Monday, December 5, 2011

SLAAS Awards for the popularization of Science - 2011


கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல் - 09


பராமரிப்பும் கவனிப்பும் இல்லாமல்
 அழிந்து போன வீடுகள் அதிகம்



யாழ்ப்பாணத்தின் வேலி மாதிரிகள், கடந்த கால நினைவுகளை மீட்க உதவின என்றால் மிகையில்லை. அடுத்த தொகுதி புகைப்படங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமாக அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்திலே தொட்டக் காலத்திலிருந்து வெளிவந்த பத்திரிகைகளின் மின் பிரதிகள் அச்சிடப்பட்டு பதாகைகளாக வைக்கப்பட்டிருந்தன. இந்து சாதனம் தொட்டு எண்ணற்ற பத்திரிகைப் பிரதிகளைக் காண ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இது ஊடகத்துறை மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாய் அமைந்திருக்கும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. இன்று கணினி இருப்பதால் உள்ளத்தில் நினைப்பதைத் தத் ரூபமாக வடிவமைக்க முடியும். பத்திரிகையின் பக்கம் தயாராகி விடும். தேவையானால் சேர்க்கலாம். வேண்டாவிட்டால் நீக்கலாம். ஆனால் அச்சுக்கலை தொடக்கப்பட்ட காலம் தொட்டு அத்துறையில் கணினிகள் அறிமுகமாகும் வரை நினைத்தபடி மாற்றும் வடிவமைப்புகள் சாத்தியம் குறைந்தனவாகவே இருந்தன.
அத்தகைய காலங்களிலும் கூட உடனடிச் செய்திகளைத் தாங்கி வெளிவந்த அந்தப் பத்திரிகைகளைப் பார்க்க கிடைத்ததே ஒரு கொடுப்பினை என்று தான் கூற வேண்டும். அந்தந்தக் காலத்து மொழி நடை, பக்க வடிவமைப்பு நுட்பங்கள், செய்திகளின் தன்மைகள் என அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய விடயங்கள் எத்தனையோ இருக்கின்றன. அவை தாங்கிய செய்திகள் எம் கடந்த கால வரலாற்றைக் கூறுகின்றனவோ இல்லையோ, அச் செய்திகளின் தன்மை நாம் கடந்து அந்த வரலாற்றின் அடிப்படையைக் கூறும்.
அதேபோல மற்றொரு பகுதியிலே யாழ்ப்பாணத்து பெரியார்களின் உருவப்படங்கள் பெயரிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. எங்கு தேடியும் கிடைக்காத அந்த அரிய படங்களைக் காட்சிப்படுத்தியிருந்தமையானது உண்மையில் ஒரு சிறந்த முயற்சி என்றே கூற வேண்டும்.
அதேபோல பழைமையான யாழ்ப்பாணத்து பாடசாலைகளின் முகப்புகளின் தோற்றங்களும் புகைப்படங்களாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தன. யாழ். மண்ணிலே ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சி புரிந்தமையால் பல துறைகளிலும் அவர்களின் செல்வாக்கு காணப்பட்டது.
அவர்களது என்பதை விட அவர்களது நாட்டின் செல்வாக்கு என்று கூறுதல் சாலப் பொருந்தும். யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகள் மிகப் பிரபலமானவை. அவற்றைப் பற்றி விபரிக்க முயன்றால் இந்த பக்கம் போதுமா எனத் தெரியவில்லை. ஆரம்பகாலங்களில் திண்ணைக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட வீடுகள் பின்னர் காலனித்துவ ஆட்சிக்காரரின் பாரம்பரியங்களையும் உள்வாங்கி மெல்ல மெல்ல பரிணமித்தன என்று கூறலாம்.

மிகவும் தொன்மையான வரலாறுடைய யாழ்ப்பாணக் கோட்டையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றும் நிலைத்து நிற்பதைக் காணமுடியும். கோட்டையைச் சூழவுள்ள பிரதேசம் முழுவதும் வரலாற்று மணம் வீசுவதற்கு இந்த ஒல்லாந்து காலக் கட்டடங்கள், வீடுகளும், ஒரு காரணம் எனலாம். அப்பகுதியில் மட்டுமன்றி பல பகுதிகளிலும் அத்தகைய காலனித்துவ காலக் கட்டடங்கள் காணப்படுகின்றன. நல்லூர், ஆனைக் கோட்டை போன்ற பிரதேசங்கள் அவற்றுள் சிலவாகும். சில ஊர்களுக்குச் சென்றால் பெரும்பாலான கட்டடங்கள் காலனித்துவ காலத்தவையாகவே இருக்கின்றன. இந்த கட்டடங்களையெல்லாம் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சி பாராட்டுதற்குரியது.
இக் கட்டடங்கள் பிரமாண்டமானவை. இவற்றின் ஒரு தளமானது நவீன கட்டடமொன்றின் இரு தளங்களின் உயரமுடையதாக இருக்கும். வீடுகளின் அறைகள், விறாந்தைகள் எல்லாம் மிகவும் விசாலமானவை, மக்கள் முன்னைய காலங்களிலே கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். பெரிய வீடும் அவசியமாக இருந்தது. வீட்டிலே நிறைய அங்கத்தவர்கள் இருந்தமையால் பராமரிப்பும் கடினமாகத் தெரியவில்லை.

