வகைமையை இந்த மர நடுகைத்திட்டங்களில் எதிர்பார்க்க முடியாது.
ஆனால் 1800 களிலே இலங்கையின் நிலப்பரப்பில் 80 சதவீதமான பகுதி காடுகளால் சூழப்பட்டிருந்தது.
பல்வேறு பட்ட மனித நடவடிக்கைகள் காடழிப்பிற்குக் காரணமாயின. இலங்கையில் ஏற்பட்ட காலனித்துவ ஆதிக்கத்தையடுத்து பெருந்தோட்டப் பயிர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
குடியேற்றத்திட்டங்கள் உருவாயின புதிய பாதைகள் போடப்பட்டன. இத்தகைய பல நடவடிக்கைகளால் இயற்கைக் காடுகள் அழிக்கப்படத் தொடங்கின. கடந்த இரு நூறு வருடங்களாக இந்த நிலைமை தொடர்ந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்ததையடுத்து இலங்கையின் சனத்தொகையிலும் துரித அதிகரிப்பொன்று காணப்பட்டது. இவை யாவற்றாலும் இயற்கைக் காடழிப்பு தவிர்க்க முடியாததாகியது.
எதையுமே ஆக்குவதை விட அழிப்பது மிகச் சுலபம் என்று மூத்தோர் கூறுவர். அது காடழிப்பு விடயத்திலும் பொருந்தும். மாற்றுவழிகளைச் சிந்திப்பதை விட காட்டை அழித்து அபிவிருத்தியை மேற்கொள்வது இலகுவாகப்பட்டது போலும். காடுகள் துரித கதியில் அழிக்கப்பட்டு இன்று 25 இலும் குறைந்தளவு சதவீதத்துக்கு வந்து விட்டன.
காடுகள் அழிக்கப்படுவதன் விளைவால் மேலும் பல பிரச்சினைகளும் உருவாயின.
மண்ணரிப்பு, நிலச்சரிவு, வெள்ளம், தாவர, விலங்கினங்களின் அழிவு, மண் தரமிழத்தல் ஆகியவற்றுடன் மனித உயிருக்கும் உடைமைகளுக்கும் கூட சேதம் ஏற்பட ஏதுவாகியது.
இந்தப் பூவுலகிலே மனித உயிர் நிலைத்திருப்பதற்கும் முதன்மைக் காரணமான விடயங்களுள் மண்ணும் ஒன்று. இலங்கையின் மண் சட்டத்திற்கமைய (1996), மண்ணைப் பாதுகாப்பதற்காகவே பல கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி, வீடமைப்பு பெருந்தெருக்கள், பெருந்தோட்டக் கைத்தொழில், நிதி திட்டமிடல், நீர்ப்பாசன அமைச்சுகள், வன பரிபாலன சபை, மாகாண சபைகள் போன்றன அவற்றுள் சிலவாகும். பல்வேறு பட்ட சேதங்களில் இருந்து மண்ணைப் பாதுகாக்கம் வகையிலேயே இந்த மண் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் பொதுமக்கள் மத்தியில் அச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆதலால் சிறந்த வளம் கொண்ட மலை நாடு மண் அரிப்பிற்குள்ளாகும் பகுதிகளுள் முன்னணியில் இருக்கிறது என்பது இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
எமது நாட்டின் நகரப் பகுதிகளில் தற்போது அதிகரிக்கும் குப்பைகளின் அளவு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது.
