Friday, September 3, 2010

மனக்கண் முன்னே விரிகிறது மலரப் போகும் புதிய கிளிநொச்சி




உலகளாவிய ரீதியிலே பல நாடுகளின் அபிவிருத்தித் திட்டங்கள் எம்மை வியக்க வைக்கின்றன.

மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்த வரையிலே, நிலை யான அபிவிருத்தியை நோக்கிய திட்டங்களும் நகர, பிரதேசத் திட்டமிடல் நடவடிக்கைகளும் மிகவும் குறைந்தளவிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அதற்கு அந்நாடுகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட அடிப்படைப் பிரச்சினைகளும் காரணமாய் அமைந்து விடுகின்றன.

மாறாக அபிவிருத்தியடைந்த நாடுகளோ, தேசிய பெளதிகத் திட்டமிடல் கொள்கை மற்றும் வரைவின் வழிகாட்டல்களுக்கு ஏற்பவே தமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதனால் தான் நீண்டகால அடிப்படையிலே பல்வேறுபட்ட மாற்றங்களுக்கு முகம் கொடுத்தும் அவற்றால் நிலைத்து நிற்க முடிகிறது.

அத்தகையதோர் அடிப்படையிலே, அபிவிருத்தியடைந்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு இலங்கையில் தேசிய பெளதிகத் திட்டமிடல் திணைக்களம், 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அத்திணைக்களத்தின் கீழ் திட்டவரைவுகள் தயாரிக்கப்பட்டு இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அவ்வரைவுகளின் அடிப்படையிலே திட்டமிடப்பட்ட நகர்ப்புற பிரதேச வலையமைப்பு, நகர மற்றும் கிராமிய வலையமைப்பு உட்பட இன்னும் பல செயற்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. நகரத் திட்டமிடலைப் பொறுத்த வரையிலே போக்குவரத்து வசதிகள் அபிவிருத்தியடையாத பிரதேசங்களில் பல ஆரம்ப காலகட்டப் பிரச்சினைகள் தவிர்க்கப்பட முடியாதனவாகிவிட்டன.

அத்தகையதோர் பிரச்சினையையே கிளிநொச்சி வாழ் மக்கள் தற்போது எதிர்நோக்குகின்றனர். அதுதான் சந்தைப் பிரச்சினையாகும். கிளிநொச்சிப் பிரதேசத்தின் பொதுச் சந்தை தற்போது அம்பாள் குளத்திலே அமைக்கப்பட்டிருக்கிறது.

திருவையாறிலோ இல்லை பரந்தனிலோ இருப்பவர் 1/2 கிலோ மீனையும் இரண்டு மரக்கறிகளையும் வாங்குவதற்காக அம்பாள் குளம் வரை செல்வதென்பது அடிப்படையில் நடைமுறைக்குச் சாத்தியமற்றது தான். ஆயினும் சலிப்புடன் சந்தைக்குச் சென்றுவரும் பொதுமக்களையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

இத்தகையதோர் நிலையில், கிளிநொச்சி வாழ் மக்கள் யாவர் மனதிலும் ‘ஏன் எமது பொதுச் சந்தை தொலைவிலுள்ள அம்பாள் குளத்திலே அமைக்கப்பட்டு வருகிறது?’ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதே ஆதங்கம் எமக்குள்ளும் எழுந்தமையால் கிளிநொச்சியின் திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவனிடம் இவ்விடயம் குறித்து கருத்துக் கேட்டோம். அவர் தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் மிகவும் தெளிவாக கிளிநொச்சியின் பொதுச் சந்தை தொடர்பான எமது ஆதங்கங்களைத் தெளிவுபடுத்தினார்.

1996 களுக்கு முற்பட்ட காலங்களிலே கிளிநொச்சி நகரின் மத்தியிலே, புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இருந்த மரக்காலை வளவினுள் பொதுச் சந்தை அமைந்திருந்தது. பின்னர் காலத்துடன் பொதுச் சந்தையும் இடம்பெயர்ந்தது. 1996 களின் பின்னரான காலப் பகுதியிலே, டிப்போச் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு நன்றாகவே இயங்கி வந்தது.

தற்போது, டிப்போச் சந்தியை அண்மித்த பகுதி புனித பிரதேசமாக்கப்பட்டுள்ளது. சந்தை எனப்படுவது மிகவும் ஆரவாரமான பகுதியாகும். அதனால், டிப்போ சந்திக்கருகாமையில் சந்தையை அமைத்தலானது புனிதப் பிரதேசத்தின் அமைதியைக் குலைத்துவிடுமென்பதாலும் அபிவிருத்தி ரீதியான வேறு பல காரணங்களாலும் பொதுச் சந்தை அம்பாள் குளத்துக்கு நகர்த்தப்பட்டது.

கொடூர யுத்தமொன்று முடிவுக்கு வந்து, பின் கிளிநொச்சியில் மீள்குடியேற்றமும் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலகட்டத்தில், கிளிநொச்சி நகரின் மையப் பகுதியாகிய தற்போது தகர்ந்து காணப்படும் பொதுத் தண்ணீர்தாங்கியை அண்டிய பகுதியிலே தற்காலிகமாக சந்தை இயங்கி வந்தது.

அப்பகுதியில் போதிய இடவசதி இல்லாமல் இருந்தது. அத்துடன் அது சந்தை அமைக்கப்பட உகந்த பிரதேசம் அல்ல எனவும் உணரப்பட்டது. ஆகவே அச்சந்தையை இன்னொரு அமைவிடத்துக்கு மாற்ற வேண்டிய தேவையும் உணரப்பட்டது. கிளிநொச்சியின் நிலையான அபிவிருத்தியைக் கருத்தில்கொண்டு பொதுச் சந்தை, அம்பாள் குளத்துக்கு மாற்றப்பட்டது.


அவ்வாறு மாற்றப்பட முதல் எங்கு மாற்றலாம் என்பது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடனான கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது. அக்கலந்துரையாடலிலே கிளிநொச்சிக்குளத்திற்கு அருகாமையில் உள்ள பகுதியில் சந்தையை அமைக்கலாம் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறு சந்தையை அமைத்தால், சந்தைக் கழிவுகள் கிளிநொச்சிக்குளத்திலே கலக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் குளத்தின் சுற்றுச் சூழல் பாதிப்படையும் எனவும் கருத்தப்பட்டதால் சுற்றுச் சூழலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதையடுத்து ‘1996 களின் முன்னர் இருந்த மரக்காலை வளவிலே சந்தையை மீள அமைக்கலாம் என்று கருத்துக் கூறப்பட்டது. ஆனால் ஏறத்தாழ 16 ஏக்கர் பரப்பளவுள்ள அக்காணியினுள் நிர்வாகக் கட்டடத் தொகுதியொன்றை அமைக்கும் திட்டம் இருக்கிறது.

அத்துடன் அக்காணி, கிளிநொச்சி நகரின் மத்தியில் இருப்பதாலும் அக்காணியைச் சூழ மக்கள் குடியிருப்புகள் இருப்பதாலும் அவ்விடத்தில் சந்தையை அமைப்பது நகரின் அழக்குக்கும் சுற்றுச் சூழலுக்கும் உகந்ததல்ல என உணரப்பட்டது.

விளைவாக, சந்தை அமைக்கப்படுவதற்கு ஏற்ற பிரதேசமாக அம்பாள் குளம் தெரிவு செய்யப்பட்டது.

தம்புள்ளவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் போன்றதான மத்திய நிலையமாக எதிர்காலத்தில் அம்பாள் குளம் சந்தையையும் மாற்றுவதற்குத் திட்டங்கள் உள்ளனவெனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் உதவி வழங்க இருக்கிறது.

எதிர்காலத்தைக் கருத்தில்கொள்கையில் பெரியளவிலான கொள்வனவுத் தேவைகள் உருவாகும்போது அம்பாள் குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டால் யாவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பது கண்கூடு.

எதிர்காலத்தில் உருவாகலாம் எனக் கருதப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு அம்பாள் குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைதல் தீர்வாக அமையும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஏனெனில் முறிகண்டியிலிருந்து அம்பாள் குளம் வரை ஏ9 வீதிக்குச் சமாந்தரமாக அக்கராயன் வீதி செல்கிறது. எதிர்காலத்திலே அவ்வீதியை பரந்தன் வரை விஸ்தரிக்கும் திட்டங்களும் காணப்படுகின்றன.

அம்பாள் குளத்தில் அமைக்கப்படவிருக்கும் பொருளாதார மத்திய நிலையத்துக்காக வரும் வாகனங்கள், முறிகண்டியிலிருந்து அக்கராயன் வீதியினூடாக அம்பாள் குளத்துக்கு வரமுடியும். இதனால் குறிப்பாக, பார ஊர்திகளின் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பாள் குளம் பொதுச் சந்தை பொருளாதார மத்திய நிலையமாகும் சமகாலத்திலே, பரந்தன், திருவையாறு என ஏனைய பிரதேசங்களிலும் சிறு கொள்வனவுக்கான சந்தைகள் பல உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகையதோர் நிலையில், சந்தை தொடர்பாக மக்கள் இன்று எதிர்நோக்கும் போக்குவரத்துச் சிக்கல்கள் இல்லாமலே போய்விடும்.



பொதுச் சந்தையின் அம்பாள்குளம் நோக்கிய நகர்வுடன் தொடர்புடையது, கிளிநொச்சி பஸ் நிலையத்தின் அமைவிடமாகும். கிளிநொச்சி பஸ் டிப்போவை அது தற்போது அமைந்திருக்கும் இடத்திலேயே அமைக்க வேண்டும் என ஒரு சாராரும் அம்பாள் குளம் பொதுச் சந்தைக்கு அருகாமையில் அமைக்கவேண்டும் என ஒரு சாராரும் கருத்துத் தெரிவிப்பதாகத் தெரிகிறது. இவ்விடயம் தொடர்பான திட்டவட்டமான முடிவுகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

ஆனால், பொது மக்களின் வசதியைக் கருத்தில் கொள்ளும்போது பஸ் டிப்போவானது அதன் தற்போதைய அமைவிடத்திலே தொடர்ந்தும் இருப்பது விரும்பத்தக்கதாக அமையும்.

தற்போதைய அமைவிடம் ஏ9 வீதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கிளிநொச்சியின் பிரதான வீதிகளூடான பஸ் போக்குவரத்து மிகவும் இலகுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் போக்குவரத்து வசதிகள் விஸ்தரிக்கப்படும்போது, சந்தைக்குச் செல்வோருக்காக வேண்டுமானால் அம்பாள் குளத்தில் சிறிய பேரூந்து நிலையமொன்று அமைக்கப்படலாம்.

கிளிநொச்சியில் அமைந்திருக்கும் திணைக்களங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களைப் பொறுத்த வரையிலே, அவை ஒவ்வொன்றும் ஏ9 வீதியின் வழியே வெவ்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. பஸ் போக்குவரத்தை மட்டும் நம்பி வரும் நபரொருவர் தனது அலுவல்களை முடிப்பதற்கு போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்குகிறார்.

அத்தகைய சிரமங்களை எதிர்காலத்தில் தவிர்க்கும் நோக்கிலே, கிளிநொச்சி நகரின் மத்தியில் அரச நிர்வாகக் கட்டடத் தொகுதியொன்றை அமைக்கும் திட்டம் உருவானது. அதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட காணியே, முன்னர் சந்தை இருந்த மரக்காலை வளவாகும்.



தற்போதுள்ள கிளிநொச்சி மாவட்ட செயலகத்தை விஸ்தரிப்பதாயின், இரண்டு கட்டடங்கள் அழிக்கப்பட வேண்டிய தேவையொன்று காணப்படுகிறது. அவ்வாறு செய்தலானது, மாவட்ட செயலகத்தின் அன்றாட நடவடிக்கைகளைப் பாதிக்கும் எனவும் நம்பப்படுகிறது. அத்துடன் தற்போதைய மாவட்ட செயலகத்தில் போதியளவு வாகனத் தரிப்பிட வசதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ9 வீதியை 6 வழிப்பாதையாக மாற்றும் திட்டங்களும் காணப்படுகின்றன. அத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும் போது மாவட்ட செயலகத்தின் வாகனத் தரிப்பிடம் முழுவதும் புதிய வீதிக்காக உள்வாங்கப்பட்டு விடும் நிலையொன்று காணப்படும். இவை திட்டமிடல் பணிப்பாளர் மோகனபவன் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களாகும்.

திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் கெளரிதாசனுடனான கருத்துப் பகிர்வின்போது இந்த நிர்வாகக் கட்டடத் தொகுதியின் நிர்மாணப் பணிக்கான திட்ட வரைவுகள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அத்துடன் நகர அபிவிருத்தி அதிகார சபையின் திட்ட வரைவுக்காக தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்திற்கான ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவிட்டன எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையானது, ஏ9 வீதியையொட்டிய பகுதியை வர்த்தகமயமாக்குவதை விரும்புகிறது எனவும் அறிய முடிகிறது.

வர்த்தகத்தை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஏ9 வீதியையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விடயங்களையெல்லாம் கருத்தில் கொள்ளும்போது ஒரு நிர்வாகக் கட்டடத் தொகுதியின் தோற்றம் எவ்வளவு தூரம், பயனுள்ளதாக அமையும் என ஊகிக்க முடிகிறதல்லவா?

இந்தப் புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதிக்கு மாவட்ட செயலகமும் இடம்மாற்றப்படும். அதே சமகாலத்தில் தற்போது மாவட்ட செயலகம் அமைந்திருக்கும் வளவிலே வாகனத் தரிப்பிட வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபத்தை அமைக்கும் திட்டங்களும் காணப்படுகின்றன.

இவை கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான எண்ணங்களின் பகிர்வேயாகும்.

நகரொன்றைத் திட்டமிட்டு வடிவமைத்தல் ஒன்றும் இலகுவான காரியமல்லவே. திட்டமிடல் செம்மையாக இருக்குமிடத்து, சகல ஒப்புதல்களும் ஒதுக்கீடுகளும் கிடைக்கும்போது திட்ட வரைவுகள் உருவாக்கப்பட்டு வடிவமைப்பு நடைமுறைப்படுத்தப்படும். அதற்கு சில வருடங்களாகலாம். ஓரிரு தசாப்தங்கள் கூட ஆகலாம். ஏனெனில், மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, கிடைக்கும் நிதி ஒதுக்கீட்டுக்கு அமையவே திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும்.



இடிபாடுகளுடன் கண்டு பழகிய கிளிநொச்சி நகரை, சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட நகராகக் கற்பனை செய்து பார்க்கையில் உள்ளம் மகிழ்கிறது. உண்மையிலேயே கிளிநகரை அப்படிக் காணும்போது இருக்கப்போகும் உணர்வுகள் விபரிக்கப்பட முடியாதவை. சாதகமான போக்கிலே சிந்தித்து நாம் ஒன்றிணைந்தால் இயலாதகாரியங்களும் எளிதில் நடந்தேறிவிடும் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

3 comments:

Muruganandan M.K. said...

சமூக அக்கறையுடன் கூடிய மிக நல்ல பதிவைத் தந்திருக்கிறீர்கள். நன்றி

Muruganandan M.K. said...

"..தம்புள்ளவில் அமைக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் போன்றதான மத்திய நிலையமாக எதிர்காலத்தில் அம்பாள் குளம் சந்தையையும் மாற்றுவதற்குத் திட்டங்கள் உள்ளன.." என்ற உங்கள் பதிவைப் பார்க்கும் போது ஒளிமிக்க எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கிறது.

என்றும் அன்புடன், சாரதாஞ்சலி-ம said...

பின்னூட்டலுக்கு மிக்க நன்றி..

Post a Comment