Tuesday, April 12, 2011

வீதியோரப் பிஞ்சுகள் வேண்டாம்!




(வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினத்தையொட்டி
(12.04.11) இக்கட்டுரை பிரசுரமாகிறது)

பள்ளிக்கூடம் செல்லவில்லை
பாடம் எதுவும் படிக்கவில்லை
ஒன்று மட்டும் சொல்கிறேன்
வெந்து வெந்து சாகிறேன்
பெற்றோரை குற்றம் சொல்லவா - இல்லை
படைத்த அந்த பிரம்மனை குற்றம் சொல்லவா
ஒன்று மட்டும் வேண்டாம்
இந்த கொடுமை எந்த பிஞ்சுக்கும் வேண்டாம்
வீதியில் பிஞ்சுகள் வேண்டாமென
வீதியெங்கும் உரைப்போம் அனைத்து
வீதி எங்கும் உரைப்போம்.

வீதியோரச் சிறுவனொருவனின் மன நிலையை அப்படியே பிரதிபலித்து நிற்கிறது இந்தக் கவிதை.
யாரை அப்படிச் சொல்கிறோம் என்று தெரியாமலேயே வீதியோரச் சிறார்கள் என்று மிகவும் எளிதாகச் சொல்லி விடுவோம். இன்று முழு உலகிலுமே வியாபித்து விஸ்வரூபம் எடுத்து நிற்கும் பிரச்சினைகளுள் ஒன்று வீதியோரச் சிறுவர்கள் பற்றியது. ஏனெனில், தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலச் சந்ததி ஒன்று தனது எதிர்காலத்தைத் தொலைத்து வீதியில் நிற்கத் தலைப்பட்டு விட்டது. இத்தகைய நிலை அதிகரித்துச் சென்றால், முழு உலகின் எதிர்காலமும் கூட தலை கீழாக மாறி விடும் வாய்ப்பும் காணப்படுகிறது.
அடுத்து, வீதியோரச் சிறார்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள், சந்தர்ப்ப சூழ் நிலைகள் அவர்களை அப்படி ஆக்கிவிட்டன. சிறுவர்களுக்கான சகல உரிமைகளும் அவர்களுக்கும் இருக்கின்றன. பல்வேறு வயதெல்லைகளைச் சேர்ந்த சிறார்கள் தமக்குத் தேவையான ஆதரவும் அரவணைப்பும் கிடைக்காததால் வீதிகளையே தமது வாழ்விடமாக்கிக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய சிறார்களை ஆதரவற்றவர்கள், வீதியோரச் சிறார்கள் எனப் பல்வேறுபட்ட வகைகளில் பாகுபடுத்திப் பார்க்கிறது இன்றைய உலகம்.
சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, தவிர்க்கப்பட்ட ஒரு குழுவாகவாகவே இந்த வீதியோரச் சிறார்கள் பார்க்கப்படுகின்றனர். அவர்கள் மூன்று விதமாக வகைப்படுத்தப் படுகின்றனர். ஒன்று வீதியோரங்களில் வசிக்கும் சிறார்கள். அதாவது குடும்பமொன்றுடன் இல்லாமல் பொது இடங்களில் உறங்கி எழும்பி, அங்கேயே வாழ்பவர்கள்.
மற்றையது, வீதியோரங்களில் வேலை செய்யும் சிறார்கள், அவர்கள் காலையில் புறப்பட்டு, தெருவோரங்களில் வேலை செய்துவிட்டு, மாலையில் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்பவர்கள். அடுத்தது, வீதியோரக் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள். இவர்கள் தமது குடும்பத்தினருடன், வீதியோரங்களிலேயே வசிப்பவர்களாக இருப்பர். உண்மையில் வீதியோரச் சிறார்கள் என்பது, நன்கு வரையறுக்கப்பட்ட ஏகவீனமானதொரு குடித்தொகை அல்ல. வீதியோரம் என்ற சொற்பிரயோகம் உண்மையில் இச் சிறார்களின் பல முகங்களுள் ஒன்றை மட்டுமே வெளிக்கொணருவதாக இருக்கிறது. ஐ.நாவின் தரவுகளின் அடிப்படையிலே உலகளாவிய ரீதியிலே, இந்த வீதியோரச் சிறார்களின் எண்ணிக்கை என்ன என்பது கணக்கெடுக்கப்படவில்லை. சமூக ரீதியாக அங்கீகரிக்கப்படாத, தவிர்க்கப்பட்ட சிறுவர்களை ஐ.நா. வீதியோரச் சிறார்கள் என்ற வகைக்குள் உள்ளடக்க முயற்சிக்கிறது. உலகளாவிய ரீதியிலே 100 மில்லியனுக்கும் குறைவான, ஆனால் கணிசமானளவு வீதியோரச் சிறார்கள் இருக்கிறார்கள் என்பதில் யாவருமே உடன்படுகிறார்கள். வீதியோர வாழ்வு அபாயங்கள் நிறைந்தது. ஆதலால் குறிப்பாக பெண் குழந்தைகள் தம்மை வெளியுலகுக்கு அடையாளங்காட்ட முனைவதில்லை. ஆதலால் இந்தக் கணக்கெடுப்பு குறைவாக மதிப்பிடப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. மனித வள, நிதி ரீதியான வளங்களின் அடிப்படையில் மிகவும் திருத்தமான கணக்கெடுப்பை மேற்கொள்வதானது செலவு மிக்கதோர் விடயமாகவே தெரிகிறது.