ஆனால், இன்றைய நிலைமையோ தலை கீழானது. கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. தனிக் குடும்பங்களிலும் ஒரு சில அங்கத்தவர்களே யாழில் வாழ்கிறார்கள். அவர்களுள் பெரும்பாலானோரின் பார்வையிலே இந்த பழைமையான வீடுகள் பெருஞ்சுமைகளாகவே தெரிகின்றன.
போரினால் சிதைந்த வீடுகளை விட, கவனிப்பாரின்றி, போதிய பராமரிப்பின்றி சிதைந்து போன வீடுகளே அதிகம் எனலாம். அவற்றைப் பராமரிப்பதொன்றும் இலகுவான காரியமுமல்ல. இரு நவீன வீடுகளைப் பராமரிப்பதற்கு ஆகும் செலவை விட இந்த காலனித்துவ கால வீடுகளைப் பராமரிப்பதற்கான செலவு அதிகமாகும். அத்துடன் நவீன மோகத்தின் இந்த பழைமையான வீடுகள் செயலிழந்து செல்லாக்காசாகி விடுகின்றன என்பது தான் பொதுவான உண்மை. ஆயினும் கூட, காலனித்து காலத்துவ வீடுகளின் மதிப்பை உணர்ந்து அவற்றைப் பேணிப் பாதுகாத்து வருபவர்களும் இல்லாமல் இல்லை. இளஞ் சந்ததியினருக்கு அந்த வீடுகளின் அருமையைத் தெரிய வைத்தாலன்றி வேறு எந்த வகையிலும் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதென்பது நிதர்சனம்.
அந்த உன்னதமான பணியை இந்த யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி செய்திருக்கிறது என்று தான் கூறவேண்டும். நாற்சார வீட்டில் வசிப்பதன் சுகம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். சுகமான அனுபவம் என்று கூறுதல் தகும்.
இவை தவிர தொல்லியல் திணைக்களத்தின் துணையுடன் வட மாகாணத்திலே மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வுகள்,அவற்றிலே கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் போன்றனவும் கூட ஆவணப் பதாகைகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதுவரை நாம் பார்த்தவை யாழ். கண்காட்சி பற்றிய ஒரு மேலோட்டமான பார்வையே! கண்காட்சியில் இருந்த பல விடயங்கள் இங்கு தவற விடப்பட்டும் இருக்கலாம். ஆயினும் இக்கட்டுரைத் தொடர் ஒரு பொதுவான எண்ணப்பாட்டை வழங்கியிருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
இம்முறை கண்காட்சியைத் தவற விட்டவர்கள் எதிர்வரும் காலங்களிலும் தவறவிட்டு விடக் கூடாதே என்ற நல்லெண்ணமும் எம்மவரின் தொன்மை மிகு வாழ்வியலை இளஞ்சந்ததி உணர வேண்டும் என்பதுவுமே இக்கட்டுரை வரையப்பட்டதன் நோக்கமாகும்.
கண்காட்சி நடைபெற்ற அதேவேளை ஆய்வரங்கும் நடைபெற்றிருந்தது. தமிழ், ஆங்கில மொழிகளிலான ஆய்வுக்கட்டுரைகள் பலவும் சமர்ப்பிக்கப்பட்டன. அவை விரைவில் புத்தகமாக வெளியிடப்படும் என பேராசிரியர் புஷ்பரட்ணம் குறிப்பிட்டிருந்தார். வரலாற்று ஆய்வு என்ற எல்லைக்குள் இன, மத, மொழி பேதம் இல்லை என்ற உண்மை ஆய்வரங்கில் தெளிவானது.
ஆனைக்கோட்டை முத்திரை உட்பட, யாழ்ப்பாணத்து தொல்லியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட சகோதர இனத்தவர்களையும் இங்கு குறிப்பிடவேண்டும். கடந்த மூன்று தசாப்த காலமாகத் தொடர்ந்த யுத்தமானது எம்மவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடக்கி விட்டது என்று தான் கூற வேண்டும். கண்காட்சியில் கண்ட சில விடயங்கள் அதைப் பிரதி பலித்தன. யாழ். பல்கலைக்கழக பெரும்பான்மைச் சமூகத்தின் மொழியாற்றல் தமிழுக்குள் மட்டும் முடக்கப்பட்டு விடக் கூடாது என்பது பலரின் அவாவாக இருக்கிறது. ஆங்கிலத்துக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டால் தொடர்பாடல் திறன் விருத்தியும் சிறப்பாக இருக்கும். அதேவேளை வெளிப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்பு மேம்படுத்தப்பட வேண்டும். மாணவர் பரிமாற்ற செயற்றிட்டங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
உலக வரைபடத்தைப் பொறுத்த வரையிலே இலங்கை ஒரு சிறு புள்ளி, அதிலே ஒரு சிறிய பகுதி தான் வட மாகாணம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு எமது எல்லையைக் குறுக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். அந்த உண்மையை இக் கண்காட்சியின்போது காணக்கூடியதாக இருந்தது.
எம்மவரின் அடிப்படை மனப்பாங்கு மாற வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை தான். ஆனால் அதற்குள் வெளியுலகு எம்மைப் புறந்தள்ளி ஒதுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தும் திறன், அம்முடிவுகள் கணினி மென்பொருள் மூலம் வெளிப்படுத்தப்படும்போது அவை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் போன்ற பல விடயங்கள் தொடர்பிலே நவீன விடயங்கள் அறியப்படவேண்டும். பல செயற்றிட்டங்கள், விரிவுரைகள் நடாத்தப்பட்டு அவை தொடர்பிலான பயிற்சி பல்கலைக்கழக சமூகத்துக்கு வழங்கப்படுதலும் அவசியமாகிறது.
எம்மவரிடம் இருக்கும் திறமைகள் மழுங்கடிக்கப்படாமல் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட இவை நிச்சயம் தேவை. குறிப்பாக தலைநகரில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வெளித்தொடர்புகள் அதிகம் இருக்கும். ஆதலால் அப்பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் வெளியுலகை முகம் கொடுக்கும் விதம் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மாறுபட்டுக் காணப்படும்.
எம்மவர் தான் உலகெங்கும் வாழ்கிறார்களே! ஆதலால் எல்லோரையும் விட எமக்குத் தான் சர்வதேசத் தொடர்புகள் மிக அதிகம் இருக்கும். ஏனெனில் உலகின் பிரபல பல்கலைக்கழகங்களில் எல்லாம் இலங்கைத் தமிழர்கள் முக்கிய பதவிகளை வகிக்கிறார்கள். விரிவுரையாளர்களாகக் கடமையாற்றுகிறார்கள். பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். யாழ். பல்கலைக்கழகத்துடனான அறிவுப் பகிர்வை, அனுபவப் பகிர்வை மேற்கொள்ள அவர்கள் முன்வரவேண்டும். அதற்கு பல்கலைக்கழகமும் ஒத்துழைக்க வேண்டும். பல்கலைக்கழக சமூகம் முன்னிலையடைய அது நிச்சயம் வழி வகுக்கும்.
யாழ்ப்பாணத்திலே இருக்கும் பாரம்பரிய வீடுகள், சொத்துகள் பல புலம் பெயர் தமிழர்களுக்குச் சொந்தமானவை. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சி தொடர்பில் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற பல்கலைக்கழக குழுவினர் சில சிக்கல்களை எதிர்நோக்கினர். புலம் பெயர்ந்தவர்களுக்குச் சொந்தமானவற்றை பாதுகாவலர்கள் அவர்களிடம் வழங்க மறுத்து விட்டனர். ஆக புலம் பெயர் தமிழர்கள், தாம் அவற்றால் பயனடைய மாட்டோம் என நம்பும் பட்சத்தில் அவற்றைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையிடம் ஒப்படைக்க முடியும். எம்மவர் வாழ்வியலை ஆவணப்படுத்தும் முயற்சிகளுக்கு அது பேருதவியாக இருக்கும்.
சில குடும்பங்கள் தம்மிடம் இருக்கும் பழைமையான ஏடுகள், செப்பேடுகளை வழங்க மறுத்திருக்கின்றன. அசையாச் சொத்துகள் மீது தமக்கிருக்கும் உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட அவர்கள் அவ்வாறு நடக்கக் காரணமாகிறது என்கிறார் பேராசிரியர் புஷ்பரட்ணம்.
யுத்தம் என்ற அரக்கன் துரத்தத் துரத்த நாம் ஊர் ஊராய் ஓடியதால் எம்மை அறியாமலே இழந்து விட்டிருந்த தனித்துவத்தை இக்கண்காட்சி புடம் போட்டு காட்டியதுடன், நாம் மீள நினைத்துக் கூடப் பார்த்திராத நினைவுகளை எல்லாம் மீட்டு அந்த பசுமையான வாழ்விலே இன்னொரு முறை எம்மைச் சஞ்சரிக்க வைத்து கண்களைப் பனிக்கச் செய்தது எனலாம்.

Friday, December 2, 2011

கை வழி நயனம் செல்ல...

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு சனிக்கிழமை நூபுர நாதத்திலே கொழும்பு கதிரேசன் மண்டபம் லயித்துப் போயிருந்தது. கொஞ்சும் மழலையர் தொட்டு அழகு நங்கையர் வரை சகல வயதினரதும் நாட்டியத்தில் முழு அரங்கமுமே சொக்கிப் போயிருந்ததெனலாம். இலங்கையில் மட்டுமன்றி உலகிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்திருக்கும் நாட்டிய கலா மந்திரின் மாணவியர் தான் அதற்குக் காரணமானவர்கள் என்பதில் மிகையேதுமில்லை.
“கை வழி நயனம் செல்ல, கண் வழி மனமும் செல்ல, ஐய நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு”
என்ற கம்பராமாயண வரிகள் தான் நினைவுக்கு வந்தன. ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தனக்கே உரித்தான தனித்துவத்துடன் தலை நகரில் நிமிர்ந்து நிற்கும் கட்புல அரங்காற்றுகை மையம் தான் நாட்டிய கலா மந்திர். அதன் பின்னணியில் ஒரு பெரும் கலைப்பாரம்பரியம் மட்டும் காணப்படவில்லை. மூன்று சந்ததிகளின் உழைப்பு, ஆர்வம், ஊக்கம், ஒத்துழைப்பு, நம்பிக்கை என சகலதையும் இணைத்து கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் நாட்டிய கலாமந்திரை வழி நடத்துகிறார். அவரது நெறியாள்கையிலே மாணவிகள் வழங்கிய நடனப்பிரசாதம் தான் நூபுர நாதம்.
நூபுரம் என்றால் சிலம்பு சலங்கை என்று பொருள் படும். பெயருக்கேற்ப சலங்கைகளின் நாதம் காதில் ஒலித்த படியே தான் இருந்தது.
பல்வேறு படி நிலைகளில் நடனக்கலையைப் பயிலும் நாட்டிய கலாமந்திர் கனிஷ்ட, சிரேஷ்ட மாணவர்கள் இணைந்து தம் திறன்களை மிக அருகாமையாக வெளிப்படுத்தியிருந்தார். கண்ணைக்கவரும் வகையிலே வடிவமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான ஆடை ஆபரணங்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சியும் நாட்டிய கலா மந்திரின் தனித்துவத்தை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியிருந்தன எனலாம்.
சிவ கணேச வந்தனத்தில் ஆரம்பித்து ஐதீஸ்வரம் திருவாசகம் தொட்டு பாரதியார் பாடல், திருக்குறள் பரதம், வர்ணம், ஷக்தி கூத்து, எனக் கடந்து தில்லானா, தோல் என்ற பல்சுவை நடனத்துடன் நிறைவுற்ற நூபுர நாதம் இன்னும் எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நாட்டிய கலாமந்திரின் மூன்றரை தசாப்த கால கலைப் பாரம்பரியத்திலே இந்த நூபுர நாதம் ஒரு மைல் கல் ஆகும். கலைக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த பெற்றோரான சண்முகம் பிள்ளை - விஜயலக்ஷ்மி தம்பதியிடமிருந்து தான் பெற்ற இந்த அரிய கலைச் செல்வத்தை அடுத்த சந்ததிக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறார் வாசுகி. அவரது சிரேஷ்ட மாணவியருள் இருவரான மங்களா கெளதம், வைத்தியக் கலாநிதி அஞ்சனா பால ரட்ணராஜா இருவர் தமது கணவர்கள் சகிதம் கெளரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். நூபுர நாதத்தின் ஒரு அங்கமாக, தம் குரு வாசுகியுடனும், நாட்டிய கலா மந்திருடனுமான தமது அனுபவங்கைளப் பகிர்ந்தமை நிகழ்ச்சியின் சிறப்பம்சம் ஆகும்.
நாட்டிய கலாமந்திர் மாணவியராக இருந்த காலத்தில் தமக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பங்களான, சிதம்பரம் நாட்டியோற்சவம், பிரசாந்தி நிலையத்தில் சாயிபாபாவின் முன்னிலையில் அரங்கேற்றிய நாட்டியம். தஞ்சை பெருங்கோவிலின் ஆயிரமானவது ஆண் விழாவில் ஆடிய ஆயிரம் கலைஞர்களுடன் இணைந்து பங்கேற்ற நடனம் போன்ற சந்தர்ப்பங்களில் தமக்குக் கிடைத்த அனுபங்கள், தம் மன உணர்வுகள், பரதம் கொண்டிருந்த தெய்வீகம் எனப் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களது அனுபவங்கள் அரங்கத்தை மெய் சிலிர்க்க வைத்தது. பரதக் கலையின் உன்னதத்தை உணர வைத்தது. அத்துடன் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. பரதம் கற்பதாயின் பணச் செலவு மிக அதிகம் என்பது ஒரு சாராரின் கருத்து. அதில் உண்மை இல்லாமல இல்லை. ஆனால் பணத்துக்கு அப்பால் பரதக்கலையின் பின்னணியில் பல விடங்கள் இருக்கின்றன. மனிதப் பிறப்பின் உன்னத குறிக்கோளான தெய்வீகத்தை அடைய இக்கலை வழி வகுக்கும் என மங்களா கெளதம் அழகாக கூறியிருந்தார். பரதம் என்பது கலை மட்டுமல்ல. அதுவே கணிதம், அதுவே விஞ்ஞானமும் கூட என்று கலாக்ஷேத்ரா நாட்டியப் பள்ளியின் நிறுவுநர் தனஞ்சயன் ஐயா ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். அது லயம், தாளம் பிறழாமல், ஆழ்ந்த அவதானிப்புடன் ஆடவேண்டிய கலையாகும். அங்கு நுண்கணித அறிவு வளர்கிறது. எதை அபி நயிக்கவேண்டுமாயினும், முதலில் அதன் பின்னணியிலிருக்கும் விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. என்று தனஞ்சயன் ஐயா அழகாக விளக்கியிருந்தார். அவரது கூற்றிலே எத்துனை பெரிய உண்மை இருக்கிறது என்பதை நூபுர நாதம் உணர்த்தியது.
அவை மட்டுமன்றி இந்த அரங்காற்றுகைகள் மாணவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படும் மேடைக்கூச்சம், மனப்பயம் போன்றவற்றை தூர விலக்கி விடும் வல்லமை வாய்ந்தவை. அதேவேளை, அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கை வேரூன்றவும் வழி வகுக்கின்றன. வாழ்க்கையில் தன்னம்பிக்கையின்றி எதையுமே சாதிக்க முடியாதென்பது கண்கூடு. எந்த வித பயமுமின்றி, பிழை விட்ட போது கூட நயமாகத் திருத்தி ஆடிய பிஞ்சுப் பாதங்கள் அந்த உண்மையை அழகாக உணர்த்தின. கண்டிப்பான ஆசிரியை எனப் பெயர் பெற்ற போதும் தன் மாணவச் செல்வங்களின் நூபுர நாதத்தை அரங்கிலிருந்து பார்த்த குரு வாசுகியின் முகம் கொண்டிருந்த பெருமிதமும் அரங்கத்தை நிறைத்திருந்த மக்கள் கூட்டமும் வெற்றிச் சங்கை முழங்காமல் முழங்கின எனலாம்.
அவசர உலகில், மனதுக்கு இனிமை தர இப்படியான நூபுர நாதங்கள் நிச்சயம் தேவை தான்!

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-08

வேலிப் பொட்டு

சொல்லும் கதைகள்


அன்றாடப் பாவனையிலிருந்த பித்தளை, செம்பு, பல்வேறு தரப்பட்ட உலோகப் பொருட்கள் அடுத்த அரங்கிலே ஏராளமாக வைக்கப்பட்டிருந்தன. தென்னகத்தைப் பொறுத்தவரையிலே அரிய, விலைமதிப்பற்ற கலைப் பொருட்களாகப் பார்க்கப்படும் இப் பொருட்கள் எல்லாம் எம்மவர் வாழ்வியலில் சாதாரண பயன்பாட்டில் இருந்தவை என எண்ணும் போது உள்ளம் பெருமிதம் கொண்டது. ஆனால் இன்று அவையெல்லாம் தொலைந்து போய்விட்டன என்று எண்ணிய போது மனம் வருத்தமும் கண்டது.

அந்த அரங்கை விட்டு வெளியே வந்தால், திறந்த அரங்கிலே வெவ்வேறு வகை வேலிகள் அடைக்கப்பட்டிருந்தமையைக் காண முடிந்தது. யாழ்ப்பாண வாழ்வியலில் வேலிக்கு எத்துணை பெரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது என்பதை அந்த வேலிகள் பறை சாற்றின எனலாம்.
யாழ்ப்பாண இராச்சியத்தில் நெடுங்காலமாக நிலவி வந்த வழமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது தேச வழமையாகும். அது சட்ட ரீதியாக இன்றும் நடை முறையில் உள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட நீதி மன்றங்கள் தேச வழமை அடிப்படையிலே வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்கின. இந்த வழமையானது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அதாவது 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் சட்டமாகத் தொகுக்கப்பட்டது. இத்தேச வழமையானது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான சட்ட நெறியாக இன்றும் நடைமுறையில் இருக்கிறது. அதனையே பேராசிரியர் பத்மநாதனும் குறிப்பிடுகிறார்.

அடிப்படையில், யாழ்ப்பாணச் சமூகம் விவசாயத்தை ஒட்டியதாக இருந்தது எனலாம். ஆதலால் இச் சமூகத்தில் நிலவி வந்த வழமைகளும், நிலம், அதன் உரிமை, பாதுகாப்பு என இயற்கைவளங்களை ஒட்டியதாகவே அமைந்திருந்தன. அதனால்தால் தான் இங்கு வேலிகளுக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கப்படுகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. காணிகளின் எல்லைகளை நிர்ணயிப்பதில் இந்த வேலிகளுக்குப் பெரும் பங்குண்டு. வளவுகளைச் சுற்றி வேலி அடைப்பது யாழ்ப்பாணத்தின் அத்தியாவசிய தேவையாகவும் கருதப்பட்டது.

அந்த வேலிகள் பலவகைப் பட்டவையாகக் காணப்பட்டன. காய்ந்த இலை குழைகள், பனையோலை, தென்னோலை கிடுகு, காய்ந்த குச்சிகள், ஒருவகை முருகைக் கற்கள், வாழைச்சங்குகள், உயிர் மரங்கள் என பலவகைப் பட்டவற்றைக் கொண்டு வேலிகள் அடைக்கப்பட்டன.

வேலி அடைக்கப்பயன்படும் பொருட்களும், முறைகளும் பிரதேசத்துக்குப் பிரதேசம் மாறுபட்டன எனலாம். அதாவது அந்தந்தப் பிரதேசங்களில் தாராளமாகக் கிடைக்கக் கூடியவற்றை வைத்து வேலிகள் அடைக்கப்பட்டன. அதைவிட தனிப்பட்ட தேவைகள், வசதி வாய்ப்புகளும் கூட வேலிகள் அடைப்பதில் செல்வாக்குச் செலுத்தின.

வேலிகள் கொண்டு நிலத்தை அடைப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. வெளி ஊடுருவல்களிலிருந்து பாதுகாப்புக் கொடுத்தல் என்பது வேலிக்கான முக்கியமான தேவையாகும். வேலியே பயிரை மேய்வது போல என்ற பழமொழி பயிர்ச் செய்கை நிலங்களில் வேலியின் செயற்பாட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

குடியிருப்புப் பகுதிகளில் காணப்படுகின்ற வேலிகள் ஆடு, மாடு மற்றும் அந்நிய மனிதர்களின் உடல் ரீதியான ஊடுருவல்களைத் தடுப்பதுடன், பல சமயங்களில் வெளியிலிருந்து உள்ளே பார்ப்பதைத் தடுக்கும் மறைப்புகளாகவும் செயற்படுகின்றன.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மின்னுற்பத்தி நிலையங்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள், பாதுகாப்புப் படை முகாம்கள் போன்ற இடங்களில் இன்றும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன. இவை பொதுவாக மனிதர் ஏறி உள்ளே புகமுடியாதபடி உயரமானவையாக அமைவதுடன், இவ்வாறு செய்வதற்குச் சிரமமான முள்ளுக் கம்பிகள் போன்ற பொருட்களையும் பயன்படுத்துவார்கள்.
காட்டுப் பகுதிகளில் யானைகள் போன்ற பெரிய விலங்குகளிடமிருந்து பாதுகாப்புத் தேவைப்படும் இடங்களில் அழுத்தம் குறைந்த மின்சாரம் பாய்ச்சப்படும் மின்சார வேலிகளையும் அமைப்பதுண்டு.

சில ஊர்களின் பெயரில் கூட வேலி என்ற சொல் காணப்படுகிறது.
நீர்வேலி, அச்சுவேலி, கட்டைவேலி, விளைவேலி, சங்குவேலி, திருநெல்வேலிபோன்ற ஊர்களின் பெயரை உதாரணமாகக் கூறலாம். நீர்வேலியிலே ஊரின் கிழக்கு எல்லையில் நீர்நிலை காணப்பட்டமைதான் அப்பெயர் வரக் காரணம் என்பர்.

வேலி என்பது தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தை அளக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு அளவையாகும். தஞ்சை மாவட்டத்திலே இக்காலத்திலும் ‘வேலி’ என்ற அளவையால் நிலத்தை குறிப்பிடுகின்றனர். ஒரு வேலி என்பது 6.17 ஏக்கர் பரப்பளவுக்குச் சமமானதாக இருக்கிறது.
இக்கட்டுரையில் நாம் குறிப்பிடும் வேலி எல்லையை நிர்ணயிக்கப் பயன்படுவதாகும். எல்லை வேலி நிலத்துக்குப் பாதுகாப்புத் தருகிறது எனக் கொண்டால், எல்லை வேலிக்கு சட்டம் பாதுகாப்பைத் தருகிறது. தேச வழமையிலும் எல்லை வேலிகளுடன் தொடர்புடைய பல விடயங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் காணிகளின் எல்லை வேலிகள் சரிந்து விழவிடாமல் பேணிப் பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் இருப்பதாக வழக்கறிஞர் பொன். பூலோகசிங்கம் கட்டுரையொன்றிலே குறிப்பிட்டிருந்தார்.
கடந்த யுத்த காலங்களில் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிரதான பாதையால் செல்லப் பயந்து வேலி வெட்டி இடம்பெயர்ந்த நினைவுகளும் இல்லாமல் இல்லை. முன்னர் ஊர்களிலே அயலவர்கள் எல்லாம் உறவுக்காரராக இருப்பார்கள். அடுத்த பகுதிக்குச் செல்வதற்காக ஒவ்வொரு காணி, வீட்டின் வேலியிலும் சிறு புகு வழி விடப்பட்டிருக்கும். அதை வேலிப்பொட்டு என்று குறிப்பிடுவர். அதேபோல வேலிகளில் விடப்பட்டிருக்கும் சிறு இடைவெளிகளையும் கூட வேலிப்பொட்டு என்றே கூறுவர்.

வேலிப் பொட்டுகளுக்குள்ளால் கதை பேசும், புதினம் பார்க்கும் எம்மவர் பற்றி எத்தனையோ கதைகள், நினைவுகள் இருக்கின்றன. வேலிப் பொட்டுகளால் வளர்ந்த காதல்கள் சொல்லும் கதைகளும் ஏராளம். எம் கலாசாரத்தில் வேலிப்பொட்டை உறவுகளின் நெருக்கத்தையும் இணைப்பையும் காட்டும் அடையாளமாக கலாநிதி குணராசா பார்க்கிறார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை எம் மூத்தோர் மீட்கும் நினைவுகள் எடுத்தியம்பும்.
வேலியைத் தள்ளிப் போட்டு அயலவர் காணிகளை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கும் விபரீத குணங்களும் எம்மவருக்கு இல்லாமல் இல்லை. அதனால் எழும் வேலிச் சண்டைகள் குடும்பப் பிரச்சினைகளாக மாறிப் பின் பொதுப் பிரச்சினையாகிய நினைவுகளும் பலருக்கு இருக்கும்

வேலி அடைத்தல் கூட ஒரு கலை எனலாம். ஒரு தசாப்தத்துக்கு முன்னைய காலம் வரை சில குறிப்பிட்ட இடங்களை அங்கு நேர்த்தியாக அடைக்கப்பட்டிருக்கும் பனையோலை வேலிகளை வைத்தே அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. உயிர் வேலி மழைக்காலங்களில் போடப்படும். அதற்காக பூவரசு, கிளுவை, முட் கிழுவை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மாரி காலத்தில் அம் மரங்களின் குழைகளை வெட்டி தோட்டங்களில் பசளையாக நிலத்துள் புதைப்பர். அதே நேரம் கதிகால்களைக் கொண்டு வேலிகளின் இடைவெளிகளை அடைப்பர். கிலுவை மரத்தில் நைதரசன் அதிகளவில் காணப்படுகிறது. இதனைத் தோட்டத்தில் புதைத்தலானது நைதரசன் பசளை போடுவதற்குச் சமமானது என நவீன விவசாய வனவியல் தத்துவங்கள் கூறுகின்றன. ஆனால், அது அன்றே எம்மவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
பனையோலை, பனை மட்டை, தென்னோலை, கிடுகு, காய்ந்த குச்சிகள் போன்றவற்றைக் கொண்டு அடைக்கும் வேலிகள் கரையானால் அரிக்கப்பட்டு அல்லது இயற்கைக் காரணிகளால் உக்கிய பின்னர் மீண்டும் புதிதாக அடைக்கப்படும். உயிர் வேலிகளை விட, இவை நெருக்கமானவை. குறிப்பாக நெடுந்தீவு போன்ற தீவுப்பகுதிகளில் ஒருவகை முருகைக் கல் வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதானது தனிச்சிறப்பாகும். இவை மிக நீண்ட காலத்துக்கு நிலைத்திருக்கக் கூடியவை.

காலப்போக்கிலே, இந்த வேலிக்கதிகால்களை சீமெந்துக்கட்டைகளும் இடைக் கயிறுகளை முட்கம்பிகளும் பிரதியீடு செய்யத் தொடங்கி, இன்று சீமெந்து மதில்கள் ஆக்கிரமித்துவிட்டன! உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகியது. பல்வேறு தேவைகளுக்காக வேலிகள் வெட்டப்பட்டன. எல்லைகளும் மெள்ள மெள்ள இடம் மாறின. எம்மவர் மனப்பாங்கும் மாறியது. சூழலுக்கு பங்கம் விளைவிக்காத இயற்கை வேலிகள் பயனற்றவையாயத் தெரிந்தன போலும். அத்துடன் பணமும் தாராளமாகப்புழங்கத் தொடங்கியது. பல இயற்கை வேலிகள் தகர வேலிகளாகி இன்று கொங்கிறீட் மதில்களாகிவிட்டன என்பதுதான் வருத்தத்துக்குரிய விடயம் ஆகும்.

கொங்கிறீட் சுற்று மதில்கள் உயர் அந்தஸ்தின் சின்னம் என்ற பரவலான நிலைமை யாழ்ப்பாணத்தில் உருவாகிவிட்டது. பசுமை வாழ்வியலின் மதிப்பு எம்மவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.
 
இனி வரும் காலங்களில் இந்த வேலிகளை எல்லாம் பார்க்க முடியுமா என்பது சந்தேகமாகத் தான் இருக்கிறது. கண்காட்சி வளாகத்தினுள் அடைத்துக்காட்டப்பட்டிருந்த வேலி மாதிரிகள், இனி எம்மை எங்கு காண்பீர்? என்று பார்வையாளர்களைப் பார்த்துக் கேட்பது போல் இருந்தது.

கண்ணைக் குளமாக்கிய மண்ணின் வாழ்வியல்-07

ஆரோக்கிய வாழ்வியலை
அவசர யுகம் முடக்கிவிட்டதா?
 

அடுத்த அரங்கமானது சித்த மருத்துவத்துறைக்குரியது. தமிழர்களுக்காக தமிழர்களால் உருவாக்கப்பட்ட மருத்துவம் என சித்த மருத்துவத்தை விபரிப்பர். மருத்துவம் என்ற எல்லைக்கும் அப்பால் இதை ஒரு உன்னத வாழ்வியல் எனலாம். அத்தகைய உன்னத வாழ்வியலை சித்தர்கள் எமக்கு வழங்கியிருக்கிறார்கள். வாதம், வைத்தியம், ஞானம், யோகம் என்ற உன்னத படி நிலைகளை உள்ளடக்கிய சித்த மருத்துவம்.
எம்மவருக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எதுவாயினும் உடனடி நிவாரணி தேவை. அவசர யுகத்திலே அல்லாடும் நாம், அதை எதிர்பார்ப்பதில் தவறில்லையோ என்றும் தான் எண்ணத்தோன்றுகிறது. அதனால் தான் ஆங்கில மருத்துவம் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. அது சித்த மருத்துவம் மீதான நாட்டத்தைக் குறைத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
இந்த அல்லாடல்கள், அந்தரிப்புகள் எல்லாம் எதற்காக? சுகமாக வாழத்தானே? அந்த உன்னதமான வாழ்வு மட்டும் இன்று தொலைந்து போய்விட்டது. அப்படி அவசர உலகில் நாம் தொலைத்து விட்ட வாழ்வைத் தான் சித்த மருத்துவம் வலியுறுத்தி நிற்கிறது. அன்றைய குமரிக்கண்டத்தில் தென்பகுதிகளான தமிழ் நாடு, கேரளம், இலங்கை ஆகிய பகுதிகளில் சித்தமருத்துவம் பயன்பாட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் இருக்கிறது.
வரலாறும் அதைத்தான் கூறுகிறது. இலங்கையை ஆண்ட இராவணன் சிறந்த சிவபக்தனாக மட்டுமன்றி சிறந்த வைத்தியனாகவும் இருந்துள்ளான். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பெற்று சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் சித்தர் மருத்துவம் எனவும், தமிழ்க் கடவுளாகிய முருகனால் அகத்தியர், திருமூலர் போன்றவர்க்குச் சொல்லப்பட்டு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் தமிழ் மருத்துவம் எனவும் கூட அழைக்கப்படுகிறது.

ஆதிகாலத்தில் சித்தமருத்துவம் இலங்கை முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. பொலன்னறுவையில் அமைந்துள்ள பொற்கல் விகாரையிலே சித்த மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் அகத்திய முனிவரின் சிலை காணப்படுவதாகக் கூறுகின்றனர். புத்த தாச மன்னன் சிறந்த மருத்துவன் என்று வரலாறு கூறுகிறது. புராதன இராசதானிகள் பரந்திருந்த பகுதிகளில் மருத்துவத் தொட்டிகளும் குடுவைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
15 ஆம் நூற்றாண்டில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட ‘வைத்திய சிந்தாமணி பைசாஜ் சங்கிரகம்’ என்னும் நூல் ‘வைத்திய சிந்தாமணி’ எனும் தமிழ் மருத்துவ நூலை தழுவி எழுதப்பட்ட நூல் என்ற கருத்தும் உள்ளது.

சித்த மருத்துவம் கூறும் நவநாத சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் திருகோணமலையில் சித்தியடைந்தார் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது.

அதேபோல போகர் கதிர்காமத்தில் சித்தியடைந்தார் என்றும் கூட கூறப்படுகிறது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான புலத்தியர் சிங்கள நாட்டை சேர்ந்தவரென குறிப்பிடப்படுகின்றது. இங்கு சிங்கள நாடு என்பது இலங்கை என்பர்.
பண்டைத் தமிழ் மன்னர்கள் தங்கள் குடிமக்களின் பிணிகளை நீக்குவதையும் பெரும் பணியாகக் கொண்டிருந்தனர். இதற்கு அவர்கள் சித்தமருத்துவத்தையே நம்பியிருந்தார்கள். யாழ்ப்பாண மன்னன் பரராஜஜேகரனின் சகோதரன் பரநிருபசிங்கன் சிறந்த மருத்துவனாக திகழ்ந்துள்ளான். அவன் இலங்கை தமிழர்களுக்கு உரித்தான செகராஜசேகரம், பரராஜசேகரம் என்னும் சுதேச மருத்துவ நூல்களை வெளியிட்டார்.
பிற்பட்ட காலத்தில் சித்தமருத்துவமானது இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளிலேயே பெருமளவு கையாளப்பட்டு வருகிறது. அதிலும் இலங்கையில் சித்தமருத்துவத்தின் தாயகமாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது என்று கவிப்புயல் நவரத்தினமும் சித்த மருத்துவமானது அதன் தூய்மையுடனும் தனித்துவத்துடனும் இன்றுவரை (யாழ்ப்பாணத்தில்) கையாளப்பட்டு வரப்படுகின்றது என்று பேராசிரியர் உரகோடவும் எடுத்து கூறியுள்ளமை பற்றி இணையம் வாயிலாக அறிய முடிந்தது.
கதிர்காம யாத்திரையை முருகன் அருளால் தொடங்கி கதிர்காம இயந்திரத்தை ஸ்தாபித்தவர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அங்கு இன்றும் மூலிகைச் சந்தை காணப்படுகின்றது.

முக்கியமாக கடலிராஞ்சிப்பட்டை, மரமஞ்சள், புலிநகம், சீந்தில், செஞ்சந்தனம், உருத்திராட்சை என்பன பெருமளவில் காணப்படுகின்றன என்றெல்லாம் கூறப்படுகிறது. அத்துடன் சித்தமருத்துவ யாழ்ப்பாண நூலான பரராஜசேகரத்தில் “மருந்து மாத்திரைகள் பிழைத்தால் கதிரைமலை மேவு முருகனை வணங்கிட அந்நோய்கள் மாறிவிடும்” என்று நூலின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பல வழிகளிலும் இலங்கையில் காணப்பட்ட சித்தமருத்துவம் காலப்போக்கில் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டு இங்கு வாழ்ந்த மன்னர்களாலும், மக்களாலும், சித்தமருத்தவர்களாலும் பேணி வளர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வலுவான சித்தமருத்துவ பாரம்பரியம் உருவாக்கப்பட்டிருந்தது. அத்தகைய பாரம்பரியம் இன்றைய இளஞ்சந்ததியை விட்டுத் தூரச் சென்று கொண்டிருக்கிறது. யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியிலே, சித்த மருத்துவத்திற்கென அமைக்கப்பட்ட கூடம் இளைஞர்கள் மத்தியில் அந்த அரிய பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கக்கூடிய வகையிலே அமைக்கப்பட்டிருந்தது.

பாரம்பரிய வைத்திய முறைமைகளுடன் தொடர்பு பட்ட உபகரணங்கள், ஓலைச் சுவடிகள், மருந்து வைக்கும் பெட்டிகள், குடுவைகள் என அந்த இயற்கைப் பொருட்களைப் பார்த்த போது எம் முன்னவரின் கை நுட்பங்களும் தூர நோக்கான கொள்கைகளும் எம்மைப் பெருமிதங்கொள்ளச் செய்தன. அவை தவிர, சித்த மருத்துவப் பயன்பாட்டில் இருக்கும், தாவரங்கள், பூக்களின் மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தன. எமது அன்றாட உணவுப் பழக்கத்துடன் சித்த மருத்துவம் எவ்வாறு இயைந்திருந்தது என்பதையும் மாணவர்கள் மிக அழகாக விளக்கினர். காட்சிக் கூடத்தை யாழ். பல்கலைக் கழகத்தின் சித்த மருத்துவத்துறையினர் ஒழுங்குபடுத்தியிருந்தனர்.
இன்று காண்பதற்கே அரிதாகி விட்ட கண்டறிந்திராத விடயங்கள் பல அந்த கூடத்தில் வைக்கப்பட்டு போதியளவு விளக்கங்கள் வழங்கப்பட்டன. தொடக்கத்திலே ஒரு மாதிரி சமையலறையும் அன்றாடம் எமது சமையல்களில் பாவிக்கப்படும் வாசனை திரவியங்கள் உட்பட்ட பல திரவியங்கள் மண் குடுவை தட்டுகளில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் யாவுமே இயற்கையுடன் ஒன்றிணைந்ததாகக் காணப்பட்டன.

பனை மட்டைகள், ஓலைகள், மட்பாண்டங்கள் என அங்கு வைக்கப்பட்டிருந்த அடிப்படைப் பொருட்கள் ஒரு பசுமைக் காட்சிக் கூடத்தையே உருவாக்கி விட்டிருந்தன எனலாம். இன்றைய சந்ததியைப் பொறுத்தவரையிலே பல விடயங்கள் அதிசயமாய்த் தெரிந்தன. முன்னைய காலங்களில் பாவனையில் இருந்த சமையலறை பண்டங்கள் காட்சிப்படுத்தியிருந்தன. அக்கலங்கள் யாவுமே மட்பாண்டங்களாகவே இருந்தன. மட்பாண்டங்கள் சூழலுக்குத் தீங்கில்லாதாவை.

அத்துடனும் அவற்றுள் வைக்கப்படும் பதார்த்தங்கள் பாண்டத்துடன் இரசாயனத் தாக்கத்தில் ஈடுபடும் வாய்ப்பும் இல்லை. அத்துடன் மட்பாண்டங்களிலிருக்கும் நுண் துளைகள் காரணமாக அவற்றுள் இருக்கும் பதார்த்தங்கள் குளிர்மையான சூழலில் பேணப்படுகின்றன. மிளகு, கடுகு போன்ற வாசனை திரவியங்கள் கூட மட்பாண்டங்களில் வைத்தே பேணப்பட்டன. அப்படிப் பேணும் போது அவை பழுதடைவதும் இல்லை. அவற்றின் வாசனையும் கெடுவதில்லை. எம்மவரைப் பொறுத்தவரையிலே இந்த வாசனை திரவியங்கள் மருத்துவப் பொருட்களாகவும் பயன்படுகின்றன. ஒவ்வொரு பதார்த்தத்துக்கும் சிறப்பான செயற்பாடு இருக்கும்.

கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிளகு தண்ணீர் குடிப்பது எதனால் என்று இப்போது விளங்குகிறதா? உணவிலே வெங்காயம் சேர்ப்பது எதனால் தெரியுமா? வெங்காயம் இரத்தத்தைச் சுத்திரகரிப்பதில் சிறந்த பங்கு வகிக்கிறது. அதைவிட அதற்கென வேறு பல மருத்துவ குணங்களும் கூட இருக்கின்றன. இரத்தம் முறையாக சுத்திகரிக்கப்பட்டால் எம்மை எந்தவித நோய்களும் அண்டாது. வெந்தயம் உடலுக்கு குளிர்மையைத் தரும். கொத்தமல்லியை பனங்கட்டியுடன் அவித்துக் குடித்தால் காய்ச்சல் பறந்துவிடும். இப்படி சின்னச் சின்ன விடயங்கள் பலவற்றை சித்த மருத்துவ மாணவர்கள் எடுத்தக் கூறினர்.

முன்னைய காலங்களில் ஒரு சிறிய நோய் நொடி ஏற்பட்டால் வீட்டிலே பரிகரிக்கக் கூடியவாறான நிலைமை காணப்பட்டது. வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கு நோய்க்கான நிவாரணி தெரிந்திருந்தது. வீட்டுச் சூழலிலேயே பிரதானமான மூலிகைகளைப் பெறக்கூடியதாக இருந்தது. முக்கிய பதார்த்தங்கள் வீடுகளில் காணப்பட்டன. இன்றும் இவை எதுவுமே இல்லாத நிலைதான் காணப்படுகிறது.

அவசர யுகமும் ஆங்கில மருத்துவமும் எம்மவர் வாழ்வியலில் உட்புகுந்து வேரூன்றத் தொடங்கிவிட்டன. சிறிய தலைவலியாயினும் மருந்து வில்லைகளை உண்டாவது உடனடியாகப் போக்க வேண்டும் என்ற எண்ணப்பாடு தான் எம்மவரிடத்தே அதிகளவில் காணப்படுகிறது. அந்த மனப்பாங்கு வீட்டு வைத்திய முறைமைகளை முட்டாள் தனமானவை என மூலையில் முடக்கி விட்டன. ஆங்கில மருத்துவம் உடனடி நிவாரணியாக அமைந்தாலும், பக்கவிளைவுகளை ஏற்படுத்த வல்லது.

உண்மையிலேயே அவர்களது உடலை ஒரு பாரதூரமான நோய் தாக்கும் போது ஆங்கில மருத்துவத்தை நாடிச் செல்கையில் அவர்கள் உயர் செறிவுடைய மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது அதிகமான பக்க விளைவுகளைத் தோற்றுவிக்கும். இது எதனால் தெரியுமா? பாரதூரமற்ற வியாதிகளுக்கெல்லாம் பெரியளவிலே ஆங்கில மருந்துகளை உட்கொண்டமையாலேயேயாகும்.

அறிந்தோ அறியாமலோ இந்த வாசனை திரவியங்கள் எம்மவர் வாழ்வியலில் பிணைந்து விட்டன. அங்கு வைக்கப்பட்டிருந்த வில்வம் குடுவையும் மருந்து வில்லைகளைப் பாதுகாப்பாக வைக்கும் பெட்டியும் இன்னும் சிதையாமல் இருக்கும் நூற்றாண்டுகள் பழைமையான ஏடுகளும் வியக்க வைத்தன.

யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களிலே சித்த மருத்துவத்துறைக்குரிய அரங்கத்தில் தான் சலிப்பேதுமின்றி போதியளவு விளக்கங்கள் வழங்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.