அதனால் மொறட்டுவ, கண்டி, கொழும்பு, மாத்தளை, கம்பஹா, மற்றும் நீர்கொழும்பு போன்ற பல நகரப்பகுதிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியிருக்கின்றன. இப்பகுதிகளில் குப்பைகளால் ஏற்படும் மாசு அதிகரித்துக் காணப்படுவதே அதற்கான காரணமாகும். அத்துடன் குப்பைகளைக் கொட்டுவதற்கு போதிய இடவசதி காணப்படாமையும் அவற்றை மீள் சுழற்சி, செய்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளும் பெரிய அளவிலே காணப்படவில்லை என்பதுமே காரணங்களாகும். பல மாநகர சபைகளிலே குப்பைகளை முறையாக அகற்றுவதற்கான கட்டமைப்புக்கள் காணப்படவில்லை என்ற உண்மையை நாம் ஏற்கத்தான் வேண்டும். இதனால் நகரப்பகுதிகளில் மட்டுமன்றி புற நகர்ப்பகுதிகளிலும் குப்பைகள் சேர்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இது சுகாதார சீர்கேடாக அமைவது மட்டுமன்றி கட்டாக்காலி விலங்குகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து விட்டது. அவை மட்டுமன்றி குரங்குகள், யானைகள், மான்கள் எனப் பல விலங்கினங்கள் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தக் குப்பைகளை நாடத் தலைப்பட்டுள்ளன. திருகோணமலை பிறெட்றிக் கோட்டையின் அயற் சூழலிலே கொட்டப்படும் குப்பைகளை உணவாக உட்கொண்டபடி சுற்றித்திரியும் அத்தகைய மான்களைக் காண முடியும்.
நகரப் பகுதிகளில் உள்ள பல வடிகால்களில் நீர் வடிந்தோடும் வேகம் குறைவடைவதற்கும் அப்புறப்படுத்தும் குப்பைகளின் அளவு அதிகரித்தமையே பிரதான காரணமாகும்.
மழைக்காலங்களிலே நகர்ப்பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்துக்கான பிரதான காரணமும் இதுவாகும். அத்துடன் வடிகால்களில் சேரும் குப்பைகள் நோய்க்காவிகளான நுளம்பு, எலி போன்றவற்றின் இனப்பெருக் கத்துக்கும் வழி வகுத்து விடுகின்றன. குப்பைகளைத் திறந்த வெளியிலே கொட்டும் போது நீர்ப்பரப்புகள் மட்டுமன்றி நிலக்கீழ் நீரும் கூட மாசுபடுகிறது.
திறந்த வெளியிலே கொட்டப்படும் குப்பைகளை சட்டவிரோதமான முறையிலே எரிக்கும் செயற்பாடுகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இது சுவாசக்கோளாறுகளையும் வளி மாசையும் ஏற்படுத்துகிறது.
இலங்கை ஒரு தீவாதலால் இங்கு சேர்ந்திருக்கும் நிலப்பகுதிகளை எதிர்பார்க்க முடியாது.
ஆதலால் தான் காட்டுயிர் வளத்தைப் பேணுவது மிக மிக அவசியம் எனக் கூறப்படுகிறது. ஏனைய பெரிய நாடுகளைப்போல் ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னொரு பிராந்தியத்திற்கு விலங்குகள் இடம்பெயர்வதென்பது இலங்கையைப் பொறுத்தவரையில் சாத்தியமற்ற ஒன்று. காட்டுயிர் ஒன்று அழிந்து போகுமானால் போனது தான் என்ற நிலையே இங்கு காணப்படுகிறது. மனிதனின் பல்வேறுபட்ட தேவைகளுக்காக காட்டுயிர்கள் வேட்டையாடப்படுகின்றன. சிறுத்தை, குரங்கு, காட்டுப்பன்றி, யானை, மரை மற்றும் வேறு சில இனங்கள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டிருக்கின்றன.
மனிதர்களின் குடியேற்றங்கள் விஸ்தரிக்கப்பட காடுகள் அழிக்கப்பட்டன. கூடவே மனிதனுக்கும் காட்டுயிர்களுக்கும் இடையிலான முரண்பாடும் உருவாகியது.
சில பிரதேசங்களில் யானை - மனிதன் முரண்பாடு வலுப்பெற்றுக் காணப்படவும் இதுவே காரணமாகும். நாம் சாதாரணமானவர்கள் அல்லவே. இத்தகைய முரண்பாடுகளுக்கு நாம் வைத்திருக்கும் பாரம்பரிய தீர்வு ஒன்று இருக்கிறது. முரண்பாட்டுக் குள்ளாகும் யானைகளை புதியதொரு சூழலே வாழச் செய்தலே அந்த முறைமையாகும்.
மனிதனின் சுய நலப் புத்திக்கு இந்த முறைமை ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்று கூடக் கூறலாம். தனக்கு ஒரு இடம் தேவை என்றவுடன் அங்கு வாழும் உயிர்களைக் கருதாது அவ்விடத்தை அவற்றிடமிருந்து பறித்துவிட்டு அவற்றிக்கு புதிய பழக்கப்படாத வாழிடத்தை அமைத்துக் கொடுப்பதானது எவ்வளவு சுய நலமானது? அந்த வாழிடம் அவற்றிக்கும் பழக்கப்பட்டதாக இருக்கும் போது இந்த முரண்பாடுகள் குறைவடையும். இல்லையேல் மேன்மேலும் அதிகரிக்கும் என்பதே நிதர்சனமாகும்.
இந்த நடவடிக்கைகளில் ஈபடுவோர் சிலவேளைகளில் அடிப்படைப் பிரச்சினையைப் பற்றி சிந்திப்பதில்லை. பிரச்சினை என்று வரும்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எவருமே பெரியளவில் பாதிக்கப்படாதவாறே தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.
இலங்கையைச் சூழ ஏறத்தாழ 1585 கிலோ மீற்றர் நீளமான அழகிய கடல் வலயம் காணப்படுகிறது. அந்த வலயம் கூட கடந்த இரு தசாப்தங்களாகப் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கிறது. எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் கடல்வளங்கள் பாவனைக்குட்படுத்தப்படுகின்றன. பவளப்பறை அகழ்வு, மணல் அகழ்வு, கண்டல் நிலத்தாவரங்களான தாழை மரங்களை அழித்தல் போன்ற செயற்பாடுகள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இன்றும் சில இடங்களில் நடைபெற்று வருகின்றன. இது கடலரிப்பையும் சூழல் மாசையும், தோற்றுவிக்கிறது.
ஏறத்தாழ 15 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு நகரப்பகுதிகளில் புகையிரதப் பாதையிலிருந்து சற்றுத் தூரத்திலேயே கடல் காணப்பட்டது. ஆனால் இன்றோ, புகையிரதப் பாதையைத் தொட்டுவிடும் அளவிலே கடலின் எல்லை காணப்படுகிறது. அதேபோல 1996 ஆம் ஆண்டு ஹிக்கடுவை கடற்பரப்பில் கண்ணாடிப்படகினூடு கண்ட வண்ண வண்ண பவளப்பாறைகளைத் தற்போது காண முடிவதே இல்லை. அங்கு சுண்ணக் கற்பாறைகள் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளன.
2004 ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தையடுத்து இலங்கையின் நிலப் பாவனை முறைமைகளில் மாற்றம் ஏற்பட்டதென்பது உண்மையாகும். அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் போது வனப்பகுதிகள் ஈர நிலங்கள், கண்டல் நிலங்கள், மணற்பாங்கான பகுதிகள் போன்றன மாற்றியமைக்கப்பட்டன. ஆதலால், அயலில் இருக்கும் இயற்கை நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.
இலங்கை நன்னீர் வளம் மிக்க நாடு என்பதே பொதுவான அபிப்பிராயமாகும். ஆயினும், மாசடைதல் காரணமாக அந்த நன்னீர் வளம் பெருமளவில் மாசடைந்து வருகிறது.
பல்வேறுபட்ட தொழிற்சாலைக் கழிவுகளும் நன்னீர் நிலைகளிலே கலக்க விடப்படுகின்றன. மத்திய சுற்றாடல் அதிகார சபை பல கட்டுப்பாடுகளை விதித்தாலும் அவற்றையும் மீறிச் சிலர் செயற்படத்தான் செய்கிறார்கள். இலங்கையின் நீர் வடிகாலமைப்பு சபையினூடு விநியோகிக்கப்படும் நீரானது குளோரினேற்றம் மற்றும் சில நடைமுறைகள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நுண்ணங்கியழிவாக்கம் செய்யப்படுகிறது.
ஆனால் அந்நீரில் பார உலோகங்கள் கலந்திருக்கின்றனவா என அறிய எந்தவித சோதனைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. மாறாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பார உலோகங்களை அதிகளவில் கொண்டிருக்கும் தொழிற்சாலைக் கழிவுகள் நன்னீர் நிலைகளிலே கலப்பது தடுக்கப்படுகிறது. இரத்தினக்கல் அகழ்வு காரணமாக பசறை, பதுளை போன்ற பகுதிகளில் நன்னீர் மாசடைகிறது. புத்தளம் போன்ற பகுதிகளில் விவசாய உரங்களின் மிகை பாவனையானது நன்னீர் வளத்தைப் பாதிப்படையச் செய்கிறது. யாழ்ப்பாணமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் நெருக்கமான குடியிருப்புக்களால் மலக்குழிகளும் மிக அருகருகிலேயே அமைக்கப்படுகின்றன. அதனாலும் நன்னீரான நிலக்கீழ் நீர் பெருமளவில் மாசடைகிறது.