உலகளாவிய ரீதியிலே இந்த வீதியோரச் சிறார்களின் எண்ணிக்கை காலத்துடன் அதிகரித்துச் செல்வது மட்டும் உணரப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுள் ஏறத்தாழ 10 சதவீதமானோர் வெளி உலகுக்குத் தம்மை அடையாளம் காட்டி இருக்கின்றனர். ஏனையோர் தமது பாதுகாப்புக் கருதி, வெளி உலகுக்குத் தம்மை அடையாளம் காட்ட முனைவதில்லை. ஆசிய மற்றும் ஆபிரிக்கப் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரித கதியிலான நகரமயமாக்கலினால் பல வீதியோரச் சிறுவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். அதேபோல் எச். ஐ.வி எய்ட்ஸ் தொற்றுக்கு ஆளாகி, கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் சிறார்களின் எண்ணிக்கையும் இப்பிராந்தியத்தில் மிக அதிகமாகும்.
சிறுமிகளை விட, சிறுவர்களே வீதியோரச் சிறார்களாக அதிகளவில் காணப்படுகின்றனர். ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் ஆபிரிக்க நாடான கானா விதி விலக்காக இருப்பது தெரிய வந்தது. அங்கு இரு பாலருமே சம அளவில் காணப்படுகின்றனர். பெண் சிறார்களைப் பொறுத்தவரையிலே பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த எதிர்பார்ப்புகளுக்கும் நவீன வாழ்வியலுக்கும் இடையிலான சிக்கல் மிக்க இடைத் தொடர்பே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. உதாரணமாக, இளவயதுத் திருமணங்களில் இருந்து தப்புவதற்காக, கானாவில் பல சிறுமியர் தமது வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். இன்னும் சிலர் தமது திருமணத்துக்கு சீதனம் சேர்ப்பதற்காக வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர்.
ஆனால் பல நாடுகளின் பாரம்பரிய கலாசார அமைப்பிலே ஆண் பிள்ளைகள் சுதந்திரமாகச் செயற்படுவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர். ஆனால் பெண் பிள்ளைகளைப் பொறுத்த வரையிலே அந்த வரையறை சற்று மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுகிறது. ஆனால் இந்த பாரம்பரிய கலாசார முறைமைகள் பல உடைக்கப்பட்டு வருகின்றன. இள வயதுத் திருமணங்கள் பெண் பிள்ளைகள் பலரால் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அது மட்டுமன்றி நகரங்களின் நவீன வாழ்வியல் மீதான ஈர்ப்பும் பல வீதியோரப் பெண் சிறுமிகளை உருவாக்கி விடுகின்றன. எகிப்து போன்ற நாடுகள் கூட அதற்கு விதிவிலக்கவில்லை.
சமூகத்தில் காணப்படும் பாகுபாடுகளும் குடும்பங்கள் மீது திணிக்கப்படும் சமூக பொருளாதார அழுத்தங்களும் பல சிறார்களை வீதியோரச் சிறார்கள் ஆக்கி விடுகின்றன. இந்தியாவிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறார்களே அதிகளவில் வீதியோரச் சிறார்களாகக் காணப்படுவதாக ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெளதமாலாவிலே, சுதேச குடிகள் மீது காட்டப்பட்ட பாகுபாடுகள் அக்குடும்பங்களைச் சேர்ந்த பிஞ்சுகளை வீதியோரச் சிறார்களாக்கி விட்டிருக்கிறது. அதேபோல, மிகை வறுமை காரணமாகவும் பல சிறார்கள் அப்படி மாறியிருக்கிறார்கள். இந்தியாவிலே மாற்றுத்திறனுள்ள சிறார்கள் பலர் பிச்சைக்காரர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். மாறியிருக்கிறார்கள். எகிப்திலும் அத்தகையதோர் நிலை காணப்படத் தான் செய்கிறது. எச். ஐ. வி. தொற்றும் யுத்தமும் கூட. பலரை வீதியோரச் சிறார்களாக்கி விட்டிக்கிறது. இப்படி அவர்கள் வீதியோரச் சிறுவர்களாக்கப்பட ஏதுவாக அமைந்த காரணிகள் மிகவும் சிக்கலானவை.