நகர மற்றும் கைத்தொழிற்கழிவுகள் பெருமளவில் அதிகரித்துச் செல்கின்றன. இந்தப் பிரச்சினை இலங்கையின் நகரங்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. எல்லா நகரங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்காக நாம் அலட்சியமாக இருந்து விட முடியாது. இந்தப் பிரச்சினையால் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கும் நகரம் கொழும்பு ஆகும். தினமும் 1500 தொன் திண்மக்கழிவுகள் கொழும்பு நகர சபையினால் மட்டுமே அப்புறப்படுத்தப்படுகின்றன.
ஆனால் அவற்றுள் பெரும்பாலானவை சேதனக்கழிவுகள். ஆனால் முறையான செயற்றிட்டங்கள் செம்மையாக நடைமுறைப்படுத்தப்படாததால் இக்குப்பைகளை ஒழுங்காக அகற்ற முடியாத சூழல் ஒன்று காணப்படுகிறது.
எமது நாட்டில் கண்டல் நிலத்தாவரங்களான தாழை மரங்கள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. இலங்கைக்கு இயற்கை அன்னை கொடுத்த வரங்களில் ஒன்றான இந்த தாழை மரங்கள் உயிர்ப்பல்வகைமை நிறைந்த சூழற்தொகுதிகளைப் பேணுவதில் முன்னணி வகிப்பவை. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 0.1-0.2 சதவீதமான நிரப்பரப்பிலேயே அவை காணப்படுகின்றன. ஆயினும் கடலரிப்பைத் தடுப்பதிலும் பறவைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதிலும் கணிசமான பங்களிப்பைச் செலுத்துகின்றன. கற்பிட்டி, மட்டக்களப்பு, மது கங்கை, திருகோணமலை, யாழ்ப்பாணம், பொத்துவில், பெரிய களப்பு கடல் நீரேரிகளில் தாழை மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
அவை இயற்கைச் சம நிலையைப் பேணுவதுடன் மட்டும் நின்று விடாது அயலில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் துணை புரிகின்றன. ஆனால் அவற்றிக்கெல்லாம் நன்றியாக நாம் இருக்க முயல்வதில்லை. சட்டவிரோத மரம் தறிப்பு, குடியேற்றங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான நிலத்தை உருவாக்கல், நகரசபை, மற்றும் புற நகர்க் கழிவுகளைக் கொட்டுதல் எனப்பல்வேறு காரணங்களைக் காட்டி இந்தக் கண்டல் நிலத்தாவரங்கள் மீது பெரும் அழுத்தத்தைப் பிரயோகிக்கிறோம்.
இவற்றடன் எல்லாம் நாம் நின்று விடுவதில்லை. எமது எதிர்காலச் சந்ததியை மட்டுமன்றி எமது எதிர்காலத்தையும் கூடக் கருத்தில் கொள்ளாது இன்று மகிழ்வுடன் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பாங்குடன் செயற்படுகிறோம். இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை மட்டும் தான் எமது நாடு எதிர் நோக்கும் சூழல் பிரச்சினைகள் என்று கருதக்கூடாது.
இங்கே குறிப்பிடப்படாத எண்ணற்ற பிரச்சினைகள் காணப்படத்தான் செய்கின்றன. அவை யாவற்றிற்கும் அடிப்படையாய் அமைவது எமது மனப்பாங்கு மட்டுமே. அதிலே மாற்றம் ஏற்பட்டால் பல பிரச்சினைகள் இருந்த இடமே தெரியாமல் போய் விடும். இந்த சூழல் பிரச்சினைகளுக்கான தீர்வு எங்கள் கைகளிலேயே உள்ளது என்பது மட்டும் கண்கூடு.

No comments:

Post a Comment