ஏலவே குறிப்பிட்ட காரணிகள் தவிர, முரண்பாடுகள், அனர்த்தங்கள், கால நிலை மாற்றம், குடிப்பெயர்வு, நகர மயமாக்கல், கலாசார மனப்பாங்குகள், போதிய கல்வியறிவின்மை, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் அவர்களது தொழில் இடங்களில் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் போன்றனவும் காரணமாய் அமைந்து விடுகின்றன. முரண்பாடுகள், உருவாகும் போது வீதிப்போராட்டங்கள் வலுக்கின்றன. சிறுவர்களும் வீதியில் இறங்கிப் போராடத் தலைப்படுகிறார்கள். முடிவில் பல்வேறுபட்ட காரணங்களால் வீதிச் சிறுவர்களாகவே மாற்றப்படுகிறார்கள். வளைகுடா நாடுகளில் தற்போது காணப்படும் அமைதியற்ற நிலைமையானது, வீதியோரச் சிறார்கள் பலரை உருவாக்கிவிடும் என்பதும் நிதர்சனம். அனர்த்த நிலைமைகளும் அதற்கு விதிவிலக்கல்ல.
இயற்கை அனர்த்தங்கள் இடப் பெயர்வுகளை உருவாக்கும். அமைதியான வாழ்வியல் கோலத்தைச் சிதைக்கும். வறுமை நிலையை அதிகரிக்கும். விளைவு வீதியோரச் சிறார்களின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கும். உலகளாவிய ரீதியிலே அனர்த்தங்களால் அதிகளவில் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று பங்களாதேஷ். கால நிலை மாற்றத்தால் மேலும் பாதிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. 2007 ம் ஆண்டு மட்டும் 5635 பேர் இயற்கை அனர்த்தத்தால் கொல்லப்பட் டனர். 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். அதேபோல தற்போது ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தமும் பல மில்லியன் மக்களைப் பாதித் திருக்கிறது. அங்கே, பல சிறார்கள் தம் பெற்றோரைத் தொலைத்துவிட்டு பரிதவித்துப் போய் நிற்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் பிரதான விளை வான, கடல் மட்ட உயர்வானது. கடற் கரைப் பகுதி மக்களை, உட் பகுதிகளை நோக்கி இடம் பெயர வைக்கும். பல மில்லியன் மக்கள் தமது வீடுகளையும் வாழ்வியலையும் மாற்ற வேண்டி இடம் பெயர்வர். பல சிறார்கள் தமது பாடசாலைக் கல்வியை இழக்க நேரிடும். அவர்கள் பாடசாலைக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டு பல அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தப்படலாம். இவை யெல்லாம் நகரப் பகுதிகளில் இருக்கும் வீதியோரக் குடும் பங்கள் மற்றும் சிறார்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
1960 ஆம் ஆண்டிலிருந்து நாடுகளுக்கிடையிலான குடி பெயர்வுகள் அதிகரித்து வருகின்றன. பின் தங்கிய பகுதிகளில் இருந்து நகரப் பகுதிகளை நோக்கி இடம் பெயர்வதானது பெருமளவில் நடைபெறுகிறது.
துரித கதியில் நடக்கும் நகர மயமாக்கலானது திட்டமிடப்படாத குடியமர்வு களையும் சேரிகளையும் உரு வாக்கி விடுகிறது. டக்கா, மும்பை போன்ற நகரங்களிலே அத்த கைய நெருக்கமான சேரிப்புற ங்கள் பலவற்றைக் காணமுடியும். அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் அச்சேரிப்புறங்கள் அகற் றப்படும்போதும் அம்மக்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாவர். விளைவு வீதியோ ரச் சிறுவர்களின் எண்ணிக்கை யில் பிரதி பலிக்கும். பல கலாசார கட்டமைப்புக்களில் ஊனத்துடன் குழந்தைகள் பிறப்பதானது வெட்கத்துக்குரிய, அவமானத்துக்குரிய விடய மொன்றாகப் பார்க்கப்படுகிறது. துடிப்பான பெண் குழந்தைகள் குடும்பத்தை அவமதிப்பவர் களாகக் கருதப்படுகின்றனர்.
பெற்றோர்களின் கல்வி அறிவு மட்டம் குறைவாகக் காணப்படுதல், தரமான கல்வி யைச் சிறார்களுக்கு வழங்க முடியாமை, கல்வியை வழங்கு வதற்கான செலவை ஈடு செய்ய முடியாமை, போன்ற பல கார ணங்கள் சிறார்களின் கல்வி கற்கும் உரிமையைப் பாதிக் கின்றன. சிறுவர்களுக்கான கல்வி உரிமையை வழங்குவதன் மூலம், எவராயினும் அவரை சமூகமொன்றினுள் உள்வாங்க முடியும். ஆனால் இங்கு அந்த உரிமையே மறுக்கப்படு வதால், அவர்கள் சமூகத்தினால் உள்வாங்கப்படாதவர்களாகவே இருக்கத் தலைப்படுகின்றனர். வறுமை காரணமாகத் தொழிலுக்குச் செல்லும் சிறார்கள் மீது பல்வேறுபட்ட வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து தப்பிக்க முயன்று கடைசியில் அச் சிறார்கள் வீதியோரச் சிறார்களாக மாறுகின்றனர்.
இச்சிறுவர்கள் அப்படியே விடப்படலாகாது. அவர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்களது பெற்றோரின் வாழ்க்கை முறையில், தலையிட்டு ஆக்க பூர்வமான மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment